சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 6/11

A woman worried about her life

சாயந்திரம் கனகம்மா டீயும் பிஸ்கட்டும் கொண்டு வந்தார்.

“பாப்பாவ நா வச்சிக்குறேம்மா, பக்கத்துல பிள்ளையார் கோவில் இருக்கு. இன்னைக்கு விசேஷ பூஜை

பண்றாங்க. டீ குடிச்சிட்டு, நீ போய் சாமி கும்பிட்டுட்டு வாம்மா” என சொன்னார்.

சுதா உடை மாற்றிகொண்டு வரதாவிடம் போய் சொல்லி விட்டு கிளம்பினாள். கோவிலுக்கு போய் சாமி பார்த்து விட்டு மூன்று சுற்று சுற்றி விட்டு பிரகாரத்தில் போய் உட்கார்ந்தாள்.

பையிலிருந்து போனை எடுத்து பார்த்தால் ராஜுவின் மிஸ்ட் கால் இருந்தது. திரும்ப அழைத்தால் பதில் இல்லை.

சரி பிறகு போன் செய்வான் என கிளம்பி ரூமிற்க்கு சென்றாள்.

கனகம்மா பவாவை தூங்க வைத்திருந்தார். சுதா வந்ததும் அவர் கிளம்பி செல்ல, பவாவின் துணிகளை துவைக்க அவள் பாத்ரூமிற்குள் சென்றாள்.

பத்து நிமிடத்தில் துவைத்து முடித்து ரூம் பால்கனியில் காய போட போனாள்.

பின்னாலிருந்து “இங்க என்ன பண்ற குழந்தையை விட்டுட்டு, என்ன ஆகியிருக்கு பாரு?” என ராஜுவின் கத்தல் கேட்டது.

அதிர்ந்து அலறி சுதா உள்ளே போய் நின்றாள்.

ஆனால் அடுத்த நொடி அவள் கண்டகாட்சியில் நிலை தடுமாறி போனாள். குழந்தையின் காது பக்கம் லைன் போட்ட இடம் ஆப்பிள் சைசில் வீங்கி இருந்தது. முகமே பார்க்க படு பயங்கரமாக இருந்தது.

சுதாவிடம் பவாவை கொடுத்துவிட்டு வரதாவை கூப்பிட ஓடினான் ராஜு.

இவன் எப்போது வந்தான்? பவாவுக்கு திடீரென என்ன ஆயிற்று? என எதுவும் புரியாமல் திகைத்து நின்றாள் சுதா.

சற்று நேரத்தில் ஐஸ் பாக்கோடு வரதா வந்து தெளிவு படுத்தினார்.

லைனை நிறுத்தி விட்டு, ஒத்தடம் வைத்தார். “ஐவி போட்ட நீடில் விலகி இருக்கு, ரெண்டு மணி நேரத்தில் நார்மலாகி விடும்” என  சமாதானம் சொன்னார்.

“இவளை ஒழுங்கா பாக்குறத தவிர உனக்கு என்ன வேலை?” என எகிற ஆரம்பித்தான்.

“சார், இது சகஜம் தான் சார். கொஞ்ச நேரத்துல சரியாகிடும்” என்றார் வரதா.

சுதா ஏதோ சொல்ல வர, அதை கொஞ்சமும் கேட்காமல் அடுத்த ஐந்து நிமிடம் திட்டி தீர்த்தான்.

சத்தம் கேட்டு கனகம்மா ஓடி வந்தார். நிலைமையை புரிந்து கொண்டவர் “ஏம்பா, அந்த பொண்ணு இங்க வந்ததிலிருந்து ஒரு வேளை சோறு ஒழுங்கா சாப்பிடலை. கை மாத்த கூட ஆளில்லாம அல்லாடிகிட்டு இருக்கு, நீ என்ன சத்தம் போடுற? அதான் நர்ஸம்மா சொல்றாங்கள்ல இது சகஜம்னு. அப்படி அக்கறை இருக்க ஆள் இங்கயே இருந்து பாக்க வேண்டியதுதானே?” என பொரிந்து தள்ளினார்.

ராஜு அப்படியே அடங்கி போனான். சுதாவுக்கு அவமானமும் துக்கமும் போட்டி போட்டுக் கொண்டு ஏறியது.

டேபிள் மேல் இருந்த ஸ்வீட் பாக்ஸ் கண்ணில் பட்டது.

இது ஏன் இப்போது? என கேள்வி எழுந்தது. என்ன காரணமாய் இருந்தாலும் எதையும் கேட்க சுதாவுக்கு விருப்பமில்லை.

வீக்கம் சற்று குறைய வரதாவும் கனகம்மாவும் அங்கேயிருந்து கிளம்பினார்கள்.

“சாரி” என்றான் ராஜூ.

பவாவின் மீதிருந்து அவள் கண்ணை எடுக்கவில்லை.

ஸ்வீட் பாக்ஸை நீட்டியபடியே “எனக்கு சிட்னில வேலை கிடைச்சிருக்கு” என்றான்.

“எனக்கு சிட்னில வேலை கிடைச்சிருக்கு, நாம அங்க போய் செட்டிலாக போறோம்னு சொல்ல உன்ன எது தடுக்குது?” என சுருக்கென கேட்டாள் சுதா.

பவாவின் மண்டை வீக்கத்திற்கு ஆடித் தீர்த்தவனின் மண்டை கணம் அந்த நேரம் அம்பலப்பட்டது.

விஷயத்தை சொல்லிய பிறகு, அதை லாவகமாக மடை மாற்ற, ராஜு சேர்த்து வைத்திருந்த மொத்த அலங்கார வார்த்தைகளுக்கும், சுதாவின் முதல் கேள்வியே மலர் வளையம் வைத்து விட்டது.

“நா மாசத்துல இருபது நாள் ட்ராவல் பண்ணுவேன் சுதா, நீங்க ரெண்டு பெரும் தெரியாத ஊர்ல எப்படி தனியா இருப்பீங்க? நீங்க தாம்பரத்துல இருங்க, நா வந்து வந்து பாத்துட்டு போறேன்” என பல நாட்கள் மனப்பாடம் செய்ததை ஒப்பித்தான்.

“சிட்னி என்ன தாம்பரத்துக்கு பக்கத்துல இருக்க கூடுவாஞ்சேரியா? நீ வந்து வந்து பாத்துட்டு போக? இத தான் ப்ளாண்ட்ல உட்காந்து ப்ளான்ட் பண்ணிட்டிருந்தியா?” என கேட்டாள் சுதா.

ராஜு போய் ஜன்னலருகே நின்று கொண்டான். அவனை ஜன்னலருகே பார்த்த நதி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நகர்ந்து சென்றது.

“ஏன் ஜெபா வந்ததை சொல்லலை?” என கேட்டாள் சுதா.

“அது வந்து, அது உனக்கு எப்படி தெரியும்?” என அதிர்ந்து போய் கேட்டான்.

“அவரு இந்த டீம்ல இருக்குறதையே ஏன் என்கிட்ட சொல்லலை?” என அழுத்தமாக கேட்டாள்.

“சுதா, அத விடு, நா ரொம்ப நாளா ட்ரை பண்ண ஜாப் எனக்கு கிடைச்சிருக்கு” என ஆரம்பித்தான்.

“இது ஜெபா ரெபரென்ஸ்ல உனக்கு கிடைச்சிருக்கு, கரெக்டா?. நீ இந்தியாலேர்ந்து கிளம்ப முடிவு பண்ணிட்டேன்னு எனக்கு தெரியும். ஆனா ஜெபா இங்க வர போறதை சொல்லாததும், கைல ஆபர் லெட்டர் வர வரை நீ அத பத்தி பேசாததும், நீ வாழுற டிராமா லைஃப்ல ஒரு ஓட்டைனு உனக்கு தெரியலையா ராஜு? என கேட்டாள் சுதா.

ராஜுவிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்து.

சுதா பவாவின் விரல்களை பிடிக்க, எங்கிருந்து வந்தது என தெரியாமால் அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

இரவு சாப்பாட்டை கொண்டு வந்த கனகம்மா, சூழ்நிலை சரியில்லை என புரிந்து கொண்டு உடனே கிளம்பி விட்டார்.

சற்று நிறத்தில் பவா தூங்கி விட, அவளை படுக்கையில் கிடத்தி விட்டு, செருப்பை மாட்டி கொண்டு ரூமை விட்டு கிளம்பினாள் சுதா.

“எங்க போற சுதா?” என்றான் ராஜு மெதுவாக.

“நா கேட்ட கேள்விக்கெல்லாம் பதிலை யோசிச்சு வை. வந்து சொல்றேன் எங்க போனேன்னு!” என்றபடி கிளம்பினாள் சுதா.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 5/11

A candid moment

ஏழு மணிக்கு கனகம்மா லட்டு பாக்ஸோடு வந்தார். பேத்தி பிறந்ததாக சொல்லி சந்தோஷப்பட்டார்.

போன் வர பேசிவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டே பவாவை வாங்கி மடியில் வைத்துக் கொண்டார்.

“பேத்தி என் ஜாடையா இருக்குனு சொல்றா!” என சொல்லி புன்னகைத்தார்.

அப்போதுதான் அவர் பட்டன் போனை சுதா கவனித்தாள்.

“நா போன் போடவா? குழந்தையை பாக்குறீங்களா?” என ஆர்வமாய் கேட்டாள் சுதா.

இல்லம்மா, இருக்கட்டும். வரதம்மா சிஸ்டர் பத்து மணிக்கு வந்துடுவாங்க. அவங்களுக்கும் என் பொண்ணு மேல ரொம்ப பிரியம். அவங்க போட்டு தருவாங்க” என சொல்லி கொண்டிருக்கும்போதே “நம்பர் குடுங்க, அது வரை ஏன் காத்திருக்கணும்?” என டயல் செய்தாள் சுதா.

மாப்பிள்ளை குழந்தையை காட்ட ஆசையாய் கொஞ்சியவர், சுதாவிடம் வந்து காட்டினார்.

நிஜம் தான். கனகம்மா ஜாடை தெரிந்தது. “அம்மா” என பக்கத்திலிருந்து குரல் வர, “மாப்பிள்ளை, அவளை காட்டுங்க” என கேட்டார் கனகம்மா.

கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தபடியே காதின் பின்னாலிருந்த மெஷினை அட்ஜஸ்ட் செய்து கனகம்மாவை பார்த்து அவர் மகள் சிரிக்க, சுதாவுக்கு காட்டிவிட்டு பத்து நிமிடம் பேசிவிட்டு போனை வைத்தார் கனகம்மா.

“ரொம்ப தேங்க்ஸ் மா” என்றார்.

அன்றைய தினம் கனகம்மாவை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. ஆஸ்பிடல் நண்பர்கள் அவரை சூழ்ந்து கொள்ள அவரை கையிலேயே பிடிக்க முடியவில்லை.

அன்றைய தினம் பவா பெரும்பாலான நேரம் தூங்கிக் கொண்டிருந்தது.

சாயந்திரம் வரதா வந்தார். “இன்னைக்கு நைட் ஷிப்ட் சுதா. பத்து மணிக்கு வரேன்” என்றார்.

சுதா போனை எடுத்து பார்க்க ஒரு நொடி ஆடிப் போனாள்.

Linkedinல் சிமெண்டு கம்பெனியின் கான்பரன்ஸ் போட்டோ வந்திருந்தது. அந்த குரூப் போட்டோவில் இருந்தது ஜெபராஜ். ராஜுவின் காலேஜ் சீனியர்.

பல மாதங்களாக இந்த கான்பரன்ஸ் பற்றி அவளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். இவர் வருவதை பற்றி ராஜு ஒரு வார்த்தை சொல்லவில்லை. பிறகு தான் உறைத்தது இவரோடு அவன் பல நாட்களாக தொடர்பில் இருந்ததையே சொல்லவில்லை என்று.

ஜெபராஜ் சுதாவுக்கும் நன்கு தெரிந்தவர். இந்த வாரம் தான் பவாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவரை  சந்திக்க முடியாது. ஆனால் அவரை பற்றிய பேச்சையே ராஜு இவ்வளவு நாள் எடுக்காதது அவளுக்கு உறுத்தலாகஇருந்தது. தான் நினைக்கும் காரணம் உண்மையாக இருக்க கூடாது என வேண்டிக் கொண்டாள்.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 4/11

A mother at hospital with child

பவாவை இருக்க பற்றிக் கொண்டாள் சுதா. எல்லாரும் கிளம்ப, பெட்டில் படுக்க வைத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்தாள். பவா ஏறி மடியில் படுத்துக் கொண்டது.     

ஒரு மணி நேரம் கழித்து கனகம்மா வந்தார். சாப்பாடு ட்ரே அப்படியே இருந்தது.

“ஏம்மா இன்னும் சாப்பிடலியா, நீ கொழந்தயை என்கிட்ட குடுத்திட்டு சாப்பிடு” என்றார்.

“இல்லீங்க, சாப்பாடு வேணாம். எடுத்திட்டு போயிடுங்க” என்றாள் சுதா.

“ஆஸ்பத்திரின்னு வந்துட்டா மனசு சரி இருக்காதும்மா. அதுக்காக சாப்பிடாம இருக்கலாமா? சாரு வர ராத்திரியாகும்னு சிஸ்டர் சொன்னாங்க. பொழுதுக்கும் குழந்தய தூக்கி வச்சிருக்கீங்க, கொஞ்சமாவது சாப்பிட்டு தூங்குமா. நான் உக்காந்திருக்கேன்” என்றார்.

சுதா எழுந்து போய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள்.

“என் பெரிய பொண்ணுகூட நம்ம பாப்பா மாதிரிதான். நானும் இதே நெலமைல இருந்திருக்கேன். என் வீட்டுக்காரர் குவாரில கல் ஒடைக்க போயிட்டா, அங்கேயே ரெண்டு வாரம் இருப்பாரு. மாசத்துக்கு ஒரு நாள், இல்லேன்னா ரெண்டு நாள் வந்து போவாரு. தனியாத்தான் மூணு பசங்கள வளத்தேன். இப்ப என் பெரிய பொண்ணுக்கு கல்யாணமாகி அமலாபுரத்துல இருக்கா. இந்த வாரத்துல டெலிவரிக்கு டேட்டு குடுத்திருக்காங்க” என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“நீங்க டெலிவரிக்கு போகலியா?” என கேட்டாள் சுதா.

“இங்க அவங்க அப்பா முடியாம இருக்காரு. அதனால வர வேணாம்னு சொல்லிட்டா. டெலிவரி ஆனா ஒரு மாசம் கழிச்சு இங்கயே வந்துருவா” என்றார். 

டிரேவை எடுத்து மடியில் வைத்து சாப்பிட உட்கார, இன்டர்காம் அடித்தது.

“டாக்டர் வர சொல்றாரு, லேபு ரிசல்ட் வந்துருக்கு” என்றார்கள்.

சுதாவுக்கு கண்ணை இருட்டி கொண்டு வந்தது. என்னவாய் இருக்கும் என கிளம்பினாள்.

“ரெண்டு நிமிஷம் சாப்பிட்டு முடிச்சிட்டு போம்மா” என கனகம்மா சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் பாதி வழி போயிருந்தாள்.

“நீங்க மூணு நாலு நாள் இருக்க வேண்டி இருக்கும்” என்றார் டாக்டர். மனம் மரத்துப் போவதின் ஆரம்ப நிலையில் இருந்தாள் சுதா.

அடுத்த அரை நாளில் பவாவுக்கும் சுதாவுக்கும் ஆஸ்பிடல் பழகி விட்டது. ஊசி, மருந்து, அழுகை, வாந்தி, டயப்பர், ஜுரம் என லைன் கட்டி நடந்தது.

“டயபர் வெய்ட் நோட் பண்ணுங்க மேடம். நர்ஸ் ஸ்டேஷன் பக்கத்துல மெஷின் இருக்கு” என சொல்லி விட்டு போனார் வார்டு பாய்.

அன்றைய நாளில் நான்கு முறை டயபர் எடுத்துக் கொண்டு போய் வெய்ட் பார்த்து சொல்லி விட்டு வந்தாள்.

இரவு எட்டு மணி. இன்னும் ஜுரம் குறைந்த பாடில்லை. போனை எடுத்து பார்த்தாள். ஒரு மெசேஜ் கூட இல்லை.

பேசாமல் போய் ஜன்னலருகே நின்றாள். அங்கே இருக்கும் ஏதோ ஒரு பில்டிங்கில் இப்போது இரவு விருந்து நடந்து கொண்டிருக்கும்.  பேக்டரி சிம்னி தொடர்ந்து புகையை கக்கி கொண்டே இருந்தது.

இரவு பதினோரு மணிக்கு ராஜு வந்தான்.

“ஏதாவது சாப்பிட்டாளா? தண்ணி நல்லா குடுத்தியா நேத்து? இல்லேன்னா இந்தளவுக்கு ஆகாது” என சொன்னான்.

“தூக்கத்துல இருந்தினா பேசாம வீட்டுக்கு போய்டு” என காண்டாக சொன்னாள் சுதா.

“ஆமா, நாளைக்கும் காலைல சீக்கிரம் போகணும். நா ரெண்டு மணி வரைக்கும் இருக்கேன். நீ தூங்கு. அப்புறம் நா வீட்டுக்கு போறேன்” என்றபடி போய் சேரில் உட்கார்ந்தான்.

மருந்து வேலை செய்ய ஆரம்பித்து பவா தூங்க, சுதாவும் ரெஸ்ட் எடுக்கும் நேரத்தில் இங்கு இருந்து லேப்டாப்பில் சில வேலைகளை முடித்து கொண்டான்.

மூன்று மணி நேரம் கழித்து ராஜு சுதாவை எழுப்பி வீட்டுக்கு போவதாக சொல்லி கிளம்பினான்.

“இன்னைக்கு நைட் லேட்டாகும். பாதி நைட்ல வந்து உன்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைக்குறேன்” என மெதுவாய் இழுத்தான்.

சுதாவுக்கு கோபம் தலைக்கேறி பதிலேதும் சொல்ல விரும்பவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவன் இங்கிருந்து கிளம்பினால் நல்லது என மட்டும் தோன்றியது.

ஆபீஸ் முடித்து வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் வேலை செய்து விட்டு தூங்குவதற்கு பதில், இங்கே வந்து வேலை செய்து விட்டு இப்போது வீட்டில் போய் தூங்க போகிறான்.

விடியும் வரை இருந்தால் காலையில் பவா இவனோடு விளையாடலாம். அந்த நேரத்தில் சுதா குளித்து சாப்பிட்டு ரெடியானால் பிறகு ஏழு மணி போல ராஜுவும் வீட்டுக்கு போய் ரெடியாகி ஆபீசுக்கு போகலாம்.

இன்னொரு ஆள் படுக்க படுக்கையும் இருக்கிறது. ஒர்க்ஷாப் சாக்கை எந்த இடத்தில் உபயோகிப்பது  என விவஸ்தையில்லாமல் இருக்கிறான்.

முழு இரண்டு நாட்கள் பவா இவனை பார்க்கப்போவதில்லை என்பது தான் சுதாவுக்கு வருத்தமாக இருந்தது.

இங்கு இருப்பவர்கள் துணையுடன் சுதா நாட்களை கழித்தாலும் குழந்தை ஏங்குவது ராஜுவுக்கு ஒரு விஷயமாகவே படாதது அவளுக்கு உறுத்தலாக இருந்தது.

அந்த சிம்னியை போலவே சக மனுஷியின் வருத்தமும் வேதனையும் புரியாமல், ராஜு போன்றவர்கள் கசப்பையே உமிழ்கிறார்கள்.

தங்கள் கடமையை தட்டி கழித்து, அந்த பாரத்தை மற்றவர்கள் மீது ஏற்றி அடுத்தவர்களுக்கு எதிர் மறை உணர்வுகளை தூண்டுகிறார்கள்.

இறுக்கமான இந்த கண்ணாமூச்சி வாழ்க்கை பெண்களுக்கு மூச்சை முட்டுவது போல இருப்பது யாருக்கும் புரியாது. 

துளியும் இணக்கமில்லாதவர்கள் ஒன்றாய் இருக்கும் போது, அந்த பெண்ணின் வானத்தில் மட்டும் தான் நிரந்தர கருமை இருக்கிறது.

ராஜு கிளம்பி சென்றதை ஒரு பொருட்டாக நினைத்து அந்த நாளை சோர்வாக ஆரம்பிக்க அவளுக்கு விருப்பமில்லை. மெலிதாக ஒரு பாடலை ஒலிக்கவிட்டு பவாவின் பக்கத்தில் போய் படுத்துக் கொண்டாள்.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 3/11

Mother caring child in the hospital

ஆஸ்பிடல் போய் சேர்ந்து, டாக்டரிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்து என்ன சொல்லுவார் என உட்கார்ந்திருந்தாள்.

மருந்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டால் பரவாயில்லை என இருந்தது. அட்மிஷன் போட்டால் சமாளிப்பது கஷ்டம். பவாவை தோளில் போட்டு தட்டியபடியே கடவுளை வேண்டி கொண்டாள்.

சற்று நேரத்தில் இன்னொரு டாக்டரும் வர, அட்மிஷன் போடுவது என முடிவு செய்தார்கள்.

அடுத்த கால் மணிநேரத்தில் இரண்டாவது மாடியில் ரூம் ஒதுக்கப்பட்டது.

ரூமில் பைகளை பைகளை வைத்து விட்டு ட்ரைவர் கிளம்பி செல்ல, பவாவை படுக்கையில் கிடத்தி விட்டு, பாத்ரூம் போய் விட்டு வந்தாள்.

ஜன்னலருகே போய் நின்றால் வெளியே பெண்ணா நதி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.

“லைன் போடணும், கொஞ்சம் வெளியே இருங்க” என்றார் சிஸ்டர்.

“சிஸ்டர், இவ நைட் பூரா தூங்கலை. இப்போ தான் அசந்து தூங்குறா. கொஞ்ச நேரம் தூங்கட்டும். அப்புறம் போடலாமா?” என கேட்டாள் சுதா.

“இல்லீங்க, இப்போவே போடணும். நீங்க வெளிய இருங்க. பாய்ஸ், நீங்க ரெண்டு கால புடிச்சிக்குங்க” என வேலையை ஆரம்பித்தார்.

சுதா வெளியே வந்ததும் அவர்கள் கதவை சாத்தினார்கள்.

அடுத்த நிமிடம் “வீர்ர்” என பவாவின் அழுகை குரல் கேட்டது. ஐந்து நிமிடம் கடந்ததும் அழுகை நின்றபாடில்லை.

சிஸ்டர் வெளியே வர சுதா உள்ளே ஓடினாள்.

இன்னும் லைன் போடவில்லை. “மேடம், நரம்பு கிடைக்கலை, சிஸ்டர் போய் லேப் டெக்னீஷியன அனுப்புவாங்க” என்றார் வார்டு பாய்.

சுதாவுக்கு கோபம் தலைக்கேறியது. பவா கெட்டியாக கட்டிக் கொண்டது அவளை.

சற்று நேரத்தில் ஹெட் நர்ஸ் வரதா வந்தார். “பவாவ குடு சுதா” என வாங்கி கொண்டார்.

“நீ ரூம்லயே இரு சுதா. நா இவளை லேபுக்கு தூக்கிட்டு போறேன். அங்க கொஞ்சம் டாய்ஸ் இருக்கும். நா பாத்துக்குறேன்” என சொல்லிவிட்டு கிளம்பினார்.

எல்லாரும் கிளம்ப, வரதா தோளில் துவண்டு போய் சாய்ந்திருந்தது பவா.

இன்னும் லேபில் போய் எப்படி அழப்போகிறாளோ என கவலையோடு இருந்தாள் சுதா.

ஹவுஸ்கீப்பிங் கனகம்மா சாப்பாடு கொண்டு வந்து வைத்து விட்டு விசாரித்தார்.

“என் பையன் ஜெகன் பேக்டரில பம்பு மெக்கானிக்கா இருக்கான். சாரு பொண்ணுக்கு முடியல, போய் பாத்துக்கணு வரதம்மா சிஸ்டர் சொன்னாங்க. நா இந்த மாடிலதான் இருப்பேன். எப்போ வேணா கூப்புடுமா” என சொன்னார்.

அவர் பேசியதில் பாதி கூட காதில் விழவில்லை சுதாவுக்கு.

கனகம்மாவுக்கு தேங்க்ஸ் சொல்லி அனுப்பி சேரில் போய் சாய்ந்து உட்கார்ந்து கண் மூடினாள்.

இருபது நிமிடம் ஆனது. காரிடாரில் பவாவின் சத்தம் கேட்டது. சுதா வெளியே வர, வரதா கையிலிருந்த பவா சுதாவிடம் தாவியது.

மண்டையில் பெரிய கட்டோடு வந்திருந்தது. சுதாவுக்கு பேச்சே வரவில்லை.

“இது என்ன?” என கேட்டாள்.

“கைல லைன் கெடைக்கல, அதான் இங்க போட வேண்டியதா போச்சு” என்றார் வரதா.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 2/11

 mother cooking for unwell child

ராஜு மற்றும் சுதா இருவரின் பெற்றோர் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்கள் சென்னையிலிருந்து நானூறு கிலோமீட்டர் தொலைவில் தாதிபத்ரி என்கிற டவுனில் இருக்கிறார்கள். 

ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது தாதிபத்ரி. ராஜூவும் சுதாவும் காலேஜில் ஒரே பிரிவில் படிக்கும்போது சந்தித்தார்கள். இருவரும் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள். ராஜு வேலைக்கு சேர்ந்ததும் திருமணம் நடக்க, இருவரும் ஒரு வருடம் குஜராத்தில் பணி செய்தார்கள். பவா பிறந்த பிறகு சுதா வேலையை விட்டு விட்டாள். பிறகு தாதிபத்ரி சிமெண்டு பேக்டரியில் ராஜுவுக்கு வேலை கிடைக்க இங்கே வந்து செட்டிலாகி விட்டார்கள்.

நேரம் ஆக ஆக பவாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இன்றும் வீட்டில் வைத்து மருந்து கொடுப்பது வீண் என்று விடியற்காலை சுதாவுக்கு தோன்றியது.

எட்டு மணிக்குள் ஜுரம் குறையாவிட்டால் டவுன்ஷிப் ஹாஸ்பிடலுக்கு போவதுதான் சரி.

ராஜு இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுவான்.

அவன் இருக்கும் போதே கொஞ்சம் பவாவுக்கு மட்டும் சமைத்து வைத்துக்கொள்ளலாம் என்று யோசித்தாள்.

இரவு முழுக்க விட்டு விட்டு தூங்கியது மண்டை வலி பிளந்தது.

காபி குடித்தால் தேவலாம் போலிருந்தது. காபி கலக்கும்போதே மனம் தானாக ஹாஸ்பிடலுக்கு என்ன பேக் செய்யலாம் என்று லிஸ்ட் போட்டது.

ஜன்னல் வழியே பேக்டரி விளக்குகள் இன்னும் மின்னிக்கொண்டே இருந்தன. சவுத் கேட் புகை போக்கி வெண்புகையை மெலிதாய் வானத்தில் நிரப்பிக்கொண்டிருந்தது.

இன்றைய பவாவின் மெனு சுதாவுக்கு ஒன்றும் புரிபடவில்லை. பேசாமல் எல்லாவற்றையும் செய்து பேக் பண்ணிவிடலாம் என்று நினைத்தாள்.

விடு விடுவென்று நாலு அடுப்பில் சமைக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் சாதம், பருப்பு, வேக வைத்த கேரட், இட்லி, கஞ்சி, சூப் என எல்லா ஐட்டம்களையும் டப்பாக்களில் போட்டு ஹாஸ்பிடலுக்கு எடுத்து வைத்து விட்டு மீதியை பிரிட்ஜ்ல் ஸ்டோர்  செய்தாள்.

பவாவுக்கு உடம்பு துடைக்க வேண்டும். முதலில் கொஞ்சம் பால் கலக்கி வைத்துவிடலாம். துடைக்கும் போது எழுந்து சிணுங்குவாள். பால் குடித்தால் சற்று அமைதியவாள் என தோன்றியது.

ராஜு இன்னும் பாத்ரூமில் இருந்து வரவில்லை. பவாவுக்கு பால் கலக்கும் போதே, ராஜூவுக்கும் ஒரு டம்ளர் டீ வைத்தாள்.

சுதா கிச்சன் வேலைகளை முடித்தத பிறகு பவாவை துடைத்து டிரஸ் மாற்றி படுக்க வைத்துவிட்டு டயப்பரை எடுக்கும் போதுதான் கவனித்தாள் அது ரொம்ப இலேசாக இருந்ததை.

இரவு முழுக்க சரியாக யூரின் போகவில்லை பவா. இன்று எப்படியும் கொஞ்சம் லிக்விட் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

அப்போது சரியாக ராஜு வெளியே வர டயப்பரை கவனித்தான்.

“என்ன லைட்டா இருக்கு போல. நேத்து சரியா தண்ணி குடுத்தியா சுதா?” என்றான். சுதாவுக்கு பொழுது பளிச்சென்று விடிந்தது.

“வரதாக்கு கால் பண்ணி சொல்லிடு சுதா, அவங்க துணைக்கு இருப்பாங்க” என்றபடியே கிளம்பினான்.

வரதா மணி சாரின் மனைவி. டவுன்ஷிப் ஆஸ்பிடலில் நர்ஸாக இருக்கிறார்.

ஹெல்த் கார்டு, ஏடிம் கார்டு, டிரைவர் நம்பர் என எல்லா சடங்கையும் செவ்வனே செய்து ஆபீசுக்கு கிளம்பினான் ராஜு.

கதவை பூட்டி விட்டு சோபாவில் உட்கார்ந்த போது சுதாவுக்கு தோள் பட்டையோடு சேர்ந்து மனமும் சோர்ந்து போனது.  

நாள்பட்ட குறைவான வார்த்தைகளால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை உளுத்துப்போக வைப்பது, உணர்வை மட்டுமல்ல உறவையும் என்று பலருக்கும் தெரிவதில்லை!

வார்த்தைகள் வறண்ட வாழ்க்கை, ஆணின் பொருளீட்டல் முன்னுரிமைக்காக, பெண்ணின் சூழலுக்கேற்ற தகவமைத்துக்கொள்ளும் முன்னெடுப்புகளாக முலாம் பூசப்பட்டு ஊருக்குள் உலா வருகிறது.

ட்ரைவர் வந்து பைகளை எடுத்து செல்ல, பவாவை தூக்கிக் கொண்டு டவுன்ஷிப் ஆஸ்பிடலுக்கு கிளம்பினாள் சுதா.

அம்மாவின் போன் வந்தது.

“எப்படி மா இருக்கா பவா”? என கவலையாக கேட்டாள்.

“மா, ரொம்ப டல்லா இருக்கா. அட்மிட் பண்ண சொல்லுவாங்கனு நெனைக்கிறேன். ஒரு பதினோரு மணிக்கு நானே கால் பண்றேன்” என சொல்லி போனை வைத்தாள் சுதா.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 1/11

A mother comforting a sick child

“ராஜு சாயந்திரம் கொஞ்சம் நேரத்தோட வரியா? பவாணி குட்டிக்கு லூஸ் மோஷன் போகுது. ஆள் ரொம்ப சோர்ந்து போயிருக்கா. பீவர் மைல்டா தான் இருக்கு.  மெடிசின் ஒரு டோஸ் குடுத்துருக்கேன். ஆறாவது டோக்கன் நமக்கு. நீ ஒரு அஞ்சு மணிக்கு வந்தா போயிட்டு வந்திடலாம்.”

வாய்ஸ் மெசேஜ் போட்டு பக்கத்தில் தூங்கும் குழந்தையை பார்க்கும் போது ஆயாசமாக இருந்தது சுதாவுக்கு.

ராஜுவுக்கு தாதிபத்ரி சிமெண்ட் பேக்டரியில் வேலை. ஷிப்ட் நேரத்தில் போன் பேச முடியாது. டீ பிரேக்கில் போன் பார்த்து திரும்ப கூப்பிட்டால் மட்டுமே பேச முடியும். எப்படியும் நாலு மணிக்குள் பேசுவான் என்று எதிர்பார்த்தாள்.

பவா இன்னும் எப்படியும் ஒரு அரை மணி நேரம் தூங்குவாள். அதற்குள் எல்லா கை வேலைகளையும் முடிக்க வேண்டும். அவள் எழுந்ததும் என்ன கொடுக்கலாம் என்று யோசித்தாள். அரிசியை நைசாக அரைத்து கஞ்சி போட்டு வைக்கலாம். ஈஸியாக குடிக்க முடியம். டாக்டரை பார்த்து திரும்பும் வரை கொஞ்சம் பசி தாங்கும் என நினைத்து வேலையை ஆரம்பித்தாள்.

கஞ்சி போட்டு, துணி உலர்த்தி, வீடு சுத்தம் செய்து முடித்து உட்காரும்போதுதான் இன்னும் மத்தியான சாப்பாடு சாப்பிடவில்லை என உரைத்தது.

இரவு முழுக்க கண் விழித்ததால் கொஞ்சம் படுத்தால் போதும் என்று இருந்தது சுதாவுக்கு. குட்டி தூங்கும் போதே கொஞ்சம் தூங்கலாம் என்று கண் அயர்ந்தாள்.

சற்று நேரத்தில் போன் மணிஅடிக்க அலறி முழிப்பு வந்தது. எதேச்சையாக பக்கத்தில் பார்க்க, குழந்தை இன்னும் தூங்கி கொண்டிருந்தது.

போன் எடுத்து பேசும் முன் அழுகை வெடித்து வந்தது சுதாவுக்கு. அதன் மெல்லிய விரல்களை பற்றி கொண்டே கலங்கி அமர்திருந்தாள்.

ஏன்  சுதா போன் எடுக்கலை?  ஒரு வேளை குளிக்கிறாளா இல்லை குழந்தையோடு வேலையாக இருக்கிறாளா? ராஜுவுக்கு எல்லா எண்ணங்களும் சுற்றி அடித்தது.

அதற்குள் சுதாவே திரும்ப கூப்பிட்டாள்.

“ஏன் சுதா என்ன ஆச்சு? ஏன் போன் எடுக்கலை? எல்லாம் ஓகே வா?” என்றான்.

“ஓகே ராஜு. நீ போன் பண்ணும்போது நான் அலறி எழுந்துட்டேன். பவா குட்டி அப்டி தூங்குறா…என்னால முடியல ராஜு…ஸ்வீட்டுமாக்கு மட்டும் ஏன் இப்படி?” மேற்கொண்டு சொல்ல முடியாமல் சுதா தேம்ப ராஜு ஒரு நிமிடம் உறைந்து போனான்.

கடவுளே இவளை என்ன சொல்லி தேற்ற…”சுதாம்மா ப்ளீஸ்.பாத்துக்கலாம் விடு. சாப்டியா? ப்ளீஸ், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு, நீ ஆல்ரெடி ரெண்டு நாளா பவா கூட போராடிகிட்டு இருக்கே. நா சீக்கிரம் வரேன்” என ராஜு தேற்றினான்.

போனை வைத்த பிறகு ராஜு தெளிய ஐந்து நிமிடம் ஆனது. சுற்றிலும் பார்த்தால் யாரும் இல்லை. எல்லாரும் பிரேக் முடிந்து புளோருக்கு போய் விட்டார்கள். மணி  சாரிடம் சொல்லிட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும். மனதில் ஏதேதோ ஓட ராஜு தளர்வாய் லிப்ட் நோக்கி நடந்தான்.

மணி சாரிடம் சொல்லி விட்டு கிளம்பியதும், பார்க்கிங் போகும் வழியில் ராஜுவுக்கு எண்ணம் அடுத்த நாளுக்கு தாவியது.

நாளையில்  இருந்து ஓரு வாரத்திற்கு ஒர்க்க்ஷாப். இன்னும் மூன்று மாதங்களில் லேட்டஸ்ட் கன்வேயர் சிஸ்டம் ஆஸ்திரேலியாவில் இருந்து வர போகிறது.

சிட்னியில் இருந்து என்ஜினீயர்ஸ் டீம் இன்று இரவு கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்கிறார்கள். காலை ஒன்பது மணிக்கு செஷன் ஆரம்பிக்கிறது.

சுதாவுக்கு இந்த அஜெண்டா ஏற்கெனவே தெரியும். ஆனால் பவாவை தனியாக சமாளிப்பது பெரும் சிரமம். இரவுக்குள் சரியாக கடவுளை வேண்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீடே ஓய்ந்து கிடந்தது போல இருந்தது ராஜுவுக்கு. பெட் ரூம் கதவு சாத்தியிருக்க மெதுவாய் திறந்தால் சுதா பவாவை மடியில் கிடத்தி தட்டிக் கொண்டிருந்தாள்.

“டீ” என சைகையால் கேட்க சரி என தலை அசைத்தாள்.

நேராக சமையலறைக்கு சென்றால் சுதாவின் பாடு தெரிந்தது. சிங்க் நிறைய சின்ன சின்ன கோப்பைகளும் ஸ்பூன்களும்  நிறைந்திருந்தது. சூப், பால், கஞ்சி என பவா எதையும் முழுதாய் குடிக்கவில்லை.

அடுப்பில் பாலை சிம்மில் வைத்து விட்டு எல்லா பாத்திரங்களையும் தேய்த்து முடித்தான். பத்து நிமிடத்தில் கிச்சன் சுத்தமாக, டீ கப்பை கொண்டு போய் சுதாவுக்கு கொடுத்தான்.

டீ குடித்து முடித்து சுதா ரெடியாக பவாவை தூக்கி கொண்டு ராஜுவும் கிளம்பினான்.

கிளினிக்கில் பெரிதாய் கூட்டமில்லை. டாக்டர்  இரண்டு நாளுக்கு மருந்து கொடுத்தார். இப்படியே இருந்தால் பிளட் டெஸ்டும்  செய்ய எழுதி கொடுத்தார்.

வீடு திரும்பும் போது வண்டியில் இருவரும் பேசும் நிலையில் இல்லை. வெளியே மழை காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. 

பார்மசி எதிரே ஓரம் கட்டிவிட்டு இறங்கும்போது “டின்னர்க்கு என்ன வாங்கட்டும்?” என ராஜு கேட்டான். “இது பார்மசி தானே?” என்றாள் சுதா.

“ஆமாம், ஆனால் பில் போட எப்படியும் பத்து நிமிஷம் ஆகும். என்ன வேணும்னு சொல்லு வெயிட் பண்ணும் போது ஆன்லைன்ல ஆர்டர் பண்றேன்” என்றான்.

“நீயே பண்ணு ராஜு. எனக்கு லைட்டா போதும்” என்றாள் சுதா.

மருந்து வாங்கி வீடு திரும்பியதும் பவாவின் ரியாக்க்ஷனை ராஜு கவனித்தான்.

“சுதா வேல பண்ணி இருக்கானு நெனைக்குறான். டயபர் செக் பண்ணி பாரு” என்றான்.

பச்சை பச்சையாக நுரைத்து போயிருந்தாள்.

“இன்னைக்கு இது சிக்ஸ்த் டைம் ராஜு” என்றாள்.

பவாவுக்கு கால் நடுங்கியது.தோள் பிடித்து நிற்கையில் அப்படியே சரிந்தாள்.

ராஜு ஒரு பக்கம் பிடிக்க, சுதா சுத்தம் செய்து டயப்பரும் ட்ரெஸ்ஸும் மாற்றி கிடத்தும் போது பவாவுக்கு கண்கள் சொறுகியது.

“சுதா நீ உக்காரு. இவ சீக்கிரம் தூங்கிடுவா போல. கொஞ்சம் ஏதாவது சாப்பிட வச்சிட்டா சிரப் கொடுக்கலாம்.

நா போய் இட்லி சூடு பண்ணி எடுத்துட்டு வரேன்” என்றான் ராஜு.

முக்கால் மணி நேரம் போராடி ஊட்டி முடித்து, மருந்து கொடுத்து, முதுகில் போட்டு தட்டி தூங்க வைத்து, பெட்டில் கிடத்தி நிமிரும் போது சுதாவுக்கு தெரிந்து விட்டது, நிம்மதியாக மூச்சு விட மூன்று நாளாவது ஆகும் என.

மங்கலான ரீடிங் ரூம் வெளிச்சம் சொல்லியது ராஜு பிஸி என்று.

துடைக்கப்பட்ட கிச்சன் டேபிளும், கழுவிய பாத்திரங்களும், இத்யாதிகளும், அன்றைய பகலுக்கும் அடுத்து வரும் பகல்களுக்குமான கருணை வெளிச்சத்தை வாரி இறைத்து கொண்டிருந்தன சுதாவின் மீது. 

ஜன்னல் வழியே தூரத்து சிமெண்ட் பேக்டரி விளக்குகள் வண்ணப்புள்ளி அணிவகுப்பாய் மின்னிக்கொண்டிருந்தது.

அடர்ந்த, அமைதியான அந்த இரவு, பேக்டரி புகை போக்கி தொடர்ந்து கக்கும் கரும் புகையை ஆரத்தழுவி தன்னுள் ஐக்கியமாக்கியது. கூடவே மனிதர்களின் முழுப்பகல் ஓட்டங்களையும், போராட்டங்களையும் தற்காலிகமாக கவ்விப் பிடித்து கொக்கரித்துக் கொண்டிருந்தது.

சில்லிடும் நொடிகளை கட்டவிழ்க்க காத்திருக்கும் அடுத்து வரப்போகும் மணித்துளிகள், அந்த இரவை வெறித்து பார்த்துக்கு கொண்டிருந்தன.

Tamil novel – OTP – Part 9/20

நா டக்குனு குளிச்சிட்டு வரேன். நீ ஆரிப் கிட்ட சொல்லி ஒரு பார்சல் ஒடனே அனுப்ப சொல்லு. இன்னைக்கு கொஞ்சம் ஃபன்  பண்ணலாம்” என்றார் நேசமணி.

சிரித்தபடியே “நீங்களும் குளிச்சிட்டு வந்து கோபால் சார்கிட்ட கொஞ்சம் வாங்கி வைங்க. எப்படியும் அவர் பிரிட்ஜ்ல ஸ்டாக் பண்ணிருப்பார்” என்றார் சங்கு புஷ்பம்.

“அப்ப வர்றவர் இன்னைக்கு செத்தான்டா சேகர் கதைதான்” என்றார் சங்கு புஷ்பம்.

சற்று நேரத்தில் ஆரிப் டெலிவரி கொடுக்க, கோபால் சார் கலாய்த்து விட்டு ஒரு அழகான கோப்பையையும் பாட்டிலையும் தர, நேசமணி கிட்சனில் ரெடி செய்து வைத்தார். “அபர், நா சர்வ் பண்றேன். நீ வர வேணாம் என்றார்.

எல்லா ப்ளாக்கையும் சுற்றி கடைசியில் அரைமணி நேரம் கழித்து வந்து சேர்ந்தார் கட்சிக்காரர். டோர் பெல் அடித்தது. சங்கு புஷ்பம் போய் கதவை திறந்தார்.

“அம்மா, சார் இருக்காருங்களா” என்றார்.

“ஐயா தான் இருக்காரு” என்றார் சங்கு புஷ்பம்.

கட்சிக்காரர் குழப்பமாக பார்க்க “அம்மா இருந்தா ஐயாதான் இருப்பாரு. மேடம் இருந்தாதான் சார் இருப்பாரு” என்றார் சங்கு புஷ்பம்.

“சாரி மேடம், ஐயா இருக்காருங்களா” என்றார் அவர்.

லேசாய் புன்னகைத்தபடியே “உக்காருங்க சார்” என காரிடாரில் இருந்த சேரை காண்பித்தார் சங்கு புஷ்பம்.

அந்த ப்ளோரில் இருந்த நான்கு வீடும் சேர்ந்து ஆண் பெண் என யாராக இருந்தாலும் மணி கணக்கில் பேசுவதென்றால் இந்த இடம் என்று முடிவானது. பிள்ளைகள் படிக்க, பெண்கள் புழங்க என வீட்டு ஹால் பிரைவசி பிழைத்தது.

காலப்போக்கில் லேப் சாம்பிள், சாமான் ரிப்பேர் என யார் வந்தாலும் இந்த இடம் என்றானது.

காரிடாரில் பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தது ரத்தினத்துக்கு உறுத்தியது. எல்லா ப்ளாக்கும் சுற்றியதில் களைப்பாக இருந்தார். கசங்காத வேட்டி சட்டையில் ஐம்பது வயது நெருக்கத்தில் தெரிந்தார்.

“எவ்வளவு நேரம் சார் பாக்கணும்” என்றார் சங்கு புஷ்பம்.

இந்த கேள்வியை எதிர்பாராதவராக சற்று தடுமாறிப் போனார் அவர்.

“ஒரு அரை மணி நேரம், இல்ல ஒரு மணி நேரம்” என்றார் அவர்.

“அரை மணி நேரம்னா ஆயிரம் ரூபா, ஒரு மணி நேரம்னா ரெண்டாயிரம் ரூபா” என்றார் சங்கு புஷ்பம்.

“என்ன மேடம், புரியல” என்றார் ரத்தினம்.

“ஆமா சார். இதான் அவர் கன்சல்டேஷன் சார்ஜ். பே பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க. பைவ் மினிட்ஸ்ல வருவார்” என்றார் சங்கு புஷ்பம்.

“மேடம், நா சும்மா அவர்கிட்ட ஒரு விஷயம் பேசிட்டு போலாம்னு வந்தேன். கன்சல்டேஷன் இல்ல” என்றார் அவர்.

“சார் மட்டுமில்ல நானும் யார்கிட்டயும் சும்மா பேசுறதில்ல” என்றார் சங்கு புஷ்பம்.

“இல்ல மேடம். சார்கிட்ட நா மொதல்ல பேசுறேன். அப்புறம் அவர் கேட்டார்னா நா தர்றேன் மேடம்” என்றார்.

“நீங்க பே பண்ணா தான் அவர் உங்கள பார்ப்பார்” என மீண்டும் உறுதியாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

“நா அவரை பாக்க முக்கால் மணி நேரம் வெயிட் பண்ணியிருக்கேன். நீங்க என்னடான்னா என்கிட்டே காசு கேக்குறீங்க” என உதாராய் சொன்னார் ரத்தினம்.

“என்ன சார் நீங்க நெஜமாவே புரியாம தான பேசுறீங்களா? நெக்ஸ்ட் டைம் வரும்போது அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு வாங்க. நேரா வந்து பாக்கலாம்” என காட்டமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

ஆரம்பத்தில் இருந்தே காக்க வைத்தது ரத்தினத்திற்கு சோதனையாய் இருந்தது. எப்படியோ வந்த வேலை முடிந்தால் போதும் என தோன்றியது.

பக்குவமாக பேசி காரியத்தை முடிக்க என்ன செய்வது என்று யோசித்தார்.

இந்த அம்மா புரியாம கேக்குது. இப்போ குடுத்துடுவோம். அப்புறம் சார பாத்து பேசி சரி பண்ணிக்கலாம் என முடிவு செய்தார்.

“சரிங்க மேடம், தரேன்” என பாக்கெட்டை துழாவினார். கொஞ்சம் குறைவாய் இருந்தது.

“போன்ல அனுப்பிடவா மேடம்” என்றார்.

“கேஷ் மட்டும்தான் வாங்குவோம்” என சுருக்கமாய் முடித்தார் சங்கு புஷ்பம்.

ஆயாசமாய் பெருமூச்சு விட்ட ரத்தினம் சற்று நகர்ந்து ஒரு ஓரமாய் போய் நின்றார்.

சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டு மெதுவாய் வேட்டியை உயர்த்தி டிரௌசர் பாக்கெட்டில் இருந்து ஒரு கட்டு கரன்சியை வெளியே எடுத்தார்.

கீழே பார்க்கில் விளையாடும் குழந்தைகளை ரசித்தபடியே இவரையும் நோட்டமிட்ட சங்கு புஷ்பத்திற்கு சிரிப்பு கட்டுப்படுத்த முடியவில்லை.

சாலை பக்கம் திரும்பி ஒரு நிமிஷம் நின்றவர் நிதானித்தபடி காத்திருந்தார்.

யாராவது தன்னை பார்க்கிறார்களா என சுற்றி பார்த்த ரத்தினம் நேராக போய் நின்றது சிசிடிவி கேமரா முன்பு பாப்பரப்பா என்று.

அந்த பக்கம் மானிட்டர் ரூமில் இருக்கும் கோமதியை நினைத்து புன்னகைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

பத்து புது இருநூறு ருபாய் தாள்களாக ரெண்டாயிரம் எடுத்து கொடுத்தார்.

தேங்க்ஸ் சொல்லி சங்கு புஷ்பம் வாங்கி கொண்டு உள்ளே செல்ல மண்டை காய்ந்து போனார் கட்சிக்காரர்.

இரண்டு நிமிடம் கழித்து “உள்ள வாங்க சார்” என கூப்பிட்டார் சங்கு புஷ்பம்.

Tamil mini novel – Origami – Worry Kammi – part 4/4

நேரமாக நேரமாக அவனுக்கு வியர்த்து ஊத்தியது. Origami லேசு பட்ட விஷயமில்லை. நுணுக்கமாக செய்ய வேண்டும். ஒரு மடிப்பு தவறினாலும் மொத்தமும் சொதப்பி விடும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அதை சரியாக செய்து அதன் காரணத்தையும் தெளிவாக நடுவர்களிடம் சொல்ல வேண்டும். சீவலுக்கு இது சவாலான காரியமாக இருக்கும். எப்படி சமாளிக்க போகிறதோ என மண்டை காய்ந்து போனான்.

வேலை மும்முரத்தில் இருந்த சரண்யாவுக்கு சிற்பியின் மனநிலை அந்நியமாக இருந்தது.

“ஏண்டா, அவளையே நெனச்சுக்கிட்டு இருக்க? சாப்பிட்டு இந்த பைய சைக்கிள்ள வச்சு எடுத்திட்டு போய் மாதுரி மேடம் வீட்ல குடுத்துட்டு வா” என்றாள்.   

பன்னிரண்டு மணி ஆனது. சிற்பி பூமாலைகளை கொடுத்து விட்டு நகர, “இந்தாப்பா, இந்த பூ சரடை அம்மா கிட்ட குடு” என்றார் மாதுரி மேடம். அதை வாங்கி கொண்டு வேகமாக பள்ளிக்கு சைக்கிளில் சென்றான்.

பள்ளி வளாகம் அமைதியாக இருந்தது. மெயின் பில்டிங்கில் மட்டும் ஆள் நடமாட்டம் தெரிந்தது.

சிற்பி சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு உள்ளே செல்ல, PT சாரிடம் மாட்டிக் கொண்டான்.

“டாய், ஏண்டா கலர் ட்ரெஸ்ல வந்திருக்க?” என தடுத்தி நிறுத்தினார்.

பச்சை பொய்யை பட்டென்று சொன்னான். “டீச்சர் பூ எடுத்திட்டு பன்னெண்டு மணிக்கு வர சொன்னாங்க சார்” என்றான்.

“ஓடு, ஓடு, சீக்கிரம் போ” என உள்ளே விட்டார் PT சார்.

மாதுரி மேடத்திற்கு மனதுக்குள் நன்றி சொல்லி காரிடார் ஜன்னலருகே போய் நின்றான்.

ஜட்ஜ் டேபிள் மீது பால் ரோஜா நிற தாமரை அழகாய் மலர்ந்திருந்தது.

“பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி சித்திர வள்ளி, போர்த் பி” என மைக்கில் சொன்னார் எச் எம் டீச்சர்.

எல்லாரும் கை தட்ட சந்தோஷமும் வெட்கமுமாய் தலை குனிந்து சிரித்தபடியே மேடை ஏறியது சீவல்.

மெடல், ட்ரோபி, பரிசு பண கவர் மற்றும் புத்தகம் என கை நிறைய அள்ளிக்கொண்டு, வாய் நிறைய சிரித்தது.

சிற்பிக்கு மனம் சிறகடித்துப் பறந்தது. அப்படியே போய் சீவலை தூக்கிக் கொள்ள வேண்டும் என ஆசை ஓங்கியது.

அடுத்தடுத்த மாணவர்கள் பரிசு வாங்க, மீண்டும் சீவலின் பெயர் வந்தது. இந்த முறை ஆர்ட் போட்டிக்கு. Origami லோட்டஸுக்கும் முதல் பரிசு. மீண்டும் எழுந்து பின் பக்கம் ஸ்கர்ட்டை நீவி விட்ட படியே சீவல் மேடையை நோக்கி நடக்க எச் எம் டீச்சர் அதன் கன்னத்தில் செல்லமாய் தட்டி கொடுத்து அணைத்துக் கொண்டார்.

இது போதாதா!  சீவல் காலம் முழுக்க அதன் புகழை அதுவே பாடிக் கொள்ள! எங்க டீச்சர்ஸ் எனக்கு கிளாப் பண்ணாங்க, எங்க எச் எம் டீச்சர் என்ன ஹக்கு பண்ணாங்க என வாழ்நாள் சாதனை அவளுக்கு அது.

நிறைவாக நிகழ்ச்சி முடியும் தருவாயில் நன்றி உரை சொன்ன எச் எம் டீச்சர் சொன்ன விஷயம் சிற்பிக்கு காதில் தேனாய் பாய்ந்தது. பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர், ஐந்து குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக சொல்ல, தேர்வு குழு கூடி பேசி முடிவு செய்த பெயர்களில் ஒன்று சித்திர வள்ளி – போர்த் பி!

சீவலின் தோழிகள் அதை தோள் மீது தூக்கி பிடித்து சிரிக்க, சிற்பிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

அவளின் வகுப்பு ஆசிரியரும் வந்து போட்டோ எடுக்க அந்த இடம் களை கட்டியது.

நிகழ்ச்சி முடிந்து ஒவ்வொருவராய் வெளியேறும் வரை சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தான் சிற்பி.

வெளியே வந்த சீவல் அவனை கண்டதும் “சிப்பின்னா” என முத்து தங்கமாய் வந்து கட்டிக் கொண்டது.

முதல் வேலையாய் ஒரு சாக்லெட்டை பையிலிருந்து எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டது.

சதீஷும் ராஜுவும் வந்து சேர அவர்கள் சீவலை தோளில் தூக்கி சுற்றி கொண்டாடி தீர்த்தார்கள்.

வீட்டுக்கு போகும் வழியில் சீவலிடம் கேட்டான் “ஏண்டி, பேச்சு போட்டி பத்தி எதுவும் சொல்லல? என்ன பேசுன”?

“அண்ணா, பேச்சு போட்டிக்கு பேரு குடுத்த பொண்ணு இன்னைக்கு வரல, அதனால தமிழம்மா என்ன பேசரியான்னு கேட்டாங்க. நா நீ சொல்லி குடுத்த ப்ளோரா கதையை சொன்னேன். சூப்பரா இருக்கு, இதையே சொல்லிடு, ஆர்ட்டுக்கும், பேச்சு போட்டிக்கும் வேற வேற ஜட்ஜு தான் வருவாங்கனு சொல்லி லாஸ்ட் மினிட்ல என்ன பேச சொல்லி ஸ்டேஜுக்கு அனுப்பிட்டாங்க” என்றாள் குஷியாக.

“உனக்கு சரி லக்கு இன்னைக்கு” என சொன்னான் சிற்பி. 

வீட்டுக்கு வந்து அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட பிறகு சரண்யாவுக்கு பூரிப்பு அதிகமானது.

சீவலுக்கு பிடித்த பச்சை கலர் கேசரியை உடனே செய்து முடித்தாள்.

இடையே வந்த இரண்டு மூன்று போன்கள் பேசி முடிக்கும் போது “மா, உனக்கு நெறய ஒர்க் வருது, கரெக்டா? என ஆசையாய் சிரித்தான் சிற்பி.

பிறகு “மா, இன்னைக்கு உனக்கும் லக்கி டே” என்றான்.

 “சீவல், எனக்கு ஒரு லோட்டஸ் செய்து தரியா?” என ஆசையாக கேட்டாள் சரண்யா.

“உனக்கு எதுக்குமா?” என்றான் சிற்பி.

“சங்கு புஷ்பம் ஆன்ட்டிக்கு குடுக்க! வாழ வழி காட்டுறவங்களும் ஆசான் தானே!” என சிரித்தாள் சரண்யா.

“Origami உன் worryய கம்மி பண்ணிடுச்சுமா!” என கேசரியை வழித்து சாப்பிட்டபடியே சொன்னது சீவல்.

Tamil mini novel – Origami – Worry Kammi – part 3/4

” மா, சீவல் எங்கம்மா? என்றபடியே வந்தான் சிற்பி குமார்.

“அவ எம்மேல கோவமா இருக்காடா” என விஷயத்தை சொன்னாள் சரண்யா.

“மா, கேட்டா கோச்சுக்காதே, அவ நல்லா ஆர்ட் பண்றாம்மா. இந்த ஒரு தடவை வாங்கி குடும்மா, ப்ளீஸ்” என்றான் சிற்பி.

“இன்னும் ஒரு மாசம் கழிச்சி திரும்ப வருவீங்க. தீபாவளிக்கு என்ன பண்ணலாமுன்னு, ஒரு செலவாவா இருக்கு இந்த வீட்ல” என சலித்துக் கொண்டாள் சரண்யா.

சிற்பிக்கு சங்கடமாக இருந்தது. இருந்தால் அம்மா கொடுத்து விடுவாள். இவ்வளவு கெஞ்சி கேட்கும் வரை விடமாட்டாள். ஆனால் சீவலை எப்படி சமாதான படுத்துவது என யோசித்தான்.

“போய் கூட்டிட்டு வா அவளை, சாப்பிட்ட பிறகு பூ கட்டணும் எல்லாரும்” என்றாள் சரண்யா.

வீட்டில் எங்கேயும் சீவல் இல்லை. அவள் எங்கு இருப்பாள் என சிற்பிக்கு தெரியும்.

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் உள் பக்கமாய் ஒரு குட்டி திண்ணை இருக்கும். அங்கே போய் பார்த்தான்.

சீவல் அழுது அழுது முகம் பெரிதாகி உட்கார்ந்திருந்தது.

“இங்க வா” என அதை தூக்கி மடியில் உட்கார வைத்து கண்ணை துடைத்தான் சிற்பி.

“சீவல், அழாத” என சொல்லி சமாதானப் படுத்தினான்.

என்ன சொல்லி இவள் அழுகையை நிறுத்துவது என யோசித்தான்.

“உண்டிய ஒடச்சிடலாமா? என கேட்டான்.

” ம்ஹூம், வேணாம்” என சொல்லிவிட்டு மீண்டும் ஓ வென அழுதது.

“சரி வா வீட்டுக்கு போலாம். அம்மா கிட்ட சொல்லி இருக்கேன். பூ கட்டிட்டு நைட் திரும்ப கேக்கலாம். குடுத்துட்டா காலைல வாங்கிக்கலாம்” என்றான்.

“இல்ல அம்மா தர மாட்டாங்க” என சொன்னது.

“நா தாமரை பூ மேல சரஸ்வதி வீணையோட உக்காந்திருக்க மாதிரி நாலு நாளா பிராக்டிஸ் பண்ணி நல்லா வந்துடுச்சி. ஷர்மி வீடு “எச் எம்” டீச்சர் வீடு பக்கத்துல தான் இருக்கு. அவ தான் சொன்னா, போன வாரம் டீச்சர் நாலு கட்ட பைல ப்ரைஸ் பொருளுங்க வாங்கி வெச்சிருக்காங்கனு. நா கலந்துக்கிட்டா கண்டிப்பா நாளைக்கு ப்ரைஸ் வாங்கிடுவேன்” என சொல்லி மீண்டும் அழுதது.

“ஓ, அதுக்கு தான் சாமி ரூம்லயே இருந்தியா?” என சிரித்தான் சிற்பி.

பாக்கெட்டில் பார்த்தான். இரண்டு ரூபாய் இருந்தது. பால் வாங்கிய மிச்சம்.

“இரு வரேன்” என சொல்லி கடைக்கு போய் ரெண்டு மிட்டாய் வாங்கி வந்தான்.

“இந்தா, சாப்பிடு. நா அம்மா கிட்ட கேக்குறேன். நீ கேக்காதே. திட்டுனா நா வாங்கிக்குறேன்” என்றான்.

சீவல் அழுகையை தற்காலிகமாக நிறுத்தி மிட்டாயை சாப்பிட ஆரம்பித்தது.

இது தான் சமயம் என சிற்பி ஆரம்பித்தான்.

“நீ தான் origami நல்ல செய்வியே! பேசாம ஆர்ட் போட்டிக்கு அதை செய்யேன்” என மெதுவாய் சொன்னான்.

திரும்ப ஓவென அழ ஆரம்பித்தால் அவ்வளவுதான் என பயந்தான்.

சீவல் தலையை குனிந்து கால் முட்டியில் முகம் புதைத்து கொண்டது.

“சீவல், இங்க பாரு, உனக்கு ஓகேன்னா என்கிட்டே origami பேப்பர் இருக்கு. நா தரேன்” என எப்படியாவது அதை ஒத்துக்கொள்ள வைக்க பாடு பட்டான்.

“தேர்ட் ப்ரைஸே நூறு ரூபாயாம். கூட புக்ஸும் தருவங்களாம்.ஷர்மி சொன்னா” என சொல்லி ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டது.

நல்ல காலம் சீவல் திரும்ப டேமை தொறக்கல. ரெண்டு சொட்டு பரவாயில்லை என இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தான் சிற்பி.

“அதெல்லாம் நீ கலக்கிடுவ. origami உனக்கு செமயா வரும். நீ வேணா பாரு, “எச் எம்” டீச்சர் உன்ன கண்டிப்பா செலக்ட் பண்ணிடுவாங்க” என பலமாய் மார்க்கெட்டிங் செய்தான்.

எப்படியாவது சரஸ்வதி ட்ராயிங்கை மறக்கடிக்க வேண்டும் என origami மந்திரத்தை சீவல் மண்டையில் ஏற்றினான்.

“ஆனா எனக்கு origamiல என்ன பண்றதுனு புரியல. நா தான் ப்ராக்டிஸே பண்ணலயே. அது பண்ணா எனக்கு ப்ரைஸ் வராது” என சோகமாய் டிக்ளேர் செய்தது.

சிற்பி கண்ணுக்கு மெல்ல மெல்ல சீவல் மனதில் சரஸ்வதி இவனை முறைத்துக் கொண்டே மறைவது தெரிந்தது. ஆனால் தாமரை மட்டும் பிரகாசமாய் இவனை பார்த்து சிரித்தது.

“சீவல், நீ origamiல lotus பண்ணு. ஒர்க் அவுட் ஆகும்” என குஷியாய் சொன்னான்.

“அப்போ சரஸ்வதிக்கும் வீணைக்கும் என்ன பண்றது?” என குபீரென ஒரு கேள்வியை போட்டது.

“அய்யோ, இவ மண்டைல இன்னும் அந்த படம் மறையலியே” என அங்கலாய்த்து கொண்டான் சிற்பி.

“அதான், நவராத்ரி வர போகுதுல்ல! அப்போ போய் அசெம்ப்ளி போர்டுல வரைஞ்சுடு” என டக்கென்று சொன்னான்.

சரஸ்வதியையும் வீணையையும் பிராக்டிஸ் செய்தது வீணாக போவதில்லை என சீவல் சமாதானம் ஆவது போல தெரிந்தது சிற்பிக்கு.

“இப்போ வரஞ்சேன்னா ஜட்ஜுங்களும் டீச்சருங்களும் மட்டும் தான் பாப்பாங்க. அசெம்ப்ளி போர்டுல வரஞ்சேன்னா மொத்த ஸ்கூலும் பாக்கும். “போர்த் பி சித்திர வள்ளி” னு நீ பேரும் எழுதலாம்” என சொல்ல மிட்டாயோடு சீவலும் கரைய ஆரம்பித்தது.

“டீச்சர்ஸ் டேக்கு எதுக்கு லோட்டஸ் செய்யணும்? சில்ட்ரன்ஸ் டேக்கு ரோஸ் செஞ்சாக்கூட ப்ரைஸ் கிடைக்கும், ஆனா இதுக்கு எனக்கு கிடைக்காது” என எப்போது வேண்டுமானாலும் மீண்டும் டேம் திறக்கும் நிலை.

முடியலடா சாமி என ஆனது சிற்பிக்கு.

சீவல் மண்டையில் முறைத்துக் கொண்டே மறைந்தாலும், சரஸ்வதிக்கு சிற்பியின் அவஸ்தை வருத்தமாய் இருந்தது.

சின்ன பையன், எவ்வளவு தான் சமாளிப்பான் என போனால் போகட்டும் என அவன் மண்டையில் ஒரு ஐடியாவை பிளாஷ் செய்தார்.

சிற்பிக்கு சீவல் இவ்வளவு நேரம் பேச்சு வார்த்தையில் இருந்ததே பெரும் விஷயமாக இருந்தது.

எப்படியாவது இந்த லோட்டஸ் பேச்சு வார்த்தை சுமுகமாக முடிய வேண்டும். அதற்கு சீவல் ஒத்துக்க கொள்வது போல ஒரு பாயிண்ட் கிடைத்தால் போதும் என நினைத்தான்.

ஒரு நிமிடம் கண் மூடி யோசிக்க “English Dale” சப்ளிமெண்டரி புக்கில் இருந்த “The Lotus” என்ற poem சின்ராஸின் நினைவுக்கு வந்தது.

“ஏ சீவல், என்ன நீ லோட்டஸ இப்படி சொல்லிட்ட. லோட்டஸ் தான் “Queen of Flowers” தெரியுமா? அது மாதிரி டீச்சர் வேலை தான் இருக்கறதுலயே உயர்ந்த வேலை!” என சீவலை கோழி அமுக்குவது போல அமுக்கினான்.

இந்த பொண்ணு “Queen” னு எந்த டாபிக் கிடைச்சாலும் மங்கி விடும் என அவனுக்கு தெரியும்.

“லோட்டஸ் தான் “Queen of Flowers ஆ?” என சந்தேகமாய் கேட்டது சீவல்.

“ஆமாடி, நா வேணா வீட்டுக்கு போனப்புறம் என் புக்க காமிக்குறேன், நீயே பாத்துக்க” என தூபமிட்டான்.

சீவல் குட்டி திண்ணையில் நன்றாய் சாய்ந்து உட்கார்ந்து கொண்டது. Queen என்ற வார்த்தையின் மமதை அதன் கண்ணில் தெரிந்தது. “லோட்டஸ் தான் “Queen of Flowers. அத மாதிரி டீச்சர்ஸ் நீங்களும் பெஸ்ட்னு சொன்னா ஜட்ஜு ஒத்துக்குவாங்களா” என சீவல் கேட்டது.

“லோட்டஸ் நேஷனல் ப்ளவருடி” என அவசரமாய் ஒரு முட்டு குடுத்தான் சிற்பி.

சீவல் அதை கன்சிடர் செய்யும் நேரத்தில் அடுத்த முயற்சிக்கு தயாரானான்.

“குட்டிமா, ஏன் லோட்டஸ் இந்த கலர்ல இருக்கு தெரியுமா? ப்ளோரான்ற கடவுள் ரோஸையும் லில்லியையும் சேத்து லோட்டஸ செஞ்சாரு.  ரோஸ் passionate and energeticனு  சொல்வாங்க. அதே போல லில்லி வெள்ளையா இருக்குல்ல, அத purity, calm and fairnessக்கு சொல்வாங்க. இப்போ சொல்லு, நம்ம டீச்சர்ஸும் ரோஸ் மாதிரி passionate டா நம்ம கிட்ட இருக்கிற திறமையை மெருகேத்துறாங்களா, அதே போல லில்லி மாதிரி pure மைண்டோட யாரையும் ஏற்ற தாழ்வு பாக்காம நடத்துறாங்கல்ல. இந்த மாதிரி ரெண்டு பூக்களோட உயர்ந்த குணமும் அவங்க கிட்ட இருக்குறதால அவங்களோட வேலையும் உயர்வானது தான்” என தெளிவாக சொல்லி புரிய வைத்தான்.

சீவல் கண் கொட்டாமல் கேட்டு அவன் சொல்வதை உள் வாங்கி கொண்டது. Origami டீல் சுபமாய் முடிந்தது.

சீவலும் சிற்பியும் ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பினார்கள்.

ஹாலில் சாமந்தி, ரோஸ் மற்றும் மல்லி பூக்கள் இவர்களுக்காக காத்திருந்தன.

சரண்யா ஏற்கெனவே பூ கட்ட ஆரம்பித்து விட்டாள். “எங்க போனீங்க ரெண்டு பேரும்? போய் சாப்பிட்டு வந்து கொஞ்ச நேரம் இதை கட்டி குடுங்க” என்றாள்.

சீவல் உள்ளே போக, “மா,ரொம்ப கஷ்டப்பட்டு அவளை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன். சாப்பிட்டு நா அவளுக்கு origami ப்ராக்டிஸ் பண்ண ஹெல்ப் பண்ணனும். ப்ளீஸ், கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணும்மா. நா எப்படியாவது உனக்கு டைமுக்குள்ள கட்டி முடிக்க ஹெல்ப் பண்றேன்’ என கெஞ்சினான்.

“Origami பேப்பர் இருக்கா? இல்ல வாங்கணுமா? என்றாள் சரண்யா.

“அதெல்லாம் வீட்ல இருக்குமா, அதனால தான் அவளுக்கு அந்த ஐடியாவ சொன்னேன்” என்றான் சிற்பி.

“சரி, போய் செய்ங்க” என்றாள் சரண்யா.

உள்ளே போன சீவல் சப்ளிமெண்டரி புக்கை எடுத்து அந்த பக்கத்தை படித்து பார்த்து அவன் சொன்னது உண்மை தான் என உறுதி படுத்திக்கொண்டது.

அடுத்த ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை இருவருக்கும்.

தரை முழுதும் செய்திதாளில் இயற்கை எய்திய origamiக்கள் இறைந்து கிடந்தன.

இரவு படுக்க போகும் போது சீவலுக்கு லோட்டஸ் origami நன்றாய் செய்ய வந்தது.

சரண்யா அலாரம் வைத்து படுக்க, “மா, ரெண்டே நிமிஷத்துல வரேன்” என சொல்லி வெளியே ஓடினான்.

சீவல் அவன் கொடுத்த பால் ரோஜா நிற origami பேப்பர்களை கட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு சிற்பி வீட்டு கதவு தட்டபட்டது. அவன் நண்பர்கள் சதீஷும், ராஜுவும்.

சரண்யா டீ போட்டு கொடுக்க மும்முரமாய் பூ கட்டும் வேலையை ஆரம்பித்தார்கள்.

ஒவ்வொரு பூவாய் எடுத்து மாலை கோர்க்கும் போதும், அந்த நாள் சீவலுக்கு நல்லபடியாய் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான் சிற்பி. சீவல் தெம்பாய் எழுந்து வந்தது.

“தேங்க்ஸ் ணா” என அவர்களிடம் சிரித்துக் கொண்டே சொன்னது.

டீ குடித்து விட்டு மீண்டும் சில முறை லோட்டஸ் செய்து பார்த்து, நல்லபடியாய் வந்ததில் திருப்தியாக இருந்தது.

“அண்ணா, எனக்கு திரும்ப அந்த லோட்டஸ் கதையை சொல்லேன்” என கேட்டு சொல்லி பார்த்துக் கொண்டது.

அவர்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் பேசி சிரித்துவிட்டு பின் பள்ளிக்கு கிளம்பியது.

“ஆல் தி பெஸ்ட்” என்றான் சிற்பி.

“மத்தியானம் ப்ரைஸ் தருவாங்கனு ஷர்மி சொன்னா. நீ அப்போ வரியா?” என கேட்டது சீவல்.

அவ்வளுவு நம்பிக்கை மேடத்திற்கு. அசெம்பளி போர்டுல பேரு, Queen என அதற்க்கு பிடித்த கீ வேர்டுகளை சொன்னதில் மிதப்பமாக சுற்றிக் கொண்டிருக்கிறது. இன்னைக்கு மட்டும் ப்ரைஸ் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவுதான். நினைக்கும் போதே சிற்பிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

“ஹா ஹா கண்டிப்பா வரேன்” என சொல்லி அனுப்பி வைத்தான்.

Tamil mini novel – Origami – Worry Kammi – part 2/4

சரண்யாவின் கணவர் மோகன் குடும்ப பொறுப்பு இல்லாமல் இருப்பவர். நான்கு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். சிற்பிகுமார் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகனும், சித்திர வள்ளி என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகளும் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக மோகன் அடிக்கடி வீட்டுக்கு வந்து பிள்ளைகளை பார்க்க ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் சரண்யாவுக்கு அவர் மீது நம்பிக்கை என்பது முழுதாய் இல்லை. மீண்டும் சேரும் எண்ணம் அவருக்கு இருந்தாலும், கடந்த காலம் தந்த காயம் காரணமாக சரண்யா அவரை ஏற்க தயாராக இல்லை. தன்னால் குழந்தைகள் அவரை பிரிய வேண்டாம் என நினைத்ததால் அவர் வந்து போனால் அமைதியாக இருந்தாள்.

வேலை முடித்து வீடு நோக்கி நடக்க ஆரம்பிக்க போன் வந்தது.

சொசைட்டி செகரெட்டரி மாதுரி மேடம்.

“சரண்யா, நாளைக்கு நம்ம சொசைட்டில டீச்சர்ஸ் டே பங்க்ஷன் இருக்கு. நீ நல்லா பூ கட்டுவேன்னு சங்கு புஷ்பம் மேடம் சொன்னாங்க. ஹால் அலங்காரத்துக்கு, குத்து விளக்கு பூஜைக்கு நெறய பூ வாங்கி இருக்கோம். நீ கட்டி தர முடியுமா?” என சொல்லி ஒரு தொகையை சொன்னார்.

சரண்யாவுக்கு திருப்தியாக இருந்தது அவர் சொன்ன தொகை. நாளைக்கு பசங்களுக்கு லீவ். காலைல எழுந்து சமைக்க வேணாம். இன்று இரவும், நாளை காலையும் பசங்களுடன் சேர்ந்து கட்டினால் இவர்கள் கேட்கும் நேரத்திற்குள் கொடுத்து விடலாம் என தோன்றியது.

“சரிங்க” என்றாள் சரண்யா.

“நம்ம செக்யூரிட்டிய உங்க வீட்டுக்கு வண்டில கொண்டு வந்து தர சொல்றேன்” என சொல்லி போனை வைத்தார் மாதுரி.

மனதிற்குள் சங்கு புஷ்பத்திற்கு நன்றி சொன்னபடியே நடந்தாள் சரண்யா.

“மா, வந்திட்டியா, உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்” என்றாள் சித்திர வள்ளி.

“இந்தா, நீ கேட்ட சிறுவர் மலர். நேசப்பா தாத்தா குடுத்தனுப்பினார்” என சொல்லி பத்து புத்தகங்களை கொடுத்தாள் சரண்யா.

“ஹை ஜாலி, மூணு நாள் லீவுக்கு போரடிக்காம இருக்கும்” என சந்தோஷமாக சொல்லி சிரித்தாள்.

சற்று நேரம் புத்தகங்களை புரட்டியவள் “மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே பங்க்ஷன் இருக்கு. நா ட்ராயிங் அண்ட் ஆர்ட் போட்டிக்கு பேரு குடுத்து இருக்கேன். இருநூறு ரூபா குடுமா, சார்ட்டு பேப்பர், பெயிண்ட்டு, அப்புறம் கொஞ்சம் ஆர்ட் சப்ளைஸ் வாங்கணும்” என மெதுவாக கேட்டாள்.

“பணம் மரத்துல வெளயுதா?” என சொல்லி நிறுத்தினாள் சரண்யா.

“மா, ப்ளீஸ் மா, நா நல்லா ப்ராக்ட்டிஸ் பண்ணி இருக்கேன். கண்டிப்பா ப்ரைஸ் வாங்கிடுவேன் என கொஞ்சலாய் சொன்னாள் சித்திர வள்ளி. “பத்து ரூபா நீ சம்பாதிக்கும் போது உனக்கு அந்த கஷ்டம் தெரியும். சும்மா பெயிண்டுக்கு, சார்ட்டுக்குனு காசு கேக்காதே. தட்டுக்கு சோறு வருதா அதுக்கு சந்தோஷப்படு” என கடு கடுத்தாள் சரண்யா.

சித்திர வள்ளிக்கு கன்னத்தில் கண்ணீர் சித்திரம் வரைய ஆரம்பித்தது.

ஏற்கெனவே டிஷ் வாஷர் சோகத்தில் இருந்த சரண்யாவுக்கு எக்ஸ்டரா செலவு எரிச்சலை கிளப்பியது.

“நாளைக்கு நீ ஒண்ணும் ஸ்கூலுக்கு போக வேணாம். இன்னும் கொஞ்ச நேரத்துல செக்யூரிட்டி பூ கொண்டு வந்து தருவார். நீயும் அண்ணனும் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என சொல்லி விட்டு சமைக்க ஆரம்பித்தாள் சரண்யா.