Tamil novel – Jiteswari – Part 5/21

A couple at temple

சனிக்கழமை மாலை ஜித்துவும் ராஜுவும் கோவிலுக்கு கிளம்பினார்கள். அது அந்த ஏரியாவில் மிகப் பெரிய கோவில். உள்பிரகாரம் ஒரு சுற்று சுற்றினாலே ஒரு கிலோமீட்டர் இருக்கும். சாமி பார்த்தபிறகு மூன்று சுற்று சுற்றிவிட்டு குளத்தின் அருகே வந்தார்கள். சற்று நேரம் படித்துறையில் உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது ஜித்துவுக்கு.

குளம் பூட்டி இருந்தது. “என்ன ராஜு குளம் பூட்டி இருக்கு?” என்றாள் ஜித்து.

“இரு போய் ஆபீஸ்ல கேக்குறேன்” என்றபடி போனான் ராஜு.

“காலைல ஒரு மணி நேரம் மட்டும் தான் திறந்து இருக்குமாம்” என்றான் திரும்ப வந்து.

“சரி வா, அந்த பெஞ்சுல உக்காரலாம்” என அழைத்தான்.

காற்று நன்றாக வீசியது. பிளாஸ்கில் இருந்த வெந்நீரை கொஞ்சம் குடித்தாள் ஜித்து. 

“டெலிவெரிக்கு அப்புறம் எங்க இருக்குறது ராஜு? உனக்கு என்ன பிளான்?” என நேராய் விஷயத்தை ஆரம்பித்தாள் ஜித்து.

“உனக்கு ஆபீஸ் இங்கதானே. இங்கயே இரு. டெலிவரி ஆனதும் பாண்டிக்கு வந்துடு. மெட்டர்னிட்டி லீவு வரை அங்க இரு. ரீஜாயின் பண்ணும்போது இங்க வந்துடு. துணைக்கு வேணும்னா அம்மாவை வர சொல்றேன்.

ஆன்ட்டியால தனியா சமாளிக்க முடியாது. எங்க அம்மாவும் தனியா பாத்துக்க கஷ்டப்படுவாங்க. எல்லாரும் ஒண்ணா இருந்தா மாற்றி மாற்றி பாத்துக்கலாம்” என்றான் ராஜு.

பாதி பிரச்சினை தீர்ந்தார் போல இருந்தது ஜித்துவுக்கு. “அத்தை வருவாங்களா? மாமா என்ன சொல்லுவாரு” என கேட்டாள்.

“அப்பா கொஞ்சம் யோசிப்பாரு. பார்மாலிட்டி பாப்பாரு. அம்மாவுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை. ஜித்துவ நா பாத்துக்கறேன்னு சொல்லிட்டே இருக்காங்க. குட்டிய விட்டு அவங்களால இருக்க முடியாதாம்.

நீயும் அப்பாவும் பாண்டில இருங்க. நா ஜித்து கூட போய் இருக்கேனு சொல்றாங்க” என சிரித்தான் ராஜு.

இரண்டு நாள் பாடாய்படுத்திய மன உளைச்சல் நீங்கியது போல இருந்தது ஜித்துவுக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லி கண் மூடி அமர்ந்திருந்தாள்.

இரண்டு நிமிடம் கழித்து “தேங்க்ஸ் ராஜு” என்றாள்.

“எனக்கு என்ன காரெடுத்தா மூணு மணி நேரத்துல வந்துடுவேன். உங்க எல்லாரையும் வீக் டேஸ்ல மிஸ் பண்ணுவேன். உனக்கும் அப்படித்தானே. என்ன பண்றது? எனக்கு ட்ரான்ஸ்பர் ஆக முடியாது. உனக்கும் அங்க வர வாய்ப்பு இல்ல. தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணோம்” என்றான்.

ஆக கணவன் மனைவி இருவரும் அவர்கள் நிலையை தெளிவாக உணர்ந்து இருந்தார்கள். பரஸ்பரம் தங்கள் வேலையை காப்பாற்றிக்கொண்டும் அதே சமயம் மற்றவர் வேலை பாதிக்காத வண்ணம் எப்படி வாழ்வது என்று யோசித்து இருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டில் சில சங்கடங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அத்தனையையும் எதிர் நோக்கித்தான் இந்த பந்தத்தில் இணைந்திருக்கிறோம் என்ற புரிதல் இருந்தது.

கணவன் மனைவி உறவிலும், குழந்தை வளர்ப்பிலும் இந்த முடிவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரிந்து வைத்திருந்தார்கள். கூடிய மட்டும் என்ன செய்து அந்த தாக்கத்தை குறைப்பது என பேச ஆரம்பித்தார்கள்.

“அம்மா உங்க வீட்ல இருக்குறது அசௌகர்யமா இருக்கும்னு எங்க வீட்ல பீல் பண்ணா பக்கத்துலயே தனியா ஒரு வீடு எடுத்துக்கலாம். அப்பாவுக்கு இன்னும் ஒரு வருஷம் தான் சர்வீஸ் இருக்கு. ரிட்டயர்டு ஆகிட்டா அங்க வந்து உங்களோட இருக்கட்டும். என்ன நா பாத்துக்குவேன்” என தெளிவாய் சொன்னான் ராஜு.

ராஜுவின் போக்கு இலகுவானது. பெரிதாய் எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டான். பரபரப்பே இல்லாமல் எப்போதும் ஒரு நிதானத்தோடு நடந்து கொள்பவன். ஜித்துவுக்கு ராஜுவின் அணுகுமுறை ஆதரவாக இருந்தது.

கற்பகம் வீசிய கடும் சொற்களின் காயம் சற்று ஆறியது போல இருந்தது.

ஆனாலும் இவர்களை அசைத்துப்பார்க்கும் பல பேச்சுகளையும் நிகழ்வுகளையும் எதிர் கொள்ள கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்ததும் “பேசிட்டியா? என்ன சொன்னார்” என கேட்டார் கற்பகம்.

“நீ பதறுற மாதிரி ஒரு சிச்சுவேஷனும் இல்ல. கொஞ்ச நாள் பேசாம இரு. ராஜு பாத்துப்பான்” என சொல்லி முடித்தாள்.

கற்பகத்துக்கு ஆர்வம் தாளவில்லை.

“என்ன தான் முடிவு பண்ணீங்க” என திரும்ப கேட்டார்.

“மா, அமைதியா இரு. முடிவு பண்ற நேரம் வரும் போது பாத்துக்கலாம். எல்லாத்தையும் ஒரே நாள்ல எங்களால சரி பண்ண முடியாது. எல்லாரையும் திருப்திபடுத்தவும் முடியாது. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். என்னால உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. மாமாகிட்ட நீங்க பதில் சொல்ற நெலமைய நா விடமாட்டேன். நானோ இல்ல ராஜுவோ அவர்கிட்ட பேசுறோம்” என நாசூக்காய் சொல்லி முடித்தாள்.

இரண்டு வாரம் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. மொத்த குடும்பமும் கூடி கொண்டாடி தீர்த்தார்கள். ஒரு மாதம் ஆனது அவர்களின் கவனம் ஜித்துவின் பக்கம் வர.

ஜித்துவும் குழந்தையும் இரண்டாவது வாரமே பாண்டிச்சேரி வந்து விட்டார்கள். தினம்தோறும் யாராவது ராஜு வீட்டு உறவினர்கள் வந்து பார்த்து விட்டு போனார்கள். போகும் பொது ஏதாவது ஒரு கேள்வியை கேட்டு விட்டு போவார்கள்.

“லீவ் முடிஞ்சி அங்க போய்டுவியா?”

“இங்க வேல கிடைக்காதா”?

“எவ்ளோ நாள் இப்டியே பிரிஞ்சி இருப்பீங்க? குழந்தை ஏங்கி போயிடுவான்”

“காசு பணம்னு இருந்தா நாளைக்கு திரும்பி பாத்தா ஒண்ணும் இருக்காது”

“படிச்சவங்க நீங்க. உங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு. ஆனா வயசான தாத்தா பாட்டி, நீ குழந்தைய தூக்கிட்டு போயிட்டா ஏங்கிடுவாங்க”

ஆளாளுக்கு ஒரு பாயிண்டை போட்டுவிட்டு போனார்கள். 

ஓவ்வொருவர் வரும்போதும் குமரேசன் பைபாஸ் ரோடு காலேஜ் ஆப்ஷனை எடுத்து வைப்பார்.

“அட ஆமால்ல. அது உங்க வீட்டுக்கு ரொம்ப பக்கமாச்சே. ஏம்மா ஜிதேஸ்வரி நீ ஏன் இங்கயே காலேஜுல வேல பாக்க கூடாது?” என விஷயம் தெரியாமல் ஒரு பிட்டை போடுவார்கள். ஜித்துவுக்கு ஆறு மாதம் கழித்து சென்னை போவோம் என்ற நம்பிக்கை கொஞ்ச நாளில் போனது.

ராஜூவுக்கும் ஜித்துவுக்கும் இது பெரும் தலைவலியாக இருந்தது.

பேசாமல் ஜித்து அங்கேயே இருந்திருக்கலாம். நாம சொல்லவேதான் இங்க வந்தா. இப்ப வர்றவங்க போறவங்க எல்லாரும் அவளுக்கு அட்வைஸ் பண்ணிட்டு போறாங்க” என வருந்தினான் ராஜு.

“நீ ஒண்ணும் கவலைப்படாதே. நா அம்மாகிட்ட பேசிட்டேன். அவங்களும் உன் கூட வர ரெடியா இருக்காங்க. அப்பாவை நா சமாளிச்சுக்குறேன். கெஸ்டுங்களுக்கு என்ன தெரியும் நம்மள பத்தி. பேசிட்டு போகட்டும் விடு” என சமாதானப்படுத்தினான் ராஜு.

ஐந்து மாதங்கள் ஆனது. இன்னும் ஒரு மாதம் தான் இருந்தது வேலைக்கு போக.

“அப்பா, அடுத்த மாசம் ஜித்து ஆபீஸ் போகணும். சென்னைல தனியா வீடு பாக்க ஆரம்பிக்கணும். அம்மா கூட போய் இருக்கட்டும்” என ஆரம்பித்தான் ராஜு.

“பைபாஸ் ரோடு” என இழுத்தார் குமரேசன்.

“அப்பா ப்ளீஸ்ப்பா, இது என் டெஸிஷன்” என சுருக்கமாய் முடித்தான் ராஜு.

காமாட்சியும் ராஜுவும் சென்னைக்கு போவதில் உறுதியாக இருந்தார்கள். வேண்டாவெறுப்பாக வீட்டில் வலம் வந்தார் குமரேசன்.

அடுத்த இரண்டு வாரத்தில் வீடு பார்த்து ஒரு நல்ல நாளில் பால் காய்ச்சினார்கள். எவ்வளவு கூப்பிட்டும் குமரேசன் போகவில்லை.

House warming function

ஜித்துவின் பெற்றோருக்கு தர்மசங்கடமாக இருந்தது.

ஆனால் ராஜுவும் காமாட்சியும் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஜித்துவை மும்பையிலிருந்து வரவழைக்க அம்மாவும் பிள்ளையும் பட்டபாடு அவர்களுக்கு தான் தெரியும்.

ரொம்பவும் அவளை பாடுபடுத்தினா, திரும்ப மும்பைக்கே போறேன்னு சொல்லிட்டாள்னா என்ன பண்றது என்ற பயம் இருவருக்கும் இருந்தது. அந்த பயத்திற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.

ராஜூவை விட இப்போதே அறுபது சதவிகிதம் அதிக சம்பளம் ஜித்துவிற்கு. மும்பை போனால் கண்டிப்பாக மூன்று வருடங்களில் வெளிநாட்டு பணிக்காக அவர்களே அனுப்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே சென்னையில் அவளை தொடர அனுமதிப்பது தான் தங்களின் எதிர்காலத்துக்கு நல்லது என கருதினான் ராஜு.

அதை காமாட்சிக்கும் புரிய வைத்த பிறகு அம்மாவும் பிள்ளையும் ஜித்துவை முடிந்த வரை குமரேசன் எதுவும் சொல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

காமாட்சி குழந்தையை பார்த்துக் கொள்ள, வீட்டு வேலை செய்ய தனியாக ஒரு பெண்மணியை அமர்த்திக்கொண்டாள் ஜித்து. புஷ்கர் பிறந்து ஒரு வருடம் ஆனது. குமரேசன் தவிர மற்ற மூவரும் இந்த ஏற்பாட்டில் சுமுகமாக இருந்தார்கள்.

சொல்லப் போனால் காமாட்சிக்கு சென்னையில் இருப்பது பாண்டியை விட வசதியாக இருந்தது. வீட்டு வேலையை பணிப்பெண்ணும் கடை மற்றும் வெளிவேலைகளை ஜித்துவும் பார்த்துக் கொள்ள காமாட்சிக்கு ஓய்வும் நன்றாக கிடைத்தது.

அடுத்த வருடம் பணி ஓய்வு பெற்ற பிறகு சென்னைக்கு போய் தங்குவதில் குமரேசனுக்கு உடன்பாடில்லை. என்ன சொல்லி தவிர்க்கலாம் என யோசித்தார். ஓய்வு பெற்ற பிறகு ஹார்டுவேர் கடை துவங்கலாம் என முடிவெடுத்தார்.

வீட்டின் முன் பகுதியில் இருந்த ரூமை சற்று விரிவுபடுத்தி தெரு பக்கம் இருந்த காலி இடத்தோடு சேர்த்து ஒரு கடையாக மாற்றினார். ஆறு மாத காலத்தில் கட்டிட வேலை முடிந்து ஹார்டுவேர் கடை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய ஆரம்பித்தார்.

வீம்புக்கு குமரேசன் செய்யும் வேலைகள் காமாட்சிக்கு வருத்தத்தை கொடுத்தது. ஒரே மகள் ஆந்திராவில் வசிக்க மகனுடைய குடும்பத்தோடு தங்காமல் வீண் பிடிவாதமாக அங்கேயே இருப்பது எரிச்சலாய் இருந்தது.

காமாட்சி அந்த காலத்திலேயே ஆசிரியர் பணிக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். திருமணமான சில ஆண்டுகளில் அரசாங்க வேலையும் கிடைக்கும் சூழல் இருந்தது.  குமரேசன் தனியார் பாக்டரிலயில் வேலை செய்து கொண்டிருந்தார்.

மனைவிக்கு அரசாங்க வேலை கிடைத்தால் தன்னை விட அதிக வருமானமும் சமூகத்தில் நல்ல அங்கீகாரமும் கிடைக்கும். காலம் முழுக்க  தான் ஒரு படி கீழ் நிலையில் ஏன் இருக்க வேண்டும் என நினைத்தார்.

குமரேசனும் அவரின் தாயாரும் காமாட்சி வேலைக்கு போக வேண்டியதில்லை என தீர்க்கமாக சொல்லி விட்டார்கள். சில ஆண்டுகள் அந்த ஏக்கம் காமாட்சிக்கு இருந்தது. காலப்போக்கில் அவருடைய கல்வி தகுதியை மறந்தே போனார். ஆனால் இப்போது ஜித்துவின் உறுதியை பார்க்கும் போது தானும் இவள் போல இருக்க தவறியதை எண்ணி வருந்தினார்.

ஜித்துவையும் கற்பகத்தையும் பார்க்கும் போது தான் பொருளாதார சுதந்திரமும், உரிமையும் இல்லாமல் வாழ்ந்தது முற்றிலும் தன் தவறு என ஒவ்வொரு நாளும் உணர்ந்தார். பேச வேண்டிய நேரத்தில் தன் சுய முன்னேற்றத்திற்காக பேசாமல் விட்டது தன் பிழை என ஆணித்தரமாய் நம்பினார்.

குமரேசனின் இந்த குணத்தால் ஜித்துவும் பாதிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. ஆதி காலத்திலிருந்து அவரின் தாழ்வு மனப்பான்மையால் தான் பட்டது போதும். இவளாவது அவள் காலில் நிற்கட்டும் என கணவரின் கடை வைக்கும் எண்ணத்திற்கு பின் உள்ள சூட்சுமம் புரிந்து எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தார்.

அடுத்து வந்த ஆண்டுகளில் இரண்டாவதாய் பெண் குழந்தை பிறந்தது. காமாட்சி முழுமையாக பேரக் குழந்தைகளோடு இருந்ததால் பாண்டிக்கு திரும்ப போகும் எண்ணம் துளியும் இல்லாமல் இருந்தார்.

ஜித்துவின் வருமானம் அதிகமாக வந்த காரணத்தால் ஹவுசிங் லோன் போட்டு பெரிய வீடாய் கட்டினார்கள். ஏற்கெனவே இருந்த காரை மாற்றி, மொத்த குடும்பமும் போய் வர ஏதுவாக இருபது லட்சத்துக்கு ஒரு காரையும் வாங்கினார்கள்.

ராஜுவும் ஜித்துவும் கலந்து பேசி பண விவகாரங்களை சுமுகமாக கையாண்டு நல்ல வளர்ச்சி பாதையில் குடும்பத்தை நடத்தினார்கள்.

Tamil novel – Jiteswari – Part 4/21

A family discussion

ஜித்து வாரம் முழுவதும் சென்னையில் அம்மா வீட்டில் இருந்து வேலைக்கு போய் வருவதால், வார இறுதி நாட்களில் பாண்டி போய் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு திங்கள் காலை அங்கிருந்து சென்னைக்கு  திரும்ப வருவாள். ஆரம்ப கால கட்டத்தில் அது யாருக்கும் பிரச்சினையாக இல்லை. ஒரு வருடம் கழித்து ஜித்து கர்ப்பமான பிறகு அவளுடைய பயணம் கணிசமாக குறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ராஜு வாரம் தவறாமல் வந்து பார்த்துக் கொள்வான். ஆனால் மாமனாருக்கு இதில் உடன்பாடில்லை.

“ஏம்மா, நம்ம காரைக்கால் பை பாஸ் ரோடுல ஒரு இன்ஜினியரிங் காலேஜ் இருக்கில்ல. அதுல வேணா வேலைக்கு ட்ரை பண்ணேம்மா. வீட்லேர்ந்து கால் மணி நேரத்துல போயிடலாம்” என அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.

டீச்சிங் வேலையில் ஜித்துக்கு விருப்பமில்லை. ஜித்து ஒரு முழு நாளில் வேலை நேரத்தில் பேசும் வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் அந்த விரல்களுக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து டைப் செய்து கொண்டிருப்பாள்.

எந்த ஒரு கவனகுறைவுமின்றி, நூறு சதவீத துல்லியத்தோடு தகவல்களை சேகரித்து பைல் செய்து அனுப்ப வேண்டும். பெரும்பாலும் வீட்டில் ஓரு தனி அறையில் அமர்ந்து வேலை செய்து பழகியவள்.

“இல்ல மாமா, எனக்கு காலேஜ் வேலைல விருப்பமில்லை” என ஒரு நாள் தெளிவாக கூறி விட்டாள்.

அவர் இந்த சுருக்கமான, நேரிடையான பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதே நிலை தொடர்ந்தால் குழந்தை பிறந்த பிறகும் அவர்கள் இரு வேறு இடங்களில் பிரிந்தே வாழ வேண்டிய நிலை தொடரும்.

அவர் இந்த விஷயத்தை ராஜுவிடம் தெளிவாக விளக்கினார். காமாட்சிக்கு அது தான் சரி என பட்டது. நாளை பேரனோ பேத்தியோ பிறந்த பிறகு அவர்களை அங்கேயே தொடர்ந்து தங்க வைப்பது சரி இல்லை என யோசித்தார்.

டெலிவரி முடியட்டும். பிறகு பார்க்கலாம் என சொன்னான் ராஜு.

காமாட்சியும் குமரேசனும் இந்த விஷயத்தை சம்பந்தியிடம் தனியாக விவாதித்தார்கள்.

“இதே மாதிரி இருந்தா அவங்க எப்போ ஒரு எடத்துல குடுத்தனம் பண்றது? ராஜுவும் குழந்தையும் எவ்வளவு நாள் பிரிஞ்சி இருக்குறது? சின்ன குழந்தையை வாரா வாரம் தூக்கிட்டு அங்க வர முடியுமா? நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” என சொல்லி வைத்தார்கள்.

கற்பகம் பிரசவம் முடியட்டும் என காத்திருக்கவில்லை. மெதுவாக ஜித்துவிடம் நிலைமையை விளக்க ஆரம்பித்தார்.

mother and daughter

“மா, என்னை சென்னைல இருந்து வேலை செய் அப்படின்னு சொல்லி தானே ரெண்டு பேமிலியும் சொன்னீங்க. இப்போ பாண்டி போனு சொன்னா அங்க போய் நான் என்ன பண்றது?” என கோபமாக கேட்டாள்.

“சொன்னோம்டி. அதுக்காக அதே ஸ்டாண்ட்ல இருக்க முடியுமா? வாழ்க்கை எப்படி போகுதோ அதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் நாமளும் அட்ஜஸ்ட் பண்ணனும். அவங்களும் பாரு, ரெண்டு வருஷம் பொறுமையாதானே இருந்தாங்க. அப்புறம் குழந்தையும் பிரிஞ்சி இருக்கணும்னா வேதனையா தானே இருக்கும்” என சமாதானப்படுத்தினார் கற்பகம்.

“அங்க போய் என்னை பீச்ல குச்சி ஐஸ் விக்க சொல்றியா” என கூர்மையாய் கேட்டாள் ஜித்து.

“ஏண்டி சத்தாய்குற, அங்க என்ன பணத்துக்கா பஞ்சம். நீ கொண்டு வந்து தான் சோறு பொங்க போறாங்களா” என கோபமாய் கேட்டார் கற்பகம்.

“மாப்பிளைக்கு கவர்ன்மென்ட் வேலை. மாத்திக்கிட்டு வேற எடத்துக்கு வர முடியாது. உனக்கு என்ன? தனியார்ல தானே வேல பாக்குற. அங்க போய் உனக்கு என்ன வேலை கிடைக்குதோ செய்” என காட்டமாய் சொன்னார்.

“நானா கவர்ன்மென்ட் மாப்பிளை கேட்டேன்? தெளிவா இந்த இடம் வேணாம்னு சொன்னேன். அத இதை சொல்லி கன்வின்ஸ் பண்ணிட்டு இப்போ பாண்டிக்கு போனு சொல்றீங்க. அங்க எங்க பீல்டுக்கு கம்பெனிங்க எதுவும் இல்ல. என்ன பண்ண சொல்ற இப்போ” என குமுறினாள் ஜித்து.

“ஏண்டி நெற மாசமா இருக்குறப்போ பேசுற பேச்சா இது. இந்த நேரத்துல போய் வரன் பாத்த கதையை கொறை சொல்ற.  நாங்க சமாதானமா சொல்லுறோம். இப்பவே நீ முடிவு பண்ணு டெலிவரிக்கு அப்புறம் அங்க எப்போ போக போறேன்னு. அவங்க எப்படியும் முறையா வந்து கூப்பிடுவாங்க. அப்போ ஏதாவது வில்லங்கம் பண்ணாதே. எங்களால அவங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என தீர்க்கமாய் சொன்னார் கற்பகம்.

அம்மாவின் பேச்சிலிருந்து, இது தான் அப்பாவின் நிலைப்பாடும் என தெரிந்து கொண்டாள் ஜித்து.

“சரி நா ராஜூகிட்ட பேசுறேன். எனக்கு அந்த ஊருல ஸ்கோப் கிடையாது. அவர் வேணா வேற வேலைக்கு ட்ரை பண்ற ஐடியா இருக்கானு கேக்குறேன். அவரும் என்ஜினீயர் தானே. ரெண்டு பேருக்கும் எந்த ஊருல வேலை கிடைக்குதோ அங்கே போறோம். அத்தை மாமா எங்களோட வந்து இருக்கட்டும்” என தன் யோசனையை சொன்னாள் ஜித்து.

“ஒரு புண்ணாக்கும் வேணாம். ஊர்ல எல்லாரும் கவர்ன்மென்டு வேலை கெடைக்கணும்னு வேண்டிக்குறாங்க. ஒரே எடத்துல நிரந்தரமா இருக்கலாம். நீ என்னடான்னா பொட்டிய தூக்கிட்டு ஊர் ஊரா சுத்துறேன்ற. அவங்க இதை எப்படி ஒத்துக்குவாங்க. ஊரு உலகத்துக்கு யாரு பதில் சொல்றது. குமரேசன் அண்ணன் ஒரு மாதிரியான மனுஷன். நாம தன்மையா இருந்தா தங்கமா தங்குவார். ஆனா எனக்கு தெரிஞ்சு அவரு புள்ளைய அவரு வேலைய விட சொல்ல மாட்டாரு. நீ சொல்றதையெல்லாம் யாரும் கேக்க மாட்டாங்க. ராஜூ என்ன நீ கண்டிப்பா வேலைக்கு போய் சம்பாதிச்சிப் போடணும்னு சொல்றாரா என்ன?” என மூச்சு முட்ட பேசினார் கற்பகம்.

“ராஜு சொல்லித்தான் நீ என்ன எல் கே ஜி சேத்தியா? இல்ல நான் என்ஜினீயரிங் படிச்சேனா? என திருப்பிக் கேட்டாள் ஜித்து.

“இந்த வியாக்யானம் வௌக்குமாறெல்லாம் எங்க கிட்ட பேசாதே. உன் ஆபீஸோட வச்சிக்க. எங்களால இத அவங்ககிட்ட பேச முடியாது. நீயும் இந்த டாபிக்கை இதோடு விட்டுடு. அவங்க காதுக்கு போய் ஏதாவது ஏடாகூடமா பேசிட்டா நம்ம மரியாதையை நாமளே கெடுத்துக்கிட்ட மாதிரி ஆகும். ஒரு தடவை மரியாதை போச்சுன்னா அப்புறம் காலத்துக்கும் அனுபவிக்கனும்” என முட்டுக்கட்டையை ஸ்ட்ராங்காக போட்டார் கற்பகம்.

“அட்லீஸ்ட் நா ராஜு கிட்ட ஒரு தடவ இதை பத்தி பேசுறேன். அப்புறம் மாமா கிட்ட சொல்லிக்கலாம்” என இழுத்தாள் ஜித்து.

“டெலிவரி நேரம் இப்போ. ரெண்டு குடும்பமும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இந்த நேரத்துல தேவையில்லாத பேச்செல்லாம் பேசி குழந்தை பொறக்குறப்போ அவங்க மூஞ்ச திருப்பிட்டு போற மாதிரி எதுவும் பண்ணிடாதே. கொஞ்ச நாளைக்கு வேலைய விட்டுட்டு குழந்தைய பாத்துக்க. அப்புறம் அங்க உனக்கு ஏத்த மாதிரி என்ன வேலை கிடைக்குதோ அதுல போய் சேந்துடு. எண்ணை கம்பெனிலயே வாழ்க்கை முழுக்க வேலை செய்யணும்னு ஒரு கட்டாயமும் இல்லை” என விடாப்பிடியாய் பேசினார் கற்பகம்.  

“மா, ராஜு இது வரை என்னை ரிசைன் பண்ண சொல்லி எப்பவும் சொன்னதில்லை” என அதிர்ச்சியாய் சொன்னாள் ஜித்து.

“அப்போ நீ மட்டும் இது வரை டெய்லி சொல்லிட்டிருந்தியா கவர்ன்மென்டு வேலைய விடுங்கன்னு? நீ இப்போ போய் அவரை வேலைய விட சொன்னா அவரு என்ன நெனப்பாரு” என மூர்க்கமாய் கத்தினார் கற்பகம்.

“மா, நா வேலைய விட சொல்லல. வேற வேல பாத்துக்கலாம்னு சொல்றேன். க்ளியரா புரிஞ்சிக்கிட்டு பேசு. என்ன மட்டும் ரைட் ராயலா வேலைய விட சொல்ற. திருப்பி நா கேட்டா ஒலகமே புரண்ட மாதிரி கத்துற?” என நிதானமாய் கேட்டாள் ஜித்து.

இது முட்டு சந்தில் நிறுத்தும் கேள்வி கற்பகத்திற்கு. ஒரு நிமிடம் வாயடைத்து நின்றார் அவர்.

“மா, இங்க பாரு. எனக்கு எட்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. கஷ்டப்பட்டு வேல செஞ்சுதான் நா இந்த பொசிஷன்ல இப்போ இருக்கேன். சென்னைக்கு வந்ததே எனக்கு டவுன் தான். இப்போ என்னடான்னா அசால்ட்டா வேலைய ரிசைன் பண்ண சொல்லுற? கல்யாணம் ஆனா குழந்தை பிறக்கும், குடும்பம் பெரிசாகும், வேற வேற ஊர்ல இருந்தா சரிப்படாது, சென்னைக்கு வரலேன்னு சொன்னேனே அப்போ என்ன சொன்ன என்கிட்டே? அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். உன் வேலைக்கு ஒரு பிரச்சினையும் இல்லேன்னு சொல்லிட்டு இப்போ மாத்தி பேசுர” என சீறினாள் ஜித்து. 

“இது என்ன உங்க கம்பெனில போடுற மாதிரி கான்ட்ராக்டா? குடும்பம்டி, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நாம தான் விட்டு கொடுக்கணும்” என பணிவாய் சொன்னார் கற்பகம்.

“நாம இல்ல, நா விட்டு குடுக்கணும்னு சொல்ற இப்போ. இது எனக்கு மட்டும் தான் குடும்பமா? அவங்களுக்கு இல்லியா?” என திருப்பிக் கேட்டாள் ஜித்து.

இது லேசில் முடிகிற காரியமாக தெரியவில்லை கற்பகத்திற்கு. இவள் முரண்டு பிடிவாதம் நியாயமாகதான் பட்டது.  ஆனால் சம்மந்தி வீட்டில் அதை சொல்லும் தைரியம் ஜித்துவின் பெற்றோருக்கு இல்லை.

இந்த விஷயம் தங்களுக்குள்ளேயே முடிந்து டெலிவரி ஆன பிறகு சுமுகமாக ஜித்து பாண்டி கிளம்பி போய் செட்டிலாக வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம்.

ஜித்துவுக்கு அம்மாவின் பேச்சு எரிச்சலாக இருந்தது. “நல்லா படி, அப்போ தான் நல்ல வேலைக்கு போய் சுயமா வாழ முடியும். பொம்பளைங்க கைல எப்பவும் வருமானம் இருக்கணும். இல்லேன்னா ஒரு நாய் மதிக்காது. நானே இந்த நர்ஸ் வேலைல இல்லேன்னா உங்க அப்பா இன்னும் கொஞ்சம் ஆட்டம் போடுவாரு. சொளையா ஒண்ணாந்தேதி காசு வந்து விழவே தான் வால சுருட்டிக்கிட்டு இருக்காரு” இது நினைவு தெரிந்த நாளிலிருந்து ஜித்துவுக்கு அவள் அம்மாவிடமிருந்து கிடைத்த அறிவுரை.

அது வேற வாய். இது நார வாய் என்ற நிலையானது இப்போது.

அந்த வார இறுதியில் ராஜு வீட்டுக்கு வந்தான். கற்பகத்துக்கு உதறல் ஆரம்பித்தது. இவள் வாய் சும்மாயிருக்காது. எப்படியும் கேட்டு விடுவாள். தனியாக போய் ஜித்துவிடம் எச்சரித்தார்.

“மா, இது என் லைப். நா பாத்துக்கறேன். உனக்கு எதுவும் டேமேஜ் ஆகாது. நீ இனிமே இதுல தலையிடாதே. உங்க பேச்ச எல்லாம் நம்பி இருந்தேன் பாரு. என்னை சொல்லணும். இது வேலை மட்டும் சம்மந்தப்பட்டது கிடையாது. எங்க பைனான்ஸ் விஷயங்களையும் நாங்க டிஸ்கஸ் பண்ணனும். ராஜுவுக்கு என்ன மைண்ட்ல இருக்குனு நா தெரிஞ்சுக்கணும். என் நிலைமையும் அவருக்கு தெரியணும். இது மூடி வெக்குற விவகாரம் கிடையாது. உங்க சம்மந்தி பாசத்துக்கு ஒரு பங்கமும் வராம நாங்களே முடிவெடுக்குறோம்” என சொல்லி முடித்தாள் ஜித்து.

இந்த கால பிள்ளைகள் பிரச்சினையை எதிர் கொள்ள தயங்குவதும் இல்லை, பிரச்சினையே இல்லாமல் ஒதுங்கி போக வேண்டும் என்றும் நினைப்பதில்லை.

கார்ப்பொரேட் ரத்தம் என நினைத்துக் கொண்டார் கற்பகம்.

a senior woman reflecting life

Tamil novel – Jiteswari – Part 3/21

A woman engineer

ஜிதேஸ்வரி மெக்கானிகல் என்ஜினீயர். திருமணத்திற்கு முன்பு மும்பையில் ஐந்து வருடம் பணியில் இருந்தாள்.  கணவர் ராஜு எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். பாண்டியில் ஈபி ஆபீசில் நிரந்தர வேலையில் இருக்கிறார். ராஜுவின் வரன் வந்தபோது ஜிதேஸ்வரி தனது வருங்கால வேலை வாய்ப்புகளை பற்றி யோசித்தாள்.

ஜிதேஸ்வரி ஒரு சர்வதேச எரிவாயு நிறுவனத்தின் மும்பை கிளையில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். தமிழகத்தில் அது போன்ற நிறுவனங்கள் மிக குறைவு. பாண்டியிலோ ஒன்று கூட கிடையாது.

ஜித்து அவள் பெற்றோரிடம் இந்த வரனை தவிர்க்குமாறு சொல்லி விட்டாள்.

ராஜுவின் குடும்பம் கற்பகத்தின் உறவு வழியில் தூரத்து சொந்தம். விசாரித்ததில் நல்ல குடும்பம் என செய்தி வந்தது. ஜிதேஸ்வரியின் தந்தை இந்த வரனை முடிப்பதில் குறியாய் இருந்தார். நல்ல பையன், நல்ல வேலை மட்டுமல்லாமல் அடிக்கடி போய் பார்க்க ஏதுவாக பாண்டியிலேயே சம்பந்தம் கிடைத்ததில் அவருக்கு பரம சந்தோஷம்.

இது ஊருக்கும் வீட்டாருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவருக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது. ஜிதேஸ்வரி செய்வது ஒரு நுட்பமான வேலை. நல்ல பதவி இந்த வயதிலேயே. அவர் பணி ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தை விட இப்போது அவர் மகள் வாங்குவது அதிகம். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக இன்னும் நல்ல ஊதியம் கிடைக்கும். மேலும் பல நாடுகளில் பணி புரிய வாய்ப்பும் கிடைக்கும். இங்கு தான் அவரின் கவலை நிலைகொண்டது. இந்த ஆண்டு வரன் அமையாவிடில் அடுத்து வரும் ஆண்டுகளில் மகளின் தகுதிக்கேற்ப வரன் தேடுவது மிக சவாலான விஷயமாக இருக்கும். அவர்கள் சார்ந்த சமூகத்தில் அந்த அளவு நிலையில் இருப்பவர்கள் மிகவும் அரிதாக இருந்தது. அப்படி இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வரன்களாக இருந்தார்கள்.

அவருக்கு மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப இஷ்டமில்லை. அதனால் எப்படியாவது இந்த வரன் அமைய வேண்டும் என்று நினைத்தார்.

ராஜுவின் வரனை முடிப்பதில் அவளின் பெற்றோர்கள் மும்முரமாக இருந்தார்கள். ஜிதேஸ்வரிக்கும் ராஜூவை பிடித்திருந்தது. ஆனால் சிக்கல் ராஜுவின் அரசாங்க வேலையும் ஊரும் தான். 

மும்பையில் வேலை பார்க்க விருப்பமா என கேட்டாள் ஜிதேஸ்வரி. ராஜூவை விட அவர் தந்தை இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தார். மகன் எப்போதும் பாண்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம்.

இரண்டு தரப்பும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். சில மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜிதேஸ்வரியின் மீது அழுத்தம் அதிகமானது. ஜிதேஸ்வரி அவள் வேலை செய்யும் கம்பெனியில் சென்னைக்கு மாற்றலுக்கு விசாரித்தாள்.

இடமாற்றல் சாத்தியம் என சொன்னார்கள். ஆனால் அடுத்த பணி உயர்வின் போது மும்பையில் இருக்க வேண்டும். இப்போது இருக்கும் நிலையிலேயே இன்னும் சில ஆண்டுகள் சென்னையில் தொடரலாம் என ஒரு சிக்கலான சூழல். இந்த மாற்றம் முழுமையான பலனளிக்காது என தோன்றியது அவளுக்கு. அப்போதும் ராஜு சென்னைக்கு மாற்றலாகி வரப்போவது இல்லை. வார இறுதி நாட்களில் யாராவது ஒருவர் போய் மற்றொருவரை சந்திக்கும் நிலை.

ராஜுவின் தந்தைக்கு இந்த தாமதம் எரிச்சலூட்டியது. ஒரு வேளை ராஜு மனம் மாறி மும்பை போவதாக முடிவெடுத்தால், அதற்கு பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு வருவது அரிதானதாக இருக்கும். அதனால் பேசாமல் இந்த பெண்ணை விட்டுவிட்டு வேறு வரன் பார்க்கலாம் என முடிவெடுத்தார். இரவு உணவின் போது ராஜுவிடம் இது பற்றி பேசினார்.

“இல்லப்பா, ஜிதேஸ்வரி முடிவெடுக்கட்டும். நாம வெயிட் பண்ணலாம்” என சுருக்குமாய் முடித்தான்.

இந்த பதிலில் ராஜுவின் விருப்பம் வெளிப்படையாக தெரிந்தது. அதனால் இதற்கு மேலும் காத்திருப்பது ஆபத்து என உணர்ந்தார். அடுத்த நாள் ஜிதேஸ்வரியின் தந்தையிடம் நேரில் போய் அவர் கவலையை பகிர்ந்து கொண்டார்.

இரு வீட்டு பெரியோர்களும் தங்கள் பிள்ளைகள் வேறு ஊரில் வசிப்பதை விரும்பவில்லை. ராஜுவின் அப்பா இவ்வளவு தூரம் தானாக முன்வந்து பேசியது பெண் வீட்டாருக்கு பிடித்திருந்தது. ராஜு உறுதியாக இருப்பது இன்னும் சந்தோஷமாக இருந்தது.

மீண்டும் பெண்ணிடம் பேசி விட்டு இந்த வாரத்திற்குள் முடுவு சொல்வதாக சொல்லி அனுப்பி வைத்தார்கள். அந்த வார இறுதியில் மும்பை போய் மகள் வீட்டில் இறங்கினார்கள்.

இந்த விஷயத்திற்காக அவர்கள் இவ்வளவு தொலைவு வந்தது நிலைமையின் வீரியத்தை அவளுக்கு உணர்த்தியது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முழுதாக இந்த வரனை பற்றி விவாதித்தார்கள். சென்னை இட மாற்றலின் விளைவுகளை விவரித்தாள் ஜிதேஸ்வரி. அவள் ஆபீசில் விசாரித்ததே அவர்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. மேலும் ஒரு வாரம் தங்கி இருந்து இன்னும் தீவிரமாக அவளை கரைக்க ஆரம்பித்தார்கள். பத்து நாள் கடந்த பிறகு சென்னை மாற்றலுக்கு ஜிதேஸ்வரி விண்ணப்பித்தாள். அடுத்த ஒரு மாதத்தில் சென்னை வந்து சேர, திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பிறகு இருபதே நாட்களில் திருமணமும் நல்ல படியாக நடந்தது.

A traditional Tamil marriage ceremony

Tamil novel – Jiteswari – Part 2/21

Covid hospital situation

அவர் கணவர் ஒரு வாரம் கழித்து குணமாகி வெளியே வந்தார். பத்து நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை கற்பகத்திற்கு.

“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என செய்தி அனுப்பினார் இரவு. மறு காலை காலமானார். ஒரிசாவில் இருந்து மகனும் பாண்டியில் இருந்து மகளும் வர இயலாத சூழல்.

சாவின் விளிம்பு வரை சென்று மீண்ட நிலையில் பித்து பிடித்தார் போல இருந்தார் அவர் கணவர். செய்தி வர சங்கு புஷ்பமும் நேசப்பாவும் ஒடிந்து போனார்கள். நடக்க கூடாது என்று வேண்டிய ஒன்று நடந்து விட்டது.

கதறும் பிள்ளைகளை தாங்கவோ, கடந்து போனவருக்கு மரியாதை செய்யவோ இயலாத சூழல். இரண்டு மணி நேரம் அமைதியாக போனது.

சங்கு புஷ்பம் ஆனந்துக்கு போன் போட்டார்.

ஆனந்த் ஒரு மணி நேரத்தில் இரண்டு செட் கவச உடைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பிள்ளைகள் யாருக்கும் சொல்லாமல் இருவரும் கிளம்பி மருத்துவமனைக்கு போய் சேர்ந்தார்கள்.

அங்கே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார் கற்பகத்தின் கணவர்.

நேசப்பா போனதும் பாய்ந்து கட்டிக் கொண்டு கதறினார்.

சங்கு புஷ்பம் அவரை தாங்கலாய் பிடிக்க அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.

அரை மணி நேரம் ஆனது அவர் சற்று நிதானமாக.

ஜித்து போன் வந்தது அப்பாவிற்கு. அவர் போனை எடுத்து சங்கு புஷ்பத்திடம் நீட்ட உடைந்து போனார் சங்கு புஷ்பம்.

நேசப்பா கைத்தாங்கலாக அவரை அழைத்து சென்று காரில் அமர வைத்தார்.

அந்த நிமிடம் அந்த போனின் ஓசை சங்கு புஷ்பத்தின் மனதை பிசைந்தது. முதலில் அதை சைலண்டில் போட்டார். அவர்களுக்கு விஷயம் தெரியும். அப்பாவிடம் பேச விரும்புகிறாள்.

கால் ஹிஸ்டரியை பார்த்தார். வெறும் இரண்டு நிமிடம் மட்டும் பேசியிருக்கிறார்கள் காலையில். மகனிடமும் சில நிமிடங்கள்.

முழு கவச உடையில் சங்கு புஷ்பம் உள்ளே போனார். சக சிஸ்டர்கள் எல்லாரும் ஆழ்ந்த வருத்தத்திலும் பணிச் சுமையிலும் இருந்தார்கள்.

சற்று நேரம் எட்ட இருந்து கற்பகத்தை பார்த்தார்.

“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என அவரின் கடைசி செய்தி மனதில் நிழலாடியது.

ஜித்துக்கு போன் போட்டார். “அம்மாவ பாக்குறியாடா கண்ணா” என மெதுவாய் கேட்டார்.

அந்த பக்கம் கேட்ட ஓலக்குரல் சங்கு புஷ்பத்தின் திடத்தை அசைத்துப் பார்த்தது. மகளும் மகனும் பார்த்து  கதற அந்த சிறிய போனை பிடிக்கக்கூட வலுவில்லாமல் நின்றார் சங்கு புஷ்பம்.

பிறகு அங்கு வந்த ஆனந்த், வலுக்கட்டாயமாய் சங்கு புஷ்பத்தை வெளியே அழைத்து வந்தார்.

அங்கே இருந்த சிறிய கட்டை சுவரின் மீது அமர்ந்தார் சங்கு புஷ்பம். சற்று நேரத்தில் வண்டி வர இறுதி சடங்கிற்கு கிளம்பினார்கள்.

எட்ட நின்றவாறு நேசப்பாவும் சங்குபுஷ்பமும் அவரவர் போனில் ஜித்துக்கும் அவர் அண்ணனுக்கும் காண்பித்தார்கள். சிம்பிளாக சில சாங்கியங்களை அவர் கணவர் செய்ய ஐந்து நிமிடங்களில் உள்ளே போனார் கற்பகம்.

ஆறாத்துயருடன் மகளும் மகனும் விடையளிக்க வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

அடுத்த இரண்டு நாட்கள் அவர்கள் இருவரின் போனும் அமைதியாக இருந்தது. யாருடனும் பேசும் மன நிலையில் அவர்கள் இல்லை.

அவர்கள் இருவருமே ஓரிரண்டு வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேசவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து சற்று கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் அழைத்து செல்ல மகன் வர கற்பகத்தின் கணவர் ஒரிசா கிளம்பினார்.

ஜித்து வந்து அவர்களை வழியனுப்பி பிறகு இவர்களை சந்தித்து பேசி விட்டு பாண்டிக்கு கிளம்பி போனாள்.

Tamil novel – Jiteswari – Part 1/21

A retired woman enjoying the morning with coffee

அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.

உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.

சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.

எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.

மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.

a senior attending phone call

“சங்குமா, எழுந்துட்டீங்களா? நா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றாள்.

“இல்ல ஜித்து, சொல்லு, எப்ப வர?” என்றார் சங்குபுஷ்பம்.

“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.

“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.

“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.

“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.

“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.

“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.

டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.

லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.

“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.

“அவங்க கிட்டயும், பசங்க கிட்டயும் காலைல ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ஜித்து போன் பண்ணி சொல்லிட்டாளாம்” என்றாள் லக்ஷ்மி.

வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.

லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.

ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.

ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர்
சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.

கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.

கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.

ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.

கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.

சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.

சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.

“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.

Tamil novel – OTP – Part 20/20

A senior citizen couple meeting their friend

கூட்டத்தில் இருந்து கிளம்பியவர்கள் குமரஜோதியை வள்ளியப்பன் கடையருகே வர சொன்னார்கள்.

அங்கு இருந்த பஸ் ஸ்டாப் காலியாக இருந்தது. அவரிடம் விவரம் சொல்லி அந்த பணத்தை அவரையே வைத்துக் கொள்ள சொன்னார்கள். அவரின் உதவிக்கு நன்றி சொல்லி யார் வந்து கேட்டாலும் அவர் எதுவும் தரவில்லை. நான் தண்ணீர் கேன் போட்டுவிட்டு வந்து விட்டேன் என சொல்லுமாறு அறிவுறுத்தி கிளம்பினார்கள்.

வீட்டுக்கு போய் உடை மாற்றி செல்லகுமாருக்கு நன்றி சொல்லி இருவரும் போய் பார்க்கில் உட்கார்ந்தார்கள். கல்பனா வந்தார். மொத்த கதையையும் கூர்ந்து கேட்டார்.

விஷயம் தலைமை வரை சென்று சேர்ந்ததை இவர்களிடம் சொன்னார். பி

றகு சற்று யோசித்த கல்பனா “இந்நேரம் லோக்கல் ஸ்டேஷன்க்கு மெசேஜ் வந்திருக்கும். இந்த மாதிரி சென்சிடிவ் மேட்டர் எல்லாம் குமரகுரு சார் தான் விசாரிப்பார். ரத்தினத்தை விசாரிச்சு அவர் உங்க பேர சொன்னா இங்க வர வாய்ப்பு இருக்கு. நாம தயாரா இருக்கணும்” என்றார்.

மூன்று பேரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு கல்பனா சில யோசனைகளை சொல்லி நான் பார்த்துக்கிறேன் என தைரியம் சொன்னார்.

செல்லகுமாரை போய் பார்த்தார் கல்பனா. யாராவது நேசமணி பற்றி விசாரிக்க வந்தால் தனக்கு தகவல் சொல்லுமாறு அறிவுறுத்தினார். பிறகு அவர்களிடம் என்ன கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என சொல்லி புரிய வைத்தார். அதையே சங்கு புஷ்பத்திற்கும் சொன்னார். அந்த இரவு சம்பந்தப்பட்ட அனைவருக்கும்ஒரு நெடிய இரவாக இருந்தது.

எம்பி அவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர் நம்பவில்லை. பிறகு “சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் பண்ண சொல்லுங்க. அப்புறம் பார்க்கலாம். நாளைக்குள்ள என்ன நிலவரம்னு சொல்லுங்க. ஏதாவது பிரச்சினை இருந்தா கேண்டிடேட்டை மாத்திடலாம்” என்றார் அவர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அண்ணணும் ரத்தினமும் ஆளும் கட்சி வேட்பாளர் நேசமணிக்கு வாழ்த்தும் ஒத்துழைப்பும் தருவதாக உளமார சொன்னது ஆதாரத்தோடு தலைமைக்கு சென்றது.

இங்கே லோக்கலில் புகைச்சல் அதிகமானது. அண்ணன் காதுக்கு வந்த செய்தி எதுவும் நல்ல செய்தி இல்லை.

ரத்தினத்திடம் டம்மி வேட்பாளராக அறியப்பட்ட நேசமணிகளின் டாக்குமெண்ட்டை கேட்டார். அவரிடம் எதுவும் இல்லை. பணம் எங்கே என்றார். தண்ணீர் கேன்காரருக்கு கொடுத்ததாக சொன்னார் ரத்தினம். எதுவும் நம்பம் படியாக இல்லை அவருக்கு.

அப்போது அவருக்கு ஒரு செய்தி வந்தது. புஷ்பா லிஸ்ட் வித் ரத்தினம் ஐடி கார்டு.

“இதெல்லாம் என்ன” என கண் சிவந்தார் அண்ணன். எதற்கும் பதில் இல்லை ரத்தினத்திடம்.

காலையில் லேசாய் சுற்றிய அவரின் தலை இப்போது பம்பரமாய் சுற்றியது.

குமரகுரு ரத்தினத்தை விசாரித்தார். அவர்கள் இருவரின் போன் ரெக்கார்டுகளை எடுத்தார்.

இருவரும் டாக்டர் நேசமணிக்கு செய்தி அனுப்பியது சிக்கியது.

ரத்தினத்தின் கதைப்படி குமரகுரு நேசப்பாவை விசாரிக்க கிளம்பினார்.

“நேசமணி எந்த பிளாட்? என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.

செல்ல குமார் பிளாட் நம்பர் சொன்னார். விசிட்டர் பைல் செக் செய்தார்.

ரத்தினம் வந்தது நோட்டில் இருந்தது. ஐந்து மணி நேரத்திர்ற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார். என்னவாக இருக்கும் என யோசித்தார்.

“அவங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க? என்ன பண்றங்க” என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.

“சார் அவங்க ரெண்டு பேரு மட்டும் தான் வீட்ல. ரிட்டையர்டு ஆனவங்க. சார் போஸ்ட் ஆபீஸ்ல இருந்தார். அந்த அம்மா நர்ஸு” என்றார் செல்ல குமார்.

“நீங்க தான் நைட் ஷிப்டா” என்றார் குமரகுரு.

“இல்ல சார். வேற ஒருத்தர் வரணும். அவரு வெளியூரு. அங்க ஒரு டெத்து. அவரு வரல. அதன் நா இருக்கேன்”. என்றார் செல்லகுமார்.

“எந்த ஊரு” என்றார் குமரகுரு.

செல்ல குமார் சொன்னார். “சார், உங்க ஊர்ல ஒரு டெத்தா இன்னைக்கு” என ஊர் தலைவரை விசாரித்தார். அவர் ஆமாம் என்று சொல்ல செல்லகுமாரை நம்ப ஆரம்பித்தார் குமரகுரு.

“ரிட்டையர்டு ஆயிட்டு இப்போ என்ன பண்றாங்க?” என்றார் குமரகுரு.

“அந்த அம்மா லைப் கோச் சார். வர்றவங்க மணி கணக்குல பேசுவாங்க. அவரு வயசானவரு. ரெண்டு பேருக்கும் சுகர். அவங்க பசங்க ரெண்டு பேரு பாரின்ல இருக்காங்க. ஒரு பொண்ணு ப்ரொபஸரா பாண்டில இருக்காங்க. அவங்க மட்டும் வாரா வாரம் வந்து பாத்துட்டு போவாங்க. ரொம்ப டீசண்டான பேமிலி சார்” என்றார் செல்ல குமார்.

இவங்க பேக்கிரௌண்ட் கவுரவமா இருக்கு. ரத்தினம் சொன்னதை சந்தேகப்பட்டார் குமரகுரு.

“சிசிடிவி இருக்கா?” என்றார் குமரகுரு.

“எல்லா ப்ளாக்லயும் இருக்கு சார்” என்றார் செல்ல குமார்.

“சரி, நைட் ஷிப்ட் கிட்ட சொல்லி வைங்க. நா போகும் போது பார்த்துட்டு போறேன்” என்றார்.

“அவங்க வீட்டுக்கு தண்ணீர் கேன் வந்துதா? எப்போ” என அதையும் சேர்த்து கேட்டார்.

“ஆமா சார். மத்தியானம் வந்தார். போட்டுட்டு கொஞ்ச நேரத்துல போயிட்டாரு.

இருங்க நோட்ல பாக்குறேன்” என்றார் செல்லகுமார்.

“இந்த பையன் சிஸ்டமேடிக்கா இருக்கான்” என நல்ல அபிப்ராயம் வந்தது குமரகுருவுக்கு.

“சார் மொத்தம் பத்து நிமிஷம் தான் சார்” என்றார் செல்லகுமார்.

“சரி” என சொல்லி உள்ளே கிளம்பினார்.

செல்ல குமார் பக்கத்தில் இருந்த நைட் வாட்சமேனை பார்க்க அவர் போனை எடுத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் போனார். கல்பனாவுக்கு மெசேஜ் வந்தது.

அவர் குரங்கு குல்லாவை மாட்டிக் கொண்டு கீழே நாயை கூட்டிக்கொண்டு இறங்கி வந்தார்.

“மேடம் நீங்க இங்க தான் இருக்கீங்களா” என்றார் குமரகுரு.

கல்பனா திரும்பி “நீங்க எங்க சார் இங்க? அதுவும் ராத்திரில. நா இந்த பிளாக்ல தான் இருக்கேன்” என்றார்.

“நல்லதா போச்சுங்க. இங்க ஜி பிளாக் நேசமணிய தெரியும்களா” என்றார் குமரகுரு.

“அவங்கள தெரியாதவங்க ரொம்ப கம்மி சார் இந்த காம்பௌண்ட்ல. என்ன சார் விஷயம்?” என்றார் கல்பனா.

சுருக்கமாக கதையை சொன்னார் குமரகுரு.

“என்ன சார் இது. எங்க காம்பௌண்ட்லயே இந்த மாறி ஒரு அட்டெம்ப்ட்டா? எல்லாரும் பச்சவங்க, நல்ல பொசிஷன்ல இருக்கவங்க” என்றார் கல்பனா.

“ஆமாங்க, எனக்கும் அப்டி தான் தோணுது. மூணு நாலு லட்சம்லாம் இங்க இருக்குறவருக்கு ஒரு மேட்டரே கிடையாது. அந்த அமௌண்ட்டுக்கு மானம் மரியாதையை யாரு அடகு வெப்பாங்க?” என கேட்டார் குமரகுரு.

“சார் எதுக்கும் நாம சிசிடிவி ஒரு தரவ பாத்துட்டு முடிவு பண்ணலாம். வாங்க” என ஆபீஸ் ரூம் பக்கம் போனார்கள்.

ரத்தினம் ரிஷப்சனில் காத்திருந்தது, செல்ல குமார் போன் பேசியது, பிப்த் ப்ளோர் காரிடரில் நடந்த உரையாடல், அவர் சங்கு புஷ்பத்துக்கு காசு கொடுத்தது, பிறகு அவர் வெய்ட் பண்ணி உள்ளே போனது என எல்லாம் இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து காபி வந்தது. பிறகு தண்ணீர் கேன் வந்தது. அவர் உள்ளே போய் சில நிமிடங்களில் வெளியே வந்து விட்டார். சில்லறை காசு வாங்கும் நேரம் தான். பிறகு ரத்தினம் கிளம்பி வெளியே போகிறார்.

“சார் இதுல ஏதாவது உங்களுக்கு பொறி தட்டுதா” என்றார் கல்பனா.

“வித்தியாசமா எதுவும் இல்ல. அந்த அம்மா ஏதோ ஸ்ட்ரிக்டா சொல்றாங்க. அவரு அப்புறம் தன் காசு தராரு. மொதல்ல அந்த அம்மா அவரை உள்ளேயே கூப்புடலை. வெளில சேர போட்டு உக்கார சொல்ராங்க. இந்த மாறி டீலிங்க்ல இருக்கவுங்க வெளிப்படையா இருக்க மாட்டாங்க. அப்புறம் காசு தந்தப்புறமும் அந்த அம்மா உடனே உள்ள விடல” என யோசித்தார் குமரகுரு.

“சரி சார். வீட்டுக்கு வாங்க பேசலாம்” என அழைத்துப் போனார் கல்பனா.

“இந்தாங்க சார் பஞ்சாமிர்தம்” என உபசரித்தார் கல்பனா.

“இப்ப எப்படி ப்ரோசீட் பண்றது? என குழம்பினார் குமரகுரு.

“அவங்கள விசாரிக்கணும். ஆனா தொந்தரவா இருக்க கூடாது. இது தப்பான புகாரா இருந்தா வயசானவங்க அவங்க வருத்தப்படுவாங்க” என உண்மையாக கரிசனப்பட்டார் குமரகுரு.

இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் என அமைதியாய் இருந்தார் கல்பனா.

ஸ்டேஷனில் இருந்து போன் வந்தது குமரகுருவுக்கு. தலைமைக்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட் வேணும் என.

“மேடம் அவங்க உங்களுக்கு பழக்கமா? கொஞ்சம் போன்ல கேஷுவலா பேசி பாருங்களேன்” என உதவி கேட்டார் குமரகுரு. கல்பனா போனை போட்டார்.

‘என்ன ஆன்ட்டி இன்னைக்கு எப்படி போச்சு? தூங்குற நேரத்துல தொல்லை பண்ணிட்டேனா. சாரி” என்றார் கல்பனா.

“இல்லமா. லக்ஷ்மி கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். இன்னிக்கு ஒரே அக்கப்போர். சரியான தலைவலி” என்றார் சங்கு புஷ்பம்.

“என்ன விஷயம் ஆன்ட்டி” என தொடர்ந்தார் கல்பனா. ஸ்பீக்கர் போனில் கேட்டபடி இருந்தார் குமரகுரு.

“இன்னைக்கு உங்க அங்கிள் ரொம்ப டென்க்ஷன் ஆயிட்டாரு. யாருன்னு தெரியாத ஒருத்தரு எங்களை பாக்கணும்னு திடீர்னு வந்துட்டாரு. அப்பாயின்மென்ட் கூட வாங்கல. ஒரே ராவடியான ஆளு” என சலித்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

“என்ன ஆச்சு” என கேட்டார் கல்பனா. “என் கிளயண்ட அவ ஆட்டையை போட்டுட்டா” என்றபடி லைனில் குறுக்கில் வந்தார் நேசமணி.

மீண்டும் சங்கு புஷ்பம் தொடர்ந்தார். “அவரு கொஞ்சம் மொரடானா ஆளா இருந்தாரு. கட்சிக்காருனு சொன்னாரு. மீட் பண்ணனும் ஆனா கன்சல்டேஷன் தர மாட்டேன்னு ஒரே அடாவடி. நானும் உள்ள விடல. அப்புறம் தான் வேற வழி இல்லேன்னு குடுத்தாரு” என பொறுமையை சோதித்தார் சங்கு புஷ்பம்.

“அப்புறம் என்ன ஆச்சு” என்றார் கல்பனா.

“எங்க எல்லாருக்கும் மண்டை காஞ்சி போச்சு” என மீண்டும் குறுக்கில் வந்தார் நேசமணி.

இது சரியான காமெடி டைம் பேமிலி என நினைத்தார் குமரகுரு. இவர்கள் இவ்வளவு நார்மலாக இருக்கிறார்கள். அந்த ஆள் இவர்களை கை காட்டுகிறான் என யோசித்தார்.

“என்ன விஷயமா வந்தார்” என கேட்டார் கல்பனா.

“ரொம்ப சிம்பிள் மா. அங்கிள பாக்கணும் அவருக்கு. எலெக்க்ஷன்ல சுயேச்சையா நிக்குறீங்களானு கேட்டாரு. இவரு சுகர் பேஷண்ட்டு. சும்மாவே நிக்க முடியாது. இவரு எங்க சுயேச்சையா நிக்குறது. அவரு இன்டென்ஷன் ரொம்ப தப்பா இருந்தது. நாங்க முடியாது கெளம்புங்கன்னு சொல்லிட்டோம்” என உடைத்து பேசினார்.

“அப்புறம்” என்றார் கல்பனா.

“அவரு கதையை சொன்னாரு. நா லைப் கோச்சுனால ஊர் கதை எல்லாம் பேசினாரு. எட்டாயிரம் பீஸ் வேற குடுத்தாரு. ஒழச்சு சம்பாதிக்குறவன் எவனும் வெட்டி கதைக்கு எட்டாயிரம் தர மாட்டான். நடுவுல திரும்ப அவருகிட்ட பேச ஆரம்பிச்சுட்டான். நாலு லட்சம் தரேன்னு சொல்றான்”.

“நீங்க போக சொல்லலியா?” என்றார் கல்பனா.

“அவரு அவங்க அண்ணன் கிட்ட போன்ல பேசுறாரு. இவருகிட்ட பேசுறாரு. அப்புறம் என்கிட்டே கொஞ்ச நேரம் பேசுறாரு. அவரு எதுக்கு வந்தார்னே எங்களுக்கு புரியல. இன்னும் சொல்ல போனா நம்ம குமரஜோதி தண்ணி கேன் எடுத்துட்டு வந்தா அவருகிட்ட பேசுறாரு. அவரு வீட்டம்மாவுக்கு நல திட்ட உதவி வாங்கி தரேன்னு ஒரே அலப்பறை” என கொட்டி தீர்த்தார்.

“அப்புறம்” என்றார் கல்பனா.

“ஒரு வழியா நாங்க முடியாதுன்னு சொல்லிட்டோம். இன்னொரு விஷயம் சொல்றேன் ஷாக் ஆவாத” என சஸ்பென்ஸ் வைத்தார் சங்கு புஷ்பம்.

“அந்த ஆளு என்ன சுயேச்சையா நிக்க முடியுமான்னு கேட்டாரு. ஒரு கேண்டிடேட்டு புஷ்பாவாம். நா சங்கு புஷ்பம்னு என்ன கேட்டார்.”

“இதுக்கு மேல அவரை பத்தி என்ன சொல்றது” என கொட்டி தீர்த்தார் சங்கு புஷ்பம்.

கல்பனா தொடர குமரகுரு போனிலேயே ரிப்போர்ட் கொடுத்து விட்டார்.

தலைமைக்கு தெளிவாக ரிப்போர்ட் சென்றது.

அண்ணன் மற்றும் ரத்தினமுத்து சேகர் இருவரும் மாற்று கட்சிக்காக வேலை செய்து கட்சிக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக டம்மி வேட்பாளர்களை நிறுத்த சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள்.

கட்சிக்கு கெட்ட பேரையும், கட்சி கட்டுப்பாட்டையும் மீறியதால் அவர்கள் இருவரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கபடுகிறார்கள். கட்சியின் சார்பாக புது வேட்பாளர் நாளை அறிவிக்கபடுவார்” என இரவோடு இரவாக செய்தி குறிப்பு வந்தது. அண்ணனும் ரத்தினமும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் கைதியானார்கள்.

மறுநாள் காலை பேப்பரில் செய்தி வந்தது.

முற்றும்.

Tamil novel – OTP – Part 19/20

A political meeting with large group of people

ரத்தினம் கிளம்பியதும் கதவை சாத்தியவர்கள் ஆளுக்கொரு பாத் ரூமிற்க்கு ஓடினார்கள். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பசியையும் இயற்கை உபாதைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

பாத்ரூம் போய் வந்த பிறகு ஆயாசமாக உணர்ந்தார்கள். பேருக்கு நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டார்கள். ரத்தினம் கிளம்பி விட்டதால் இனி போன் பேசலாம் என உணர்ந்தார்கள்.

ரெஸ்ட் எடுக்க சங்கு புஷ்பத்திற்க்கு நேரமில்லை. லக்ஷ்மிக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி இனி என்ன செய்யலாம் என திட்டமிட்டார்.

லக்ஷ்மிக்கு நேரில் போய் அவர்களை கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

முன்பின் தெரியாத ஒருவர் தங்களை சந்திக்க வருகிறார் என்றபொழுது அவர்களின் நிதானமும் எச்சரிக்கை உணர்வும் பிரமிப்பாக இருந்தது.

அந்நிய ஆட்களை கணித்து அவர்களிடம் எவ்வளவு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று லக்ஷ்மியும் கற்றுக் கொண்டார்.

அடுத்த போன் கல்பனாவுக்கு போட்டார் சங்கு புஷ்பம்.

கல்பனாவின் உறவினர் ரத்தினம் கட்சியில் உள்ள முக்கியஸ்தருக்கு பாதுகாப்பு பணியில் உள்ளவர். அவர் போய் ஓத வேண்டிய இடத்தில் ஓதி விட்டார்.

வார்டு பெயரை சொல்லி “சார், இங்க கட்சி ஆளுங்க எலெக்சன்ல டபுள் கேம் ஆடுறாங்கன்னு லோக்கல் சோர்ஸ் டிப் குடுத்திருக்காங்க சார். எக்ஸ் எம்எல்ஏ அண்ட் அஸோஸியேட் இன்வால்வ்ட் சார். ஒடனே நீங்க அவங்க ஏரியா ஸ்டேஷனை அலெர்ட் பண்ணீங்கன்னா கையும் களவுமா பிடிக்கலாம் சார்” என சொல்லி முடித்தார்.

“ரொம்ப டயர்டா இருக்க. போய் கொஞ்ச நேரம் தூங்கு” என்றார் நேசப்பா.

“இன்னும் கொஞ்சம் வேல பாக்கி இருக்கு. இது பத்தாது” என்றார் சங்கு புஷ்பம்.

“அவர் தான் போய்ட்டாரே” என்றார் நேசப்பா.

“நேசமணி பைல் தானே முடிஞ்சிருக்கு. இன்னும் நம்ம புஷ்பா பைலை ஓப்பனே பண்ணலையே. நீங்க போய் படுங்க. நா கொஞ்சம் நிதானமா யோசிக்கிறேன்.” என்றபடி சிரித்தார் சங்கு புஷ்பம்.

தலைமை வரை விஷயம் இன்று இரவுக்குள் போய்விடும் என கல்பனா தகவல் சொன்னார்.

கல்பனா வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு சங்கு புஷ்பத்தை சந்திப்பதாக சொன்னார்.

லக்ஷ்மி அனுப்பிய புஷ்பா பெயர்கள் கொண்ட லிஸ்டை எடுத்துக் பார்த்தார்.

வாக்காளர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், முகவரி மற்றும் பாலினம் இருந்தது. சங்கு புஷ்பத்திற்கு இது போதாது என்று தோன்றியது. ஆனால் இன்னும் என்ன தேவை என தெரியவில்லை.

சற்று யோசனைக்கு பிறகு இவர்களின் போன் நம்பர் கிடைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என நினைத்தார். அதை எப்படி சேகரிப்பது என யோசித்தார்.

அவர் சிஸ்டம் டேபிள் மீது இருந்த பஞ்சாமிர்த பாட்டில் அவர் கேள்விக்கான விடையை தந்தது.

வள்ளியப்பனுக்கு போன் போட்டார் சங்கு புஷ்பம்.

“சார் ஒரு ஹெல்ப் வேணும்” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.

“சொல்லுங்க மேடம்” என்றார் அவர்.

வள்ளியப்பனின் மகன் இவர்கள் ஏரியாவில் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். அவரிடம் சந்தாதாரர் முகரியும், போன் நம்பரும் இருக்கும். காலையில் நடந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லி முடித்தார் சங்கு புஷ்பம்.

வாயடைத்துப் போனார் வள்ளியப்பன். “நீங்க கவலைப்படாதீங்க மேடம். அரை மணி நேரத்தில் அவன் உங்களுக்கு அனுப்பிடுவான். ஆள், படை பலம் எல்லாம் அவங்களுக்கு மட்டும் தான் இருக்குமா என்ன? நம்மள மாதிரி சாதாரண ஜனங்களும் லேசு பட்டவங்க இல்லன்னு அவங்களுக்கு புரியணும்” என பொரிந்து தள்ளினார் வள்ளியப்பன்.

சற்று நேரத்தில் வள்ளியப்பன் மகன் தணிகையிடம் இருந்து எல்லா போன் நம்பர்களும் கிடைத்தது.

இப்போது சங்கு புஷ்பத்துக்கு ஐடியா வந்தது. அந்த லிஸ்ட்டை லக்ஷ்மிக்கு அனுப்பி விட்டு போன் போட்டார்.

“லக்ஷ்மி, லிஸ்ட்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு தொகை போடு. புரியுதா? என்றார் சங்கு புஷ்பம்.

“பக்காவா போட்டு தரேன்” என்றார் லக்ஷ்மி.

புஷ்பா பெயர் காம்பினேஷனில் பதினெட்டு பேர் இருந்தார்கள் லிஸ்டில். 

முதலில் ரேண்டமாக ஆறு பேருக்கு விருப்பமில்லை என தொகையின் கீழே போட்டார்.

லிஸ்டில் இருந்து சங்கு புஷ்பத்தையும் கனக புஷ்பத்தையும் நீக்கி விட்டார்.

மீதி இருந்த பத்து பேருக்கு குறைந்தது ஒரு எல்லில் இருந்து நான்கு எல் வரை பதிவிட்டார்.

மொத்தம் கூட்டினால் இருபத்து மூன்று எல் வந்தது. நல்ல தொகையாக இருந்தது.

ஆனால் பத்து பேர் என்பது கொஞ்சம் அதிகமாகப்பட்டது.

அதிகபட்சம் ஐந்து பேர் வரை போன தேர்தலில் டம்மி வேட்பாளராக இருந்தார்கள்.

அதனால் ஐந்து பேர் வரை இருக்கட்டும் என முடிவுக்கு வந்தார்.

கடைசியாக அண்ணி புஷ்பாவைத் தவிர்த்து ஐந்து பெண் புஷ்பங்களுக்கு நல்ல தொகையைப் போட்டு முடித்தார். மொத்தம் பதினைந்து எல். பாரபட்சமின்றி

தலைக்கு மூணு எல். என்ஜாய் பண்ணுங்க என நினைத்துக் கொண்டு அம்மாவுக்கு அனுப்பினார்.

சங்கு புஷ்பத்திற்கு அந்த லிஸ்ட் திருப்தியாக இருந்தது.

போன் அடித்தது. குமரஜோதி. “மேடம் அந்த கவர்ல அவ்ளோ பணம் இருக்கு மேடம்” என்றார்.

“எல்லாம் உங்களுக்கு தான். சாயந்திரம் நானும் அவரும் வந்து உங்களை பாத்து நேர்ல பேசுறோம். நீங்க ரத்தினத்தோட கட்சி அட்டையை எனக்கு அனுப்புங்க” என்றார் சங்கு புஷ்பம்.

லக்ஷ்மி அனுப்பிய லிஸ்டையும் ரத்தினத்தின் கட்சி அட்டையையும் பிரிண்ட் எடுத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

தலை வலி ஆரம்பமானது சங்கு புஷ்பத்திற்கு. ஆனால் செய்ய வேண்டிய வேலை நிறைய இருந்தது.

கிச்சனுக்கு போய் காபி போட்டு கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தார். ரத்தினத்திடம் இருந்து வாங்கிய கன்சல்டேஷன் பணம் வேறு இருக்கிறது. அந்த பணத்தை சொந்த செலவுக்கு தொடக்கூடாது என தோன்றியது.

காபி போட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி குடித்தார். பக்கத்தில் அபார்ட்மெண்ட் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. வேலை முடித்து எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தார்கள். அப்போது பைக்கில் வந்த ஒருவர் அவர்களுக்கு பணம் கொடுப்பதை பார்த்தார். அந்த நாளின் சம்பளமாய் இருக்கும் என நினைத்தார். கூட்டமாக இருந்தவர்களுக்கு அவர் பணம் விநியோகம் செய்தது சங்கு புஷ்பத்திற்கு ஒரு அட்டகாசமான ஐடியாவை கொடுத்தது.

அவரின் தலைவலி பறந்து ரத்தினம் வீட்டு பக்கம் போனது.

வள்ளியப்பனுக்கு திரும்ப போன் போட்டார் சங்கு புஷ்பம்.

“சொல்லுங்க மேடம். லிஸ்ட் அனுப்பிட்டானா” என்றார்.

“தேங்க்ஸ் சார். வந்துடிச்சி. இன்னொரு ஹெல்ப் வேணும். என்கிட்ட எட்டாயிரம் ரூபா இருக்கு. அதுக்கு நூறு ரூபா கட்டா வேணும். உங்க கடைல இருக்குங்களா?” என்றார் சங்கு புஷ்பம்.

“இருக்கு மேடம். குமார் கிட்ட குடுத்தனுப்பவா” என்றார் வள்ளியப்பன்.

“சரிங்க சார். அப்டியே மொய் கவர் ஒரு கட்டு குடுத்து விடுங்க. அத எங்க லிஸ்ட் அமௌண்ட்ல சேத்து போட்டுடுங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“சரிங்க அனுப்புறேன்” என வைத்தார் வள்ளியப்பன்.

சங்கு புஷ்பம் பேசிக்கொண்டிருக்கும்போது எழுந்து வந்தார் நேசப்பா.

நடந்தவற்றை சொல்லி காபி கொடுத்தார் சங்கு புஷ்பம்.

“அம்மாவும் பொண்ணும் அட்டகாசமா வேலை செய்றீங்க” என புகழ்ந்து தள்ளினார் நேசப்பா.

சங்கு புஷ்பம் அன்றைய லோக்கல் செய்தித்தாளை புரட்டினார். அவர் தேடிய செய்தி அதில் இருந்தது.

இரவு ஏழு மணிக்கு ரத்தினம் கட்சியின் கூட்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில்.

நேசப்பாவை கடைக்கு அனுப்பி விட்டு இரவு உணவை தயாரிக்க ஆரம்பித்தார்.

குமார் வந்து நூறு ருபாய் தாள்களாக பணத்தையம், மொய் கவர்களையும் கொடுத்துவிட்டு போனார்.

சங்கு புஷ்பம் கிளை பெயரோடு சேர்த்து “ரத்தினமுத்துசேகர்” என டைப்படித்து பிரிண்ட் எடுத்தார்.

அதை கட் செய்து மொய் கவர்கள் மீது ஒட்டி ஒவ்வொரு கவரிலும் நூறு ருபாய் போட்டார்.

எட்டாயிரமும் மொய் கவர்களில் போட்டு இரண்டு பிரிவாக பிரித்து வைத்தார்.

பிறகு அதனுடன் லக்ஷ்மியின் லிஸ்டையும் ரத்தினத்தின் அடையாள அட்டை நகலையும் சற்று கசக்கி போட்டார்.

நேசப்பா ரத்தினம் கட்சியின் வேட்டி சேலையை பஜாரிலிருந்து வாங்கி வந்தார்.

“எல்லாம் ரெடிங்க” என காண்பித்தார் சங்கு புஷ்பம். மலைத்துப் போனார் நேசப்பா.

“என் கெரகம். இதையெல்லாம் கட்ட வேண்டியிருக்கு” என சலித்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

“பேன்சி டிரஸ் காம்படிஷனுக்கு போறதா நெனச்சு கட்டிக்கோ” என ஜாலி மூடில் சொன்னார் நேசப்பா.

“நக்கலா. காலைல நாக்கு வெளில தள்ளி போற மாதிரி இருந்தீங்க” என அவர் பங்குக்கு வாரினார் சங்கு புஷ்பம்.

பஞ்சாமிர்த பாட்டிலில் இருந்து கொஞ்சம் எடுத்து கல்பனாவுக்காக ஒரு டப்பாவில் எடுத்து வைத்தார்.

கரன்சி கவரை ஆளுக்கு பாதியாய் பிரித்துக் கொண்டார்கள். மிச்சமிருந்த பஞ்சாமிர்த பாட்டிலையும் கவர்களையும் இரண்டு துணிப் பைகளில் போட்டு வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.

நேராக வள்ளியப்பனின் கடைக்கு போய் தணிகையிடம் பேப்பர்களை கொடுத்து என்ன செய்ய வேண்டும் என சொன்னார்கள்.

இரவு ஏழு மணி. கட்சி கூட்டம் ஆரம்பமாக இன்னும் நேரம் இருந்தது. ஆண்கள் பக்கம் நேசப்பாவும், பெண்கள் பக்கம் சங்கு புஷ்பமும் கூட்டத்தில் கலந்தார்கள்.

சற்று நேரம் கழித்து அண்ணனும், அண்ணியும், ரத்தினமும் மேடையில் ஏறினார்கள். மூவரும் உற்சாகமாக இருந்தார்கள். நேசப்பா தணிக்கைக்கு மெசேஜ் செய்தார். “மணி கூண்டு பக்கத்தில் இருக்கிறேன் என்று”.

கடைசி லைனில் உட்கார்ந்திருந்தார். தணிகை கொஞ்ச நேரத்தில் வந்து நேசப்பா அருகில் நின்றார்.

பிறகு மேடையை சற்று நேரம் பார்த்து விட்டு பக்கத்தில் இருந்த கட்சிக்காரரிடம் பேப்பரை கொடுத்தார்.

“அண்ணே, அதோ மேடைல அண்ணன் பக்கத்துல ஒருத்தர் இருக்காருல்ல. அவர் இந்த பேப்பரை எங்க கடைல ஜெராக்ஸ் எடுத்தாரு. காச குடுத்துட்டு இதை விட்டுட்டு வந்துட்டாரு. அவர்கிட்ட குடுத்துடுங்கண்ணா. கடைல ஆள் இல்ல நா போறேன்” என பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி போனார்.

அவர் அந்த பேப்பரை படித்துப் பார்த்தார். பதினைந்து எல் ஐந்து புஷ்பங்களுக்கு இருந்தது. இன்னொரு பேப்பரில் ரத்தினத்தின் அடையாள அட்டை இருந்தது.

அவர் ஏதோ யோசித்தவராக நிற்க நேசப்பா அவரிடம் இருந்து அந்த பேப்பரை வாங்கி சற்று சத்தமாக படித்தார்.

“நம்ம ரத்தினம் தம்பி தான் அண்ணிக்கு எதிரா அஞ்சு புஸ்பாவை நிறுத்துது போல” என கொளுத்திப் போட்டார். முகம் சுண்டிப் போனார் கட்சிக்காரர்.

“மொத்தம் பதினைந்து எல். ஒவ்வொரு புஸ்பாக்கும் பத்தாயிரம் குடுத்துட்டு மிச்சத்தை இவரு எடுத்துக்குவாரு” என விளக்க உரையை கொடுத்தார்.

“அடப்பாவி, சொந்த கட்சிக்கே துரோகம் பண்ணுறானே” என கோபமானார் அவர்.

பிறகு “அவருக்கு ஏது அவ்வளவு பணம்?” என சந்தேகமாய் கேட்டார்.

அவர் காதருகே போய் “இவரு சித்தா டாக்டரு ஆளு. அவரு தான் இவருக்கு பேங்கர். அண்ணன் கூடவே இருந்து கழுத்தறுக்குறான்” என டீடைலை சொன்னார்.

பேயறைந்தார் போல ஆனார் அவர். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆண்கள் பகுதியில் பெரும்பாலும் எல்லாருக்கும் அரசால் புரசலாக போய் சேர்ந்தது.

இந்த பக்கம் சங்கு புஷ்பம் உற்சாகமாக சக பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

நேசப்பா அந்த பக்கம் போய் போனில் இந்த கதையை யாரிடமோ விளக்கினார்.

அதை கேட்ட இரு பெண்கள் பேச சங்கு புஷ்பம் கூட சேர்ந்து கொண்டார்.

“ஆமா, ரத்தினம் டாக்டரோட ஸ்லீப்பர் செல்னு மகளிர் அணி தலைவி பேசிக்கிறாங்க. டாக்டரு சம்சாரமும் தலைவியும் ஒரே ஜிம்முக்கு தான் போறாங்க. அப்போ அந்த அம்மாகிட்ட இவரு போய் பேசிட்டு வந்திருக்காரு. புஷ்பா அண்ணிக்கு எதிரா அஞ்சு பேர ரெடி பண்றாரு. ஆனா இங்க நல்லவரு மாதிரி அவங்க கூட மேடைல உக்காந்திருக்காரு” என டிவி சேனல் டிபேட் போல பேசி முடித்தார்.

சொல்லவே வேண்டாம். பெண்கள் பக்கம் அதி விரைவாக அந்த செய்தி பரவியது.

நேசப்பா அவர் துணி பையை வைத்து விட்டு கிளம்பினார்.

கேட்பாரற்று கிடந்த பையை எடுத்த ஒருவர் அதிலிருந்த கவர்களை பார்த்து யோசித்தார்.

கவரை வாங்கிய சங்கு புஷ்பம், “ரத்தினம் தம்பி தான் எல்லாருக்கும் நூறு ரூபா ஓட்டுக்கு இப்பயே காசு குடுக்குது” என சொன்னார்.

பஞ்சாமிர்த டப்பாவையும் ஸ்பூன்களையும் பக்கத்தில் இருந்த பெண்கள் டீமிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார்.

இரண்டே நிமிடத்தில் விநியோகம் முடிய தூரத்தில் இருந்து வீடியோ எடுத்தார் லோக்கல் பேப்பர் நிருபர்.

இதே போன்று சற்று தள்ளி சங்கு புஷ்பம் பையை வைத்து விட்டு நகர கூட்டம் பரபரப்பாக இருந்தது.

Tamil novel – OTP – part 18/20

A senior man is thinking about the next steps

ரத்தினத்திடம் ஒரு ப்ரவுன் கலர் ஆபீஸ் கவரை நீட்டினார் சங்கு புஷ்பம்.

“இதுல ஒரு எல் போட்டு ரெடியா வைங்க. பார்ட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்” என்றார்.

இந்த அம்மா எந்த வேல செஞ்சாலும் நீட்டா டைட்டா செய்யுது என சங்கு புஷ்பத்தின் விசிறியனார் ரத்தினம்.

கொஞ்ச நேரத்தில் டோர் பெல் அடித்தது. குமரஜோதி முகம் முழுதும் பிரகாசமாய் தோளில் ஒரு தண்ணீர் கேனோடு வந்தார்.

ரத்தினம் கதவு பக்கம் பார்க்க, சேரின் கைப்பிடியிலிருந்த கையை மேலே உயர்த்தி சங்கு புஷ்பத்திற்கு தம்ஸ் அப் காட்டினார் நேசப்பா.

குமரஜோதி தண்ணீர் கேனோடு வந்ததில் இருவருக்கும் பரம சந்தோஷம்.

“இவரு தான் நேசமணி வீட்டுக்காரர்” என அறிமுகப்படுத்தினார் சங்கு புஷ்பம்.

“அப்போ நேசமணி லேடியா? என குழப்பமாய் கேட்டார் ரத்தினம்.

“ஆமா சார். அவங்க வீட்ல அவங்க லேடி. எங்க வீட்ல நா லேடி” என நக்கலாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

வந்ததிலிருந்து அவர் தலை எத்தனை முறை சுற்றியது என்று அவருக்கே தெரியாது.

“சார், நேசமணி இருபாலர் பெயர்” என விளக்கினார் நேசப்பா.

எல்லா வில்லங்கமும் ஒரே சுருதியில் பாட்டு பாடியது.

லேடி கேண்டிடேட்டு எப்படி சரிப்படும் டாக்டருக்கு எதிராக என யோசித்தார் ரத்தினம்.

“எல்லாருக்கும் இது தெரியாது சார். எத்தன பேரு கேண்டிடேட்ட நேர்ல பாக்க போறாங்க. போஸ்டரில் வெறும் நேசமணின்னு தான இருக்கும்.” என ரத்தினத்தின் சந்தேகத்தில் சிமெண்டு பூசினார் சங்கு புஷ்பம்.

சங்கு புஷ்பம் ஒரு துண்டு சீட்டை குமரஜோதியிடம் கொடுத்தார்.

“சார் இவரு அந்த அம்மா டாக்குமெண்ட என் போனுக்கு அனுப்புவார். நீங்க அத ப்ரூப்பா வச்சிக்கலாம்” என ரத்தினத்திடம் சொன்னார் சங்கு புஷ்பம்.

குமரஜோதி டாக்குமெண்டை அனுப்பினார். சங்கு புஷ்பம் அந்த அடையாள அட்டையை பிரிண்ட் எடுத்து ரத்தினத்திடம் காண்பித்தார். ரத்தினம் சரி பார்த்த பிறகு “சார் இதை நா பைல் பண்ணி வெக்குறேன்” என திரும்ப பெற்றுக் கொண்டார்.

குமரஜோதி சங்கு புஷ்பம் கொடுத்த செய்தியை ரத்தினத்திற்கு அனுப்பினார்.

“என் மனைவிக்கு மகளிர் திட்டத்தில் நலத்தொகை பெற்றுக் கொடுத்திட தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் குமரஜோதி”.

“இவரு என்னங்க நல திட்டம்னு போட்டிருக்காரு” என்றார் ரத்தினம்.

“சார், அது கோட் வேர்ட்.  என் மனைவியை டம்மி வேட்பாளராக களம் காண ஒத்துக்கொள்கிறேன். அப்படின்னா அனுப்ப முடியும்?” என உரைத்தார் சங்கு புஷ்பம்.

“அவருக்கு ஒரு பதில் அனுப்பிடுங்க” என அடுத்த கட்டளையை போட்டார்.

நமக்கு இது தொழில்னா, இவங்களுக்கு இது மூச்சு காத்தா இருக்கே. இந்த அம்மா எல்லா வேலையையும் சிஸ்டமேட்டிக்கா செய்யுது என வியந்தார் ரத்தினம்.

ஆட்டோபைலட் மோடுக்கு போன ரத்தினம் குமரஜோதிக்கு சரி என பதில் போட்டார்.

நேசப்பாவும் சங்கு புஷ்பமும் ரத்தினம் என்ன மோடில் இருக்கிறார் என அறிந்து கொண்டார்கள்.

“சார் இப்போ கேண்டிடேட்டு டாக்குமெண்ட் உங்க கைக்கு வந்துருச்சி. அவங்க நீங்க சொன்ன அமௌண்ட்டுக்கு ஒத்துக்குறாங்க. மேற்கொண்டு வேல நடக்கணும்னா இப்போ நீங்க அட்வான்ஸ் தரணும் இவருக்கு.

அப்புறம் உங்க டாக்குமெண்ட் ஒண்ணு அவருக்கு ப்ரூப்பா தரணும்.” என அவரை வழி நடத்தினார் சங்கு புஷ்பம்.

“நா அடையாள அட்டை எதுவும் எடுத்திட்டு வரலீங்க” என்றார் ரத்தினம்.

“கட்சி உறுப்பினர் அட்டை எப்பவும் வெச்சு இருப்பீங்கள்ல. அது கூட போதும்” என்றார் நேசப்பா.

அவர் சொன்ன வழியில் அப்படியே நடந்தார் ரத்தினம். ரத்தினம் உறுப்பினர் அட்டையை காட்ட குமரஜோதி அதை போட்டோ எடுத்துக் கொண்டார். கவர் கை மாறியது. காரிடாரில் அல்ல, சிசிடிவி இல்லாத நடு ஹாலில்!

“தேங்க்ஸ் சார்” என வாங்கிக்கொண்டார் குமரஜோதி. “நெக்ஸ்ட் என்ன பண்ணனும்னு மேடம் கிட்ட சொல்லிடுங்க” என குஷியாக கிளம்பினார்.

குமரஜோதியை பார்சல் செய்த கையோடு திரும்ப ரத்தினத்திற்கு அடுத்த ரவுண்டை ஆரம்பித்தார்கள்.

நேசப்பா அஞ்சாயிரம் ருபாய் கோப்பையை இன்னும் கொஞ்சம் நிரப்பினார்.

“சார், எங்களுக்கு லஞ்ச் டைம். சீக்கிரம் முடிக்கலாம்” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.

ஒரு பார்ட்டி பிக்ஸ் ஆன மிதப்பில் இருந்தவருக்கு சரக்கும் கொஞ்சம் மிதப்பை ஏற்றியது. சங்கு புஷ்பம் சரியானபடி ஒரு டீலிங்கை நிறைவேற்றிக் காட்டியதால் அவர் சொல் பேச்சை மறு பேச்சின்றி கேட்டார் ரத்தினம்.

சங்கு புஷ்பத்திற்கு இப்போது தான் மிக முக்கியமான கட்டம். போனை எடுத்து பார்த்தார்.

பிறகு ஒரு துண்டு சீட்டில் தகவல்களை எழுதி ரத்தினத்திடம் கொடுத்தார்.

“சார், இது இவரோட நம்பர். உங்க அண்ணன் கிட்ட சொல்லி இவரை ஆசீர்வாதம் பண்ணி ஒரு மெசேஜ் அனுப்ப சொல்லுங்க. அத நாங்க அவரோட கன்பர்மேஷன் மெசேஜா எடுத்துக்குறோம் என்றார்” சங்கு புஷ்பம்.

“என்ன மேடம், சார் தோக்க போறார். அவருக்கு எதுக்கு வாழ்த்து சொல்லணும்” என மூளையை கசக்கி பிழிந்து ஒரு உருப்படியான கேள்வியை கேட்டார் ரத்தினம்.

“கரெக்ட் சார். நீங்க ஒடம்பு முடியாதவங்க யாரையாவது போய் ஆஸ்பத்திரில பாத்தா என்ன சொல்லுவீங்க? சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வந்து உங்க பேரன் பேத்தி கல்யாணத்த பார்ப்பீங்கனு சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுவீங்களா, இல்ல நாளைக்கே போய் சேந்துடுவீங்க. இன்னைக்குள்ள இந்த ஆப்பிளை சாப்ட்ருங்கன்னு சொல்லுவீங்களா? என நறுக்கென்று கேட்டார் சங்கு புஷ்பம்.

“அண்ணே, ஒரு பார்ட்டி பிக்ஸ் ஆகிட்டு. அட்வான்ஸ் வாங்கிட்டு டாக்குமெண்ட் காபி கொடுத்துட்டாங்க.

இன்னொரு பார்ட்டியும் ஓகே சொல்றாங்க. நீங்க ஆசீர்வாதம் பண்ணி ஒரு மெசேஜ் அனுப்பிட்டேங்கன்னா டீல் முடிஞ்சுடும்ணே” என உற்சாகமாய் சொன்னார் ரத்தினம்.

“நல்லது ரத்தினம். போன அவங்ககிட்ட குடு. பேசிடறேன்” என்றார் அண்ணன்.

“இல்லண்ணே, அவங்க மெசேஜா அனுப்ப சொல்றாங்க. சும்மா உங்க சைட்லேர்ந்து ஒரு கன்பர்மேஷன்க்கு. மத்தபடி தங்கமான பார்ட்டின்னே” என அவரை சரி காட்டினார் ரத்தினம்.

சங்கு புஷ்பம் அவர் போனையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அண்ணனுக்கு ஒரு சிக்கல். போன் அவ்வளவாய் உபயோகிப்பதில்லை எழுத. பேசுவதோடு சரி. அதை பெரிதாய் நோண்டுவதில் ஆர்வம் இல்லாதவர். இவன் வேற மெசேஜ் அனுப்ப சொல்றான் என்ன பண்றது என யோசித்தார்.

வெளியே காத்திருந்த ஆட்களை எட்டிப் பார்த்தார். ஐடி விங்கை சேர்ந்த ஒருவர் இருந்தார்.

“தம்பி இங்க வாப்பா” என கூப்பிட்டு “இவரு போன்ல ஏதோ வாழ்த்து அனுப்ப சொல்றாரு. என்னனு கேட்டு அனுப்பிடு” என்றார்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் துண்டு சீட்டில் எழுதியிருந்த வாழ்த்து அட்சர சுத்தம் பிசகாமல் அண்ணண் போனிலிருந்து போய் சேர்ந்தது சித்தா டாக்டர் நேசமணிக்கு.

“அருமை நண்பர் நேசமணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் இந்த தேர்தலில் அமோக வெற்றியடைய என்னுடைய ஆசீர்வாதங்கள். என் அன்புத் தம்பி இரத்தினமுத்து சேகர் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வார். என்றும் மாறா நட்புடன் உங்கள் அண்ணண்”.

“அண்ணண் வாழ்த்து அனுப்புறாரு மேடம்” என்றார் ரத்தினம் லைனில் இருந்தபடியே.

சங்கு புஷ்பத்திற்கும் நேசப்பாவிற்கும் மூச்சு நிற்பது போல இருந்தது.

“அனுப்பிட்டாருங்க. இப்ப உங்களுக்கு ஓகே வா” என சிரித்தார் ரத்தினம்.

“சார் இன்னொரு லாஸ்ட் ஸ்டெப் பண்ணிடுங்க” என சொன்னார் சங்கு புஷ்பம்.

நேசப்பா ரத்தினம் முன் இருந்த கோப்பையை நிரப்ப ஆரம்பித்தார். ரத்தினம் அதை காதலாய் பார்க்கும் பொது இன்னொரு துண்டு சீட்டை கொடுத்தார் சங்கு புஷ்பம்.

“இவரு எங்க லாயர். எங்க எல்லா டீலிங்க்லயும் அவரு இருப்பாரு. இப்போ அண்ணன் சார்பா நீங்க டீல் பண்றீங்க. அதனால இவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பிடுங்க” என்றார் சங்கு புஷ்பம்.

அவரின் ஒரு கையில் அப்போது கோப்பை இருந்தது. லாஸ்ட் ஓவர் வேறு. ஆல்ரெடி மேட்ச ஜெயிச்சாச்சு. இன்னும் ஏன் கவலைப்படணும் என்று நினைத்தார் ரத்தினம்.

“இந்தாங்க மேடம். நீங்களே அனுப்பிடுங்க” என அவர் போனை கொடுத்தார் ரத்தினம்.

நேசப்பா கோபால் சாருக்கு மனதார நன்றி சொன்னார். சங்கு புஷ்பம் சுறுசுறுப்பாக எழுத ஆரம்பித்தார்.

“அன்பு அண்ணன் சார்பாக உங்கள் கட்சிக்காக நங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். சகோதரர் நேசமணியின் வார்டு கவுன்சிலர் தேர்தல் வெற்றிக்காக நான் மற்றும் அண்ணண் எல்லா உதவிகளையும் செய்து தருவோம் என மனதார உறுதி மொழிகிறேன். எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதங்கள் அவருக்கு கிடைக்க மனதார பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு ரத்தினமுத்து சேகர்.

அடுத்த நொடி அது சித்தா டாக்டர் நேசமணியின் இரண்டாவது போனுக்கு போய் சேர்ந்தது. ஆனால் ஒரு டிக்கிலேயே இருந்தது.

அப்பாடா என்றிருந்தது சங்கு புஷ்பத்திற்க்கு.

“இந்தாங்க சார். லாயருக்கு அனுப்பிட்டேன்” என போனை திரும்ப கொடுத்தார் சங்கு புஷ்பம்.

“மேடம் ரொம்ப பாஸ்ட்டா வேல பாக்குறாங்க சார்” என மனம் விட்டு பாராட்டினார் ரத்தினம்.

இதற்கு மேல் இவர் இங்கே தேவையில்லை என நினைத்தார் சங்கு புஷ்பம்.

“சரிங்க சார். நீங்க நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க” என சொல்லி ரத்தினத்தை வழியனுப்பி வைத்தனர் இருவரும்.

Tamil novel – OTP – Part 17/20

A senior man is thinking about a tricky situation

ரத்தினம் அண்ணனை கரைத்து முடிக்கும் போது, சங்கு புஷ்பமும் நேசப்பாவின் நிலையை சுருக்கமாக குமரஜோதிக்கு செய்தியாய் அனுப்பினார்.

பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த அவர் சங்கு புஷ்பம் சொல்வதை செய்வதாக ஒத்துக்கொண்டார்.

நன்றாக சாய்ந்து ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தார் ரத்தினம். “சார் அண்ணன் மேற்கொண்டு ஆக வேண்டியதை பாக்க சொல்லிட்டார். ரெண்டு எல் பிக்ஸ் பண்ண சொன்னாரு” என ஒரு எல்லை ஆட்டையைப் போட்டார்.

“சரிங்க பேசி பாக்குறேன்” என போனை எடுத்தார் சங்கு புஷ்பம். ஒரு பேப்பரில் “சித்தா டாக்டர் நேசமணி நம்பர்” என கொட்டையாக எழுதி கீழே நம்பரை எழுதினார்.

“நேஸ், இந்த ஸ்கிரீன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க” என அழைப்பு விடுத்தார்.

நேசப்பா எழுந்து போய் திரையை சரி செய்தார். இது ரத்தினம் காதால் கேட்டு கண்ணால் பார்த்தது.

நேசப்பா எழுந்தவுடன் சற்றே கண்ணைக் காட்டி பேப்பரை மேஜையில் நகர்த்தி வைத்தார் சங்கு புஷ்பம். திரையை சரி செய்து திரும்பும் போது பேப்பரை கவனித்தவர் அடுத்த ஓவரை வீச ஆரம்பித்தார்.

“நம்ம சித்தா டாக்டரு உங்களுக்கு நல்ல பழக்கமா? என கொக்கியைப் போட்டார் நேசப்பா.

என் வானத்தில் வரும் வானவில்லில் ஏழு நிறமில்லை, எழுபது நிறம் என்ற ரேஞ்சில் மிதப்பமாக இருந்தார் ரத்தினம்.

“இல்லீங்க. நாங்க கட்சிக்கு ரொம்ப விசுவாசமானவங்க. மாற்று கட்சிக்காரங்க கூட தொடர்பு வச்சிக்க மாட்டோம்” என பெருமையாக சொன்னார்.

“நாங்கண்ணா யாரு” என்றார் நேசப்பா.

“நானு, அண்ணன் அப்புறம் கொஞ்சம் முக்கியஸ்தங்க எல்லாருந்தான்” என அவர் அந்தஸ்த்தை அவரே கூட்டிக்கொண்டார்.

“இல்ல பொது வாழ்க்கைல இருக்கீங்க, நாலு நல்லது கெட்டதுல சந்திப்பீங்க. அதான் நேர்ல இல்ல போன்ல பேசிக்குவீங்களா”? என நுணுக்கமான ஒரு கேள்வியை போட்டார்.

சங்கு புஷ்பம் காத்திருந்தது இந்த கேள்விக்குத் தான்.

“இல்லேங்க. போன் தொடர்பு எதுவும் கிடையாதுங்க. நேர்ல பாத்தாலும் வணக்கத்தோடு முடிச்சுக்குவோம். போன்ல நாம ஒண்ணு சொல்ல போய் அத ரெக்கார்டு பண்ணி திரிச்சி போடுறானுங்க மொள்ளமாரி பசங்க. அதனால நம்பரெல்லாம் அநாவசியமா வாங்குறதும் இல்ல குடுக்குறதும் இல்ல” என ரத்தினம் விஸ்க்கி போட்டு டீ ஆற்றினார் நேசப்பாவிடம்.

சங்கு புஷ்பம் காதில் தேனாய் பாய்ந்தது அவர் பதில். சரி கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என தைரியம் வந்தது.

கோமதியின் மெசேஜ் போனில் வர உன்னிப்பாக பார்த்தார் சங்குபுஷ்பம்.

ரத்தினம் கத்தையாக பணத்தை எடுத்து எண்ணி அதில் கொஞ்சம் சங்குபுஷ்பத்திடம் கொடுத்து ஏதோ சொல்வது தெளிவாக இருந்தது. நல்லது என எண்ணிக்கொண்டு கோமதிக்கு ஒரு நன்றியை அனுப்பினார்.

தோராயமாக அவர் ட்ரேஷரு ட்ரோவில் எவ்வளவு இருக்கும் என அந்த வீடியோவிலிருந்து தெரிந்தது.

குமரஜோதிக்கு அவசர செய்தி அனுப்பினார் சங்கு புஷ்பம்.

“நலத்திட்டம் காத்திருக்கிறது. அடையாள அட்டை நகலுடன் வரவும்” என்று.

குமரஜோதிக்கு பரவசம் தாங்கவில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு விரைவாக கிளம்பினார்.

“சார் அவங்க ரெண்டு எல்லுக்கு ஓகே சொல்லிட்டாங்க. ஆனா ஒரு கண்டிஷன். ஒரு எல் இப்பவே தர சொல்றாங்க. ஒரு டாக்குமெண்ட் காப்பி உங்க கிட்ட இப்ப தருவாங்க” என கடையை விரித்தார் சங்கு புஷ்பம்.

“இப்போ அவ்ளோ இல்லீங்களே, ஒரு ரெண்டு நாள் கழிச்சு தரவா” என தவிர்க்கப் பார்த்தார் ரத்தினம்.

“சார் அது நமக்கு ரொம்ப ரிஸ்க்கு. அவங்களுக்கு இப்ப விஷயம் தெரிஞ்சுருச்சு. நீங்க ஒடனே தரேல்லண்ணே நேரா சித்தா டாக்டரு கிட்ட போய் நிப்பாங்க. அப்புறம் இந்த டீலுக்கு நாங்க பொறுப்பு இல்ல. அவர் இந்த பார்ட்டி எலெக்சன்ல நிக்காம இருக்க கூட குடுக்குறேனு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என ரத்தினத்தின் அடி வயிற்றில் ஏற்கெனவே குத்திய இடத்திற்குப் பக்கத்தில் கொஞ்சம் புளியை கரைத்தார் சங்கு புஷ்பம்.

ஜாடை மாடையாய் இவர்களும் தங்களின் கட்சி தாவும் எண்ணத்தையும், ரத்தினத்திற்க்கு அது உண்டாக்கும் அபாயத்தையம் அவர் மூளையில் திணித்தார்கள்.

செத்தாண்டா சேகரு என நிமிர்ந்து உட்கார்ந்தார் நேசமணி. மனைவியிடம் இருந்து குச்சியை இவர் வாங்கிக்கொண்டு ரிலேவில் ஓட ஆரம்பித்தார்.

இப்படி ஒரு சூழ்நிலை வரும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ரத்தினம்.

“சார் எல்லாரும் எங்கள மாதிரி இருக்க மாட்டாங்க. நாங்க டீல் முடியுற வரை ஒரு பைசா அட்வான்ஸ் வாங்க மாட்டோம். ஆனா மத்தவங்க அப்படி கிடையாது. இது ஒரு சிக்கலான விஷயம். காதும் காதும் வெச்ச மாதிரி முடிக்கணும். ரொம்ப இழுக்கக் கூடாது. விஷயம் சித்தா டாக்டருக்கு தெரிஞ்ச நெலமை நம்ம கை மீறி போய்டும்” சங்கு கரைத்த புளியில் சற்று தூக்கலாக காரத்தை கொட்டினார் நேசப்பா.

குச்சி இப்போது சங்கு புஷ்பம் கையில். “சார் இதெல்லாம் ஆரம்பிச்சா ஸ்லோ பண்ண கூடாது. எங்க டீல்ல பாதி அமௌண்ட்டுக்கு படிஞ்சிருக்கு.அதுவே உங்களுக்கு லக்கு. மார்க்கெட் இப்போ ரொம்ப ஸ்பீடு சார். சித்தாக்கு ஒரு போன அவன் போட்டா நம்ம உழைப்பெல்லாம் வேஸ்ட்டு சார்” என்றார்.

“நீங்க வேற அண்ணண் கிட்ட ரெண்டு பேர பிக்ஸ் பண்ணிட்டேன்னு சொல்லிட்டீங்க. அவரும் அமௌண்ட்டுக்கு சரினு சொல்லிட்டாரு. இப்ப நீங்க வெறும் கையோட போய் டீல் முடியலன்னு சொல்ல முடியுமா?” என இன்னொரு பாயிண்ட்டை போட்டார் நேசப்பா.

ரத்தினத்திற்கு காதில் விழுந்த சொற்களில் பாதிதான் மூளையை எட்டியிருந்தது.

மீதி காற்றில் கரைந்து கோபால் சார் வீட்டு பக்கம் போனது. திடீரென நடந்த இந்த நிகழ்வுகளை கோர்வையாக அவரால் உள் வாங்க இயலவில்லை.

“அமௌண்ட்டு கொஞ்சம் ஜாஸ்தி சார் அட்வான்ஸுக்கு. ஒரு பத்தாயிரம்னா பரவால்ல” என சொன்னார் ரத்தினம்.

“சார் அவங்க இங்கேருந்து டாக்டரு கிட்ட போனா அவரு அஞ்சு லட்சத்தை தூக்கி லட்டு மாறி குடுத்து அவங்கள ஆப் பண்ணிடுவாரு” என மீட்டரை ஏற்றினார் நேசப்பா.

யோசித்தவரை ரத்தினத்திற்கு ஒரு எல் உடனே கொடுப்பது தான் புத்திசாலித்தனம் என தோன்றியது.

“சரி சார். ஆனா நா குடுக்குறதுக்கு என்ன ப்ரூப்பு” என விளக்கமாய் கேட்டார் ரத்தினம்.

“ஒரு ப்ரூப்பும் கெடயாது. எதனா இருந்தா பின்னாடி வில்லங்கமாயிடும்” என காட்டமாக சொன்னார் சங்கு புஷ்பம்.

இந்த அம்மா பல ஜென்மமா இந்த தொழில்ல இருக்கும் போல என மலைத்துப் போனார் ரத்தினம்.

“நம்பிக்கை தான் இந்த மாதிரி டீலிங்க்ல முக்கியம். நாளைக்கு உங்கள பகச்சிக்கிட்டு இந்த ஏரியால அவங்களால நடமாட முடியுமா?” என லேசாக ரத்தினத்தின் ஈகோவை முத்தமிட்டார் நேசப்பா.

அந்த முத்தம் ரத்தினத்தை கிறக்கமாக்கியது. “அது எப்படி சார் நடமாட முடியும்? அண்ணன் நல்லவங்களுக்கு நல்லவர். கெட்டவங்களுக்கு கேடு கெட்டவர்” என பன்ச் டயலாக்கை போட்டார் ரத்தினம்.

நாம நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என யோசித்தார் நேசப்பா.

“சார் உங்களுக்கு சரினு தோணுச்சுன்னா குடுங்க, இல்லேன்னா வேணாம்” என பந்தை அவர் பக்கமே போட்டார் சங்கு புஷ்பம்.

நாலு ஆங்கிள்ல நல்லா யோசித்து கொடுக்கலாம் என முடிவெடுத்தார் ரத்தினம்.

அவரே போய் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான ரெண்டாயிரத்தையும் கொடுத்தார் சங்கு புஷ்பத்திடம்.

“மூணு பத்து வரை உங்க டைம்” என்றார் சங்கு புஷ்பம்.

Tamil novel – OTP – Part 16/20

A senior couple handling a politician

நேசிப்பாவிற்க்கு காஃபி குடிக்க வேண்டும் போல இருந்தது. இது இன்னும் எவ்வளவு நேரம் போகும் எனவும் தெரியவில்லை.

சங்கு சிஸ்டத்திலும் போனிலும் மாறி மாறி வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு பாவமாக இருந்தது. மிகவும் காயப்பட்டு போயிருக்கிறாள். அவள் இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்ததே கிடையாது. எப்பொழுதும் சிரிப்பும் பேச்சுமாக இருப்பவள்.

ரத்தினம் உள்ளே வந்ததிலிருந்து அவள் உடல் மொழி முழுதாய் மாறிப் போயிருக்கிறது. பெரும்பாலும் சிஸ்டத்தில் இருந்தாலும் நம் மீது ஒரு கண்ணும் காதும் வைத்திருக்கிறாள். எந்த சூழ்நிலையிலும் அவள் பின் வாங்கவே இல்லை என மனைவியை நினைத்து பூரித்துப் போனார் நேசப்பா.

சங்க மேட்டரை மண்டையில் ஊறப்போட்டு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் ரத்தினம். அவர் முன் இருந்த காலி கோப்பையை ஓரக் கண்ணால் பார்த்து நேசப்பாவிடம் சிக்னல் கொடுத்தார் சங்கு புஷ்பம்.

நாக்கை சுழட்டி கன்னத்தில் துருத்தியபடி முன் மண்டையை லேசாய் ஆட்டினார் நேசப்பா.

பிறகு சற்றே யோசித்தவராக “டூ பில்டர் காஃபி வித்தவுட் சுகர்” என கோபால் சாருக்கு செய்தியனுப்பினார் சங்கு புஷ்பம்.

“சார் பன்னெண்டு நாப்பது. இன்னும் உங்களுக்கு பத்து நிமிஷம் இருக்கு” என்றார் சங்குபுஷ்பம்.

இன்னொருமுறை அவமானப்பட ரத்தினம் தயாராக இல்லை. பேசாமல் கிளம்பி போய் விடலாம் என தோன்றியது.

இன்னும் பத்து நிமிஷம் இருக்கில்ல மேடம், சொல்றேன்” என சொன்னார் ரத்தினம்.

கறார் காட்டுகிறாராம் என மனதிற்குள் இடித்துக் கொண்டார் சங்கு புஷ்பம். 

அடுத்த செய்தியை தண்ணீர் கேன் குமரஜோதிக்கு போட்டார்.

“நேசமணி உங்க மனைவியா” என்று அனுப்பினார்.

ஆமாம் மேடம். என்ன விஷயம் என பதில் வந்தது உடனே.

“உங்க ஹெல்ப் வேணும். முக்கியமான விஷயம். நேசமணியோட அடையாள அட்டை நகலை என் போனுக்கு அனுப்புங்க. டூ ஹவர்ஸ்ல கால் பண்றேன்.

வீட்டுக்கு அவங்களோட வாங்க. மத்தத நேர்ல பேசிக்கலாம்” என்றார் சங்கு புஷ்பம்.

மேடம் கேட்டா சரியான விஷயமாத்தான் இருக்கும். ஏதாவது மகளிர் நலத் திட்டமா இல்லை மகளிர் லோன் விஷயமா இருக்குமா என யோசித்தார்.

ஓகே மேடம் என பதில் வந்தது.

இரண்டு நிமிடங்களில் கணவர் நேசமணி மற்றும் இல்லத்தரசி நேசமணியின் அடையாள அட்டை ப்ரிண்ட்டரில் வெளியே வந்தது“.

இந்த ஒரு கேண்டிடேட்டுக்காக அஞ்சு எல் அண்ணன் ஓகே பண்ணிட்டார். இந்த அம்மா இன்னொரு ஆள ரெடி பண்ணலாம்னு சொல்லுது. இவர்களுக்கே நாலு எல் பேசியாச்சு. இந்த டீலிங்கில் தனக்கு என்ன மிஞ்சும் என கணக்குப் போட்டார் ரத்தினம்.

டாக்டர் நேசமணி வாங்க போறது முக்காவாசி படிச்சவங்க ஓட்டு. இந்த சொசைட்டிலயே ஆயிரத்து ஐநூறு ஒட்டு இருக்கும். இவரு ஒரு ஆயிரமாவது வாங்கிடுவாரு. அப்புறம் இன்னொரு நேசமணி எவ்வளவு ஓட்டு வாங்குறாரோ அது போனஸ்.

அந்த பக்கம் அண்ணன் கொஞ்சம் ஓட்டுக்கு செலவு பண்ணுவார். எப்படியும் ஒரு ஆயிரத்து இருநூறாவது ஓட்டாவது இந்த டீலிங்கால அண்ணிக்கு லாபம். அதுவும் ரெண்டு கேண்டிடேட்டு பிக்ஸ் பண்ணா தனக்கு ரொம்ப கெத்தா இருக்கும் என நினைத்தார்.

டோர் பெல் அடித்தது. கோபால் சார் வீட்டு பணிப்பெண்.

நேசப்பா போய் ட்ரேவை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லி அனுப்பினார்.

ரெண்டு காஃபி இருந்தது. மூவரும் சேர்ந்து ஒரு டிரிங்க்ஸ் பிரேக் எடுத்தார்கள்.

பிரேக் முடிந்து அடுத்த ரெண்டாயிரத்தை கொடுத்தார் ரத்தினம்.

சார் ஒண்ணு பத்து இப்போ. ரெண்டு பத்து வரை உங்க டைம்” என்றார் சங்கு புஷ்பம். எத்தனை கோடி சம்பாதித்தாலும் இந்த அம்மா திருந்தாது என நினைத்தார் ரத்தினம்.

“என்ன சார் சொல்றீங்க. இன்னொரு பார்ட்டி டீலிங் வேணுமா வேணாமா?” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.

“கெடச்சா நல்லது மேடம். ஆனா உங்களுக்கு சொன்ன பட்ஜெட் அவங்களுக்கு தர முடியாது” என நிலைமையை சொன்னார் ரத்தினம்.

“எவ்வளவு முடியும்” என விசாரித்தார் சங்கு புஷ்பம்.

“ஒரு அம்பதாயிரம்” என நிறுத்தினார் ரத்தினம்.

“கஷ்டம் சார். படியாது” அதிகாரமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

ரெண்டாவது நேசமணிய பிக்ஸ் பண்ணிட்டா தரமான சம்பவமா இருக்கும் கட்சில. ஒரு பய நம்ம கிட்ட வர முடியாது. ஆனால் பணம் கையை கடித்தது.

“உங்க அண்ணன்கிட்ட பேசுங்க சார். எங்க ஒருத்தருக்கு தான அமௌன்ட் சொல்லி இருப்பாரு. இப்போ ரெண்டாவது நேசமணிய பத்தி சொல்லி கன்வின்ஸ் பண்ணுங்க. நீங்களா போனா ரேட்டும் கூட, மடங்கவும் மாட்டாங்க” என தூபமிட்டார் சங்கு புஷ்பம்.

இந்த அம்மா என்ன பக்கத்துல இருந்து பாத்தா மாதிரி சொல்லுது.

“யாருங்க அவுங்க? உங்களுக்கு மட்டும் எப்படி ஒத்துப்பாங்க?” என கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டார் ரத்தினம்.

“சார் அதெல்லாம் எங்க தொழில் மேட்டர் சார். எல்லாத்தயும் வெளில சொல்ல முடியாது” என கண்டிப்பான குரலில் சொன்னார் சங்கு புஷ்பம்.

நாம அப்படி என்ன தொழில் பண்றோம் என மனைவியை பார்த்து புருவம் உயர்த்தினார் நேசப்பா.

அந்த பார்வைக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. சங்கு சிஸ்டத்தை விட்டு எங்கும் திரும்பவில்லை.

“உங்க டீல் மட்டும் சொல்லுங்க சார். அவங்கள நா பேசிக்குறேன்” என்றார் ரத்தினம் நேசப்பாவிடம்.

“ஒன்பது எட்டு ஒன்பது நாலு” என ஆரம்பித்து பத்து இலக்கத்தையும் சொல்லி முடித்தார் சங்கு புஷ்பம்.

“இதான உங்க நம்பர்” எனக் கேட்டார்.

ரத்தினத்தோடு சேர்ந்து நேசப்பாவும் திகிலானார்.

“உங்களுக்கு என் நம்பர் எப்படி மேடம் தெரியும்” என பீதியாக கேட்டார் ரத்தினம்.

“அதான் சொன்னேனே சார். எங்க தொழில்னு” பிடி கொடுக்காமல் சொன்னார் சங்கு புஷ்பம்.

சங்கு ஏன் யாரோ ஒருவருக்கு ஒற்றைக்காலில் நிற்கிறாள் என யோசித்தார் நேசப்பா.

“சரி சார். வேணாம்னா உங்க இஷ்டம். நீங்க அலைஞ்சு திரிஞ்சு கண்டு பிடிங்க. ஆனா அவங்க உங்களுக்கு ஒத்துக்க மாட்டாங்க. இப்ப பாருங்க, மேடம் உக்காந்த இடத்துலயே டீலிங்கை முடிச்சிட்டாங்க” என சங்கு புஷ்பத்தின் கொடியை உயர்த்தினார் நேசப்பா.

காபி இப்போது தான் வேலை செய்கிறது என் நினைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

“அவங்க ஒத்துக்கிட்டாங்களா மேடம்” என வாயை பிளந்தார் ரத்தினம்.

“நா என்ன ஜோக் சொல்றேன்னு நெனைச்சீங்களா. அவங்க ஒத்துக்கிட்டு டாக்குமெண்ட் கூட அனுப்பிட்டாங்க. நீங்க நல்ல அமெளண்டா சொன்னீங்கன்னா முடிச்சிடலாம். இதுல எங்களுக்கு ஒரு நயா பைசா லாபம் கிடையாது.” என டேபிள் மேல் இருந்த பேப்பரை உயர்த்தி காண்பித்தார் சங்கு புஷ்பம்.

“நெஜமாவே இந்த அம்மா சூப்பரா வேல செய்யுது. உக்காந்த எடத்துல இருந்தே வாயக் கூட தொறக்காம ஆள மடக்கியிருக்கு. ஜெகஜ்ஜால கில்லாடியா இருக்கு.

நம்ம ரெண்டு மூணு நாள் தேடி, இங்க அரை நாள் உக்காந்து முட்டி மோதிக்கிட்டு இருக்கோம்” என பிரமித்துப்போனார் ரத்தினம்.

அந்த பிரமிப்பை அழகாய் ஸ்கேன் செய்தார் நேசப்பா.

“அண்ணன் கிட்ட பேசி டீல முடிங்க ரத்தினம். அப்புறம் பாருங்க கட்சில ஒரு பய உங்கள நெருங்க முடியாது. நீங்க வேற லெவெல்ல வருவீங்க” என பூஸ்ட் ஏற்றினார் நேசப்பா.

கடவுளுக்குத்தான் தெரியும் சங்கு என்ன செய்யப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டார்.

நேசப்பா அவர் வேலையை தொடர மீண்டும் ரிலே ரேஸில் ஓடத் தொடங்கினார் சங்கு புஷ்பம்.

லக்ஷ்மி இணையத்தில் இருந்து டாக்டர் நேசமணியின் நம்பரை எடுத்து அனுப்பினார் அம்மாவுக்கு. அம்மாவும் எங்கோ இருக்கும் பெண்ணும் காலை சுற்றிய இந்த பாம்பை அடித்துக் கொல்வது என தீயாய் வேலை பார்த்தார்கள்.

சங்கு புஷ்பம் அதை அவர் போனில் சேவ் செய்தார். பிறகு வாட்சப் போய் பார்த்தார். டிபி இல்லை. நேசமணி என பெயர் மட்டும் இருந்தது. லாஸ்ட் ஸீன் எஸ்டர்டே என இருந்தது. டயல் செய்து பார்த்தார். நாட் ரீச்சபிள். சரியான தருணம் என் முடிவு செய்தார்.

ரத்தினத்திற்கு அவர்களின் வேகம் ஆச்சர்யமாக இருந்தது. இதான் படிச்சவங்களுக்கு வித்தியாசம்.

அவரின் பாதி வேலை குறைந்தது போல உணர்ந்தார். இவ்வளவு தூரம் சொல்கிறார்கள். அண்ணனுக்குப் பேசி பார்க்கலாம் என போனை எடுத்தார் ரத்தினம்.

“ஒரு நிமிஷம். நீங்க பேசிட்டு அவரு ஒத்துக்கிட்டர்னா அவர் எங்களுக்கு கன்பார்ம் பண்ணனும். உங்கள மட்டும் நம்பி இந்த வேலைல எங்களால இறங்க முடியாது. அவர் எங்களுக்கு கோஆப்பரேட் பண்ணனும்” என வலையை விரித்தார் சங்கு புஷ்பம்.

“சொல்லுப்பா ரத்தினம்” என ஆரம்பித்தார் அண்ணன்.

“அண்ணே, நேசமணி சார பாத்துப் பேசிட்டேன். நல்ல படியா முடிஞ்சுது. அப்புறம் அண்ணே, இன்னொரு நேசமணி கேண்டிடேட்டு டீடைல் இருக்கு. அதுவும் பிக்ஸ் ஆகுற மாதிரி இருக்கு. ஆனா அவங்க பட்ஜெட் நீங்க தான் சொல்லணும்” என இழுத்தார் ரத்தினம்.

இவ்வளவு பெரிய வேலக்காரனா இருக்கான். இதெல்லாம் பத்து நாள் நடையாய் நடந்து அவர்களுக்கு புரிய வைத்து அவர்கள் வீட்டில் உள்ளவர்களையும் சரி கட்டி செய்வது. இவன் அரை நாளில் ரெண்டு பேரை பிக்ஸ் பண்ணியிருக்கான் என பூரித்துப் போனார் அண்ணன்.

“சபாஷ் ராஜா. இன்னும் மூணு எல். அதுக்கு மேல தாங்காது. அண்ணிகிட்ட உன்ன பத்தி சொல்லி வெக்குறேன். ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வா” என தாங்கினார் அண்ணன்.

“ரொம்ப நன்றிங்கண்ணே. அவங்க உங்க சைடிலிருந்தும் கன்பார்ம் பண்ண சொல்லி கேட்டிருக்காங்க. டீல் முடிஞ்ச ஒடனே உங்கள திரும்ப கூப்புடுறேன்” என முடித்தார் ரத்தினம்.

“சரி சரி நீ என்ன சொன்னாலும் எனக்கு ஓகே” என்றார் அண்ணண்.

அவர் காதால் கேட்டதை அவரே நம்பவில்லை. நிலை கதவு தாண்டி யாரையும் அவர் அவ்வளவு சீக்கிரம் உள்ளே விடமாட்டார். இப்போ சாப்பாட்டுக்கு கூப்பிடுகிறார்” என அகமகிழ்ந்தார் ரத்தினம்.