Tamil novel – OTP – part 15/20

“சார், பதினொன்னு நாப்பது ஆகுது. லாஸ்ட் டென் மினிட்ஸ்” என்றார் சங்கு புஷ்பம்.

டீலிங் படகு நடு கடலில் இருக்கிறது ரத்தினத்திற்கு. டைம் அவுட் வெளியே குதி என்பது போல் சொன்னார் சங்கு புஷ்பம்.

“ஏம்மா சார் கிட்ட இன்னும் நெறய விஷயம் பேசணும். கொஞ்சம் நேரம் ஆகும்” கடுப்பை அடக்கியபடி சொன்னார் ரத்தினம்.

“அப்போ டைம் எக்ஸ்ட்டென்ஷன்க்கு பே பண்ணிடுங்க சார் இப்போ” என்றார் சங்கு புஷ்பம்.

“ஏம்மா பேசி முடிச்சிட்டு கடைசியா போகும்போது குடுத்துட்டு போறேன்” என்றார் ரத்தினம்.

“சார் அரை மணி நேரமா இல்ல ஒரு மணி நேரமான்னு சொல்லிட்டு பே பண்ணிடுங்க. நாங்க நெக்ஸ்ட் அப்பாயின்ட்மென்ட் அட்டென்ட் பண்ணனும்” என அசால்ட்டாக சொன்னார் சங்கு புஷ்பம்.

தங்களுக்கு வெளியே யாரும் லைன் கட்டி நிற்கவில்லை. இவர் கிளம்பினால் சாப்பிட்டு ஆளுக்கு நாலு மாத்திரை போட்டுக் கொண்டு இழுத்துப்போர்த்தி தூங்கத் தான் போகிறோம்.ஆனாலும் சங்கு ரத்தினத்தை சத்தாய்ப்பது நேசப்பாவிற்கு ஆனந்தமாக இருந்தது.

எரிச்சலோடு மீண்டும் கதவோரம் போய் அவரின் ட்ரெஷரு ட்ரோவு ட்ரவுசரிலிருந்து கரன்சியை எடுத்தார்.

“இந்தாங்க, ரெண்டாயிரம். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு” என் நீட்டினார் ரத்தினம்.

“சார், பன்னெண்டு அம்பதுக்கு உங்க டைம் முடியும்” கரன்சியை எண்ணியபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

பிறகு நிதானமாக மேஜை மீது கரன்சியை பரப்பி அதன் மீது டேபிள்வெயிட் வைத்தார். பக்கத்தில் இருந்த சேனிட்டைசரால் கைகளை துடைத்துக்கொண்டே “நோட்டு கொஞ்சம் ஈரமா இருக்குங்க.காசு மஹாலக்ஷ்மி  சார். இவ்ளோ பெரிய கட்சியில எப்பேர்ப்பட்ட பொறுப்புல இருக்கீங்க. ஒரு நல்ல பர்ஸா வாங்கி யூஸ் பண்ணுங்க சார். அந்த பர்ஸ்ல நாலு ஏலக்கா, நாலு கிராம்பு அப்புறம் கொஞ்சம் பட்டை எல்லாம் ஒரு பச்சை கலரு துணில சுத்தி வைங்க. அப்புறம் பாருங்க உங்க கிராப் எங்க போகுதுன்னு” என வாஞ்சையாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

ட்ரவுசர் போட ஆரம்பித்த காலத்திலிருந்து அது தான் கல்லாப்பெட்டி ரத்தினத்திற்கு.

அடி வயிற்றில் குத்திய ரணம் ஆருகையில் அவர் ஈகோவில் ஒரு இடி இடித்தார் சங்கு புஷ்பம்.

“எப்பேர்ப்பட்ட பொறுப்புனு ” இந்த அம்மா சொல்லுற மாதிரி தான் எந்த பொறுப்புல இருக்கோம்னு குழம்பினார்.

“நாலு எடத்துக்கு போறவரு. பெரிய மனுஷங்களை பாக்குறவரு நீங்க போற எடத்துல எல்லாம் ஒதுக்குப்புறம் தேட முடியுமா. இப்ப வேற எல்லா மூலை முடுக்குலேயும் சிசிடிவி கேமரா இருக்கு” என ஒரு எக்ஸ்ட்ரா பாயிண்ட்டை போட்டார் சங்கு புஷ்பம்.

பகீரென்று ஆனது ரத்தினத்திற்க்கு. பர்ஸ் வாங்கி விட்டுத்தான் மறு வேலை என உறுதியெடுத்தார்.

சக டிரௌசர் கோஷ்டியையும் அலெர்ட் செய்ய வேண்டும் என குறித்துக்கொண்டார்.

வந்த வேலைக்கு பிள்ளையார் சுழி கூட போடாத நிலையில் நாலாயிரம் பணால். இன்னும் இவர்களை வைத்து எப்படி மொத்த டீலிங்கையும் முடிப்பது என நாக்கு தள்ளிப்போனார் ரத்தினம்.

நேசப்பாவிற்கு யோசிக்க நேரம் நிறைய கிடைத்தது.

தொடர்ந்து சங்கு புஷ்பம் ரத்தினத்திடம் பேச்சு கொடுத்துக்கொண்டே போனிலும் சிஸ்டத்திலும் வேலை செய்து கொண்டிருப்பதை கவனித்தார் நேசப்பா.

இப்போது அவர் நிராயுதபாணி. அவர் எதிரே இருக்கும் ரத்தினத்தை நேருக்கு நேர் கையாளுவதே அவருக்கு சவாலான காரியமாக இருந்தது. அதனால் சங்கு புஷ்பம் கொடுக்கிற குறிப்புகளை கொண்டு இந்த சூழ்நிலையை எதிர் கொள்வது என முடிவெடுத்தார்.

சங்கு புஷ்பத்தின் மனம் வேதனையாய் இருந்தது. தலை மறைவு வாழ்க்கை வரை நேசப்பாவை கொண்டு சென்றதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

நமக்கு விருப்பமில்லை என சொல்லி ஒதுங்கிக்கொள்ளலாம். ஆனால் இவர் வேறு இரையை போய் தேடுவதை நிறுத்த முடியாது. எனவே ரத்தினத்திற்கும், அவரின் ஆருயிர் அண்ணனுக்கும்,அருமை அண்ணியின் வெற்றிக்கும்  கன்னி வெடி வைக்க வேலையை ஆரம்பித்தார்.

“நா மட்டுந்தானா இல்ல வேற யாராவது இந்த பேர்ல இருக்காங்களா உங்க டீலிங்க்ல” என அடுத்த ஓவரை வீச ஆரம்பித்தார் நேசமணி.

இக்கட்டான கேள்வி இது ரத்தினத்திற்கு. அவர் இன்னும் டிரௌசர் ட்ராமாவிலிருந்தே வெளியே வரவில்லை.

பர்ஸ் பச்சைக்கலரு துணி என மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவரை வாலன்டரியாக வண்டியில் தூக்கிப் போட்டார் நேசப்பா.

குமாரு, சேகரு என வேட்பாளராக இருந்தால் தெருவுக்கு தெரு அந்த பெயரில் ஆட்கள் இருப்பார்கள்.

பேரம் அவசியமில்லை. ரெண்டு மூணு பலகீனமான ஆட்களை தேற்றி விடலாம்.

இந்த நேசமணி, அலெக்சாண்டர் எல்லாம் இம்சை புடிச்ச பேர்கள். எங்காவது ஒன்றிரண்டு தான் இருக்கும். அதில் ஒன்று வேட்பாளராக இருக்கும். அந்த வார்டில் மாற்றுக்கு எங்கே தேடுவது.

என்ன சொன்னாலும் சிக்கல். இவர் ஒருத்தர் தான் என்றால் ரேட் இன்னும் ஏற்றுவார்.

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க. நம்ம மேட்டர முடிக்கலாம்” என அவசரம் காட்டினார் ரத்தினம்.

“இல்ல நாங்க ஒரு சங்கமா இருந்தா நல்லது பாருங்க” அதான் கேட்டேன் என சொன்னார் நேசப்பா.

சங்கமா, இவங்க ரெண்டு பேரையே சமாளிக்க முடியல. இதுல இவங்க செட்டு சேந்தா அவ்வளவு தான் என பயந்தார் ரத்தினம்.

“நீங்க ஒருத்தரரு தாங்க” என பம்மினார்.

நேற்று வரை அரசியல் வாடையே இல்லாமல் இருந்தவர்கள் இவர்கள்.

இந்த காலை பொழுது அவர்களுக்கு அதன் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

சங்கு புஷ்பமும் கார்பொரேஷன் மற்றும் தேர்தல் ஆணைய வெப்சைட் என எல்லாவற்றையும் துழாவினார். ஓரளவிற்கு அவருக்கு விஷயம் பிடிபட்டது.

லக்ஷ்மி அனுப்பிய லிஸ்டையும் டவுன்லோட் செய்து ப்ரிண்டு எடுத்தார்.

நேசப்பா பேசிக்கொண்டே இருக்க பிரிண்டர் சரக் சரக்கென்று ஓயாமல் வேலை செய்து கொண்டிருந்தது.

“ரத்தினம் நம்பர விசிட்டர் நோட்ல எழுதி இருப்பார். அத எனக்கு வாட்சப் பண்ணுங்க” என செல்லகுமாருக்கு செய்தி அனுப்பினார் சங்கு புஷ்பம்.

அடுத்த செய்தி கல்பனாவுக்கு. சிட்டி போலீசில் வேலை செய்பவர். பி ப்ளாக்கில் குடியிருக்கிறார். இந்த சொசைட்டிக்கு வருவதற்கு முன்பே சங்கு புஷ்பத்திற்கு பழக்கம். அடிதடி, கத்தி குத்து, ஆக்ஸிடெண்ட், சூசைட் அட்டெம்ப்ட் என எல்லா கேசும் ஜி.எச்சுக்கு தான் வரும்.

“சிஸ்டர், இந்த கேஸ கொஞ்சம் மானிட்டர் பண்ணுங்க” என சங்கு புஷ்பத்திடம் உதவிக்கு வருவார் கல்பனா.

அந்த வார்டுல எந்த சிஸ்டர் ஷிப்ட்ல இருக்காங்க என பார்த்து சர்வைலென்சுக்கு சொல்லி வைத்து விடுவார் சங்கு புஷ்பம்.

நைட் ஷிப்ட் நர்சஸம்மா தலைய டேபிள்ள கவுந்துக்கிட்டு தூங்குது என என்ன பேசினாலும் கல்பனா காதுக்குப் போய்விடும். ரெண்டு தனிப்படை போட்டாலும் கிடைக்காத ரிசல்ட் அது.

ஆள் பேரு இரத்தின முத்து சேகர். வயசு அம்பது கிட்ட. கட்சி பேரு ஏரியா பேரு போட்டு டீடெயில்ஸ் கேட்டு அனுப்பினார் கல்பனாவுக்கு. சிக்கலான விஷயத்தில் இருப்பதாக உதவி கேட்டார் சங்கு புஷ்பம்.

மூன்றாவது செய்தி கோமதிக்கு. இன்னைக்கு காலைல பத்து முப்பதுலேர்ந்து பத்து நாப்பதுக்குள்ள பிப்த் ப்ளோர் காரிடார் சிசிடிவி புட்டேஜ் அனுப்பும்மா.

அப்டியே பத்துமணி கிட்ட அவர் விசிட்டர் நோட்ல நேசமணின்னு பேர் எழுதுவாரு. அத ஜூம் பண்ணி எடுத்து போடும்மா”.

பர பரவென்று டைப் செய்து அனுப்பினார் சங்கு புஷ்பம்.

மூவரின் பதிலுக்கு காத்திருக்கும் வேளையில் லக்ஷ்மி அனுப்பிய வாக்காளர் லிஸ்டை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தார் சங்கு புஷ்பம். இன்னொரு பட்சி மாட்டியது.

பக்கத்துத் தெருவில் ஒரு தகுதிவாய்ந்த இல்லத்தரசி இருக்கிறார் நேசமணி என்ற பேரில்.

ரத்தினம் முன்பே இருந்த க்ளாசில் சரக்கு காலியாகி இருந்தது. நேசமணி ஒரு இருபாலர் பெயர் என்பதை அவர் கவனிக்கவில்லை.

வேட்பாளர் ஆண் என்பதால் ஆண் வாக்காளரை தேடுவதிலேயே குறியாய் இருந்திருக்கலாம்.

இதுவரை நடந்தவற்றை மகளுக்கு செய்தியாய் அனுப்பினார். பாவம் அவள். சொல்லாமல் இருந்திருக்கலாம் என நினைத்தார் சங்கு புஷ்பம்.

கணவர் பெயர், முகவரி என கிடைத்த தகவல்களை நோட் செய்து கொண்டார்.

அப்போது தான் அவருக்கு மண்டையில் அடித்தார் போல் அந்த பெயர் ஞாபகம் வந்தது. கணவர் பெயர் குமரஜோதி என இருந்தது. முகவரியும் அவர்கள் கடை இருக்கும் ஏரியா. இவர்கள் சொசைட்டிக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர். நல்ல பழக்கம். குணமான மனிதர்.

சந்தேகமே இல்லாமல் சங்கு புஷ்பத்திற்கு அது கடவுள் இருக்கான் குமாரு மொமெண்ட் தான்.

டிங் என மெசேஜ் வந்தது செல்ல குமரிடமிருந்து. போனை எடுத்து முதலில் சைலண்டில் போட்டார் சங்கு புஷ்பம். ரத்தினம் நம்பர் வந்து சேர்ந்தது.

“இன்னொருத்தர் கெடச்சா ஓகேவா” எனக் கேட்டார் சங்கு புஷ்பம். “யாரு” என புருவத்தை நெளித்தார் ரத்தினம்.

“இன்னொரு நேசமணி கெடச்சா ஓகேவா” என அழுத்திக் கேட்டார் சங்கு புஷ்பம்.

“அது வந்து, இல்லியே” என இழுத்தார்.

“அட நல்லது தானே. ஆள் கூட கூட குழப்பம் கூடும்ல. இன்னும் டாக்டருக்கு ஓட்டு குறையும்ல” என ஒத்து ஊதினார் நேசப்பா.

“இல்லேங்க, இவரு ஒருத்தர் தான்” என திடமாய் சொன்னார் ரத்தினம்.

“சரி, எனக்கு தெரிஞ்சு இன்னொருத்தர் இந்த பேர்ல இருக்காங்க நம்ம ஏரியால.

உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க. நாங்க முடிச்சி தர்றோம்” என சப் காண்ட்ராக்ட் கேட்டார் சங்கு புஷ்பம்.

நேசப்பாவிற்க்கு குதூகலமாக இருந்தது. சங்குவிடம் ஏதோ மேட்டர் இருப்பது புரிந்தது.

இவங்க டீலிங்கே எனக்கு நா சொந்த செலவுல வெச்சுகிட்ட சூனியம். ஒண்ணுமே இல்லாம நாலாயிரம் கோவிந்தா. மானம் மரியாதை எல்லாம் டிரௌசரால காத்துல பறக்குது. செத்து செத்து விளையாடலாம் வான்னு 

கூப்பிடுவது போல் இருந்தது ரத்தினத்திற்கு.

“இல்லேங்க நீங்க டீட்டைல் சொல்லுங்க. நா போய் பேசிக்குறேன்” என இறங்கி வந்தார் ரத்தினம்.

“நீங்க பேசினா அவங்க படிய மாட்டாங்க” என்றார் சங்கு புஷ்பம். “ஏன்?” என விரைப்பாய் கேட்டார் ரத்தினம்.

“அதான் சங்கத்து ரூல்ஸ்!” என்றார் நேசப்பா.

ரத்தினத்திற்கு காலின் கீழே பூமி இரண்டாய் பிளந்தார் போலிருந்தது.

Tamil novel – OTP – part 14/20

A senior woman checking the news in the internet

காபி குடிக்கும் நேரம் இரண்டு தரப்பும் தங்களை கொஞ்சம் தயார் படுத்திக்கொண்டார்கள். “கண்டிப்பா ஜெயிக்க வெச்சுடுவீங்களா” என்றார் நேசப்பா.

ரத்தினம் சற்று முன்னே வந்து “இல்ல சார், எங்க ஆளு ஜெயிக்க வியூகம் சார் இது” என்றார்.

“அப்போ நா தோக்கணுமா?” என நெருடலாய் கேட்டார் நேசமணி.

“அதுக்காகத்தான் சார் இந்த ஆபர். ஜஸ்ட் கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணீங்கன்னா ஈஸியா ஒரு அமௌண்ட் பாக்கலாம்” என்றார் ரத்தினம்.

பல முறை பேப்பரில் படித்த செய்தி இப்போது அவர் முன்னே மலையாய் வந்து நிற்கிறது. திரும்பி சங்கு புஷ்பத்தை பார்க்க, தொடருங்கள் என்பது போல அவர் தலையை ஆட்டினார். தன் சுயமரியாதையின் விலை பட்டியலிடப்பட்டு பேரத்தில் இருப்பது உறுத்தியது. சற்று பிறகுதான் அது வெறும் தன் பெயருக்கான விலை என்று புரிந்தது. மூச்சை இழுத்து விட்டு சாய்ந்து உட்கார்ந்தார் நேசப்பா.

தோத்தா எனக்கு கெட்ட பேராச்சே சார்” என்றார் நேசப்பா.

அதெல்லாம் கொஞ்ச நாள்ல ஜனங்க மறந்துடுவாங்க சார். உங்க லாபத்தை மட்டும் பாருங்க சார். ஒண்ணுமே பண்ணாம உக்காந்த இடத்துல இருந்து ஒரு வாய்ப்பு. இது எல்லாருக்கும் கிடைக்காதுங்க. திரும்பவும் வரும்னு சொல்ல முடியாதுங்க. யோசிச்சு சொல்லுங்க சார்” என மண்டையை கழுவ ஆரம்பித்தார் ரத்தினம்.

அவரின் அனுபவம் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்தது.

ரத்தினத்திற்கு அவர் நாலு வரி முழுதாய் பேசி முடித்த பிறகு தான் நம்பிக்கையை உணர்ந்தார். இன்னும் கொஞ்சம் அழுத்தினால் எப்படியும் முடிக்கலாம் என நினைத்தார்.

நேசப்பா இயல்புக்கு வந்தார். இன்னும் கொஞ்சம் போட்டு வாங்கலாம் என ஆரம்பித்தார்.

“என் பேருக்கு வெறும் மூணு எல் தானா? என்றார். பேரம் ஆரம்பித்தவுடன் ரத்தினத்திற்கு உள்ளே பெருமை பொங்கியது.

இந்த ரத்தினம் பேசினா எந்த கொம்பனும் மடங்கிடுவான் என குதூகலித்தார். என்ன பேச்சுடா சாமி பேசுனாங்க ரெண்டு பேரும் என எரிச்சலானார்.

பல்வேறு உணர்ச்சிகள் அவரை ஆட்கொள்ள, அதில் சிறிது அவரின் உடலிலும் முகத்திலும் தெரிந்தது.

“தோக்கணும், அசிங்கப்படணும், பேரும் கெட்டு போகணும், சொசைட்டில நடமாட முடியாது சார். இவ்வளுவுக்கும் விலை மூணு எல் னா சரிபடாது சார்”, என முகத்தை சுளித்தார் நேசப்பா.

ரத்தினத்திற்கு பொறுமை கொஞ்சம் ஆட்டம் கண்டது.

“சார் நாலு எல் பைனல் பிளஸ் உங்க எல்லா செலவும் எங்களோடது.

சொசைட்டில நடமாட முடியாதுனு பீல் பண்ணீங்கன்னா ஒரு மாசத்துக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஊட்டில ஏர் பிஎன்பில தங்க ஏற்பாடு பண்ணித்தரேன். போய் வர்ற செலவையும் ஏத்துக்கறேன்” சர சரவென பேசி தீர்த்தார் ரத்தினம்.

உயிரோடு பிணமாகவும், தலை குனிந்து நடக்கவும், தலை மறைவாய் வாழும் வரையும் திட்டம் தருவது நேசப்பாவை உலுக்கி எடுத்தது. மிக சாதாரணமாய் ஆரம்பித்த ஒரு சந்திப்பு கொதிநிலையின் உச்சத்திற்கு அவரை கொண்டு சென்றது. தேர்தல் வெற்றிக்காக சக மனிதனை விலை பேசுவது, அந்த சமூகத்தில் எளிய விளிம்பு நிலையில் இருக்கும் வாக்காளர்களை குழப்பி, தவறாக வழி நடத்தி ஆதாயம் காண்பது என அராஜகத்தின் முழு உருவமும் அவர் முன்னே விஸ்வரூபமாய் நின்றது.

வாழ்நாள் முழுவதும் நேர்மையாகவும் வலுவான தார்மீக கொள்கை பிடிப்புள்ளவராகவும் எல்லா சூழ்நிலைகளையும் சந்தித்தவர் நேசப்பா. அவர் கண்ணியத்தின் மீதும் நன்னெறிப் பண்புகள் மீதும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு, அவரின் தனிப்பட்ட விழுமியங்கள் சூறையாடப்படும் அபாயத்திலிருந்தது. சமூக, அரசியல் மற்றும் பண செல்வாக்கோடு மூர்க்கமாகவும் அலட்சியமாகவும் நடத்தி அவரை இணங்கிப் போகும்படி செய்துவிடலாம் என எந்த எல்லைக்கும் செல்பவராக ரத்தினம் இருந்தார்.

பொருளாதார ரீதியாகவோ மன வலிமை ரீதியாகவோ பலகீனமானவர்களை எளிய இலக்குகளாக குறி வைக்கிறார்கள் ரத்தினம் போன்றவர்கள்.

உறுதியாகவும், மன உந்துதலோடும், நிதானமாக உணர்வுகளை கட்டுக்குள் வைத்தும் இந்த இழிவான போக்கில் சிக்காமல் இருக்க வழி வகைகளை சிந்தித்தார்கள் நேசப்பாவும் சங்கு புஷ்பமும்.

“ஓ.டி.பி வந்திருக்கு நேஸ். டென்ஷன் ஆகாதீங்க” என்றார் சங்கு புஷ்பம் சிஸ்டத்தில் பார்த்தபடியே. போனை எடுத்து குறுஞ்செய்தியை படித்தார் நேசப்பா.

“ஒரு திமிரெடுத்த பொறம்போக்கு” என செய்தி அனுப்பி இருந்தார் சங்கு புஷ்பம்.

லேசாக புன்னகைத்த படியே வாய்க்கு வந்த நாலு இலக்க எண்ணை சொன்னார் நேசப்பா.

ஓ.டி.பிக்கு எதுக்கு டென்ஷன் ஆவணும், இவரு ஏன் சிரிக்கணும் என முழித்தார் ரத்தினம்.

Tamil novel – OTP – Part 13/20

A woman professor discussing with her students

லக்ஷ்மிக்கு மனது சங்கடமாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் எப்படி தனியாக இந்த பிரச்சினையை சமாளிக்கப் போகிறார்கள் என மனது வருத்தப்பட்டார்.

தொடர்ந்து சங்கு புஷ்பம் அனுப்பும் செய்திகளில் இருந்து அங்கு என்ன நிலவரம் என தெரிந்து கொண்டார். செய்தி கேட்டதிலிருந்து இணையத்தில் இந்த தேர்தல், இதற்கு முன் நடந்த தேர்தலின் முடிவுகள் மற்றும் வாக்காளர் தகவல்கள் என எல்லா விஷயங்களையும் தேடி தேடி படித்தார்.

தனக்கு கிடைத்த எல்லா விஷங்களையும் அம்மாவுக்கு அனுப்பி வைத்தார். ஏதாவது ஒரு வகையில் அது அவர்களுக்கு உதவலாம் என் நம்பினார்.

கேண்டிடேட்டு புஷ்பாவுக்கு எதிராக டாக்டர் நேசமணி.

டாக்டர் நேசமணிக்கு வரும் வாக்குகளை பிரிக்க மற்றும் மக்களை குழப்ப அதே பெயரில் இருக்கும் சிலரை டம்மி வேட்பாளர்களாக நிறுத்துவது. சில வார்டுகளில் சொற்ப வாக்குகளில் வெற்றி வித்தியாசம் இருந்தது. ஆளும் கட்சி, எதிர் கட்சி, பிற வளர்ந்து வரும் கட்சிகள் ஏன் சுயேச்சை வேட்பாளருக்கு எதிராக கூட கடந்த தேர்தலில் இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டதை கவனித்தார். அது கேண்டிடேட்டு லிஸ்டில் அப்பட்டமாக தெரிந்தது.

யார் இதை செய்தார்கள் என பெரும்பாலும் பொது வெளியில் தெரியாது.

பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் இந்த போக்கு காணப்பட்டது.

படித்த வாக்காளர்களும் பாமரர்களும் பெரும்பாலும் அவர்கள் வார்டின் முழு லிஸ்டையும் அலசி ஆராய்வதில்லை. அது தெரிந்தாலும் பெரிதாய் எடுத்து கொள்வது இல்லை.

கேண்டிடேட்டு மற்றும் வாக்காளர்களும் இடையே இதில் நுட்பமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த டம்மி கேண்டிடேட்டுகள்.

அவர்கள் அரசியல் மற்றும் பொது வாழ்வில் இல்லாமல் இருக்கும் சாமானிய மக்கள்.

அவர்களுக்கு இருக்கும் தேவைகள் அல்லது பலகீனங்களின் காரணமாக டம்மியாக களம் காண்பவர்கள்.

அவர்களின் பெயரையும் சுய மரியாதையும் ஏதோ ஒரு அழுத்தம் அல்லது நிர்பந்தம் காரணமாக விலைக்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள்.

லக்ஷ்மி கடந்த தேர்தல் முடிவுகளை மீண்டும் ஒரு முறை எடுத்துக் பார்த்தார்.

எந்த ஒரு வார்டிலும் அதில் போட்டியிட போகும் நபரை அந்த கட்சி சார்ந்த அல்லது அரசியல் தொடர்புடைய நபர்களுக்கு மட்டுமே இவர் வேட்பாளராக வருவார் என தெரிந்திருக்கும்.

பிரபலமான சுயேச்சை என்றால் கூட ஊகிக்க முடியும்.

ஆனால் பொது ஜனத்துக்கு தெரியவோ ஊகிக்கவோ வாய்ப்பு மிக குறைவு.

அதனால் இந்த அணுகுமுறையின் ஊற்றுக் கண் பொது ஜனம் அல்ல, கட்சி சார்புடையவர்கள் என முடிவுக்கு வந்தார்.

அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அல்லல் படும் பொது ஜனம் கண்டிப்பாக இந்த குறுக்கு வழி வாய்ப்பை பற்றி சிந்திக்கவோ அல்லது அது தொடர்பான தகவல்களை அணுகவோ இயலாதவர்கள்.

அடி மட்டத்தில், சமூக அல்லது பொருளாதார செல்வாக்கு இல்லாதவர்களாக இருக்கும் இவர்களை குறி வைத்து செய்யப்படும் இந்த இழி செயல் தடுக்கப் பட வேண்டும் என நினைத்தார் லக்ஷ்மி. இதை செய்பவர்கள் பொது சமூகத்தில் ஆதாரத்தோடு வெளிப்பட வேண்டும் என எண்ணினார்.

அந்த வார்டில் பதினாறாயிரம் வாக்காளர்கள் இருந்தார்கள் பட்டியலில். லக்ஷ்மி அந்த லிஸ்டை பிரிண்ட் எடுத்தார். நன்றாக படிக்கும் சில மாணவிகளை அழைத்து நேசமணி மற்றும் புஷ்பா பெயர் உள்ளவர்களை குறித்துக் கொள்ள சொன்னார்.

அதில் எல்லா காம்பினேஷன்களும் அடக்கம். வெறும் புஷ்பா மட்டுமல்லாமல் புஷ்பவல்லி, புஷ்ப குமாரி, புஷ்பா ராஜ் என ஆண் மற்றும் பெண் பெயர்களும் தேடப்பட்டது.

அதே போல நேசமணி என்ற பெயருக்கும். நேசமலர், நேசகொடி, நேசசெடி என எது இருந்தாலும் குறித்துக் கொண்டார்கள்.

முழு லிஸ்டும் ரெடியானது. புஷ்பா பெயரில் பதினெட்டு பேர். நேசமணி காம்பினேஷனில் மூன்று பேர்.

எல்லாவற்றையும் ஒரு எக்சல் ஷீட்டில் போட்டு அம்மாவுக்கு அனுப்பினார் லக்ஷ்மி. அந்த லிஸ்டில் சங்கு புஷ்பமும் இருந்தார்.

Tamil novel – OTP – Part 12/20

TN politician enjoying his meal

பத்து நிமிடம் கழித்து ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார் நேசமணி.

“ரத்தினம் சார், மணி இப்போ பத்து அம்பது. பதினொன்னு அம்பதுக்கு உங்க டைம் முடியும்” என்றார் சங்கு புஷ்பம்.

இந்த அம்மா சரியான எரிச்சல் டேங்கர் என கறுவினார் ரத்தினம்.

உதார் பேச்சு பேசியோ நைச்சியமாக பேசியோ ஆளுக்கேற்றார் போல் வளைந்து கொடுத்து போனவர். பல ஆண்டுகளாக வாங்கியே பழக்கப்பட்ட கைகள்.

கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல தன்னிடமிருந்தே பணம் வாங்கியதை அவர் மனம் ஏற்க மறுத்தது.

உங்க பேர் என்ன சார்? என்ன விஷயமா பாக்க வந்தீங்க? என்றார்.

“சார், என் பேரு ரத்தினமுத்துசேகர். நம்ம தொகுதி எக்ஸ் எம்எல்ஏ கட்சிலேர்ந்து வரேன். கார்ப்பொரேஷன் எலெக்க்ஷன் விஷயமா பேசணும்” என்றார்.

சேகரா இவரு. அவளை கைலயே புடிக்க முடியாது என மனதில் நினைத்துக்கொண்டார் நேசப்பா.

ரத்தினம் சுத்தி சுத்தி பார்வையை ஓட்டி ஹாலை நோட்டமிட்டார்.

சங்கு புஷ்பம் சிஸ்டத்தை ஆன் செய்து நோட்பேடை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“சார், நீங்க ஜோசியம் இல்ல வாஸ்து அது மாதிரி ஏதாவது பாக்குறீங்களா?”

என்றார் ரத்தினம். “இல்லிங்க” என்றார் நேசப்பா.

“அப்போ, இந்த வெயிட் லாஸ், ஹீலிங் அந்த மாதிரியா? என்றார். “இல்லிங்க” என்றார் நேசப்பா.

“மேடம் கன்சல்டேஷன் சார்ஜ் கேட்டாங்க. அதான் எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமுன்னு கேட்டேன்” என்றார் ரத்தினம்.

“ஏதோ ஒரு வேலையா தான என்ன பாக்க வந்தீங்க. அதுக்காக தான்”

என ரத்தினதினின் கண்களை ஊடுருவியபடியே சொன்னார் நேசப்பா.

“என்ன தேவைக்காக என்கிட்ட வந்தீங்கன்னு தெரியாது. ஆனா என் நேரத்தோட மதிப்பு எனக்கு தெரியும்” என்றார் நேசப்பா.

இந்த ரெண்டு பேரும் ஒரு மார்க்கமான டிசைனா இருக்காங்களே என உள்ளுக்குள் அரற்றினார் ரத்தினம்.

“கார்பொரேஷன் எலெக்க்ஷன்ல நீங்க சுயேச்சையா நிக்கணும் சார். அத பத்தி பேச தான் வந்தேன்” என்றார் ரத்தினம்.

“எலெக்க்ஷன் விஷயம்னு சொல்றீங்க. தனியா வந்துருக்கீங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“ஆமாங்க, கஷ்டப்பட்டு வியூகம் அமைச்சு செஞ்சா கூட வர்றவன் பேர வாங்கிட்டு போயிடுவான். அதான் நா மட்டும் வந்தேன்” என்றார் ரத்தினம்.

“சார் ரொம்ப ஸ்ட்ராங்கான பெர்சோனாலிடியா இருக்கீங்க. நல்லது சார். நா நேரா விஷயத்துக்கு வரேன்.

அவர் அண்ணி வேட்பாளராக இருப்பதை சொன்னார்.

“அண்ணிய விட சித்தா டாக்டர் நேசமணி பவர்புல் இந்த வார்டுல. அதுனால அதே பேர்ல இருக்குறவங்கள கேண்டிடேட்டா சுயேச்சையா நிக்க வெக்க ஏற்பாடு பண்றேன். கொஞ்சம் ஓட்டு பிரியும். அது எங்களுக்கு சாதகமா இருக்கும்னு நம்புறன். அப்புறம் உங்களுக்கு என்ன பண்ணணுமோ அதையும் பண்ணிடுவோம் என்றார்” ரத்தினம்.

“என்ன பண்ணுவீங்க சார்” என்றார் நேசமணி.

“எல்லா செலவும் அண்ணன் பார்த்துப்பார் சார், நீங்க பேப்பர்ஸ் மட்டும் கரெக்ட்டா குடுத்தா போதும். பசங்கள வச்சி எல்லா வேலையும் பக்கவா நடக்கும் சார். உங்க நாமினேஷன் ஓகே ஆச்சுன்னா ஒரு அமௌன்ட் குடுத்துருவோம்” என்றார் ரத்தினம்.

“எவ்ளோ தருவீங்க” என்றார் நேசப்பா.

“ஒரு மூணு எல் தருவார் சார் அண்ணன்” என்றார் அவர்.

சந்தேகப்பட்ட விஷயம் தெளிவாகி விட்டது. இது காலை சுற்றிய பாம்பு என நினைத்தார் சங்கு புஷ்பம். சிஸ்டத்தில் அமர்ந்தபடியே லக்ஷ்மிக்கு போனில் செய்தி அனுப்பினார்.

“அரசியல் விஷயமா வந்து இருக்கீங்க, உங்களுக்கு எதுவும் சாப்பிட தர மறந்துட்டேன் பாருங்க. இதோ வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.

ரத்தினத்திற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. எப்படியும் படிந்து விடுவார் என தோன்றியது.

“இந்தாங்க சாப்பிடுங்க”, என ட்ரேவை வைத்தார் நேசப்பா.

ஒரு சின்ன பிளேட்டில் பிரியாணியும் ஒரு கிளாஸ் விஸ்கியும் இருந்தது.

அடி வயிற்றில் சரக்கென்று கத்தியால் குத்தியது போலிருந்தது ரத்தினத்திற்கு.

அவர் முகம் வெளிறிப்போனது

“இது இது” என ஏதோ சொல்ல வந்து தடுமாறினார்.

“சாப்பிடுங்க சார். எங்க ஆளுங்களை இத்தனை வருஷமா கூட்டிட்டு போய் கவனிச்சுக்கிட்டீங்க. ஒரு நாள் நாங்க செய்ய கூடாதா” என்றார் நேசப்பா.

எதிரியின் அடி வயிற்றில் கத்தியால் குத்தியும் வஞ்சம் தீராமல் அவன் கன்னத்தில் பளுக் பளுக்கென்று போட்டார் போல வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.

“இது சரி இல்லீங்க. இப்ப வேணாம் சார்” என நாக்குழறினர் ரத்தினம்.

இது அவர் இதுவரை சந்திக்காத ஒரு நிகழ்வு. இந்த விதமான உபசரிப்பு அவரின் மொத்த தயாரிப்பையும் சீர்குலைத்தது. யாரை பார்க்க வந்தோம் என்ன பேச வந்தோம் என சில நிமிடம் எல்லாம் மறந்து தத்தளித்தார் ரத்தினம்.

“ஓ, பகல்ல சாப்பிடறதில்லையா, சரி காபி டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?” என வலையை விரித்தார் நேசப்பா.

ரத்தினத்திற்கு ஒரு பிடிப்பு கிடைத்தார் போலிருந்தது. ஆனாலும் அந்த டிரே அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.

“ஏம்மா அபர், சாருக்கு காபியாவது குடும்மா என்றார் நேசப்பா.

ரத்தினத்திற்கு போன மூச்சு வந்தார் போலிருந்தது. பேச்சை இலகுவாக்க “மேடம் பேர் என்ன சார்” என்றார்.

“ஏங்க லிஸ்ட்ல இவர் பேர் பக்கத்துலயே என் பேரும் இருந்திருக்கும். வெறும் நேசமணி மட்டும் தான் நோட் பண்ணுவீங்களா” என கேட்டார் சங்கு புஷ்பம்.

“அவங்க எஸ் பி சார்” என்றார் நேசப்பா. ரத்தினத்திற்கு தூக்கி வாரி போட்டது.

“சங்கு புஷ்பம் சார்” என்றார் நேசப்பா சிரித்துக்கொண்டே.

முதல் பத்து நிமிடத்திலேயே கண்ணை கட்டியது ரத்தினத்திற்கு. பேசாம அரை மணிக்கு ஆயிரம் மட்டும் கொடுத்திருக்கலாம் என நினைத்தார்.

“காபில சர்க்கரை போடவாங்க?” என உள்ளிருந்து கேட்டார் சங்கு புஷ்பம்.

“வேணாம் சார்” என மெலிதான குரலில் சொன்னார் ரத்தினம்.

“பிபீ, சாருக்கு சர்க்கரை வேணாமாம்” என்றார் நேசப்பா நமுட்டு சிரிப்போடு.

“பிபீ இல்ல சார். நார்மல் தான். சுகர் மட்டுந்தான்” என்றார் ரத்தினம்.

“சங்கு புஷ்பத்தோட இன்னொரு பேரு பட்டர்பிளை பீ. அத தான் சுருக்கி என்ன பிபீனு கூப்பிடுவாரு” என சொல்லிய படியே காபி கொடுத்தார் சங்கு புஷ்பம்.

இடைப்பட்ட நேரத்தில் ரத்தினத்தின் பார்வை அடிக்கடி விஸ்க்கி கிளாஸ் மீது விழுந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்திற்க்கு மேல் அதன் ஈர்ப்பு அவர் சுய கட்டுப்பாட்டை தகர்த்தது. அடி வயிற்றில் வாங்கிய கத்திக் குத்தின் ரணம் சிறு வடு கூட இல்லாமல் மறைந்து போனது. விஸ்க்கி கிளாஸ் வேலை செய்யும் என நேசப்பா நினைத்தது பொய்யாகவில்லை.

ஆனால் விஸ்க்கியை விட அந்த கிளாசை கட்சிக்காரர் அவ்வளவு நேசிப்பார் என நேசப்பாவே எதிர்பார்க்கவில்லை. எல்லாம் கோபால் சார் உபயம்.

ரத்தினம் ஆர்வம் தாளாமல் வாய் விட்டே கேட்டு விட்டார்.

“சார், இந்த கிளாஸ் சூப்பரா இருக்கு. எங்க சார் வாங்குனீங்க, எவ்ளோ விலை” என்றார்?

“அமெரிக்காவுல. ஜோடி பத்தாயிரம் நம்ம ஊர் வெலைல” கெத்தாக சொன்னார் நேசப்பா.

மூச்சடைத்துப் போவதற்கு முன் ஸ்டேஜில் இருந்தார் ரத்தினம்.

“அப்ப இந்த ஒரு கிளாஸ் மட்டும் அஞ்சாயிரமா சார்?” என வாயை பிளந்தார்.

“அஞ்சாயிரத்து சொச்சம் உள்ள இருக்க சரக்கு இல்லாம” என சொன்னார் சங்கு புஷ்பம்.

“கிளாஸ்ஸே அஞ்சாயிரம்னா சரக்கு எவ்ளோ இருக்கும்” என கணக்குப் போட்டார்.

ஆனாலும் சரக்கை விட அவரை சுண்டி இழுத்தது என்னவோ அந்த கிளாஸ் தான்.

ஒரு சைடில் இருந்து பார்க்க க்ளாஸுக்குள் கிளாஸ் போல் இருந்தது.

நீண்ட ஐங்கோண வடிவ வெளிப்புறமும் வைன் கிளாஸ் போன்ற உட்புறமும் மேலிருந்து உள்ளே பார்த்தால் சிறிய தங்க நிற சாண்ட்லியர் விளக்கு தரையில் பட்டு ஜொலிப்பதை போல விஸ்க்கி மிதந்து கொண்டிருந்தது.

ஐம்பது மில்லி கூட இல்லாத திரவம் முழு கோப்பையையும் வெளிற் மஞ்சள் நிறமாக்கியது.

சற்றே உட்புறம் குவிந்த வாய்ப்பகுதி தங்க வளையம் போல இருந்தது. கால் கோப்பைக்கும் கீழே இருந்தது விஸ்க்கி. மீதி இருந்த முக்கால் பகுதி காலி கோப்பையை ரசித்துக்கொண்டே இருந்தார் ரத்தினம்.

உயர் தர கண்ணாடியில் அருமையான வளைவுகளைக்கொண்டு பார்க்க கச்சிதமாக இருந்தது. மனதிற்குள் ஆருயிர் அண்ணனை நினைத்துக்கொண்டார் ரத்தினம்.

“பிச்சைக்கார பய. என்ன பதவி காசு இருந்து என்ன பிரயோஜனம். மாடு மாதிரி வேல செஞ்சாலும் ரெண்டு ரூபா பிளாஸ்டிக் கப்புல குடுக்குறான். அதுல ஊத்திக் குடிக்கவே என்னவோ வள்ளல் பிரபு மாதிரி பேசுறான்.

சார் தங்கம். நல்ல மனசுக்காரர். ஊரு பேரு தெரியாத எனக்கே அஞ்சாயிரம் ரூபா க்ளாஸ்ல அசால்ட்டா தர்றார்.

மனுஷன்னா இவர்தான்யா நல்ல மனுஷன். இந்த டீலிங் நல்ல படியா முடிஞ்சா அப்புறம் சாருகிட்ட டச்சுலேயே இருக்கணும் ” என யோசனை புல்லட்டை தாறுமாறாய் ஓட்டினார் ரத்தினம்.

“சார், பிரியாணி சாப்பிடலேன்னா பரவாயில்ல.போகும் போது பார்சல் பண்ணி தரேன். இதை குடிங்க சார்” என கிளாசை நீட்டினார் நேசப்பா.

ரத்தினம் அசடாய் நெளிய, “இது உங்களுக்கு, காபி எனக்கு” என்றார் நேசப்பா.

புறக் காரணிகளால் வரும் ஆர்வம், எரிச்சல், பதட்டம், குழப்பம், தடுமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளுக்கும் எளிதாய் இரையானார் ரத்தினம்.

சூழ்நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள அவர் எடுத்துக் கொள்ளும் காலம் அதிகம். அது இங்கே அவர் முன் இருக்கும் எதிராளிகளுக்கு யோசிக்க அதிக நேரத்தை அளித்தது.

சங்கு புஷ்பமும் நேசப்பாவும் சொல்லாலும் செயலாலும் அதை ஒருவர் மாற்றி ஒருவர் செய்து அவரை நெருக்கி கொண்டிருந்தார்கள்.

Tamil novel – OTP – Part 10/20

TN politician aiming for power

ரத்தினத்திற்கு தெரிந்த ஒரே தொழில் கட்சிப்பணி. தெரிந்த ஒரே கட்சி அவர் கட்சி மட்டுமே. கட்சியில் என்ன பணி என்றால் அவர் இருக்கும் நிலையில் பணம் தவிர மற்ற எல்லாமும் என சொல்லலாம்.

கிளை மட்டத்தில் இருந்து ஆரம்பித்து இருபது ஆண்டுகளாக களத்தில் பணியாற்றி ஒன்றியத்தின் அருகே இப்போது தான் கரை சேர்ந்திருக்கார்.

மாவட்ட அளவில் நல்ல அறிமுகம் இருந்தாலும் இன்னும் ஒரு படி முன்னேற்றத்திற்க்காக காத்திருக்கிறார்.

நிரந்தர தொழில் என்று எதுவும் கிடையாது. வருமானம் மழையாக இல்லெயென்றாலும் சமயங்களில் தூறலாகவோ இல்லை சாரலாகவோ இருக்கும்.

கருமேகம் சூழ்வது போல் எங்கு பிரச்சினையோ, வில்லங்கமோ இருக்கிறதோ, அங்கே வீசும் காற்றின் திசைக்கேற்ப சாய்பவர்.

விசுவாசத்தையும் உழைப்பையும் மட்டுமே கொட்டி கட்சியில் முன்னேற முடியும் என்று இன்று வரை நம்புபவர்.

தன் அனுபவத்தாலும் திறனாலும் தன்னால் நூதனமான முறையில் செயலாற்ற முடியும் என ஆழமான எண்ணம் உடையவர்.

கட்சி சகாக்களை ஒருங்கிணைத்தாலும் சிறு ஒளி கீற்று கூட மற்றவர் மீது விழாமல் பார்த்துக்கொள்வார்.

இப்போது அவர் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். கார்பொரேஷன் தேர்தல் காலம்.

ரத்தினத்தின் ஏரியாவில் அவர் கட்சி வேட்பாளராக நிற்பது எக்ஸ் எம்எல்ஏ மனைவி திருமதி புஷ்பா.

எக்ஸ் எம்எல்ஏ சமீபத்தில் ரத்தினத்திற்கு ஆருயிர் அண்ணனாக கிடைத்தவர்.

நீண்ட காலம் தூரத்தில் இருந்து ரத்தினத்தின் செயல் பாடுகளை பார்த்தவர் அண்ணன்.

சில மாதங்கள் முன்பு அவர் வலது கரம் அகால மரணமடைய புது வலது கரமாய் ஆனார் ரத்தினம்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்ட சபை தேர்தல். அண்ணனுக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது.

இப்போது மனைவி கவுன்சிலராகி, பிறகு அவரும் எம்எல்ஏ ஆகி விடுவார் என திட்டம்.

கார்பொரேஷன் அளவிலும் மாநில அளவிலும் தனக்கு இன்னும் சற்று பவர் கூடும் என நாடி நரம்பெல்லாம் நம்பிக்கை கொப்பளிக்க இருப்பவர் ரத்தினம்.

அரசாங்க கேபினட்டை விட கிச்சன் கேபினட்டின் செல்வாக்கு அதிகம் என கண்கூடாக பார்த்தவர் ரத்தினம். சில இடங்களில் ரெண்டு மூணு கிச்சன் கூட இருக்கும்.

அதற்கு வாழும் உதாரணம் அவர் அண்ணன். மாநில கிச்சன் கேபினட்டின் செல்லபிள்ளை.

ஸ்டேட்டு கிச்சனோ லோக்கல் கிச்சனோ, க்ளவுடு கிச்சனோ, எந்த கிச்சன் செல்வாக்கு கிடைத்தாலும் மிக்சர் சாப்பிட்டே அடுத்த நிலைக்கு போலாம் என்பது எழுதப்படாத விதி.

அண்ணியை வெற்றிக்கொடி நாட்ட வைத்துவிட்டால் பொலீரோ காரின் பின் சீட் தனக்கு மட்டும் தான் என தீர்க்கமாக நம்பினார் ரத்தினம்.

ஒரு பக்கம் எம்எல்ஏக்கு அருகாமை, இன்னொரு புறம் பொலீரோவில் ட்ரிப் அடித்து எப்படியாவது மேயருக்கு அறிமுகமாவது.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அரசாங்கம் போட்டதோ இல்லையோ ரத்தினம் தன் வளர்ச்சிக்கான திட்டத்தை தெளிவாக போட்டார்.

பிற்காலத்தில் இருவரில் காற்று யார் பக்கம் வீசுகிறதோ அங்கே சாமரம் வீசுவது என முடிவெடுத்தார்.

ஒரு திரைப்படத்தில் சொப்னா அண்ணிக்கு கேன்சர் என போலியாக அவருக்காக உருகி உருகி பிராத்திப்பார் அண்ணனின் நண்பர். அது போல போலியாக அண்ணிக்காகவும் அண்ணனுக்காகவும் உருகுவதாகவும் உயிரையே கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஒரு கூட்டம் இப்போது சமூகத்தில் ஊடுருவி இருக்கிறது.

அந்த கூட்டம் உண்மையானது இல்லை என்பதும் எல்லா அண்ணன் அண்ணிகளுக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும். ஆனால் இரு தரப்பும் மக்கள் மன்றத்தில் அதை ஒரு கலாச்சாரமாக கடை பிடித்து வருகிறார்கள்.

அது உட்கட்சி ஜன நாயகத்துக்கும், தேர்தல் ஜன நாயகத்துக்கும் வந்திருக்கும் கேன்சர் என மக்களுக்கு மட்டும் தெரியும்.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 11/11

Tamil story about a young family

அந்த வாரம் அமைதியாக கழிந்தது. ராஜு பெரும்பாலும் சுரத்தே இல்லாமல் இருந்தான்.

அவன் செய்த தவறு அவனுக்கே உறுத்தலாக இருந்தது. சுதாவை நேருக்கு நேராய் பார்ப்பதையே தவிர்த்தான்.

ஒரு நாள் அவன் ஆபிசிலிருந்து வந்ததும் மணி சார் போன் வந்தது. அவரின் இருபதாவது கல்யாண நாளுக்கான அழைப்பு.

வரதாவும் மணி சாரும் ராஜுவிடம் பேசி விட்டு, சுதாவிடமும் பேசி அழைப்பு விடுத்தார்கள்.

தாதிபத்ரியில் இருக்கும் புக்கா ராமலிங்கேசுவர ஸ்வாமி கோவிலில் வரும் வெள்ளியன்று காலை ஒன்பது மணிக்கு சிறப்பு பூஜை என வரதா விவரம் சொன்னார்.

அவள் சுருக்கமாக நடந்த விஷயங்களை வரதாவிடம் சொன்னாள்.

“சுதா, இது இயல்பானது. குறிப்பாக அப்பாக்களுக்கு இருக்கும் ஒரு குணம். அவர்களால் அவ்வளவு எளிதாக தங்கள் குழந்தையின் நிலையை ஜீரணம் செய்ய முடியாது. அவர்களுக்கும் பாசம் இருக்கும். ஆனால் அதை மீறி ஒரு கையாலாகாத உணர்வு அவர்களுக்கு மேலோங்கி இருக்கும். அது அவர்களை சில சமயம் ஒதுங்கி போகும் முடிவை எடுக்க வைக்கும். அதனால் நீ இதை கவனமாக கையாண்டது சரிதான்” என சொன்னார் வரதா.

“நா அவர்கிட்ட சில சமயங்கள்ல கடுமையா பேச வேண்டியிருந்தது வரதா. இப்போ அமைதியா அவர் கெளம்பி போறத வேடிக்கை பார்த்துட்டு, அப்புறம் தனியா பவாவை கவனிக்குறேன்னு சுய பச்சாதாபத்துல இருக்குறது சரியில்லேன்னு தோணுச்சு. நீங்க, ஆண்ட்ரியா எல்லாரும் கஷ்டமான நேரத்துல எனக்கு துணையா இருந்தீங்க. மணி சார் அவர்கிட்டயும் பேசி இருக்கார். ரொம்ப தேங்க்ஸ் வரதா. நாங்க நிச்சயமாக பூஜைக்கு வருகிறோம்” என சொல்லி போனை வைத்தாள் சுதா.

ராமலிங்கேசுவர ஸ்வாமி சுதாவுக்கு மிகவும் பிடித்தமான கோவில். சுயம்பு வடிவாக சிவ பெருமான் பெண்ணா நதி கரையில் அருள் பாலிக்கும் திருத்தலம். விஜயநகர பேரரசர் காலத்து பழமையான கோவில்.

வெள்ளிகிழமையன்று காலை கோவிலுக்கு போய் பூஜையில் கலந்துகொண்டு பிறகு மண்டபத்தில் உட்கார்ந்தார்கள். பவா தூண்களை பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். விஷ்ணு சன்னதியின் முன்னால் இருந்த தூண்களை ஒரு பக்தர் தட்டி விட மெதுவான ஓசை கேட்டது. பவாவுக்கும் அது கேட்டிருக்க வேண்டும். சிரித்தபடியே கண்ணில் மின்னல் தெறிக்க திரும்பி பார்த்தது. அவர் மெதுவாய் ஒவ்வொரு தூணாய் தட்ட அதன் பார்வையில் சந்தோஷம் தெரிந்தது.

ராஜுவுக்கு கண்களில் நீர் பெருக்கெடுக்க ஓடி போய் பவாவை அள்ளிக் கொண்டான். சுதாவுக்கு கண்ணீர் கட்டு படுத்தமுடியவில்லை.

வரதா வந்து அந்த தூண்களின் சிறப்பம்சங்களை  விளக்கினார். இயரிங் எயிட் உதவியுடன் இருந்தாலும் அந்த மெல்லிய நுட்பமான ஓசையை அவளால் கேட்க இயன்றது சுதாவுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.

ஒரு மணி நேரம் பொறுமையாக கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.

“சுதா, எனக்கு மனசு தெளிஞ்சுடுச்சி, சாரி, நா உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்” என மெதுவாய் சொன்னான் ராஜு.

“நீ தெளிவா இருந்தா எனக்கு அது போதும் ராஜு ” என ஆறுதலாய் சொன்னாள் சுதா.

“இந்த கோவில் தான் சுதா எனக்கு புத்திய குடுத்திருக்கு. இந்த கோபுரத்தை பாத்தியா? பாதிலேயே நிக்குது. சர்வ வல்லமை படைச்ச சாமியே பூர்த்தியாகாத ஒரு கோவில்ல இருக்கார். வர்ற ஜனங்க அதுல இருக்க சிற்ப வேலைகளை தான் ரசிக்குறாங்களே தவிர, அது முழுமையடையலேன்னு  யாரும் அதை குறையா சொல்லல.

சாமிக்கு இல்லாத சக்தியான்னு யோசிச்சு பார்த்தேன். அவர் நினைச்சார்னா இந்த கோவிலை பூர்த்தி செய்து இருக்கலாம். ஆனா அது ஏன் அவர் செய்யலேன்னு யோசிச்சேன். எனக்கு பதில் பிடிபடலை.

ஆனா நம்ம வாழ்கையை பத்தி எனக்கு தெளிவு கிடைச்சிருக்கு. நம்ம பவாகிட்ட இருக்க குறைய நா ரொம்ப பெரிய விஷயமா மனசுல போட்டு குழப்பிக்கிட்டு உங்களை விட்டு பிரியுற முடிவுக்கே வந்துட்டேன். ஆனா நீ இந்த குடும்பத்துல இருக்க அழகை பாத்ததால என்னை சகிச்சுகிட்டு வாழுற. ரொம்ப சாரி சுதா, என்னை நெனச்சா எனக்கே வெக்கமா இருக்கு” என்றான் ராஜு.

சுதாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. “சாரி ராஜு, நானும் உன் விஷயத்துல கடுமையா நடந்துக்கிட்டேன். இன்ஸ்டால போஸ்ட் பண்ணது கூட நீ சொல்லாம முடிவெடுத்ததால தான். மற்றபடி உன்ன விட்டு கொடுக்கணும்னு இல்ல. ஜெபாக்கு விஷயம் தெரிஞ்சுது ஆண்ட்ரியா மூலமாக. மணி சார் கிடையாது. ஆண்ட்ரியா உன்னோட சிச்சுவேஷன, நீ என்ன மைண்ட்செட்ல இருக்கேன்னு ஜெபாக்கு தெளிவா சொல்லி இருக்கா. அவர் அன்னிக்கு உன்கிட்ட பேசினது கூட நீ உணரணும்னு தானே தவிர, உன்னை காயப்படுத்த இல்லை” என்றாள் சுதா.

“நீ எனக்கு பெரிய உபகாரம் பண்ணி இருக்கே சுதா” என சொல்லி பவாவை இறுக அணைத்துக் கொண்டான்

மகிழ்ச்சியில் தாதிபத்ரியின் தங்க புத்ரியாக ஜொலித்தாள் சுதா!

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 10/11

A mother thinking about her child's future

சுதாவுக்கு அன்று அதிகாலையிலேயே தூக்கம் கலைந்தது. நேரம் ஐந்து பதினைந்து.

பல் துலக்கி, குளித்து காபி போட்டு குடித்து முடித்தாள். பவாவுக்கு பால் பாட்டில் ரெடி செய்து குடிக்க கொடுத்தாள். 

பவா பால் குடித்து விட்டு தூக்கத்தை தொடர ராஜூவை எழுப்பினாள்.

“ராஜு, காபி போட்டு வச்சிருக்கேன். பவா பால் குடிச்சுட்டா. நா கோவிலுக்கு போயிட்டு வரேன்” என சொல்லிவிட்டு கிளம்பினாள்.

பத்து நிமிடத்தில் ரெடியாகி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

கோவில் கூட்டமில்லாமல் காலியாக இருந்தது.

நின்று நிதானமாக சாமி கும்பிட்டு விட்டு வழியே வந்து கல் மண்டபத்தில் உட்கார்ந்தாள்.

இன்றைய பொழுது நல்ல படியாக இருக்க வேண்டும், கடவுளே எனக்கு தெளிவான புத்தியை கொடு என பிரார்த்தனை செய்தாள்.

அம்மாவிடம் பேச விடும் போல தோன்றியது. ஏழு மணி. இந்நேரம் எழுந்திருப்பார்கள், போன் போடலாம் என தோன்றியது.

போன் போட்டு தன் மனதில் உள்ளதை முழுவதுமாய் சொல்லி முடித்தாள்.

“சுதா, நீ எடுத்த முடிவு நல்லது தான். ஆனா, அதை உன் மனசு காயப்பட்டு இருக்கும் போதே செயல்

படுத்தணும்னு நினைக்காதே” என்றாள் அம்மா.

“அதான்மா என் பிரச்சினை. எனக்கு ராஜுவோட நெலமை நல்லா புரியுது. ஆனா அதே சமயம் அவன் செஞ்ச செயல் என்னை ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கு. நா எப்படி இத டீல் பண்றதுன்னு எனக்கு தெரியலைம்மா” என சொன்னாள்.

அம்மா சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

பிறகு “சுதா, இதுக்கு என்னால உனக்கு நேரடியான பதிலை சொல்ல முடியாது. ஆனா மகாகவி பாரதியாரோட ஒரு பாடல் உனக்கு தேவையான பதிலை குடுக்கும்னு நினைக்குறேன். மனமென்னும் பெண்ணே அப்படீன்னு ஒரு பாடல் இருக்கு. படிச்சி பாரு. அதுல நீ தேடிக்கிட்டிருக்குற கேள்விக்கு விடை இருக்கும்” என சொல்லி போனை வைத்தாள்.

சுதா அந்த பாடலை போனில் தேடி எடுத்து படித்தாள்.

A Bharathiyar poem about mind and soul.

முழு பாடலையும் திரும்ப திரும்ப படித்து உள் வாங்கிக் கொண்டாள்.

புத்தி வேறு, மனம் வேறு என்று சொல்வார்கள். புத்தியின் சொல்படி கேட்டு மனம் இயங்க வேண்டும்.

ஆனால், பல சமயம் புற சூழ்நிலையின் தூண்டல்களால் மனம் அலைபாயும். அத்தகைய சமயங்களில் புத்தியானது மனத்திற்கு ஒரு நல்ல ஆசானாக இருந்து அறிவுரை சொல்லவேண்டியது அவசியம்.

அடுத்த இரண்டு நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பாடலை படித்து, அதன் அர்த்தத்தை முழுதாக புரிந்து கொள்ள முயற்சி செய்தாள். மூன்றாம் நாள் மனம் தெளிவாய் ஆனது.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 9/11

A child playing in the living room

நான்காம் நாள் காலை. இன்று பவா தெளிவாக இருந்தது. கனகம்மாவும் வரதாவும் வந்தவுடன் அவர்களிடம் தாவி ஓடியது. சுதா மதியம் பில் செட்டில் செய்து விட்டு, எல்லா பொருட்களையும் பேக் செய்ய ஆரம்பித்தாள்.

வீட்டிலிருந்து வந்த முதல் நாள் இந்த ஆஸ்பிடல் அவளுக்கு அந்நியமாய் இருந்தது. இன்று வீடு அந்நியமாய் இருக்கிறது. அன்பு, ஆதரவு, புரிதல், நட்பு என எல்லாம் எங்கே கிடைகிறதோ அங்கே மனம் நிம்மதியாய் இருப்பதை புரிந்து கொண்டாள்.

கனகம்மா சாப்பாடு கொண்டு வந்தார். “நீங்க சாப்டீங்களா?” என கேட்டாள் சுதா.

அவர் ஆம் என சொல்ல, “இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. ரொம்ப தேங்க்ஸ், நீங்க இல்லேன்னா நா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பேன்” என சொல்லி கொஞ்சம் காசு கொடுத்தாள்.

“இருக்கட்டும்மா, என் புள்ளைக்கு செய்ததா தான் நா நெனக்கிறேன். சாரு கொஞ்சம் டென்ஷன்காரரா இருக்காரு. இந்த புள்ளைய நீங்க நல்லா பாத்துக்குவீங்க. ஆனா உங்களையும் நீங்க கொஞ்சம் பாத்துக்குங்க.

வீட்ல ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்க, ஷிப்ட் முடிச்சிட்டு வந்து செய்யுறேன்” என சொல்லி விடை பெற்று சென்றார்.

சாப்பிட்டு முடிக்கும் போது டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி என போன் வந்தது. எல்லா பேப்பர்களையும் சரிபார்த்து, வரதாவுக்கு சொல்லிவிட்டு, பவாவை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினாள்.

வீட்டுக்கு வந்ததும் பவா அவள் பொம்மைகளை தேடி ஓடினாள். எல்லாவற்றையும் எடுத்து தரையில் போட்டு விளையாட ஆரம்பித்தது.

இன்று இரவு உணவுக்கு அவளுக்கு பிடித்த இடியாப்பம் செய்யலாம், கூடவே குருமாவும் கொஞ்சம் செய்தால் எல்லாருக்கும் சரியாக இருக்கும் என வேலையை ஆரம்பித்தாள். வாஷிங் மெஷின் போட்டு, மறு பக்கம் இட்லி மாவு அரைத்து, எல்லா வேலைகளையும் முடிக்க ஏழு மணி ஆனது.

டோர் பெல் அடித்தது. சுதா போய் கதவை திறந்தவுடன் “நான் தான் சாயந்திரம் வர்றேன்னு சொன்னேனே? அதுக்குள்ள எதுக்கு டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு வந்த சுதா?” என கோவமாக கேட்டான் ராஜு.

சுதா பதில் சொல்வதற்குள் ராஜுவுக்கு ஜெபாவின் போன் வந்தது.

ஜெபா எதற்கு அழைத்திருப்பார் என சுதாவுக்கு தெரியும்.

ஆஸ்பிடலில் ராஜு பவாவை தூக்கி தோளில் சாய்த்து தூங்க வைத்த  போட்டோவை  எடுத்து தன் இன்ஸ்டா அக்கவுண்டில் “அன்பு அப்பா” என கேப்ஷனை போட்டு ஆண்ட்ரியாவை டேக் செய்தது தான் சுதா செய்த வேலை.

மிச்சத்தை ஆண்ட்ரியா பார்த்துக் கொண்டாள்.

ஜெபாவுக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் விஷயம் தெரிய போன் போட்டு நேரடியாக பேசி விட்டார்.

ராஜு குமாரு சோபாவில் தலையை கவுந்த மொமெண்ட்டின் காரணம் இது தான்.

அவனை ஜெபா குருமா வைக்க, அந்த அவமானத்தில் வெந்து கொண்டிருக்கிறான்.

மணி சார் சொல்லி இருக்கலாம் ஜெபாவிடம் என நினைத்துக் கொண்டான் ராஜு.

தான் அநாவசியமாக சொன்ன ஒரு பொய்யாலும், தன்னுடைய முட்டாள்தனத்தாலும் சிட்னி கனவு இடியாப்ப சிக்கலாக மாறியிருப்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

பவாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு தூங்க வைத்துவிட்டு சுதா ஹாலுக்கு வந்தாள்.

ஜன்னலை முழுதாக திறந்து வைத்து விட்டு  டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். வழக்கத்தை விட அன்று அவள் செய்த இடியாப்பம் குருமா அருமையாக இருந்தது.

மெதுவாக ரசித்து சாப்பிட்டவள் தட்டை கழுவி வைத்து விட்டு பார்மஸிக்கு போன் போட்டாள்.

“சைஸ் 312 பேட்டரி வேணும்?ஸ்டாக் இருக்குங்களா?” என கேட்டாள்.

“மேடம், நா புதுசா வேலைக்கு வந்திருக்கேன். சார் கடைல இல்ல, சாப்பிட போயிருக்கார். நீங்க என்ன ப்ராண்டுனு போட்டோ அனுப்புனீங்கனா, நா இருக்கானு பாக்குறேன்” என்றான் கடை பையன்.

“அது நார்மல் பேட்டரி கிடையாதுப்பா, கொழந்தைங்களோட இயரிங் எயிடுக்கு போடுற பேட்டரி. நா ரெகுலரா உங்க கடைல தான் வாங்குவேன். பேட்டரி போட்டோவும் அட்ரசும் அனுப்புறேன். ஸ்டாக் இருந்தா நாளைக்கு காலைல அனுப்புங்க” என சொல்லி போனை வைத்தாள்.

ராஜு இன்னும் சோபாவில் இருந்து அசையவில்லை. அவன் செய்த குற்றத்திற்கான தண்டனையை குறைவில்லாமல் அனுபத்து கொண்டிருக்கிறான்.

கடை பையனுக்கு பேட்டரி போட்டோ அனுப்ப, வெறும் 312 என டைப் செய்து கூகிளில் தேடினாள். முதல் பக்கத்திலேயே சுருக்கென ஒரு விஷயம் கிடைத்தது சுதாவுக்கு.

Indian Penal Code 312 – Causing miscarriage.

முதல் வேலையாக பேட்டரி போட்டோவை அனுப்பிவிட்டு, மீண்டும் IPC 312ஐ படித்து பார்த்தாள்.

சட்டவிரோத கருக்கலைப்பு தடுப்பு சட்டம் அது.

அவள் மனம் ஒரு நிமிடம்  நிதானிக்க சொன்னது.

மீண்டும் மீண்டும் படித்து பார்த்தாள்.

இந்த பூமிக்கு வராத ஒரு ஜீவனின் வாழும் உரிமையை நிலை நாட்டும் சட்டம் அது.

மருத்துவ ரீதியாக அந்த கருவுக்கோ அல்லது தாயின் உயிருக்கோ, ஏதோ ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றால் மட்டுமே சட்டம் கருகலைப்பை அனுமதிக்கும்.

சுதாவுக்கு இந்த விஷயத்தை உள் வாங்க சற்று நேரம் எடுத்தது.

அரை மணி நேரம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து யோசித்ததில் அவளுக்கு சில புரிதல்கள் ஏற்பட்டது.

பவா செவி திறன் குறைபாட்டோடு பிறந்தது அவள் குற்றமில்லை. பெற்றோர்களாக தங்கள் குற்றமும் இல்லை.

இயற்கையாகவே அந்த குழந்தைக்கு அது நிகழ்ந்திருக்கிறது.

அவளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி, சிறப்பான முறையில் ஒரு வாழ்க்கையை அமைத்து தரும் பெரும் பொறுப்பு தங்கள் இருவருக்குமே சரிசமமாக இருக்கிறது. ஆனால் ராஜுவுக்கு நிஜத்தை எதிர் கொள்ளும் தைரியமும், மன உறுதியும் இல்லாததே இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் என அவளுக்கு தோன்றியது.

பொறுமை, திடமான மனம், உணர்வு முதிர்ச்சி என எதுவுமே இல்லாமல் ராஜு இருப்பது தான் இங்கு பிரச்சினை.

பவா மீது அவனுக்கு பாசம் இருந்தாலும், ஒரு இயல்பான வாழ்க்கை தனக்கு அமையாமல் போனது அவனுக்கு மிகுந்த மன உளைச்சலை தந்திருக்கிறது.

சுதாவின் மன போராட்டத்திற்கு அவ்வப்போது ஆறுதல் செல்பவன், அவன் மனதை பக்குவபடுத்தாமல் விலகி ஓடும் முடிவை எடுத்திருக்கிறான்.

எல்லா பொறுப்பையும் சுதாவிடம் விட்டு விட்டு, வெளிநாட்டில் வேலைக்கு போய் சேர்ந்து விட்டால், தன் தினசரி வேதனையிலிருந்து மீளலாம் என அவன் மனம் ஆழமாக நம்புவது சுதாவுக்கு நியாயமாக படவில்லை.

இந்த பூமிக்கு வராத ஒரு ஜீவனுக்கு நல்ல சட்ட பாதுகாப்பு இருக்கிறது.

ஆனால் பவாவுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.

அதனால் இருவரும் ஒற்றுமையாக இருந்து, பவாவுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதே, ஒரு பெற்றோராக தங்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என கருதினாள்.

இந்த இடத்தில் சுதா சற்று தீர்க்கமாக சில முடிவுகளை எடுத்தாள்.

இங்கு குறைபாட்டோடு இருப்பது பவா இல்லை, ராஜு தான். இவ்வளுவு வயதான பிறகும், சூழ்நிலையை எதிர் கொள்ள இயலாமல் ஓடி ஒளியும் மனப்பான்மையோடு இருப்பது அவன் தவறு. அதை அனுமதிப்பது அதை விட தான் செய்யும் பெரும் தவறு என உணர்ந்தாள்.

ராஜுவுக்கு புரிய வைக்க ஆயிரம் வழி இருக்கிறது.

இருவரும் நல்ல மன நல ஆலோசகரை சந்திக்கலாம். மன வள வாழ்க்கை முறைகளை கையாண்டு அவ்வப்போது ஏற்படும் மன உளைச்சல்களிலிருந்து மீண்டு வரலாம்.

ஆனால் எந்த முயற்சியும் செய்யாமல், அவரவர் வழியில் அவரவர் போவது பவாவுக்கு தாங்கள் நிகழ்த்தும் துரோகம் என முடிவுக்கு வந்தாள்.

கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்வுகள் அவள் மனதை ரணமாக்கியிருக்கிறது.

தன் காயத்தையும் ஆற விட்டு, எதிராளியையும் அரவணைத்து போக வேண்டிய மனநிலை அவளுக்கு சவாலாக இருந்தது. 

எப்படி இந்த பிரச்சனையை கையாள வேண்டும் என்ற தெளிவு இல்லெயென்றாலும், எப்படி இதை கையாளக்கூடாது என்ற தெளிவோடு தூங்க போனாள்.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 8/11

A deep conversation between friends

மூன்றாம் நாள். பவாவுக்கு ஜுரம் விட்ட பிறகு உணவு வயற்றில் தங்க ஆரம்பித்தது.

பசி இல்லாததாலும் மருந்து குடிப்பதாலும் தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

மதியத்திற்கு மேல் டாக்டர் வந்து பார்த்து விட்டு, மறுநாள் வீட்டுக்கு போகலாம் என சொல்லிவிட்டு போனார்.

ராஜு சாயந்திரமே வந்து விட்டான். எந்த உரையாடலும் இல்லாமல், அந்த அறை இரவு வரை நிசப்தமாக இருந்தது.

“நாளைக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. நா வந்து பில் செட்டில் பண்ணிட்டு கூட்டிட்டு போறேன்” என்றான் ராஜு.

“நேத்து வரை ஆன செலவுக்கு நான் பணம் கட்டிட்டேன்” என நிறுத்தினாள் சுதா.

“ஏன் சுதா இப்படி பண்ற?” என கேட்க வாயெடுத்து நிறுத்திக் கொண்டான்.

இரவு ராஜு கிளம்பிய பிறகு டியூட்டி பிரேக்கில் வரதா வந்தார். பின்னாடியே கனகம்மா உள்ளே வந்து பிளாஸ்கில் கொண்டு வந்த மசாலா பாலை ரெண்டு கப்பில் ஊற்றி கொடுத்து விட்டு கிளம்பினார்.

வரதாவும் சுதாவும் பால்கனியில் போய் நின்று கொண்டார்கள்.

“ராஜு சிட்னி போறாருன்னு அவரு சொன்னாரு சுதா” என ஆரம்பித்தார் வரதா.

நீண்ட ஒரு பெருமூச்சு மட்டும் பதிலாக வந்தது அவளிடமிருந்து.

“வரதா, நேத்து வரை இருந்த வாழ்க்கை வேற, இன்னைக்கு இருக்குற வாழ்க்கை வேற. இது மட்டும் தான் எனக்கு இப்போதைக்கு புரியுது. இனிமே வர போற நாட்களை நா இன்னும் யோசிக்க ஆரம்பிக்கலை!” என சொன்னாள் சுதா.

“ராஜுவோட அப்பா அம்மா என்ன சொல்றாங்க?” என்றார் வரதா.

“இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்காதே, கொஞ்ச நாள் போகட்டும், அப்படீன்னு சொல்றாங்க” என்றாள் சுதா.

“இக்கட்டுல இருக்குற எல்லா பெண்களும் இந்த வாக்கியத்தை அவங்க மூழ்க ஆரம்பிக்கும் போதே கேட்டிருப்பாங்க சுதா. அவங்க சொல்ற மாதிரி அது கொஞ்ச நாள் கிடையாது! ஆயுசு முழுக்க!

பாதிக்கப்பட்ட பெண்கள் என்றைக்குமே எந்த முடிவும் சுயமா எடுக்காம இருக்குறதுக்கு காரணம், குடும்பத்துல இருக்குறவங்க சொல்ற இந்த ஒரு லைன் தான்” என்றார் வரதா.

அடுத்த ஒரு மணி நேரம் நடந்த அவர்களின் உரையாடலை, கண் கொட்டாமல் கவனித்து கொண்டிருந்தது பாக்டரி புகைபோக்கி.

தனக்கு ஈடாக அங்கிருந்தும் கக்கப்படும் உணர்வுகளில், அவர்கள் சந்தித்த துரோகங்களும் அவமானங்களும் அதிகம் இருந்ததாக அது கருதியது.

உள்ளேயே வைத்திருந்து மூச்சு முட்டும் சூழ்நிலைக்கு ஆளாகாமல், மனது விட்டு அவர்கள் பேசுவது அதற்கு நல்ல விஷயமாக பட்டது.

சுதா இந்த ஊருக்கு வந்ததில் இருந்து இந்த பெண்ணா நதியை போல் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாக புகைபோக்கிக்கு தோன்றியது.

நதியின் பாதையில் அணை கட்டப்பட்டதால், அது வருஷத்துல பெரும்பாலான நாள் வறண்டு, தரை வெடித்து, பாளமான பூமியாகவே இருக்கும். மழை காலத்துல மட்டும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அதே மாதிரி தான் இவள் வாழ்க்கையும். ராஜுவோட அனுசரணை இல்லாமல்தான் பெரும்பாலான நாட்களை கழித்திருக்கிறாள். எப்போதாவது அவளுக்கு கிடைக்கும் கொஞ்சம் அன்புதான், இவளை இவ்வளவு நாள் இந்த உறவில் நீடிக்க வைத்திருக்கிறது” என நினைத்துக் கொண்டது பாக்டரி புகைபோக்கி.

அதே கருத்தை அது வரதாவுக்கும் கடத்தியது.

“சுதா, இந்த பெண்ணா நதி நந்தி மலைத்தொடரில் உருவாகிறது. உத்திர பினாகினினும் இதை கூப்பிடுவாங்க. அதே நந்தி மலைல தான் தக்ஷிண பினாகினி நதியும் தொடங்குது. ஒன்று வடகிழக்கு திசையிலும், மற்றொன்று தென்கிழக்கு திசையிலும் பயணிக்கும். ஆனால் அவை இரண்டும் ஒரே இடத்தில் பிறந்து, பிறகு வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும், கடைசியில் வங்காள விரிகுடாவில் தான் கலக்கும். ராஜுவின் இந்த முடிவை நான் அப்படித்தான் பார்க்கிறேன். உங்கள் வாழ்க்கை தற்போது வெவ்வேறு திசையில் பயணிக்கும் சூழ்நிலை வந்தாலும், கடைசியில் குடும்பம் என்ற புள்ளியில் தான் வந்து ஒன்று சேரும்” என நம்பிக்கை கொடுத்தார் வரதா.

“நீண்ட நாட்களாக வாழ்க்கை எனக்கு கரடு முரடாகத்தான் இருக்கிறது வரதா. வாழ்நாள் நெடுக தனியாக எல்லா சூழலிலும் சிக்கி, நானே என்னை மீட்டு கொண்ட பிறகு, கடைசி காலத்தில் ஒன்று சேர்ந்து என்ன பயன்?” என வேதனையாக கேட்டாள் சுதா.

“சுதா, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த உன்னை, இறைவன் பெண்ணா நதி ஓடும் தாதிபத்ரிக்கு ஏதோ ஒரு காரணமாக தான் அழைத்திருக்கிறார். கடவுளும் காலமும் தான் உனக்கு துணை” என ஆறுதல் சொல்லி கிளம்பினார் வரதா.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 7/11

A woman on the river bank

காரிடார் ஓரத்தில் நின்று கனகம்மா வரதாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

சுதா படிக்கட்டில் இறங்கி வெளியே வந்து, ஆஸ்பிடலை ஒட்டிய நடை பாதையில் நடக்க ஆரம்பித்தாள். அது பெண்ணா நதியின் கரையோரம் இரண்டு மைல் தூரம் போகும்.

ஏன் ஜெபா வருவதை ராஜு சொல்லவில்லை? என்ற கேள்வி அவள் மண்டையை குடைந்தது.

ஆண்ட்ரியாவுக்கு போன் போட்டு விஷயத்தை சுருக்கமாக சொன்னாள்.

“நீ நெனைக்குறத தான் நானும் நினைக்குறேன்! விசாரிச்சுட்டு வரேன்” என சொல்லி போனை வைத்தாள்.

ஆண்ட்ரியா சுதாவின் காலேஜ்மேட். ரெண்டு பேரும் ஹாஸ்டலில் ஒரே ரூமில் தங்கி படித்தவர்கள். அவளுக்கு ப்ரெண்ட்ஸ் நெட்ஒர்க் அதிகம். அதே பீல்டில் நல்ல வேலையில் இருப்பதால், எல்லா இடங்களிலும் ஆள் வைத்திருப்பாள். கால் மணி நேரம் கழித்து மீண்டும் போன் செய்தாள்.

“ராஜு பங்கமா பொய் சொல்லியிருக்கான் சுதா. நா ஜெபா வீட்டு லேண்ட் லைனுக்கு கூப்பிட்டேன். ரெபேக்கா கிட்ட ஜெபா மொபைல் ஏன் ரீச் ஆகலேன்னு கேட்டேன். அதுக்கு அவ ஜெபா இந்தியா போயிருக்கார், தாதிபத்ரி பேக்டரிக்குனு சொன்னா” என்றாள்.

“அப்புறம்” என்றாள் சுதா.

“நா கேஷுவலா சொல்லிட்டேன். அங்க தான் எங்க ராஜு பாய் பேமிலியோட இருக்கான்னு. அவகிட்ட ஜெபா பேசி இருப்பார் போல. நா சொன்னதும், ஆமாம் ஆண்ட்ரியா, அவர் ராஜூவை ஆபீஸ்ல மீட் பண்ணிட்டார். அவர் பேமிலி ஊருக்கு போய் இருக்காங்க, அதனால பாக்க முடியலேன்னு சொன்னார்” என்றாள்.

எல்லாவற்றையும் உள்வாங்க சுதாவுக்கு ரெண்டு நிமிஷம் ஆனது.

“ஹே கேர்ள், இப்போதான் நீ ஸ்ட்ராங்கா இருக்கணும், இவ்ளோ கேனத்தனமா நடந்துக்குறான்” என பொரிந்து தள்ளினாள்.

“சரி ஆண்ட்ரியா, நா இப்போதைக்கு இதை பெருசா யோசிக்க வேணாம்னு நினைக்குறேன். பவா சரியாகி வீட்டுக்கு போற வரை என்னால அஞ்சு நிமிஷம் கூட ஒரு விஷயத்தை முழுசா யோசிக்க முடியல. வீட்டுக்கு போய் செட்டில் ஆன பிறகு திரும்ப பேசுறேன்” என போனை வைத்தாள்.

உன் வீடு என நினைப்பதும், சொல்வதும் இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என புத்தி சொல்லியது.

சட்டென்று வந்த புத்தியின் குரல் சுதாவை புரட்டி போட்டது.

நடை பாதை ஒரம் ஒரு மரக்கட்டை இருக்க அதன் மேல் போய் உட்கார்ந்தாள்.

ராஜு எப்போதோ என்னை இந்த மரக்கட்டை போல நடத்த ஆரம்பித்திருக்கிறான். இவ்வளவு தூரம் முடிவெடுக்கும் போதும் சாதாரணமாக நடந்து கொள்ள எப்படி அவனால் முடிந்தது?

குடும்பம் ஒரு ஆலமரம் என பெரியவர்கள் சொன்னதும், ராஜு சர்வ சாதாரணமாக அதை வெட்டி வீழ்த்தி இயல்பாக இருப்பதும் சுதாவுக்கு ஆயாசமாக இருந்தது.

அன்று பெண்ணா நதிக்கரையில் அவள் கழித்த அந்த ஒரு மணி நேரம் அவளுக்கு வாழ்நாள் பாடங்களை புரிய வைத்தது.

பக்கத்தில் இருந்த சிறு சிறு கற்களைஅவள் நதி நீரில் போட்டு முடிக்க, அந்த இடம் காலியானது. கைக்கெட்டிய தூரம் வரை எந்த கல்லும் இல்லை.

ஆறு ஏன் எப்போதும் கற்களை மட்டுமே வாங்கி கொள்ள வேண்டும்? ஒரு மாறுதலுக்காக, பர்ஸிலிருந்த ராஜுவின் ATM கார்டு, ஹெல்த் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு அட்டைகளை போட்டு விட்டு ஆஸ்பிடலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சுதா ரூமுக்கு வந்ததும் “எங்க போயிட்டு வர?” என இழுத்தான் ராஜு.

“ஊர்ல இருந்து இப்பதான் வரேன்!  என்று சுதா சொல்ல, தலை குனிந்தவாரே வீட்டுக்கு கிளம்பினான் ராஜு.