
“நான் வெயிட் பண்றேன், சாப்பிட்டு முடிச்சிட்டு இன்னொரு தோசை வேணும்னா சொல்லுங்க” என அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு உள்ளேயிருந்து சொன்னாள் அக்க்ஷயா.
“ஆமா, இன்னொன்னு போடு, அதான் லாஸ்ட்” என்றார் பாஸ்கர்.
அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் கடைசியாக ஒரு தடவை கிச்சனை சுத்தம் செய்து விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.
பாஸ்கர் கையை கழுவிக் கொண்டு வர “நம்ம இனியா ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பெரிய பொண்ணாயிடிச்சாம். கஜா அண்ணன் இன்னிக்கு போன் பண்ணி சொன்னாரு” என துக்கம் தொடையை அடைக்க சொன்னாள்.
கஜபதி அக்க்ஷயாவின் பெரியப்பா மகன். சேலத்துக்கு பக்கத்தில் சொந்த ஊரில் பார்மசி நடத்தி வருகிறார்.
“ஹ்ம்ம்…எனக்கும் லன்ச் டைம்ல கால் பண்ணி சொன்னாரு. வீட்ல கொஞ்சம் நிலவரம் சரியில்ல, அதனால வீட்டோட பங்க்ஷன் வச்சிட்டோம் அப்படிடீன்னார். நானும் அதுக்கென்ன பரவாயில்லை, நாங்க அரையாண்டு லீவுக்கு ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வரோம்னு சொன்னேன். நவம்பர்ல தான் இனியாக்கு போட்ட நகை சீட்டு முடியுது. சீட்டு அமௌண்டுல அரை பவுனுக்கு கொஞ்சம் குறைவாதான் வரும். போஸ்ட் ஆபீஸ்ல ஏதாவது வச்சிருக்கியா?” என கேட்டார் பாஸ்கர்.
அவளுக்கு காண்டு தலைக்கு ஏறியது. அவர் வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரமாகிறது. இதை பற்றி வாயையே திறக்கவில்லை. எவ்வளவு முக்கியமான நிகழ்வு. தானும் போயிருக்க வேண்டியது. இவர் என்னடாவென்றால் இவ்வளவு ஈசியாக கடந்து போகிறார் என முறைத்தாள்.
“என்ன பெரிய நிலவரம்? நாம என்ன ஏன் பங்க்ஷன மண்டபத்துல வெச்சி பண்ணலேன்னு கேக்க போறாமா? இல்ல நமக்கு தான் நடந்த விவகாரமெல்லாம் தெரியாதா? என அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள்.
பாஸ்கரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
“கஜாண்ணன் தான் என்னை வீட்டுக்கு கூப்பிட்டுக்கும் போது போட்டோ எடுத்திச்சி. எங்கம்மா ரெண்டு ரோலுக்கு தான் காசு குடுத்தாங்க. அதோட கைக்காசு கொஞ்சம், அப்புறம் எங்க அக்காங்க கிட்ட கொஞ்சம் சில்லறைன்னு தேத்தி, மொத்தம் நாலு ரோலு வாங்கி வந்த மொத்த ஜனத்தையும் ஒருத்தர் விடாம படம் எடுத்திடிச்சு. ஒரு வாரம் கழிச்சி ஆல்பத்தோட வந்து நாலு ரோலுக்கு பிரிண்டிங் காசு கேட்டுது. எங்க அம்மா செம திட்டு திட்டுனாங்க. அதுக்கு அண்ணன் என்ன சொல்லுச்சு தெரியுமாங்க? சித்தி, வந்தவங்கள்ல இருக்குற ஒருத்தர் விடாம அட்டகாசமா எடுத்திருக்கேன். நாளைக்கே ஏதாவது கிழ கட்டைங்க பொட்டுன்னு போயிடுச்சின்னா, நம்ம வீட்டு கதவைதான் வந்து போட்டோவுக்காக தட்டுவாங்கன்னுச்சி. எங்கம்மாக்கு பகீர்னு ஆயிடுச்சி. நல்ல விஷயம் நடந்த வீட்டுல, இந்த நாய் கண்ட பேச்சு பேசுதேன்னு மொறத்தாலேயே வெச்சி வெளுத்துட்டாங்க” என சொல்லி தலையை கவிழ்ந்து கொண்டாள்.
“ம்ம்..” என மெலிதாய் பதில் வந்தது பாஸ்கரிடம் இருந்து.
பத்து நிமிடம் ஆனது அவள் தேறி வர. அப்போது தான் அவர் இது வரை தனக்கு ஆறுதல் சொல்லாதது அவளுக்கு உறுத்தியது. நான் இன்னும் இன்றைய நாளையே process செய்து கொண்டு இருக்கிறேன். இவர் இன்னும் நாலு மாதம் கழித்து முடிய போகும் நகை சீட்டை பற்றி யோசிக்கிறார். தன்னுடைய ஆற்றாமையை கொஞ்சம் கூட உள் வாங்கவில்லை என்ற ஆதங்கம் அவளை சுழற்றியடித்தது.
“என்ன ம்ம்..ன்னு சிம்பிளா முடிச்சிட்டீங்க? நான் ஒருத்தி நொந்து போய் உக்காந்திருக்கேன்? எங்க அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் உள்ளூர்லயே இருந்ததால போய் பங்க்ஷன் அட்டென்ட் பண்ணி இருக்காங்க. எங்கிட்டா சொன்னா, அண்ணன் கூப்பிடலேன்னு நான் வருத்தப்படுவேன்னு அமுக்காளிங்க வேல பாத்திருக்காங்க. மார்க்கெட்ல ஒரு கடை விடாம ஏறி இறங்கி சீர் வாங்கி இருப்பாங்க போன வாரம். என்கிட்டே சொல்லி இருந்தா நான் போகலேன்னாலும் என் பங்கு காசாவது குடுத்திருப்பேன்ல?” என சீறினாள்.
பாஸ்கருக்கு கொட்டாவி வந்தது. “வாஸ்தவம் தான். அவங்க நெலமைல இருந்து பாரு அக்க்ஷூ. அவங்க எப்படி சொல்லுவாங்க? எனக்கு ரொம்ப பேக் பெயினா இருக்கு. படுத்தா ஒடனே தூக்கம் வராது. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன். மூவ் போட்டுட்டேன்னா கொஞ்ச நேரத்துல அப்படியே தூங்கிடுவேன்” என சொல்லி விட்டு பாஸ்கர் எழுந்து உள்ளே போக, அவள் அப்படியே பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனாள்.
செங்காட்டு மண்ணும்,
நம் வீட்டுப் பொண்ணும்,
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே!
தங்கச்சி கண்ணில்
கண்ணீரை கண்டா,
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே!
பந்தத்த மீறிப் போக சக்தி இல்லையே,
பாசத்த பங்கு போடப் பட்டா இல்லையே,
வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே!
தென்கிழக்கு சீமையில,
செங்காத்து பூமியில,
ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு!
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா,
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு!
இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்,
ஈசானி மூலையில மேகம் இருக்கு!
என பாடல் அவளுக்குள் ஒலிக்க, அப்படியே கரைந்து போய் உட்கார்ந்திருந்தாள்.
அண்ணனுக்கு கொஞ்சம் பண நெருக்கடி, தொழிலும் நட்டத்தில் போகிறது. போதாததுக்கு பெரியவன் வேறு டிரேடிங்கில் பணத்தை விட்டு விட்டு நிலைமையை சிக்கலாகி விட்டான். ஆனால் காரணம் எதுவாயிருந்தாலும் இனியாக்குட்டி கூட தான் இல்லாததை அவளால் தாங்க இயலவில்லை. இவ்வளவு நடந்தும் அம்மாவும் அக்காவும் மூச்சு கூட விடாதது, அவர்கள் தன்னை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை அவளுக்கு உணர்த்துவதாக பட்டது.
இவருக்காக ஊரை விட்டு, சொந்த பந்தத்தை விட்டு, நல்லது கெட்டதில் கலந்து கொள்ளாமல் இங்கே இருந்தால், இந்த மனுஷன் ஆறுதலாய் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டேத்தியாய் இருப்பது அவளுக்கு வலியை கூட்டியது.
“அண்ணன் நீ இல்லாம பங்க்ஷன் செய்றதுல ரொம்ப வருத்தபட்டிருப்பார்டி”
“அவரு அன்னிக்கு முழுக்க உன்ன மிஸ் பண்ணி இருப்பார் தானே?”
“உனக்கே இப்படி இருக்குன்னா, அவரு எவ்ளோ பீல் பண்ணி இருப்பார் அக்க்ஷூ?” என ஏதாவது சொல்லி தன்னை தேற்றி இருக்கலாம்.
என்ன கவலையாக பொண்டாட்டி இருந்தாலும் சரி, துளி கூட சட்டை பண்ணாமல், தூங்கும் போது தன்னுடைய முதுகு வலிக்கு அவள் கால்களை தூக்கி போட்டுக் கொள்ள மட்டும் ஹிண்ட் கொடுக்க தெரிகிறது.
அக்க்ஷயாவுக்கு என்ன வாழ்க்கை இது என தோன்றியது. பெற்றதுதான் விட்டுக் கொடுத்தது என்றால், இங்கே கட்டியதும் அதே போல தான் இருக்கிறது.
“அக்க்ஷூ..வாயேன்..லேட்டாகுது” என பாஸ்கரின் அழைப்பு வந்தது.
“நாம என்ன மெஷினா? நாலு பேச்சு பேசிட்டு, டமால்னு படுத்து தூங்க? கொஞ்ச நேரம் ஹால்ல உக்காந்து இருக்குறதுல இவருக்கு என்ன பிரச்சினை? அவரு பேசினா நாமும் பேசி, அவரு சிரிச்சா நாமும் சிரிச்சி, அவரு தூங்கினா நாமும் தூங்கிடணும்! என்ன வாழ்க்கைடா இது” என வெறுத்துப் போனாள்.
அடுத்த நாள் காலை. “இன்னைக்கு லாஸ்ட் பீரியட் உனக்கு லைப்ரரி தானே? லாஸ்ட் வீக் நீ கொண்டாந்த புக்க வர்ஷா படிச்சி முடிச்சிடுச்சி. உன் பேக் உள்ள வெச்சிருக்கேன். ஞாபகமா ரிட்டர்ன் பண்ணிடு” என சொல்லி விட்டு கிளம்பினார் பாஸ்கர்.
“பெரிய பிளானிங் குமாருன்னு நினைப்பு” என திட்டிக் கொண்டே அவளும் பள்ளிக்கு கிளம்பினாள்.
அன்றைய நாள் எப்போதும் போல் இருக்கவில்லை. யாரை பார்த்தாலும் எரிச்சலாக இருந்தது. வீட்டிலிருந்த வந்த போன் எதையும் எடுத்து பேசும் மனநிலையில் அவள் இல்லை. பாடம் நடத்தும் மூடும் இல்லை. லஞ்சுக்கு பிறகு ரெண்டு பீரியடையும் P.E.T சாருக்கு கொடுத்தது விட்டு ஸ்டாப் ரூமில் உட்கார்ந்து பேப்பர் திருத்தினாள்.
மீண்டும் மீண்டும் பழைய நினைவுகள் வர, சில பேப்பர்களும் கொஞ்சம் ஈரத்தை வாங்கி கொண்டன.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு “மிஸ்” என மூன்றாம் வகுப்பு கிளாஸ் லீடர் வந்து நின்றான்.
“என்னடா?” என்றாள்.
“லைப்ரரி பீரியட் மிஸ். நன்முல்லை மிஸ் உங்களையும் கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றான்.
“போ, வரேன்” என சொல்லிவிட்டு பேப்பர் கட்டை பையில் வைத்து விட்டு, ரிட்டர்ன் செய்ய வேண்டிய புக்கை எடுத்துக் கொண்டாள்.
பாஸ்கரின் மெசேஜ் டங்கென்று வந்தது. துளி கூட empathy இல்லாத வாழ்க்கையில் telepathy மட்டும் நன்றாக வேலை செய்கிறது என நினைத்துக் கொண்டாள்!
அவள் லைப்ரரி போய் சேரும்போது பிள்ளைகள் அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்தார்கள்.
“வாங்க மிஸ், இன்னைக்கு ஒரு activity பிளான் பண்ணி இருக்கேன். அது முடிஞ்சப்புறம் book issue பண்ணிடலாம்” என சொன்னார் நன்முல்லை.
ஒரு அட்டை பெட்டியில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் படம் ஒட்டிய மாஸ்க்குகள் இருந்தது. பிள்ளைகள் அவர்களுக்கு பிடித்த விலங்கின் மாஸ்க்கை மாட்டிக் கொண்டு, அது ஏன் அவர்களுக்கு பிடிக்கும்? ஒரு நாள் அவர்கள் அந்த விலங்காக வாழ்ந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என சொல்ல வேண்டும்.
ஒவ்வொருவராக வந்து பெட்டியை துழாவி, அவர்களுக்கு பிடித்த மாஸ்க்கை அணிந்து கொண்டு போய் உட்கார்ந்தார்கள்.
முதலில் மீன் உட்கார்ந்திருந்தது. என்ன காரணம் என கேட்டால் “தண்ணில ஆட்டம் போட்டால் செமயா இருக்கும் மிஸ்” என்றது.
“நான் தான் அந்த காட்டுலயே செம ஸ்மார்ட், க்ளெவரான அனிமல்” என நரி சொன்னது.
“நான் மரத்துலேர்ந்து bungee jumping பண்ணுவேன்” என ஊசலாடியபடியே சொன்னது குரங்கு.
“என் பேச்ச தான் எல்லாரும் கேக்கணும்..நான் தான் காட்டுக்கே ராஜா” என கெத்தாக சொன்னது சிங்கம்.
குதிரை, மான், புலி, முயல் என அடுத்தடுத்து ஆளுக்கொரு காரணம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அக்க்ஷயாவும் குறுக்கே குறுக்கே கேள்வி கேட்டு அவர்கள் உற்சாகத்தை கூட்டினாள். எல்லோரும் சொல்லி முடிக்க, நிகழ்ச்சி முடியும் தருவாயில் நன்முல்லை பெட்டிக்குள் எட்டிப் பார்த்தார். ஒரே ஒரு மாஸ்க் மட்டும் யாரும் எடுக்காமல் விடுபட்டிருந்தது.
“என்ன பசங்களா? யாருக்கும் யானை புடிக்காதா? யானை மாஸ்க்கை யாருமே எடுக்கலை?” என கேட்டுக் கொண்டே மாஸ்க்கை உயர்த்தி பிடித்து காண்பித்தார்.
பிள்ளைகள் அவர்களுக்குள்ளாக பேசிக் கொண்டார்கள்.
பிறகு “மிஸ், அது கொஞ்சம் ஹெவியா இருக்கும்” என ஆரம்பித்தது ஒரு வாண்டு.
“அது குட் அனிமல் தான்..ஆனா cuteஆ இருக்காது” என்றது இன்னொன்று.
“ஆமாம் மிஸ், நாலு காலு, ஒரு வாலு, அப்புறம் ஒரு தும்பிக்கை வேற.. நான் எப்படி மிஸ் பொழுதுக்கும் அது மாதிரியே பேலன்ஸ் பண்ணி நடக்குறது” என ஆடி பாடியபடியே இன்னொரு குட்டி சொன்னது.
மொத்த க்ளாஸும் கொல்லென சிரிக்க “சரி, அப்படீன்னா அதோட தும்பிக்கையை எடுத்திடலாமா? என மாஸ்க்கை லேசாக மடக்கியபடியே கேட்டாள் அக்க்ஷயா.
“ஹ்ம்ம்..இப்போ இது பாக்க யானை மாதிரியே இல்லையே?” என முகத்தை சுளித்தான் ஒரு பையன்.
“ஆமாம் மிஸ், அழகாவே இல்ல. தும்பிக்கை இருக்கட்டும் மிஸ்” என்றான் இன்னொருவன்.
“சரி, தும்பிக்கை இருக்கட்டும். ஆனா அது அழகுக்காக இருக்குன்னு நெனைக்குறீங்களா? இது இல்லேன்னா இந்த யானை என்ன பண்ணும்?” என தொடர்ந்தாள் அக்க்ஷயா.
“மிஸ், அதனால மர கட்டைய தூக்கவே முடியாது”
“அதனால மர கிளையை ஒடச்சி சாப்பிட முடியாது, மிஸ்”
“அது எப்புடி மிஸ் தண்ணி அடிச்சி விளையாடும்?” என அடுத்தடுத்து பதில்கள் வந்தது.
“இப்போ புரியுதா பசங்களா? ஒருத்தர் கிட்ட நாம குறையா பாக்குற விஷயம் தான், பல விஷயங்கள்ல நன்மையா இருக்குன்னு” என கேட்டாள் அக்க்ஷயா.
எல்லோரும் ஒரு சேர மண்டையை ஆட்டினார்கள்.
“யானைங்க ரொம்ப புத்திசாலிங்க பசங்களா. ரொம்ப தூரத்துல இருக்குற யானைங்கள்கூட கண்ணுக்குத் தெரியாம தகவல் சொல்லிக்குவாங்க. சத்தம் மூலமாவும், நில அதிர்வை உணர்ந்தும்கூட பேசிக்குவாங்க” என தொடர்ந்தார் நன்முல்லை.
“மிஸ்.. அப்போ இது ஒரு மாதிரி டெலிபதியா?” என ஒரு குட்டி விஞ்ஞானி கேட்டது.
“ம்ம். அதை டெலிபதின்னு பொதுவா சொல்ல முடியாது. அவங்களோட கூர்மையா கவனிக்கிற திறன், அப்புறம் ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிஞ்சுக்கிற குணம் அப்படீன்னு இதெல்லாம் சேர்ந்ததால நமக்குத் டெலிபதி மாதிரி தெரியுது” என விளக்கினார் நன்முல்லை.
அக்க்ஷயாவுக்கு ஒரு முறை மனதிற்குள் மின்னல் வெட்டியது.
“ஒரு விலங்கினை அதன் ஒரு குணத்தாலோ அல்லது அதன் ஒரு உருவ அமைப்பினாலோ நாம் பார்க்கும் கோணமே இவ்வளவு வித்தியாசப்படும்போது, ஒரு மனிதனை மட்டும் அவனின் ஒரு குணத்தையோ அல்லது செயலையோ மட்டும் எப்படி அளவுகோலாக எடுத்துக் கொண்டு எடை போட முடியும்? என தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.
“ஒரு நிமிஷம் மிஸ்” என நன்முல்லையிடம் சொல்லி விட்டு லைப்ரரியின் வெளியே இருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தாள்.
பாஸ்கரும் இப்படித்தான். எல்லோர் மீதும் அன்பும், பல நல்ல குணங்களும் கொண்டவர். ஆனால் அவர் மனம் விட்டு பேசாததும், நெருக்கடியான காலகட்டங்களில் ஆறுதல் சொல்லாததும் அவரின் மீது ஒரு வெறுப்புணர்வை தனக்கு அளிப்பதாக அவளுக்கு தோன்றியது.
ஆறுதலாக பேச தெரியாதது பாஸ்கரின் குறைதான். ஆனால் அந்த ஒரு குறையை வைத்து ,அவர் காட்டும் மொத்த அன்பையும் புறந்தள்ளி விட முடியாது என உணர்ந்தாள்.
நினைவுகள் எங்கெங்கோ போக, போன் அடித்தது.
“நான் வெளில வெய்ட் பண்றேன் அக்க்ஷூ..மாட வீதி கேட்டுக்கு எதிர்ல இருக்கேன். உங்க லைப்ரரி பில்டிங்க்லேர்ந்து அதான் பக்கம். காலைல டல்லா இருந்தல்ல, அதான் வெளில போகலாம்னு பர்மிஷன் சொல்லிட்டு வந்துட்டேன்” என்றார் பாஸ்கர்.
அவள் மெலிதாக சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். “மிஸ், நா இந்த யானை மாஸ்க்கை எடுத்திட்டு போகவா?” என கேட்டு, அதை எடுத்து பையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.















