
சனிக்கழமை மாலை ஜித்துவும் ராஜுவும் கோவிலுக்கு கிளம்பினார்கள். அது அந்த ஏரியாவில் மிகப் பெரிய கோவில். உள்பிரகாரம் ஒரு சுற்று சுற்றினாலே ஒரு கிலோமீட்டர் இருக்கும். சாமி பார்த்தபிறகு மூன்று சுற்று சுற்றிவிட்டு குளத்தின் அருகே வந்தார்கள். சற்று நேரம் படித்துறையில் உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது ஜித்துவுக்கு.
குளம் பூட்டி இருந்தது. “என்ன ராஜு குளம் பூட்டி இருக்கு?” என்றாள் ஜித்து.
“இரு போய் ஆபீஸ்ல கேக்குறேன்” என்றபடி போனான் ராஜு.
“காலைல ஒரு மணி நேரம் மட்டும் தான் திறந்து இருக்குமாம்” என்றான் திரும்ப வந்து.
“சரி வா, அந்த பெஞ்சுல உக்காரலாம்” என அழைத்தான்.
காற்று நன்றாக வீசியது. பிளாஸ்கில் இருந்த வெந்நீரை கொஞ்சம் குடித்தாள் ஜித்து.
“டெலிவெரிக்கு அப்புறம் எங்க இருக்குறது ராஜு? உனக்கு என்ன பிளான்?” என நேராய் விஷயத்தை ஆரம்பித்தாள் ஜித்து.
“உனக்கு ஆபீஸ் இங்கதானே. இங்கயே இரு. டெலிவரி ஆனதும் பாண்டிக்கு வந்துடு. மெட்டர்னிட்டி லீவு வரை அங்க இரு. ரீஜாயின் பண்ணும்போது இங்க வந்துடு. துணைக்கு வேணும்னா அம்மாவை வர சொல்றேன்.
ஆன்ட்டியால தனியா சமாளிக்க முடியாது. எங்க அம்மாவும் தனியா பாத்துக்க கஷ்டப்படுவாங்க. எல்லாரும் ஒண்ணா இருந்தா மாற்றி மாற்றி பாத்துக்கலாம்” என்றான் ராஜு.
பாதி பிரச்சினை தீர்ந்தார் போல இருந்தது ஜித்துவுக்கு. “அத்தை வருவாங்களா? மாமா என்ன சொல்லுவாரு” என கேட்டாள்.
“அப்பா கொஞ்சம் யோசிப்பாரு. பார்மாலிட்டி பாப்பாரு. அம்மாவுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஜித்துவ நா பாத்துக்கறேன்னு சொல்லிட்டே இருக்காங்க. குட்டிய விட்டு அவங்களால இருக்க முடியாதாம்.
நீயும் அப்பாவும் பாண்டில இருங்க. நா ஜித்து கூட போய் இருக்கேனு சொல்றாங்க” என சிரித்தான் ராஜு.
இரண்டு நாள் பாடாய்படுத்திய மன உளைச்சல் நீங்கியது போல இருந்தது ஜித்துவுக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லி கண் மூடி அமர்ந்திருந்தாள்.
இரண்டு நிமிடம் கழித்து “தேங்க்ஸ் ராஜு” என்றாள்.
“எனக்கு என்ன காரெடுத்தா மூணு மணி நேரத்துல வந்துடுவேன். உங்க எல்லாரையும் வீக் டேஸ்ல மிஸ் பண்ணுவேன். உனக்கும் அப்படித்தானே. என்ன பண்றது? எனக்கு ட்ரான்ஸ்பர் ஆக முடியாது. உனக்கும் அங்க வர வாய்ப்பு இல்ல. தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணோம்” என்றான்.
ஆக கணவன் மனைவி இருவரும் அவர்கள் நிலையை தெளிவாக உணர்ந்து இருந்தார்கள். பரஸ்பரம் தங்கள் வேலையை காப்பாற்றிக்கொண்டும் அதே சமயம் மற்றவர் வேலை பாதிக்காத வண்ணம் எப்படி வாழ்வது என்று யோசித்து இருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டில் சில சங்கடங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அத்தனையையும் எதிர் நோக்கித்தான் இந்த பந்தத்தில் இணைந்திருக்கிறோம் என்ற புரிதல் இருந்தது.
கணவன் மனைவி உறவிலும், குழந்தை வளர்ப்பிலும் இந்த முடிவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரிந்து வைத்திருந்தார்கள். கூடிய மட்டும் என்ன செய்து அந்த தாக்கத்தை குறைப்பது என பேச ஆரம்பித்தார்கள்.
“அம்மா உங்க வீட்ல இருக்குறது அசௌகர்யமா இருக்கும்னு எங்க வீட்ல பீல் பண்ணா பக்கத்துலயே தனியா ஒரு வீடு எடுத்துக்கலாம். அப்பாவுக்கு இன்னும் ஒரு வருஷம் தான் சர்வீஸ் இருக்கு. ரிட்டயர்டு ஆகிட்டா அங்க வந்து உங்களோட இருக்கட்டும். என்ன நா பாத்துக்குவேன்” என தெளிவாய் சொன்னான் ராஜு.
ராஜுவின் போக்கு இலகுவானது. பெரிதாய் எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டான். பரபரப்பே இல்லாமல் எப்போதும் ஒரு நிதானத்தோடு நடந்து கொள்பவன். ஜித்துவுக்கு ராஜுவின் அணுகுமுறை ஆதரவாக இருந்தது.
கற்பகம் வீசிய கடும் சொற்களின் காயம் சற்று ஆறியது போல இருந்தது.
ஆனாலும் இவர்களை அசைத்துப்பார்க்கும் பல பேச்சுகளையும் நிகழ்வுகளையும் எதிர் கொள்ள கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.
வீட்டுக்கு வந்ததும் “பேசிட்டியா? என்ன சொன்னார்” என கேட்டார் கற்பகம்.
“நீ பதறுற மாதிரி ஒரு சிச்சுவேஷனும் இல்ல. கொஞ்ச நாள் பேசாம இரு. ராஜு பாத்துப்பான்” என சொல்லி முடித்தாள்.
கற்பகத்துக்கு ஆர்வம் தாளவில்லை.
“என்ன தான் முடிவு பண்ணீங்க” என திரும்ப கேட்டார்.
“மா, அமைதியா இரு. முடிவு பண்ற நேரம் வரும் போது பாத்துக்கலாம். எல்லாத்தையும் ஒரே நாள்ல எங்களால சரி பண்ண முடியாது. எல்லாரையும் திருப்திபடுத்தவும் முடியாது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். என்னால உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. மாமாகிட்ட நீங்க பதில் சொல்ற நெலமைய நா விடமாட்டேன். நானோ இல்ல ராஜுவோ அவர்கிட்ட பேசுறோம்” என நாசூக்காய் சொல்லி முடித்தாள்.
இரண்டு வாரம் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. மொத்த குடும்பமும் கூடி கொண்டாடி தீர்த்தார்கள். ஒரு மாதம் ஆனது அவர்களின் கவனம் ஜித்துவின் பக்கம் வர.
ஜித்துவும் குழந்தையும் இரண்டாவது வாரமே பாண்டிச்சேரி வந்து விட்டார்கள். தினம்தோறும் யாராவது ராஜு வீட்டு உறவினர்கள் வந்து பார்த்து விட்டு போனார்கள். போகும் பொது ஏதாவது ஒரு கேள்வியை கேட்டு விட்டு போவார்கள்.
“லீவ் முடிஞ்சி அங்க போய்டுவியா?”
“இங்க வேல கிடைக்காதா”?
“எவ்ளோ நாள் இப்டியே பிரிஞ்சி இருப்பீங்க? குழந்தை ஏங்கி போயிடுவான்”
“காசு பணம்னு இருந்தா நாளைக்கு திரும்பி பாத்தா ஒண்ணும் இருக்காது”
“படிச்சவங்க நீங்க. உங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு. ஆனா வயசான தாத்தா பாட்டி, நீ குழந்தைய தூக்கிட்டு போயிட்டா ஏங்கிடுவாங்க”
ஆளாளுக்கு ஒரு பாயிண்டை போட்டுவிட்டு போனார்கள்.
ஓவ்வொருவர் வரும்போதும் குமரேசன் பைபாஸ் ரோடு காலேஜ் ஆப்ஷனை எடுத்து வைப்பார்.
“அட ஆமால்ல. அது உங்க வீட்டுக்கு ரொம்ப பக்கமாச்சே. ஏம்மா ஜிதேஸ்வரி நீ ஏன் இங்கயே காலேஜுல வேல பாக்க கூடாது?” என விஷயம் தெரியாமல் ஒரு பிட்டை போடுவார்கள். ஜித்துவுக்கு ஆறு மாதம் கழித்து சென்னை போவோம் என்ற நம்பிக்கை கொஞ்ச நாளில் போனது.
ராஜூவுக்கும் ஜித்துவுக்கும் இது பெரும் தலைவலியாக இருந்தது.
பேசாமல் ஜித்து அங்கேயே இருந்திருக்கலாம். நாம சொல்லவேதான் இங்க வந்தா. இப்ப வர்றவங்க போறவங்க எல்லாரும் அவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறாங்க” என வருந்தினான் ராஜு.
“நீ ஒண்ணும் கவலைப்படாதே. நா அம்மாகிட்ட பேசிட்டேன். அவங்களும் உன் கூட வர ரெடியா இருக்காங்க. அப்பாவை நா சமாளிச்சுக்குறேன். கெஸ்டுங்களுக்கு என்ன தெரியும் நம்மள பத்தி. பேசிட்டு போகட்டும் விடு” என சமாதானப்படுத்தினான் ராஜு.
ஐந்து மாதங்கள் ஆனது. இன்னும் ஒரு மாதம் தான் இருந்தது வேலைக்கு போக.
“அப்பா, அடுத்த மாசம் ஜித்து ஆபீஸ் போகணும். சென்னைல தனியா வீடு பாக்க ஆரம்பிக்கணும். அம்மா கூட போய் இருக்கட்டும்” என ஆரம்பித்தான் ராஜு.
“பைபாஸ் ரோடு” என இழுத்தார் குமரேசன்.
“அப்பா ப்ளீஸ்ப்பா, இது என் டெஸிஷன்” என சுருக்கமாய் முடித்தான் ராஜு.
காமாட்சியும் ராஜுவும் சென்னைக்கு போவதில் உறுதியாக இருந்தார்கள். வேண்டாவெறுப்பாக வீட்டில் வலம் வந்தார் குமரேசன்.
அடுத்த இரண்டு வாரத்தில் வீடு பார்த்து ஒரு நல்ல நாளில் பால் காய்ச்சினார்கள். எவ்வளவு கூப்பிட்டும் குமரேசன் போகவில்லை.

ஜித்துவின் பெற்றோருக்கு தர்மசங்கடமாக இருந்தது.
ஆனால் ராஜுவும் காமாட்சியும் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.
ஜித்துவை மும்பையிலிருந்து வரவழைக்க அம்மாவும் பிள்ளையும் பட்டபாடு அவர்களுக்கு தான் தெரியும்.
ரொம்பவும் அவளை பாடுபடுத்தினா, திரும்ப மும்பைக்கே போறேன்னு சொல்லிட்டாள்னா என்ன பண்றது என்ற பயம் இருவருக்கும் இருந்தது. அந்த பயத்திற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.
ராஜூவை விட இப்போதே அறுபது சதவிகிதம் அதிக சம்பளம் ஜித்துவிற்கு. மும்பை போனால் கண்டிப்பாக மூன்று வருடங்களில் வெளிநாட்டு பணிக்காக அவர்களே அனுப்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே சென்னையில் அவளை தொடர அனுமதிப்பது தான் தங்களின் எதிர்காலத்துக்கு நல்லது என கருதினான் ராஜு.
அதை காமாட்சிக்கும் புரிய வைத்த பிறகு அம்மாவும் பிள்ளையும் ஜித்துவை முடிந்த வரை குமரேசன் எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டனர்.
காமாட்சி குழந்தையை பார்த்துக் கொள்ள, வீட்டு வேலை செய்ய தனியாக ஒரு பெண்மணியை அமர்த்திக்கொண்டாள் ஜித்து. புஷ்கர் பிறந்து ஒரு வருடம் ஆனது. குமரேசன் தவிர மற்ற மூவரும் இந்த ஏற்பாட்டில் சுமுகமாக இருந்தார்கள்.
சொல்லப் போனால் காமாட்சிக்கு சென்னையில் இருப்பது பாண்டியை விட வசதியாக இருந்தது. வீட்டு வேலையை பணிப்பெண்ணும் கடை மற்றும் வெளிவேலைகளை ஜித்துவும் பார்த்துக் கொள்ள காமாட்சிக்கு ஓய்வும் நன்றாக கிடைத்தது.
அடுத்த வருடம் பணி ஓய்வு பெற்ற பிறகு சென்னைக்கு போய் தங்குவதில் குமரேசனுக்கு உடன்பாடில்லை. என்ன சொல்லி தவிர்க்கலாம் என யோசித்தார். ஓய்வு பெற்ற பிறகு ஹார்டுவேர் கடை துவங்கலாம் என முடிவெடுத்தார்.
வீட்டின் முன் பகுதியில் இருந்த ரூமை சற்று விரிவுபடுத்தி தெரு பக்கம் இருந்த காலி இடத்தோடு சேர்த்து ஒரு கடையாக மாற்றினார். ஆறு மாத காலத்தில் கட்டிட வேலை முடிந்து ஹார்டுவேர் கடை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய ஆரம்பித்தார்.
வீம்புக்கு குமரேசன் செய்யும் வேலைகள் காமாட்சிக்கு வருத்தத்தை கொடுத்தது. ஒரே மகள் ஆந்திராவில் வசிக்க மகனுடைய குடும்பத்தோடு தங்காமல் வீண் பிடிவாதமாக அங்கேயே இருப்பது எரிச்சலாய் இருந்தது.
காமாட்சி அந்த காலத்திலேயே ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். திருமணமான சில ஆண்டுகளில் அரசாங்க வேலையும் கிடைக்கும் சூழல் இருந்தது. குமரேசன் தனியார் பாக்டரிலயில் வேலை செய்து கொண்டிருந்தார்.
மனைவிக்கு அரசாங்க வேலை கிடைத்தால் தன்னை விட அதிக வருமானமும் சமூகத்தில் நல்ல அங்கீகாரமும் கிடைக்கும். காலம் முழுக்க தான் ஒரு படி கீழ் நிலையில் ஏன் இருக்க வேண்டும் என நினைத்தார்.
குமரேசனும் அவரின் தாயாரும் காமாட்சி வேலைக்கு போக வேண்டியதில்லை என தீர்க்கமாக சொல்லி விட்டார்கள். சில ஆண்டுகள் அந்த ஏக்கம் காமாட்சிக்கு இருந்தது. காலப்போக்கில் அவருடைய கல்வி தகுதியை மறந்தே போனார். ஆனால் இப்போது ஜித்துவின் உறுதியை பார்க்கும் போது தானும் இவள் போல இருக்க தவறியதை எண்ணி வருந்தினார்.
ஜித்துவையும் கற்பகத்தையும் பார்க்கும் போது தான் பொருளாதார சுதந்திரமும், உரிமையும் இல்லாமல் வாழ்ந்தது முற்றிலும் தன் தவறு என ஒவ்வொரு நாளும் உணர்ந்தார். பேச வேண்டிய நேரத்தில் தன் சுய முன்னேற்றத்திற்காக பேசாமல் விட்டது தன் பிழை என ஆணித்தரமாய் நம்பினார்.
குமரேசனின் இந்த குணத்தால் ஜித்துவும் பாதிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. ஆதி காலத்திலிருந்து அவரின் தாழ்வு மனப்பான்மையால் தான் பட்டது போதும். இவளாவது அவள் காலில் நிற்கட்டும் என கணவரின் கடை வைக்கும் எண்ணத்திற்கு பின் உள்ள சூட்சுமம் புரிந்து எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தார்.
அடுத்து வந்த ஆண்டுகளில் இரண்டாவதாய் பெண் குழந்தை பிறந்தது. காமாட்சி முழுமையாக பேரக் குழந்தைகளோடு இருந்ததால் பாண்டிக்கு திரும்ப போகும் எண்ணம் துளியும் இல்லாமல் இருந்தார்.
ஜித்துவின் வருமானம் அதிகமாக வந்த காரணத்தால் ஹவுசிங் லோன் போட்டு பெரிய வீடாய் கட்டினார்கள். ஏற்கெனவே இருந்த காரை மாற்றி, மொத்த குடும்பமும் போய் வர ஏதுவாக இருபது லட்சத்துக்கு ஒரு காரையும் வாங்கினார்கள்.
ராஜுவும் ஜித்துவும் கலந்து பேசி பண விவகாரங்களை சுமுகமாக கையாண்டு நல்ல வளர்ச்சி பாதையில் குடும்பத்தை நடத்தினார்கள்.







