சிறுகதை – செங்காட்டு மண்ணும், நம் வீட்டுப் பொண்ணும்

A middle aged woman reflecting her life

“நான் வெயிட் பண்றேன், சாப்பிட்டு முடிச்சிட்டு இன்னொரு தோசை வேணும்னா சொல்லுங்க” என அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு உள்ளேயிருந்து சொன்னாள் அக்க்ஷயா.

“ஆமா, இன்னொன்னு போடு, அதான் லாஸ்ட்” என்றார் பாஸ்கர்.

அவர் சாப்பிட்டு முடிப்பதற்குள் கடைசியாக ஒரு தடவை கிச்சனை சுத்தம் செய்து விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.

பாஸ்கர் கையை கழுவிக் கொண்டு வர “நம்ம இனியா ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பெரிய பொண்ணாயிடிச்சாம். கஜா அண்ணன் இன்னிக்கு போன் பண்ணி சொன்னாரு” என துக்கம் தொடையை அடைக்க சொன்னாள்.

கஜபதி அக்க்ஷயாவின் பெரியப்பா மகன். சேலத்துக்கு பக்கத்தில் சொந்த ஊரில் பார்மசி நடத்தி வருகிறார்.

“ஹ்ம்ம்…எனக்கும் லன்ச் டைம்ல கால் பண்ணி சொன்னாரு. வீட்ல கொஞ்சம் நிலவரம் சரியில்ல, அதனால வீட்டோட பங்க்ஷன் வச்சிட்டோம் அப்படிடீன்னார். நானும் அதுக்கென்ன பரவாயில்லை, நாங்க அரையாண்டு லீவுக்கு ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வரோம்னு சொன்னேன். நவம்பர்ல தான் இனியாக்கு போட்ட நகை சீட்டு முடியுது. சீட்டு அமௌண்டுல அரை பவுனுக்கு கொஞ்சம் குறைவாதான் வரும். போஸ்ட் ஆபீஸ்ல ஏதாவது வச்சிருக்கியா?” என கேட்டார் பாஸ்கர்.

அவளுக்கு காண்டு தலைக்கு ஏறியது. அவர் வீட்டுக்கு வந்து ரெண்டு மணி நேரமாகிறது. இதை பற்றி வாயையே திறக்கவில்லை. எவ்வளவு முக்கியமான நிகழ்வு. தானும் போயிருக்க வேண்டியது. இவர் என்னடாவென்றால் இவ்வளவு ஈசியாக கடந்து போகிறார் என முறைத்தாள்.

“என்ன பெரிய நிலவரம்? நாம என்ன ஏன் பங்க்ஷன மண்டபத்துல வெச்சி பண்ணலேன்னு கேக்க போறாமா? இல்ல நமக்கு தான் நடந்த விவகாரமெல்லாம் தெரியாதா? என அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள்.

பாஸ்கரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

“கஜாண்ணன் தான் என்னை வீட்டுக்கு கூப்பிட்டுக்கும் போது போட்டோ எடுத்திச்சி. எங்கம்மா ரெண்டு ரோலுக்கு தான் காசு குடுத்தாங்க. அதோட கைக்காசு கொஞ்சம், அப்புறம் எங்க அக்காங்க கிட்ட கொஞ்சம் சில்லறைன்னு தேத்தி, மொத்தம் நாலு ரோலு வாங்கி வந்த மொத்த ஜனத்தையும் ஒருத்தர் விடாம படம் எடுத்திடிச்சு. ஒரு வாரம் கழிச்சி ஆல்பத்தோட வந்து நாலு ரோலுக்கு பிரிண்டிங் காசு கேட்டுது. எங்க அம்மா செம திட்டு திட்டுனாங்க. அதுக்கு அண்ணன் என்ன சொல்லுச்சு தெரியுமாங்க? சித்தி, வந்தவங்கள்ல இருக்குற ஒருத்தர் விடாம அட்டகாசமா எடுத்திருக்கேன். நாளைக்கே ஏதாவது கிழ கட்டைங்க பொட்டுன்னு போயிடுச்சின்னா, நம்ம வீட்டு கதவைதான் வந்து போட்டோவுக்காக தட்டுவாங்கன்னுச்சி. எங்கம்மாக்கு பகீர்னு ஆயிடுச்சி. நல்ல விஷயம் நடந்த வீட்டுல, இந்த நாய் கண்ட பேச்சு பேசுதேன்னு மொறத்தாலேயே வெச்சி வெளுத்துட்டாங்க” என சொல்லி தலையை கவிழ்ந்து கொண்டாள்.

“ம்ம்..” என மெலிதாய் பதில் வந்தது பாஸ்கரிடம் இருந்து.

பத்து நிமிடம் ஆனது அவள் தேறி வர. அப்போது தான் அவர் இது வரை தனக்கு ஆறுதல் சொல்லாதது அவளுக்கு உறுத்தியது. நான் இன்னும் இன்றைய நாளையே process செய்து கொண்டு இருக்கிறேன். இவர் இன்னும் நாலு மாதம் கழித்து முடிய போகும் நகை சீட்டை பற்றி யோசிக்கிறார். தன்னுடைய ஆற்றாமையை கொஞ்சம் கூட உள் வாங்கவில்லை என்ற ஆதங்கம் அவளை சுழற்றியடித்தது.

“என்ன ம்ம்..ன்னு சிம்பிளா முடிச்சிட்டீங்க? நான் ஒருத்தி நொந்து போய் உக்காந்திருக்கேன்? எங்க அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் உள்ளூர்லயே இருந்ததால போய் பங்க்ஷன் அட்டென்ட் பண்ணி இருக்காங்க. எங்கிட்டா சொன்னா, அண்ணன் கூப்பிடலேன்னு நான் வருத்தப்படுவேன்னு அமுக்காளிங்க வேல பாத்திருக்காங்க. மார்க்கெட்ல ஒரு கடை விடாம ஏறி இறங்கி சீர் வாங்கி இருப்பாங்க போன வாரம். என்கிட்டே சொல்லி இருந்தா நான் போகலேன்னாலும் என் பங்கு காசாவது குடுத்திருப்பேன்ல?” என சீறினாள்.

பாஸ்கருக்கு கொட்டாவி வந்தது. “வாஸ்தவம் தான். அவங்க நெலமைல இருந்து பாரு அக்க்ஷூ. அவங்க எப்படி சொல்லுவாங்க? எனக்கு ரொம்ப பேக் பெயினா இருக்கு. படுத்தா ஒடனே தூக்கம் வராது. நீ கொஞ்சம் சீக்கிரம் வாயேன். மூவ் போட்டுட்டேன்னா கொஞ்ச நேரத்துல அப்படியே தூங்கிடுவேன்” என சொல்லி விட்டு பாஸ்கர் எழுந்து உள்ளே போக, அவள் அப்படியே பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனாள்.

செங்காட்டு மண்ணும்,
நம் வீட்டுப் பொண்ணும்,
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே!

தங்கச்சி கண்ணில்
கண்ணீரை கண்டா,
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே!

பந்தத்த மீறிப் போக சக்தி இல்லையே,
பாசத்த பங்கு போடப் பட்டா இல்லையே,
வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே!

தென்கிழக்கு சீமையில,
செங்காத்து பூமியில,
ஏழைப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு!

காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா,
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு!

இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்,
ஈசானி மூலையில மேகம் இருக்கு!

என பாடல் அவளுக்குள் ஒலிக்க, அப்படியே கரைந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

அண்ணனுக்கு கொஞ்சம் பண நெருக்கடி, தொழிலும் நட்டத்தில் போகிறது. போதாததுக்கு பெரியவன் வேறு டிரேடிங்கில் பணத்தை விட்டு விட்டு நிலைமையை சிக்கலாகி விட்டான். ஆனால் காரணம் எதுவாயிருந்தாலும் இனியாக்குட்டி கூட தான் இல்லாததை அவளால் தாங்க இயலவில்லை. இவ்வளவு நடந்தும் அம்மாவும் அக்காவும் மூச்சு கூட விடாதது, அவர்கள் தன்னை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை அவளுக்கு உணர்த்துவதாக பட்டது.

இவருக்காக ஊரை விட்டு, சொந்த பந்தத்தை விட்டு, நல்லது கெட்டதில் கலந்து கொள்ளாமல் இங்கே இருந்தால், இந்த மனுஷன் ஆறுதலாய் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டேத்தியாய் இருப்பது அவளுக்கு வலியை கூட்டியது.

“அண்ணன் நீ இல்லாம பங்க்ஷன் செய்றதுல ரொம்ப வருத்தபட்டிருப்பார்டி”

“அவரு அன்னிக்கு முழுக்க உன்ன மிஸ் பண்ணி இருப்பார் தானே?”

“உனக்கே இப்படி இருக்குன்னா, அவரு எவ்ளோ பீல் பண்ணி இருப்பார் அக்க்ஷூ?” என ஏதாவது சொல்லி தன்னை தேற்றி இருக்கலாம்.

என்ன கவலையாக பொண்டாட்டி இருந்தாலும் சரி, துளி கூட சட்டை பண்ணாமல், தூங்கும் போது தன்னுடைய முதுகு வலிக்கு அவள் கால்களை தூக்கி போட்டுக் கொள்ள மட்டும் ஹிண்ட் கொடுக்க தெரிகிறது.

அக்க்ஷயாவுக்கு என்ன வாழ்க்கை இது என தோன்றியது. பெற்றதுதான் விட்டுக் கொடுத்தது என்றால், இங்கே கட்டியதும் அதே போல தான் இருக்கிறது.

“அக்க்ஷூ..வாயேன்..லேட்டாகுது” என பாஸ்கரின் அழைப்பு வந்தது.

“நாம என்ன மெஷினா? நாலு பேச்சு பேசிட்டு, டமால்னு படுத்து தூங்க? கொஞ்ச நேரம் ஹால்ல உக்காந்து இருக்குறதுல இவருக்கு என்ன பிரச்சினை? அவரு பேசினா நாமும் பேசி, அவரு சிரிச்சா நாமும் சிரிச்சி, அவரு தூங்கினா நாமும் தூங்கிடணும்! என்ன வாழ்க்கைடா இது” என வெறுத்துப் போனாள்.

அடுத்த நாள் காலை. “இன்னைக்கு லாஸ்ட் பீரியட் உனக்கு லைப்ரரி தானே? லாஸ்ட் வீக் நீ கொண்டாந்த புக்க வர்ஷா படிச்சி முடிச்சிடுச்சி. உன் பேக் உள்ள வெச்சிருக்கேன். ஞாபகமா ரிட்டர்ன் பண்ணிடு” என சொல்லி விட்டு கிளம்பினார் பாஸ்கர்.

“பெரிய பிளானிங் குமாருன்னு நினைப்பு” என திட்டிக் கொண்டே அவளும் பள்ளிக்கு கிளம்பினாள்.

அன்றைய நாள் எப்போதும் போல் இருக்கவில்லை. யாரை பார்த்தாலும் எரிச்சலாக இருந்தது. வீட்டிலிருந்த வந்த போன் எதையும் எடுத்து பேசும் மனநிலையில் அவள் இல்லை. பாடம் நடத்தும் மூடும் இல்லை. லஞ்சுக்கு பிறகு ரெண்டு பீரியடையும் P.E.T சாருக்கு கொடுத்தது விட்டு ஸ்டாப் ரூமில் உட்கார்ந்து பேப்பர் திருத்தினாள்.

மீண்டும் மீண்டும் பழைய நினைவுகள் வர, சில பேப்பர்களும் கொஞ்சம் ஈரத்தை வாங்கி கொண்டன.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு “மிஸ்” என மூன்றாம் வகுப்பு கிளாஸ் லீடர் வந்து நின்றான்.

“என்னடா?” என்றாள்.

“லைப்ரரி பீரியட் மிஸ். நன்முல்லை மிஸ் உங்களையும் கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றான்.

“போ, வரேன்” என சொல்லிவிட்டு பேப்பர் கட்டை பையில் வைத்து விட்டு, ரிட்டர்ன் செய்ய வேண்டிய புக்கை எடுத்துக் கொண்டாள்.

பாஸ்கரின் மெசேஜ் டங்கென்று வந்தது. துளி கூட empathy இல்லாத வாழ்க்கையில் telepathy மட்டும் நன்றாக வேலை செய்கிறது என நினைத்துக் கொண்டாள்!

அவள் லைப்ரரி போய் சேரும்போது பிள்ளைகள் அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்தார்கள்.

“வாங்க மிஸ், இன்னைக்கு ஒரு activity பிளான் பண்ணி இருக்கேன். அது முடிஞ்சப்புறம் book issue பண்ணிடலாம்” என சொன்னார் நன்முல்லை.

ஒரு அட்டை பெட்டியில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் படம் ஒட்டிய மாஸ்க்குகள் இருந்தது. பிள்ளைகள் அவர்களுக்கு பிடித்த விலங்கின் மாஸ்க்கை மாட்டிக் கொண்டு, அது ஏன் அவர்களுக்கு பிடிக்கும்? ஒரு நாள் அவர்கள் அந்த விலங்காக வாழ்ந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என சொல்ல வேண்டும்.

ஒவ்வொருவராக வந்து பெட்டியை துழாவி, அவர்களுக்கு பிடித்த மாஸ்க்கை அணிந்து கொண்டு போய் உட்கார்ந்தார்கள்.

முதலில் மீன் உட்கார்ந்திருந்தது. என்ன காரணம் என கேட்டால் “தண்ணில ஆட்டம் போட்டால் செமயா இருக்கும் மிஸ்” என்றது.

“நான் தான் அந்த காட்டுலயே செம ஸ்மார்ட், க்ளெவரான அனிமல்” என நரி சொன்னது.

“நான் மரத்துலேர்ந்து bungee jumping பண்ணுவேன்” என ஊசலாடியபடியே சொன்னது குரங்கு.

“என் பேச்ச தான் எல்லாரும் கேக்கணும்..நான் தான் காட்டுக்கே ராஜா” என கெத்தாக சொன்னது சிங்கம்.

குதிரை, மான், புலி, முயல் என அடுத்தடுத்து ஆளுக்கொரு காரணம் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அக்க்ஷயாவும் குறுக்கே குறுக்கே கேள்வி கேட்டு அவர்கள் உற்சாகத்தை கூட்டினாள். எல்லோரும் சொல்லி முடிக்க, நிகழ்ச்சி முடியும் தருவாயில் நன்முல்லை பெட்டிக்குள் எட்டிப் பார்த்தார். ஒரே ஒரு மாஸ்க் மட்டும் யாரும் எடுக்காமல் விடுபட்டிருந்தது.

“என்ன பசங்களா? யாருக்கும் யானை புடிக்காதா? யானை மாஸ்க்கை யாருமே எடுக்கலை?” என கேட்டுக் கொண்டே மாஸ்க்கை உயர்த்தி பிடித்து காண்பித்தார்.

பிள்ளைகள் அவர்களுக்குள்ளாக பேசிக் கொண்டார்கள்.

பிறகு “மிஸ், அது கொஞ்சம் ஹெவியா இருக்கும்” என ஆரம்பித்தது ஒரு வாண்டு.

“அது குட் அனிமல் தான்..ஆனா cuteஆ இருக்காது” என்றது இன்னொன்று.

“ஆமாம் மிஸ், நாலு காலு, ஒரு வாலு, அப்புறம் ஒரு தும்பிக்கை வேற.. நான் எப்படி மிஸ் பொழுதுக்கும் அது மாதிரியே பேலன்ஸ் பண்ணி நடக்குறது” என ஆடி பாடியபடியே இன்னொரு குட்டி சொன்னது.

மொத்த க்ளாஸும் கொல்லென சிரிக்க “சரி, அப்படீன்னா அதோட தும்பிக்கையை எடுத்திடலாமா? என மாஸ்க்கை லேசாக மடக்கியபடியே கேட்டாள் அக்க்ஷயா.

“ஹ்ம்ம்..இப்போ இது பாக்க யானை மாதிரியே இல்லையே?” என முகத்தை சுளித்தான் ஒரு பையன்.

“ஆமாம் மிஸ், அழகாவே இல்ல. தும்பிக்கை இருக்கட்டும் மிஸ்” என்றான் இன்னொருவன்.

“சரி, தும்பிக்கை இருக்கட்டும். ஆனா அது அழகுக்காக இருக்குன்னு நெனைக்குறீங்களா? இது இல்லேன்னா இந்த யானை என்ன பண்ணும்?” என தொடர்ந்தாள் அக்க்ஷயா.

“மிஸ், அதனால மர கட்டைய தூக்கவே முடியாது”

“அதனால மர கிளையை ஒடச்சி சாப்பிட முடியாது, மிஸ்”

“அது எப்புடி மிஸ் தண்ணி அடிச்சி விளையாடும்?” என அடுத்தடுத்து பதில்கள் வந்தது.

“இப்போ புரியுதா பசங்களா? ஒருத்தர் கிட்ட நாம குறையா பாக்குற விஷயம் தான், பல விஷயங்கள்ல நன்மையா இருக்குன்னு” என கேட்டாள் அக்க்ஷயா.

எல்லோரும் ஒரு சேர மண்டையை ஆட்டினார்கள்.

“யானைங்க ரொம்ப புத்திசாலிங்க பசங்களா. ரொம்ப தூரத்துல இருக்குற யானைங்கள்கூட கண்ணுக்குத் தெரியாம தகவல் சொல்லிக்குவாங்க. சத்தம் மூலமாவும், நில அதிர்வை உணர்ந்தும்கூட பேசிக்குவாங்க” என தொடர்ந்தார் நன்முல்லை.

“மிஸ்.. அப்போ இது ஒரு மாதிரி டெலிபதியா?” என ஒரு குட்டி விஞ்ஞானி கேட்டது.

“ம்ம். அதை டெலிபதின்னு பொதுவா சொல்ல முடியாது. அவங்களோட கூர்மையா கவனிக்கிற திறன், அப்புறம் ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிஞ்சுக்கிற குணம் அப்படீன்னு இதெல்லாம் சேர்ந்ததால நமக்குத் டெலிபதி மாதிரி தெரியுது” என விளக்கினார் நன்முல்லை.

அக்க்ஷயாவுக்கு ஒரு முறை மனதிற்குள் மின்னல் வெட்டியது.

“ஒரு விலங்கினை அதன் ஒரு குணத்தாலோ அல்லது அதன் ஒரு உருவ அமைப்பினாலோ நாம் பார்க்கும் கோணமே இவ்வளவு வித்தியாசப்படும்போது, ஒரு மனிதனை மட்டும் அவனின் ஒரு குணத்தையோ அல்லது செயலையோ மட்டும் எப்படி அளவுகோலாக எடுத்துக் கொண்டு எடை போட முடியும்? என தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.

“ஒரு நிமிஷம் மிஸ்” என நன்முல்லையிடம் சொல்லி விட்டு லைப்ரரியின் வெளியே இருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தாள்.

பாஸ்கரும் இப்படித்தான். எல்லோர் மீதும் அன்பும், பல நல்ல குணங்களும் கொண்டவர். ஆனால் அவர் மனம் விட்டு பேசாததும், நெருக்கடியான காலகட்டங்களில் ஆறுதல் சொல்லாததும் அவரின் மீது ஒரு வெறுப்புணர்வை தனக்கு அளிப்பதாக அவளுக்கு தோன்றியது.

ஆறுதலாக பேச தெரியாதது பாஸ்கரின் குறைதான். ஆனால் அந்த ஒரு குறையை வைத்து ,அவர் காட்டும் மொத்த அன்பையும் புறந்தள்ளி விட முடியாது என உணர்ந்தாள்.

நினைவுகள் எங்கெங்கோ போக, போன் அடித்தது.

“நான் வெளில வெய்ட் பண்றேன் அக்க்ஷூ..மாட வீதி கேட்டுக்கு எதிர்ல இருக்கேன். உங்க லைப்ரரி பில்டிங்க்லேர்ந்து அதான் பக்கம். காலைல டல்லா இருந்தல்ல, அதான் வெளில போகலாம்னு பர்மிஷன் சொல்லிட்டு வந்துட்டேன்” என்றார் பாஸ்கர்.

அவள் மெலிதாக சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். “மிஸ், நா இந்த யானை மாஸ்க்கை எடுத்திட்டு போகவா?” என கேட்டு, அதை எடுத்து பையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

சிறுகதை – ரோஸ்மேரி

A middle-aged woman working as a Manager looking at the town from her house balcony

ஒரு கையில் ஜிம் பேகும், மறு கையில் தண்ணீர் பாட்டிலும் இருக்க, கை முட்டியால் டோர் பெல்லை அழுத்தினாள் ரோஸ்மேரி.

“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என கதவை திறந்தபடியே கேட்டான் அருண்.

ஒரு கணம் சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள். யாரும் வெளியில் இல்லை. உள்ளே நுழைந்து ஷூவை கழட்டி ஸ்டாண்டில் வைத்து விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.

ஒன்பது வயது பென்னி ஓரக்கண்ணால் பார்த்தபடியே வீட்டுப்பாடம் எழுதி கொண்டிருந்தது.

“சுஜியோட நாத்தனார பொண்ணு பாக்க சேலத்துலேர்ந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சாயங்காலம் வராங்களாம். அவ மாமனார் மாமியார் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து நம்மள வர சொல்லி கூப்டுட்டு போனாங்க. இன்னைக்கு காந்தி ஜெயந்தி, பப்ளிக் ஹாலிடே, அதனால எல்லாரும் வீட்ல இருப்போம்னு சொல்லிட்டு போக வந்தாங்களாம். நீ என்னடான்னா ஊர் மேஞ்சிட்டு வர?” என கத்தினான் அருண்.

சுஜி அருணின் பெரியப்பா மகள். அருணை விட எட்டு வயது மூத்தவள். இருவரும் ஒரே ஏரியாவில் குடியிருப்பதால் இரு குடும்பங்களுக்கும் நெருக்கம் அதிகம்.

“காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக்கு தான் மூடி இருக்கும். ஜிம்முக்கு போறதுக்கு என்ன பிரச்சினை?” என கால் விரல்களை நீவி விட்டபடியே கேட்டாள் ரோஸ்மேரி.

அருணுக்கு அஹிம்சை முறையில் அடி வயிற்றில் கத்தியை இறக்கினாள் அவள்.

“இன்னைக்கு வராங்கன்னு தெரிஞ்சு தானே காலைல பேட்மிட்டன் விளையாட போகாம வீட்ல இருந்தீங்க? நான் கிளம்பும் போதே சொல்லி இருந்தா வீட்லயே இருந்திருப்பேன்ல?” என தொடர்ந்தாள் ரோஸ்மேரி.

பென்னி எழுதுவதை நிறுத்தி விட்டு டேபிளில் தலையை குனிந்து கொண்டது.

“ஏன் மேடம் மேனேஜர் போஸ்ட் பந்தாவ எல்லாருகிட்டயும் காட்டுவீங்களா? ஸ்லாட் புக் பண்ணிட்டு வந்தா தான் உங்களை பாக்க முடியுமோ?” என இழுத்தான் அருண்.

“பென்னி, கெவின் வீட்டுக்கு போய் பழைய பேப்பர் கொஞ்சம் வாங்கிட்டு வா. மத்தியானம் ஆக்ட்டிவிட்டி பண்ணலாம்” என சொல்லி விட்டு குளிக்க போனாள்.

பாத்ரூமிற்குள் நுழைந்து தாளிட்டதும், ரோஸ்மேரி வேகமாக ஆடைகளை களைந்து ஹாங்கரில் போட்டாள்.

தலையிலிருந்து கால் வரை தன் மீது வீசப்பட்ட வார்த்தை அழுக்குகள் போக அப்படியே ஷவரில் நின்று கொண்டிருந்தாள்.

“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என்ற வார்த்தைகள் அவளை கடும் கோபத்துக்கு ஆளாக்கி இருந்தன.

இதற்கு அழுகை தேவையில்லை என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். முதல் நாளே இந்த காட்சிக்கான ஒத்திகை வேறொரு மனதில் நடந்திருக்கிறது. அது இன்று அரங்கேற்றப் பட்டிருக்கிறது.

சமீபமாய் கற்றுக் கொண்ட, மொத்த கெட்ட வார்த்தைகளையும் வரிசையாக சொல்லிப் பார்த்தாள். சற்றே திருப்தியாக இருந்தது.

குழாயை நிறுத்தி தலை துவட்டியபடியே இந்த நாளை எப்படி கடப்பது என யோசித்தாள். குளித்து விட்டு வெளியே வந்தவுடன் “அம்மா, சுஜி அத்தை போன் பண்ணி இருக்காங்க” என ஓடி வந்தான் பென்னி.

“ரோஸ், அஞ்சு மணிக்கு வந்துடும்மா. கனி ஹெவி மேக்கப் எல்லாம் வேணாம், பார்லர் போக மாட்டேன்னு சொல்லுது. நீ கொஞ்சம் சீக்கிரம் வந்து மைல்டா டச்சப் பண்ணி விட்டுடுமா. அப்புறம், ஒரு இருபத்தியஞ்சு டிபன் நைட்டுக்கு ஆர்டர் பண்ணி இருக்கோம். அதனால் நீ எதுவும் செய்யாத” என சரளமாக பேசிக் கொண்டே போனாள் சுஜி.

“சரிங்க அண்ணி, வந்துடறேன்” என சில வார்த்தைகள் பேசி விட்டு போனை வைத்தாள் ரோஸ்மேரி.

ட்ரையர் போட்டு தலையை காய வைத்து விட்டு, “பென்னி, பேப்பர், சிசர் எல்லாம் எடுத்துட்டு வா” என கூப்பிட்டாள்.

வெறும் கையேடு பென்னி வந்து மடியில் உட்கார்ந்து கொண்டான்.

“நீ சேடா இருக்கியா?” என்றான்.

“சேடா இல்ல..வார்மா இருக்கேன். தலைக்கு சூடா ட்ரையர் போட்டிருக்கேன் இல்ல?” என கண் சிமிட்டி சிரித்தாள்.

“இல்லை, டாடி பேசினது rudeமா” என்றான்.

“May be அவர் ஏதாவது டென்க்ஷனா இருந்திருப்பார். Its okடா ” என்றாள் அவள்.

பென்னி எழுந்து போவதாய் இல்லை. “டைமாகுது பாரு. சாயந்திரம் அத்தை வீட்டுக்கு போயிடுவோம். எல்லாத்தையும் எடுத்துட்டு வா” என சொல்லி அனுப்பினாள்.

சற்று நேரத்தில் மீண்டும் மீதும் சுஜியின் போன் வந்தது. “சாரி ரோஸ். அருண் அப்படி உன்கிட்ட பேசி இருக்கக் கூடாது. அம்மா போன் பண்ணி சொல்லி வருத்தப்பட்டாங்க. நான் நைட் அவன்கிட்ட பேசுறேன்” என சொல்லி விட்டு போனை வைத்தாள்.

எப்படி அத்தை வரை விஷயம் போனது என அவளுக்கு புரியவில்லை. கால் லாக் செக் செய்ததில் அத்தையின் போன் வந்தது தெரிய வந்தது அவளுக்கு.

“பென்னி, இங்க வா” என கூப்பிட்டாள்.

“பாட்டி போன் பண்ணாங்களா?” என கேட்டாள்.

“ஆமாம். நீ பாத்ரூம்ல இருந்த. அதான் நான் அட்டென்ட் பண்ணி பேசுனேன்” என்றான்.

“அவங்க என்ன கேட்டாங்க? நீ என்ன சொன்ன?” என கேட்டாள்.

“அம்மா கிட்ட அர்ஜெண்டா பேசணும், போன குடுடான்னு சொன்னாங்க. நான் அவுத்து விட்ட மாடு இப்போ குளிக்குதுன்னு சொன்னேன்” என குண்டை தூக்கிப் போட்டான்.

“பென்னி..” என அவனை தீர்க்கமாய் பார்த்தாள் ரோஸ்மேரி.

“எனக்கு குட் மேனர்ஸ், பேட் மேனர்ஸ் நீதான் சொல்லி தர்ற. அவருக்கு அவங்க மம்மி தான சொல்லி தரணும்?” என நீட்டி முழக்கி பேசியது.

“பென்னி, அப்பா பேசினது தப்பு தான். ஆனா அது நம்ம பேமிலி மேட்டர். இனிமே இந்த மாதிரி அதிகப்ரசங்கி வேலை எல்லாம் பாக்காத. புரியுதா?” என்றாள்.

அவன் முழித்தபடியே, “பாட்டியும் நம்ம பேமிலி தானே?” என்றான்.

நாலு சுவரை தாண்டியவர் அவர் என எப்படி சொல்லி விளங்க வைப்பது என அவளுக்கு தெரியவில்லை.

“இங்க பாரு, பாட்டி, தாத்தா, அப்புறம் அத்தை எல்லாம் நம்ம பேமிலி தான். ஆனா இந்த வீட்டுக்குள்ள நாம மூணு பேரு மட்டும் தான் இருக்கோம். அதனால இனிமே வீட்டுக்குள்ள நடக்குற பர்சனல் விஷயங்களை எல்லார் கிட்டேயும் பேசிகிட்டு இருக்காத? புரியுதா?” என அதட்டினாள்.

ராஜமாதா கனி மேக்கப் விஷயமாக பேச போன் போட்டு இருப்பார். பென்னி நடந்தை சொல்ல, உடனே சுஜிக்கு சொல்லி இருக்கிறார். “அவன் காலைலயே ஏதோ ஏடாகூடமா பேசி வெச்சிருக்கான். நீ போன் போட்டு அவளை சமாதானப்படுத்து” என ரிலே செய்திருக்கிறார். இதற்குள் எதார்த்தமாக சுஜி பேசி விட, மீண்டும் போன் செய்து சாரி சொல்லி இருக்கிறாள்.

வாரம் முழுக்க வேலை செய்து விட்டு சனி ஞாயிறு ரிலாக்ஸ் செய்யலாம் என்றால், ஏதாவது ஒரு ஏழரை வந்து நிற்கிறது என நினைத்துக் கொண்டாள்.

பென்னியை மடை மாற்றி craft செய்து முடிக்கும் போது ஒரு மணி ஆனது. மீண்டும் ராஜமாதாவின் போன்.

“சொல்லுங்க அத்தை” என்றாள்.

“இல்ல, அவனுக்கு போன் போட்டேன். ரிங் போகுது, ஆனா எடுக்கலை…” என இழுத்தார்.

“போன சார்ஜுல போட்டுட்டு வெளில போய் இருக்கார் அத்தை” என்றாள்.

“சாப்ட்டீங்களாம்மா, மணி ஒண்ணாகுதே? இன்னிக்கு என்ன சமையல்?” என கேட்டார்.

வானிலை எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம். ஆதர்சனத்தின் லட்சணத்தை அறிந்து கொள்ளும் ஆவல்.

“ஹா, சாம்பார், மீன் வறுவல் அப்புறம் அவருக்கு முட்டை பொடிமாஸ் செஞ்சிருக்கேன். சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுக்க போறேன். அப்போதான் சாயங்காலம் ப்ரெஷ்ஷா இருக்கும்” என நார்மல்சி ரசத்தை சொட்ட விட்டாள் ரோஸ்மேரி.

ராஜமாதாவுக்கு படு திருப்தியாக இருந்தது. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என புளகாகிதம் அடைந்தார்.

“படு..படு. நல்லா ரெஸ்ட் எடு. வாரம் முழுக்க வேலைல டென்க்ஷனா இருந்திருப்ப” என ஸ்லோவாய் ரிவர்ஸ் கியரில் நகர்ந்தார்.

ரோஸ்மேரி லேசாக ஒரு தடவை தலையை உலுக்கிக் கொண்டாள். இந்நேரம் அவள் சாப்பிட்ட பிறகு தூங்க போகும் செய்தி மூன்று நான்கு பேருக்கு போய் சேர்ந்திருக்கும். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கண்டிப்பாய் எந்த போனும் வராது.

பென்னியும் அவளும் சாப்பிட்டு முடித்த பிறகு, பென்னியை தூங்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள்.

தொரை சாப்பாட்டுக்கு வரும் களை தெரியவில்லை. மீதம் இருந்த எல்லாவற்றையும் மூடி ப்ரிட்ஜில் வைத்து விட்டு Netflixல் கொரியன் படம் பார்த்தாள். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

படம் முடிந்த பிறகு, எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்தாள். கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்த போது, முகத்தை விட மனம் தான் களைப்பாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது.

சற்று நேரம் அங்கேயே நின்றவள், ஹாலுக்கு வந்து கெவினின் அம்மாவுக்கு போன் போட்டாள்.

“டெய்சி, நான் கொஞ்சம் lowஆ இருக்கேன். ஒரு பங்க்ஷனுக்கு போகணும். எனக்கு கொஞ்சம் வந்து மேக்கப் பண்ண முடியுமா?” என கேட்டாள்.

“லேவண்டர் ஆர் சாண்டல்? என்ன வேணும்” என கேட்டாள் டெய்சி.

“Anything is fine” என்றாள் ரோஸ்மேரி.

டெய்சி வருவதற்குள் டீ போட்டு வைத்தாள். பென்னியை எழுப்பி ஸ்னாக்ஸ் கொடுத்து விட்டு, அவனுக்கு ட்ரெஸ் அயர்ன் செய்து வைத்தாள்.

கால் மணி நேரத்தில் டெய்சி வர, காலையில் செய்த craftஐ பற்றி பேசிக்கொண்டே ரெண்டு பேரும் டீ குடித்தார்கள்.

அடுத்த அரை மணி நேரத்தில் face massage மற்றும் லைட்டாக மேக்கப் செய்து விட்டு டெய்சி கிளம்ப, பென்னியும் அவளும் ட்ரெஸ் செய்து கொண்டு கிளம்பினார்கள்.

“வெளில போனா, ஒரு போன் பண்ணி எப்போ வருவீங்கன்னு கேக்க மாட்டியா?” என்றபடி உள்ளே வந்தான் அருண்.

“பென்னி, நீ போய் பார்க்கிங்க்ல இரு, நான் bag எடுத்துக்கிட்டு ரெண்டு நிமிஷத்துல வரேன்” என சொல்லி முதல் வேலையாக பென்னியை pack செய்தாள்.

“போன வீட்ல வெச்சிட்டு போயிட்டீங்க. அப்புறம் என்ன கேள்வி இது?” என குழப்பமாக கேட்டாள் ரோஸ்மேரி.

“ஹா, போன் இருந்தா மட்டும் பத்து போன் லைனா போட போறியா? சுதன் wife அவன் போன் எடுக்கலேன்னா, ஒடனே எனக்கு போடுவாங்க. அண்ணா, சுதன் உங்க கூட இருக்காரா? மத்தியானம் சாப்பிட்டாரான்னு அவ்ளோ அக்கறையா கேப்பாங்க” என குதித்தான்.

காலையிலே இந்த காட்சிக்கான ஒத்திகை அவன் மனதில் நடந்திருக்கிறது. அது இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இந்த instant அண்ணன் தங்கச்சி விஷயத்தில் ரோஸுக்கு உடன்பாடில்லை. இது தேவையில்லாத ஆணி என தோன்றியது. மைண்டுக்குள் ஹீட்டர் switch நிறுத்தினோமா என யோசித்தாள். நிறுத்தியிருந்தால் நல்லது என நினைத்துக் கொண்டாள்.

“சுதன் பொண்டாட்டி, மதன் பொண்டாட்டி கதையெல்லாம், இந்த மன்மதன் பொண்டாட்டிக்கு தேவையில்லை. ஏற்கனவே பென்னி அத்தை கிட்ட கொளுத்தி போட்டிருக்கான். இதுல லேட்டா போனீங்கன்னா, இன்னிக்கு செத்தீங்க. நாங்க கெளம்புறோம். சீக்கிரம் வந்து சேருங்க” என சொல்லி விட்டு கிளம்பினாள் ரோஸ்.

மத்தியானம் நேரத்தோடு வந்து, காதல் தூவி செய்யப்பட்ட முட்டை பொடிமாஸ் சாப்பிட்டு தூங்கி எழுந்திருந்தால், இல்லை கூட உட்கார்ந்து அந்த கொரியன் படத்தை பார்த்திருந்தால் கூட, இந்நேரம் “அவுத்து விட்ட மாடு” கூலாகி இருக்கும்.

சும்மா நசநசவென்று பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு காண்டாக இருந்தது.

அருண் போய் குழாயை திறக்க, சில்லென்று தண்ணீர் கொட்டியது. டவலை சுற்றிக் கொண்டு, ஹீட்டர் ஆன் செய்துவிட்டு போய் சேரில் உட்கார்ந்து கொண்டான். பசி வேறு வயிற்றை கிள்ளியது.

பிரிட்ஜை திறந்து பார்த்தால் முட்டை பொடிமாஸ் அம்சமாக உட்கார்ந்திருந்தது.

பத்து நிமிடத்தில் அவசர அவசரமாக குளித்து ரெடியாகி வந்து, எல்லவற்றையும் சூடு செய்து சாப்பிட்டு முடித்தான். மம்மிஜியின் போன் வந்தது.

“சொல்லுங்க மம்மி” என்றான்.

“சம்மந்தி வீட்டுக்கு பங்ஷனுக்கு நேரத்தோட வரணும்ங்கிற அறிவு கிடையாதா உனக்கு? உன் பொண்டாட்டியும் புள்ளையும் வந்துட்டாங்க. மச்சான் ரொம்ப பிஸியான்னு சுஜி வீட்டுக்காரர் நக்கலா கேக்குறார்? ” என காய்ச்சி எடுத்தார் ராஜமாதா.

“அவ ஏன் சீக்கிரம் போகணும்?” என குதர்க்கமாய் கேட்டான் அருண்.

“நான் தான் அவளை சீக்கிரம் வர சொன்னேன். என்ன மயிருக்கு போன வீட்டுல வெச்சிட்டு வெளியில சுத்துற? காலைலேர்ந்து உனக்கு ட்ரை பண்றேன். இப்போ வந்து சவகாசமா கேக்குற?” என பொரிந்து தள்ளினார்.

மாமாவை கூல் படுத்த ஹெவி பர்பார்மென்ஸ் வேறு கொடுக்க வேண்டும். மினுக்காக சுற்ற முடியாது. தன்னை தானே திட்டிக் கொண்டே கிளம்பினான் அருண்.

அருணுக்காக சுஜி வீட்டு வாசலிலேயே காத்திருந்தார் மம்மிஜி.

“வளர்ந்த புள்ளைய வெச்சிக்கிட்டு பேசுற பேச்சாடா இதெல்லாம்? என அபத்தமாக ஆரம்பித்தார்.

“என்ன பெருசா சொல்லிட்டேன்? எந்த வீட்டுலயும் பேசாததா?” என பம்மலாக சொன்னான் அருண்.

“வாய ஒடச்சிடுவேன், ஜிம்முக்கு போயிட்டு வந்தவளை எதுக்கு வம்பிழுத்த? சுஜி நேத்தே உன்கிட்ட சொல்லி அனுப்பிச்சாளா, இல்லியா? இன்னைக்கு காலைல அவங்க அத்தை மாமா வீட்டுக்கு வருவாங்கன்னு? நீ சொல்லியிருந்தா அவ வீட்லயே இருந்திருப்பா, இல்லியா?” என கொக்கியை போட்டார்.

அருண் பேசாமலிருக்க, “பசங்க எல்லாருக்கும் நல்ல இடம் அமையணும்னு அவங்கவங்க வேண்டிக்கிட்டு இருக்காங்க. அப்படியே அமைஞ்சாலும், அதுக்கப்புறம் நல்ல வேலை, புள்ளை குட்டின்னு இருக்கணும்னு நாங்க சாகுற வரை அல்லாடிக்கிட்டு இருக்கோம். நல்லா போகுற வாழ்க்கைல, வம்படியா பேசி விளையாடிகிட்டு இருக்குற நீ. பாத்து நடந்துக்க, எந்த பொண்ணும் கண்ட கண்ட பேச்ச சகிச்சிக்கிட்டு குப்பை கொட்டுறது இல்ல இந்த காலத்துல” என பரேடு விட்டார் மம்மிஜி.

வாசலிலேயே tarbulanceஇல் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளே வந்தான் அருண். சுஜி கேவலமாக பார்த்து விட்டு உள்ளே போக, அவன் லேட்டாக வந்த கோபத்தில் மாமாவும் முகம் கொடுத்துப் பேசவில்லை.

அடுத்த இரண்டு மணி நேரம் அருண் பம்பரமாக சுழன்று சுழன்று வேலை செய்தான். தம்பியென்று ஒருத்தன் இருந்தால், அது சுஜிக்கு அருண் இருப்பது போல இருக்க வேண்டும் என மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கிளம்பும் போது சர்டிபிகேட் கொடுத்தார்கள்.

“மம்மி, ஜோயல் எங்க? நான் வந்ததிலிருந்து அவனை பாக்கலை” என கேட்டான் அருண். ஜோயல் சுஜியின் மூத்த மகன். பத்தாம் வகுப்பு படிக்கிறான்.

“அவன் இன்னிக்கு basketball டீம் செலக்சனுக்கு போய் இருக்கான்” என பெருமையாக சொன்னார் மம்மிஜி.

பெண் பார்க்கும் படலம் நல்ல படியாய் முடிந்து எல்லோரும் கிளம்ப, பென்னி போய் ரோஸ்மேரியின் மடியில் உட்கார்ந்து கொண்டான்.

“மா, நான் ஒண்ணு பாத்தேன், உன்கிட்ட சொல்லணும்” என அவள் காதருகே வந்து சொன்னான்.

ரெண்டு பெரும் எழுந்து போய் போர்டிகோவில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தார்கள்.

“சொல்லுடா?” என கேட்டாள் ரோஸ்.

“நம்ம கனி சித்திய பாக்க இப்போ ஒரு அங்கிள் வந்தாரே, அவரு ரொம்ப poorஆ, மா? என கேட்டான்.

“ஏண்டா?” என வியப்பாக கேட்டாள்.

“சொல்லேன், உண்மையா அவரு நல்ல கம்பெனில தான் வேலை செய்யுறாரா?” என தொடர்ந்தான்.

“டேய், அவருக்கு சொந்தமா பிளாட், கார், பைக் எல்லாம் இருக்கு. நல்ல வசதியாதான் இருக்காரு. இப்போ என்ன உனக்கு?” என அலுத்துக் கொண்டாள் ரோஸ்.

பென்னி அமைதியாக உட்கார்ந்திருந்தான். “சரி சொல்லு, அவரு ஏன் poorஆ அப்படீன்னு என்கிட்டே கேட்ட?” என விடாமல் கேட்டாள்.

“அம்மா, இங்க பாரு, நீங்க எல்லாரும் வாசல்கிட்ட போய் அவங்க கார்ல ஏறும் போது பேசிக்கிட்டு இருந்தீங்களா? அப்போ அவரு உள்ள போய் சித்திகிட்ட தனியா bye சொல்லிட்டு வந்தார்” என டீடைலை சொன்னான்.

“சரிடா, அதுக்கென்ன?” என்றாள்.

“அவர் bye சொல்லிட்டு கதவுகிட்ட வந்து சேர்ல உக்காந்து ஷூ மாட்டும் போது நான் அவரை பாத்துகிட்டு தான் இருந்தேன். அவர் ரெண்டு சாக்ஸுலயும் ஓட்டை இருந்துது” என அப்பாவியாய் சொன்னான் பென்னி.

ரோஸுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கண்ணில் நீர் வர சிரித்து முடித்தாள்.

“அவரு poorஆ ம்மா? நம்ம சித்திய நல்லா பாத்துக்குவாரா?” என கேட்டான்.

இது தான் கார்ப்பொரேட் வாழ்க்கையின் பகுமானம் என எப்படி சொல்லி அவனுக்கு புரிய வைப்பது என தோன்றியது ரோஸுக்கு.

“இல்லடா பென்னி, அவர்கிட்ட பணம் தேவையான அளவுக்கு இருக்கு. ஆனா தனக்கு என்ன செஞ்சிக்கணும்னு அவருக்கு தெரியல” என சொன்னாள்.

“அது அவர் பர்சனல் ஐட்டம்டா. யாரும் பாக்க போறதில்லைன்னு நெனச்சு அவர் use பண்ணிக்கிட்டு இருக்காரு. இல்ல கெளம்புற அவசரத்துல, எது கெடச்சுதோ அதை போட்டுக்கிட்டு அலட்சியமா வந்திருப்பாரு” என அவனை சமாதானப்படுத்தினாள்.

“யாரும் பாக்க போறதில்லைன்னா, இது மாதிரி கண்டதை போட்டுக்கிட்டு வரலாமாம்மா?” என ஆதங்கமாய் கேட்டான்.

“தப்பு தாண்டா. இங்க பாரு, யாரை பத்தியும் உடனே முடிவு பண்ண கூடாது. நான் சுஜி அத்தை கிட்ட சொல்லி நல்லா விசாரிக்க சொல்றேன்” என அவனை ஒரு மார்க்கமாய் செட்டிங் செய்தாள்.

இரவு சாப்பாடு முடிந்து எல்லோரும் கிளம்ப தயாரானார்கள். ரோஸ் சுஜியிடம் தனிப்பட்ட முறையில் பென்னியின் அப்சர்வேஷனை சொல்லி மீண்டும் ஒரு முறை தீர விசாரிக்க சொன்னாள்.

சுஜிக்கும் இது ஒரு red flag ஆக இருந்தது. “பணம் காசு இருக்கிறது இருக்கட்டும், பையன் எப்படின்னு இன்னும் கொஞ்சம் க்ளோஸ் சர்க்கிள்ள தீவிரமா விசாரிக்கணும்” என தீர்க்கமாய் சொன்னாள்.

சற்று நேரத்தில் வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது. ஜோயல் செலக்சன் முடிந்து ஒரு கையில் பேகும், மறு கையில் வாட்டர் பாட்டிலும் இருக்க, கை முட்டியால் டோர் பெல் அடித்தான்.

“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என கதவை திறந்தபடியே கேட்டான் பென்னி.

ஹாலில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போக, “டேய், என்னடா பேச்சு இது?” என அதட்டினான் அருண்.

“அம்மா வெளில போயிட்டு லேட்டா வந்தா, நீங்க இப்படி தானே சொல்வீங்க?” என அருணிடம் கேட்டான் பென்னி.

சிறுகதை – வாக்கிங் வகையறா

A group of friend going for morning walk

“ஆன்ட்டி, freeயா இருக்கீங்களா?” என போனில் கேட்டாள் சிந்தாமணி.

“ம்ம், இன்னும் அரை மணி நேரம் கழிச்சு தான் இட்லிக்கு மாவு அரைக்க போறேன், இப்போ சும்மா தான் இருக்கேன்” என்றார் சங்கு புஷ்பம்.

சிந்து ஆறாவது மாடியில் இருக்கிறாள். அவள் கணவர் கார் பேக்டரியில் வேலை பார்க்கிறார்.

“யார் போன்ல?” என கேட்டார் நேசப்பா.

“சிந்துங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“என்ன இன்னைக்கு திடீர்னு காலைல உன்கூட மீட்டிங்? எப்பவும் சாயங்காலம் கீழ போகும் போது தானே பேசுவீங்க?” என்றார் நேசப்பா.

“இன்னைக்கு வியாழக்கிழமை. அவங்க எதிர் வீட்டுல இருக்குற காமாட்சி சாய் பாபா கோவிலுக்கு காலைலயே போயிட்டு, பக்கத்துல அவங்க அண்ணி வீட்டுக்கும் போயிட்டு சாயங்காலம் தான் வருவாங்க” என சொல்லி கண் சிமிட்டினார் சங்கு புஷ்பம்.

“சரி, நா போய் மொளகா தூள் அரைச்சிட்டு வந்துடுறேன், நீ பையை ரெடி பண்ணி வை” என சொல்லிவிட்டு குளிக்க போனார் நேசப்பா.

கால் மணி நேரம் கழித்து டோர் பெல் அடித்து விட்டு, தானே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் சிந்து.

“BP மெஷின் குடுங்க ஆன்ட்டி” என சொன்னபடியே துப்பட்டாவை மடித்து டேபிளின் மீது வைத்து விட்டு சோபாவில் போய் உட்கார்ந்தாள்.

“இவ்ளோ அழகா மடிச்சு வெக்குறதுக்கு, நீ அத வீட்லயே வெச்சிட்டு வந்திருக்கலாம்!” என சொல்லி சிரித்தார் சங்கு புஷ்பம்.

சிந்து காண்டாக, “அதை விட ஸ்பெஷல் ஐட்டம் வெளில இருக்கு பாரு, புள்ள புது ஷூ போட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்திருக்கு” என குறும்பாக சொல்லி விட்டு, செருப்பை மாட்டிக்கொண்டு மிஷினுக்கு கிளம்பினார் நேசப்பா.

சிந்துவுக்கு ஆரம்பமே கண்ணை கட்டியது. இதுவே காமாட்சியாக இருந்தால் இந்நேரம் எதுக்கு BP ஏறி இருக்குன்னு மொத்த கதையையும் கேட்டு முடிச்சிருப்பாங்க என நினைத்தாள்.

“இந்தா மிஷின், எவ்ளோ இருக்குன்னு பாத்து வை. நான் போய் கிரைண்டர்ல உளுந்து போட்டுட்டு வரேன்” என சொல்லிவிட்டு கிச்சனுக்குள் போனார்.

இந்த வீட்ல தன்னை ஒரு பேஷண்ட் மாதிரியே ட்ரீட் பண்ண மாட்டேங்குறாங்க என நொந்து கொண்டாள் சிந்து.

“எவ்ளோ இருக்கு” என உள்ளேயிருந்து குரல் வர, “122-83” என்று சொல்லி விட்டு, ரெண்டு கை பருப்பை போட்டுட்டு வர இவ்ளோ நேரமா என அலுத்துக் கொண்டாள் சிந்து.

“நார்மல் தான். நேத்து நைட் சரியா தூங்கலியா?” என மீண்டும் குரல் வந்தது.

Case பைலின் பேஸ் பாயிண்டையே இந்தம்மா புஸ்ஸுன்னு ஆக்கிருச்சு என்பது போல இருந்தது அவளுக்கு. போனை சற்று நேரம் பார்த்தவள், எழுந்து போய் டேபிள் மீதிருந்த வாழை பழத்தை எடுத்துக் கொண்டாள்.

“BP நார்மலாகுறதுக்கு Potassium-rich food சாப்பிடணும்ன்னு google சொல்லுது. நான் ஒரு வாழை பழம் எடுத்துக்குறேன்” என சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள் சிந்து.

உள்ளேயிருந்து “சொய்” என ஒரு சத்தமும், மிக்ஸி ஓடும் சத்தமும் வந்தது. பின்னாலேயே ரச வாசனையும் வந்தது.

வீட்ல ரசாபாசமான சண்டை ஆகி நா ஒருத்தி இங்க வந்து உக்காந்திருக்கேன், இந்தம்மா சவகாசமா ரசம் வெச்சிக்கிட்டு இருக்கு என் நொந்து போனாள் சிந்து.

காமாட்சியா இருந்தா இந்நேரம், வாஸ்து, ரெய்கி, மனவளத்துல நாலு டிப்ஸ்ன்னு இந்நேரம் சிந்துவுக்கு ஒரு closure கொடுத்திருப்பார்கள்.

சற்று நேரத்தில் கையை துடைத்தபடியே வந்த சங்கு புஷ்பம் ” Your Fault Londonன்னு ஒரு British romantic படம் Amazon Primeல உட்டுருக்கான்னு நேஸ் சொன்னாரு. அதான் எல்லா வேலையையும் முடிச்சிட்டு, மத்தியானம் லன்ச்சுக்கு அப்புறம் பாக்கலாம்னு plan” என கெத்தாக சொன்னபடியே வந்து உட்கார, சிந்துவுக்கு அவமானமாக இருந்தது.

பெருசுங்க ரொம்ப ரவுசு பண்ணுதுங்க என நினைத்தாள். பேசாம வேற ஏதாவது கதையை பேசிட்டு கிளம்பலாம் என முடிவுக்கு வந்தாள்.

“நீ என்ன லஞ்சுக்கு பண்ணி இருக்க?” என புஷ்பம் கேட்க, “ஒன்னும் பண்ணல, அவருக்கும் எனக்கும் காலைல கொஞ்சம் சண்டை. பசங்களுக்கு மட்டும் பாக்ஸ் ரெடி பண்ணி அனுப்பிட்டேன். அவரு கேன்டீன்ல சாப்பிட்டுக்குவாரு” என சோகமாக சொன்னாள் சிந்து.

“கொஞ்சுறதுக்கு எதுக்கு சண்டை” என மொக்கை ஜோக் சொல்லி சிரித்து, “பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சா கூட சிம்பிளா முடிச்சிடலாம்” என்றார் சங்கு புஷ்பம்.

காமாட்சியாக இருந்தால் லஞ்ச்சும் குடுத்து, சாயங்காலம் வர்ற பசங்களுக்கும் ஸ்நாக்ஸும் செய்து குடுத்து, எல்லா டீட்டைலையும் உருவியிருப்பார். பழைய சண்டையில் நடந்த, சிந்து கூட மறந்தே போன விஷயங்களை reference ஆக சொல்லி அவர் கட்சிகாரரை மெருகேற்றி அனுப்பி இருப்பார்.

சிந்துவுக்கு பொறுமையே போனது. ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை மதிக்காமல் தன்னை லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணுவதாக மனதிற்குள் புலம்பினாள். தனக்கு எப்பேர்ப்பட்ட அநீதி இழைக்கபட்டிருக்கிறது என சொல்லி புஷ்பம் வாயாலேயே அவரை உச்சு கொட்ட வைக்க வேண்டும் என முடிவெடுத்தாள்.

“எதுக்குதான் இந்த பொண் ஜென்மம் எடுத்தேன்னு இருக்கு? என லீடு குடுத்தாள் சிந்து.

போச்சுடா..”ஆயிரம் பேரை கூட எதிர்த்து நில், ஆனால் ஒருபோதும் ஒருவரை கூட எதிர்பார்த்து நிற்காதே” என அம்மணி இன்னிக்கு ராத்திரி ஸ்டேட்டஸ் வைக்க போகுது என நினைத்தார் புஷ்பம். Rapid fire மாதிரி ஒரு ரவுண்டு கேட்கலாம் என முடிவெடுத்தார்.

“Shop Manager”க்கு என்ன கொறச்சல்? என்றார் புஷ்பம்.

“இந்த மாசம் அவரோட அக்கா பொண்ணுக்கு கல்யாணம். ஆரி பிளவுஸ் தைக்க காசு கேட்டா, எகிறிட்டு போறார்” என மூக்கை சிந்தினாள்.

“ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே Hubby Loveன்னு கேப்ஷன் போட்டு, புது ஷூ போட்டோவ ஸ்டேட்டஸ் போட்டிருந்த? அதுக்குள்ள என்ன?” என பாய்ண்ட்டை போட்டார் புஷ்பம்.

சிந்து ஒரு நிமிடம் திகைத்துப் போனாள். இந்த அம்மா என்ன சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசுது? அது வாக்கிங் ஷூ. இப்போ சண்டை கல்யாண பார்ட்டிக்கு ட்ரஸ் வாங்குறதுக்கு. இவங்களுக்கு பஞ்சாயத்து புரியறதுக்குள்ளயே தாவு தீந்துடும் என ஆனது அவளுக்கு.

“ஆமா, PCOD பிரச்சினை இருக்கு. டாக்டர் டெய்லி 40 நிமிஷம் நடக்க சொன்னாங்க, அதனால வாங்கி குடுத்தாரு” என மெல்ல சொன்னாள்.

“தங்கமாத்தான் இருக்காரு மனுஷன், நீ ஏற்கனெவே ஆரி பிளவுஸ் வெச்சிருக்க மாதிரி எனக்கு ஞாபகம்.” என குண்டை போட்டார் புஷ்பம்.

சிந்துவுக்கு இந்த அம்மா என்ன நம்ம வீட்டுல bug வெச்சிருக்கா என சந்தேகம் வந்தது.

“அதெல்லாம் டார்க்கு பச்சை, மெரூன் அப்புறம் ஒரு கோல்ட் கலர். மூணு ஜாக்கெட் தெச்சா காம்போ ஆபர்னு பன்னிரெண்டாயிரம் குடுத்து நம்ம வசந்தி அக்கா கிட்ட வாங்குனேன். ஆனா இப்போ அவர் கஸின்ஸ் எல்லாம் சேந்து இந்த கல்யாணத்துக்கு pestal கலர் theme முடிவு பண்ணி இருக்காங்க. அதனால சங்கீத், நலங்கு அப்புறம் முஹுர்த்தம்ன்னு மூணு pestal கலர் பிளவுஸ் வாங்கணும்” என்றாள்.

“ஹிஹிஹி, அதுக்கு உங்க ஊட்டுகார் , இந்த காசுக்கு பத்து ITC, பத்து Tata Motors ஷேர் வாங்கி போட்டாலாவது ப்ரயோஜனம்ன்னு சொன்னாரா?” என சிரிப்பை அடக்கியபடியே கேட்டார் புஷ்பம்.

இதை கேட்டதும் பேயை கல்யாணம் கட்டி, பிசாசுக்கு வாக்கப்பட்டது போலிருந்தது சிந்துவுக்கு. இவங்கல்லாம் ஆனந்த் சார் கோஷ்டி என நினைத்துக் கொண்டாள்.

“இப்போ என்ன? இது ஒரு life time event. இப்படி சிக்கனம் புடிச்சி வாழ்ந்து, திடீர்னு டக்குனு செத்துட்டா, என்ன ஆவுறது?” என வீராப்பாய் கேட்டாள்.

“எல்லாம் நல்லபடியா இருப்போம். வீணா ஏன் கவலை படுற? சாரு உன் health மேல இருக்குற அக்கறையினால் தான ஷூவெல்லாம் வாங்கி தரார். பிஸாத்து ஆரி பிளவுசுக்கு போய், பொட்டுனு போய்ட்டா அப்டீன்னு பேசுற?” என எடுத்துரைத்தார் புஷ்பம்.

கூடவே “என் கதை மட்டும் ஏனோ என்னை பற்றி சிந்திக்காத மனிதர்களால் நிறைந்துள்ளது” என அவளின் ரெண்டாவது ஸ்டேட்டஸுக்கு ஐடியா குடுத்தது போலிருந்தது.

“உஸ்ஸ், வசந்தி அக்காக்கு நான் Prime customer. மூணு பிளவுசு இப்போ பத்தாயிரத்துக்கு தச்சு தர்றதா எனக்கு ஆபர் கொடுத்திருக்காங்க. இவர் என்னடான்னா இப்போதான் ரொம்ப பிகு பண்ணுறார். நான் அவங்ககிட்ட டிசைனெல்லாம் செலக்ட் பண்ணி சொல்லிட்டேன்” என சொன்னாள்.

ஹ்ம்ம், பிரச்சினை முற்றிய நிலையில் இருக்கிறது. இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை என தோன்றியது புஷ்பத்திற்கு. சரி எதிரி கதையை விட்டு விட்டு தோழியை பற்றி பேசலாம் என முடிவெடுத்தார்.

“வசந்தின்னா, அந்த Gym master பொண்டாட்டியா?” என கேட்டார்.

“ஆமா ஆன்ட்டி, காலைல என்கூட வாக்கிங் வருவாங்க. அவங்க ரொம்ப பிஸியான ஆளு. லாஸ்ட் டைம் அவங்க இன்ஸ்டால, என் போட்டோஸ் போட்டாங்க, செம லைக்ஸ் வந்தது. இப்பவும் pestal கலர் பிளவுஸ் collection launchக்கு என்ன மாடலிங் பண்ண கேட்டு இருக்காங்க” என உற்சாகத்தில் சொல்லி கொண்டே போனாள்.

பூனை குட்டி வெளில வந்துடுத்து moment அது.

“சரி, கலந்து பேசி சுமுகமா முடிவு பண்ணு” என பொதுவாய் சொல்லி “இந்த வாரத்துக்கு மாவு அரைச்சு வைச்சிட்டியா?” என்றார் புஷ்பம்.

“நான் Divine Foodsல subscription வாங்கி இருக்கேன் ஆன்ட்டி. ஒரு வாரத்துக்கு தேவையான மில்லட் மாவெல்லாம் அரைச்சி சில்வர் டப்பால தந்துடுவாங்க. நம்ம சொசைட்டில இருக்க தீபா தான் நடத்துறாங்க. Quality செமயா இருக்கு” என தொடர்ந்தாள்.

“அவங்களும் உன் கூட காலைல வாக்கிங் வராங்களா?” என கேட்டார் புஷ்பம்.

“ஆமா, இப்போ அவங்க எனக்கு close friend ஆகிட்டாங்க” என புல்லரித்து போய் சொன்னாள்.

“இரு மாவு வழிச்சி வெச்சுட்டு வரேன்” என சொல்லிவிட்டு உள்ளே போனார். சங்கு புஷ்பத்திற்கு நேசப்பாவின் மனைவி great என தோன்றியது. பத்து நிமிடம் ஆனது வேலை முடிய.

“நீ வேணா நைட் சாப்பிட்டப்புறம் வாக்கிங் போயேன். PCODக்கும் ஹெல்ப்பா இருக்கும். நீயும், சாரும் நைட் ரெகுலரா ரெண்டு மூணு ரவுண்டு போயிட்டு வந்தீங்கன்னா, எல்லா பிரச்சினையும் freeஆ மனசு விட்டு நிதானமா பேசலாம். காலைல அவர் அரக்க பரக்க கிளம்பும் போது எதை காது குடுத்து கேப்பார்?” என பொறுமையாய் சொன்னார் புஷ்பம்.

சிந்துவுக்கு நல்ல ஐடியா என தோன்றினாலும், சக கோஷ்டியை பிரிந்து வேறு நேரத்தில் வாக்கிங் செல்வதை மனது ஏற்றுக் கொள்ளவில்லை.

“கஷ்டம் ஆன்ட்டி. எல்லாரும் friends ஆகிட்டாங்க” என சிணுங்கினாள் சிந்து.

“நீ அவங்கள பார்க்குல இல்ல பார்க்கிங்லன்னு எங்கயாவது மீட் பண்ண தான் போற. சாரு கூட moon light வாக்கிங் போய் “உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல ஒண்ணும் இல்ல” சாங்குக்கு vibe பண்ணு” என சொல்லி ஒரு பிட்டை போட சிந்துவுக்கு உச்சி குளிர்ந்து போனது.

“சரிங்க ஆன்ட்டி, நான் கிளம்புறேன்” என சொன்னாள் சிந்து.

சற்று நேரத்தில் நேசப்பா வர, மதிய உணவு முடித்து சோபாவில் போய் உட்கார்ந்தார்கள்.

“அந்த புள்ளைக்கு என்ன பிரச்சினையாம்?” என கேட்டார்.

“சொல்றேன், மொதல்ல அந்த டப்பால ஒரு pestal color மாத்திரை அட்டை இருக்கும், அதை எடுத்து குடுங்க” என சொல்லி கையை நீட்டினார் புஷ்பம்.

“எப்போதுலேர்ந்துடி சுகர் மாத்திரைக்கு பேரு ஸ்டைலாச்சு?” என முழித்தார் நேசப்பா.

சிறுகதை – மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை..

A 50 year old couple enjoying city skyline

“என்ன கோகி, ஹேர் கலர் பண்ணியிருக்க? நம்ம 25th anniversary வருதுன்னா? ஷில்லாங் பேக்கேஜ் புக் பண்ணட்டுமா? சோமசேகர் கேட்டுக் கொண்டேயிருக்க, ஆபீஸ் பேகை டேபிள் மீது வைத்துவிட்டு நேராக பாத்ரூமிற்குள் நுழைந்தாள் கோகிலா.

சோமா வேலையை தொடர, கோகி வெளியே வர பத்து நிமிடம் ஆனது. நைட்டி மாற்றி, டீ போட்டு எடுத்து வந்து சோபாவில் உட்கார்ந்தாள்.

“என்ன புக் பண்ணட்டுமா, சொல்லு? மேகத்துக்கு நடுவுல, நீயும் நானும் மட்டும். சுற்றிலும் பனிமூட்டம். பக்கத்துல இருக்குற காடு, மலை எல்லாம் மங்கலா தெரிஞ்சாலும் பரவாயில்லை. நமக்கு நாம மட்டும் தெரிஞ்சா போதும்” என உற்சாகமாக தொடர்ந்தார் சோமா.

“Mondayலேர்ந்து ரெண்டு வாரம் கிளையண்ட் விசிட்” என டீ டம்ளரை பார்த்தபடியே சொன்னாள் கோகி.

சோமாவுக்கு இது புதிதில்லை.

ஸ்கிரீனிலிருந்து திரும்பி கோகியை பார்த்தார். புது hair cut. புது hair color.

“இந்த hair cutக்கு என்ன பேரு? மைண்ட்ல இருக்கு, ஆனா பேரு சரியா ஞாபகம் இல்லை” என்றார்.

“பேரெல்லாம் கேக்கலை. Hair density ரொம்ப கொறஞ்சிடுச்சி. அதான் ப்ரீத்தியை எனக்கு எது suit ஆகுமோ அதை பண்ண சொல்லிட்டேன்” என்றாள்.

கோகி கிச்சனுக்குள் சென்று கொண்டே பதில் சொல்லி முடிக்க, சோமா யோசனையில் ஆழ்ந்தார்.

கொஞ்ச நேரத்தில் மகன் சாய் பிரசாத்தும் வர, இரவு உணவு சாப்பிட்டு முடித்து, அவரவர் அடுத்த நாளுக்கான தயாரிப்புகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

கோகிக்கு எட்டரையில் இருந்து பத்து மணி வரை மீட்டிங் இருந்தது. ஹெட்போனை மாட்டிக்கொண்டு, நோட்ஸ் எழுதிக் கொண்டு பிசியாக இருந்தாள்.

“டேய், நான் ஒரு walk போயிட்டு வரேன். பிரேக்ல அம்மா வந்து கேட்டான்னா சொல்லிடு” என்றார் சோமா.

“ஹ்ம்ம், நீயும் தான் டெய்லி சொல்ற. நீ பன்னெண்டு மணி வரைக்கும் வரலேன்னா கூட, அவங்க இழுத்து
போர்த்திகிட்டு தூங்கிடுவாங்க” என கூலாக சொன்னான் சாய்.

சோமாவுக்கு இதுவும் புதிதில்லை. “நீ நேரத்துக்கு தூங்கு, ரொம்ப நேரம் போன் பாக்காத” என சொல்லிவிட்டு கிளம்பினார்.

வீட்டை விட்டு வெளியே வந்ததும், அவருக்கு ஆயாசமாக இருந்தது. இரண்டு கைகளையும் பின்பக்கம் கட்டிக் கொண்டு, நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்.

சமீப காலமாக கோகி மிகவும் சோர்வாக இருக்கிறாள். முன்பெல்லாம் சிறிய விஷயங்களுக்கு கூட சிரித்தவள், இப்போது காரணமில்லாமல் எரிச்சலடைகிறாள். சில நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அமைதியாகிவிடுகிறாள்.

சோமாவுக்கு புரிந்தது இது வெறும் மனநிலை மாற்றம் அல்ல என்று. அவள் வாழ்க்கையின் ஒரு புதிய பருவத்தைக் கடந்து கொண்டிருக்கிறாள். உடல் அமைதியாக மாற்றம் அடைகிறது. அதனுடன் போராடிக் கொண்டே மனமும் உணர்வுகளும் புதிய சமநிலையைத் தேடிக்கொண்டு இருக்கின்றன.

சோமா அவளைச் சரி செய்ய முயலவில்லை. அதற்கு பதிலாக, அதிகம் பேசினார். குறைவாக வாதிட்டார். சில நாட்களில் அவளுக்கு தனிமை தேவைப்பட்டபோது, அமைதியாக அவளுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

யோசித்தபடியே நடந்து போனதில், அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. வரும் வழியில் பார்மசியில் சில பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினார்.

சாய் தூங்கி விட்டான். கோகியும் ஹாலில் இல்லை. கை கால்களை கழுவிக் கொண்டு, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி எடுத்துக் கொண்டு, பெட்ரூமிற்குள் போனார்.

“கோகி” என மெதுவாக குரல் கொடுத்தார். அசைவில்லை. சரி தூங்கட்டும் என அவரும் படுத்துக் கொண்டார்.

வேலை, நட்பு, சொந்தம் என வாழ்க்கை நிரம்பியே இருந்தது. ஆனால் சில மாதங்களாக, இருவரும் ஒருவருக்கொருவர் அருகில் இருந்தும், ஏதோ ஒரு மெல்லிய வெறுமை மட்டும் நடுவில் படுத்திருக்கிறது. திரும்பத் திரும்ப வந்த யோசனைகளை ஒதுக்கிவிட்டு, எப்படியாவது கொஞ்ச நேரம் தூங்க முயன்றார் சோமா.

மறுநாள் காலை ஐந்து மணி. கோகி விழித்தவுடன் சைட் டேபிளின் மீது இருந்த Biotin supplement box கண்ணில் பட்டது. ஒரு நிமிடம் கோகிக்கு புன்முறுவல் வந்தது. Hair fall பிரச்சினைக்காக வாங்கி வந்திருக்கிறார். சோமாவின் தலையை கோதிக் கொண்டே விட்டத்தை பார்த்தபடி கொஞ்ச நேரம் படுத்திருந்தாள்.

ஒரு காலத்தில் அவர்களுக்கிடையே இப்படிப்பட்ட கிண்டல்கள் தினசரி விஷயமாக இருந்தன. “கோகி, பார்மஸில இருக்கேன், என் கப்போர்டுல protection இருக்கானு பாத்து சொல்லேன்” என சோமா வம்பிழுத்து எவ்வளோவோ நாட்களாகி விட்டது.

ஆனால் அந்த விருப்பம் எங்கேயா, எப்போதோ கோகிக்கு தொலைந்து போய்விட்டதாக உணர்ந்தாள். கடந்த காலங்களில் மிக இயல்பாக இருந்த ஒரு விஷயம், இப்போது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. சோமா அதை புரிந்து கொண்டு காத்திருக்கிறார். அதுதான் சில நேரங்களில் அவளை இன்னும் அதிகமாக நெகிழச் செய்தது.

வெளிச்சம் அறையிலும் பரவ ஆரம்பிக்க, எழுந்து போய் அன்றாட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். சாய் ஏழு மணிக்கே கிளம்ப, இவர்கள் இருவரும் ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து காரில் கிளம்பினார்கள்.

கோகி டாக்சியில் பயணிப்பது போல, வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். சோமா அமைதியாக
ஓட்டிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் காரினுள் நிலவிய அந்த மௌனம் அவரை என்னவோ செய்தது. போனை எடுத்து ஒரு பாடலை ஒலிக்க விட்டார்.

கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..
கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!
நுரையால் செய்த, சிலையா நீ?

பாடல் தொடர, பல நாட்களாக அடக்கி வைத்திருந்த ஏதோ ஒன்று உள்ளுக்குள் அசைந்தது கோகிக்கு.

காதல், தாய்மை இரண்டு மட்டும்,
பாரம் என்பதை அறியாது!
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்,
பசியோ, வலியோ தெரியாது!

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
உயரம் தூரம் தெரியாது!
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்,
என்னால் தாங்க முடியாது!

இந்த வரிகளை கடக்கும் போது, கோகியின் கை தானாக நீண்டு சோமாவின் தோளில் படர்ந்தது.

சற்று நேரத்தில் ஆபீஸ் வர, “bye சோமா” என சொல்லி காரை விட்டு இறங்க எத்தனித்தாள்.

“ரெண்டு நிமிஷம் இருந்துட்டு போயேன்” என ரோட்டை பார்த்தபடியே சொன்னார்.

கோகி மெதுவாக அவரின் இடது கரத்தை இறுக்கமாக பற்றிக்கொள்ள, சோமா சீட்டில் சரிந்து கண் மூடினார்.

சில நிமிடங்கள் கழித்து “கிளம்பு, ஈவினிங் வரேன் பிக்கப்புக்கு, bye” என்றார்.

மூன்று வாரங்கள் ஆனது. கோகி கிளையண்ட் விசிட் முடிந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தாள். ஷில்லாங் ட்ரிப் பற்றி எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. Anniversaryக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. இப்போது ட்ராவல் ஏற்பாட்டை செய்ய முடியுமா என யோசித்தாள்.

அப்போது ப்ரீத்தியின் கால் வந்தது. “மேம், சார் உங்களுக்கு Spa package புக் பண்ணி இருக்காரு. நேத்து உங்களுக்கு ட்ரை பண்ணேன். உங்க நம்பர் பிசியா இருந்தது. ஸ்லாட் கன்பார்ம் பண்ணிடீங்கன்னா, நான் Martinaவ உங்களுக்கு assign பண்ணிடுறேன்” என்றாள்.

“மதியம் ரெண்டு மணிக்கு வரேன்” என சொல்லி போனை வைத்தாள். சோமா ஏதோ செய்து கொண்டே இருக்கிறார். நாம் அவருக்காக என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுந்தது கோகிக்கு.

என்ன செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என புரியாமல் சோபாவில் சாய்ந்து கண் மூடி யோசித்தாள்.

சோமாவின் போன் வந்தது. “என்ன மண்டைய ஒடச்சிகிட்டு உக்காந்திருக்கியா இன்னும், ரெடியாகி கிளம்பு” என்றார். “சரி சோமா” என்றாள் அவள்.

Spa செஷன் முடிந்ததும் உடலில் தான் நீண்ட நாட்களாகச் சுமந்து வந்த ஒரு கண்ணுக்குத் தெரியாத பாரம் மெதுவாக இறங்கிவிட்டது போல உணர்ந்தாள் கோகி. தோள்களில் இருந்த இறுக்கம் தளர்ந்து கழுத்து, முதுகு, கை கால்கள் என உடலின் ஒவ்வொரு பகுதியும் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கியது போல் இருந்தது.

அன்று இரவு சோமா வாக்கிங் கிளம்பும் போது, கோகியும் சேர்ந்து கிளம்பினாள். “பைக் எடுத்துட்டு வரவா? ஒரு ரவுண்டு போலாமா?” என்றார் சோமா.

அவள் தலையசைக்க, நகரத்து சாலைகளை தவிர்த்து ஹைவேசில் ஒரு நெடிய பயணமாக அது இருந்தது.

“நான் கொஞ்ச தூரம் ஓட்டவா?” என்றாள். சாலையோரம் வண்டியை நிறுத்தி சாவியை கொடுத்தார்.

கோகியின் இரு தோள்களை பற்றி சற்று தூரம் வந்தவர், லேசாக அவள் மீது தலை சாய்த்து கொண்டார். இது அவரின் குறைந்த பட்ச தேவை என உணர்ந்து, சர்வீஸ் ரோட்டுக்கு மாறி ஒரு கையால் வண்டியை ஒட்டிக்கொண்டே, மறு கையால் அவர் கால்களை மென்மையாய் பிடித்து விட்டாள்.

கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பயணம் முடித்து வீடு வந்து சேர்ந்த போது, சோமா பல நாள் வெறுமை நீங்கியது போல உணர்ந்தார்.

அடுத்த நாள் காலை. கோகி நான்கு மணிக்கே விழுத்துக் கொண்டாள். அவள் இரண்டு முறை புரண்டு படுக்க, சோமா “ஓய், சில்வர் கேர்ள், happy anniversary!” என சொல்லி இழுத்து அணைத்துக் கொண்டார். “Happy anniversary மை சில்வர் ஜூபிலி ஹீரோ! என கோகியும் கிசுகிசுப்பாய் சொல்ல, அன்றைய plan என்ன என்று கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டார்கள்.

ஆறு மணிக்கே கோவிலை சென்றடைந்து, சந்நிதி முன் நின்றபோது, அவர்கள் மனக்கண்களில் பல நினைவுகள் ஓடின. முதல் சம்பளம், முதல் வீடு, குழந்தை பிறப்பு, வலி மிகுந்த நாட்கள் மற்றும் சிறு சிறு வெற்றிக்காக வந்து நன்றி சொன்ன தருணங்கள் என ஒவ்வொரு நிகழ்வும் அவர்களுக்குள் ஒரு திரைப்படம் போல விரிந்தது.

அன்று சாயந்திரம் ஆறேழு நண்பர்கள் வீட்டுக்கு வர, ஒன்பது மணி வரை நேரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொருவராய் கிளம்ப, கடைசி நபரை வழி அனுப்பி விட்டு “மெயின் டோர் பூட்டிடவா கோகி” என கேட்டார் சோமா.

மூடிய உள்ளங்கையை கோகி நீட்ட, அவர் மெல்ல அவள் விரல்களை பிரித்தால் அதில் ஒரு சாவி இருந்தது. “போலாமா?” என அவள் கேட்க, ஆச்சர்யத்தில் மூழ்கினார் சோமா.

லிப்டில் முதல் முறையாக பதினாறாவது மாடிக்கு போனார்கள். கோகி மொட்டை மாடி பூட்டை திறக்க, “வாங்க” என சொல்லி வாட்டர் டேங்க் படி மீது ஏறி மேலே போய் நின்றாள். பின்னாலேயே சோமாவும் ஏறி வர, முழு நகரமும் தங்க புள்ளிகளாக ஜொலித்துக் கொண்டிருந்தது.

“என்னடி இங்க கூட்டிட்டு வந்திருக்க?” என அவர் கேட்க, “மேகத்துக்கு நடுவுல, நீங்களும் நானும் மட்டும். சுற்றிலும் பனிமூட்டம். பக்கத்துல இருக்குற ஊரு,காடு, மலை எல்லாம் மங்கலா தெரிஞ்சாலும் பரவாயில்லை. நமக்கு நாம மட்டும் தெரிஞ்சா போதும்” என சொல்லி இறுக கட்டிக் கொண்டாள்.

அவர்கள் எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை. அவன் சட்டையைப் பிடித்திருந்த அவள் விரல்கள் மட்டும் இறுகிக் கொண்டே போக, அவள் முதுகில் இளம் சூடான கண்ணீர் துளிகள் ஒன்றன்பின் ஒன்றாக விழ, “லவ் யூ சோமா” என்றாள்.

அன்று இரவு அவர்கள் ஷில்லாங்கில் இல்லை. ஆனால் ஷில்லாங் தரும் அமைதியும் நெருக்கமும் அவர்களுக்குள் இருந்தது.

சிறுகதை – கோலங்கள்

An image of a house decorated with floor rangoli

“ராஜு அண்ணா, நம்ம வேதநாயகி மேடம் வீட்டு வாசல்ல பால் பாக்கெட் எடுக்காம அப்படியே இருக்கு. அவங்க ஊர்ல இல்லியா?” என செக்யூரிட்டியிடம் கேட்டாள் ஹவுஸ் கீப்பிங் பணிப்பெண் மாதவி.

“எதுவும் சொல்லலியேம்மா? பெல் அடிச்சி பாத்தியா?” என்றார் ராஜு.

“அடிச்சேன்னா..யாரும் தொறக்கல. இன்னும் கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தா மூணு பாக்கெட் பாலும் கெட்டு போயிடும்” என்றாள் மாதவி.

ராஜு அவர்களுக்கு போன் செய்தார். அவர்கள் எடுக்காததால், “நீ என்ன பண்றன்னா, அந்த ப்ளோர்ல இருக்க யார்கிட்டயாவது பால குடுத்து பிரிட்ஜ்ல வெச்சிக்க சொல்லு. அவங்களுக்கு நா மெசேஜ் போட்டுடறேன், வந்தா வாங்கிக்கட்டும்” என்றார்.

“சரிண்ணே” என சொல்லி, அதே ப்ளோரில் இருந்த கோமதி வீட்டுக்கு போனாள்.

“அக்கா, வேதநாயகி மேடம் வீட்டுல இல்ல, இந்த பால பிரிட்ஜ்ல வெச்சிக்குங்க, வந்தா வாங்கிக்கட்டும்” என்றாள் மாதவி.

“நான் மத்தியானத்துக்கு மேல ஊருக்கு போறேன் மாதவி. நாலு நாள் ஆகும் வர்றதுக்கு. நீ வேணா சங்கரிகிட்ட குடுத்துடேன்” என சொன்னாள் கோமதி.

சங்கரி வீட்டு டோர் பெல்லை அடித்துவிட்டு சற்று நேரம் நின்று கொண்டிருந்தாள் மாதவி. கொஞ்ச நேரத்தில் அவள் கணவர் வந்து கதவை திறந்தார். மாதவி சொன்னதை முழுதாய் கேட்டார்.

“அவ நேத்து நைட் ஷிப்ட் பாத்துட்டு, இப்போ தான் வீட்டுக்கு வந்து தூங்குறா. நானும் அரை மணி நேரத்தில் கெளம்பிடுவேன். மத்தியானம் அவங்க வந்து பெல் அடிச்சா அவளுக்கு டிஸ்டர்பா இருக்கும். நீங்க வேணா சஞ்சய் அம்மாகிட்ட குடுத்து போயிடுங்க” என்றார்.

சஞ்சய் வீட்டு பெல்லை அடித்துவிட்டு மூன்றாம் மாடியில் இருந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி.

கதவை திறந்து “என்ன மாதவி”? என கேட்டாள் சஞ்சய் அம்மா ஷீலா.

“ஷீலாக்கா, இந்த மூணு பாக்கெட் பால் வேதநாயகி மேடம் வீட்டுக்கு வந்திருக்கு. அவங்க ஊர்ல இல்ல. நீங்க பிரிட்ஜ்ல வெச்சிக்குறீங்களா?” என்றாள் மாதவி.

“நான் நேத்து தான் இட்லி மாவு அரைச்சு பிரிட்ஜ்ல வெச்சிருக்கேன். இதை வைக்கிறதுக்கு இடம் இருக்காது. நீ வேணா சங்கரி வீட்டுல குடுத்துடேன்” என சொல்லி அனுப்பி வைத்தாள் ஷீலா.

மாதவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படியே வைத்து விட்டு போனால் கெட்டு போய்விடும். திரும்பவும் ராஜுவின் கேபினை நோக்கி நடந்தாள்.

“பேசாம நீயே வீட்டுக்கு எடுத்திட்டு போய்டு” என்றார் ராஜு.

‘அண்ணே,எங்க வீட்ல ப்ரிட்ஜ் இல்ல, இத்தனை பாக்கெட்டை நான் என்ன பண்றது?” என்றாள் மாதவி.

“சரி நீ ஒண்ணு எடுத்திட்டு போ. கொஞ்ச நேரம் கழிச்சி புவனாவும், ராணியும் வீட்டுக்கு போவாங்க. அவங்க கிட்ட ஆளுக்கொண்ணு குடுத்துடுறேன்” என சொன்னார் ராஜு.

“சரிண்ணே, நாளைக்கு நாங்க மூணு பேரும் ஆளுக்கொரு புது பாக்கெட் பதிலுக்கு வாங்கி குடுத்திடுறோம்” என சொல்லிவிட்டு கிளம்பினாள் மாதவி.

அன்று இரவு எட்டு மணி. ராஜுவுக்கு போன் போட்டு “அண்ணே, அவங்க வந்துட்டாங்களா?” என கேட்டாள்.

“இல்லம்மா, அவங்க திருப்பதிக்கு போயிருக்காங்களாம். நாளைக்கு காலைல பத்து மணி ஆகிடும் வீட்டுக்கு வர்றதுக்குன்னு சொன்னாங்க” என்றார் ராஜு.

“சரிண்ணே” என சொல்லி போனை வைத்தாள்.

மறுநாள் காலை எட்டு மணி. அன்றைய நாளுக்கான மூன்று பாக்கெட் பால் வேதநாயகி மேடம் வீட்டு வாசலில் இருந்தது. தரை மெழுகி சுத்தம் செய்ய வந்த மாதவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பத்து மணி வரை விட்டால் தாங்குமா என யோசித்தாள். மூன்று பாக்கெட்டையும் எடுத்துக் கொண்டு மீண்டும் ராஜுவின் அறைக்கு சென்றாள்.

அவர் டேபிள் மீது ஏற்கனெவே இவர்கள் பதிலுக்கு குடுத்த மூன்று பாக்கெட் இருந்தது.

“என்னண்ணே பண்றது?” என்றாள் மாதவி.

“இரு, பால்காரருக்கு போன் பண்றேன்” என்று அவரிடம் பேசினார்.

“அவரு வேற ஏரியாக்கு போயிட்டாராம், ரிட்டர்ன் வாங்க வர முடியாதுன்னு சொல்றார்” என்றார் ராஜு. பிறகு “பக்கத்து கோயில்ல இப்போ அய்யர் வர்ற நேரம். நீ போய் அவர்கிட்ட குடுத்துடு” என்றார்.

மாதவி தயங்கியவாறே “அண்ணே, அப்புறம் பதிலுக்கு யாருண்ணே ஆறு பாக்கெட் வாங்கி தர்றது?” என கேட்டாள்.

“மேடம் தங்கமானவங்க, அதெல்லாம் ஒண்ணும் கேக்க மாட்டாங்க” என்றார் ராஜு.

மாதவி மொத்த பாக்கெட்டையும் ஒரு துணி பையில் போட்டு அய்யரிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு போனாள்.

அன்று இரவு அவளுக்கு சங்கடமாக இருத்தது. “ஏங்க ஒரு இருநூத்தி அம்பது ரூபா நாளைக்கு காலைல வேணும்” என கணவரிடம் விஷயத்தை சொல்லி கேட்டாள்.

“சரிடி தரேன், ஆனா ஆறு பாக்கெட் வெச்சி அவங்க என்ன பண்ணுவாங்க?” என கேட்டார் அவர்.

“தெரியலீங்க, ஆனா நான் தானே எடுத்திட்டு வந்தேன்” என்றாள் மாதவி.

மறுநாள் காலை. அண்ணாச்சி கடைக்கு போய் விஷயத்தை சொல்லி ஆறு பாக்கெட் பால் வாங்கி கொண்டாள். ஒரு வேளை அவர்கள் மூன்றுக்கு மேல் வேண்டாம் என்றால் உடனே மீதியை திரும்ப தருவதாக ஏற்பாடு.

“இன்னைக்கு இந்நேரம் பால் வந்திருக்குமேம்மா?” என யோசனையாக சொன்னார் அண்ணாச்சி. அதுவும் சரிதான் என தோன்றியது மாதவிக்கு.

“பரவால்ல, எடுத்திட்டு போ, என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்” என சொல்லி அனுப்பினார் அண்ணாச்சி.

மாதவி போய் வேதநாயகி மேடம் வீட்டு டோர் பெல்லை அடித்தாள்.

கதவு திறந்தவுடன், “இந்தாங்க மேடம், ரெண்டு நாள் பாலு. இங்கயே இருந்தா கெட்டு போயிடும்னு எடுத்திட்டு போயிட்டோம். அதான் பதிலுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றாள்.

“லிப்ட்ல, கீழ கிரவுண்ட் ப்ளோர் நோட்டீஸ் போர்டுல பால்காரர் நம்பர் ஒட்டி வெச்சிருக்கோம்ல. சொல்லி இருந்தா அவரே எடுத்திட்டு போயிருப்பார். இன்னைக்கு பால் ஏற்கனவே வந்துடிச்சி. இவ்வளவு எனக்கு தேவைப்படாது. நீயே எடுத்திட்டு போயிடு” என சலித்துக் கொண்டார் வேதா.

“சரிங்கம்மா, அப்போ நா காசா குடுத்துடவா?” என தயங்கியபடியே கேட்டாள் மாதவி.

“எவ்வளவோ தண்ட செலவாகுது! அது மாதிரின்னு நெனச்சுக்குறேன். காசெல்லாம் வேணாம்” என சொல்லி கதவை சாத்தினார்.

மாதவிக்கு சுறுக்கென்று இருந்தது. தளர்வாய் நடந்து அண்ணாச்சி கடைக்கு போய், பால் பாக்கெட்டுகளை ரிட்டர்ன் செய்து பணம் வாங்கி கொண்டு கிளம்பினாள். வீட்டுக்கு போய் கணவரிடம் விஷயத்தை சொல்ல, அவர் சில யோசனைகளை சொன்னார்.

மறுநாள் காலை வழக்கம் போல ஒவ்வொரு ப்ளோராக தரையை சுத்தம் செய்து விட்டு, மூன்றாம் மாடிக்கு வந்தாள். ஏதோ அவளுக்கு வித்தியாசமாக பட்டது. சற்று நின்று நிதானித்து கவனித்தாள். நான்கு வீட்டு வாசலிலும் ரங்கோலி கோல ஸ்டிக்கர்கள் ஒட்டியிருந்தது.

“என்ன மாதவி, சீக்கிரமே வந்துட்ட?” என்றபடி நைட் ஷிப்ட் முடித்து வந்த சங்கரி கேட்டாள்.

“ஆமாக்கா..கொஞ்சம் வெளில போகணும். அதான் சீக்கிரமே வந்துட்டேன். ஸ்டிக்கர் அழகா இருக்குது. அதான் பாத்துக்கிட்டே கொஞ்ச நேரம் நின்னுட்டேன்” என்றாள் மாதவி.

“அதுவா, நம்ம வேதநாயகி மேடம் திருப்பதிலேர்ந்து வாங்கிட்டு வந்தாங்க. நாலு வீட்டுக்கும் யூனிபார்மா இருந்தா நல்லா இருக்கும்னு ஆளுக்கொண்ணு குடுத்தாங்க நேத்து, மேடம் தங்கம்!” என்றாள் சங்கரி.

“ஆமாக்கா” என சொல்லி விட்டு கிளம்பினாள் மாதவி. வீட்டுக்கு போகும் வழியில் கோயிலுக்கு போய் இருநூத்தி அம்பது ரூபாய் அய்யரிடம் கொடுத்து ஏதாவது பிரசாதம் செய்து பக்தர்களுக்கு கொடுக்க சொன்னாள்.

“யாரு பேருக்குமா அர்ச்சனை செய்து பிரசாதம் குடுக்கணும்?” என கேட்டார் அய்யர்.

“தங்கம், சாமி” என சொல்லி விட்டு கிளம்பினாள் மாதவி.

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 4/4

சில மாதங்கள் ஆனது. ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பிய சிவா கேட்டான் “என்னம்மா? இன்னைக்கு பச்சை கலர் கேசரி செஞ்சுருக்க, என்ன ஸ்பெஷல்?”

“அம்மா பாஸாயிட்டாங்கன்னா! அதான் ஜாலி மூடுல இருக்காங்க” என சொன்னது சின்ன வாண்டு தேவசேனா.

“ஆமாடா, மத்தியானம் தான் ரிசல்ட் வந்தது. அம்மா டிகிரி வாங்கிட்டேன்!!” என உற்சாகமாக சொன்னாள் தாரா. தபால் வழியில் யோகா இளங்கலை முடித்து இன்று பட்டம் வாங்கியிருக்கிறாள்.

சிவா ஆறாம் வகுப்பு மாணவன். தேவசேனா ஒன்றாம் வகுப்பு. தாராவின் கணவர் மேகநாதன் ஆட்டோ ஓட்டுநர். பகுதி நேரமாக சுவர் பெயிண்டிங் வேலையும் செய்வார்.

“மல்லிகை மலர் பறிக்க, மான் போல துள்ளி வா!

அல்லி மலர் பறிக்க, அன்னநடை போட்டு வா!

டிகிரி நீயும் வாங்க, டைகராக படித்து வா!!  என சிவா குஷியாக பாட ஆரம்பித்தான்.

“அப்போ, அம்மா டைகரா?” என தேவசேனா புலி போல காலை மடக்கி நடந்து வந்து பயமுறுத்த, மூவரும் சேர்ந்து கொல்லென சிரித்தார்கள். சற்று நேரத்தில் மேகநாதனும் வர வீடு களை கட்டியது.

 நால்வரும் கிளம்பி கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்துவிட்டு கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.

பால்காரர் குணவேந்தன் அந்த பக்கம் வந்தார்.

“என்ன மேகா, தாரா பாஸாயிடுச்சுனு எங்க வீட்டம்மா சொல்லுச்சு! நீ எப்போ படிக்க போற?” என்றார்.

மேகநாதன் தலையை திருப்பி கொள்ள, தாராவுக்கு சங்கடமாக இருந்தது.

“குணா மாமா, அத்தை குடிக்குறது இல்லை, நீங்க எப்போ குடியை விட போறீங்க?” என ஒரே போடாக கேட்டான் சிவா.

“அப்பா, அவர் வீட்டு செவத்துல போய் குடி குடியை கெடுக்கும்னு எழுதிட்டு வாப்பா” என்றது சேனா.

குணவேந்தன் குடிவேந்தனாக இருப்பதை குழந்தைகள் சொல்ல, மெதுவாக நகர்ந்தார் அவர்.

“அம்மா, நாங்க போய் யானையை பாத்துட்டு வரோம்” என சொல்லி குழந்தைகள் எழுந்து சென்றார்கள்.

“இன்னைக்கு நா டிகிரி பாஸ் பண்ணிட்டேன்னு கலாவதி டீச்சர் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. வெண்மணி அக்கா கிட்ட காசு குடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பி கேக் வாங்கிட்டு வர சொல்லி எல்லா டீச்சர்ஸுக்கும் என்னை குடுக்க சொன்னாங்க. நானே வாங்கியிருக்கணும், எனக்கு தோணலைங்க” என்றாள் தாரா.

“கரெக்ட்டு தான், இன்னொரு நாள் நீ எல்லாருக்கும் நம்ம சார்பா ஸ்வீட் குடுத்துடு” என்றார் மேகா.

“ஷூ கம்பெனிக்காரங்க சில டாக்குமெண்ட் கேட்டாங்கன்னு டீச்சர் சொன்னாங்க. நாளைக்கு முடிவு பண்ணி சொல்றேன்னு சொல்லி இருக்கேன். ஏதோ ஒரு பயம் மனசுல இருக்கு, ஆனா என்னன்னு சொல்ல தெரியல” என்றாள் தாரா.

“உன்னால முடியும் தாரா, இந்த வேலையில சேரும்போது எவ்வளவு யோசிச்ச? எப்படி இவ்ளோ சின்ன பசங்கள பாத்துகிறதுன்னு? ஆனா இந்த பத்து வருஷத்துல நீ எவ்ளோ இம்ப்ரூவ் ஆகி இருக்கே! இன்னைக்கு அந்த பயம் இருந்த இடம் தெரியாம போயிடுச்சி. அது போல தான் இப்பவும். ஒரு விஷயத்தை புதுசா ஆரம்பிக்கும் போது யாருமே அதுல எக்ஸ்பர்ட் கிடையாது. அதனால முடியும்னு நெனச்சி துணிஞ்சு இறங்கு” என ஊக்கம் கொடுத்தார் மேகா.

“சரிங்க, யோசிக்கிறேன்” என தாரா சொல்ல “வா கெளம்பலாம்” என்றார் மேகா.

அவர் ஆட்டோவை ஓட்ட, மற்ற மூவரும் பின் சீட்டில் உட்கார்ந்தார்கள்.

கோவிலை ஒட்டிய மெயின் ரோட்டில் கல்யாண ஊர்வலம் மெதுவாக போய் கொண்டிருந்தது.

ஆட்டோ டிராபிக்கில் நிற்க, “அம்மா, போன் குடு, எனக்கு போரடிக்குது” என கேட்டது சேனா.

“ஏன், உன்னால கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா?” என திட்டினான் சிவா.

சேனா கோபித்துக் கொண்டு மூஞ்சை திருப்பிக் கொண்டது.

தாரா என்ன செய்வது என யோசிக்கும் போது சேனா கையில் இருந்த வாட்டர் பாட்டில் ஒரு ஐடியாவை கொடுத்தது.

“சேனா, இந்த பாட்டிலை குடு, ஒரு கேம் சொல்லி தரேன்” என வாங்கி அதை அவர்கள் இருவரின் தொடைகளுக்கே நடுவே நிற்க வைத்தாள்.

playtime in Auto

“இதை கார் கியரா நெனச்சுக்கோ. அப்பா வேண்டிய நிறுத்தினா, நியூட்ரல்ல வை. மெதுவா ஸ்டார்ட் பண்ணா இடது பக்கம் போய், மேல் பக்கம் சாய்ச்சு வை. இன்னும் கொஞ்சம் ஸ்பீட் எடுத்தா செகண்ட் கியருக்கு அப்படியே பின்னாடி வா. ஒரே சீரா வண்டி ஓடுச்சுன்னா, கொஞ்சம் வலது பக்கம் வந்து முன்னாடி போ” என விளக்கினாள்.

சேனாவும் சிவாவும்  பயங்கர குஷியாகிவிட்டார்கள். அந்த டிராபிக் ஜாம் அவர்கள் பல முறை கியர் மாற்றி விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தது.

“அப்பா, என்கிட்ட சொல்லாமா ஏம்பா ஸ்பீடு எடுத்த? நான் இன்னும் பர்ஸ்ட் கியர்லயே இருக்கேன்” என அவரை செல்லமாக திட்டியபடியே அவசரமாக பாட்டிலை நகர்த்தினார்கள்.

மேகநாதனும் அவர்கள் விளையாட ஏதுவாக போக்கு காட்டி ஓட்டினார். அரை மணி நேரம் ஆனது வீடு வந்து சேர்வதற்க்கு.

“செம சேனா, அருமையா கார் ஓட்டி எங்களை எல்லாம் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டே!” என பாராட்டினான் சிவா.

“அந்த பார்மசி சந்துல நான் சரியா கியர் போடலண்ணா. நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்கிறேன்” என தைரியமாக சொன்னது.

“பாத்தியா தாரா, இந்த சின்ன பொண்ணுக்கு இருக்குற நம்பிக்கையை? விளையாட்டா ஆரம்பிச்ச விஷயம், இப்போ அவளை ஒரு தேர்ந்த ட்ரைவரா உணர வெச்சிருக்கு. அவ கண்ணுல பயமோ, புது விஷயத்தை பழகுறோம் என்ற என்னமோ துளியும் இல்லை. தெரியலேன்னா வெளிப்படையா அத சொல்லி கத்துக்குறா. தெரியலேன்னு கூச்சப்படல” என மெதுவாக சொன்னார் மேகநாதன்.

தாராவுக்கு பொட்டில் அடித்தாற் போல தெளிவு ஏற்பட்டது.

“தேங்க்ஸுங்க, எனக்கு இப்போ புரிஞ்சிடிச்சு, நா ஹேண்டில் பண்ணிக்குறேன்” என சிரித்தாள் தாரா.

ஆறு மாதம் ஆனது. ஷூ கம்பெனி ப்ராஜெக்ட்டுக்காக, பயிற்சி வகுப்புகளை நேர்த்தியாக நடத்தி கொண்டிருந்தாள் தாரா.

மேகநாதன் இரண்டாவது வண்டி வாங்கி வீட்டின் முன் நிறுத்தினார்.

A new vehicle celebration

“ஹை, நம்ம வீட்டுக்கு குட்டி யானை வந்துடுச்சி!” என சிவா சந்தோஷமாக சொல்ல, “நா இதுக்கு பேரு வெச்சுட்டேன்!” என சொன்னது சேனா.

“என்ன பேருடி?” என ஆர்வமாக கேட்டான் சிவா.

“ரங்கு” என சொல்லி சிரித்தது சேனா. 

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 3/4

Family time

கதை நேரம் முடிந்து குழந்தைகள் வராண்டாவிற்கு செல்ல, ஊர் தலைவரும் கலாவதி டீச்சரும் வந்தார்கள்.

“லட்டு எடுத்துக்கம்மா, பசங்களுக்கும் குடுங்க” என பாக்ஸை நீட்டியவர் “நீ செஞ்சது பெரிய உதவிம்மா, நீ இல்லேன்னா நாங்க அடிக்கடி டவுனுக்கு போய் அலைய வேண்டியதா இருந்திருக்கும்” என சந்தோஷமாக நன்றி சொன்னார்.

கொஞ்ச நேரம் பேசி முடித்து விட்டு அவர் கிளம்ப, கலாவதி டீச்சர் மட்டும் இருந்தார்.

“தாரா, உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார். அவர் சொன்னதின் சுருக்கம் இதுதான்.

பொன்னி நர்ஸ் மற்றும் தலைவர் மூலமாக, தாரா பற்றி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு தெரிய வந்திருக்கிறது.

அவர் தாராவை பகுதி நேரமாக அந்த ஊர் பெண்களுக்கு யோகா சொல்லி தர நியமிக்க முடிவு செய்தார்.

அருகாமையில் இருந்த ஒரு ஷூ கம்பெனியின் CSR டீமிடம் பேசி, ஒரு குறிப்பிட்ட தொகையை தாராவுக்கு ஊதியமாக கொடுக்க ஏற்பாடும் ஆகி இருக்கிறது.

தாராவுக்கு இந்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும், டிப்ளோமா மட்டும் படித்த தான் இதை பெறுப்பேற்று செய்ய முடியுமா என சந்தேகமாக இருந்தது.

மேலும் மாலை நேரத்தில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இந்த வேலையில் ஈடுபட்டால் எப்படி வீட்டை கவனிப்பது எனவும் குழப்பமாக இருந்தது.

“டிப்ளமோ மட்டும் தான் கைல இருக்கு டீச்சர். இன்னும் டிகிரி முடிக்கல. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு, யோசிச்சு சொல்றேன் டீச்சர், ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் தாரா.

“ஷூ கம்பெனில இந்த ப்ரோக்ராம் அப்ரூவ் ஆக கொஞ்ச நாள் ஆகும், கவலைப்படாதே ” என சொல்லி கிளம்பி போனார் கலாவதி டீச்சர்.

அன்று இரவு உணவு நேரம். “இன்னைக்கு என்ன கதை சொன்னம்மா பசங்களுக்கு?” என கேட்டது சேனா.

“சூப்பரான யானை கதை. சீக்கிரம் சாப்பிட்டு வாங்க, சொல்றேன்” என்றாள் தாரா.

சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்து வரிசையாக பாய் விரித்து தாரா படுக்க, இருவரும் வந்து ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டார்கள். மூடிய அவர்கள் கண்களுக்குள் காடு விரிய ஆரம்பித்தது.

கதை கேட்டபடியே மேகநாதன் கிச்சனை சுத்தம் செய்து முடித்தார். பிள்ளைகள் இருவரும் தூங்கிவிட “இங்க வாங்க ஒரு விஷயம் பேசணும்” என அழைத்தாள் தாரா.

டீச்சர் சொன்ன விஷயத்தை சொல்லி தன் குழப்பத்தை விளக்கினாள். பொறுமையாக கேட்ட மேகநாதன் “தாரா, ரங்குவ நெனச்சி பாரு, உன் கேள்விக்கு பதில் கிடைக்கும். இந்த வாய்ப்பு உனக்கு கெடச்சா, நாம ரெண்டாவது வண்டிய கடனில்லாம சீக்கிரம் வாங்கிடலாம்” என சொன்னார்.

அன்று இரவு தூக்கத்தில் பலவகையான பொறுப்புகள் வெவ்வேறு உருவங்களில் அவளை சுற்றி வருவது போல மங்கலாக ஒரு கனவு வந்தது.

அடுத்த வந்த நாட்கள் சாதாரணமாக இருந்தாலும் தாராவின் மண்டைக்குள் பல கேள்விகளை எழுப்பி கொண்டே இருந்தது.

ஒரு நாள் போல, இருபது சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்வது அசாதாரணமான வேலை. அவர்களுக்கு அமைதியான சூழலை அமைத்து கொடுப்பதே பெரும் பொறுப்பு.

ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, பேசி, உணவு கொடுத்து தூங்க வைப்பது என அடிப்படை பராமரிப்பு பணிகள் ஏராளம்.

கூடவே அவர்களின் கற்றல் தேவைகளையும் பூர்த்தி செய்து, அந்த நாளின் முடிவில் அவர்கள் பெற்றோரிடம் நல்ல படியாக ஒப்படைப்பது வரை மறைமுகமான ஒரு அழுத்தம் அவள் மீது இருக்கிறது.

மறுபுறம் வீடு, குழந்தைகள், குடும்பத்தின் பொருளாதார சூழல் என அடுக்கடுக்காய் பல விஷயங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது.

அந்த வாரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம்  கலாவதி டீச்சரிடம் போய் பேசினாள். அவருடைய அனுபங்களை கேட்கும் போது, தான் மட்டும் இந்த சூழலில் இல்லை என்பது தாராவுக்கு புரிந்தது.

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 2/4

Anganwaadi claaroom

ஒரு காட்டுல, ஒரு குட்டி யானை இருந்தது. அதோட பெரு ரங்கு.

அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் ரங்கு ரொம்ப செல்லம்.

ரங்கு கேட்ட எல்லாம் அதுக்கு கிடைக்கும். நல்ல நல்ல பழங்கள், கரும்பு, கிழங்கு வகைகள்னு அவங்க அப்பா அதுக்கு தேடி தேடி கொண்டு வந்து கொடுப்பாரு.

அவங்க அம்மா ரங்குவோட நல்லா வெளையாடுவாங்க. ரெண்டு பேரும் ஆத்துக்கு போய் தண்ணில ஆட்டம் போடுவாங்க. அப்புறம் அந்த ஆத்தங்கரைல படுத்து கதை பேசி பொழுது போக்குவாங்க.

ஒரு நாள் ரங்கு அவங்க அப்பா அம்மாவோட, காட்டுக்குள்ள ஒரு ட்ரிப் போச்சு.

மத்த அனிமல்ஸ மீட் பண்ணி பேசிகிட்டு இருந்தது. அப்போ அங்க சிங்க ராஜா வந்ததும் எல்லாரும் எழுந்து நின்னு அவருக்கு வணக்கம் சொன்னாங்க.

சிங்க ராஜாவும் தலையை ஆட்டிட்டு அவங்களை கடந்து போய்ட்டாரு. ரங்கு அவங்க அம்மாகிட்ட கேட்டுது “ஏம்மா இவரு மட்டும் ராஜாவா இருக்காரு?”

பார்ட்டி மோடில் இருந்த ரங்குவின் அம்மாவுக்கு இந்த நொய் நொய் கேள்விகள் எரிச்சலாக இருந்தது.

“சிங்கம் தாண்டா எப்பவும் காட்டுக்கு ராஜா, அவர்தான் பவர்புல்” என பொதுவாக சொல்லியது.

ரங்குவுக்கு ஆர்வம் அடங்கவில்லை. அங்கே இருந்த குட்டி குரங்கு சைமனிடம் போய் விளக்கம் கேட்டது.

A candid conversation between animals

மரக் கிளையில் தலை கீழாக தொங்கிக்கொண்டிருந்த அது, ரங்குவுக்கு அற்புதமான ஒரு பதிலை சொன்னது.

“நம்ம தல செம பாஸ்ட்டா ஓடும். அவரை யாரும் பீட் பண்ண முடியாது” என ஊசலாடியபடியே சொன்னது.

ராஜாவாகும் கனவில் இருந்த ரங்குவுக்கு அது பேரிடியான பதில்.

தன்னால் எக்காலத்திலும் ராஜாவாக முடியாது என வருந்தியது. ட்ரிப்பில் இருந்து வாலண்டரியாக ட்ராப் ஆகி போய் மரத்தடியில் படுத்துக் கொண்டது.

சிங்க ராஜா மாதிரி ஓட என்ன வேண்டும் என யோசித்தது. தன்னுடைய எடை தான் முதல் தடை என எண்ணியது.

எப்படியாவது வெயிட் லாஸ் செய்து ஸ்லிம்மாகி வேகமாக ஓடி, காட்டுக்கே ராஜாவாகி காட்ட வேண்டும் என முடிவு செய்தது.

அன்றிலிருந்து அதன் உணவை பெருமளவு குறைக்க ஆரம்பித்தது. நீண்ட தூரம் நடந்தும், ஓடியும் பயிற்சி செய்தது. அதன் விளைவாக சில நாட்களில் அது அதீத பலவீனமாக உணர்ந்தது.

ரங்குவின் பெற்றோர் அதை கூப்பிட்டு பேசினார்கள்.

“இங்க பாரு ரங்கு, கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி படைச்சிருக்கார். சிங்க ராஜா ஓடுவார். ஆனா அவரால ஓரளவுக்கு மேல வெய்ட் தூக்க முடியாது. ஆனா நம்மால முடியும். அதனால நம்ம பிறவிகேத்த இயல்பிலிருந்து நம்ம மாற நெனச்சா, அது பலன் கொடுக்காது. நீ உன்னோட பலத்தை நம்பு, அதில் முன்னேற முயற்சி செய்” என்றார்கள்.

“அப்போ அது ராஜா கனவு கண்டது என்ன ஆச்சு?” என ஆஷாதேவி உஷாராக கேட்டது.

ரங்குவே சமாதானம் ஆனாலும் ஆஷாதேவி தேடி போய் கொளுத்தி போடும் மூடில் இருந்தது.

“இன்னும் இருக்கு கேளுங்க” என தொடர்ந்தாள் தாரா.

அப்பா சொன்ன பேச்சை கேட்டாலும், ரங்கு ஏமாற்றமாக உணர்ந்தது. அடுத்த நாள் ரங்குவின் அம்மா அதை கூட்டிக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நடந்தார். 

“இங்க பாரு தங்கப்பா, ராஜான்னு யாரும் தன்னை தானே சொல்லிக்க முடியாது. அதை மக்கள் சொல்லணும். மக்களுக்கு வேண்டியதை, அவங்க கஷ்டத்தை, அவங்க வாய் விட்டு சொல்லாமலேயே ஒரு மன்னன் தீர்க்கணும். இல்லேன்னா நம்ம சிங்க ராஜ மாதிரி நம்ம பாதுகாப்பை உறுதி செய்யணும். பலத்தை காட்டுறதோ, வேகமா ஓடுறதோ ராஜாவுக்கான தகுதி இல்லை” என மெதுவாக சொல்லி ரங்குவுக்கு புரிய வைத்தது.

“நீ இப்போ குட்டி பையன். நீ நல்ல குணங்களோட வளர்ந்து, இந்த காட்டுல இருக்குறவங்களுக்கு பொறுப்பா உதவி செய்தீன்னா, அவங்களே உன்னை உயர்வா நடத்துவாங்க” என சொன்னது.

“சரிம்மா, புரிஞ்சுக்கிட்டேன். என் பலத்தை எப்படி நான் மெருகேத்துறது?” என ஆர்வமாக கேட்டது.

“நா சொல்றபடி கேளு” என சொன்னது அம்மா.

அன்று சில புற்களை ஒன்று திரட்டி, அந்த புல்கட்டை ரங்குவின் தும்பிக்கையால் தூக்க வைத்தது.

பிறகு சிறு கட்டைகள். அதன் பிறகு கரும்பு கட்டு. தொடர்ந்து வாழை கட்டுகள்.

மறுபுறம் தினமும் நீச்சல் பயிற்சி. ரங்கு வயதிலும் திறனிலும் வளர்ந்து பெரிய மர கட்டைகளை அநாவசியமாக தூக்கும் அளவிற்கு முன்னேறியது.

வருடங்கள் ஆனது. சிங்க ராஜாவுக்கும் வயதானது. அவர் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது.

காட்டில் ஒரு கவலை கண்ணுக்கு தெரியாமல் படர ஆரம்பித்தது. அந்த வருடம் கடும் மழை. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லாரும் எப்படியாடுவது சிங்கத்தை காப்பாற்ற வேண்டும் என கடவுளை வேண்ட ஆரம்பித்தார்கள்.

ஆஷாதேவி கைகூப்பி முதல் ஆளாக கண் மூடி பிரார்த்தனையை ஆரம்பித்தது. லைனாக மற்றவர்களும் பிரேயர் மோடுக்கு போனார்கள்.

ரங்குவும் அதன் நண்பர்களும் எப்படியாவது சிங்க ராஜாவுக்கு வைத்தியம் செய்ய முடிவெடுத்தார்கள்.

ஒருநாள் சைமன் வந்து ரங்குவிடம் ஒரு விஷயத்தை சொன்னது.

“ப்ரோ, ஆத்துக்கு அந்த பக்கம் ஒரு வைத்தியர் இருக்காறாம். பச்சிலை வைத்தியத்துல பெரிய ஆளுன்னு அங்க ஆயா சொல்லுது. அதுவும் பழங்கட்டை. அது சொன்னா சரியாதான் இருக்கும். நீ உதவி செய்தா நாம முயற்சி பண்ணி பாக்கலாம்” என ஆர்வமாக சொன்னது.

“சரி வா, போய் சிங்க ராஜாகிட்ட சொல்லலாம்” என ரெண்டு பெரும் கிளம்பினார்கள்.

ராஜாவின் குகை அமைதியாக இருந்தது. ராணி சிங்கம் சோகத்தில் இருந்தார்.

“ராஜா, நா சைமன் வந்திருக்கேன். ரங்குவும் இருக்கான், கண்ண தொறங்க” என்றது குரங்கு.

ஆஷாதேவி கண்ணே வெளியே வரும் அளவுக்கு வாயை பிளந்து கேட்டு கொண்டிருந்தது.

“தொறந்துட்டாரா கண்ணை?” என ஆர்வமாக கேட்டது.  

 ஆஷாதேவி சிங்க ராஜாவின் பிரேயர் மீட்டிங்கை எப்போதோ மனதில் நடத்தி விட்டது.

“இரு சொல்றங்கள்ல” என்றது ஷைலா.

சிங்க ராணி வந்து உதவி செய்ய, ராஜா பெட்டில் சாய்ந்து உட்கார்ந்தார். குட்டி முயல் கொடுத்த வெந்நீரை வாங்கி மெதுவாய் பருகினார்.

சைமன் வைத்தியர் விஷயத்தை சொல்லி, “ராஜா, நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க, நாங்க உங்களை வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போறோம்” என உறுதியாக சொன்னது.

“என் காலம் முடிஞ்சு போச்சு. நீங்க வாழ வேண்டிய பசங்க. எனக்காக எதுக்காக ரிஸ்க் எடுக்குறீங்க? என்னால எங்கயும் நகர முடியாது. இந்தம்மாவ நல்லா பாத்துக்குங்க” என உயில் மட்டும் எழுதாத குறையாக பேசினார் ராஜா.

“எங்க ஆயா கூட இப்படி தான். டாக்டர் வீட்டுக்கு கூப்பிட்டா ஒடனே வராது. அத ஆட்டோல ஏத்துறதே பெரிய கஷ்டம்” என சொந்த கதையை சொருகியது ஆஷாதேவி.

சிங்க ராணி கண்ணீர் சிந்த, குட்டி முயல் மூக்கை சிந்த, அதை பார்த்த ராஜாவின் மனம் மாறியது.

“ஏதோ இவங்க திருப்திக்காக வரேன்” என ஒப்புக்கொண்டார்.

சைமனும் ரங்குவும் போர் கால அடிப்படையில் வேலையை ஆரம்பித்தார்கள். மழை பொத்துக்கொண்டு ஊத்தியது.

ராஜாவின் கிச்சனில் இருந்து பெரிய வாழை இலைகளை கொண்டு வந்து அவரை சுற்றி கட்டினார்கள்.

ஒரு சந்தன மர பலகையில் புல் கட்டுகளை அடுக்கி, அதன் மீது ராஜாவை தூக்கி உட்கார வைத்தார்கள். பிறகு கயறு போட்டு கட்டி அந்த பலகையை ரங்குவின் மீது தூக்கி வைத்தது சைமன். பிறகு அதுவும் ரங்குவின் மீது ஏறி ராஜாவுக்கு பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டது.

எல்லோரும் வரிசையில் நின்று வழியனுப்ப, ரங்கு சுழன்று ஓடும் ஆற்றில் மெதுவாக இறங்கியது. காற்றும் மழையும் தீவிரமாக, அவர்களுக்கு கண் பார்வையும் மறைக்க ஆரம்பித்தது.

“ப்ரோ, நா இவரை புடிச்சிக்குறேன். நீ அட் அ டைம்ல ஒரு ஸ்டெப் மட்டும் எடுத்து வை” என அட்வைஸ் செய்தது சைமன்.

“நீ கவலைபடாதே, என் வேலையே இதான். நீ அவரை மட்டும் விட்டுராத, கெட்டியா புடிச்சிக்கோ” என சொல்லி எச்சரிக்கையாக நீந்தியது ரங்கு.

ஆற்றின் மறுகரை அடைய ஒரு மணி நேரம் ஆனது.

வைத்தியர் ஆற்றங்கரையில் காத்துக் கொண்டிருந்தார். ரங்குவும் சைமனும் அவரை வணங்கிவிட்டு அவர் குடிலுக்கு பின் தொடர்ந்தார்கள்.

குடிலில் ராஜாவை இறக்கி வைத்தியர் கண்காணிப்பில் விட்டு விட்டு இருவரும் வெளியே நின்றார்கள்.

சற்று நேரம் கழித்து வந்த வைத்தியர், “அவர் நெலமை சரி இல்லை. அதுனால அவர் பத்து நாள் இங்க இருக்கட்டும். என்னால முடிஞ்சதை செய்யுறேன்” என அனுப்பி வைத்தார். பத்து நாள் ஆனது. ராஜா நலமாக இருக்கிறார் என அவரிடம் இருந்து செய்தி வந்தது.

ரங்குவும் சைமனும் மீண்டும் அவரை போய் அழைத்து வந்தார்கள். சிங்கராஜா அவர்கள் இருவரின் பெற்றோருக்கும் கண்ணீரோடு நன்றி தெரிவித்தார்.

“ரங்கு, இனிமேல் நீதான் என்னையும், இந்த காட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும்” என சொல்லி அதை ஆசீர்வதித்தார்.

ரங்கு அவரை வணங்கிவிட்டு, அதன் பெற்றோருக்கும் வணக்கம் வைத்தது.

சைமனும் அதன் மற்ற தோழர்களும் சந்தோஷமாய் கைதட்ட, அந்த காடே உற்சாகமாக இருந்தது. 

கதை முடிய, “இப்போ இந்த கதைல இருந்து நீங்க என்ன கத்துக்கிட்டீங்க?” என கேட்டாள் தாரா.

குழந்தைகள் ஆளாளுக்கு ஒரு மாரலை கண்டுபிடித்து சொன்னார்கள்.

முடிவாக தாரா சொன்னாள் “நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து முயற்சி செய்து, நல்வழியில் நடந்தால், ஒரு நாள் வெற்றி உங்களை தேடி வரும்!”

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 1/4

anganwadi golden jubilee celebration

தாரா அன்று அங்கன்வாடிக்கு சென்று சேரும்போது பெரும்பாலான குழந்தைகள் வந்திருந்தார்கள். உதவியாளர் வெண்மணி அவர்களை அமர வைத்துவிட்டு, தண்ணீர் குடம் கொண்டு வந்து வைத்தார்.

பொன்னி நர்ஸின் போன் வந்தது தாராவுக்கு. “நம்ம கல்பனாவுக்கு பொண்ணு பொறந்திருக்கு தாரா. நார்மல் டெலிவரி. உன்கிட்ட தலைவர் சொல்ல சொன்னார். அப்புறம் வந்து உன்கிட்ட நேர்ல பாத்து பேசுறேன்னார்” என சொல்லி போனை வைத்தார்.

கல்பனா ஊர் தலைவர் மகள். கர்ப்ப காலத்தில் ரெகுலராக அங்கன்வாடிக்கு வருவாள். பேச்சு வாக்கில் ஒரு நாள் சுக பிரசவத்துக்காக சில யோகா முறைகளை டாக்டர் செய்ய சொன்னதாகவும், அதை யாருடைய கண்காணிப்பும் இன்றி தனியே செய்ய பயமாக இருப்பதாகவும் சொன்னாள்.

தாரா யோகாவில் டிப்ளமோ பட்டம் முடித்திருந்தாள். “சரி கல்பனா, நீ கவலைப்படாதே. நா வீட்டுக்கு வந்து நேர்ல சொல்லி தரேன். நீ பயமில்லாம செய்” என சொல்லி ஊக்கப்படுத்தினாள்.

அடுத்த நான்கு மாதம் தாராவின் நேரடி மேற்பார்வையில், யோகா, தியான பயிற்சி மற்றும் ஊட்டசத்து குறிப்புகள் என கல்பனாவுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தது. இன்று அவளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது தாராவுக்கு சந்தோஷமாக இருந்தது. வெண்மணி அம்மாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி விட்டு வகுப்பறைக்கு சென்றாள்.

அன்றைய நாளுக்கான வேலைகளை தாரா யோசித்துக்கொண்டிரும்போது, தூரத்தில் ஷாருக்கின் அழுகுரல் கேட்டது.

“இன்னைக்கும் அழுவுறானா? இவனை எப்படி சமாளிக்க போறம்மா?” என்றார் வெண்மணி.

“வரட்டும், பாத்துக்கலாம்” என சொன்னாள் தாரா.

தேம்பி தேம்பி அழுதபடியே வந்த ஷாருக்கை வெண்மணி வாங்கிக் கொண்டு அவன் அம்மாவை அனுப்பி வைத்தார்.

“ஏன்டா அழுவுற?” என அதட்டலாக கேட்டாள் தாரா.

சற்று அழுகை நின்று, “அக்காக்கு மட்டும் ஜாமென்டரி பாக்ஸ் வாங்கி கொடுத்துட்டாங்க. நா கேட்டா அப்புறம் வாங்கி தரேன்னு சொல்றாங்க” என சொல்லி மீண்டும் அழுகையை ஆரம்பித்தான்.

தாரா யோசிக்க “அவுங்க அக்கா ஆறாம் க்ளாஸ் படிக்குறாங்க. இவனுக்கு எதுக்கு?” என அவனை அல்பமாக பார்த்துக் கொண்டே சொன்னது ஆஷாதேவி.

முக்திக்கு முன் நிலையில் இருப்பது போல இருந்தது ஆஷாதேவியின் உரை.

“சரி வாங்க, எல்லாரும் ரவுண்டா உக்காருங்க, உங்களுக்கு கதை சொல்ல போறேன்” என டாபிக்கை மாற்றினாள் தாரா.

ஷாருக் இன்னும் சமாதானம் ஆகவில்லை. ஜாமென்டரி பாக்ஸ் விஷயத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எண்ணி உருண்டு உருண்டு அழுது கொண்டிருந்தான்.

இப்போது தான் எண்களில் நூறு வரை சொல்ல கற்று கொண்டிருக்கிறான். இவனுக்கு ஜாமென்டரி பாக்ஸ் தேவைப்பட இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது. அக்காவுக்கு கிடைத்தது தனக்கும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தவிர வேறொன்றுமில்லை.

“டேய் ஷாருக், வெண்மணி அம்மாவுக்கு கால் வலி இருக்குது. அவங்களால செடிக்கு தண்ணி ஊத்த முடியல. கொஞ்சம் போய் வராண்டால அழுவுடா, அதுங்களுக்காவது தண்ணி கிடைக்கும்” என ஆஷாதேவி பொறுமையிழந்து கத்தியது.

ஷாருக்கை இன்ப்ளுயன்சாராக கருதி ஷைலா டேமை திறந்தது.

“நீ ஏன் அழுவுற?” என தாரா கேட்க, “அம்மா வேணும்!” என மூக்கை சிந்தியது.

ஷைலா அங்கன்வாடிக்கு வர ஆரம்பித்து பத்து மாதங்களுக்கு மேலாகிறது!

இப்போது என்ன திடீர் அம்மா பாசம் என ஆஷாதேவிக்கு புரியவில்லை.

இதுங்களால் கதை நேரம் குறைவதை அதனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஷாருக்கை அம்போவென விட்டு விட்டு ஷைலாவை மியூட் செய்ய நகர்ந்தது.

தாரா எல்லோரையும் கவனித்தவாறே, பாயை விரித்து ஒவ்வொருவராய் உட்கார வைத்து, சாமிக்கு பூ வைத்து விட்டு, “எல்லாரும் கண் மூடி, கை கூப்புங்க” என சொன்னாள்.

“ஷாருக், வா இங்க வந்து உக்காரு. ஷைலா, நீ இந்த பக்கம் வா” என ரெண்டு பேரையும் தன்னருகே அமர்த்திக் கொண்டாள் தாரா.

“ஷாருக், உனக்கு என்ன அனிமல் புடிக்கும் சொல்லு?” என கேட்டாள்.

“சிங்கம்” என சிவந்த கண்களோடு வீரமாய் சொன்னான் ஷாருக்.

 ஆஷாதேவி வேண்டுமென்றே களுக்கென சத்தமாக சிரிக்க, மற்ற வாண்டுகளும் சிரிக்க ஆரம்பித்தது.

தாராவுக்கே அவன் பதில் சொன்ன வேகம் காமெடியாக இருந்தது.

“சைலன்ஸ், ஷைலா உனக்கு யார் பிடிக்கும்?” என கேட்டாள்.

“யானை” என்றது ஷைலா.

“சூப்பர், இன்னைக்கு நம்ம கதைல சிங்கமும் யானையும் தான் வர போறாங்க” என தாரா சொல்ல, ரெண்டு பேரும் அடுத்த நொடியே உற்சாகமானார்கள். அவரவர் மனதில் அந்த கதைக்களம் விரிய ஆரம்பிக்க, அந்த பள்ளி வளாகம் ஒரு மாய காடாக மாறிக் கொண்டிருந்தது.

Tamil short story – பீல் குட் மொமண்ட்ஸ்

A lovely couple enjoying happy retirement

“லக்ஷ்மி, அப்பா எங்கேன்னு பாரு” என ஹாலில் இருந்து சொன்னார் சங்கு புஷ்பம்.

“அவர் பாத்ரூம்ல இருக்காரும்மா” என்றாள் லக்ஷ்மி.

“கொஞ்சம் போய் பாரும்மா, அவர் உள்ள போய் ரொம்ப நேரமாச்சு” என்றார் சங்கு புஷ்பம்.

காலையில் சீக்கிரமே எழுந்து விடுவார் நேசப்பா. காபி போட்டு, காய் நறுக்கி, வாக்கிங் கிளம்ப வேண்டிய நேரம் இது! இன்னும் பாத்ரூமிலுருந்து வெளியே வரமால் என்ன செய்கிறார்? என யோசித்தார் சங்கு புஷ்பம்.

“மா, அவரு என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா?” என சிரித்தபடியே வந்தாள் லக்ஷ்மி.

“சொல்லு!” என ஆர்வமாக கேட்டார் சங்கு புஷ்பம்.

“ஷேவ் பண்ணிக்கிட்டு இருக்காரும்மா? அதுவும் லெப்ட் ஹேண்ட்ல!” என்றாள் லக்ஷ்மி.

“வலது கைல ஏதாவது சுளுக்கா? இல்ல ஷோல்டர் வலியா? அவர் எதுவும் என்கிட்ட சொல்லலியேம்மா” என கவலையோடு சொன்னார் சங்கு புஷ்பம்.

“ஆமாம்மா, கொஞ்ச நாளா அவரு நார்மலா இல்ல. கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்குறார்” என யோசனையாக சொன்னாள் லக்ஷ்மி.

“வயசான காலத்துல இந்த ஆர்த்தோ, நியூரோ டாக்டருங்களுக்கு பீஸ் குடுத்தே மாள மாட்டேங்குது! இவரு வேற என்ன புது பைல போட வைக்க போறாருன்னு தெரியல” என புலம்ப ஆரம்பித்தார் சங்குபுஷ்பம்.

“மா, அதெல்லாம் எதுவும் சீரியஸா இருக்காது. நீ கவலைப்படாதே, நா வாக்கிங் போறேன்” என தேற்றினாள் லக்ஷ்மி.

கால் மணி நேரம் கழித்தது நெசப்பா காபி கப்போடு வந்தார்.

“இந்தாம்மா காபி” என மனைவியிடம் நீட்டினார்.

a husband serving coffee

“என்ன, வர வர மரியாதை கொறையுது? லெப்ட் ஹேண்ட்ல காபி தரீங்க?” என முறைத்தார் சங்குபுஷ்பம்.

“நீ தானே சொல்வ, மரியாதை மனசுல இருந்தா போதும்னு” என கண்ணடித்தபடியே சொன்னார் நேசப்பா.

“அப்ப மரியாதை இல்ல, அப்படி தானே?” என காபியை விட சூடாக கேட்டார் புஷ்பம்.

“காபி போட்டு கொண்டாந்து கைல குடுக்குற ஆள ஏண்டி ரோஸ்ட் பண்ற? என கூலாக கேட்டார் நேசப்பா.

“இது என்ன புது பழக்கம்? அந்த கையில ஏதாவது பிரச்சனையா? சிரிச்சி சிரிச்சி வலிய மறைக்குறீங்களா? அப்புறம் ஏதாவது பெரிய செலவா இழுத்து விடபோறீங்க? எதுவுமா இருந்தாலும் ஆரம்ப நிலையிலேயே வாய தொறந்து சொல்லுங்க! டாக்டரை பாத்து சரி பண்ணிக்கலாம்” என படபடப்பாக பேசினார் புஷ்பம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என சிரித்தார் நேசப்பா.

“நாங்க உங்களை கவனிக்காம இல்லை! கொஞ்ச நாளாவே நீங்க இடது கையால தான் பல வேலைகளை செய்யுறீங்க” என கவலை குறையாமல் சொன்னார் புஷ்பம்.

a man doing household activities

“நீ ஏன் சின்ன விஷயத்துக்கு இவ்ளோ யோசிக்குற? நான் சில வேலைகளை இடது கையால செய்றது உண்மை தான். ஆனா அதுக்கு ஒரு காரணம் இருக்கு” என சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னார் நேசப்பா.

சங்கு புஷ்பத்திற்க்கு காண்டு ஏறியது.

அந்த நேரத்தில் நேசப்பா போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

“ஹர்ப்ரீத், இன்னைக்கு ஏழு மணி செஷனை ஏழரைக்கு மாத்தி இருக்காங்க. நா போய் காய் கட் பண்ணி வெச்சுட்டு கிளம்புறேன்” என நகர்ந்தார் நேசப்பா.

ஹர்ப்ரீத் பஞ்சாபி பெண்மணி. சுமார் ஐம்பது வயது இருக்கும். பிஸியோதெரபி டாக்டர். இவர்கள் அபார்ட்மெண்டில் சில மாதங்களுக்கு முன்பு குடியேறி இருக்கிறார். சொசைட்டி சீனியர்களுக்கு பீஸ் வாங்காத கன்சல்டன்ட். காலையில் வாக்கிங் போகும் மொத்த பெருசுகளுக்கும் நல்ல தோழியாகி விட்டார்.

பத்து நிமிஷத்தில் நேசப்பா ரெடியாகி வந்து ஷூ போட குனிந்தார்.

புஷ்பம் அவரையே உற்று நோக்க, ஷூவை போட்டபடியே “ரொம்ப கவலைப்படாதே! எல்லாத்துக்கும் புது கனெக்க்ஷன் தான் காரணம்” என சிரித்தபடியே பாதியிலேயே நிறுத்தினார் நேசப்பா.

“என்ன புது கனெக்க்ஷன்?” என முழித்தார் புஷ்பம்.

“இங்க பாரு, நாம எப்பவும் வலது கையால தான் பெரும்பாலான தினசரி வேலைகளை செய்வோம். அந்த பழக்கத்தை மாத்தி இடது கையால சின்ன சின்ன வேலைகளை செய்யும் போது நம்ம மூளைல புதுசா நரம்பு இணைப்புகள் உருவாகும். அது மறதி குறைய உதவும். கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு நன்றாகும். இதை Non-Dominant Hand Practise என சொல்வார்கள்” என விளக்கினார் நேசப்பா.

“அப்படியா, இதை மொதல்லயே சொல்ல வேண்டியது தானே?” என நிம்மதியாக சொல்லியபடியே கிச்சனுக்கு எழுந்து போனார் புஷ்பம்.

மெல்லிசாக விசிலடித்தபடியே கிளம்பி போனார் நேசப்பா.

வாக்கிங் முடித்து லக்ஷ்மி வந்தாள். புஷ்பம் நேசப்பாவின் Non-Dominant Hand Practise விஷயத்தை சொன்னார்.

“ஹ்ம்ம், புது விஷயமா தான் இருக்கு! நீயும் ட்ரை பண்ணுமா” என சொல்லிவிட்டு குளிக்க போனாள்.

இரண்டு நாட்கள் கழித்து புஷ்பம் கோவிலுக்கு போய்விட்டு வந்து, சொசைட்டி பார்க்கில் உட்கார்ந்து அவர் சகாக்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ஹர்ப்ரீத் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

“நாளைக்கு நைட் என்னோட பர்த்டே பார்ட்டி பிளான் பண்ணி இருக்கேன். ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துடுங்க” என அனைவருக்கும் அழைப்பு விடுத்து விட்டு கிளம்பினார்.

வீட்டுக்கு வந்ததும் நேசப்பாவிடம் சொன்னார் புஷ்பம்.

“ஆமா, எங்க ஆளுங்களையும் கூப்பிட்டு இருக்காங்க, எப்படியும் ஒரு இருபத்தஞ்சு பேரு வருவாங்கனு சொன்னாங்க. நீயும் லக்ஷ்மியும் போய் நாளைக்கு கிப்ட் வாங்கிட்டு வாங்க” என சொன்னார்.

“அதெல்லாம் வேணாம்னு அவங்க தெளிவா சொல்லிட்டாங்க” என்றார் புஷ்பம்.

அடுத்த நாள் ஏழு மணிக்கு எல்லோரும் ஹர்ப்ரீத் வீட்டில் ஆஜரானார்கள். நேசப்பாவின் கோஷ்டி ஹர்ப்ரீத் பட்டேலை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள்.

சற்று நேரத்தில் சாப்பாடு டெலிவரி வர எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

நேசப்பாவும் புஷ்பமும் சாப்பிட ஆரம்பிக்க, அவர்கள் அருகில் வந்தார் ஹர்ப்ரீத்.

“நேஸ், நீங்களும் என்ன மாதிரி லெப்ட் ஹாண்ட் பர்ஸனா? ஸோ, ஸ்வீட்” என்றபடியே அவரை ஜென்டிலாக அணைத்துக் கொண்டார்.

a candid conversation at party

தட்டை டேபிள் மீது வைத்து விட்டு நேசப்பாவும் ஹர்ப்ரீத்தை மரியாதை நிமித்தமாக அணைத்துக் கொண்டார்!

“நீங்க லெப்ட் ஹாண்ட் பர்ஸனா?” என கேட்டார் நேசப்பா.

இது உலக மகா நடிப்புடா சாமி என தோன்றியது சங்கு புஷ்பத்திற்கு!

“ஆமா நேஸ்” என உற்சாகமாக சொன்னார் ஹர்ப்ரீத்.

“அப்பாடா, இன்னைக்கு எனக்கு டின்னர் டைம்ல “எல்போ க்ளாஷ்” ப்ராப்ளம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்” என்றார் நேசப்பா.

புஷ்பத்திற்கு இன்னைக்கு வீட்டில் க்ளாஷ் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

“எல்போ க்ளாஷ்னா என்ன?” என பொதுவாக கேட்டார் புஷ்பம்.

“சீ சங்குமா, இப்போ நா லெப்ட் ஹாண்ட். என் பக்கத்துல ரைட் ஹாண்ட் பர்ஸன் உட்கார்ந்து சாப்பிடும்போது, அந்த பர்சனோட கை, என் கைல இடிக்க சான்ஸ் இருக்கு. இது பொதுவா எங்களுக்கு நடக்கும். ஆனா நேஸ் மாதிரி லெப்ட் ஹாண்ட் பர்ஸன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடும்போது எங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை” என விளக்கினார் ஹர்ப்ரீத்.

“லவ்லி, ஸோ ஸ்வீட்” என சொல்லி சிரித்தார் புஷ்பம்.

“சரி நீங்க சாப்பிடுங்க. ” என நகர ஆரம்பிக்கும் போது, “நீயும் எங்க கூட சாப்பிடேன் சங்கு” என அழைத்தார் நேசப்பா.

“நா ரைட் ஹாண்ட் பர்ஸன் நேஸ்! உங்களுக்கு இடிக்கும்!!” என சீனியர் கேர்ள்ஸ் கோஷ்டி பக்கம் தட்டை எடுத்து கொண்டு போனார்.

நேசப்பா பாந்தமாக சப்பாத்தியை இடது கையால் பிய்த்து, அதை லேசாக க்ரேவியில் தோய்த்து உள்ளே தள்ளி கொண்டிருந்தார்.

கேக், குலாப் ஜாமூன் என லைனாக வந்த அனைத்தையும் கச்சிதமாக, சிந்தாமல் சிதறாமல், லெப்ட் ஹாண்டில் சாப்பிட்டு முடித்தார்.

பத்து மணிக்கு பார்ட்டி முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், சங்கு புஷ்பம் முதல் வேலையாக லக்ஷ்மியின் ரூமிற்க்கு சென்றார்.

புஷ்பம் சொல்ல சொல்ல, லக்ஷ்மி உன்னிப்பாக கேட்டு விட்டு, விழுந்து விழுந்து கண்ணில் நீர் வர சிரித்தாள்.

“மா, நா ஒண்ணு சொல்லுவேன், என்ன திட்டாதே!” என இழுத்தாள்.

“சொல்லு” என்கிறார் புஷ்பம்.

எதையோ அவள் சொல்ல ஆரம்பிக்க, மீண்டும் அடக்க முடியாமல் சிரிப்பை தொடர்ந்தாள்.

“சொல்லிட்டு சிரியேண்டி” என அதட்டினார் புஷ்பம்.

சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு லக்ஷ்மி ஆரம்பித்தாள்.

“மா, நா நெனைக்கிறேன் NDHPனா “Non-Dominant Hand Practise” இல்லை! “Nesappa Dates Harpreet Patel”. கூட்டி கழிச்சி பாரு என் கணக்கு சரியா வரும்” என பன்ச் டயலாக்கை போட்டாள்.

“அடிப்பாவி, கதை அப்படி போகுதா? அந்த மனுஷன் புது கனெக்க்ஷன்னு பேசும் போதே நா யோசிச்சிருக்கணும்” என மெலிதாய் சிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

அம்மாவும் மகளும் அடுத்த இருபது நிமிடம் நேசப்பாவின் லெப்ட் ஹாண்ட் அட்ராசிட்டிகளை பேசி விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

feel good moment between mother and daughter

“மா, வயசான காலத்துல இதுவும் நல்லது தாம்மா! தான் கவனிக்கப்படலை, அட்ராக்ட்டிவா இல்லேன்னு நெனச்சி முடங்கிடாம, அவர் பிளேபுல்லா இருக்கிறது நல்ல விஷயம். நம்ம அப்பாவை பத்தி நமக்கு தெரியும். டீசண்டான மனுஷன். இந்த மாதிரி சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் அவர் மைண்டை பிரெஷ்ஷா வெச்சிக்க ஹெல்ப் பண்ணும்” என சொன்னாள் லக்ஷ்மி.

“சின்ராசுக்கு இந்த வயசுல சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் தேவைப்படுது!” என சொல்லியபடியே தூங்க போனார் சங்கு புஷ்பம்.

மாத்திரைகளை போட்டு கொண்டு, கிச்சனை க்ளீன் செய்துவிட்டு, சோபாவில் உட்கார்ந்து லக்ஷ்மி சொன்ன விஷயங்களை தேடி படித்து பார்த்தார். உண்மை தான் அவள் சொன்னது. தன்னை சமாதானபடுத்த அவள் எதுவும் பொய்யான விஷயங்களை சொல்லவில்லை.

ஹால் விளக்குகளை அணைத்து விட்டு “ஏங்க, ஆறு மணிக்கு அலாரம் வெச்சுடுங்க” என சொல்லிவிட்டு போய் கட்டிலில் படுத்துக் கொண்டார்.

“ஏண்டி ஆறு மணிக்கு எழுந்து என்னடி பண்ண போற?” என கேட்டார் நேசப்பா.

“திலீப் சார் “Deep Healing Synaptic Pathway” அப்படீன்னு சீனியர் சிட்டிசன்ஸுக்கு செஷன் எடுக்குறாராம் பார்க்குல. டின்னர்ல பேசிக்கிட்டுருக்கும் போது சொன்னார்” என்றார் புஷ்பம்.

“அந்த ஆர்மில இருந்து VRS வாங்குன டாக்டர்தானே?” என கேட்டார் நேசப்பா.

“ஆமாங்க” என்றார் புஷ்பம்.

“பாத்ரூம் போயிட்டு வரேன்” என சொல்லி விட்டு லக்ஷ்மி ரூமிற்க்கு போனார் நேசப்பா.

“என்ன, உங்க அம்மா Healing கிளாஸ் போக போறாளாமே? உன்கிட்ட சொன்னாளா?” என கேட்டார்.

“முழுசா சொல்லுப்பா! நானே பாதி தூக்கத்துல இருக்கேன். நீ வேற பிட்டு பிட்டா சொல்ற” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

நேசப்பா சொல்லி முடிக்க, “ஆமாப்பா, அம்மா சொன்னாங்க. “DHSP” இப்போ ரொம்ப பேமஸ். ஆனா இதுல ஒரு மேட்டர் இருக்கு கவனிச்சியா?” என கண்ணடித்தபடியே கேட்டாள் லக்ஷ்மி.

அவருக்கு கேக்கும், குலாப் ஜாமூனும் ரிவர்சில் வந்து தொண்டையை அடைத்தது.

“என்ன மேட்டர்” என தக்கி தக்கி கேட்டார்.

Dileep Heals Sangu Pushpam” என சொல்லி போர்வையை தலை வரை மூடி கொண்டு சிரித்தாள்.

மறுநாள் காலை சங்கு புஷ்பம் ஆறு மணிக்கு ரெடியாக, நேசப்பா காபி கொடுத்தார். வலது கையில்!

a husband serving coffee

முற்றும்