
புஷ்பா அண்ணிக்கு நேரடி அரசியல் அனுபவம் கிடையாது. மக்கள் தொடர்பும் கிடையாது.
கட்சிக்காரர்களின் நல்லது கெட்டது நிகழ்வுகளில் அண்ணன் மட்டும் தான் வருவார்.
அண்ணிக்கு இப்போது திடீர் ஆசை கவுன்சிலராகி விட வேண்டும் என்று.
ஒரே பெண் அவர்களுக்கு. கல்யாண சம்பந்தம் பேசும்போது அண்ணனும் அண்ணியும் ஆளுக்கொரு பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
தன் சமூகத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உயர் அந்தஸ்த்தில் உள்ள எல்லா வரன்களையும் குறித்து வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அண்ணி கவுன்சிலராவது, அடுத்து அண்ணன் எம்எல்ஏ ஆவது, பவரும் பசையும் இரு கரை புரண்டு ஓடுவது, பிறகு மாநில தலைமையும் அவரின் கிச்சனும் சேர்ந்து மகளுக்கு அட்சதை போட்டு திருமணம் நடத்துவது, அதை போட்டோ எடுத்து ஹாலில் மாட்டுவது என அவர்களுக்கு சின்ன சின்ன ஆசைகள் இருந்தது.
அந்த சின்ன ஆசைகளில் ஒரு ஆசையை நிறைவேற்றியே தீர்வது என கங்கணம் கட்டிக்க கொண்டு அண்ணிக்காக தேர்தல் வேலைகளை ஆரம்பித்தார் ரத்தினம்.
எல்லா நிலையிலும் பிரதான கட்சிகள் ரெண்டு மட்டும் தான் மாநிலம் முழுவதும்.
அண்ணியார் அதில் ஒரு கட்சி வேட்பாளர். அவருக்கு எதிராக முக்கியமான போட்டியாளர் தற்போதய ஆளுங்கட்சியை சேர்ந்த சித்தா டாக்டர் நேசமணி. மற்ற வேட்பாளர்கள் பற்றி அக்கறையில்லை.
இப்பகுதியில் இரு பிரதான கட்சிகளும் சம பலத்தில் இருக்கிறது. படித்தவர்கள், பாமரர்கள் என சரி அளவில் இருப்பவர்கள்.
அண்ணியார் நம்பி இருப்பது பாமரர் ஓட்டு வங்கி. அண்ணன் எப்படியும் கடைசி நேரத்தில் பசையை இறக்கி தன்னை ஜெயிக்க வைத்து விடுவார் என நினைக்கிறார் அண்ணி.
சித்தா டாக்டரும் மக்களுக்கு நல்ல அறிமுகம். கை சுத்தமானவர். குறை சொல்ல பெரிதாக எதுவும் இல்லை.
இந்த நிலையில் அண்ணியாரின் வெற்றிக்கு தன் பங்கை எப்படி ஆற்றுவது என யோசித்தார் ரத்தினம்.
அவர் சும்மா இருந்தாலும் அவரின் பல்லாண்டு கால அனுபவம் அவர் மூளையை தூங்க விடவில்லை. இரண்டு மூன்று நாட்கள் எல்லா வித்தைகளையும் யோசித்து பார்த்து அலசி ஆராய்ந்து கடைசியில் ஒரு வியூகத்தை அமைத்தார்.
நம்பிக்கையோடு போய் அண்ணனைப் பார்த்தார்.
“என்ன ரத்தினம், ஆளையே காணோம். அண்ணி உன்ன என்ன காணாமேன்னு கேட்டுக்கிட்டிருந்தா” என பாசத்தை தூவினார் அண்ணன்.
“அட நா எங்கண்ணே போகப்போறேன். நம்ம அண்ணி விஷயமாத்தான் கொஞ்சம் வேல பாத்துட்ருந்தேன்” என் பிட்டை போட்டார் ரத்தினம்.
“அருமைப்பா, என்ன விஷயம் சொல்லு” என் கூர்ந்து கேட்க ஆரம்பித்தார் அண்ணன்.
ரத்தினம் முழுதாய் சொல்லி முடிக்க “நல்ல கிரவுண்ட் ஒர்க் பண்ணியிருக்க ரத்தினம். இதான் ஒரிஜினல் கட்சிக்காரனுக்கும் ஐடி விங்காரனுக்கும் வித்தியாசம். போன்ல போட்டோ போஸ்ட்டு போட்டே மேல வந்துடறானுங்க” என மாசெவை குதறினார்.
“கட்சிக்காரன் ஐடி விங்ல இருக்கலாம். ஆனா ஐடி விங்ல இருக்குற எல்லாரும் கட்சிக்காரங்க ஆக மாட்டாங்க” என நிதர்சனத்தை சொன்னார் அண்ணன்.
பிறகு சற்று யோசித்தவர் “ஒண்ணும் பிரச்சினை இருக்காதில்ல ரத்தினம். பாத்து ஹாண்டில் பண்ணு” என்றார்.
அப்பாடா என்றிருந்தது ரத்தினத்திற்கு. எடுத்த எடுப்பில் நிராகரிக்கவில்லை.
பார்த்து செய் என்கிறார். அண்ணனிடம் க்ரீன் சிக்னல் வாங்கியது உற்சாகத்தை கூட்டியது ரத்தினத்திற்கு.
“நன்றிண்ணே. எல்லா வேலையும் பக்காவா கச்சிதமா நடக்கும்ணே. ஆனா கேண்டிடேட்டு செலவு கொஞ்சம் ஆகும்ணே” என இழுத்தார் ரத்தினம்.
கூட இருக்குற ஆளுங்களிலேயே இவன் ஒருத்தன் தான் தானா வந்து ஒரு மேட்டர சொல்றான். வேலக்காரனா இருக்கான். மத்தவன்லாம் மண்டைய கழுவி வச்சிருக்கானுங்க. கார்ல பின்னாடி சீட் தேய்க்க தான் லாயக்கு புடிச்சவுனுங்க என் மனதிற்குள் அவர் டீமை திட்டி தீர்த்தார்.
அதெல்லாம் பாத்துக்கலாம் ரத்தினம். தோரயமா எவ்ளோ ஆகும்” என கேட்டார்.
கரன்சி மேட்டர் வரை இந்த பிளான் இன்றே வரும் என ரத்தினம் நினைக்கவில்லை.
இப்போதான் சூதானமா இருக்கணும் என மூச்சை இழுத்து விட்டார் ரத்தினம்.
“ஒரு அஞ்சு எல் ஆகும்ணே கேண்டிடேட் படிய. அப்புறம் நீங்க பாத்து எனக்கு என்ன தந்தாலும் ஒக்கேண்ணே” என தைரியமாய் சொல்லி முடித்தார் ரத்தினம்.
அடுத்த இரண்டு நிமிடங்கள் முள் மேல் நிற்பது போல் இருந்தார் ரத்தினம். அவர் அரசியல் வாழ்க்கையில் அவர் கையாளப்போகும் மிக உச்சபட்சமான ஒரு தொகை.
“சரி, நல்ல படியா செய் ரத்தினம்” என ஆசீர்வதித்தார் அண்ணன். அடுத்த நொடி அனிச்சையாக அண்ணண் காலில் லேண்ட் ஆனார் அன்புத் தம்பி இரத்தின முத்து சேகர்.