Tamil novel – Jiteswari – Part 15/21

Amsterdam riverfront

ரமா கல்யாணம் நாளை. ஜித்து வீடியோ கால் செய்து ரமாவின் அலங்காரத்தை பார்த்து சந்தோஷமாக பேசி வெளியே கிளம்பினாள்.

அங்கே பாண்டியில் ரமாவுக்கு நல்லபடியாக திருமண முடிந்தது. வெளியாட்கள் பெரும்பாலானோர் கிளம்ப நெருங்கிய சொந்தங்கள் மட்டும் மண்டபத்தில் இருந்தது.

ராஜுவின் அக்கா கணவர் ரவீந்தர் தாதிபத்திரி சிமெண்ட் பேக்டரியில் என்ஜினீயராக இருக்கிறார். அவரின் பள்ளி நண்பரும் பாண்டியில் வங்கி மேனேஜராக இருக்கும் பாலாவும் உறவுக்கார சிறுவர் சிறுமிகளின் அருகே அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்தில் ராஜும் அவரது தந்தையும் அங்கே வந்து அமர்ந்தார்கள். பேச்சுவாக்கில் சிறுவர்கள் எதிர்காலத்தில் என்ன படிப்பது என ரவியுடன் விவாதித்து கொண்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் கேட்ட குமரேசன் “எல்லாரும் நல்லா படிச்சு நம்ம ராஜு மாதிரி நல்ல அரசாங்க வேலைக்கு போகணும்” என பெருமை தூக்கலாக சொன்னார். “ஆமா கவர்மெண்டு வேல தான் காலத்துக்கும் நல்லது” என பக்கத்தில் இருந்தவர் ஆமோதித்தார்.

“என்ன பெரிய கவர்மெண்டு வேல. பசங்களா, நல்லா படிச்சு நம்ம ஜித்து மாதிரி வேலைக்கு போகணும். நல்ல சம்பளம். வெளி நாட்டுக்கு போய் வேல பாக்கலாம். இங்க குண்டு சட்டியில குதிரை ஓட்ட வேணாம்” என சத்தமாக சொன்னார் ரவீந்தர்.

ராஜூவுக்கும் குமரேசனுக்கும் சங்கடமாக இருந்தது.

“உங்களுக்கு தெரியுமா ரவீந்தர்? இவங்க ஹவுசிங் லோன் எங்க பிரான்ச்ல தான் இருக்கு. ஜித்துவோட இன்கம்னால தான் நல்ல அமவுண்ட்டுக்கு லோன் சேங்க்ஷன் ஆச்சு. ஜித்து தான் மெயின் அப்ளிக்கன்ட். இவங்க ரெண்டு பேரும் கோ-அப்ளிக்கன்ட்ஸ்” என விலாவரியாய் சொன்னார் பாலா.

சிறுவர்கள் ஆர்வமாகி விசாரிக்க ரவீந்தரும் பாலாவும் மேற்கொண்டு விஷயங்களை ராஜு ஜித்து தம்பதிகளை உதாரணம் காட்டி விளக்க ஆரம்பித்தார்கள்.

குமரேசனுக்கு அந்த இடத்தில் இருக்க மனம் ஒப்பவில்லை. அவர் கிளம்ப ராஜுவும் அவரை தொடர்ந்து வெளியேறினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் மண்டபம் முழுவதும் இதுவே பேசு பொருளாக இருந்தது.

ரமாவின் மாமியார் வந்து காமாட்சியின் அருகே உட்கார்ந்து ஜித்துவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். காமாட்சி எல்லா விஷயங்களையும் கெத்தாக சொல்ல அவர் ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தார்.

“ஜித்துக்கிட்ட பேசணும். நா போய் அவரை கூட்டிட்டு வரேன்” என சொல்லி எழுந்து போனார்.

அதுவரை காத்திருந்த குமரேசன் காமாட்சியை ரூமிற்குள் அழைத்து ஜித்துவை திட்டி தீர்த்தார். ஏன் சம்மந்தமில்லாமல் இங்கு இல்லாத ஒரு பெண்ணை திட்டுகிறார் என காமாட்சிக்கு விளங்கவில்லை. ராஜுவும் முகம் தெளிவில்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததை கவனித்தார்.

“ஏண்டா அப்பாவும் பையனும் ஒரு மாதிரி இருக்கீங்க?” என கேட்டார் காமாட்சி.

ஒன்றும் சொல்லாமல் ராஜு முறைத்துவிட்டு நகர, “கல்யாணாத்த வெச்சிக்கிட்டு ஊருக்கு போக வேணாம்னு சொன்னா கேட்டாளா? இப்ப பாரு இவன் அவமானபட்டு நிக்குறான். அடுத்த வாரம் போயிருந்தா காதும் காதும் வெச்ச மாதிரி நமக்குள்ளேயே இருந்திருக்கும். இப்ப இவன குண்டு சட்டினு கிண்டல் பண்றாங்க” என எகிறினார்.

ரவீந்தரை மனதில் கரித்துக்  கொட்டினாள் காமாட்சி.

“எல்லாம் நீ குடுக்குற எடம். குடும்ப கவுரவம் இப்ப காத்துல பறக்குது” என மனைவியையும் சேர்த்து திட்ட ஆரம்பித்தார்.

எப்படியோ புலம்புங்கள் என காமாட்சி அங்கேயிருந்து நகர்ந்தார்.

அன்று மாலை ரிசப்ஷன் ஆரம்பித்து அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. இரவு பத்தரை வாக்கில் ரமாவின் மாமனார் சற்று ஓய்வெடுக்க மேடையின் கீழே வந்து குமரேசன் அருகே உட்கார்ந்தார்.

“உங்க மருமக பாரின்ல இருக்காங்களா? என விசாரித்தார்.

“ஆமாம், ரெண்டு வாரம் ஒர்க்ஷாப். அதுக்கு போயிருக்கு” என இறுக்கமாய் சொன்னார்.

“வீடியோ கால் போடுங்க. ரமாவ பாத்து பேசட்டும். அப்படியே நாங்களும் பேசுறோம்” என சொல்லி சிரித்தார்.

வேறு வழியில்லாமல் குமரேசன் காமாட்சியை கூப்பிட்டு போன் போட சொன்னார்.

காமாட்சி போன் போட ஜித்து பதிலளிக்கவில்லை.  அப்போது ஜித்து ரேஷ்மியுடன் முதல் நாள் போட்டிங்க் போன இடத்துக்கு மீண்டும் தனியே போய் இருந்தாள். போன் பையில் சைலென்டில் இருந்தது.

நாலைந்து முறை காமாட்சி போன் போட்டு பார்த்தார்.

“எடுக்கலீங்க. ஏதாவது வேலையா இருப்பா. மிஸ்ட் கால் பாத்தா அவளே கூப்பிடுவா” என சொல்லி போனை பையில் போட்டு கொண்டார் காமாட்சி.

“என்ன பெரிய வேலை. பாரின் போனா குடி கூத்துனு கும்மாளம் போடுவாங்க. எங்க நெதானத்துல இருக்க போறாங்க போன எடுக்க” என ஒரு சொந்தகார மூதேவி சொன்னது.

காமாட்சி அந்த ஆளை திட்ட குமரேசன் விருட்டென்று அங்கிருந்து எழுந்து கிளம்பினார்.

வீட்டுக்கு போய் குமரேசன் பேயாட்டம் ஆடி தீர்த்தார். வாய்க்கு வந்த வார்த்தைகளை கொட்டினார். அந்த நேரம் பார்த்து ஜித்து போன் வந்தது.

காமாட்சி முழிக்க “எடுத்து பேசு” என அதட்டினார்.

காமாட்சி பேச ஆரம்பிக்க பின்னாலிருந்து குமரேசன் கத்த ஆரம்பித்தார்.

“இவ்ளோ நேரம் எங்க போனானு கேளு, எத்தனை முறை போட்டோம் ஏன் எடுக்கலைனு கேளு” என கத்தினார்.

“ஆன்ட்டி, நா போட்டிங் போயிருந்தேன். இப்ப தான் பார்த்தேன். ஏன் டென்ஷான இருக்காரு?” என கேட்டாள் ஜித்து.

அவளுக்கு பதில் சொல்வதற்கு முன் அவர் வாயை அடைப்பதற்காக “ஏங்க அவ போட்டிங் போயிருக்கா. இப்ப தான் போன பாத்து திரும்ப கூப்பிடுறா. சும்மா கத்தாதீங்க” என்றார் காமாட்சி.

“என்ன இங்க பாண்டில இல்லாத போட்டிங்கா? அங்க போய் புதுசா பாக்க. ஒரு போன் வந்தா எடுத்து பேச முடியாதா?” என மீண்டும் எகிறினார்.

தான் போனை எடுக்காததால் பயந்து போய் இருக்கிறார். அதனால் கோபப்படுகிறார் என நினைத்தாள் ஜித்து.

“ஏங்க போட்டிங் போனது ஒரு குற்றமா? விடுங்க” என்றார் காமாட்சி.

“போட்டிங் போனாளா இல்ல பெட்டுக்கு போனாளா, யாருக்கு தெரியும்? இதுக்கு தான் பம்பாய்க்காரி வேணாம்னு படிச்சு படிச்சு சொன்னேன். அம்மாவும் பையனும் ஒத்த கால்ல நின்னீங்க. இப்ப பாரு இவன் தலை  குனிஞ்சு நிக்குறான்” என தேவையில்லாமல் வார்த்தையை விட்டார் குமரேசன்.

“என்ன பேச்சு பேசுறீங்க, நாக்கை அடக்குங்க” என கத்தினார் காமாட்சி.

ஜித்துவுக்கு தான் கேட்ட வார்த்தை எதையும் ஏற்று கொள்ள இயலவில்லை.

“ஏன்டா மரம் மாதிரி நிக்குற, நாலு கேள்வி நல்லா கேளு அவளை”என்றார் குமரேசன்.    

ராஜு அந்த இடத்தில் இருக்கிறான். அவன் முன்பு தான் இவ்வளவு பேச்சும் என தெரிந்து கொண்டாள்.

காமாட்சி சுதாரித்து போனை கட் செய்வதற்குள் “நா உங்க பேச்ச கேக்காதது தப்பு தான்ப்பா” என்றான் ராஜு.

 காமாட்சி போனை கட் செய்வதற்குள் ஜித்துவே போனை வைத்து விட்டாள்.

ஜித்துவுக்கு அது நிலவை நோக்கிய பயணமாக தோன்றியதால் மறுநாளும் அதே இடத்திற்கு வந்திருந்தாள். இப்போது இந்த பேச்சுகளை கேட்ட பிறகு இப்படியே பயணப்பட்டு இந்த பூமியை விட்டு எங்கோ தொலைதூரம் போய் விட்டால் நல்லது என தோன்றியது. முதல் நாள் ரசித்த நிலவை மீண்டும் பார்க்கும் விருப்பமில்லாமல் தரையை பார்த்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தாள்.

அந்த வார்த்தைகள் கொடுத்த வலி எவ்வளவு வீரியமானது என உணரவே அவளுக்கு சற்று நேரமானது.

மீண்டும் காமாட்சியின் போன் வந்தது.

ஜித்து எடுத்தவுடன் “இவங்களுக்கு நல்ல சாவே வராது. பொம்பளைங்கள தப்பா பேசுனவனுங்க நல்ல கதி காண மாட்டானுங்க. நீ எதுவும் மனசுல வெச்சுக்காதே. பத்திரமா ரூமுக்கு போயிட்டு எனக்கு போன் பண்ணு. இருக்குற கொஞ்ச நாள்ல அங்க இதையே நெனச்சுக்கிட்டு இருக்காதா. அவ்வளவு தூரம் தனியா போன பொண்ணு நல்லபடியா வந்து சேரணும்னு நா கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கேன். இந்த நாதாரி மனுஷன் புத்தி கெட்டு பேசுறார். எனக்காக மன்னிச்சுடுமா” என தயங்கியபடியே சொன்னார் காமாட்சி.

எதுவும் சொல்லும் மன நிலையில் அவள் இல்லை. சரியென்று சொல்லி போனை  வைத்தாள்.

நேரம் ஆக ஆக குளிர் அதிகமானது. ஜித்து எழுந்து கோட்டை மாட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

மனைவியாக, அம்மாவாக, மருமகளாக அல்லாமல் ஜித்து என்ற தனி பிறவியை மட்டும் நோக்கி வீசப்பட்ட அம்புகள் அவை. அந்த வார்த்தைகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல என தோன்றியது அவளுக்கு.

ஒரு மணி நேரம் நடந்தவள் அப்பகுதியில் நதியின் கடைசி முனை வரை போய் சேர்ந்திருந்தாள். சற்று நேரம் முன்பு அவளை சந்தோஷமாக சுமந்த நதி இப்போது அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

அவள் நின்ற இடத்தின் அருகே அவளையே வாஞ்சையாய் பார்த்துக் கொண்டிருந்தது லிண்டன் மரம்.

“நீ ஒரு அருமையான மனைவி ஜித்து. ராஜு ஈஸ் கிப்ட்டட். ஸோ இந்த மரம் உன்ன ப்ளேஸ் பண்ணுதுனு நா நம்புறேன்” என ரேஷ்மி சொல்லிய வார்த்தைகள் அவளின் மனதை இன்னும் ரணமாக்கியது.

அங்கிருந்து பார்த்தால் ஒரு பெரிய டாய் ஹவுஸ் தெரிந்தது. மீண்டும் இந்த பக்கம் வருவாளா என தெரியாததால் அந்த கடைக்குள் நுழைந்தாள். வண்ண வண்ண பொம்மைகள் குவிந்து கிடந்தன. புஷ்கருக்கும் கல்யாணிக்கும் பிடித்த மாதிரியான பொம்மைகளை தேர்வு செய்து கொண்டு பணம் செலுத்த வரிசையில் போய் நின்றாள்.

“நா உன்னோட பில் பே பண்ணட்டுமா? என பின்பக்கமிருந்து ஒரு குரல் கேட்டது. வேறு யார் கார்சன் தான்.

அவள் அருகே குனிந்து “பியாண்ட் இமாஜினரி லேவிஷ் லைப்ஸ்டைல்” என முணுமுணுத்தார்.

நாம் ஏன் கார்சனை அடிக்கடி சந்திக்கிறோம் என ஜித்து நினைக்கையில் வரிசை நகர அவள் போய் பணம் செலுத்தி பொருட்களை கவரில் போட்டு எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

ஆட்டோமேட்டிக் டோர் தானாய் திறக்க கடையை விட்டு வெளியே வந்தாள். கார்சனும் பக்கத்தில் நடக்க ஆரம்பித்தார்.

“ஜித், நா உன்னை வேணும்னே பாலோ பண்ணலை. ஜஸ்ட் ஷாப்பிங் வந்த போது உன்னை பார்த்தேன். இப்ப அந்த ஆட்டோ டோர் தொறந்தது இல்ல, அது போல தான் உன்ன பார்த்தா என்னால ரியாக்ட் பண்ணாம இருக்க முடியல. ஐ அம் ஜஸ்ட் லைக் தட் சென்சார் அண்ட் ஆக்ட்ஸ் ஈவன் வித்தவுட் பிஸிக்கல் கான்டாக்ட்” என விஷமமாய் சொன்னார்.

இந்த ஆள் என்ன ஜென்மம் என நினைத்தபடியே போனை பார்க்க அவள் புக் செய்த டாக்ஸி அங்கே வந்தது. பேசாமல் ஏறி உட்கார்ந்து கதவை சார்த்த கார்சன் அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தார்.

Tamil novel – Jiteswari – Part 14/21

Amsterdam boat ride

செஷன் முடிந்ததும் விருட்டென்று கிளம்பி ரேஷ்மியின் ப்ளோருக்கு போனாள். இருவரும் கிளம்பி டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்கள்.

இயல்பு நிலை என்பது இங்கிருந்து கிளம்பும் வரை சத்தியமாக இருக்காது என நினைத்தாள். திரும்ப ஆபீஸ் போகும் எண்ணமில்லை ஜித்துவுக்கு.

சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்தில் ரேஷ்மிக்கு ஒரு முக்கியமான அழைப்பு வர அவள் வீட்டுக்கு கிளம்பினாள். ஜித்துவும் கெஸ்ட் ஹவுஸ் போய் உடையை மாற்றிக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். மாலை ஐந்து மணிக்கு காபி குடித்துக் கொண்டே மெயில் செக் செய்தாள். தான் பதிலளிக்க வேண்டிய எந்த செய்தியும் இல்லை.

நிம்மதியாக ஆப் செய்து டேபிள் மீது வைத்து வெளியே கிளம்ப ரெடியானாள்.

ரஷ்மியின் போன் வந்தது. மதியம் பாதியிலேயே கிளம்பி விட்டதால் இப்போது கெஸ்ட் ஹவுஸ் வந்து கொண்டிருக்கிறாள். ஜித்துவை போட்டிங் அழைத்து சென்று பிறகு ஷாப்பிங் முடித்து இரவு திரும்புவதாக சொன்னாள்.

இருவரும் கிளம்பி பஸ் பிடித்து பிரின்சஸ் கேனல் வந்து சேர்ந்தார்கள்.

Amsterdam city walk

சூரியன் மறையும் மஞ்சள் மாலைப் பொழுது. 

அடர் பச்சை நிற நதியோடையின் இருகரையிலும் வெளிர் பச்சை மரங்கள் வரிசையாக நின்றன. கிட்டத்தட்ட ரெண்டு மைல் தூரம் ஒரே நேர்கோடாக ஓடுகிறது நதி.

ரேஷ்மி டிக்கட் வாங்கி வர இருவரும் படகில் ஏறி உட்கார்ந்தார்கள். இரண்டு மணி நேர படகு சவாரி நகரின் முக்கிய நதியோடைகள் வழியாக.

அடர் நிற முன் பக்க கோபுர அமைப்பு கொண்ட பதினேழாம் நூற்றாண்டு கால கட்டிடங்களும், தேவாலயமும் நகரின் வரலாற்றையும் பண்பாட்டையும் பிரதிபலித்தன. மெதுவாய் ஊர்ந்த படகிலிருந்த ஜித்துவின் மீது கரையோரம் இருந்து லிண்டன் மரங்கள் சில ஹார்ட் ஷேப் இலைகளை தூவியது.

“ஜித்து, இந்த லிண்டன் மரங்களுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது” என அவள் தோளின் மீதிருந்த பூக்களையும் சில இலைகளையும் எடுத்து ஜித்துவிடம் கொடுத்தபடியே சொன்னாள்  ரேஷ்மி.

“என்ன ஸ்பெஷல் இந்த மரத்துக்கு?” என கேட்டாள் ஜித்து.

“லிண்டன் மரம் பெரேயா என்ற ஜெர்மானிய பெண் கடவுளோடு தொடர்புடையது. அன்பு, காதல், உண்மை மற்றும் பாதுகாப்பை குறிக்கும் கடவுளாக கருதப்படுகிறார். இந்த மரம் காதலர்களின் புனித மரம் என வணங்கி இதன் அருகில் திருமண நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார்கள். இந்த மரத்தடியில் மனிதர்கள் பொய் பேச மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த காலத்தில் இதன் அடியில் நீதி விசாரணைகள் நடத்துவார்களாம். கிரீக்கர்கள் லிண்டன் மரத்தை நல்ல திருமண பந்தத்துக்கும், அருமையான மனைவிக்குமான குறியீடாக நம்புகிறார்கள்” என விளக்கினாள்.

“இந்த ரெண்டு இலை, நாலு பூ என் மேல விழுந்ததுக்கு ஏண்டி மைத்தாலஜியெல்லாம் பேசுற” என சிரித்தாள் ஜித்து.

ஜித்து நீ என்ன கோ த்ரூ பண்றேன்னு எனக்கு தெரியும். நீ ஒரு அருமையான மனைவி. ராஜு ஈஸ் கிப்ட்டட். ஸோ இந்த மரம் உன்ன ப்ளேஸ் பண்ணுதுனு நா நம்புறேன்” என ஆதரவாய் சொன்னாள் ரேஷ்மி.

ரேஷ்மி சொல்வதை புன்னகையோடு கேட்டுக்கொண்டே அவள் மீது விழுந்த லிண்டன் இலையையும் பூக்களையும் பர்சில் பத்திரப்படுத்தினாள் ஜித்து.

சற்று நேரத்தில் இருள் சூழ கரு நீல நீரில் பக்கவாட்டு கட்டிடங்களின் தங்க நிற விளக்குகள் பட்டு ஒளி வீச அந்த குறுகலான நீரோடை மினுக்க ஆரம்பித்தது. படகின் நேரெதிராக வானத்தில் பௌர்ணமி நிலா கம்பீரமாக தோன்றியது. இரண்டு மைல் நீளத்திற்கு ஒரே நேர் கோடாக அந்த படகு பயணம் இருந்தது.

ஜித்துவுக்கு அது நிலவை நோக்கிய பயணமாக தோன்றியது.

இப்படியே பயணப்பட்டு நிலவில் போய் இறங்கும்படியான மனநிலை அவளுக்கு மிகுந்த பரவசத்தை தந்தது. அக்கம்பக்கம் சுற்றிப் பார்க்கும் விருப்பமில்லாமல் நிலவை மட்டும் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

இரண்டு மணி நேரம் ரம்மியமாக இருந்தது. படகிலிருந்து வெளியேறி இரவு உணவு சாப்பிட்டு ரேஷ்மி நாளை ஆபீசில் சந்திக்கலாம் என சொல்லி விடை பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.

ஜித்து அந்த நதியோரம் இருந்த சிமெண்ட்டு பெஞ்சில் போய் உட்கார்ந்தாள். லிண்டன் மர நினைவு வர போனை எடுத்து அதைப் பற்றி தேடினாள். அது நம்ம ஊர் எலுமிச்சை மர வகை என தெரிந்ததும் லேசாய் புன்னகைத்தாள் கொண்டாள். அந்த மரத்தின் இன்னோர் சிறப்பம்சம் அது தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் என இருந்தது. சடாரென கார்சனின் நினைவு வந்தது ஜித்துவுக்கு.

ரேஷ்மி சொன்னது சரிதான். இந்த லிண்டன் மரம் தன் பாதுகாப்பை உறுதி செய்வதாக மனதார நம்பினாள்.

இதன் மூலமாக குறியீடாக இயற்கை ஒரு விதமான மனவலிமையை அவளுக்கு கொடுத்தது. 

கார்சனின் அன்றைய செய்கை அநாகரீகத்தின் உச்சமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அத்துமீறிய அவரின் நடத்தையோ சொல்லோ அவளின் முழு நாளையும் பாதித்தது. இன்னும் ஒரு வாரம் எப்படி ஓட்டுவது என ஒரு புறம் மேலோட்டமாய் கவலையாய் இருந்தாலும், ஆழ்மனம் கார்சனுக்கான எதிர்வினையை யோசிக்க ஆரம்பித்தது.

Tamil novel – Jiteswari – Part 13/21

A dinner party

அடுத்த நாள் காலையில் இருந்து மாலை வரை ஜித்து கார்சனை பார்க்க முடியவில்லை. டீமில் விசாரித்தபோது அவர் மற்றொரு யூனிட்டை பார்வையிட போயிருப்பதாக தகவல் வந்தது. நல்லது என நினைத்துக் கொண்டாள்.

ஐந்து மணிக்கு வேலை முடிய ஆபீசை விட்டு கெஸ்ட் ஹவுஸ் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அடுத்து வரும் நாட்களில் கார்சனை எப்படி எதிர்கொள்வது என கவலையடைந்தாள். அவர் பேச்சும் செய்கையும் அருவருப்பானதாக இருந்தது. சரியான இம்சை என நினைத்துக்கொண்டாள்.

இன்னும் இரவு உணவுக்கு நிறைய நேரம் இருக்கிறது. என்ன செய்யலாம் என யோசித்தபடியே ரிஸப்ஷனை கடந்து போனாள்.

“மேடம்” என ஒரு குரல் கேட்டது. ரிசெப்ஷன்பெண்மணி ஒரு கவரை நீட்டினார்.     

“ஐ நீட் யுவர் சார்ஜர் டுநைட் அட் டென். லெப்ட் மைன் அட் ஆபீஸ்” கார்சனிடம் இருந்து நோட் வந்திருந்தது. 

“இந்த ஆள் திருந்த மாட்டார் என புரிந்தது.

ரூமிற்க்கு போய் உடை மாற்றி காபி போட்டு சோபாவில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தாள்.டேபிள் மீது இருந்த லேப்டாப் சார்ஜர் கார்சனை நினைவூட்டியது. கண் மூடி யோசிக்க ஆரம்பித்தாள்.

கால் மணி நேரம் ஆனது. ரூமை விட்டு வெளியே நடந்தால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும் என நினைத்தாள்.

அரை கிலோமீட்டர் தூரத்தில் நதியை ஒட்டிய நார்த் கேட் இருக்கிறது. அந்த பக்கம் போகலாம் என முடிவெடுத்து மேப் பார்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

ஒரு மணி நேரம் வாக்கிங் முடித்து ரூமுக்கு வந்து குளித்து உடை மாற்றி டின்னர் சாப்பிட டைனிங் ஹாலுக்கு போனாள்.

பெரும்பாலான டீம் மெம்பர்கள் ஏற்கெனவே வந்து சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள். ஜித்து போய் அவர்களோடு சேர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.

மெயின் கோர்ஸ் முடித்து சிறிது நேரம் வெளியே புல்வெளியில் அமர்ந்து போர்டு கேம்ஸ் விளையாடினார்கள். பணிப்பெண் வந்து டெசர்ட் டேபிளை ரெடி செய்ய எல்லோரும் அடுத்த ரவுண்டுக்கு தயாரானார்கள்.

ஜித்துவும் ஒரு பிளேட்டை எடுத்து கொண்டு டெசர்ட் டேபிள் இருந்த இடத்தை நோக்கி போனாள்.

“வாட் ஈஸ் ராஜூஸ் பேவரிட்? கேன் ஐ ட்ரை இட் டூ?” என மெலிதாக கார்சனின் குரல் கேட்டது.

‘லெஃப்ட் ஆர் ரைட்?” என டேபிளின் இடது மற்றும்  வலதுபுறம் கண்ணைக் காட்டி வழிந்தார்.

கட்டையில் போகிற வயதில் கழிசடை என்ன பேச்சு பேசுகிறது என வெறுத்துப் போனாள் ஜித்து.

தட்டை எடுத்துக் கொண்டு திரும்பியவர் “நீ ஸ்விம்மிங் பூல் பக்கம் வருவதில்லையா? யூ ஆர் மிஸ்ஸிங் அன் அமேசிங் வியூ” என்று சொல்லிக்கொண்டே புல்வெளி நோக்கி போனார்.

டெசர்ட் சாப்பிடும் மூட் சுத்தமாக போனது ஜித்துவுக்கு.

ஒரு தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துக் கொண்டு ரூமிற்க்கு போனாள்.

மறுநாள் ரேஷ்மியோடு லஞ்சுக்கு போனால் குறைந்தது ரெண்டு மணி நேரம் ஆகும். சீக்கிரம் தூங்கினால் தான் அதிகாலையில் எழுந்து முன்கூட்டியே கொஞ்சம் வேலை பார்க்க முடியும்.

ரிசப்ஷனுக்கு போன் செய்து ரூம் பாயை வரவழைத்து கார்சனிடம் கொடுக்க சொல்லி சார்ஜ்ர் கொடுத்தனுப்பினாள்.

அலாரத்தை செட் செய்து படுக்கையை சரி செய்து படுத்தாள். அரை மணி நேரத்தில் தூக்கம் கண்ணை அழுத்தியது. ஜன்னல் வழியே பளீரென வந்த விளக்கு வெளிச்சம் கண்ணை கூசியது. எழுந்து போய் திரைசீலையை மூடி திரும்பினாள். கணப்பொழுதில் வெளியே ஸ்விம்மிங் பூலில் கண்ட காட்சி கன்றாவியாக இருந்தது. கார்சன் தண்ணீரில் மெதுவாக இறங்கி கொண்டிருந்தார். இதுதான் அவர் சொன்ன அமேசிங் வியூவா என தலையில் அடித்துக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை ஜித்துவிற்கு உற்சாகமாக இருந்தது. பல வருடங்கள் கழித்து ரேஷ்மியை சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருந்தாள். நினைத்ததை விட சற்று சுறுசுறுப்பாக பைலை எழுதி முடித்தாள்.

மணி ஏழு ஆனது. டோர் பெல் அடித்தது. ஹவுஸ் கீப்பிங் பெண்மணி வந்தார்.

ரூமை க்ளீன் செய்து பக்கவாட்டு கதவு வழியாக ஸ்விம்மிங் பூல் பக்கம் போனார். அங்கே இருந்த பாத்ரூமை சுத்தம் செய்து டவல்களை மாற்றி, டிஷ்யூ பேப்பர் ரோல் வைத்துவிட்டு கிளம்பினார்.

அந்த ப்ளாக்கில் மூன்று அறைகள் ப வடிவில் இருக்கும். எதிரெதிர் அறைகளில் கார்சனும் ஜித்துவும் தங்கியிருக்க நடுவில் இருந்த அறை காலியாக இருந்தது. அதன் நேரெதிர்புறம் பெரிய மதில் சுவர். இந்த மூன்று அறைகளுக்கும் சேர்த்து நடுவே ஸ்விம்மிங் பூல்.

அவரவர் அறையில் இருந்து காரிடார் ஆட்டோமேட்டிக் டோர் வழியே வெளியே வந்து ஸ்விம்மிங் பூல் பக்கம் வரமுடியும். அறையின் பின் கதவை பூட்டினால் காரிடார் கதவு வழியாக மற்ற அறை ஆட்கள் உள்ளே வர முடியாது.

ஹவுஸ் கீப்பிங் பெண்மணி தினமும் ஜித்துவின் அறைக்கு வந்து வேலையை முடித்துவிட்டு அவள் அறையின் பின் கதவு வழியாக ஸ்விம்மிங் பூல் பக்கம் போய் வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

காலை உணவை ரூமிலேயே சாப்பிட்டு ஆபீசுக்கு கிளம்பினாள் ஜித்து.

Morning breakfast

சற்று நேரத்தில் கார்சனும் வந்து சேர்ந்தார். பெரிதாய் எதுவும் பேச்சு வார்த்தையில்லாமல் இருவரும் பிசியாக இருந்தார்கள். பதினோரு மணியளவில் கான்பரன்ஸ் ரூமில் மீட்டிங். திரையில் மற்ற டீம் மெம்பர்கள் இருக்க, ஜித்தும் கார்சனும் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்.

சற்று நேரத்தில் ஒரு ஸ்னாக்ஸ் டிராலியில் காபியும் பிஸ்கட்டுகளும் வந்தது. டேபிள் மீது அந்த நாளுக்கான டிஸ்ஷன் பேப்பர்கள் இருந்தது. ஒரு செஷன் முடிந்து இரண்டாவது ஆரம்பித்தது.

இயந்திரங்களின் லைப் சைக்கிள் பற்றிய ஆலோசனை கூட்டம். மும்முரமாக கவனித்துக்கொண்டிருந்த கார்சன், சட்டென மேஜை மேலிருந்த பேப்பரில் சைக்கிள் என்ற வார்த்தையின் கீழ் ஆட்காட்டி விரலை லேசாக ஆட்டி, “என்ன?” என்றார் போல் ஜித்துவை பார்த்தார்.

Office meeting room

சில நொடிகள் ஆயிற்று கார்சனின் செய்கை ஜித்துவிற்கு புரிவதற்கு.

சேரின் கைப்பிடியில் முட்டிக்கையை ஊன்றி இடக்கை விரல்களால் கன்னத்தை தாங்கி சற்று நேரம் தன் முக மாற்றம் கேமராவில் உறுத்தலாக தெரியாதவாறு மறைத்துக் கொண்டாள்.

கார்சன் மானிட்டர் பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டார். அந்த முதுகிலும் ஆயிரம் கண்கள் இருப்பதாக தோன்றியது ஜித்துவுக்கு.

Tamil novel – Jiteswari – Part 12/21

Amsterdam guest house

சென்னையிலிருந்து துபாய். பிறகு துபாயிலிருந்து சுமார் ஏழு மணி நேரம் பயணித்து இரண்டு வார பயணமாக ஜித்து ஆம்ஸ்டர்டாம் வந்து சேர்ந்தாள்.

ஏர்போர்ட்டில் இருந்து டாக்ஸி பிடித்து கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தாள். ஒர்க்ஷாப்புக்கு வரும் மொத்த டீமும் சேர்ந்து கெஸ்ட் ஹவுசில் தங்க ஏற்பாடாகி இருந்தது. ரிசப்ஷனில் சாவி வாங்கி கொண்டு மேப் அட்டையை கவுண்டரில் இருந்து எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

இருபது ஏக்கரில் அழகான கேம்பஸ். கண்ணாடி கதவு தானாய் திறக்க வெளியே பேட்டரி கார் இருந்தது. லக்கேஜ் ஏற்றி பின் சீட்டில் அமர அடுத்த சில நிமிடங்களில் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறை இருந்த பிளாக்கிற்கு முன் போய் நின்றது.

ரூம் பாய் லக்கேஜ் எடுத்து வைக்க “ஹலோ” என்றபடி வந்தார் கார்சன்.

கார்சன் ஜெர்மனியை சேர்ந்தவர். எழுபது வயதானவர். இந்த ப்ராஜெக்ட்டில் சீனியர் கன்சல்டன்ட்டாக இருப்பவர்.

இறைவனடி சேராமல் இருந்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த டீமில் இருப்பார். ஜித்து பாண்டியிலும், கார்சன் பெர்லினிலும், மூன்று பேர் டீம் சவுதியிலும் இருந்து வேலை பார்ப்பார்கள். இங்கே நெதர்லாந்தில் இருபது பேர் டீமில் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் கார்சனிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

முதல் இரண்டு நாட்கள் கிட்டத்தட்ட முப்பது பேரோடு செஷன் நடந்தது. பிரேக் டைமில் சிறு குழுக்களாக கூடி பேசி உணவருந்தினார்கள். பெரிதாக கார்சனிடம் பேச வேண்டிய சூழல் இல்லை. ஆனால் விநோதமாக கார்சன் அடிக்கடி ஜித்துவிடம் வந்து சகஜமாக பேசி விட்டு போனார்.

ஒரு முறை கையில் காலி தண்ணீர் பாட்டிலோடு ஜித்துவை கிராஸ் செய்து போனவர் திரும்ப வந்து அவள் பாட்டிலை கேட்டார்.

“நா பில் பண்ண போறேன். உனக்கும் சேத்து எடுத்துட்டு வரேன். உன் பாட்டிலை குடு” என உரிமையாய் கேட்டார்.

இது அவர் புடுங்க வேண்டிய ஆணியில்லை என தோன்றியது ஜித்துவுக்கு.

“தேங்க்ஸ் கார்சன். ஆனா எனக்கும் ஒரு ஷார்ட் வாக் போகணும். ரொம்ப நேரமா பிரேக் எடுக்கலை. நானே கொஞ்ச நேரம் கழிச்சு பான்ட்ரிக்கு போறேன்” என தவிர்த்தாள்.

தோளை குலுக்கியபடி லேசாய் கண் சிமிட்டி நகர்ந்தார் கார்சன்.

மூன்றாம் நாளில் இருந்து சிறு குழுக்களாக ஒவ்வொரு டீமோடு தனித்தனியாக மீட்டிங் நடந்தது. பெரும்பாலும் கார்சனை சந்திக்கும் சூழல் இல்லை.

மாலை ஆறு மணிக்கு கெஸ்ட் ஹவுஸுக்கு திரும்ப வந்தாள். இரவு எதுவும் பெரிதாய் வேலையில்லை. என்ன செய்யலாம் என யோசித்தாள். துவைக்க வேண்டிய துணி கொஞ்சம் இருந்தது.

லாண்டரி பேக்கை எடுத்துக்கொண்டு பேஸ்மென்டில் இருந்த வாஷிங்ரூமுக்கு போய் துணியை லோட் செய்தாள். இந்த வாஷிங் சைக்கிள் முடிய ஒரு மணி நேரம் ஆகும்.

அந்த அறைக்கு பக்கத்திலேயே ஒரு இன்டோர் கேம் ஏரியாவும், ரீடிங் ரூமும் இருந்தது. ஜித்து அங்கே போய் உட்கார்ந்து புத்தகம் படிக்க ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் “ஹலோ” என கார்சனின் குரல் கேட்டது.

எதிரில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார்.

“என்ன போரடிக்குதா?கேன் வீ ஹாவ் சம் ஃபன்?” என சிறிது நிறுத்தி பிறகு “இன் கேம் ஏரியா” என தொடர்ந்தார்.

ஜித்துவுக்கு அவரிடம் பெரிதாய் பேச்சு கொடுக்க இஷ்டமில்லை.

இந்த மூன்று நாளில் பல முறை “கேன் வீ ஹாவ் சம் ஃபன்?” என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.    

அந்த நேரம் பார்த்து ரேஷ்மியின் போன் வந்தது. கார்சனிடம் சுருக்கமாக விடை பெற்று ரூமை விட்டு வெளியே வந்தாள் ஜித்து.

ரேஷ்மி ஜித்துவோடு இரண்டு வருடம் மும்பையில் பணி புரிந்தவள். பிறகு சில வருடங்கள் கழித்து நெதர்லாந்து வந்து செட்டிலாகி விட்டாள்.  ரேஷ்மி வேலை செய்யும் கம்பெனி ப்ராஜக்டுக்காக தான் ஜித்து தேர்ட் பார்ட்டி கன்சல்டன்சியில் இருந்து வந்திருக்கிறாள்.

“ஹாய் ஜித், சாரிப்பா, நா வெகேஷன் போயிட்டு இன்னைக்கு தான் வந்தேன். லாஸ்ட் வீக்லேர்ந்து லீவ்ல போய்ட்டேன். அதான் உன் மெசேஜை மிஸ் பண்ணிட்டேன். நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம் லன்ச் டைமில்” என்றாள் ரேஷ்மி.

சரியென்று சொல்லி பத்து நிமிடங்கள் பேசி முடித்து திரும்பி பார்த்தால் கார்சன் கண்ணாடி ஜன்னலுக்கு பின்னால் நின்று அவளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

கார்சன் வெளியே வந்து “கேன் வீ ஹாவ் சம் ஃபன் டுநைட்?” என சிரித்தபடியே கேட்டார்.

ஆளரவமற்ற அந்த பேஸ்மென்டில் அசையாமல் ஒரு உருவம் நின்றது அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. ராஷ்மியிடம் பேசியதில் கார்சன் உள்ளே ரூமில் இருந்ததையே அவள் மறந்து போனாள்.

ஜித்து ஏதோ யோசனையாக இருக்க அருகே வந்து “ஃபன் மீன்ஸ் ஃபுல் அன்ட்ரெஸ்ஸட் நைட்” என்றார் மெதுவாய்.

பளுக்கென்று ஒரு அறை விட வேண்டும் போல இருந்தது ஜித்துவுக்கு.

போனை பேண்டின் பின்பக்கம் சொருகியபடியே சில நொடிகள் அவர் சொன்னதை உள்வாங்கி “ஐ ஆம் ஆல்ஸோ எ ஃபன் லவ்விங் பர்சன்” என நிறுத்தி நிதானமாய் சொன்னவள், அந்த சில கணங்களை சுதாரிக்க எடுத்துக் கொண்டாள்.

“ஃபன் மீன்ஸ் பர்ம்லி அன்டர்மைனிங் நான்சென்ஸ்” என நறுக்கென்று சொன்னாள்.

கார்சன் அவள் பதிலை உள்வாங்கும்போதே “பாய் கார்சன். குட் நைட்” என சொல்லி நகர்ந்தவள் சில அடிகள் நடந்தபிறகு திரும்பி வந்தாள்.

“டூ யூ நோ வாட் குட் நைட் மீன்ஸ்? என கேட்டாள்,

கார்சன் முழிக்க “க்ராப் ஒன் ஓவர்நைட்  டயப்பர். நோ இன்அப்ரோப்ரியேட் கெஸ்சர் ஹராஸ்மென்ட் டாலரேட்டட்” என சொல்லி சிரித்தபடியே நகர்ந்தாள்.

A basement game room

கார்சனுக்கு அவமானத்தில் முகம் சிவந்தது.

டக்கென்று டயப்பர் வெளியே தெரிகிறதா என அவர் உடையை சரி பார்த்தார்.  அவரின் டயப்பர் வழக்கத்தை அவள் தெரிந்து கொண்டது அவருக்கு புதிராகவும் பங்கமாகவும் இருந்தது.

அங்கேயே படிக்கட்டில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தார்.

முதல் நாள் கெஸ்ட் ஹவுஸ் வந்த பிறகு பக்கத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கி பில்லிங் செய்யும் போது ஜித்து ஹலோ சொல்லி அவரை கிராஸ் செய்து போனது ஞாபகம் வந்தது. கவுண்டரில் பையில் போட்டு பேக் செய்யும் போது டயப்பர் கவரை கவனித்திருக்கிறாள் என புரிந்து கொண்டார்.

ஆனாலும் இனி ஜென்மத்துக்கும் யார் குட் நைட் சொன்னாலும் இவள் சொன்ன அர்த்தம் மட்டும் அவருக்கு மறக்காது.

Tamil novel – Jiteswari – Part 11/21

A girl on mobile call

கல்யாணி பிறந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குமரேசனுக்கு ஒரு சாலை விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆறு மாத காலம் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை. காமாட்சி பாண்டிக்கு வந்து அவரை கவனிக்க ஜித்து குழந்தைகளோடு சென்னையில் எப்போதும் போல தொடர்ந்தாள்.

ஆனால் கற்பகத்துக்கும் குமரேசனுக்கும் இந்த நிலை தொடர உடன்பாடில்லை.

“ஏண்டி, எவ்வளவு நடந்தாலும் அங்க போக மாட்டேன்னு இங்கயே இருக்க? அந்த அம்மா இத்தனை நாள் உனக்கு துணையா இருந்தாங்க இல்ல?இப்ப அவங்களுக்கு ஒரு பிரச்சினைனா நீ கூட இருக்க வேணாமா? அவங்க பசங்களுக்கு ஏங்க மாட்டாங்களா? உன்ன மட்டும் பத்தி மட்டும் தான் யோசிப்பியா நீ?” என ஆரம்பித்தார் கற்பகம்.

“மா, விஷயம் புரியாம பேசாத? மாமா இங்க வந்தா பெஸ்ட் ஆஸ்பிடல்ல பாக்கலாம்னு கூப்பிட்டேன். அவர் வர மாட்டேன்னு சொல்றார். எனக்கும் ராஜூவுக்கும் பேங்க் லோன் கமிட்மென்ட் இருக்கு. ராஜுவும் என்ன வரச்சொல்லி கூப்புடலை. நீ ஏன் என் மேல இப்ப கேஸ் எழுதுற?” என திருப்பி கேட்டாள் ஜித்து.

“யாரும் உன்ன வெத்திலை பாக்கு வெச்சு கூப்புட மாட்டாங்க. சூழ்நிலைக்கு ஏற்ப நீதான் புரிஞ்சி நடக்கணும். அங்க போய் ஏதாவது வேலை தேடிக்க. இப்படி ஒரு ஒட்டு உறவும் இல்லாம இருந்து எங்க மானத்த வாங்காத” என திட்ட ஆரம்பித்தார் கற்பகம்.

வினை வீட்டிலேயே இருக்க வீதியை பற்றி உள்ள வேண்டாம். அடுத்த சில மாதத்தில் ராஜுவும் காமாட்சியும் அவளை பாண்டிக்கு வர முயற்சிக்க சொன்னார்கள்.

ஜித்துவுக்கு இக்கட்டான சூழல். ஒரு புறம் வேலை, பேங்க் கடன் மற்றும் மறுபுறம் பாண்டியில் தகுந்த வேலை கிடைக்காத நிலை.

ஆனால் நீண்ட காலம் இந்த பிரச்சினையை அவள் இழுக்க விரும்பவில்லை. மாற்று ஏற்பாடு என்ன என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் துறை சார்ந்த கம்பெனிகளில் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை தேட ஆரம்பித்தாள்.

ராஜுவிடம் பேசி சில மாதங்கள் பொறுக்க சொன்னாள். 

மும்முரமாக நட்பு வட்டத்தில் தகவலை சொல்லி வேலை தேடியதில் அடுத்த ரெண்டு மாதத்தில் ஒரு வாய்ப்பு வந்தது.

எண்ணை நிறுவனங்களுக்கு பணி புரியும் ஒரு சிறிய கன்சல்டன்சியில் ரிமோட் ஜாப் ஒன்று வந்தது.

இது இரண்டு வருட கான்டராக்ட் வேலை. அவள் ஏற்கெனவே பார்த்த அதே வேலை, நல்ல சம்பளம் ஆனால் கம்பெனி மட்டும் மிக சிறியது. அது சுமார் ஐம்பது பேர் மட்டும் கொண்ட ஒரு நிறுவனம்.

ஜித்துவுக்கு கான்டராக்ட் வேலை இன்னும் ஒரு படி கீழ் நிலை. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலைக்கு இது சரியான தீர்வு. எனவே தனிப்பட்ட நலனை கருதாமல் அந்த நிறுவனத்தில் சேர முடிவெடுத்தாள்.

மும்பை வேலையை ராஜினாமா செய்து அடுத்த ரெண்டு மாதத்தில் கன்சல்டன்சி வேலைக்கு சேர்ந்தாள். குழந்தைகளோடு பாண்டிக்கு போய் செட்டிலாகி அவள் வேலையை தொடர்ந்தாள்.

குமரேசனுக்கு கர்வம் கூடியது. கை கால் உடைந்தாலும் அது ஒரு நன்மையில் அவருக்கு முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னார்.

காமாட்சிக்கு எரிச்சல் ஓங்கியது. ஏன் எப்படி அந்த பெண்ணை சத்தாய்க்க வேண்டும்? பேசாமல் சற்று அனுசரித்து சென்னை வந்து தங்கினால் அவளுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்? கணவரின் வறட்டு பிடிவாதத்தால் ஜித்து சிறிதளவும் கீழ் நிலைக்கு போவதை காமாட்சி துளியும் விரும்பவில்லை.

ஆனால் ஜித்து கன்சல்டன்சி வேலையில் பெரிதாய் குறைபட்டுக் கொள்ளவில்லை. அவள் எப்போதும் சென்னையில் இருப்பதை போலவே அவள் தினசரி வேலைகளை பார்த்தாள்.

இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிய இப்போது ஜித்துவுக்கு ஒரு முக்கியமான கால கட்டம்.

இன்னும் சில மாதங்களில் அவள் கான்டராக்ட் முடிய போகிறது.

தற்போது அவள் பணிபுரியும் சவுதி கம்பெனி கிளையண்ட் அவர்களின்  அடுத்த கட்ட ஐந்து வருட கான்ட்ராக்ட்டை ஜித்துவின் கன்சல்டன்சிக்கே  மீண்டும் அளிப்பது என முடிவு செய்திருக்கிறது. 

ஆனால் இரண்டாம் கட்ட ப்ராஜெக்ட்டில் தொடர வேண்டுமென்றால் அவள் நெதர்லாந்து போய் இரண்டு வார ஒர்க்ஷாப்பில் நேரில் பங்கேற்க வேண்டும்.

ஜித்துவுக்கு இந்த ஒர்க்ஷாப் மிக முக்கியமானது.

இரண்டு வாரம் நெதர்லாந்து போய் நேரில் ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்டு ட்ரெயினிங் முடித்து விட்டு வந்தால் போதும். எல்லாம் சுமுகமாக முடிந்தால் அடுத்த ஐந்து வருடம் இப்போது போல பாண்டியில் இருந்தே வீட்டிலிருந்து பணி புரியலாம்.

“ராஜு, நா டூ வீக்ஸ்   நெதர்லாந்து போகணும். ஒர்க்ஷாப் இருக்கு. போயிட்டு வந்தா அஞ்சு வருஷம் இதே மாதிரி ஒர்க் ப்ரம் ஹோம் வேலை செய்யலாம் ” என சொன்னாள் ஜித்து.

“சரி, போயிட்டு வா” என சொல்லிவிட்டு உடனே அறையை விட்டு வெளியேறினான் ராஜு.

விஷயம் குடும்பத்துக்கு தெரிந்ததும் குமரேசன் கச்சேரியை ஆரம்பித்து விட்டார்.

“அந்த வாரம் தான் நம்ம ரமா கல்யாணம் வருது. அப்புறம் போக சொல்லு” என்றார் காமாட்சியிடம்.

ரமா குமரேசனின் தம்பி மகள். அவர் தம்பி வீட்டில் முதல் விசேஷம்.

இல்லேங்க, நம்ம சவுகர்யத்துக்கு கம்பெனில எப்படிங்க மாத்துவாங்க? நாம தான் எல்லாரும் போறோமே, ஜித்து ஒருத்தி வரலேன்னா என்ன?”என மெதுவாய் சொன்னார் காமாட்சி.

“நம்ம குடும்ப விசேஷம் எல்லாத்துக்கும் அவங்க எல்லாரும் ஒருத்தர் தவறாம வராங்க. அவங்க வீட்ல மொதல் விசேஷம். அதுக்கு வீட்டு மருமக இல்லாம போய் நிக்க சொல்றியா? காரு வீடு வேலை பணம்னு இருங்க. நாலு சொந்தம் வேணும்னு நெனைக்காதீங்க. அவன் தான் கவர்ன்மெண்டு வேலைக்கு போறானே? இன்னும் என்ன கொறை” என எகிறினார் குமரேசன்.

“நா ஒருத்தன் கத்தி என்ன ஆக போகுது? அம்மா புள்ள ரெண்டு பேரும் ஜடம் மாதிரி இருக்கீங்க. வாய தொறந்து நல்லது கெட்டது எடுத்து சொன்னா என்ன? அதுக்கு தான் இந்த சம்மந்தம் வரும்போதே சொன்னேன். இது சரிப்படாதுனு. யாரு எம் பேச்ச கேட்டீங்க? இப்ப எல்லார் முன்னாடியும் நா போய் தலையை குனிஞ்சு நிக்க போறேன். அவன் ஒத்த மரமா நிக்க போறான்” என வாய்க்கு வந்ததை பேசித் தீர்த்தார்.

பக்கத்து அறையில் இருந்த ஜித்துவுக்கு சுர்ரென்று ஆனது. இரண்டு வாரம் வேலை விஷயமாய் போய் வருவதற்கு இத்தனை வருடங்களுக்கு பிறகும் குழந்தைகள் பிறந்த பிறகும் வரன் பார்த்த கதையை இழுத்தது அடி முட்டாள்தனமாய் பட்டது.

போய் நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் போல இருந்தது.

சில நிமிடங்கள் நிதானித்தவள் எதுவும் கேட்க வேண்டாம் என முடிவெடுத்தாள். தனக்கு கேட்க வேண்டும், எரிச்சலாகி விஷயம் சூடு பிடிக்க வேண்டும் என திட்டமிட்டு கொட்டப்படும் வார்த்தைகள்.

தான் சொல்லும் காரணத்தையோ பதிலையே துளி கூட மதிக்கப்போவதில்லை. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது.

வீணாய் பேசி உழட்டுவதில் எந்த பயனும் இல்லை.எவ்வளவு விரைவாக இதை மறக்கிறோமோ அவ்வளவு நல்லது என நினைத்துக்கொண்டாள்.

காமாட்சிக்கு சங்கடமாய் இருந்தது.

அந்த பெண் அலட்டாமல் சத்தமில்லாமல் உழைத்துக் கொட்டுகிறாள்.

சகல சௌகர்யங்களையும் செய்து கொடுத்திருக்கிறாள். அவர்கள் சொந்த பந்த வகையறாவில் எந்த மருமகளும் இவள் அளவிற்கு திறமைசாலி கிடையாது. நாம் செய்த புண்ணியம் இந்த மாதிரி ஒரு பொறுப்பான, தன்மையான பெண் குடும்பத்திற்கு அமைவது என பல நேரங்களில் கர்வமாய் இருந்திருக்கிறார்.

இந்த மனுஷனுக்கு மட்டும் புத்தி வேறு மாதிரி இருக்கிறது. கண்டிப்பாய் அவளுக்கு கேட்டிருக்கும். அவள் மனம் என்ன பாடுபடும் என கவலையில் ஆழ்ந்தார்.

சற்று நேரத்தில் டோர் பெல் அடித்தது. காமாட்சி போய் கதவை திறக்க பின்னாலேயே ஜித்துவும் வெளியே வந்தாள்.

சாப்பாடு டெலிவரி வந்திருக்கிறது. இருபத்து நான்கு வகையான பண்டங்களோடு மெகா தாலி.

“வாங்க அத்தை சாப்பிடுவோம்” என அழைத்தாள்.

பெரிய சில்வர் தட்டுகளை கழுவி எடுத்து வந்து வைத்தாள். பொறுமையாக எல்லா டப்பாக்களையும் பிரித்து பாத்திரங்களில் மாற்றி தட்டு போட்டு மூடி வைத்தாள். பேக்கிங் பேப்பர் மற்றும் டேப்பு குப்பை என எல்லாவற்றையும் அள்ளி குப்பையில் போட்டு டேபிளை சுத்தம்  செய்தாள்.

டோர் பெல் அடித்தது. டவுனிலேயே பெஸ்ட் லஸ்ஸி நாலு பேக்.

வாங்கி வந்து கண்ணாடி கப்பை கழுவி ஊற்றி மூடி போட்டு வைத்தாள். 

குமரேசனுக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை.

எப்போது அழைப்பு வரும் என காத்துக் கொண்டிருந்தார்.

எல்லா அயிட்டங்களையும் மாற்றி ஊத்தும்போதே வாசனை வீட்டை நிரப்பி இல்லாத பசியையும் கிளறி விட்டது.

அரை மணி நேரம் ஆனது.

காமாட்சி “வாங்க சாப்பிட” என கூப்பிட்டு முடிப்பதிற்குள் போய் சேரில் உட்கார்ந்தார்.

அட்டகாசமான சாப்பாடு. அருமையான லஸ்ஸி. இருபது நிமிடம் ரசித்து ரசித்து சாப்பிட்டு முடித்தார் குமரேசன்.

Family lunch time

எதிரில் உட்கார்ந்து மெகா தாலியோடு குமரேசனின் ஈகோவையும் சேர்த்து மெதுவாக மென்று முழுங்கிக் கொண்டிருந்தாள் ஜித்து.

இந்த பெண் தனக்கு பிறந்திருக்க வேண்டியவள். ஒரு வார்த்தை பேசாமல்,முகம் சுழிக்காமல் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு தட்டு நல்ல சோறு போட்டு குமரேசனை தட்டி தூக்கியிருக்கிறாள்.

மற்ற குடும்பங்களில் நாராசமாக மாறும் சண்டை, இங்கே டைனிங் டேபிளில் அமர்க்களமாக பரிமாறப்பட்டு கொண்டிருக்கிறது.

நரம்பில்லாமல் பேசும் நாக்கு ஒரு மாற்றுக்காக நல்ல சுவையை அனுபவிக்கட்டும் என நினைத்திருக்கிறாள். அமிலமாக சுட்ட வார்த்தைகள் ஜீரணமாக ஆயிரம் ரெண்டாயிரம் போனால் பரவாயில்லை என நினைத்துக் கொண்டார் காமாட்சி.

ஒரு மெகா தாலியில் ரமா கல்யாண மேட்டர் சுபம் மங்களம் போட்டு முடிக்கப்பட்டது.

Tamil novel – Jiteswari – Part 10/21

Temple night

இறைவனும் இறைவியும் கிளம்பி வந்து குளத்தின் நடுவே இருந்த கல் மண்டபத்தில் உட்கார்ந்தார்கள்.

வடக்கு கோபுரத்திலிருந்து பார்த்த காகம் பறந்து போய் மாருதியிடம் விஷயத்தை சொல்லி எழுப்பியது.

இருவரும் போய் கல் மண்டபத்தின் ஓரத்தில் காதை தீட்டிக்கொண்டு உட்கார்ந்தார்கள்.

“என்ன மாருதி, சௌக்கியமா?” என்றார் இறைவன்.

மாருதி பணிவாய் வணக்கம் வைத்து விட்டு குளத்தின் மீது பார்வையை வீசியது.

“என்ன தாதா, நீங்க சௌக்கியமா?” என்றார் இறைவன் காகத்தை பார்த்து.

காகம் உள்ளுக்குள் நடுங்கியது. மெலிதாய் தலையசைத்து மௌனமாய் அமர்ந்திருந்தது.

“நீங்க ரெண்டு பெரும் தானே இவங்க லீகல் டீம்” என சிரித்தார் இறைவன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே மச்சிமா வந்து வணங்கினார். மற்ற மீன்களும் அவர் பின் சூழ்ந்து கொண்டு நின்றன.

இறைவி குட்டி மீனை பார்த்து “இங்கே வா” என்கிறார்.

“உனக்கு போரடிக்குதா இங்கே?” என வாஞ்சையாக கேட்டார்.

“ஆமாம்” என பயத்தோடு சொன்னது குட்டி மீன்.

“சரி, உன்னையும் உன் பேமிலியையும் பக்கத்துல இருக்குற ஆத்துக்கு அனுப்பவா? அங்க நீங்க ஜாலியா விளையாடலாம். நெறய ஜனங்க வருவாங்க” என கேட்டார் இறைவி. 

“வேண்டாம்” என சொல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டது காகம்.

“இல்ல, வேணாம்மா. நாங்க இங்கயே இருக்கோம்” என சொன்னது குட்டி மீன்.

“ஏன்?” என கேட்டார் இறைவி.

“நீ ஏன் அவங்க நோ சொல்லணும்னு வேண்டிக்கிட்ட?” என டக்கென்று அதே நேரத்தில் காகத்திடம் கேட்டார் இறைவன்.

தொக்காய் மாட்டியது காகம். அஜெண்டா அண்டாவில் தானாய் குதித்து மாட்டிக் கொண்டது.

டெம்பிள் ஓனர் கேட்கிறார். எந்த டெம்ப்ளேட்டில் பதில் சொல்வது என யோசித்தது.

“என்ன, ஓனர பத்தி என்ன யோசனை?” என அதை மீண்டும் சீண்டினார் இறைவன்.

இந்த கேள்வியில் டெம்ப்ளேட்டை முடிவு செய்தது காகம்.

“இல்ல சாமி, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல. ஆத்து தண்ணி ரொம்ப மாசா இருக்கு. ஜனங்க குடிக்கவும் லாயக்கு இல்லை. மீனுங்க வாழவும் லாயக்கு இல்லை. அங்க போய் சாகுறதுக்கு இதுங்க இங்கயே பொழச்சி இருக்கலாம்” என விளக்க தீபத்தை ஏற்றியது காகம்.

“ஏன் மாசா இருக்கு? யாரு பண்ற வேலை இது” என கோபமாய் கேட்டார் இறைவி.

“உன் டெம்ப்ளேட் ஒர்க்அவுட் ஆயிடுச்சி. டீடைலா சொல்லு” என சிரித்தார் இறைவன்.

ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும். ஆனா நம்மள வெச்சி செய்றாங்க என நினைத்தது காகம்.

“அதான் எங்க டெம்ப்ளேட்” என சொன்னார் இறைவன்.

காகத்துக்கு கேம் புரிந்து விட்டது.

பேசாமல் தெரிந்ததை சொல்லி விடலாம் என ஆரம்பித்தது.

“எல்லாம் அந்த சிமெண்டு பேக்டரியால வந்து வினை. அவனுங்க கழிவையெல்லாம் ஆத்து தண்ணில கொட்டுறானுங்க. மாசு வாரியமும் கண்டுக்காம இருக்கு. ஜனங்க போராடி போராடி அலுத்துப் போய்ட்டாங்க. பேக்டரிகாரனுங்க ஊருக்கு தண்ணி சுத்திகரிக்குற மெஷினை போட்டு பிரச்சினையை அமுக்கிட்டாங்க. நல்ல தண்ணி கெடைக்குறதால ஜனங்களும் அந்த பிரச்சினையை அப்படியே விட்டுட்டாங்க. பாவம், இந்த மீனுங்க தான் கூண்டோடு அழியுதுங்க” என விவரித்தது காகம்.

மச்சிமாவும் மற்றும் சில மீன்களும் குனிந்து கண்ணீர் சிந்தின.

Fish family

அவர்கள் இனத்தின் அழிவை யாரோ ஒருவர் விவரிக்கும் போது தாங்கள் தப்பி பிழைத்ததற்கு சந்தோஷப்படுவதா அல்லது தங்கள் இனத்தின் அழிவிற்காக வேதனைப்படுவதா என புரியாமல் இருந்தன.

இறைவி கண் மூடி இந்த டாபிக்கை யோசித்தார்.

அந்த ஓனர் தன்னுடைய பரம பக்தர் என தெரிய வந்தது.

பேக்டரி லாபத்தில் கோவிலுக்கு ஒரு தொகையை உபயமாக கொடுத்திருக்கிறார்.

“அந்த ஓனர் உங்க டிவோடீ தான். நம்ம கோவிலுக்கு கூட நெறய காசு குடுத்து இருக்காரு. அந்த குஷில நீங்களும் அந்த ஆளு வேண்டுற காண்ட்ராக்டெல்லாம் முடிச்சு தரீங்க” என தைரியமாய் சொல்லி விட்டது காகம்.

“நெலம் நீரெல்லாம் பாழாக்கிட்டு, இந்த கொளுத்த காப்பாத்துறேன்னு சுத்து செவரு கட்ட, கேட்டு போடன்னு நிதி குடுத்திருக்கான். அதையும் போர்ட் போட்டு மாட்டி நல்லவன் பேரெடுக்குறான். இதே போர்ட ஆத்தோரம் வெப்பானா? நான்தான் இத நஞ்சாக்கிட்டேன்னு” என திட்டி தீர்த்தது மச்சிமா.  

சிமெண்டு பாக்டரி ஓனர் கிழவன் சிக்கி சின்னா பின்னமானார்.

“ஏதோ உண்டில ஐஞ்சு பத்து போடுறவனை ஒண்ணும் செக் பண்ண வேண்டியதில்லை. லம்பா ஒரு தொகையை ஒருத்தன் குடுத்தா, டியூ டிலிஜன்ஸ் பாக்காம எப்புடி வாங்கலாம்?” என முதல் கேள்வியை கேட்டது மாருதி.

“இது கார்பொரேட் குரங்கு” என நினைத்துக் கொண்டார் இறைவி.

இறைவன் இறைவியை பார்த்தார். பிறகு மச்சிமாவிடம் பேச ஆரம்பித்தார்.

“நாங்க இந்த விஷயத்துக்கு ரொம்ப வருத்தப்படறோம். தப்பு செஞ்சவங்களுக்கு நாங்க தக்க தண்டனையை கொடுப்போம். இனிமே இந்த மாதிரி நடக்காம நாங்க பாத்துக்கறோம்” என்றார்.

“என்ன நீங்களும் ராஜா மாதிரியே பேசுறீங்க? அவரும் அப்டி தான். எங்க யார் செத்தாலும், ரேப்பு நடந்தாலும் ஒரு லெட்டரை எங்களுக்கு போட்டுட்டு அந்த விஷயத்தை கெடப்புல போட்டுடுவாரு” என காகம் ராஜாவை கோர்த்துவிட்டது.

முதலில் சிமெண்ட் கம்பெனி ஓனர் கிழவன். இப்போது ராஜா.

அடுத்து லிஸ்டில் இருப்பது தாங்கள் தான் என அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.

“சரி, அந்த ஓனர் பண்ண தப்புக்கு அவர் பதில் சொல்லியாகணும். அவர் அனுபவிப்பார். கேட்டு தொறக்க ஏற்பாடு பண்றோம்” என்றார் இறைவி.

“ஆத்து தண்ணிய சுத்தம் பண்ணி தருவீங்களா, ப்ளீஸ்” என்றது குட்டி மீன்.

“கண்டிப்பா, அந்த ஓனர இனிமே பொறுப்பா இருக்க சொல்றேன். நல்ல மழையை குடுத்து அந்த ஆற்றை வளமாக்குறேன்” என உத்திரவாதம் கொடுத்தார் இறைவி.

மச்சிம்மாவும் மீன்கள் கூட்டமும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார்கள்.

சரியான மங்குனி கூட்டம் என மனதிற்குள் திட்டியது காகம். இன்னும் எவ்ளோ இருக்கு சரி பண்ண. இதுங்க என்னடான்னா இதுக்கே சந்தோசப்படுதுங்க. இதுங்களுக்கு சுய புத்தியே இல்ல என கருவியது.

“ஏங்க, நாமளும் வாட்டர் பவுண்டைன் போடலாமா கொளத்துல. அப்டியே கொஞ்சம் நல்ல லைட்டிங்கும் பண்ணா ஆம்பியன்ஸ் நல்லாயிருக்கும்” என கேட்டார் இறைவி.  

இரண்டு மாவட்டம் தாண்டி இறைவியின் சகோதரியின் திருத்தலம் இருக்கிறது. நீரூற்று வைத்த குளம் இருக்கிறது அங்கே.

“மந்திரி சம்மந்தி தான் அந்த கான்டராக்ட செய்யுறாரு. உங்க அக்கா கோவிலுக்கும் அவரு தான் பவுண்டைன் போட்டாரு. கூட கொஞ்சம் அமௌண்டையும் ஆட்டையை போட்டாரு அந்த டீலிங்க்ல” என சொல்லியது காகம்.

லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. இறைவன் அதையும் நோட் செய்து கொண்டார். காகத்தின் டெம்பிளேட் நன்றாக வேலை செய்தது.

“உனக்கு ஒண்ணும் பிராது இல்லியா? சௌகர்யமா இருக்கியா?” என டாபிக்கை காகத்தின் பக்கம் திருப்பினார் இறைவன்.

“ஏதோ உங்க புண்ணியத்தால சாப்பாட்டுக்கு கொறையில்லாம இருக்கேன். வேளா வேளைக்கு வயிறார சாப்புடறேன். வேற என்ன வேணும் ஒரு ஜீவனுக்கு?” என பவ்யமாய் பதில் சொன்னது காகம்.

தன்னிடம் வரும்போது காகம் சட்டென்று நியூட்ரல் கியருக்கு மாறியது மச்சிமாவுக்கு உறுத்தலாக இருந்தது.

நேத்து தான் ரேடியேஷனுக்கு பயந்து வீடு மாறின கதையை சொல்லுச்சு. இன்னிக்கு என்னடான்னா ஒண்ணும் பிரச்சினை இல்லேன்னு சொல்லுது” என மனதிற்குள் அலுத்துக் கொண்டது.

“ஆனா கொஞ்சம் கில்டியா பீல் பண்றேன்” என இழுத்தது காகம்.

மாருதிக்கு காகத்தின் அடுத்த அஜெண்டா புரிந்தது. ஆனாலும் பேசாமல் இருந்தது. தன்னிடம் கேட்டால் பதில் சொல்லலாம் என நினைத்தது.

“சொல்லு கேக்குறோம்” என்றார் இறைவன்.

“இல்ல, கணேசன் அண்ணனுக்கு நல்ல சாப்பாடு போடுறீங்க. நம்ம கோசாலைல இருக்குற யசோதாவுக்கும் ஒரு குறைவும் இல்ல. நானும் மாருதியும் அலைஞ்சு திரிஞ்சு கோவிலுக்குள்ள வயித்த நெறைச்சுக்கறோம். ஆனா இந்த மீனுங்களுக்கு தான் ஒரு வழியுமில்லை. இயற்கையாவே அதுங்களுக்கு கெடைக்குற புழு பூச்சி பாசிய தின்னு வாழுதுங்க. எல்லாருக்கும் படியளக்குற நீங்க அதுங்களுக்கு ஒரு வழி பண்ணலாமுல்ல? ஏதோ சில பக்தர்கள் புண்ணியத்துல அப்பப்போ கொஞ்சம் பொரி சாப்பிட்டுதுங்க. அதையும் அந்த தங்கராஜு பய பூட்டு போட்டு தடுத்துட்டான். அதுங்க மனசு எவ்வளவு வேதனையா இருக்கும்? நாங்க எல்லாம் உங்க படைப்பு தானே. உங்க வீட்ல இருக்கவுங்க, கோவிலுக்கு வர பக்தர்கள் எல்லாருக்கும் குறைவில்லாம உணவை குடுக்குற நீங்க, ஏன் இந்த மீன் குட்டிகளை மறந்தீங்க? நா வேளாவேளைக்கு சாப்பிடும் போது இதுங்க ஞாபகம் வருது, கூடவே தங்க ராஜு மேல கோவமும் வருது” என சொல்லி முடித்தது காகம்.

மாருதியும் மச்சிமாவும் வாயடைத்துப் போனார்கள். 

இறைவனும் இறைவியும் அதே நிலையில் தான் இருந்தார்கள்.

“உங்கள் காலடியிலேயே வாழும் இவர்களுக்கு என்ன கருணை காட்டினீர்கள் இதுவரை? உணவும் இல்லை. உற்சாகமும் இல்லை. இந்த மீன்கள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த கோவிலில் எந்த மனித நடமாட்டமும் இல்லாமல் வெறுமையாக இருக்கின்றன. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?” என பொரிந்து தள்ளியது காகம்.

மாருதிக்கு காகத்தின் மீது பெரும் மரியாதை ஏற்பட்டது. இனியும் தான் வாய் மூடி இருப்பது இழிவு என கருதியது.

“மன்னியுங்கள் மச்சிமா. இவ்வளவு நாள் இதை ஏன் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் எப்போதோ தீர்வு கண்டிருக்கலாமே?” என கேட்டார் இறைவி.

“படைத்த தாய்க்கு தெரியாதா பிள்ளைகளின் நிலை” என இருந்து விட்டோம் என அப்பாவியாய் சொன்னது மச்சிமா.

“என்னையும் மன்னித்துக் கொள்ளுங்கள் மச்சிமா. நாங்களும் எங்கள் அருகிலேயே வாழும் உங்களை கவனிக்கத் தவறிவிட்டோம்” என வருந்தினார் இறைவன்.

மச்சிமா பதறி விட்டது. இவ்வளவு தூரம் இவர்கள் பணிவாய் மன்னிப்பு கேட்பார்கள் என அது எதிர்பார்க்கவில்லை.

மாருதி காகத்தை பெருமையாய் பார்த்தது. மிகவும் நுட்பமான விஷயத்தை தைரியமாக வாதம் செய்து தீர்த்து வைத்திருக்கிறது. 

கடவுளின் காலடியிலேயே இருந்தாலும் எந்த பிரச்சினையாய் இருந்தாலும் வாய் திறந்து கேட்டால் தான் தீர்வு கிடைக்கும் என அவர்களுக்கு தெளிவாய் புரிந்தது.

Tamil novel – Jiteswari – Part 9/21

Hindu temple

அன்று கோவிலில் தெப்போற்சவம். சாயந்திரம் விளக்கு வைத்ததும் இரண்டு மணி நேரம் இறைவனும் இறைவியும் திருக்குள தெப்பலில் பவனி வந்தார்கள். பக்தர்கள் வெள்ளம் திரளாக இருந்தது.

இந்த கோவில் இறைவிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தி வாய்ந்த தெய்வமாக தென்னிந்தியாவில் போற்றப்படும் தலம்.

நாள் கிழமை முதற்கொண்டு ஆராதனைகள் வரை இறைவியை மையப்படுத்தியே இருக்கும். இறைவன் தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார். கோவிலில் கிடைக்கும் படங்களில் பெரும்பாலும் இறைவி மட்டும் தான் இருப்பார். ஒரு சில படங்களில் மட்டுமே தம்பதி சமேதராக இருப்பர்.

இறைவனுக்கு பக்கத்து மாவட்டத்தில் புகழ் வாய்ந்த திருத்தலம் இருக்கிறது. அங்கு அவர் தான் எல்லாம். அங்கே இறைவி தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார்.

தெப்போற்சவம் அமர்க்களமாக நடந்து முடிந்தது. இறைவி கோவிலுக்குள் திரும்ப மக்கள் அனைவரும் கலைந்து சென்றார்கள்.

“இன்னைக்கு என்ன நம்ம மீன் குட்டிங்க எல்லாம் சுரத்தே இல்லாம இருக்குங்க? கவனிச்சியா?” என்றார் இறைவன்.

“ஆமாங்க, நானும் பார்த்தேன். ஜனங்க, லைட்டு எல்லாத்தயும் பாத்து துள்ளி குதிச்சி வெளையாடுவாங்க. இன்னைக்கு என்னடான்னா ரொம்ப டல்லா இருக்காங்க” என பேசிக்கொண்டே கண்ணை மூடினார் இறைவி.

“நம்ம தங்கராஜ் மேல வருத்தமா இருக்காங்க, கேட்டு பூட்டுனது அவங்களுக்கு விருப்பமில்லை” என கண்டுபிடித்து பேசிக்கொண்டார்கள்.

“சரி ராத்திரி ஒரு எட்டு போய் அவங்ககிட்ட பேசிட்டு வரலாம்” என்றார் இறைவன்.

“ஆமா, இன்னும் ஒரு பூஜை இருக்கு. அது முடியட்டும். எல்லாரும் பூட்டிட்டு போனதும் கெளம்பலாம்” என்றார் இறைவி.

சிலமணி நேரம் முன்பு ஆயிரக்கணக்கானோர் வந்து சென்ற சுவடே இல்லாமல் அமைதியாக இருந்தது கோவில்.

பொழுதோடு போய் யசோதா பசு கோசாலையில் படுத்துவிட்டது.

கோவில் யானை கணேசன் பொழுதுக்கும் நின்ற கால் வலியில் முனகிக்கொண்டு இருந்தது. அடுத்த நாள் காலையில் ராஜ வீதியில் ஊர்வலம் இருக்கிறது. எப்படியும் ஏழு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.

சாயந்திரத்திலிருந்து கால் மாற்றி கால் மாற்றி நின்று சோர்ந்து போயிருந்தது. சற்று நேரத்தில் ஒரு போன் வர பாகன் பேச ஆரம்பித்து விட்டார். கணேசனுக்கு சாப்பாடே வேண்டாம் என தோன்றியது. பேசாமல் போய் புல்லின் மீது படுத்துக் கொண்டது. சற்று நேரம் கழித்து வந்த பாகன் கணேசனை தடவி சமாதானப்படுத்தினார்.

பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு முடித்தது கணேசன். பாகன் தூங்க போக அங்கே வந்த மாருதியிடம் பேச ஆரம்பித்தது.

An elephant at temple

“நாளைக்கு நாளைல ஊர்வலம் போறோம். ரோட்டோரம் ரோஸ்மில்க் குடிச்சிக்கிட்டு எங்கள வச்சி செல்பியா எடுத்து ஸ்டேட்டஸ் போடுவாங்க. எவன் இப்பலாம் பக்தியோட வரான்? ஸ்டேட்டஸ் போட நாலு போட்டா எடுக்க தான் வரானுங்க. இதுக்கு லோக்கல் ஹாலிடே வேற” என புலம்பியது கணேசன்.

“திருக்கோவில்ல இருக்குறக்குற கொளத்துக்குள்ள இருக்குறவங்களுக்கே இவ்ளோ மனக்குறை இருக்கு. இந்த அம்மா என்னடானா என் மேல ஏறி ஒக்காந்துக்கிட்டு ராஜ வீதி சுத்தி வந்து அருள கொட்டப்போகுது. அவங்க காலடியிலேயே கெடக்குற ஜீவன்களுக்கு வேற என்ன போக்கிடம் இருக்கு?” என மாய்ந்து போய் பேசிக்கொண்டிருந்தது கணேசன்.

“திரும்புற பக்கமெல்லாம் வித விதமான பிரச்சினையோட ஜனங்க மொச்சா கடவுளுங்க மட்டும் என்ன பண்ணுவாங்க? அந்த காலத்துல என்ன இவ்ளோ வெரைட்டி பிரச்சினைகளா இருந்துது? சாமி மழையை குடு, வெளச்சலை குடு, ஆடு மாடு கண்ணுகுட்டிய நோய் நொடி இல்லாம பாத்துக்க, குடும்பத்தை காப்பாத்துன்னு விரல் விட்டு சொல்லிடலாம். இன்னும் மிஞ்சி போனா குழந்தய குடு, நோயை தீரு, செல்வத்தை குடுன்னு கேப்பாங்க.

இப்போ என்னடான்னா ஆன்சைட் வேணும். அதுவும் நல்ல வெதர்ல ஷாட் டெர்மா வேணும். கூட நல்ல பிகரா ஏதாவது வரணும். மொக்க க்ளையண்டா இருக்கணும். சவுத் இந்தியன் சோறு கெடைக்கணும்.

லாங் டெர்முன்னா சாமி வீடு புக் பண்ணி குடுக்கணும். நல்ல காரு, அதுவும் அதுவாவே ஓடுற மாதிரி வாங்கி தரணும். அவங்க ஆன்சைட் போன நேரத்துல அவங்க அப்பா அம்மாவுக்கு நோய் நொடியில்லாம பாத்துக்கணும். கூட போற ஸ்பவுசும்கும் மவுஸான வேலை வாங்கி தரணும். இந்த காலத்து மனுஷங்களுக்கு கடவுளா இருக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என வக்காலத்து வாங்கியது மாருதி.

“நீயும் உன் கடவுளோட அசைன்மென்டுக்கு ஆன்சைட் போனவர்தானே? அவரை எப்படி விட்டு குடுப்ப” என கேலி செய்தது கணேசன்.

“ஆமா ஆன்சைட் போய் இவங்கள மாதிரி பன்னா பண்ணேன். என் வாலுல தீய வெச்சு புண்ணானது தான் மிச்சம்” என இடித்தது மாருதி.

“அரே பாபா, அந்த டீம்லயே நீதான் டாப் பர்பாமரு. உன் மேல இருக்குற ப்ரேமத்துல தான், சாமி எல்லா பேமிலி போட்டோ பிரேம்லயும் உன்னை வெச்சிருக்காரு” என கிண்டலடித்து கணேசன்.

மாருதியோடு பேசியதில் கொஞ்சம் ரிலாக்சானது கணேசன். “சரி நான் போய் படுக்கிறேன். நாளைக்கு காலைலயே எழுந்து ரெடியாகணும்? என

சொல்லி மாருதியை வழியனுப்பியது.

Tamil novel – Jiteswari – Part 8/21

A senior couple a temple

அடுத்த நாள் காலையிலேயே புஷ்கரும் கல்யாணியும் கோவிலுக்கு போக ரெடியாகிவிட்டார்கள். நேசப்பாவும் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டுக்கொண்டு கிளம்பினார்.

“ரொம்ப நாளாச்சு கோவிலுக்கு போய். நானும் வரேங்க” என்றார் சங்குபுஷ்பம்.

“பசங்களா, மழை கொட்ட போகுது, கொடை எடுத்துக்குங்க, உங்க பாட்டியும் கோவிலுக்கு வராளாம்” என கிண்டலடித்தார் நேசப்பா.

ஜித்தும் லக்ஷ்மியும் வாக்கிங் முடித்துவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.

ஜித்துக்கு காமாட்சியின் போன் வந்தது.

“நல்லாருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா?” என விசாரித்தாள்.

இரண்டு நிமிடம் பேசி முடித்தவுடன் நேசப்பா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு போய் பால்கனியில் நின்றாள்.

எதிர் பிளாட்டு பால்கனியில் வெளிர் நீல புடவை  காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் சடாரென கற்பகத்தின் நினைவு வந்தது ஜித்துவுக்கு. லேசாக கண்ணீர் துளிர்க்க அந்த நினைவில் ஆழ்வது தன்னை மேலும் பலகீனப்படுத்தும் என திரும்பி ஹாலுக்குள் வந்தாள்.

சங்கு புஷ்பம் குளித்துவிட்டு வர “எங்கம்மா கெளம்புற காலங்காத்தால?” என கேட்டாள் லக்ஷ்மி.

“கோவிலுக்குடி. பசங்கள கூட்டிட்டு போறோம்” என்றார் சங்கு புஷ்பம்.

“ஜித்து நீயும் வரியா? எல்லாரும் சேந்து போகலாம்” என அழைத்தாள் லக்ஷ்மி.

போனை எடுத்து கேலண்டரை பார்த்தாள் ஜித்து. மதியம் ஒரு மணிக்கு தான் ஒரு மீட்டிங் இருந்தது.

“சரி போலாம். பத்து நிமிஷத்துல ரெடியாயிடறேன்” என்றபடி குளிக்க போனாள் ஜித்து.  பிளான் மாறிய பிறகு சங்கு புஷ்பம் கிச்சனுக்குள் நுழைந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரத்தில் எல்லாரும் ரெடியாக டாக்ஸி பிடித்து கோவிலுக்கு

போய் இறங்கி உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் வயதானவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

நேசப்பா சில்லறை எடுத்து குழந்தைகளிடம் கொடுத்து அவர்களுக்கு கொடுக்க சொன்னார்.

ஜித்துவும் லக்ஷ்மியும் பர்ஸை துழாவினார்கள். சில்லறை காசோ, கரன்சியோ எதுவும் இல்லை. துடைத்து வைத்தார் போல இருந்தது பர்ஸ்.

“அம்மா சில்லறை இருந்தா குடு” என்றாள் லக்ஷ்மி.

“ஏண்டி உங்க டிஜிட்டல் இந்தியால தர்மத்துக்கு ஆப்ஷன் இல்லியா?” என நக்கலாய் கேட்டார் சங்கு புஷ்பம்.

“பத்து ரூபாய்க்கு சில்லறை காசு தர இவ்ளோ பேச்சு பேசுற” என்றபடியே சிரித்தாள் லக்ஷ்மி.

போனை லாக்கரில் வைத்து விட்டு வந்ததால் அர்ச்சனை டிக்கெட் மற்றும் நெய் விளக்கு வாங்க, ஐயருக்கு தட்டில் போட, உண்டியலில் போட என

இருவரும் காசுக்காக பவ்யமாக நின்றார்கள்.

சங்கு புஷ்பம் கெத்தாக கரன்சியை எடுத்து எண்ணி, பிறகு சில்லறை காசு எண்ணி கொடுப்பது என ஒரே சீனாக இருந்தது.

“மா, நேத்து மார்க்கெட் போய் கடைசி காசு வரை செலவு பண்ணிட்டோம். நீ ரொம்ப சீன் போடாதே” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

“கொஞ்சமான ஆட்டமா போடுறீங்க போன வச்சிக்கிட்டு. கண்ணு மண்ணு தெரியாம ஊதாரித்தனமா செலவு பண்றீங்க. இப்போ என் டைம்” என காட்டமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

பேசியபடியே வெளி பிரகாரம் சுற்றி குளத்தருகே வந்தார்கள். நேசப்பா ஆபீஸ் ரூமுக்கு போய் கேட் திறப்பது பற்றி விசாரித்தார். ஆபீஸர் வாட்ச்மேனிடம் சாவி கொடுத்து அனுப்பினார்.

குளத்து கேட் திறந்ததும் குழந்தைகள் குக்ஷியானார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தார்கள்.

“கொஞ்சம் மேல வாங்க எல்லாரும்” என அழைத்தார் சங்குபுஷ்பம்.

நாலு படி இறங்கிய ஜித்து “என்னமா?” என்றாள்.

சங்குபுஷ்பம் பக்கவாட்டில் இருந்த மண்டபத்தில் ஏறி தூணில் சாய்ந்து உட்கார்ந்து காலை நீட்டிக்கொண்டார்.

“சுக்கு காபி பிளாஸ்க்ல கொண்டாந்துருக்கேன். குடிச்சுட்டு அப்புறம் போய் படிக்கட்டுல உக்காரலாம்” என பையை பிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

“நெனச்சேன் நீ பைய தூக்கிட்டு கிளம்பும் போதே. என்னென்ன சரக்க உள்ள வெச்சிருக்கியோன்னு. கோவிலுக்கு வந்தா ஜங்க்க்ஷன்ல இருக்குற காபி ஹவுஸ்ல போய் சுக்கு காபி குடிக்கணும்னு ஜித்துக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீ என்னடான்னா வீட்லருந்தே போட்டு எடுத்துட்டு வந்துட்ட” என சிணுங்கினாள் லக்ஷ்மி.

“அம்மா கூட அப்டி தான். பிரிக்க முடியாதது நர்ஸும் பிளாஸ்க்கும் போல” என சொல்லி சிரித்தாள் ஜித்து.

“ஆமா, எங்க காலத்துல இருந்த ஹைடெக் சாமான்ல பிளாஸ்க்கும் ஒண்ணு. வார்டுல பிளாஸ்க் வெச்சிருக்கிற பேஷண்ட் கொஞ்சம் கெத்தாதான் இருப்பாங்க. வயசான இல்லாதவங்களுக்கு சொந்தமா பிளாஸ்க் இருக்கிறதே ஒரு பெரிய கனவு தான். பெரும்பாலானவங்களுக்கு வீட்லேர்ந்து யாரும் வர மாட்டாங்க. கவெர்மென்ட்டு மூணு வேளை சாப்பாடு குடுக்கும். கூட சூடா காபியோ பாலோ குடிச்சே, ஆஸ்பிடல்லேர்ந்து டிஸ்சார்ஜ் ஆகுற வரை ஓட்டிடுவாங்க” என விவரித்தார் சங்கு புஷ்பம்.

புஷ்கரும் கல்யாணியும் அந்த பிளாஸ்கை மரியாதையாக பார்த்தார்கள்.

“பேசாம காபி ஹவுசே போயிருக்கலாம்” என மீண்டும் ஆரம்பித்தாள் லக்ஷ்மி.

“உனக்கென்ன சரக் சரக்குன்னு கார்டு தேய்ப்ப. இல்ல போன எடுத்து காச சுட்டு தள்ளுவ. சுக்கி காபியோடு முடிக்கிற ஆளா நீ? எங்களுக்காவது பென்சன் வருது. உங்களுக்கு அதுவும் கிடையாது. நாப்பத்தஞ்சு வயசாச்சுன்னா பொம்பளைங்களுக்கு எப்படா ரிட்டயர்டு ஆவோம்னு இருக்கும். சுகர் எட்டிப்பாக்கும்.மெனோ பாஸ் வதைக்கும். ஒடம்புல தெம்பு இருந்து வேலைக்குப் போகும்போதே செலவை கண்ட்ரோல்ல வைங்க. இப்போ சேமிக்கலேன்னா பின்னாடி இதே ஜோர்ல செலவு பண்ணமுடியாது” என நிதர்சனத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“நல்லதா ஒரு காபி குடிக்கலாம்னு சொன்னா எனக்கு நரை வந்து கூன் விழுறவரை பயம் காட்டுறியேம்மா? டென்ஷனை கன்ட்ரோல்ல வை, புருஷனை கன்ட்ரோல்ல வை, வெய்ட்ட கன்ட்ரோல்ல வைனு எவ்ளோ ப்ரெஷரும்மா” என அலுத்துக்கொண்டாள்  லக்ஷ்மி. 

நேசப்பா குழந்தைகளுக்காக சர்க்கரைப் பொங்கல் வாங்கி வந்தார். சற்று நேரத்தில் அவர் பின்னாடியே கையில் தூக்கு வாளியுடன் ஒருவர் வந்தார்.

“மேடம் நல்லாருக்கீங்களா?” என்றார்.

“நல்லாருக்கேன் பரணி. தங்கமயிலும் பசங்களும் சௌக்கியமா?” என விசாரித்தார் சங்கு புஷ்பம்.

பரணி கோவில் பணியாளர். தங்கமயில் சில ஆண்டு காலம் அவர்கள் சொசைட்டி ஆபீசில் வேலை பார்த்தாள். மயிலின் இரண்டு டெலிவரியும் சங்கு புஷ்பம் வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் நடந்தது.

“நல்லா இருக்காங்க மேடம். சார தூரத்துல இருந்து பார்த்தேன். அதான் பிரசாதம் தரலாம்னு வந்தேன்” என தொன்னையில் புளியோதரை வைத்து கொடுத்துவிட்டு கிளம்பினார். நிதானமாக சாப்பிட்டு சுக்கு காபியும் குடித்து முடித்தார்கள்.

“மா, காபி அவுஸ் டேஸ்ட் அப்டியே இருக்கு” என புகழ்ந்தாள் லக்ஷ்மி.

“நீங்க வரீங்கன்னு சொன்னதும் அம்மா அந்த காபி அவுஸ்லேர்ந்து மிக்ஸ் வாங்கிட்டு வர சொல்லிட்டா” என சொன்னார் நேசப்பா.

“செம பிளான்மா” என சிரித்தாள் லக்ஷ்மி.

“இந்த கப்பு காப்பிய அம்பது ரூபா சொல்வான். இப்போ பாரு சிம்பிளா முடிஞ்சிது. நீ காபி குடிக்கலாம்னு உள்ள நொழஞ்சி ரெண்டாயிரத்துக்கு கார்டு தேய்ப்ப” என சொன்னார் சங்கு புஷ்பம்

லக்ஷ்மி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்க ஜித்து தலையசைத்தும், புன்னகைத்தும் கேட்டு கொண்டிருந்தாள். நேசப்பாவுக்கு ஜித்து சாதாரணமாக இல்லை என புரிந்தது. யோசனையும் கவலையும் தீவிரமாக குளத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

லஷ்மி காபி டம்ளர்களை வெளியே கொண்டுபோய் கழுவி எடுத்து வந்தாள்.

சங்கு புஷ்பம் அதையெல்லாம் பையில் வைத்துவிட்டு இரண்டு பொரி டப்பாக்களை வெளியே எடுத்தார். புஷ்கருக்கும் கல்யாணிக்கும் ஆளுக்கொன்று கொடுத்தார்.

டப்பாவை கையில் வாங்கிய புஷ்கர் சற்று நேரம் யோசித்தான்.

“தாத்தா நானும் பாட்டியும் அந்த கார் னர் போறோம். நீங்க பாப்பா கூட இங்கயே இருங்க” என்றான்.

“சரிப்பா” என்றார் நேசப்பா.

“மா, நாங்க ஹெவியா சாப்டுட்டோம். கொளத்தை ரெண்டு ரவுண்டு சுத்திட்டு வரோம்” என ஜித்துவோடு கிளம்பினாள் லக்ஷ்மி.

ஜித்துவின் அமைதி லக்ஷ்மிக்கும் கவலையை தந்தது. எதுவானாலும் அவளே சொல்லட்டும் என பொறுத்திருந்தாள். ஆனால் கோவிலுக்கு வந்த பிறகு நாமே ஆரம்பிப்போம் என்ன விஷயம் என கேட்போம் என முடிவெடுத்தாள்.  சற்று நேரம் நடந்த பிறகு மறு கரையில் உட்கார்ந்தார்கள்.

Friends at temple

“மைண்டுல என்னடி போட்டு உருட்டிக்கிட்டு இருக்க? நானும் வந்ததுலேர்ந்து பாக்குறேன். யோசனயாவே இருக்க” என உரிமையாக கேட்டாள் லக்ஷ்மி.

“மும்பை ஆபீஸ் போய் ஜாயின் பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்” என்றாள் ஜித்து.

“அவர் வரேன்னு சொல்லிட்டாரா? என குதூகலமானாள் லக்ஷ்மி.

“இல்ல” என்றாள் ஜித்து.

“அப்போ பசங்கள கூட்டிட்டு நீ மட்டும் போறியா? என நிதானமாக கேட்டாள் லக்ஷ்மி.

“இல்ல, இன்னும் முடிவு பண்ணல” என்றாள் ஜித்து குளத்தை பார்த்தபடியே.

நிஜமாகவே யாரோ தன்னை குளத்துக்குள் உருட்டுவது போல பகீரென ஆனது லக்ஷ்மிக்கு. அவள் காயம் மட்டும் ஆழமானது என புரிந்தது. கைக்குள்ளேயே வைத்து வளர்த்த குழந்தைகளை தீர்க்கமாய் அழைத்து செல்வேன் என சொல்லாமல் விட்டேத்தியாய் இருக்கிறாள்.

“எனக்கு திரும்ப பாண்டி போக விருப்பமில்லை. ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டேன். சங்குமாகிட்டயும் பேசிட்டேன். பத்து நாள் எதை பத்தியும் நினைக்காம வெய்ட் பண்ண சொன்னாங்க. எதுவாயிருந்தாலும் அடுத்த வாரம் பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

“நா மும்பை ஆபீஸ்ல பேசிட்டேன். நாலு மாசம் கழிச்சு ஜாயின் பண்ணுவேன்னு நெனைக்கிறேன். அண்ணன் அடுத்த வீக்கெண்ட் வரேன்னு சொல்லியிருக்கன். சங்குமாதான் அவன்கிட்ட பேசுனாங்க. அவன் இன்னும் என்கிட்டே பேசல. மெசேஜ் மட்டும் போட்டிருக்கான்” என இடியை இறக்கினாள் ஜித்து.

முடிவை வெளிப்படையாக சொன்னவள் இப்போது வரை அதன் காரணத்தை சொல்ல கூச்சப்படுகிறாள்.

கண்டிப்பாக ராஜுவோடு ஏதோ வருத்தம். இந்த எல்லைக்கு போயிருக்கறாள்.

நெதர்லாந்து போகும் முன் நல்லபடியாக இருந்த குடும்பம் இப்போது இந்த நிலையில் நிற்கிறது.

லக்ஷ்மி வேறு பக்கம் முகத்தை திருப்பி கண்ணை மூடிக் கொண்டாள்.

ஜித்துவை நேராய் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. 

இந்த வயதில் இந்த பொண்ணுக்கு ஏன் இந்த நிலை கடவுளே என வருந்தினாள்.    

தன் அம்மாவை நினைத்தாள் லக்ஷ்மி. இவளை கண்டிப்பாக அவர்களால் மட்டுமே தேற்ற முடியும். இவள் இந்த மனநிலையில் எடுத்த ஒரு நல்ல முடிவு இங்கு வந்தது தான்.

ஆனால் சங்கு புஷ்பம் எந்த சலனமும் இல்லாமல் இவளிடம் பேசுவது லக்ஷ்மிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் அனுபவம் அப்படி என நினைத்துக் கொண்டாள்.        

Tamil novel – Jiteswari – Part 7/21

a talk between a crow and monkey

குளத்தின் நடுவே கல் மண்டபம் இருக்கிறது. அதன் அருகே நீரில் சில மீன்கள் கம்பி ஜன்னலருகே நெடு நேரமாக குழந்தைகள் நிற்பதை கவனித்தபடி நீந்தி கொண்டிருந்தன.

பூட்டிய கேட்டை பார்த்தபடியே குழந்தைகள் ஏமாற்றமாக நின்றது குட்டி மீனுக்கு வருத்தமாக இருந்தது.

“அம்மா, ஏன்மா இப்போ கேட் பூட்டி வெக்குறாங்க? அங்க பாரு குட்டி பசங்க சேடா இருக்காங்க” என கேட்டது குட்டி மீன்.

“எல்லாம் அந்த தங்கராஜு வேலை. வர்றவங்க குப்பை போடுறாங்க, லவ்வர்ஸ் வராங்கனு ஏதேதோ காரணம் சொல்லி பூட்டி வெச்சிருக்கான். பாவம் பசங்க, விளையாட முடியாம திரும்ப போறாங்க” என்றது அம்மா மீன்.

மண்டபத்தின் மேலே அமர்ந்திருந்த காகம் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தது. சின்னதாய் பறந்து வந்து தரையில் அமர்ந்தது.

“இப்ப கேட் தொறந்தா நீ என்ன வெளில கெளம்பி போக போறியா?” என நக்கலாக குட்டி மீனிடம் கேட்டது.

வயத்தில் மூத்த காகம் என அம்மா மீன் காதில் சொல்லி குட்டி மீனை அமைதிப்படுத்தியது.

பக்கத்து மரக் கிளையில் அமர்ந்திருந்த குரங்கு இந்த மீட்டிங்கில் வந்து சேர்ந்து கொண்டது. சற்று நேரத்தில் அதற்கு அங்கே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என புரிந்தது.

பதில் வராத காரணத்தால் மீண்டும் காகம் சீண்ட தொடங்கியது.

“உங்களுக்கு என்ன வெயில் மழை கஷ்டமா? சொகுசா தண்ணில இருப்பீங்க. இங்கயே பாசி பூச்சிய தின்னு காலத்த ஓட்டிடுவீங்க. என்ன மாதிரி கோபுரம் மேல வெயில்ல காஞ்சி மழைக்கு நனஞ்சா இருக்கீங்க? தண்ணி வத்துற மாதிரி இருந்தா தங்கராஜு டேங்கர்காரன தண்ணி புல் பண்ண சொல்லிடுவான். நா நாலு தெரு பறந்து போய் எங்க வெந்த சோறு கிடைக்கும்னு அல்லாடிக்கிட்டிருக்கேன்” என நீட்டி முழக்கி பேசியது.

தூணில் சாய்ந்து உட்கார்ந்தபடி காகம் சொல்வதை கேட்டு கொண்டிருந்தது குரங்கு.

குட்டி மீனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. சொல்ல முடியாத சோகம் அதன் கண்ணில் கண்ணீராய் வழிந்தது. அம்மா மீனுக்கு தாளவில்லை.

“நீ தெக்கு கோபுரத்துல நல்ல கூடுல தானே இருக்க? என்னவோ வெந்த சோறு மட்டும்தான் சாப்புடுறேன்னு கதவுடுற. நல்லா வடை, சக்கரபொங்கல்னு வகை வகையா சாப்புடுற. எங்கள வந்து குறை சொல்லுற” என காகத்தை தாளித்தது அம்மா மீன்.

“இது காலைல மெனு. மத்தியானம் பஜார் பக்கம் போய் தள்ளு வண்டி கடை பக்கத்துல தான் ஐய்யாக்கு டியூட்டி. சிக்கன் ரைஸ், பிரைட் பிஷ்னு ஒரு ஒரு புடி புடிப்பார்” என்றது குரங்கு.

“அப்புறம் ஐயா இப்போ தெக்கு கோபுரத்துல இல்ல. வடக்கு கோபுரத்துக்குப் போயிட்டார்” என எக்ஸ்ட்ரா டீடைலை சொன்னது மாருதி.

காகம் தொக்காக மாட்டிக்கொண்டது. என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.

“ஆமா, நா மட்டும் தான் சக்கர பொங்கல் சாப்பிடுறேனா? எனக்கே நாலு தொன்னை தள்ளி அஞ்சாவது தொன்னைல தான் கொஞ்சூண்டு கெடைக்குது. நம்ம கணேசன் அண்ணனை பாருங்க, வெல்லம், சோறு, புல்லுனு ராயலா இருக்காரு” என கோவில் யானையை கோர்த்து விட்டது.

தன் மீது ஒரு குறை சொன்னால் அடுத்தவரோடு கோர்த்துவிடும் மனித புத்தி காகத்துக்கும் தொற்றிக் கொண்டது.

“இப்போ என்ன, அந்த பையன் பொரி போட்டு விளையாடி இருப்பான். நீங்களும் வயறு முட்ட தின்னுட்டு ஆட்டம் போட்டு இருப்பீங்க. கேட்டு பூட்டி இருக்கவே உங்களுக்கு காண்டா இருக்கு. அதுக்கு ஏன் என்ன கழுவி ஊத்துறீங்க?” என பிளேட்டை திருப்பி போட்டது காகம்.  

பாதிக்கப்பட்டவைர்களையே பழி போட்டு ஏளனப்படுத்தும் ஈனபுத்தியையும் தவறாமல் கற்றுக் கொண்டு இருக்கிறது என நினைத்தது குரங்கு.

காகத்தின் வார்த்தைகள் மீன்களின் தன்மானத்தை சீண்டியது.

“கொஞ்சம் நிறுத்தறியா” என்றபடி மீட்டிங்கில் சேர்ந்து கொண்டது பாட்டி மீன்.

“நீ ஏன் வடக்கு கோபுரத்துல போய் கூடு கட்டுன?” என காகத்திடம் கேட்டது.

இந்த கேள்வியை காகம் எதிர்பார்க்கவில்லை.

“அங்க ஒரே சத்தமா இருக்கு. அந்த பக்கம் ப்ளைஓவர் கட்டுறாங்க. டஸ்டும், லொட்டு லொட்டுனு சவுண்டும் நாராசமா இருக்கு. இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமாம் முடிக்க. அது வரை யார் அந்த எடத்துல இருக்குறது. அதான் வடக்கு கோபுரத்துக்கு போயிட்டேன்” என்றது காகம்.

“அது மட்டும் தான் காரணமா?” என கூர்மையாக கேட்டது பாட்டி மீன்.

குரங்குக்கு பாட்டி மீன் கேட்ட கேள்வியின் சூட்சுமம் புரிந்தது. அமைதியாக காகத்தின் பதிலுக்கு காத்திருந்து.

காகம் சில நொடிகள் மெளனமாக இருந்தது.

“இல்ல, தெக்கு கோபுரம் பக்கத்துல மொபைல் டவர் இருக்கு. இஎம்எப் ரேடியேஷன் அதிகமா இருக்கு. என் ஒய்ப்புக்கு கருமுட்டை பிரச்சினை வந்துடிச்சி. இந்த சாமிய வேண்டாத நாளில்லை ஒரு வாரிசை குடுக்க சொல்லி. எங்க அப்பா அம்மாக்கும் திசையறிஞ்சு பறக்குறதுல குறைபாடு வந்துடிச்சி. பக்கத்துல எங்க அக்கா ஊருக்கு போய் பார்த்துட்டு வரதுக்கு அவ்ளோ தடுமாறுறாங்க. ரேடியேஷனால அவங்க பறக்குற திறனும் பாதிக்கப்பட்டிருக்கு. ஒரு நாள் தள்ளு வண்டி பக்கத்துல உக்காந்து சாப்பிடும் போது எப் எம் ரேடியோல மொபைல் டவர் ரேடியேஷன் பத்தி சொன்னாங்க. அப்போ தான் எனக்கும் எங்க பிரச்சினைக்கு காரணம் புரிஞ்சுது. எங்க அம்மா கூட வாஸ்து சரி இல்ல, கூட்ட கொஞ்சம் மாத்தி கட்டுனு பொலம்பிகிட்டு இருந்தாங்க” என ஆதங்கத்தை கொட்டியது காகம்.

“அப்ப வாஸ்து பிரச்சினை இல்ல, டவர்ல இருந்து வர்ற வஸ்து தான் பிரச்சினை” என டிக்ளேர் செய்தது குரங்கு.

“ஆமா, வடக்கு கோபுரம் போனப்புறம் கொஞ்சம் எக்ஸ்போஷர் கம்மியா இருக்கு” என சொன்னது காகம்.

“இஎம்எப் ரேடியேஷன்னா என்ன?” என கேட்டது குட்டி மீன்.

“எலக்ட்ரோ மேக்னடிக் பீல்டு ரேடியேஷன்” என சொன்னது காகம்.

“அது தியரி. பாதிக்கப்பட்டவங்களுக்கு இஎம்எப் ரேடியேஷன்னா, “என்னா மயிருக்கு பிரீ ரேடியேஷன்னு” அர்த்தம். கார்போரேட்டுங்க லாபம் சம்பாதிக்க கால், மெசேஜ், இன்டர்நெட்டுனு பிரீயா குடுத்து மனுஷங்களையும்,பறவைங்களையும் கொல்லுறானுங்க. இந்த பைத்தியங்க பிரீ கால்னு பொழுதுக்கும் பேசி எல்லாரையும் ரேடியேஷனுக்கு எக்ஸ்போஸ் பண்ணுறாங்க” என கோபமாய் சொன்னது குரங்கு.

“எதுக்கு வடக்கு கோபுரம், பேசாம எங்கயாவது ஊர் பக்கம் போக வேண்டியது தான? அதான் அங்க இருந்து நெறய ஆளுங்க இங்க வந்துட்டாங்களே, அங்க டவர் நெறய இருக்காது, நீங்க அங்க போய் சேபா இருக்க வேண்டியது தானே?” என விடாமல் கேட்டது பாட்டி மீன்.  

காகத்துக்கு தான் வாலண்டரியாய் வந்து வண்டியில் ஏறியது புரிந்தது.

“நீங்க என்னை ஊர விட்டே போகவா சொல்றீங்க?” என கான்டெக்ஸ்ட் புரிந்தும் வீம்பாய் கேட்டது.

“உசுருக்கே உத்தரவாதம் இல்ல, இதுல இந்த ஊர் தான் முக்கியமா?” என ஒரு போடு போட்டது பாட்டி மீன்.

கோபுரத்தில் கூடு கட்டுவது சாதாரண காரியமில்லை. பருந்து, வௌவால் என பெரிய கைககள் இருக்கும். இடம் கிடைப்பதே அரிது. காகத்துக்கு இங்கிருந்து போக மனமில்லை. உணவுக்கு பெரிதாய் அலட்டிக் கொள்ள வேண்டாம். பிரசாத பிளேட்டுகள், பொங்கல் வைப்பவர்கள் தருவது, அன்னதான கூடம் என முழு குடும்பமும் நோகாமல் வேலையை முடித்து விடும்.

ஊருக்கு போய் சேர்த்தால் ஏதாவது பழம் கொட்டை என தின்று தான் வாழ வேண்டும். பழைய கஞ்சியை கூட வீணாக்காமல் குடித்து சுத்தமாக புழக்கடையில் பாத்திரங்கள் இருக்கும். சோற்று பருக்கையை நல்ல நாளில் தான் பார்க்க முடியும். 

 “சாவு எல்லாருக்கும் ஒரு நாள் வரத்தான் போகுது. ஏதோ நல்லதா நாலு வாய் தின்னுட்டு சாகணும். ஊர்ல போய் என்னத்த சாப்புட? அமாவாசைக்கு மட்டும் தான் சோறு போடுவாங்க. மத்த நாள் பூவாவுக்கு என்ன பண்றது”? என ஓபனாய் விஷயத்தை சொல்லியது. 

 “ஏன் கேட்டேன்னா, சோறு ஒரு மேட்டர் இல்ல. உனக்கு ஒரு ரிஸ்குன்னா உன் உசுரை காப்பாத்திக்க நீ இடம் மாறுற. தெக்கு கோபுரத்திலேர்ந்து டவர விட தூரமா இருக்குற வடக்கு கோபுரத்துக்கு போயிட்ட. ஆனா எங்க நெலமைய யோசிச்சு பாரு. கொளத்துல ஒரு பிரச்சினைன்னா நாங்க எங்க போறது. இங்கயே இருந்து சாக வேண்டியதுதான். ஆத்துலயோ கடல்லியோ இருந்தோ எங்கயாவது வேற இடத்துக்கு நீந்தி போய் பொழச்சிக்குவோம்” என நிதானமாய் சொன்னது பாட்டி மீன்.

“நீ எப் எம் கேட்டு விவரமா வீடு மாறிட்ட. எங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கு? ஏதோ கோவிலுக்கு வர்றவங்க வந்து படித்தொரையில உக்காந்து கத பேசினா ஏதாவது விஷயம் தெரியும். இப்ப பாரு, பொழுதும் போகாம, நாட்டு நடப்பு எதுவும் தெரியாம மக்கு மாதிரி இருக்கோம்” என தொடர்ந்தது.

குளத்தின் நிலையை அறிந்த குரங்கு சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டது. பெருசு சொல்வது உண்மைதான் என்பது போல தலையாட்டியது.

“நீ நாலு இடத்துக்கு பறக்கிற. பொழுதுக்கும் எங்கயாவது ஏறி உக்காந்துகிட்டு பராக்கு பாக்குற. போதாக்கொறைக்கு இந்த ஜனங்க வேற கா கானு கூப்புட்டு உனக்கு சோறு போடுறாங்க. உனக்கு எங்க கஷ்டம் எப்படி புரியும்?” என பொரிந்து தள்ளியது அம்மா மீன்.

மாமியாரும் மருமகளும் செட்டு சேந்துட்டாங்க. இந்த இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என எண்ணியது காகம். 

“லன்ச் டைம் ஆச்சு. இன்னைக்கு ஒரு தெவச வீட்டுக்கு போகணும். சாயங்காலம் வர்றேன்” என சொல்லி இடத்தை காலி செய்தது காகம்.

பிறகு குரங்கும் தண்ணீரில் குதித்து நீந்தியபடியே படித்துறை பக்கம் போனது.

‘என்னடி அந்த ஆம்பள காக்கா, கொரங்கு கூட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்க?” என்றபடி முறைத்தது கிழட்டு மீன்.

“உனக்கு நல்ல சாவு வரும்னு மட்டும் நினைக்காதே. ஏலம் எடுத்தவன் அடுத்த வாரம் வருவான். நீதான் மொதல்ல மாட்ட போற. உப்புகாரம் தடவி சூடா பொறிச்சி மொடாக்குடிகாரனுக்கு சைட் டிஷ்ஷா போக போற.

செத்தப்புறமும் ஆல்கஹால்ல மெதந்து ஜீரணம் ஆகாம வாந்தியா நாறி போக போற. பொம்பளைங்கள தப்பா பேசுனவனுங்க நல்ல கதி காண மாட்டானுங்க” என திட்டி தீர்த்தது பாட்டி மீன்.

சற்று நேரம் கழித்து கையில் ஒரு பொரி பாக்கெட்டோடு வந்த குரங்கு சரக்கென்று பிரித்து நீரில் கொட்டியது.

Monkey sitting in temple

“குட்டிமா, வா வா வந்து சாப்புடு” என அழைத்தது.

குட்டி மீன் அமைதியாக இருந்தது. “போய் சாப்பிடு” என்றது பாட்டி மீன்.

பிறகு குரங்கிடம் “இந்த பொரிக்காக தான் நாங்க ஏங்கி இருக்கோம்னு நீயும் நெனைக்குறியா மாருதி?” என மெதுவாக கேட்டது.

 குரங்கு தலையை குனிந்து கொண்டது.

“உங்க கஷ்டம் எனக்கு தெரியும் மச்சிமா. என்னால உங்களுக்கு இதை தான் பண்ண முடியும். அந்த தங்கராஜு பய பூட்டு போட்டதுல இருந்து நீங்க அப்செட்டா இருக்கீங்க. பப்ளிக் யாரையும் பாக்க முடியல. டெய்லி அந்த அய்யறு மட்டும் வந்து முங்கிட்டு போறாரு. அவரு கோவணத்தையே எத்தனை நாளு தரிசிக்குறது?” என ஆறுதல் சொன்னது மாருதி.

“என்னை விடு மாருதி. நா வயசானவ. எல்லாத்தையும் பாத்துட்டேன். இந்த குட்டிங்க எல்லாம் லாக்டவுன் சமயத்துல பொறந்துதுங்க. கோவில்ல ஜன நடமாட்டமே ரெண்டு மூணு வருஷமா கெடயாது. இப்பதான் கொஞ்ச நாளா பெரியவங்க, குழந்தைங்க, புருசன் பொண்டாட்டி ஜோடிங்க எல்லாரும் வந்து படித்தொரையில உக்காந்து பேசிட்டு போறாங்க. புள்ளைங்களும் அவங்கள பாத்து விளையாடி சந்தோஷமா இருக்குங்க. இந்த தங்கராஜு கேட்ட பூட்டுனதுல இருந்து அதுங்க ரொம்ப வருத்தமா இருக்குங்க” என வேதனையை கொட்டியது பாட்டி மீன்.

“கரெக்ட்டு தான் மச்சிமா. நாங்களாவது நாலு இடம் சுத்துறோம். ஆளுங்கள பாக்குறோம். பொழுது போயிடுது. நீங்க பாவம், என்ன பண்ணுவீங்க? அந்த காக்கா வெவரம் புரியாம பேசுது. மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க” என பாசமாய் சொன்னது மாருதி.

“அந்த பய கையில பொரி வச்சிருந்தான் உங்களுக்கு குடுக்க. கேட்டு மூடி இருக்கவே போய்ட்டான். பாவம், நம்ம குட்டிமாவும் டல்லா இருந்துதா. அதான் வெளில போய் ஒரு பாக்கெட்டை தூக்கிட்டு வந்துட்டேன்” என விளக்கியது மாருதி.

“ஏன் மாருதி தூக்கிட்டு வந்த? தப்பில்லையா?’ என கேட்டது மச்சிமா.

“ஒரு தப்பும் இல்ல மச்சிமா, சாமி பேரையும் நம்ம கோவில் பேரையும் சொல்லி இவனுங்க எவ்வளவு கொள்ளையடிக்குறானுங்க. பாடாவதிப் பசங்க” என திட்டி தீர்த்தது மாருதி.

“ஏன் மாருதி, சாமி அவங்க கண்ணை குத்தாதா?” என கேட்டது குட்டி மீன்.

“கண்ணை குத்தி என்ன பிரயோஜனம்? அப்புறம் சாமி காப்பாத்துன்னு அவருகிட்ட தான் போய் நிப்பாங்க. அதனால அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி குடுப்பாரு. அப்புறம் குறைந்த பட்ச நியாயமா வேலை செய்வாங்க” என சொன்னது மாருதி.

“எப்போ இவங்களுக்கு நல்ல புத்தி குடுப்பாரு இந்த கொளுத்து கேட்ட தொறக்க?” என ஆர்வமாய் கேட்டது குட்டி மீன்.

“அது சாமிக்கு தான் தெரியும்” என முடித்தது மாருதி.

Tamil novel – Jiteswari – Part 6/21

Children looking at locked temple tank

ஜித்து நெதர்லாந்தில் இருந்து திரும்ப வந்து சென்னையில் சங்கு புஷ்பம் வீட்டில் போய் தங்கினாள். லக்ஷ்மியும் குழந்தைகளும் வர வீடு கலகலப்பாக இருந்தது.

அன்று மாலை ஜித்துவும் லக்ஷ்மியும் மார்க்கெட்டுக்கு போக, நேசப்பா புஷ்கரையும் கல்யாணியையும் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

சாமி கும்பிட்டு வெளியே சுற்றி குளமருகே வந்தார்கள். குளம் பூட்டி இருந்தது. கம்பி வழியாக உள்ளே எட்டி பார்த்தார்கள்.

“தாத்தா, நெறய பிஷ் இருக்குல்ல” என சொன்னான் புஷ்கர்.

“ஆனா உள்ள போக முடியாதே” என வருத்தப்பட்டது கல்யாணி.

குளம் நிறைய நீர் இருந்தது. ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் மரகத பச்சை நிறமாகவும், சற்று தள்ளி இருந்து பார்த்தால் நீல பச்சையாகவும் இருந்தது.

“தாத்தா, ஏன் இந்த தண்ணி க்ரீன் கலர்ல இருக்கு? என கேட்டது கல்யாணி.

“இந்த கொளத்துல பாசி அதிகமா இருக்குமா. அதான் க்ரீன் கலர்ல இருக்கு. அதனால தண்ணியும் க்ரீனா தெரியுது” என்றார் நேசப்பா.

“ஏன் பாசி அதிகமா இருக்கு?” என அடுத்த கேள்வி வந்தது.

“இந்த தண்ணி புளோ ஆகாதுமா. நிலத்தடி தண்ணியோட மழை தண்ணியும் சேர்ந்து இங்கயே தான் இருக்கும். பக்கத்துல எவ்ளோ பெரிய மரம் இருக்கு பாரு. அதுலேர்ந்து விழுற இலையெல்லாம் தண்ணில விழும். அது இந்த பாசி அல்கெக்கு எல்லாம் நல்ல உரமா மாறிடும். அப்போ இன்னும் அதிகமா வளரும்” என விவரித்தார் நேசப்பா.

“அப்போ இது டர்ட்டி வாட்டரா? என்றான் புஷ்கர்.

“இல்லப்பா. இது நல்ல தண்ணி தான். கோவில்காரங்க இன்னும் கொஞ்சம் பராமரிப்பு செஞ்சா க்ளீனாய்டும்” என்றார் நேசப்பா.

“என்ன செஞ்சா க்ளீனாகும்? என கேட்டது கல்யாணி.

“ரெகுலரா பராமரிக்கணும்மா. பாசி ஆல்கேவெல்லாம் ரிமூவ் பண்ணனும். அந்த மரத்துக்கு கீழ கொளத்து பக்கம் கொஞ்சம் நெட்டு போடலாம். இலை குச்சியெல்லாம் தண்ணில விழாது. ரெகுலரா பிரெஷ் தண்ணிய பம்பு வச்சி கொளத்துக்கு அனுப்பனும்” என தனக்கு தெரிந்ததை சொன்னார் நேசப்பா.

“இதெல்லாம் சாமி பாக்காதா தாத்தா? இது அவர் வீடு தானே? என தெளிவாய் கேட்டது கல்யாணி.

துணுக்குற்று போனார் நேசப்பா.

“ஏண்டி, சாமி என்ன பண்ண முடியும்? கோவில் ஆளுங்க தான் மெயின்டெயின் பண்ணணும்” என பதில் சொன்னான் புஷ்கர்.

“அவங்க வேலைய ஒழுங்கா செய்யலேன்னா கண்ணை குத்தலாம்ல சாமி” என குண்டைப் போட்டது கல்யாணி.

“ஏன் தாத்தா, சாமி அவங்க கண்ணை குத்தாதா?” என தொடர்ந்தான் புஷ்கர்.

 நேசப்பா சற்று யோசித்தார்.

“கண்ணை குத்தி என்ன பிரயோஜனம்? அப்புறம் சாமி காப்பாத்துன்னு அவருகிட்ட தான் போய் நிப்பாங்க. அதனால அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி குடுப்பாரு. அப்புறம் ஒழுங்கா வேலை செய்வாங்க” என சொன்னார்.

“எப்போ இவங்களுக்கு நல்ல புத்தி குடுப்பாரு இந்த கொளுத்த க்ளீன் பண்ண?” என விடாமல் கேட்டது கல்யாணி.

“அது சாமிக்கு தான் தெரியும்” என முடித்தார் நேசப்பா.

அந்தி சாயும் வேளை. இளம் சூடான மெல்லிய கதிர்கள் நீரின் மேல் பட்டு அன்றைய நாளுக்கான இறுதியில் விடை பெற்றுக்கொண்டன.

ஏற்கெனவே பெரிதாக சலனமில்லாமல் இருக்கும் குளம், அடுத்து வரும் இரவுக்கு மெளனமாக தயாரானது. சூரிய கதிர்கள் இரக்கமே இல்லாமல் குளத்தின் மேலிருந்த அழகான பச்சை கம்பளத்தை வாரி சுருட்டிக் கொண்டு கிளம்பியது.

வண்ணத்தை இழந்த வருத்தமில்லாமல் குட்டி அணில் போட்ட சிறு கொட்டையில் தளும்பி தளும்பி சந்தோஷப்பட்டது குளம். சற்று நேரத்தில் மெதுவாக எட்டிப் பார்த்த நிலா கருமையான குளத்தின் மேல் தன் ஒளியை பாய்ச்சியது. அடர் நீலமாக மாறிய குளம் அங்காங்கே வெள்ளி பிரகாசத்தை தெளித்தது.

“தாத்தா எனக்கு பிஷ் பாக்கணும். எப்போ கேட்டு ஓப்பன் பண்ணுவாங்க?” என ஆசையாய் கேட்டான் புஷ்கர்.

“ஆமா தாத்தா. எனக்கும் உள்ள போய் பாக்கணும்னு ஆசையா இருக்கு” என சொன்னது கல்யாணி.

நேசப்பா சுற்றி பார்த்தார். போர்டு எதுவும் இல்லை.

“வாங்க, ஆபீஸ் ரூம்ல போய் கேக்கலாம்” என அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

“சார், கொளம் எப்போ சார் தொறப்பீங்க?” என கேட்டார் நேசப்பா.

பைலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

children asking question to temple officer

“சார், காலைல ஆறு டு ஏழு தொறப்போம். அய்யர் வந்து வேலைய முடிச்சிட்டாருன்னா பூட்டிடுவோம். பப்ளிக் உள்ள போக முடியாது” என்றார் ஆபீசர்.

“அப்போ பிஷ்ஷு வெளில வருமா எங்கள பாக்க?” என மெதுவாய் கேட்டது கல்யாணி.

சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்து மேலும் கீழும் பார்த்தார் ஆபீசர்.

டேபிளை விட சற்று அதிக உயரம் தான் இருந்தது கல்யாணி.

எழுதி கொண்டிருந்த பேனாவை மூடி வைத்தார். பக்கத்தில் இருந்த சேரை காட்டி அவர்களை உட்கார சொன்னார்.

“இல்லமா, கோவிலுக்கு ஜனங்க நெறய வராங்க இல்ல. அவங்க கொண்டு வர பொருளால நெறய குப்பை கொளத்துல சேருது. அப்புறம் கவனிக்குறைவா இருந்தாங்கன்னா தவறி விழுந்துடுவாங்க. அதனால தான் பூட்டி வச்சிட்டோம்” என விளக்கினார் ஆபீசர்.

“ஆனா தண்ணி ஏன் டர்டியா இருக்கு? பூட்டியே இருந்தா அது கிளீனா தான இருக்கணும்” என கேட்டான் புஷ்கர்.

பங்கமான கேள்வி. அவமானமாக இருந்தது ஆபீஸருக்கு.

“சாமி இன்னும் புத்தி குடுக்கலண்ணா கிளீன் பண்றதுக்கு” என சுருக்கமாய் சொன்னது கல்யாணி.

இப்போது பெருத்த அவமானமாக இருந்தது ஆபீஸருக்கு. சங்கடமாய் நெளிந்தார்.

“நாளைக்கு காலைல வா பாப்பா. சாவி வாங்கி வெச்சுருக்கேன்” என்றார் ஆபீசர்.

“தேங்க்ஸ் அங்கிள்” என சொல்லி புறப்பட்டார்கள் இருவரும்.