Tamil novel – Jiteswari – Part 5/21

A couple at temple

சனிக்கழமை மாலை ஜித்துவும் ராஜுவும் கோவிலுக்கு கிளம்பினார்கள். அது அந்த ஏரியாவில் மிகப் பெரிய கோவில். உள்பிரகாரம் ஒரு சுற்று சுற்றினாலே ஒரு கிலோமீட்டர் இருக்கும். சாமி பார்த்தபிறகு மூன்று சுற்று சுற்றிவிட்டு குளத்தின் அருகே வந்தார்கள். சற்று நேரம் படித்துறையில் உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது ஜித்துவுக்கு.

குளம் பூட்டி இருந்தது. “என்ன ராஜு குளம் பூட்டி இருக்கு?” என்றாள் ஜித்து.

“இரு போய் ஆபீஸ்ல கேக்குறேன்” என்றபடி போனான் ராஜு.

“காலைல ஒரு மணி நேரம் மட்டும் தான் திறந்து இருக்குமாம்” என்றான் திரும்ப வந்து.

“சரி வா, அந்த பெஞ்சுல உக்காரலாம்” என அழைத்தான்.

காற்று நன்றாக வீசியது. பிளாஸ்கில் இருந்த வெந்நீரை கொஞ்சம் குடித்தாள் ஜித்து. 

“டெலிவெரிக்கு அப்புறம் எங்க இருக்குறது ராஜு? உனக்கு என்ன பிளான்?” என நேராய் விஷயத்தை ஆரம்பித்தாள் ஜித்து.

“உனக்கு ஆபீஸ் இங்கதானே. இங்கயே இரு. டெலிவரி ஆனதும் பாண்டிக்கு வந்துடு. மெட்டர்னிட்டி லீவு வரை அங்க இரு. ரீஜாயின் பண்ணும்போது இங்க வந்துடு. துணைக்கு வேணும்னா அம்மாவை வர சொல்றேன்.

ஆன்ட்டியால தனியா சமாளிக்க முடியாது. எங்க அம்மாவும் தனியா பாத்துக்க கஷ்டப்படுவாங்க. எல்லாரும் ஒண்ணா இருந்தா மாற்றி மாற்றி பாத்துக்கலாம்” என்றான் ராஜு.

பாதி பிரச்சினை தீர்ந்தார் போல இருந்தது ஜித்துவுக்கு. “அத்தை வருவாங்களா? மாமா என்ன சொல்லுவாரு” என கேட்டாள்.

“அப்பா கொஞ்சம் யோசிப்பாரு. பார்மாலிட்டி பாப்பாரு. அம்மாவுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஜித்துவ நா பாத்துக்கறேன்னு சொல்லிட்டே இருக்காங்க. குட்டிய விட்டு அவங்களால இருக்க முடியாதாம்.

நீயும் அப்பாவும் பாண்டில இருங்க. நா ஜித்து கூட போய் இருக்கேனு சொல்றாங்க” என சிரித்தான் ராஜு.

இரண்டு நாள் பாடாய்படுத்திய மன உளைச்சல் நீங்கியது போல இருந்தது ஜித்துவுக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லி கண் மூடி அமர்ந்திருந்தாள்.

இரண்டு நிமிடம் கழித்து “தேங்க்ஸ் ராஜு” என்றாள்.

“எனக்கு என்ன காரெடுத்தா மூணு மணி நேரத்துல வந்துடுவேன். உங்க எல்லாரையும் வீக் டேஸ்ல மிஸ் பண்ணுவேன். உனக்கும் அப்படித்தானே. என்ன பண்றது? எனக்கு ட்ரான்ஸ்பர் ஆக முடியாது. உனக்கும் அங்க வர வாய்ப்பு இல்ல. தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணோம்” என்றான்.

ஆக கணவன் மனைவி இருவரும் அவர்கள் நிலையை தெளிவாக உணர்ந்து இருந்தார்கள். பரஸ்பரம் தங்கள் வேலையை காப்பாற்றிக்கொண்டும் அதே சமயம் மற்றவர் வேலை பாதிக்காத வண்ணம் எப்படி வாழ்வது என்று யோசித்து இருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டில் சில சங்கடங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அத்தனையையும் எதிர் நோக்கித்தான் இந்த பந்தத்தில் இணைந்திருக்கிறோம் என்ற புரிதல் இருந்தது.

கணவன் மனைவி உறவிலும், குழந்தை வளர்ப்பிலும் இந்த முடிவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரிந்து வைத்திருந்தார்கள். கூடிய மட்டும் என்ன செய்து அந்த தாக்கத்தை குறைப்பது என பேச ஆரம்பித்தார்கள்.

“அம்மா உங்க வீட்ல இருக்குறது அசௌகர்யமா இருக்கும்னு எங்க வீட்ல பீல் பண்ணா பக்கத்துலயே தனியா ஒரு வீடு எடுத்துக்கலாம். அப்பாவுக்கு இன்னும் ஒரு வருஷம் தான் சர்வீஸ் இருக்கு. ரிட்டயர்டு ஆகிட்டா அங்க வந்து உங்களோட இருக்கட்டும். என்ன நா பாத்துக்குவேன்” என தெளிவாய் சொன்னான் ராஜு.

ராஜுவின் போக்கு இலகுவானது. பெரிதாய் எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டான். பரபரப்பே இல்லாமல் எப்போதும் ஒரு நிதானத்தோடு நடந்து கொள்பவன். ஜித்துவுக்கு ராஜுவின் அணுகுமுறை ஆதரவாக இருந்தது.

கற்பகம் வீசிய கடும் சொற்களின் காயம் சற்று ஆறியது போல இருந்தது.

ஆனாலும் இவர்களை அசைத்துப்பார்க்கும் பல பேச்சுகளையும் நிகழ்வுகளையும் எதிர் கொள்ள கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்ததும் “பேசிட்டியா? என்ன சொன்னார்” என கேட்டார் கற்பகம்.

“நீ பதறுற மாதிரி ஒரு சிச்சுவேஷனும் இல்ல. கொஞ்ச நாள் பேசாம இரு. ராஜு பாத்துப்பான்” என சொல்லி முடித்தாள்.

கற்பகத்துக்கு ஆர்வம் தாளவில்லை.

“என்ன தான் முடிவு பண்ணீங்க” என திரும்ப கேட்டார்.

“மா, அமைதியா இரு. முடிவு பண்ற நேரம் வரும் போது பாத்துக்கலாம். எல்லாத்தையும் ஒரே நாள்ல எங்களால சரி பண்ண முடியாது. எல்லாரையும் திருப்திபடுத்தவும் முடியாது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். என்னால உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. மாமாகிட்ட நீங்க பதில் சொல்ற நெலமைய நா விடமாட்டேன். நானோ இல்ல ராஜுவோ அவர்கிட்ட பேசுறோம்” என நாசூக்காய் சொல்லி முடித்தாள்.

இரண்டு வாரம் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. மொத்த குடும்பமும் கூடி கொண்டாடி தீர்த்தார்கள். ஒரு மாதம் ஆனது அவர்களின் கவனம் ஜித்துவின் பக்கம் வர.

ஜித்துவும் குழந்தையும் இரண்டாவது வாரமே பாண்டிச்சேரி வந்து விட்டார்கள். தினம்தோறும் யாராவது ராஜு வீட்டு உறவினர்கள் வந்து பார்த்து விட்டு போனார்கள். போகும் பொது ஏதாவது ஒரு கேள்வியை கேட்டு விட்டு போவார்கள்.

“லீவ் முடிஞ்சி அங்க போய்டுவியா?”

“இங்க வேல கிடைக்காதா”?

“எவ்ளோ நாள் இப்டியே பிரிஞ்சி இருப்பீங்க? குழந்தை ஏங்கி போயிடுவான்”

“காசு பணம்னு இருந்தா நாளைக்கு திரும்பி பாத்தா ஒண்ணும் இருக்காது”

“படிச்சவங்க நீங்க. உங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு. ஆனா வயசான தாத்தா பாட்டி, நீ குழந்தைய தூக்கிட்டு போயிட்டா ஏங்கிடுவாங்க”

ஆளாளுக்கு ஒரு பாயிண்டை போட்டுவிட்டு போனார்கள். 

ஓவ்வொருவர் வரும்போதும் குமரேசன் பைபாஸ் ரோடு காலேஜ் ஆப்ஷனை எடுத்து வைப்பார்.

“அட ஆமால்ல. அது உங்க வீட்டுக்கு ரொம்ப பக்கமாச்சே. ஏம்மா ஜிதேஸ்வரி நீ ஏன் இங்கயே காலேஜுல வேல பாக்க கூடாது?” என விஷயம் தெரியாமல் ஒரு பிட்டை போடுவார்கள். ஜித்துவுக்கு ஆறு மாதம் கழித்து சென்னை போவோம் என்ற நம்பிக்கை கொஞ்ச நாளில் போனது.

ராஜூவுக்கும் ஜித்துவுக்கும் இது பெரும் தலைவலியாக இருந்தது.

பேசாமல் ஜித்து அங்கேயே இருந்திருக்கலாம். நாம சொல்லவேதான் இங்க வந்தா. இப்ப வர்றவங்க போறவங்க எல்லாரும் அவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறாங்க” என வருந்தினான் ராஜு.

“நீ ஒண்ணும் கவலைப்படாதே. நா அம்மாகிட்ட பேசிட்டேன். அவங்களும் உன் கூட வர ரெடியா இருக்காங்க. அப்பாவை நா சமாளிச்சுக்குறேன். கெஸ்டுங்களுக்கு என்ன தெரியும் நம்மள பத்தி. பேசிட்டு போகட்டும் விடு” என சமாதானப்படுத்தினான் ராஜு.

ஐந்து மாதங்கள் ஆனது. இன்னும் ஒரு மாதம் தான் இருந்தது வேலைக்கு போக.

“அப்பா, அடுத்த மாசம் ஜித்து ஆபீஸ் போகணும். சென்னைல தனியா வீடு பாக்க ஆரம்பிக்கணும். அம்மா கூட போய் இருக்கட்டும்” என ஆரம்பித்தான் ராஜு.

“பைபாஸ் ரோடு” என இழுத்தார் குமரேசன்.

“அப்பா ப்ளீஸ்ப்பா, இது என் டெஸிஷன்” என சுருக்கமாய் முடித்தான் ராஜு.

காமாட்சியும் ராஜுவும் சென்னைக்கு போவதில் உறுதியாக இருந்தார்கள். வேண்டாவெறுப்பாக வீட்டில் வலம் வந்தார் குமரேசன்.

அடுத்த இரண்டு வாரத்தில் வீடு பார்த்து ஒரு நல்ல நாளில் பால் காய்ச்சினார்கள். எவ்வளவு கூப்பிட்டும் குமரேசன் போகவில்லை.

House warming function

ஜித்துவின் பெற்றோருக்கு தர்மசங்கடமாக இருந்தது.

ஆனால் ராஜுவும் காமாட்சியும் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஜித்துவை மும்பையிலிருந்து வரவழைக்க அம்மாவும் பிள்ளையும் பட்டபாடு அவர்களுக்கு தான் தெரியும்.

ரொம்பவும் அவளை பாடுபடுத்தினா, திரும்ப மும்பைக்கே போறேன்னு சொல்லிட்டாள்னா என்ன பண்றது என்ற பயம் இருவருக்கும் இருந்தது. அந்த பயத்திற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.

ராஜூவை விட இப்போதே அறுபது சதவிகிதம் அதிக சம்பளம் ஜித்துவிற்கு. மும்பை போனால் கண்டிப்பாக மூன்று வருடங்களில் வெளிநாட்டு பணிக்காக அவர்களே அனுப்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே சென்னையில் அவளை தொடர அனுமதிப்பது தான் தங்களின் எதிர்காலத்துக்கு நல்லது என கருதினான் ராஜு.

அதை காமாட்சிக்கும் புரிய வைத்த பிறகு அம்மாவும் பிள்ளையும் ஜித்துவை முடிந்த வரை குமரேசன் எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

காமாட்சி குழந்தையை பார்த்துக் கொள்ள, வீட்டு வேலை செய்ய தனியாக ஒரு பெண்மணியை அமர்த்திக்கொண்டாள் ஜித்து. புஷ்கர் பிறந்து ஒரு வருடம் ஆனது. குமரேசன் தவிர மற்ற மூவரும் இந்த ஏற்பாட்டில் சுமுகமாக இருந்தார்கள்.

சொல்லப் போனால் காமாட்சிக்கு சென்னையில் இருப்பது பாண்டியை விட வசதியாக இருந்தது. வீட்டு வேலையை பணிப்பெண்ணும் கடை மற்றும் வெளிவேலைகளை ஜித்துவும் பார்த்துக் கொள்ள காமாட்சிக்கு ஓய்வும் நன்றாக கிடைத்தது.

அடுத்த வருடம் பணி ஓய்வு பெற்ற பிறகு சென்னைக்கு போய் தங்குவதில் குமரேசனுக்கு உடன்பாடில்லை. என்ன சொல்லி தவிர்க்கலாம் என யோசித்தார். ஓய்வு பெற்ற பிறகு ஹார்டுவேர் கடை துவங்கலாம் என முடிவெடுத்தார்.

வீட்டின் முன் பகுதியில் இருந்த ரூமை சற்று விரிவுபடுத்தி தெரு பக்கம் இருந்த காலி இடத்தோடு சேர்த்து ஒரு கடையாக மாற்றினார். ஆறு மாத காலத்தில் கட்டிட வேலை முடிந்து ஹார்டுவேர் கடை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய ஆரம்பித்தார்.

வீம்புக்கு குமரேசன் செய்யும் வேலைகள் காமாட்சிக்கு வருத்தத்தை கொடுத்தது. ஒரே மகள் ஆந்திராவில் வசிக்க மகனுடைய குடும்பத்தோடு தங்காமல் வீண் பிடிவாதமாக அங்கேயே இருப்பது எரிச்சலாய் இருந்தது.

காமாட்சி அந்த காலத்திலேயே ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். திருமணமான சில ஆண்டுகளில் அரசாங்க வேலையும் கிடைக்கும் சூழல் இருந்தது.  குமரேசன் தனியார் பாக்டரிலயில் வேலை செய்து கொண்டிருந்தார்.

மனைவிக்கு அரசாங்க வேலை கிடைத்தால் தன்னை விட அதிக வருமானமும் சமூகத்தில் நல்ல அங்கீகாரமும் கிடைக்கும். காலம் முழுக்க  தான் ஒரு படி கீழ் நிலையில் ஏன் இருக்க வேண்டும் என நினைத்தார்.

குமரேசனும் அவரின் தாயாரும் காமாட்சி வேலைக்கு போக வேண்டியதில்லை என தீர்க்கமாக சொல்லி விட்டார்கள். சில ஆண்டுகள் அந்த ஏக்கம் காமாட்சிக்கு இருந்தது. காலப்போக்கில் அவருடைய கல்வி தகுதியை மறந்தே போனார். ஆனால் இப்போது ஜித்துவின் உறுதியை பார்க்கும் போது தானும் இவள் போல இருக்க தவறியதை எண்ணி வருந்தினார்.

ஜித்துவையும் கற்பகத்தையும் பார்க்கும் போது தான் பொருளாதார சுதந்திரமும், உரிமையும் இல்லாமல் வாழ்ந்தது முற்றிலும் தன் தவறு என ஒவ்வொரு நாளும் உணர்ந்தார். பேச வேண்டிய நேரத்தில் தன் சுய முன்னேற்றத்திற்காக பேசாமல் விட்டது தன் பிழை என ஆணித்தரமாய் நம்பினார்.

குமரேசனின் இந்த குணத்தால் ஜித்துவும் பாதிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. ஆதி காலத்திலிருந்து அவரின் தாழ்வு மனப்பான்மையால் தான் பட்டது போதும். இவளாவது அவள் காலில் நிற்கட்டும் என கணவரின் கடை வைக்கும் எண்ணத்திற்கு பின் உள்ள சூட்சுமம் புரிந்து எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தார்.

அடுத்து வந்த ஆண்டுகளில் இரண்டாவதாய் பெண் குழந்தை பிறந்தது. காமாட்சி முழுமையாக பேரக் குழந்தைகளோடு இருந்ததால் பாண்டிக்கு திரும்ப போகும் எண்ணம் துளியும் இல்லாமல் இருந்தார்.

ஜித்துவின் வருமானம் அதிகமாக வந்த காரணத்தால் ஹவுசிங் லோன் போட்டு பெரிய வீடாய் கட்டினார்கள். ஏற்கெனவே இருந்த காரை மாற்றி, மொத்த குடும்பமும் போய் வர ஏதுவாக இருபது லட்சத்துக்கு ஒரு காரையும் வாங்கினார்கள்.

ராஜுவும் ஜித்துவும் கலந்து பேசி பண விவகாரங்களை சுமுகமாக கையாண்டு நல்ல வளர்ச்சி பாதையில் குடும்பத்தை நடத்தினார்கள்.

Tamil novel – Jiteswari – Part 4/21

A family discussion

ஜித்து வாரம் முழுவதும் சென்னையில் அம்மா வீட்டில் இருந்து வேலைக்கு போய் வருவதால், வார இறுதி நாட்களில் பாண்டி போய் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு திங்கள் காலை அங்கிருந்து சென்னைக்கு  திரும்ப வருவாள். ஆரம்ப கால கட்டத்தில் அது யாருக்கும் பிரச்சினையாக இல்லை. ஒரு வருடம் கழித்து ஜித்து கர்ப்பமான பிறகு அவளுடைய பயணம் கணிசமாக குறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ராஜு வாரம் தவறாமல் வந்து பார்த்துக் கொள்வான். ஆனால் மாமனாருக்கு இதில் உடன்பாடில்லை.

“ஏம்மா, நம்ம காரைக்கால் பை பாஸ் ரோடுல ஒரு இன்ஜினியரிங் காலேஜ் இருக்கில்ல. அதுல வேணா வேலைக்கு ட்ரை பண்ணேம்மா. வீட்லேர்ந்து கால் மணி நேரத்துல போயிடலாம்” என அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.

டீச்சிங் வேலையில் ஜித்துக்கு விருப்பமில்லை. ஜித்து ஒரு முழு நாளில் வேலை நேரத்தில் பேசும் வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அந்த விரல்களுக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து டைப் செய்து கொண்டிருப்பாள்.

எந்த ஒரு கவனகுறைவுமின்றி, நூறு சதவீத துல்லியத்தோடு தகவல்களை சேகரித்து பைல் செய்து அனுப்ப வேண்டும். பெரும்பாலும் வீட்டில் ஓரு தனி அறையில் அமர்ந்து வேலை செய்து பழகியவள்.

“இல்ல மாமா, எனக்கு காலேஜ் வேலைல விருப்பமில்லை” என ஒரு நாள் தெளிவாக கூறி விட்டாள்.

அவர் இந்த சுருக்கமான, நேரிடையான பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதே நிலை தொடர்ந்தால் குழந்தை பிறந்த பிறகும் அவர்கள் இரு வேறு இடங்களில் பிரிந்தே வாழ வேண்டிய நிலை தொடரும்.

அவர் இந்த விஷயத்தை ராஜுவிடம் தெளிவாக விளக்கினார். காமாட்சிக்கு அது தான் சரி என பட்டது. நாளை பேரனோ பேத்தியோ பிறந்த பிறகு அவர்களை அங்கேயே தொடர்ந்து தங்க வைப்பது சரி இல்லை என யோசித்தார்.

டெலிவரி முடியட்டும். பிறகு பார்க்கலாம் என சொன்னான் ராஜு.

காமாட்சியும் குமரேசனும் இந்த விஷயத்தை சம்பந்தியிடம் தனியாக விவாதித்தார்கள்.

“இதே மாதிரி இருந்தா அவங்க எப்போ ஒரு எடத்துல குடுத்தனம் பண்றது? ராஜுவும் குழந்தையும் எவ்வளவு நாள் பிரிஞ்சி இருக்குறது? சின்ன குழந்தையை வாரா வாரம் தூக்கிட்டு அங்க வர முடியுமா? நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” என சொல்லி வைத்தார்கள்.

கற்பகம் பிரசவம் முடியட்டும் என காத்திருக்கவில்லை. மெதுவாக ஜித்துவிடம் நிலைமையை விளக்க ஆரம்பித்தார்.

mother and daughter

“மா, என்னை சென்னைல இருந்து வேலை செய் அப்படின்னு சொல்லி தானே ரெண்டு பேமிலியும் சொன்னீங்க. இப்போ பாண்டி போனு சொன்னா அங்க போய் நான் என்ன பண்றது?” என கோபமாக கேட்டாள்.

“சொன்னோம்டி. அதுக்காக அதே ஸ்டாண்ட்ல இருக்க முடியுமா? வாழ்க்கை எப்படி போகுதோ அதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் நாமளும் அட்ஜஸ்ட் பண்ணனும். அவங்களும் பாரு, ரெண்டு வருஷம் பொறுமையாதானே இருந்தாங்க. அப்புறம் குழந்தையும் பிரிஞ்சி இருக்கணும்னா வேதனையா தானே இருக்கும்” என சமாதானப்படுத்தினார் கற்பகம்.

“அங்க போய் என்னை பீச்ல குச்சி ஐஸ் விக்க சொல்றியா” என கூர்மையாய் கேட்டாள் ஜித்து.

“ஏண்டி சத்தாய்குற, அங்க என்ன பணத்துக்கா பஞ்சம். நீ கொண்டு வந்து தான் சோறு பொங்க போறாங்களா” என கோபமாய் கேட்டார் கற்பகம்.

“மாப்பிளைக்கு கவர்ன்மென்ட் வேலை. மாத்திக்கிட்டு வேற எடத்துக்கு வர முடியாது. உனக்கு என்ன? தனியார்ல தானே வேல பாக்குற. அங்க போய் உனக்கு என்ன வேலை கிடைக்குதோ செய்” என காட்டமாய் சொன்னார்.

“நானா கவர்ன்மென்ட் மாப்பிளை கேட்டேன்? தெளிவா இந்த இடம் வேணாம்னு சொன்னேன். அத இதை சொல்லி கன்வின்ஸ் பண்ணிட்டு இப்போ பாண்டிக்கு போனு சொல்றீங்க. அங்க எங்க பீல்டுக்கு கம்பெனிங்க எதுவும் இல்ல. என்ன பண்ண சொல்ற இப்போ” என குமுறினாள் ஜித்து.

“ஏண்டி நெற மாசமா இருக்குறப்போ பேசுற பேச்சா இது. இந்த நேரத்துல போய் வரன் பாத்த கதையை கொறை சொல்ற.  நாங்க சமாதானமா சொல்லுறோம். இப்பவே நீ முடிவு பண்ணு டெலிவரிக்கு அப்புறம் அங்க எப்போ போக போறேன்னு. அவங்க எப்படியும் முறையா வந்து கூப்பிடுவாங்க. அப்போ ஏதாவது வில்லங்கம் பண்ணாதே. எங்களால அவங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என தீர்க்கமாய் சொன்னார் கற்பகம்.

அம்மாவின் பேச்சிலிருந்து, இது தான் அப்பாவின் நிலைப்பாடும் என தெரிந்து கொண்டாள் ஜித்து.

“சரி நா ராஜூகிட்ட பேசுறேன். எனக்கு அந்த ஊருல ஸ்கோப் கிடையாது. அவர் வேணா வேற வேலைக்கு ட்ரை பண்ற ஐடியா இருக்கானு கேக்குறேன். அவரும் என்ஜினீயர் தானே. ரெண்டு பேருக்கும் எந்த ஊருல வேலை கிடைக்குதோ அங்கே போறோம். அத்தை மாமா எங்களோட வந்து இருக்கட்டும்” என தன் யோசனையை சொன்னாள் ஜித்து.

“ஒரு புண்ணாக்கும் வேணாம். ஊர்ல எல்லாரும் கவர்ன்மென்டு வேலை கெடைக்கணும்னு வேண்டிக்குறாங்க. ஒரே எடத்துல நிரந்தரமா இருக்கலாம். நீ என்னடான்னா பொட்டிய தூக்கிட்டு ஊர் ஊரா சுத்துறேன்ற. அவங்க இதை எப்படி ஒத்துக்குவாங்க. ஊரு உலகத்துக்கு யாரு பதில் சொல்றது. குமரேசன் அண்ணன் ஒரு மாதிரியான மனுஷன். நாம தன்மையா இருந்தா தங்கமா தங்குவார். ஆனா எனக்கு தெரிஞ்சு அவரு புள்ளைய அவரு வேலைய விட சொல்ல மாட்டாரு. நீ சொல்றதையெல்லாம் யாரும் கேக்க மாட்டாங்க. ராஜூ என்ன நீ கண்டிப்பா வேலைக்கு போய் சம்பாதிச்சிப் போடணும்னு சொல்றாரா என்ன?” என மூச்சு முட்ட பேசினார் கற்பகம்.

“ராஜு சொல்லித்தான் நீ என்ன எல் கே ஜி சேத்தியா? இல்ல நான் என்ஜினீயரிங் படிச்சேனா? என திருப்பிக் கேட்டாள் ஜித்து.

“இந்த வியாக்யானம் வௌக்குமாறெல்லாம் எங்க கிட்ட பேசாதே. உன் ஆபீஸோட வச்சிக்க. எங்களால இத அவங்ககிட்ட பேச முடியாது. நீயும் இந்த டாபிக்கை இதோடு விட்டுடு. அவங்க காதுக்கு போய் ஏதாவது ஏடாகூடமா பேசிட்டா நம்ம மரியாதையை நாமளே கெடுத்துக்கிட்ட மாதிரி ஆகும். ஒரு தடவை மரியாதை போச்சுன்னா அப்புறம் காலத்துக்கும் அனுபவிக்கனும்” என முட்டுக்கட்டையை ஸ்ட்ராங்காக போட்டார் கற்பகம்.

“அட்லீஸ்ட் நா ராஜு கிட்ட ஒரு தடவ இதை பத்தி பேசுறேன். அப்புறம் மாமா கிட்ட சொல்லிக்கலாம்” என இழுத்தாள் ஜித்து.

“டெலிவரி நேரம் இப்போ. ரெண்டு குடும்பமும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இந்த நேரத்துல தேவையில்லாத பேச்செல்லாம் பேசி குழந்தை பொறக்குறப்போ அவங்க மூஞ்ச திருப்பிட்டு போற மாதிரி எதுவும் பண்ணிடாதே. கொஞ்ச நாளைக்கு வேலைய விட்டுட்டு குழந்தைய பாத்துக்க. அப்புறம் அங்க உனக்கு ஏத்த மாதிரி என்ன வேலை கிடைக்குதோ அதுல போய் சேந்துடு. எண்ணை கம்பெனிலயே வாழ்க்கை முழுக்க வேலை செய்யணும்னு ஒரு கட்டாயமும் இல்லை” என விடாப்பிடியாய் பேசினார் கற்பகம்.  

“மா, ராஜு இது வரை என்னை ரிசைன் பண்ண சொல்லி எப்பவும் சொன்னதில்லை” என அதிர்ச்சியாய் சொன்னாள் ஜித்து.

“அப்போ நீ மட்டும் இது வரை டெய்லி சொல்லிட்டிருந்தியா கவர்ன்மென்டு வேலைய விடுங்கன்னு? நீ இப்போ போய் அவரை வேலைய விட சொன்னா அவரு என்ன நெனப்பாரு” என மூர்க்கமாய் கத்தினார் கற்பகம்.

“மா, நா வேலைய விட சொல்லல. வேற வேல பாத்துக்கலாம்னு சொல்றேன். க்ளியரா புரிஞ்சிக்கிட்டு பேசு. என்ன மட்டும் ரைட் ராயலா வேலைய விட சொல்ற. திருப்பி நா கேட்டா ஒலகமே புரண்ட மாதிரி கத்துற?” என நிதானமாய் கேட்டாள் ஜித்து.

இது முட்டு சந்தில் நிறுத்தும் கேள்வி கற்பகத்திற்கு. ஒரு நிமிடம் வாயடைத்து நின்றார் அவர்.

“மா, இங்க பாரு. எனக்கு எட்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. கஷ்டப்பட்டு வேல செஞ்சுதான் நா இந்த பொசிஷன்ல இப்போ இருக்கேன். சென்னைக்கு வந்ததே எனக்கு டவுன் தான். இப்போ என்னடான்னா அசால்ட்டா வேலைய ரிசைன் பண்ண சொல்லுற? கல்யாணம் ஆனா குழந்தை பிறக்கும், குடும்பம் பெரிசாகும், வேற வேற ஊர்ல இருந்தா சரிப்படாது, சென்னைக்கு வரலேன்னு சொன்னேனே அப்போ என்ன சொன்ன என்கிட்டே? அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். உன் வேலைக்கு ஒரு பிரச்சினையும் இல்லேன்னு சொல்லிட்டு இப்போ மாத்தி பேசுர” என சீறினாள் ஜித்து. 

“இது என்ன உங்க கம்பெனில போடுற மாதிரி கான்ட்ராக்டா? குடும்பம்டி, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நாம தான் விட்டு கொடுக்கணும்” என பணிவாய் சொன்னார் கற்பகம்.

“நாம இல்ல, நா விட்டு குடுக்கணும்னு சொல்ற இப்போ. இது எனக்கு மட்டும் தான் குடும்பமா? அவங்களுக்கு இல்லியா?” என திருப்பிக் கேட்டாள் ஜித்து.

இது லேசில் முடிகிற காரியமாக தெரியவில்லை கற்பகத்திற்கு. இவள் முரண்டு பிடிவாதம் நியாயமாகதான் பட்டது.  ஆனால் சம்மந்தி வீட்டில் அதை சொல்லும் தைரியம் ஜித்துவின் பெற்றோருக்கு இல்லை.

இந்த விஷயம் தங்களுக்குள்ளேயே முடிந்து டெலிவரி ஆன பிறகு சுமுகமாக ஜித்து பாண்டி கிளம்பி போய் செட்டிலாக வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம்.

ஜித்துவுக்கு அம்மாவின் பேச்சு எரிச்சலாக இருந்தது. “நல்லா படி, அப்போ தான் நல்ல வேலைக்கு போய் சுயமா வாழ முடியும். பொம்பளைங்க கைல எப்பவும் வருமானம் இருக்கணும். இல்லேன்னா ஒரு நாய் மதிக்காது. நானே இந்த நர்ஸ் வேலைல இல்லேன்னா உங்க அப்பா இன்னும் கொஞ்சம் ஆட்டம் போடுவாரு. சொளையா ஒண்ணாந்தேதி காசு வந்து விழவே தான் வால சுருட்டிக்கிட்டு இருக்காரு” இது நினைவு தெரிந்த நாளிலிருந்து ஜித்துவுக்கு அவள் அம்மாவிடமிருந்து கிடைத்த அறிவுரை.

அது வேற வாய். இது நார வாய் என்ற நிலையானது இப்போது.

அந்த வார இறுதியில் ராஜு வீட்டுக்கு வந்தான். கற்பகத்துக்கு உதறல் ஆரம்பித்தது. இவள் வாய் சும்மாயிருக்காது. எப்படியும் கேட்டு விடுவாள். தனியாக போய் ஜித்துவிடம் எச்சரித்தார்.

“மா, இது என் லைப். நா பாத்துக்கறேன். உனக்கு எதுவும் டேமேஜ் ஆகாது. நீ இனிமே இதுல தலையிடாதே. உங்க பேச்ச எல்லாம் நம்பி இருந்தேன் பாரு. என்னை சொல்லணும். இது வேலை மட்டும் சம்மந்தப்பட்டது கிடையாது. எங்க பைனான்ஸ் விஷயங்களையும் நாங்க டிஸ்கஸ் பண்ணனும். ராஜுவுக்கு என்ன மைண்ட்ல இருக்குனு நா தெரிஞ்சுக்கணும். என் நிலைமையும் அவருக்கு தெரியணும். இது மூடி வெக்குற விவகாரம் கிடையாது. உங்க சம்மந்தி பாசத்துக்கு ஒரு பங்கமும் வராம நாங்களே முடிவெடுக்குறோம்” என சொல்லி முடித்தாள் ஜித்து.

இந்த கால பிள்ளைகள் பிரச்சினையை எதிர் கொள்ள தயங்குவதும் இல்லை, பிரச்சினையே இல்லாமல் ஒதுங்கி போக வேண்டும் என்றும் நினைப்பதில்லை.

கார்ப்பொரேட் ரத்தம் என நினைத்துக் கொண்டார் கற்பகம்.

a senior woman reflecting life

Tamil novel – Jiteswari – Part 3/21

A woman engineer

ஜிதேஸ்வரி மெக்கானிகல் என்ஜினீயர். திருமணத்திற்கு முன்பு மும்பையில் ஐந்து வருடம் பணியில் இருந்தாள்.  கணவர் ராஜு எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். பாண்டியில் ஈபி ஆபீசில் நிரந்தர வேலையில் இருக்கிறார். ராஜுவின் வரன் வந்தபோது ஜிதேஸ்வரி தனது வருங்கால வேலை வாய்ப்புகளை பற்றி யோசித்தாள்.

ஜிதேஸ்வரி ஒரு சர்வதேச எரிவாயு நிறுவனத்தின் மும்பை கிளையில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். தமிழகத்தில் அது போன்ற நிறுவனங்கள் மிக குறைவு. பாண்டியிலோ ஒன்று கூட கிடையாது.

ஜித்து அவள் பெற்றோரிடம் இந்த வரனை தவிர்க்குமாறு சொல்லி விட்டாள்.

ராஜுவின் குடும்பம் கற்பகத்தின் உறவு வழியில் தூரத்து சொந்தம். விசாரித்ததில் நல்ல குடும்பம் என செய்தி வந்தது. ஜிதேஸ்வரியின் தந்தை இந்த வரனை முடிப்பதில் குறியாய் இருந்தார். நல்ல பையன், நல்ல வேலை மட்டுமல்லாமல் அடிக்கடி போய் பார்க்க ஏதுவாக பாண்டியிலேயே சம்பந்தம் கிடைத்ததில் அவருக்கு பரம சந்தோஷம்.

இது ஊருக்கும் வீட்டாருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவருக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது. ஜிதேஸ்வரி செய்வது ஒரு நுட்பமான வேலை. நல்ல பதவி இந்த வயதிலேயே. அவர் பணி ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தை விட இப்போது அவர் மகள் வாங்குவது அதிகம். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக இன்னும் நல்ல ஊதியம் கிடைக்கும். மேலும் பல நாடுகளில் பணி புரிய வாய்ப்பும் கிடைக்கும். இங்கு தான் அவரின் கவலை நிலைகொண்டது. இந்த ஆண்டு வரன் அமையாவிடில் அடுத்து வரும் ஆண்டுகளில் மகளின் தகுதிக்கேற்ப வரன் தேடுவது மிக சவாலான விஷயமாக இருக்கும். அவர்கள் சார்ந்த சமூகத்தில் அந்த அளவு நிலையில் இருப்பவர்கள் மிகவும் அரிதாக இருந்தது. அப்படி இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வரன்களாக இருந்தார்கள்.

அவருக்கு மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப இஷ்டமில்லை. அதனால் எப்படியாவது இந்த வரன் அமைய வேண்டும் என்று நினைத்தார்.

ராஜுவின் வரனை முடிப்பதில் அவளின் பெற்றோர்கள் மும்முரமாக இருந்தார்கள். ஜிதேஸ்வரிக்கும் ராஜூவை பிடித்திருந்தது. ஆனால் சிக்கல் ராஜுவின் அரசாங்க வேலையும் ஊரும் தான். 

மும்பையில் வேலை பார்க்க விருப்பமா என கேட்டாள் ஜிதேஸ்வரி. ராஜூவை விட அவர் தந்தை இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தார். மகன் எப்போதும் பாண்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம்.

இரண்டு தரப்பும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். சில மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜிதேஸ்வரியின் மீது அழுத்தம் அதிகமானது. ஜிதேஸ்வரி அவள் வேலை செய்யும் கம்பெனியில் சென்னைக்கு மாற்றலுக்கு விசாரித்தாள்.

இடமாற்றல் சாத்தியம் என சொன்னார்கள். ஆனால் அடுத்த பணி உயர்வின் போது மும்பையில் இருக்க வேண்டும். இப்போது இருக்கும் நிலையிலேயே இன்னும் சில ஆண்டுகள் சென்னையில் தொடரலாம் என ஒரு சிக்கலான சூழல். இந்த மாற்றம் முழுமையான பலனளிக்காது என தோன்றியது அவளுக்கு. அப்போதும் ராஜு சென்னைக்கு மாற்றலாகி வரப்போவது இல்லை. வார இறுதி நாட்களில் யாராவது ஒருவர் போய் மற்றொருவரை சந்திக்கும் நிலை.

ராஜுவின் தந்தைக்கு இந்த தாமதம் எரிச்சலூட்டியது. ஒரு வேளை ராஜு மனம் மாறி மும்பை போவதாக முடிவெடுத்தால், அதற்கு பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு வருவது அரிதானதாக இருக்கும். அதனால் பேசாமல் இந்த பெண்ணை விட்டுவிட்டு வேறு வரன் பார்க்கலாம் என முடிவெடுத்தார். இரவு உணவின் போது ராஜுவிடம் இது பற்றி பேசினார்.

“இல்லப்பா, ஜிதேஸ்வரி முடிவெடுக்கட்டும். நாம வெயிட் பண்ணலாம்” என சுருக்குமாய் முடித்தான்.

இந்த பதிலில் ராஜுவின் விருப்பம் வெளிப்படையாக தெரிந்தது. அதனால் இதற்கு மேலும் காத்திருப்பது ஆபத்து என உணர்ந்தார். அடுத்த நாள் ஜிதேஸ்வரியின் தந்தையிடம் நேரில் போய் அவர் கவலையை பகிர்ந்து கொண்டார்.

இரு வீட்டு பெரியோர்களும் தங்கள் பிள்ளைகள் வேறு ஊரில் வசிப்பதை விரும்பவில்லை. ராஜுவின் அப்பா இவ்வளவு தூரம் தானாக முன்வந்து பேசியது பெண் வீட்டாருக்கு பிடித்திருந்தது. ராஜு உறுதியாக இருப்பது இன்னும் சந்தோஷமாக இருந்தது.

மீண்டும் பெண்ணிடம் பேசி விட்டு இந்த வாரத்திற்குள் முடுவு சொல்வதாக சொல்லி அனுப்பி வைத்தார்கள். அந்த வார இறுதியில் மும்பை போய் மகள் வீட்டில் இறங்கினார்கள்.

இந்த விஷயத்திற்காக அவர்கள் இவ்வளவு தொலைவு வந்தது நிலைமையின் வீரியத்தை அவளுக்கு உணர்த்தியது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முழுதாக இந்த வரனை பற்றி விவாதித்தார்கள். சென்னை இட மாற்றலின் விளைவுகளை விவரித்தாள் ஜிதேஸ்வரி. அவள் ஆபீசில் விசாரித்ததே அவர்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. மேலும் ஒரு வாரம் தங்கி இருந்து இன்னும் தீவிரமாக அவளை கரைக்க ஆரம்பித்தார்கள். பத்து நாள் கடந்த பிறகு சென்னை மாற்றலுக்கு ஜிதேஸ்வரி விண்ணப்பித்தாள். அடுத்த ஒரு மாதத்தில் சென்னை வந்து சேர, திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பிறகு இருபதே நாட்களில் திருமணமும் நல்ல படியாக நடந்தது.

A traditional Tamil marriage ceremony

Tamil novel – Jiteswari – Part 2/21

Covid hospital situation

அவர் கணவர் ஒரு வாரம் கழித்து குணமாகி வெளியே வந்தார். பத்து நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை கற்பகத்திற்கு.

“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என செய்தி அனுப்பினார் இரவு. மறு காலை காலமானார். ஒரிசாவில் இருந்து மகனும் பாண்டியில் இருந்து மகளும் வர இயலாத சூழல்.

சாவின் விளிம்பு வரை சென்று மீண்ட நிலையில் பித்து பிடித்தார் போல இருந்தார் அவர் கணவர். செய்தி வர சங்கு புஷ்பமும் நேசப்பாவும் ஒடிந்து போனார்கள். நடக்க கூடாது என்று வேண்டிய ஒன்று நடந்து விட்டது.

கதறும் பிள்ளைகளை தாங்கவோ, கடந்து போனவருக்கு மரியாதை செய்யவோ இயலாத சூழல். இரண்டு மணி நேரம் அமைதியாக போனது.

சங்கு புஷ்பம் ஆனந்துக்கு போன் போட்டார்.

ஆனந்த் ஒரு மணி நேரத்தில் இரண்டு செட் கவச உடைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பிள்ளைகள் யாருக்கும் சொல்லாமல் இருவரும் கிளம்பி மருத்துவமனைக்கு போய் சேர்ந்தார்கள்.

அங்கே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார் கற்பகத்தின் கணவர்.

நேசப்பா போனதும் பாய்ந்து கட்டிக் கொண்டு கதறினார்.

சங்கு புஷ்பம் அவரை தாங்கலாய் பிடிக்க அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.

அரை மணி நேரம் ஆனது அவர் சற்று நிதானமாக.

ஜித்து போன் வந்தது அப்பாவிற்கு. அவர் போனை எடுத்து சங்கு புஷ்பத்திடம் நீட்ட உடைந்து போனார் சங்கு புஷ்பம்.

நேசப்பா கைத்தாங்கலாக அவரை அழைத்து சென்று காரில் அமர வைத்தார்.

அந்த நிமிடம் அந்த போனின் ஓசை சங்கு புஷ்பத்தின் மனதை பிசைந்தது. முதலில் அதை சைலண்டில் போட்டார். அவர்களுக்கு விஷயம் தெரியும். அப்பாவிடம் பேச விரும்புகிறாள்.

கால் ஹிஸ்டரியை பார்த்தார். வெறும் இரண்டு நிமிடம் மட்டும் பேசியிருக்கிறார்கள் காலையில். மகனிடமும் சில நிமிடங்கள்.

முழு கவச உடையில் சங்கு புஷ்பம் உள்ளே போனார். சக சிஸ்டர்கள் எல்லாரும் ஆழ்ந்த வருத்தத்திலும் பணிச் சுமையிலும் இருந்தார்கள்.

சற்று நேரம் எட்ட இருந்து கற்பகத்தை பார்த்தார்.

“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என அவரின் கடைசி செய்தி மனதில் நிழலாடியது.

ஜித்துக்கு போன் போட்டார். “அம்மாவ பாக்குறியாடா கண்ணா” என மெதுவாய் கேட்டார்.

அந்த பக்கம் கேட்ட ஓலக்குரல் சங்கு புஷ்பத்தின் திடத்தை அசைத்துப் பார்த்தது. மகளும் மகனும் பார்த்து  கதற அந்த சிறிய போனை பிடிக்கக்கூட வலுவில்லாமல் நின்றார் சங்கு புஷ்பம்.

பிறகு அங்கு வந்த ஆனந்த், வலுக்கட்டாயமாய் சங்கு புஷ்பத்தை வெளியே அழைத்து வந்தார்.

அங்கே இருந்த சிறிய கட்டை சுவரின் மீது அமர்ந்தார் சங்கு புஷ்பம். சற்று நேரத்தில் வண்டி வர இறுதி சடங்கிற்கு கிளம்பினார்கள்.

எட்ட நின்றவாறு நேசப்பாவும் சங்குபுஷ்பமும் அவரவர் போனில் ஜித்துக்கும் அவர் அண்ணனுக்கும் காண்பித்தார்கள். சிம்பிளாக சில சாங்கியங்களை அவர் கணவர் செய்ய ஐந்து நிமிடங்களில் உள்ளே போனார் கற்பகம்.

ஆறாத்துயருடன் மகளும் மகனும் விடையளிக்க வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

அடுத்த இரண்டு நாட்கள் அவர்கள் இருவரின் போனும் அமைதியாக இருந்தது. யாருடனும் பேசும் மன நிலையில் அவர்கள் இல்லை.

அவர்கள் இருவருமே ஓரிரண்டு வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேசவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து சற்று கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் அழைத்து செல்ல மகன் வர கற்பகத்தின் கணவர் ஒரிசா கிளம்பினார்.

ஜித்து வந்து அவர்களை வழியனுப்பி பிறகு இவர்களை சந்தித்து பேசி விட்டு பாண்டிக்கு கிளம்பி போனாள்.

Tamil novel – Jiteswari – Part 1/21

A retired woman enjoying the morning with coffee

அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.

உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.

சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.

எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.

மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.

a senior attending phone call

“சங்குமா, எழுந்துட்டீங்களா? நா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றாள்.

“இல்ல ஜித்து, சொல்லு, எப்ப வர?” என்றார் சங்குபுஷ்பம்.

“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.

“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.

“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.

“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.

“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.

“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.

டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.

லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.

“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.

“அவங்க கிட்டயும், பசங்க கிட்டயும் காலைல ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ஜித்து போன் பண்ணி சொல்லிட்டாளாம்” என்றாள் லக்ஷ்மி.

வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.

லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.

ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.

ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர்
சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.

கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.

கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.

ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.

கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.

சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.

சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.

“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.