Tamil novel – OTP – Part 11/20

TN politicians conversation

புஷ்பா அண்ணிக்கு நேரடி அரசியல் அனுபவம் கிடையாது. மக்கள் தொடர்பும் கிடையாது.

கட்சிக்காரர்களின் நல்லது கெட்டது நிகழ்வுகளில் அண்ணன் மட்டும் தான் வருவார்.

அண்ணிக்கு இப்போது திடீர் ஆசை கவுன்சிலராகி விட வேண்டும் என்று.

ஒரே பெண் அவர்களுக்கு. கல்யாண சம்பந்தம் பேசும்போது அண்ணனும் அண்ணியும் ஆளுக்கொரு பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

தன் சமூகத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உயர் அந்தஸ்த்தில் உள்ள எல்லா வரன்களையும் குறித்து வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அண்ணி கவுன்சிலராவது, அடுத்து அண்ணன் எம்எல்ஏ ஆவது, பவரும் பசையும் இரு கரை புரண்டு ஓடுவது, பிறகு மாநில தலைமையும் அவரின் கிச்சனும் சேர்ந்து மகளுக்கு அட்சதை போட்டு திருமணம் நடத்துவது, அதை போட்டோ எடுத்து ஹாலில் மாட்டுவது என அவர்களுக்கு சின்ன சின்ன ஆசைகள் இருந்தது.

அந்த சின்ன ஆசைகளில் ஒரு ஆசையை நிறைவேற்றியே தீர்வது என கங்கணம் கட்டிக்க கொண்டு அண்ணிக்காக தேர்தல் வேலைகளை ஆரம்பித்தார் ரத்தினம்.

எல்லா நிலையிலும் பிரதான கட்சிகள் ரெண்டு மட்டும் தான் மாநிலம் முழுவதும்.

அண்ணியார் அதில் ஒரு கட்சி வேட்பாளர். அவருக்கு எதிராக முக்கியமான போட்டியாளர் தற்போதய ஆளுங்கட்சியை சேர்ந்த சித்தா டாக்டர் நேசமணி. மற்ற வேட்பாளர்கள் பற்றி அக்கறையில்லை.

இப்பகுதியில் இரு பிரதான கட்சிகளும் சம பலத்தில் இருக்கிறது. படித்தவர்கள், பாமரர்கள் என சரி அளவில் இருப்பவர்கள்.

அண்ணியார் நம்பி இருப்பது பாமரர் ஓட்டு வங்கி. அண்ணன் எப்படியும் கடைசி நேரத்தில் பசையை இறக்கி தன்னை ஜெயிக்க வைத்து விடுவார் என நினைக்கிறார் அண்ணி.

சித்தா டாக்டரும் மக்களுக்கு நல்ல அறிமுகம். கை சுத்தமானவர். குறை சொல்ல பெரிதாக எதுவும் இல்லை.

இந்த நிலையில் அண்ணியாரின் வெற்றிக்கு தன் பங்கை எப்படி ஆற்றுவது என யோசித்தார் ரத்தினம்.

அவர் சும்மா இருந்தாலும் அவரின் பல்லாண்டு கால அனுபவம் அவர் மூளையை தூங்க விடவில்லை. இரண்டு மூன்று நாட்கள் எல்லா வித்தைகளையும் யோசித்து பார்த்து அலசி ஆராய்ந்து கடைசியில் ஒரு வியூகத்தை அமைத்தார்.

நம்பிக்கையோடு போய் அண்ணனைப் பார்த்தார்.

“என்ன ரத்தினம், ஆளையே காணோம். அண்ணி உன்ன என்ன காணாமேன்னு கேட்டுக்கிட்டிருந்தா” என பாசத்தை தூவினார் அண்ணன்.

“அட நா எங்கண்ணே போகப்போறேன். நம்ம அண்ணி விஷயமாத்தான் கொஞ்சம் வேல பாத்துட்ருந்தேன்” என் பிட்டை போட்டார் ரத்தினம்.

“அருமைப்பா, என்ன விஷயம் சொல்லு” என் கூர்ந்து கேட்க ஆரம்பித்தார் அண்ணன்.

ரத்தினம் முழுதாய் சொல்லி முடிக்க “நல்ல கிரவுண்ட் ஒர்க் பண்ணியிருக்க ரத்தினம். இதான் ஒரிஜினல் கட்சிக்காரனுக்கும் ஐடி விங்காரனுக்கும் வித்தியாசம். போன்ல போட்டோ போஸ்ட்டு போட்டே மேல வந்துடறானுங்க” என மாசெவை குதறினார்.

“கட்சிக்காரன் ஐடி விங்ல இருக்கலாம். ஆனா ஐடி விங்ல இருக்குற எல்லாரும் கட்சிக்காரங்க ஆக மாட்டாங்க” என நிதர்சனத்தை சொன்னார் அண்ணன்.

பிறகு சற்று யோசித்தவர் “ஒண்ணும் பிரச்சினை இருக்காதில்ல ரத்தினம். பாத்து ஹாண்டில் பண்ணு” என்றார்.

அப்பாடா என்றிருந்தது ரத்தினத்திற்கு. எடுத்த எடுப்பில் நிராகரிக்கவில்லை.

பார்த்து செய் என்கிறார். அண்ணனிடம் க்ரீன் சிக்னல் வாங்கியது உற்சாகத்தை கூட்டியது ரத்தினத்திற்கு.

“நன்றிண்ணே. எல்லா வேலையும் பக்காவா கச்சிதமா நடக்கும்ணே. ஆனா கேண்டிடேட்டு செலவு கொஞ்சம் ஆகும்ணே” என இழுத்தார் ரத்தினம்.

கூட இருக்குற ஆளுங்களிலேயே இவன் ஒருத்தன் தான் தானா வந்து ஒரு மேட்டர சொல்றான். வேலக்காரனா இருக்கான். மத்தவன்லாம் மண்டைய கழுவி வச்சிருக்கானுங்க. கார்ல பின்னாடி சீட் தேய்க்க தான் லாயக்கு புடிச்சவுனுங்க என் மனதிற்குள் அவர் டீமை திட்டி தீர்த்தார்.

அதெல்லாம் பாத்துக்கலாம் ரத்தினம். தோரயமா எவ்ளோ ஆகும்” என கேட்டார்.

கரன்சி மேட்டர் வரை இந்த பிளான் இன்றே வரும் என ரத்தினம் நினைக்கவில்லை.

இப்போதான் சூதானமா இருக்கணும் என மூச்சை இழுத்து விட்டார் ரத்தினம்.

“ஒரு அஞ்சு எல் ஆகும்ணே கேண்டிடேட் படிய. அப்புறம் நீங்க பாத்து எனக்கு என்ன தந்தாலும் ஒக்கேண்ணே” என தைரியமாய் சொல்லி முடித்தார் ரத்தினம்.

அடுத்த இரண்டு நிமிடங்கள் முள் மேல் நிற்பது போல் இருந்தார் ரத்தினம். அவர் அரசியல் வாழ்க்கையில் அவர் கையாளப்போகும் மிக உச்சபட்சமான ஒரு தொகை.

“சரி, நல்ல படியா செய் ரத்தினம்” என ஆசீர்வதித்தார் அண்ணன். அடுத்த நொடி அனிச்சையாக அண்ணண் காலில் லேண்ட் ஆனார் அன்புத் தம்பி இரத்தின முத்து சேகர். 

Tamil novel – OTP – Part 10/20

TN politician aiming for power

ரத்தினத்திற்கு தெரிந்த ஒரே தொழில் கட்சிப்பணி. தெரிந்த ஒரே கட்சி அவர் கட்சி மட்டுமே. கட்சியில் என்ன பணி என்றால் அவர் இருக்கும் நிலையில் பணம் தவிர மற்ற எல்லாமும் என சொல்லலாம்.

கிளை மட்டத்தில் இருந்து ஆரம்பித்து இருபது ஆண்டுகளாக களத்தில் பணியாற்றி ஒன்றியத்தின் அருகே இப்போது தான் கரை சேர்ந்திருக்கார்.

மாவட்ட அளவில் நல்ல அறிமுகம் இருந்தாலும் இன்னும் ஒரு படி முன்னேற்றத்திற்க்காக காத்திருக்கிறார்.

நிரந்தர தொழில் என்று எதுவும் கிடையாது. வருமானம் மழையாக இல்லெயென்றாலும் சமயங்களில் தூறலாகவோ இல்லை சாரலாகவோ இருக்கும்.

கருமேகம் சூழ்வது போல் எங்கு பிரச்சினையோ, வில்லங்கமோ இருக்கிறதோ, அங்கே வீசும் காற்றின் திசைக்கேற்ப சாய்பவர்.

விசுவாசத்தையும் உழைப்பையும் மட்டுமே கொட்டி கட்சியில் முன்னேற முடியும் என்று இன்று வரை நம்புபவர்.

தன் அனுபவத்தாலும் திறனாலும் தன்னால் நூதனமான முறையில் செயலாற்ற முடியும் என ஆழமான எண்ணம் உடையவர்.

கட்சி சகாக்களை ஒருங்கிணைத்தாலும் சிறு ஒளி கீற்று கூட மற்றவர் மீது விழாமல் பார்த்துக்கொள்வார்.

இப்போது அவர் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். கார்பொரேஷன் தேர்தல் காலம்.

ரத்தினத்தின் ஏரியாவில் அவர் கட்சி வேட்பாளராக நிற்பது எக்ஸ் எம்எல்ஏ மனைவி திருமதி புஷ்பா.

எக்ஸ் எம்எல்ஏ சமீபத்தில் ரத்தினத்திற்கு ஆருயிர் அண்ணனாக கிடைத்தவர்.

நீண்ட காலம் தூரத்தில் இருந்து ரத்தினத்தின் செயல் பாடுகளை பார்த்தவர் அண்ணன்.

சில மாதங்கள் முன்பு அவர் வலது கரம் அகால மரணமடைய புது வலது கரமாய் ஆனார் ரத்தினம்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்ட சபை தேர்தல். அண்ணனுக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது.

இப்போது மனைவி கவுன்சிலராகி, பிறகு அவரும் எம்எல்ஏ ஆகி விடுவார் என திட்டம்.

கார்பொரேஷன் அளவிலும் மாநில அளவிலும் தனக்கு இன்னும் சற்று பவர் கூடும் என நாடி நரம்பெல்லாம் நம்பிக்கை கொப்பளிக்க இருப்பவர் ரத்தினம்.

அரசாங்க கேபினட்டை விட கிச்சன் கேபினட்டின் செல்வாக்கு அதிகம் என கண்கூடாக பார்த்தவர் ரத்தினம். சில இடங்களில் ரெண்டு மூணு கிச்சன் கூட இருக்கும்.

அதற்கு வாழும் உதாரணம் அவர் அண்ணன். மாநில கிச்சன் கேபினட்டின் செல்லபிள்ளை.

ஸ்டேட்டு கிச்சனோ லோக்கல் கிச்சனோ, க்ளவுடு கிச்சனோ, எந்த கிச்சன் செல்வாக்கு கிடைத்தாலும் மிக்சர் சாப்பிட்டே அடுத்த நிலைக்கு போலாம் என்பது எழுதப்படாத விதி.

அண்ணியை வெற்றிக்கொடி நாட்ட வைத்துவிட்டால் பொலீரோ காரின் பின் சீட் தனக்கு மட்டும் தான் என தீர்க்கமாக நம்பினார் ரத்தினம்.

ஒரு பக்கம் எம்எல்ஏக்கு அருகாமை, இன்னொரு புறம் பொலீரோவில் ட்ரிப் அடித்து எப்படியாவது மேயருக்கு அறிமுகமாவது.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அரசாங்கம் போட்டதோ இல்லையோ ரத்தினம் தன் வளர்ச்சிக்கான திட்டத்தை தெளிவாக போட்டார்.

பிற்காலத்தில் இருவரில் காற்று யார் பக்கம் வீசுகிறதோ அங்கே சாமரம் வீசுவது என முடிவெடுத்தார்.

ஒரு திரைப்படத்தில் சொப்னா அண்ணிக்கு கேன்சர் என போலியாக அவருக்காக உருகி உருகி பிராத்திப்பார் அண்ணனின் நண்பர். அது போல போலியாக அண்ணிக்காகவும் அண்ணனுக்காகவும் உருகுவதாகவும் உயிரையே கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஒரு கூட்டம் இப்போது சமூகத்தில் ஊடுருவி இருக்கிறது.

அந்த கூட்டம் உண்மையானது இல்லை என்பதும் எல்லா அண்ணன் அண்ணிகளுக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும். ஆனால் இரு தரப்பும் மக்கள் மன்றத்தில் அதை ஒரு கலாச்சாரமாக கடை பிடித்து வருகிறார்கள்.

அது உட்கட்சி ஜன நாயகத்துக்கும், தேர்தல் ஜன நாயகத்துக்கும் வந்திருக்கும் கேன்சர் என மக்களுக்கு மட்டும் தெரியும்.

OTP – Part 9/20

நா டக்குனு குளிச்சிட்டு வரேன். நீ ஆரிப் கிட்ட சொல்லி ஒரு பார்சல் ஒடனே அனுப்ப சொல்லு. இன்னைக்கு கொஞ்சம் ஃபன்  பண்ணலாம்” என்றார் நேசமணி.

சிரித்தபடியே “நீங்களும் குளிச்சிட்டு வந்து கோபால் சார்கிட்ட கொஞ்சம் வாங்கி வைங்க. எப்படியும் அவர் பிரிட்ஜ்ல ஸ்டாக் பண்ணிருப்பார்” என்றார் சங்கு புஷ்பம்.

“அப்ப வர்றவர் இன்னைக்கு செத்தான்டா சேகர் கதைதான்” என்றார் சங்கு புஷ்பம்.

சற்று நேரத்தில் ஆரிப் டெலிவரி கொடுக்க, கோபால் சார் கலாய்த்து விட்டு ஒரு அழகான கோப்பையையும் பாட்டிலையும் தர, நேசமணி கிட்சனில் ரெடி செய்து வைத்தார். “அபர், நா சர்வ் பண்றேன். நீ வர வேணாம் என்றார்.

எல்லா ப்ளாக்கையும் சுற்றி கடைசியில் அரைமணி நேரம் கழித்து வந்து சேர்ந்தார் கட்சிக்காரர். டோர் பெல் அடித்தது. சங்கு புஷ்பம் போய் கதவை திறந்தார்.

“அம்மா, சார் இருக்காருங்களா” என்றார்.

“ஐயா தான் இருக்காரு” என்றார் சங்கு புஷ்பம்.

கட்சிக்காரர் குழப்பமாக பார்க்க “அம்மா இருந்தா ஐயாதான் இருப்பாரு. மேடம் இருந்தாதான் சார் இருப்பாரு” என்றார் சங்கு புஷ்பம்.

“சாரி மேடம், ஐயா இருக்காருங்களா” என்றார் அவர்.

லேசாய் புன்னகைத்தபடியே “உக்காருங்க சார்” என காரிடாரில் இருந்த சேரை காண்பித்தார் சங்கு புஷ்பம்.

அந்த ப்ளோரில் இருந்த நான்கு வீடும் சேர்ந்து ஆண் பெண் என யாராக இருந்தாலும் மணி கணக்கில் பேசுவதென்றால் இந்த இடம் என்று முடிவானது. பிள்ளைகள் படிக்க, பெண்கள் புழங்க என வீட்டு ஹால் பிரைவசி பிழைத்தது.

காலப்போக்கில் லேப் சாம்பிள், சாமான் ரிப்பேர் என யார் வந்தாலும் இந்த இடம் என்றானது.

காரிடாரில் பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தது ரத்தினத்துக்கு உறுத்தியது. எல்லா ப்ளாக்கும் சுற்றியதில் களைப்பாக இருந்தார். கசங்காத வேட்டி சட்டையில் ஐம்பது வயது நெருக்கத்தில் தெரிந்தார்.

“எவ்வளவு நேரம் சார் பாக்கணும்” என்றார் சங்கு புஷ்பம்.

இந்த கேள்வியை எதிர்பாராதவராக சற்று தடுமாறிப் போனார் அவர்.

“ஒரு அரை மணி நேரம், இல்ல ஒரு மணி நேரம்” என்றார் அவர்.

“அரை மணி நேரம்னா ஆயிரம் ரூபா, ஒரு மணி நேரம்னா ரெண்டாயிரம் ரூபா” என்றார் சங்கு புஷ்பம்.

“என்ன மேடம், புரியல” என்றார் ரத்தினம்.

“ஆமா சார். இதான் அவர் கன்சல்டேஷன் சார்ஜ். பே பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க. பைவ் மினிட்ஸ்ல வருவார்” என்றார் சங்கு புஷ்பம்.

“மேடம், நா சும்மா அவர்கிட்ட ஒரு விஷயம் பேசிட்டு போலாம்னு வந்தேன். கன்சல்டேஷன் இல்ல” என்றார் அவர்.

“சார் மட்டுமில்ல நானும் யார்கிட்டயும் சும்மா பேசுறதில்ல” என்றார் சங்கு புஷ்பம்.

“இல்ல மேடம். சார்கிட்ட நா மொதல்ல பேசுறேன். அப்புறம் அவர் கேட்டார்னா நா தர்றேன் மேடம்” என்றார்.

“நீங்க பே பண்ணா தான் அவர் உங்கள பார்ப்பார்” என மீண்டும் உறுதியாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

“நா அவரை பாக்க முக்கால் மணி நேரம் வெயிட் பண்ணியிருக்கேன். நீங்க என்னடான்னா என்கிட்டே காசு கேக்குறீங்க” என உதாராய் சொன்னார் ரத்தினம்.

“என்ன சார் நீங்க நெஜமாவே புரியாம தான பேசுறீங்களா? நெக்ஸ்ட் டைம் வரும்போது அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு வாங்க. நேரா வந்து பாக்கலாம்” என காட்டமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

ஆரம்பத்தில் இருந்தே காக்க வைத்தது ரத்தினத்திற்கு சோதனையாய் இருந்தது. எப்படியோ வந்த வேலை முடிந்தால் போதும் என தோன்றியது.

பக்குவமாக பேசி காரியத்தை முடிக்க என்ன செய்வது என்று யோசித்தார்.

இந்த அம்மா புரியாம கேக்குது. இப்போ குடுத்துடுவோம். அப்புறம் சார பாத்து பேசி சரி பண்ணிக்கலாம் என முடிவு செய்தார்.

“சரிங்க மேடம், தரேன்” என பாக்கெட்டை துழாவினார். கொஞ்சம் குறைவாய் இருந்தது.

“போன்ல அனுப்பிடவா மேடம்” என்றார்.

“கேஷ் மட்டும்தான் வாங்குவோம்” என சுருக்கமாய் முடித்தார் சங்கு புஷ்பம்.

ஆயாசமாய் பெருமூச்சு விட்ட ரத்தினம் சற்று நகர்ந்து ஒரு ஓரமாய் போய் நின்றார்.

சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டு மெதுவாய் வேட்டியை உயர்த்தி டிரௌசர் பாக்கெட்டில் இருந்து ஒரு கட்டு கரன்சியை வெளியே எடுத்தார்.

கீழே பார்க்கில் விளையாடும் குழந்தைகளை ரசித்தபடியே இவரையும் நோட்டமிட்ட சங்கு புஷ்பத்திற்கு சிரிப்பு கட்டுப்படுத்த முடியவில்லை.

சாலை பக்கம் திரும்பி ஒரு நிமிஷம் நின்றவர் நிதானித்தபடி காத்திருந்தார்.

யாராவது தன்னை பார்க்கிறார்களா என சுற்றி பார்த்த ரத்தினம் நேராக போய் நின்றது சிசிடிவி கேமரா முன்பு பாப்பரப்பா என்று.

அந்த பக்கம் மானிட்டர் ரூமில் இருக்கும் கோமதியை நினைத்து புன்னகைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

பத்து புது இருநூறு ருபாய் தாள்களாக ரெண்டாயிரம் எடுத்து கொடுத்தார்.

தேங்க்ஸ் சொல்லி சங்கு புஷ்பம் வாங்கி கொண்டு உள்ளே செல்ல மண்டை காய்ந்து போனார் கட்சிக்காரர்.

இரண்டு நிமிடம் கழித்து “உள்ள வாங்க சார்” என கூப்பிட்டார் சங்கு புஷ்பம்.

Tamil mini novel – Origami – Worry Kammi – part 4/4

நேரமாக நேரமாக அவனுக்கு வியர்த்து ஊத்தியது. Origami லேசு பட்ட விஷயமில்லை. நுணுக்கமாக செய்ய வேண்டும். ஒரு மடிப்பு தவறினாலும் மொத்தமும் சொதப்பி விடும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அதை சரியாக செய்து அதன் காரணத்தையும் தெளிவாக நடுவர்களிடம் சொல்ல வேண்டும். சீவலுக்கு இது சவாலான காரியமாக இருக்கும். எப்படி சமாளிக்க போகிறதோ என மண்டை காய்ந்து போனான்.

வேலை மும்முரத்தில் இருந்த சரண்யாவுக்கு சிற்பியின் மனநிலை அந்நியமாக இருந்தது.

“ஏண்டா, அவளையே நெனச்சுக்கிட்டு இருக்க? சாப்பிட்டு இந்த பைய சைக்கிள்ள வச்சு எடுத்திட்டு போய் மாதுரி மேடம் வீட்ல குடுத்துட்டு வா” என்றாள்.   

பன்னிரண்டு மணி ஆனது. சிற்பி பூமாலைகளை கொடுத்து விட்டு நகர, “இந்தாப்பா, இந்த பூ சரடை அம்மா கிட்ட குடு” என்றார் மாதுரி மேடம். அதை வாங்கி கொண்டு வேகமாக பள்ளிக்கு சைக்கிளில் சென்றான்.

பள்ளி வளாகம் அமைதியாக இருந்தது. மெயின் பில்டிங்கில் மட்டும் ஆள் நடமாட்டம் தெரிந்தது.

சிற்பி சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு உள்ளே செல்ல, PT சாரிடம் மாட்டிக் கொண்டான்.

“டாய், ஏண்டா கலர் ட்ரெஸ்ல வந்திருக்க?” என தடுத்தி நிறுத்தினார்.

பச்சை பொய்யை பட்டென்று சொன்னான். “டீச்சர் பூ எடுத்திட்டு பன்னெண்டு மணிக்கு வர சொன்னாங்க சார்” என்றான்.

“ஓடு, ஓடு, சீக்கிரம் போ” என உள்ளே விட்டார் PT சார்.

மாதுரி மேடத்திற்கு மனதுக்குள் நன்றி சொல்லி காரிடார் ஜன்னலருகே போய் நின்றான்.

ஜட்ஜ் டேபிள் மீது பால் ரோஜா நிற தாமரை அழகாய் மலர்ந்திருந்தது.

“பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி சித்திர வள்ளி, போர்த் பி” என மைக்கில் சொன்னார் எச் எம் டீச்சர்.

எல்லாரும் கை தட்ட சந்தோஷமும் வெட்கமுமாய் தலை குனிந்து சிரித்தபடியே மேடை ஏறியது சீவல்.

மெடல், ட்ரோபி, பரிசு பண கவர் மற்றும் புத்தகம் என கை நிறைய அள்ளிக்கொண்டு, வாய் நிறைய சிரித்தது.

சிற்பிக்கு மனம் சிறகடித்துப் பறந்தது. அப்படியே போய் சீவலை தூக்கிக் கொள்ள வேண்டும் என ஆசை ஓங்கியது.

அடுத்தடுத்த மாணவர்கள் பரிசு வாங்க, மீண்டும் சீவலின் பெயர் வந்தது. இந்த முறை ஆர்ட் போட்டிக்கு. Origami லோட்டஸுக்கும் முதல் பரிசு. மீண்டும் எழுந்து பின் பக்கம் ஸ்கர்ட்டை நீவி விட்ட படியே சீவல் மேடையை நோக்கி நடக்க எச் எம் டீச்சர் அதன் கன்னத்தில் செல்லமாய் தட்டி கொடுத்து அணைத்துக் கொண்டார்.

இது போதாதா!  சீவல் காலம் முழுக்க அதன் புகழை அதுவே பாடிக் கொள்ள! எங்க டீச்சர்ஸ் எனக்கு கிளாப் பண்ணாங்க, எங்க எச் எம் டீச்சர் என்ன ஹக்கு பண்ணாங்க என வாழ்நாள் சாதனை அவளுக்கு அது.

நிறைவாக நிகழ்ச்சி முடியும் தருவாயில் நன்றி உரை சொன்ன எச் எம் டீச்சர் சொன்ன விஷயம் சிற்பிக்கு காதில் தேனாய் பாய்ந்தது. பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர், ஐந்து குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக சொல்ல, தேர்வு குழு கூடி பேசி முடிவு செய்த பெயர்களில் ஒன்று சித்திர வள்ளி – போர்த் பி!

சீவலின் தோழிகள் அதை தோள் மீது தூக்கி பிடித்து சிரிக்க, சிற்பிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

அவளின் வகுப்பு ஆசிரியரும் வந்து போட்டோ எடுக்க அந்த இடம் களை கட்டியது.

நிகழ்ச்சி முடிந்து ஒவ்வொருவராய் வெளியேறும் வரை சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தான் சிற்பி.

வெளியே வந்த சீவல் அவனை கண்டதும் “சிப்பின்னா” என முத்து தங்கமாய் வந்து கட்டிக் கொண்டது.

முதல் வேலையாய் ஒரு சாக்லெட்டை பையிலிருந்து எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டது.

சதீஷும் ராஜுவும் வந்து சேர அவர்கள் சீவலை தோளில் தூக்கி சுற்றி கொண்டாடி தீர்த்தார்கள்.

வீட்டுக்கு போகும் வழியில் சீவலிடம் கேட்டான் “ஏண்டி, பேச்சு போட்டி பத்தி எதுவும் சொல்லல? என்ன பேசுன”?

“அண்ணா, பேச்சு போட்டிக்கு பேரு குடுத்த பொண்ணு இன்னைக்கு வரல, அதனால தமிழம்மா என்ன பேசரியான்னு கேட்டாங்க. நா நீ சொல்லி குடுத்த ப்ளோரா கதையை சொன்னேன். சூப்பரா இருக்கு, இதையே சொல்லிடு, ஆர்ட்டுக்கும், பேச்சு போட்டிக்கும் வேற வேற ஜட்ஜு தான் வருவாங்கனு சொல்லி லாஸ்ட் மினிட்ல என்ன பேச சொல்லி ஸ்டேஜுக்கு அனுப்பிட்டாங்க” என்றாள் குஷியாக.

“உனக்கு சரி லக்கு இன்னைக்கு” என சொன்னான் சிற்பி. 

வீட்டுக்கு வந்து அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட பிறகு சரண்யாவுக்கு பூரிப்பு அதிகமானது.

சீவலுக்கு பிடித்த பச்சை கலர் கேசரியை உடனே செய்து முடித்தாள்.

இடையே வந்த இரண்டு மூன்று போன்கள் பேசி முடிக்கும் போது “மா, உனக்கு நெறய ஒர்க் வருது, கரெக்டா? என ஆசையாய் சிரித்தான் சிற்பி.

பிறகு “மா, இன்னைக்கு உனக்கும் லக்கி டே” என்றான்.

 “சீவல், எனக்கு ஒரு லோட்டஸ் செய்து தரியா?” என ஆசையாக கேட்டாள் சரண்யா.

“உனக்கு எதுக்குமா?” என்றான் சிற்பி.

“சங்கு புஷ்பம் ஆன்ட்டிக்கு குடுக்க! வாழ வழி காட்டுறவங்களும் ஆசான் தானே!” என சிரித்தாள் சரண்யா.

“Origami உன் worryய கம்மி பண்ணிடுச்சுமா!” என கேசரியை வழித்து சாப்பிட்டபடியே சொன்னது சீவல்.

Tamil mini novel – Origami – Worry Kammi – part 3/4

” மா, சீவல் எங்கம்மா? என்றபடியே வந்தான் சிற்பி குமார்.

“அவ எம்மேல கோவமா இருக்காடா” என விஷயத்தை சொன்னாள் சரண்யா.

“மா, கேட்டா கோச்சுக்காதே, அவ நல்லா ஆர்ட் பண்றாம்மா. இந்த ஒரு தடவை வாங்கி குடும்மா, ப்ளீஸ்” என்றான் சிற்பி.

“இன்னும் ஒரு மாசம் கழிச்சி திரும்ப வருவீங்க. தீபாவளிக்கு என்ன பண்ணலாமுன்னு, ஒரு செலவாவா இருக்கு இந்த வீட்ல” என சலித்துக் கொண்டாள் சரண்யா.

சிற்பிக்கு சங்கடமாக இருந்தது. இருந்தால் அம்மா கொடுத்து விடுவாள். இவ்வளவு கெஞ்சி கேட்கும் வரை விடமாட்டாள். ஆனால் சீவலை எப்படி சமாதான படுத்துவது என யோசித்தான்.

“போய் கூட்டிட்டு வா அவளை, சாப்பிட்ட பிறகு பூ கட்டணும் எல்லாரும்” என்றாள் சரண்யா.

வீட்டில் எங்கேயும் சீவல் இல்லை. அவள் எங்கு இருப்பாள் என சிற்பிக்கு தெரியும்.

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் உள் பக்கமாய் ஒரு குட்டி திண்ணை இருக்கும். அங்கே போய் பார்த்தான்.

சீவல் அழுது அழுது முகம் பெரிதாகி உட்கார்ந்திருந்தது.

“இங்க வா” என அதை தூக்கி மடியில் உட்கார வைத்து கண்ணை துடைத்தான் சிற்பி.

“சீவல், அழாத” என சொல்லி சமாதானப் படுத்தினான்.

என்ன சொல்லி இவள் அழுகையை நிறுத்துவது என யோசித்தான்.

“உண்டிய ஒடச்சிடலாமா? என கேட்டான்.

” ம்ஹூம், வேணாம்” என சொல்லிவிட்டு மீண்டும் ஓ வென அழுதது.

“சரி வா வீட்டுக்கு போலாம். அம்மா கிட்ட சொல்லி இருக்கேன். பூ கட்டிட்டு நைட் திரும்ப கேக்கலாம். குடுத்துட்டா காலைல வாங்கிக்கலாம்” என்றான்.

“இல்ல அம்மா தர மாட்டாங்க” என சொன்னது.

“நா தாமரை பூ மேல சரஸ்வதி வீணையோட உக்காந்திருக்க மாதிரி நாலு நாளா பிராக்டிஸ் பண்ணி நல்லா வந்துடுச்சி. ஷர்மி வீடு “எச் எம்” டீச்சர் வீடு பக்கத்துல தான் இருக்கு. அவ தான் சொன்னா, போன வாரம் டீச்சர் நாலு கட்ட பைல ப்ரைஸ் பொருளுங்க வாங்கி வெச்சிருக்காங்கனு. நா கலந்துக்கிட்டா கண்டிப்பா நாளைக்கு ப்ரைஸ் வாங்கிடுவேன்” என சொல்லி மீண்டும் அழுதது.

“ஓ, அதுக்கு தான் சாமி ரூம்லயே இருந்தியா?” என சிரித்தான் சிற்பி.

பாக்கெட்டில் பார்த்தான். இரண்டு ரூபாய் இருந்தது. பால் வாங்கிய மிச்சம்.

“இரு வரேன்” என சொல்லி கடைக்கு போய் ரெண்டு மிட்டாய் வாங்கி வந்தான்.

“இந்தா, சாப்பிடு. நா அம்மா கிட்ட கேக்குறேன். நீ கேக்காதே. திட்டுனா நா வாங்கிக்குறேன்” என்றான்.

சீவல் அழுகையை தற்காலிகமாக நிறுத்தி மிட்டாயை சாப்பிட ஆரம்பித்தது.

இது தான் சமயம் என சிற்பி ஆரம்பித்தான்.

“நீ தான் origami நல்ல செய்வியே! பேசாம ஆர்ட் போட்டிக்கு அதை செய்யேன்” என மெதுவாய் சொன்னான்.

திரும்ப ஓவென அழ ஆரம்பித்தால் அவ்வளவுதான் என பயந்தான்.

சீவல் தலையை குனிந்து கால் முட்டியில் முகம் புதைத்து கொண்டது.

“சீவல், இங்க பாரு, உனக்கு ஓகேன்னா என்கிட்டே origami பேப்பர் இருக்கு. நா தரேன்” என எப்படியாவது அதை ஒத்துக்கொள்ள வைக்க பாடு பட்டான்.

“தேர்ட் ப்ரைஸே நூறு ரூபாயாம். கூட புக்ஸும் தருவங்களாம்.ஷர்மி சொன்னா” என சொல்லி ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டது.

நல்ல காலம் சீவல் திரும்ப டேமை தொறக்கல. ரெண்டு சொட்டு பரவாயில்லை என இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தான் சிற்பி.

“அதெல்லாம் நீ கலக்கிடுவ. origami உனக்கு செமயா வரும். நீ வேணா பாரு, “எச் எம்” டீச்சர் உன்ன கண்டிப்பா செலக்ட் பண்ணிடுவாங்க” என பலமாய் மார்க்கெட்டிங் செய்தான்.

எப்படியாவது சரஸ்வதி ட்ராயிங்கை மறக்கடிக்க வேண்டும் என origami மந்திரத்தை சீவல் மண்டையில் ஏற்றினான்.

“ஆனா எனக்கு origamiல என்ன பண்றதுனு புரியல. நா தான் ப்ராக்டிஸே பண்ணலயே. அது பண்ணா எனக்கு ப்ரைஸ் வராது” என சோகமாய் டிக்ளேர் செய்தது.

சிற்பி கண்ணுக்கு மெல்ல மெல்ல சீவல் மனதில் சரஸ்வதி இவனை முறைத்துக் கொண்டே மறைவது தெரிந்தது. ஆனால் தாமரை மட்டும் பிரகாசமாய் இவனை பார்த்து சிரித்தது.

“சீவல், நீ origamiல lotus பண்ணு. ஒர்க் அவுட் ஆகும்” என குஷியாய் சொன்னான்.

“அப்போ சரஸ்வதிக்கும் வீணைக்கும் என்ன பண்றது?” என குபீரென ஒரு கேள்வியை போட்டது.

“அய்யோ, இவ மண்டைல இன்னும் அந்த படம் மறையலியே” என அங்கலாய்த்து கொண்டான் சிற்பி.

“அதான், நவராத்ரி வர போகுதுல்ல! அப்போ போய் அசெம்ப்ளி போர்டுல வரைஞ்சுடு” என டக்கென்று சொன்னான்.

சரஸ்வதியையும் வீணையையும் பிராக்டிஸ் செய்தது வீணாக போவதில்லை என சீவல் சமாதானம் ஆவது போல தெரிந்தது சிற்பிக்கு.

“இப்போ வரஞ்சேன்னா ஜட்ஜுங்களும் டீச்சருங்களும் மட்டும் தான் பாப்பாங்க. அசெம்ப்ளி போர்டுல வரஞ்சேன்னா மொத்த ஸ்கூலும் பாக்கும். “போர்த் பி சித்திர வள்ளி” னு நீ பேரும் எழுதலாம்” என சொல்ல மிட்டாயோடு சீவலும் கரைய ஆரம்பித்தது.

“டீச்சர்ஸ் டேக்கு எதுக்கு லோட்டஸ் செய்யணும்? சில்ட்ரன்ஸ் டேக்கு ரோஸ் செஞ்சாக்கூட ப்ரைஸ் கிடைக்கும், ஆனா இதுக்கு எனக்கு கிடைக்காது” என எப்போது வேண்டுமானாலும் மீண்டும் டேம் திறக்கும் நிலை.

முடியலடா சாமி என ஆனது சிற்பிக்கு.

சீவல் மண்டையில் முறைத்துக் கொண்டே மறைந்தாலும், சரஸ்வதிக்கு சிற்பியின் அவஸ்தை வருத்தமாய் இருந்தது.

சின்ன பையன், எவ்வளவு தான் சமாளிப்பான் என போனால் போகட்டும் என அவன் மண்டையில் ஒரு ஐடியாவை பிளாஷ் செய்தார்.

சிற்பிக்கு சீவல் இவ்வளவு நேரம் பேச்சு வார்த்தையில் இருந்ததே பெரும் விஷயமாக இருந்தது.

எப்படியாவது இந்த லோட்டஸ் பேச்சு வார்த்தை சுமுகமாக முடிய வேண்டும். அதற்கு சீவல் ஒத்துக்க கொள்வது போல ஒரு பாயிண்ட் கிடைத்தால் போதும் என நினைத்தான்.

ஒரு நிமிடம் கண் மூடி யோசிக்க “English Dale” சப்ளிமெண்டரி புக்கில் இருந்த “The Lotus” என்ற poem சின்ராஸின் நினைவுக்கு வந்தது.

“ஏ சீவல், என்ன நீ லோட்டஸ இப்படி சொல்லிட்ட. லோட்டஸ் தான் “Queen of Flowers” தெரியுமா? அது மாதிரி டீச்சர் வேலை தான் இருக்கறதுலயே உயர்ந்த வேலை!” என சீவலை கோழி அமுக்குவது போல அமுக்கினான்.

இந்த பொண்ணு “Queen” னு எந்த டாபிக் கிடைச்சாலும் மங்கி விடும் என அவனுக்கு தெரியும்.

“லோட்டஸ் தான் “Queen of Flowers ஆ?” என சந்தேகமாய் கேட்டது சீவல்.

“ஆமாடி, நா வேணா வீட்டுக்கு போனப்புறம் என் புக்க காமிக்குறேன், நீயே பாத்துக்க” என தூபமிட்டான்.

சீவல் குட்டி திண்ணையில் நன்றாய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டது. Queen என்ற வார்த்தையின் மமதை அதன் கண்ணில் தெரிந்தது. “லோட்டஸ் தான் “Queen of Flowers. அத மாதிரி டீச்சர்ஸ் நீங்களும் பெஸ்ட்னு சொன்னா ஜட்ஜு ஒத்துக்குவாங்களா” என சீவல் கேட்டது.

“லோட்டஸ் நேஷனல் ப்ளவருடி” என அவசரமாய் ஒரு முட்டு குடுத்தான் சிற்பி.

சீவல் அதை கன்சிடர் செய்யும் நேரத்தில் அடுத்த முயற்சிக்கு தயாரானான்.

“குட்டிமா, ஏன் லோட்டஸ் இந்த கலர்ல இருக்கு தெரியுமா? ப்ளோரான்ற கடவுள் ரோஸையும் லில்லியையும் சேத்து லோட்டஸ செஞ்சாரு.  ரோஸ் passionate and energeticனு  சொல்வாங்க. அதே போல லில்லி வெள்ளையா இருக்குல்ல, அத purity, calm and fairnessக்கு சொல்வாங்க. இப்போ சொல்லு, நம்ம டீச்சர்ஸும் ரோஸ் மாதிரி passionate டா நம்ம கிட்ட இருக்கிற திறமையை மெருகேத்துறாங்களா, அதே போல லில்லி மாதிரி pure மைண்டோட யாரையும் ஏற்ற தாழ்வு பாக்காம நடத்துறாங்கல்ல. இந்த மாதிரி ரெண்டு பூக்களோட உயர்ந்த குணமும் அவங்க கிட்ட இருக்குறதால அவங்களோட வேலையும் உயர்வானது தான்” என தெளிவாக சொல்லி புரிய வைத்தான்.

சீவல் கண் கொட்டாமல் கேட்டு அவன் சொல்வதை உள் வாங்கி கொண்டது. Origami டீல் சுபமாய் முடிந்தது.

சீவலும் சிற்பியும் ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பினார்கள்.

ஹாலில் சாமந்தி, ரோஸ் மற்றும் மல்லி பூக்கள் இவர்களுக்காக காத்திருந்தன.

சரண்யா ஏற்கெனவே பூ கட்ட ஆரம்பித்து விட்டாள். “எங்க போனீங்க ரெண்டு பேரும்? போய் சாப்பிட்டு வந்து கொஞ்ச நேரம் இதை கட்டி குடுங்க” என்றாள்.

சீவல் உள்ளே போக, “மா,ரொம்ப கஷ்டப்பட்டு அவளை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன். சாப்பிட்டு நா அவளுக்கு origami ப்ராக்டிஸ் பண்ண ஹெல்ப் பண்ணனும். ப்ளீஸ், கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணும்மா. நா எப்படியாவது உனக்கு டைமுக்குள்ள கட்டி முடிக்க ஹெல்ப் பண்றேன்’ என கெஞ்சினான்.

“Origami பேப்பர் இருக்கா? இல்ல வாங்கணுமா? என்றாள் சரண்யா.

“அதெல்லாம் வீட்ல இருக்குமா, அதனால தான் அவளுக்கு அந்த ஐடியாவ சொன்னேன்” என்றான் சிற்பி.

“சரி, போய் செய்ங்க” என்றாள் சரண்யா.

உள்ளே போன சீவல் சப்ளிமெண்டரி புக்கை எடுத்து அந்த பக்கத்தை படித்து பார்த்து அவன் சொன்னது உண்மை தான் என உறுதி படுத்திக்கொண்டது.

அடுத்த ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை இருவருக்கும்.

தரை முழுதும் செய்திதாளில் இயற்கை எய்திய origamiக்கள் இறைந்து கிடந்தன.

இரவு படுக்க போகும் போது சீவலுக்கு லோட்டஸ் origami நன்றாய் செய்ய வந்தது.

சரண்யா அலாரம் வைத்து படுக்க, “மா, ரெண்டே நிமிஷத்துல வரேன்” என சொல்லி வெளியே ஓடினான்.

சீவல் அவன் கொடுத்த பால் ரோஜா நிற origami பேப்பர்களை கட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு சிற்பி வீட்டு கதவு தட்டபட்டது. அவன் நண்பர்கள் சதீஷும், ராஜுவும்.

சரண்யா டீ போட்டு கொடுக்க மும்முரமாய் பூ கட்டும் வேலையை ஆரம்பித்தார்கள்.

ஒவ்வொரு பூவாய் எடுத்து மாலை கோர்க்கும் போதும், அந்த நாள் சீவலுக்கு நல்லபடியாய் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான் சிற்பி. சீவல் தெம்பாய் எழுந்து வந்தது.

“தேங்க்ஸ் ணா” என அவர்களிடம் சிரித்துக் கொண்டே சொன்னது.

டீ குடித்து விட்டு மீண்டும் சில முறை லோட்டஸ் செய்து பார்த்து, நல்லபடியாய் வந்ததில் திருப்தியாக இருந்தது.

“அண்ணா, எனக்கு திரும்ப அந்த லோட்டஸ் கதையை சொல்லேன்” என கேட்டு சொல்லி பார்த்துக் கொண்டது.

அவர்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் பேசி சிரித்துவிட்டு பின் பள்ளிக்கு கிளம்பியது.

“ஆல் தி பெஸ்ட்” என்றான் சிற்பி.

“மத்தியானம் ப்ரைஸ் தருவாங்கனு ஷர்மி சொன்னா. நீ அப்போ வரியா?” என கேட்டது சீவல்.

அவ்வளுவு நம்பிக்கை மேடத்திற்கு. அசெம்பளி போர்டுல பேரு, Queen என அதற்க்கு பிடித்த கீ வேர்டுகளை சொன்னதில் மிதப்பமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. இன்னைக்கு மட்டும் ப்ரைஸ் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவுதான். நினைக்கும் போதே சிற்பிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“ஹா ஹா கண்டிப்பா வரேன்” என சொல்லி அனுப்பி வைத்தான்.

Tamil mini novel – Origami – Worry Kammi – part 2/4

சரண்யாவின் கணவர் மோகன் குடும்ப பொறுப்பு இல்லாமல் இருப்பவர். நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். சிற்பிகுமார் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும், சித்திர வள்ளி என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக மோகன் அடிக்கடி வீட்டுக்கு வந்து பிள்ளைகளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் சரண்யாவுக்கு அவர் மீது நம்பிக்கை என்பது முழுதாய் இல்லை. மீண்டும் சேரும் எண்ணம் அவருக்கு இருந்தாலும், கடந்த காலம் தந்த காயம் காரணமாக சரண்யா அவரை ஏற்க தயாராக இல்லை. தன்னால் குழந்தைகள் அவரை பிரிய வேண்டாம் என நினைத்ததால் அவர் வந்து போனால் அமைதியாக இருந்தாள்.

வேலை முடித்து வீடு நோக்கி நடக்க ஆரம்பிக்க போன் வந்தது.

சொசைட்டி செகரெட்டரி மாதுரி மேடம்.

“சரண்யா, நாளைக்கு நம்ம சொசைட்டில டீச்சர்ஸ் டே பங்க்ஷன் இருக்கு. நீ நல்லா பூ கட்டுவேன்னு சங்கு புஷ்பம் மேடம் சொன்னாங்க. ஹால் அலங்காரத்துக்கு, குத்து விளக்கு பூஜைக்கு நெறய பூ வாங்கி இருக்கோம். நீ கட்டி தர முடியுமா?” என சொல்லி ஒரு தொகையை சொன்னார்.

சரண்யாவுக்கு திருப்தியாக இருந்தது அவர் சொன்ன தொகை. நாளைக்கு பசங்களுக்கு லீவ். காலைல எழுந்து சமைக்க வேணாம். இன்று இரவும், நாளை காலையும் பசங்களுடன் சேர்ந்து கட்டினால் இவர்கள் கேட்கும் நேரத்திற்குள் கொடுத்து விடலாம் என தோன்றியது.

“சரிங்க” என்றாள் சரண்யா.

“நம்ம செக்யூரிட்டிய உங்க வீட்டுக்கு வண்டில கொண்டு வந்து தர சொல்றேன்” என சொல்லி போனை வைத்தார் மாதுரி.

மனதிற்குள் சங்கு புஷ்பத்திற்கு நன்றி சொன்னபடியே நடந்தாள் சரண்யா.

“மா, வந்திட்டியா, உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்” என்றாள் சித்திர வள்ளி.

“இந்தா, நீ கேட்ட சிறுவர் மலர். நேசப்பா தாத்தா குடுத்தனுப்பினார்” என சொல்லி பத்து புத்தகங்களை கொடுத்தாள் சரண்யா.

“ஹை ஜாலி, மூணு நாள் லீவுக்கு போரடிக்காம இருக்கும்” என சந்தோஷமாக சொல்லி சிரித்தாள்.

சற்று நேரம் புத்தகங்களை புரட்டியவள் “மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே பங்க்ஷன் இருக்கு. நா ட்ராயிங் அண்ட் ஆர்ட் போட்டிக்கு பேரு குடுத்து இருக்கேன். இருநூறு ரூபா குடுமா, சார்ட்டு பேப்பர், பெயிண்ட்டு, அப்புறம் கொஞ்சம் ஆர்ட் சப்ளைஸ் வாங்கணும்” என மெதுவாக கேட்டாள்.

“பணம் மரத்துல வெளயுதா?” என சொல்லி நிறுத்தினாள் சரண்யா.

“மா, ப்ளீஸ் மா, நா நல்லா ப்ராக்ட்டிஸ் பண்ணி இருக்கேன். கண்டிப்பா ப்ரைஸ் வாங்கிடுவேன் என கொஞ்சலாய் சொன்னாள் சித்திர வள்ளி. “பத்து ரூபா நீ சம்பாதிக்கும் போது உனக்கு அந்த கஷ்டம் தெரியும். சும்மா பெயிண்டுக்கு, சார்ட்டுக்குனு காசு கேக்காதே. தட்டுக்கு சோறு வருதா அதுக்கு சந்தோஷப்படு” என கடு கடுத்தாள் சரண்யா.

சித்திர வள்ளிக்கு கன்னத்தில் கண்ணீர் சித்திரம் வரைய ஆரம்பித்தது.

ஏற்கெனவே டிஷ் வாஷர் சோகத்தில் இருந்த சரண்யாவுக்கு எக்ஸ்டரா செலவு எரிச்சலை கிளப்பியது.

“நாளைக்கு நீ ஒண்ணும் ஸ்கூலுக்கு போக வேணாம். இன்னும் கொஞ்ச நேரத்துல செக்யூரிட்டி பூ கொண்டு வந்து தருவார். நீயும் அண்ணனும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என சொல்லி விட்டு சமைக்க ஆரம்பித்தாள் சரண்யா.

Tamil mini novel – Origami – Worry Kammi – part 1/4

“ஏங்க, போஸ்ட் ஆபீசுக்கு போகணும்னு சொன்னீங்க, இன்னும் கெளம்பலியா?” என மாத்திரை போட்டபடியே கேட்டார் சங்கு புஷ்பம்.

“அஞ்சு நிமிஷம், முருங்கை கீரை சூப் ரெடி பண்ணிடறேன். சரண்யா வந்ததும் துணைக்கு விட்டுட்டு கிளம்புறேன்” என உள்ளேயிருந்து பதில் சொன்னார் நேசப்பா.

சரண்யா அவர்கள் வீட்டு பணிப்பெண். பத்து மணிக்கு வந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு, அந்த அந்த நாளுக்குக்கேற்ப என்ன தேவைகள் இவர்களுக்கு இருக்கிறதோ அவற்றை செய்து கொடுப்பாள்.

“சரண்யா இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருவேன்னு சொன்னா. நீங்க சூப் ரெடி பண்ணிடீங்கன்னா வெயிலுக்கு முன்னாடி கெளம்பி போயிட்டு வாங்க” என சொன்னார் சங்கு புஷ்பம்.

சற்று நேரத்தில் நேசப்பா கிளம்ப, சங்கு புஷ்பம் புத்தகம் படிக்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரம் கழித்து “என்னமா சார் குடைய மறந்துட்டு போய்ட்டாரா? என்றபடியே சரண்யா வந்தாள்.

“அதுக்கு தான் நீ இருக்கணும்கிறது. கரெக்டா நினைவு படுத்தி இருப்ப” என்றார் சங்கு புஷ்பம்.

“நீங்க படுங்க, சார் வர வரை நா இருந்துட்டு போறேன்” என வேலையை ஆரம்பித்தாள் சரண்யா.

ஒரு மணி நேரம் ஆனது. நேசப்பா வெளி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினார்.

மூன்று கப்புகளில் சூப் எடுத்து வைத்து சங்கு புஷ்பத்தை எழுப்பினார்.

“எங்க சரண்யாவ காணோம்?” என்றார் நேசப்பா.

“இங்க தான் இருப்பா, இருங்க போய் பாக்குறேன்” என மெதுவாய் எழுந்து கடைசி பால்கனி பக்கம் போனார்.

அங்கே சரண்யா ஏதோ யோசனையாக அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

“என்ன இங்க நின்னு யோசிக்கிற?” என கேட்டார் சங்கு புஷ்பம்.

சரண்யா முகம் வாட்டமாக இருந்தது.

“தெய்வநாயகி  மேடம் டிஷ் வாஷர் வாங்கி இருக்காங்க, துணி காய போட வரும் போது பாத்தேன். அடுத்த மாசத்துல இருந்து எனக்கு அவங்க வீட்ல வேலை இருக்காதுனு நெனைக்கிறேன்” என கவலையோடு சொன்னாள்.

சங்கு புஷ்பம் எட்டி பார்க்க, அவர்கள் வீட்டு பால்கனியில் புதுசாய் அமர்ந்திருந்தது டிஷ் வாஷர்.

“கரண்டு பில்லுக்கும், பசங்க டியூஷனுக்கும் அவங்க குடுக்குற சம்பளத்தை தான் நம்பி இருக்கேன். இப்போ என்ன பண்ண போறேன்னு தெரியல. தெய்வநாயகி மேடம் எது வாங்கினாலும் அவங்க கூட வாக்கிங் போற சுகந்தி அக்கா வாங்கிடும். அவங்களும் வாங்கிட்டா வேற வேலை கிடைக்கும் வரை சிரமம் தான்” என பெரு மூச்சோடு சொன்னாள்.      
“உள்ள வா” என அழைத்து ஹாலில் வந்து நேசப்பாவோடு சேர்ந்து உட்கார்ந்தார்கள்.

“கொஞ்சம் கால் வலி இருந்ததால நா ஒரு வாரமா சாயங்காலம் அவங்கள பாக்கல. இன்னைக்கு பாத்து பேசுறேன். அவங்க இது வரை உங்கிட்ட எதுவும் சொல்லல இல்ல? நீயா ஏன் கவலை படுற? அப்படி அவங்க நீ வேலைக்கு வேணான்னு நெனச்சா, உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருப்பாங்க. எதையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காதே” என ஆறுதல் சொன்னார் சங்கு புஷ்பம்.

சூப் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தார்கள்.

“டிஷ் வாஷர் இந்த மாதிரி கப்பு, பிளேட்டு, கிளாஸ் கழுவ தான் பெஸ்ட். அது பிரியாணி அண்டா கழுவாது. அஞ்சு லிட்டர் குக்கரை போட முடியாது.  பூஜை சாமான் தேய்க்காது. அதனால நீ பெருசா ஒண்ணும் கவலை படாதே” என நிதர்சனத்தை சொன்னார் நேசப்பா.

“சங்கு, நீ ஏன் நம்ம சரண்யாக்கு ஒரு போஸ்ட் ரெடி பண்ண கூடாது? ஒன்லி பார் பூஜா ரூம் கிளீனிங்ன்னு? பூஜை பாத்திரம் மட்டும் சுத்தம் செய்து, பூ கட்டி, கோலம் போட்டு விசேஷ நாளுக்கு ரெடி பண்ணி தருவானு?” என்ன ஆர்வமோடு சொன்னார்.

சங்கு புஷ்பத்திற்கு இது வேலைக்கு ஆகும் என தோன்றியது.

“மார்கெடிங்க்ல மொதல் பாடமே, இல்லாத தேவையை இருப்பதாக மக்களை நினைக்க வைப்பது தான். 

அடுத்த ஐந்து நிமிடம் இந்த விஷயத்தை விவாதித்ததில் இது செட் ஆகும் என அவர்களுக்கு உறுதியாக தெரிந்தது.

சரண்யாவுக்கு பாதி புரிந்தது, மீதி புரியவில்லை.

“இங்க பாரு, உனக்கு இந்த டிஷ் வாஷர் மெஷின் தான் எக்ஸ்டரா வருமானத்துக்கு வழி பண்ணி இருக்கு. நீ பூஜை பாத்திரம் மட்டும் விஷேச நாளுக்கு முன்னாள் வந்து ரெடி பண்ணி தருவேன்னு ஒரு போஸ்ட போட்டு லிப்ட்ல ஒட்டுனா போதும். இது வரை ரெகுலரா பூஜை பண்ணாதவங்க கூட பக்திமானா மாறிடுவாங்க. வாரத்துல ஏழு நாளும் ஏதாவது ஒரு சாமிக்கு ஸ்பெஷல் டே தான்” என விவரித்தார் சங்கு புஷ்பம்.

நேசப்பா தொடர்ந்தார். “இது தெரிஞ்சு தான் குயிக் காமெர்ஸ் டெலிவரிகாரன் ஒரு கொத்து மாவிலையை இருபது ரூபாக்கு விக்கிறான். கீழ இறங்கி போய் நம்ம செக்யூரி கிட்ட கேட்டா இங்கேயிருக்குற மரத்துல பறிச்சு தருவார். சௌகர்யம் உள்ளங்கைல இருகிறதால நம்ம ஜனங்க இவனுங்க எறக்குற எல்லா Appம் ஒண்ணு மிச்சமில்லாம யூஸ் பண்றாங்க’ என்றார்.

அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு டைரியில் இந்த விஷயத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என லிஸ்ட் போட்டார்கள்.

“ஒரு போஸ்டர் பத்தாது. மூணு போடு சங்கு. ஒண்ண எல்லா பிளாக் லிப்ட்லயும் ஒட்டலாம். ரெண்டாவதை ஜிம் ஏரியால ஒட்டலாம். மூணாவத சரண்யா டீபியா வெக்கட்டும்” என்றார் நேசப்பா.

“லிப்ட், டிபி  சரி, எதுக்கு ஜிம் ரூம்ல?” என்றார் சங்கு புஷ்பம்.

“யோசி, உனக்கே தெரியும்” என சொல்லி சிரித்தார் நேசப்பா.

விஷயம் புரிய “சரியான ஆளு நீங்க!” என பாராட்டினார் சங்கு புஷ்பம்.

“நீ கவலப்படாம கெளம்பு சரண்யா. உனக்கு எத்தனை போன் வருதுன்னு பாரு” என சொல்லி சியர் செய்து அனுப்பினார்கள்.

OTP – Part 8/20

வரப்போகும் கவுன்சிலர் எலெக்க்ஷனில் தற்போது பொறுப்பில் இருக்கும் டாக்டர் நேசமணி என்பவர் மீண்டும் போட்டியிடுவதாக தகவல். ரத்தினத்தின் கட்சிக்காரருக்கு போட்டியாளர்.

நேசப்பா செய்தியை முழுதாக படித்து முடித்து திரும்பவும் யோசனையில் ஆழ்ந்தார்.

லேண்ட் லைன் அடித்தது. “மேடம், அவர் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்னு கேக்குறார், என்ன சொல்லட்டும்? சாரி மேடம்” என்றார் செல்லகுமார்.

“இதுக்கு போய் எதுக்குப்பா சாரி சொல்ற. சார் மீட்டிங்க்ல இருக்கார். முடிஞ்சப்புறம் கால் பண்ணுவார்னு சொல்லுங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“ரத்தினம் கட்சி வேட்பாளர் யார்னு பாத்தியா” என கண் மூடியபடியே கேட்டார் நேசப்பா.

கொஞ்ச நேர தேடலுக்கு பிறகு “புஷ்பாங்க, எக்ஸ் எம்எல்ஏ மனைவியாம்” என்றார் சங்கு புஷ்பம்.

“அப்படியா” என நிதானமாய் உள்வாங்கியவர் “அப்ப அவரு உன்ன பாக்க வராரா இல்ல என்ன பாக்க வராரா? என்றார்.

“உங்களைத்தான்” என தீர்க்கமாய் சொன்னார் சங்குபுஷ்பம். “வர சொல்லுவோமா” என்றார்.

“வெயிட் பண்ணு. பாத்ரூம் போயிட்டு வரேன். கொஞ்சம் சுடு தண்ணி குடிக்க கொண்டு வா” என சொல்லி எழுந்து போனார் நேசப்பா.

சங்கு புஷ்பம் நேசப்பாவின் எண்ண ஓட்டத்தை குறுக்கிட விரும்பாமல் அமைதி காத்தார்.

கால் மணி நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மெதுவாக தண்ணீரை குடித்து முடித்தார் நேசப்பா.

பிறகு அவரின் அனுமானத்தை மனைவியிடம் பகிர்ந்துகொண்டார்.

“நானும் அதுவாத்தான் இருக்குமோன்னு நெனச்சேன். சரி வர சொல்லுங்க. பார்ப்போம்” என கலக்கமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

“செல்லகுமார், நேசமணி பேசுறேன். அவரை வரசொல்லுப்பா” என்றார்.

“சரிங்க சார்” என்றார் செல்லகுமார்.

“சார், நீங்க போலாம் சார். நேரா போய் லெஃப்ட் சைட் போனீங்கன்னா லாஸ்ட் பிளாக்” என்றார் ரத்தினத்திடம்.

முக்கால் மணி நேரம் காத்திருந்து சலிப்பாய் எழுந்தார் ரத்தினம்.

“பிஸியான ஆளாப்பா அவரு” என கேட்டார் செல்லகுமாரிடம்.

“சார் சொஸைட்டி ரூல் படி நா அதெல்லாம் சொல்ல முடியாது. சாரி சார்” என முடித்தார் செல்லகுமார்.

சங்கு புஷ்பத்திற்கு பதட்டமாய் இருந்தது. இளைய மகள் லக்ஷ்மிக்கு போனை போட்டார்.

சுருக்கமாக விஷயத்தை சொல்லி முடித்தார்.

“நோ சான்ஸ். இதெல்லாம் நான்சென்ஸா இருக்கு” என்றார் லக்ஷ்மி.

முழு பெயர் லோகலக்ஷ்மி. பாண்டிசேரியில் கல்லூரி பேராசிரியராக வேலை செய்பவர்.

“ஆமாம், நாங்களும் அப்படித் தான் நெனைக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்துல வருவார். பேசிட்டு அப்புறம் போன் பண்றேன்” என்றார் சங்கு புஷ்பம்.

“சரிம்மா. நா ரெண்டு மணி வரை ப்ரீ தான். ஏதாவது விஷயம்னா கூப்பிடு” என்றார் லக்ஷ்மி.

வேர்ல்டு பேங்குக்கு சொல்லிட்டியா என்றார் நேசப்பா புன்னகையோடு.

Tamil novel – OTP – Part 7/20

Checking the newspaper for local political news to get some clue about the guest waiting at the security gate

காலை பத்து மணி வாக்கில் லேண்ட் லைன் அடித்தது. மெயின் கேட் செல்லகுமார்.

“சொல்லுங்க செல்லகுமார்” என்றார் சங்கு புஷ்பம்.

“மேடம், சார பாக்கணும்னு எக்ஸ் எம்எல்ஏ ஆபீசுலேர்ந்து ஒரு கட்சிக்காரர் வந்திருக்கார். அவர் பேரு ரத்தினம்னு சொன்னார். அனுப்பவா மேடம்” என்றார்.

சங்கு புஷ்பத்திற்க்கு ரத்தினம் என்ற பெயர் புதுசாய் இருந்தது. சற்று யோசித்தவர் “அவர் என்னை பாக்கணும்னு சொன்னாரா இல்ல சாரையா?” என்றார்.

“சார் தான் மேடம். நேசமணி மதிவாணன்னு முழு பேர் சொன்னார். ஆனா போன் நம்பர் தெரியாதுனு சொல்றார். ஆளும் பர்ஸ்ட் டைம் பாக்குற மாதிரி இருக்கு” என்றார் செல்லகுமார்.

“சரிப்பா. ஒரு பத்து நிமிஷம் அவரை விசிட்டர் ஹால்ல உக்கார வை. பேன் போட்டு விடுங்க. கொஞ்சம் தண்ணி குடுத்து பாத்துக்குங்க. நா அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன். என்ன கரை வேட்டி அவரு?” என்றார் சங்கு புஷ்பம்.

செல்லகுமார் சொன்ன கட்சி பேரை குறித்துக்கொண்டார்.

“ஏங்க, கொஞ்சம் இங்க வாங்க” என நேசப்பாவை அழைத்தார்.

கிச்சனில் இருந்து வந்த நேசப்பா பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தார்.

“உங்களுக்கு இந்த கட்சிலேர்ந்து ரத்தினம்னு யாராவது தெரியுமாங்க? உங்கள பாக்கணும்னு வந்திருக்கார். விசிட்டர் ஹால்ல வெயிட் பண்ண சொல்லி செல்லகுமார்கிட்ட சொல்லி இருக்கேன்” என்றார் சங்கு புஷ்பம்.

“இல்லையேம்மா, ஆளு பேரு புதுசா இருக்கு. நமக்கும் கட்சிக்காரங்க யாரையும் தெரியாது. யாரா இருக்கும்” என யோசித்தார்.

லேண்ட் லைன் அடித்தது. “மேடம், அவர் போன்ல யார்கிட்டயோ பேசிகிட்டு இருக்கார். எலெக்சன் விஷயம். நேசமணின்னு பேரு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கார்” என்றார் செல்லகுமார்.

“சரிப்பா, நா சாருகிட்ட சொல்லிடறேன். நீ வெயிட் பண்ணு” என சொல்லி போனை வைத்தார் சங்கு புஷ்பம்.

“எலெக்சன் விஷயம், நேசமணின்னு பேரு அப்படின்னு அவர் போன்ல யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருக்காராம். செல்லகுமார் சொல்றார்” என்றார் சங்கு புஷ்பம்.

“நம்ம செல்லம் எப்பவும் ஷார்ப்பு” என சிரித்தார் நேசப்பா.

“சரிங்க என்ன விஷயமா இருக்கும்? அதுவும் எலெக்க்ஷனை பத்தி” என குழம்பினார் சங்கு புஷ்பம். “வர சொல்லுவோமா” என கேட்டார் நேசப்பாவிடம்.

“கொஞ்ச நேரம் இரு” என சொல்லி கண் மூடி யோசித்தார்.

சில நிமிடத்திற்கு பிறகு “அங்க ஷெல்ப்புல நம்ம லோக்கல் நியூஸ் பேப்பர் இருக்கு பாரு. லாஸ்ட் நாலு நாள் பேப்பர் எடுத்துட்டு வா” என்றார்.

பத்து நிமிடம் ஆனது. “இங்க பாருங்க” என ஒரு செய்தியை காண்பித்தார் சங்கு புஷ்பம்.