Tamil mini novel – Origami – Worry Kammi – part 1/4

“ஏங்க, போஸ்ட் ஆபீசுக்கு போகணும்னு சொன்னீங்க, இன்னும் கெளம்பலியா?” என மாத்திரை போட்டபடியே கேட்டார் சங்கு புஷ்பம்.

“அஞ்சு நிமிஷம், முருங்கை கீரை சூப் ரெடி பண்ணிடறேன். சரண்யா வந்ததும் துணைக்கு விட்டுட்டு கிளம்புறேன்” என உள்ளேயிருந்து பதில் சொன்னார் நேசப்பா.

சரண்யா அவர்கள் வீட்டு பணிப்பெண். பத்து மணிக்கு வந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு, அந்த அந்த நாளுக்குக்கேற்ப என்ன தேவைகள் இவர்களுக்கு இருக்கிறதோ அவற்றை செய்து கொடுப்பாள்.

“சரண்யா இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருவேன்னு சொன்னா. நீங்க சூப் ரெடி பண்ணிடீங்கன்னா வெயிலுக்கு முன்னாடி கெளம்பி போயிட்டு வாங்க” என சொன்னார் சங்கு புஷ்பம்.

சற்று நேரத்தில் நேசப்பா கிளம்ப, சங்கு புஷ்பம் புத்தகம் படிக்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரம் கழித்து “என்னமா சார் குடைய மறந்துட்டு போய்ட்டாரா? என்றபடியே சரண்யா வந்தாள்.

“அதுக்கு தான் நீ இருக்கணும்கிறது. கரெக்டா நினைவு படுத்தி இருப்ப” என்றார் சங்கு புஷ்பம்.

“நீங்க படுங்க, சார் வர வரை நா இருந்துட்டு போறேன்” என வேலையை ஆரம்பித்தாள் சரண்யா.

ஒரு மணி நேரம் ஆனது. நேசப்பா வெளி வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினார்.

மூன்று கப்புகளில் சூப் எடுத்து வைத்து சங்கு புஷ்பத்தை எழுப்பினார்.

“எங்க சரண்யாவ காணோம்?” என்றார் நேசப்பா.

“இங்க தான் இருப்பா, இருங்க போய் பாக்குறேன்” என மெதுவாய் எழுந்து கடைசி பால்கனி பக்கம் போனார்.

அங்கே சரண்யா ஏதோ யோசனையாக அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

“என்ன இங்க நின்னு யோசிக்கிற?” என கேட்டார் சங்கு புஷ்பம்.

சரண்யா முகம் வாட்டமாக இருந்தது.

“தெய்வநாயகி  மேடம் டிஷ் வாஷர் வாங்கி இருக்காங்க, துணி காய போட வரும் போது பாத்தேன். அடுத்த மாசத்துல இருந்து எனக்கு அவங்க வீட்ல வேலை இருக்காதுனு நெனைக்கிறேன்” என கவலையோடு சொன்னாள்.

சங்கு புஷ்பம் எட்டி பார்க்க, அவர்கள் வீட்டு பால்கனியில் புதுசாய் அமர்ந்திருந்தது டிஷ் வாஷர்.

“கரண்டு பில்லுக்கும், பசங்க டியூஷனுக்கும் அவங்க குடுக்குற சம்பளத்தை தான் நம்பி இருக்கேன். இப்போ என்ன பண்ண போறேன்னு தெரியல. தெய்வநாயகி மேடம் எது வாங்கினாலும் அவங்க கூட வாக்கிங் போற சுகந்தி அக்கா வாங்கிடும். அவங்களும் வாங்கிட்டா வேற வேலை கிடைக்கும் வரை சிரமம் தான்” என பெரு மூச்சோடு சொன்னாள்.      
“உள்ள வா” என அழைத்து ஹாலில் வந்து நேசப்பாவோடு சேர்ந்து உட்கார்ந்தார்கள்.

“கொஞ்சம் கால் வலி இருந்ததால நா ஒரு வாரமா சாயங்காலம் அவங்கள பாக்கல. இன்னைக்கு பாத்து பேசுறேன். அவங்க இது வரை உங்கிட்ட எதுவும் சொல்லல இல்ல? நீயா ஏன் கவலை படுற? அப்படி அவங்க நீ வேலைக்கு வேணான்னு நெனச்சா, உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருப்பாங்க. எதையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காதே” என ஆறுதல் சொன்னார் சங்கு புஷ்பம்.

சூப் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தார்கள்.

“டிஷ் வாஷர் இந்த மாதிரி கப்பு, பிளேட்டு, கிளாஸ் கழுவ தான் பெஸ்ட். அது பிரியாணி அண்டா கழுவாது. அஞ்சு லிட்டர் குக்கரை போட முடியாது.  பூஜை சாமான் தேய்க்காது. அதனால நீ பெருசா ஒண்ணும் கவலை படாதே” என நிதர்சனத்தை சொன்னார் நேசப்பா.

“சங்கு, நீ ஏன் நம்ம சரண்யாக்கு ஒரு போஸ்ட் ரெடி பண்ண கூடாது? ஒன்லி பார் பூஜா ரூம் கிளீனிங்ன்னு? பூஜை பாத்திரம் மட்டும் சுத்தம் செய்து, பூ கட்டி, கோலம் போட்டு விசேஷ நாளுக்கு ரெடி பண்ணி தருவானு?” என்ன ஆர்வமோடு சொன்னார்.

சங்கு புஷ்பத்திற்கு இது வேலைக்கு ஆகும் என தோன்றியது.

“மார்கெடிங்க்ல மொதல் பாடமே, இல்லாத தேவையை இருப்பதாக மக்களை நினைக்க வைப்பது தான். 

அடுத்த ஐந்து நிமிடம் இந்த விஷயத்தை விவாதித்ததில் இது செட் ஆகும் என அவர்களுக்கு உறுதியாக தெரிந்தது.

சரண்யாவுக்கு பாதி புரிந்தது, மீதி புரியவில்லை.

“இங்க பாரு, உனக்கு இந்த டிஷ் வாஷர் மெஷின் தான் எக்ஸ்டரா வருமானத்துக்கு வழி பண்ணி இருக்கு. நீ பூஜை பாத்திரம் மட்டும் விஷேச நாளுக்கு முன்னாள் வந்து ரெடி பண்ணி தருவேன்னு ஒரு போஸ்ட போட்டு லிப்ட்ல ஒட்டுனா போதும். இது வரை ரெகுலரா பூஜை பண்ணாதவங்க கூட பக்திமானா மாறிடுவாங்க. வாரத்துல ஏழு நாளும் ஏதாவது ஒரு சாமிக்கு ஸ்பெஷல் டே தான்” என விவரித்தார் சங்கு புஷ்பம்.

நேசப்பா தொடர்ந்தார். “இது தெரிஞ்சு தான் குயிக் காமெர்ஸ் டெலிவரிகாரன் ஒரு கொத்து மாவிலையை இருபது ரூபாக்கு விக்கிறான். கீழ இறங்கி போய் நம்ம செக்யூரி கிட்ட கேட்டா இங்கேயிருக்குற மரத்துல பறிச்சு தருவார். சௌகர்யம் உள்ளங்கைல இருகிறதால நம்ம ஜனங்க இவனுங்க எறக்குற எல்லா Appம் ஒண்ணு மிச்சமில்லாம யூஸ் பண்றாங்க’ என்றார்.

அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு டைரியில் இந்த விஷயத்தை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என லிஸ்ட் போட்டார்கள்.

“ஒரு போஸ்டர் பத்தாது. மூணு போடு சங்கு. ஒண்ண எல்லா பிளாக் லிப்ட்லயும் ஒட்டலாம். ரெண்டாவதை ஜிம் ஏரியால ஒட்டலாம். மூணாவத சரண்யா டீபியா வெக்கட்டும்” என்றார் நேசப்பா.

“லிப்ட், டிபி  சரி, எதுக்கு ஜிம் ரூம்ல?” என்றார் சங்கு புஷ்பம்.

“யோசி, உனக்கே தெரியும்” என சொல்லி சிரித்தார் நேசப்பா.

விஷயம் புரிய “சரியான ஆளு நீங்க!” என பாராட்டினார் சங்கு புஷ்பம்.

“நீ கவலப்படாம கெளம்பு சரண்யா. உனக்கு எத்தனை போன் வருதுன்னு பாரு” என சொல்லி சியர் செய்து அனுப்பினார்கள்.

Tamil novel – OTP – Part 8/20

வரப்போகும் கவுன்சிலர் எலெக்க்ஷனில் தற்போது பொறுப்பில் இருக்கும் டாக்டர் நேசமணி என்பவர் மீண்டும் போட்டியிடுவதாக தகவல். ரத்தினத்தின் கட்சிக்காரருக்கு போட்டியாளர்.

நேசப்பா செய்தியை முழுதாக படித்து முடித்து திரும்பவும் யோசனையில் ஆழ்ந்தார்.

லேண்ட் லைன் அடித்தது. “மேடம், அவர் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்னு கேக்குறார், என்ன சொல்லட்டும்? சாரி மேடம்” என்றார் செல்லகுமார்.

“இதுக்கு போய் எதுக்குப்பா சாரி சொல்ற. சார் மீட்டிங்க்ல இருக்கார். முடிஞ்சப்புறம் கால் பண்ணுவார்னு சொல்லுங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“ரத்தினம் கட்சி வேட்பாளர் யார்னு பாத்தியா” என கண் மூடியபடியே கேட்டார் நேசப்பா.

கொஞ்ச நேர தேடலுக்கு பிறகு “புஷ்பாங்க, எக்ஸ் எம்எல்ஏ மனைவியாம்” என்றார் சங்கு புஷ்பம்.

“அப்படியா” என நிதானமாய் உள்வாங்கியவர் “அப்ப அவரு உன்ன பாக்க வராரா இல்ல என்ன பாக்க வராரா? என்றார்.

“உங்களைத்தான்” என தீர்க்கமாய் சொன்னார் சங்குபுஷ்பம். “வர சொல்லுவோமா” என்றார்.

“வெயிட் பண்ணு. பாத்ரூம் போயிட்டு வரேன். கொஞ்சம் சுடு தண்ணி குடிக்க கொண்டு வா” என சொல்லி எழுந்து போனார் நேசப்பா.

சங்கு புஷ்பம் நேசப்பாவின் எண்ண ஓட்டத்தை குறுக்கிட விரும்பாமல் அமைதி காத்தார்.

கால் மணி நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மெதுவாக தண்ணீரை குடித்து முடித்தார் நேசப்பா.

பிறகு அவரின் அனுமானத்தை மனைவியிடம் பகிர்ந்துகொண்டார்.

“நானும் அதுவாத்தான் இருக்குமோன்னு நெனச்சேன். சரி வர சொல்லுங்க. பார்ப்போம்” என கலக்கமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

“செல்லகுமார், நேசமணி பேசுறேன். அவரை வரசொல்லுப்பா” என்றார்.

“சரிங்க சார்” என்றார் செல்லகுமார்.

“சார், நீங்க போலாம் சார். நேரா போய் லெஃப்ட் சைட் போனீங்கன்னா லாஸ்ட் பிளாக்” என்றார் ரத்தினத்திடம்.

முக்கால் மணி நேரம் காத்திருந்து சலிப்பாய் எழுந்தார் ரத்தினம்.

“பிஸியான ஆளாப்பா அவரு” என கேட்டார் செல்லகுமாரிடம்.

“சார் சொஸைட்டி ரூல் படி நா அதெல்லாம் சொல்ல முடியாது. சாரி சார்” என முடித்தார் செல்லகுமார்.

சங்கு புஷ்பத்திற்கு பதட்டமாய் இருந்தது. இளைய மகள் லக்ஷ்மிக்கு போனை போட்டார்.

சுருக்கமாக விஷயத்தை சொல்லி முடித்தார்.

“நோ சான்ஸ். இதெல்லாம் நான்சென்ஸா இருக்கு” என்றார் லக்ஷ்மி.

முழு பெயர் லோகலக்ஷ்மி. பாண்டிசேரியில் கல்லூரி பேராசிரியராக வேலை செய்பவர்.

“ஆமாம், நாங்களும் அப்படித் தான் நெனைக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரத்துல வருவார். பேசிட்டு அப்புறம் போன் பண்றேன்” என்றார் சங்கு புஷ்பம்.

“சரிம்மா. நா ரெண்டு மணி வரை ப்ரீ தான். ஏதாவது விஷயம்னா கூப்பிடு” என்றார் லக்ஷ்மி.

வேர்ல்டு பேங்குக்கு சொல்லிட்டியா என்றார் நேசப்பா புன்னகையோடு.

Tamil novel – OTP – Part 7/20

Checking the newspaper for local political news to get some clue about the guest waiting at the security gate

காலை பத்து மணி வாக்கில் லேண்ட் லைன் அடித்தது. மெயின் கேட் செல்லகுமார்.

“சொல்லுங்க செல்லகுமார்” என்றார் சங்கு புஷ்பம்.

“மேடம், சார பாக்கணும்னு எக்ஸ் எம்எல்ஏ ஆபீசுலேர்ந்து ஒரு கட்சிக்காரர் வந்திருக்கார். அவர் பேரு ரத்தினம்னு சொன்னார். அனுப்பவா மேடம்” என்றார்.

சங்கு புஷ்பத்திற்க்கு ரத்தினம் என்ற பெயர் புதுசாய் இருந்தது. சற்று யோசித்தவர் “அவர் என்னை பாக்கணும்னு சொன்னாரா இல்ல சாரையா?” என்றார்.

“சார் தான் மேடம். நேசமணி மதிவாணன்னு முழு பேர் சொன்னார். ஆனா போன் நம்பர் தெரியாதுனு சொல்றார். ஆளும் பர்ஸ்ட் டைம் பாக்குற மாதிரி இருக்கு” என்றார் செல்லகுமார்.

“சரிப்பா. ஒரு பத்து நிமிஷம் அவரை விசிட்டர் ஹால்ல உக்கார வை. பேன் போட்டு விடுங்க. கொஞ்சம் தண்ணி குடுத்து பாத்துக்குங்க. நா அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன். என்ன கரை வேட்டி அவரு?” என்றார் சங்கு புஷ்பம்.

செல்லகுமார் சொன்ன கட்சி பேரை குறித்துக்கொண்டார்.

“ஏங்க, கொஞ்சம் இங்க வாங்க” என நேசப்பாவை அழைத்தார்.

கிச்சனில் இருந்து வந்த நேசப்பா பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தார்.

“உங்களுக்கு இந்த கட்சிலேர்ந்து ரத்தினம்னு யாராவது தெரியுமாங்க? உங்கள பாக்கணும்னு வந்திருக்கார். விசிட்டர் ஹால்ல வெயிட் பண்ண சொல்லி செல்லகுமார்கிட்ட சொல்லி இருக்கேன்” என்றார் சங்கு புஷ்பம்.

“இல்லையேம்மா, ஆளு பேரு புதுசா இருக்கு. நமக்கும் கட்சிக்காரங்க யாரையும் தெரியாது. யாரா இருக்கும்” என யோசித்தார்.

லேண்ட் லைன் அடித்தது. “மேடம், அவர் போன்ல யார்கிட்டயோ பேசிகிட்டு இருக்கார். எலெக்சன் விஷயம். நேசமணின்னு பேரு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கார்” என்றார் செல்லகுமார்.

“சரிப்பா, நா சாருகிட்ட சொல்லிடறேன். நீ வெயிட் பண்ணு” என சொல்லி போனை வைத்தார் சங்கு புஷ்பம்.

“எலெக்சன் விஷயம், நேசமணின்னு பேரு அப்படின்னு அவர் போன்ல யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருக்காராம். செல்லகுமார் சொல்றார்” என்றார் சங்கு புஷ்பம்.

“நம்ம செல்லம் எப்பவும் ஷார்ப்பு” என சிரித்தார் நேசப்பா.

“சரிங்க என்ன விஷயமா இருக்கும்? அதுவும் எலெக்க்ஷனை பத்தி” என குழம்பினார் சங்கு புஷ்பம். “வர சொல்லுவோமா” என கேட்டார் நேசப்பாவிடம்.

“கொஞ்ச நேரம் இரு” என சொல்லி கண் மூடி யோசித்தார்.

சில நிமிடத்திற்கு பிறகு “அங்க ஷெல்ப்புல நம்ம லோக்கல் நியூஸ் பேப்பர் இருக்கு பாரு. லாஸ்ட் நாலு நாள் பேப்பர் எடுத்துட்டு வா” என்றார்.

பத்து நிமிடம் ஆனது. “இங்க பாருங்க” என ஒரு செய்தியை காண்பித்தார் சங்கு புஷ்பம்.

Tamil novel – OTP – Part 6/20

Welcoming the guest and hosting him in the living hall, and having heartfelt exchange of life experience

மறு நாள் காலை டோர் பெல் அடித்தது. அதே தெருவில் மளிகை கடை வைத்திருக்கும் வள்ளியப்பன் வந்திருந்தார்.

“உள்ள வாங்க சார்” என வரவேற்றார் நேசமணி.

“வாங்க சார். எப்படி இருக்கீங்க” என்றபடியே உள்ளேயிருந்து வந்தார் சங்கு புஷ்பம்.

“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” என நலம் விசாரித்தார்.

அவரோடு நீண்டகால நட்பு இவர்களுக்கு. இன்றளவும் அவர் கடையில் தான் பொருட்களை வாங்குவார்கள்.

என்ன டிஸ்கவுண்ட் போட்டாலும் ஆன்லைனில் வாங்க மாட்டார்கள். ஒண்ணாம் தேதியானால் லிஸ்ட் போட்டு போனில் அனுப்பி விடுவார்கள். கடை பையன் கொண்டு வந்து கொடுத்து விடுவான்.

ஒரு ஸ்திரமான வாடிக்கையாளராக அவரின் தொழிலுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள். அதனால் இவர்கள் மீது சற்று அதிக மரியாதையும் பிரியமுமாய் இருப்பார் வள்ளியப்பன்.

“சாரி சார். காலங்காத்தால வந்துட்டேன்” என்றார்.

“இந்தாங்க பஞ்சாமிர்தம். பையன் கல்யாணத்துக்காக திருச்செந்தூர் முருகருக்கு வேண்டிக்கிட்டேன். போயிட்டு நேத்து நைட் தான் வந்தோம்” என்றபடியே ஒரு பாட்டிலை நீட்டினார்.

சங்கு புஷ்பம் நன்றி சொல்லி பய பக்தியாக பெற்றுக் கொண்டார்.

“நீ பேசிகிட்டு இரு அபர். நா போய் இவருக்கு என் ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.

“சார் நெக்ஸ்ட் டைம் சின்னதா ஒரு கப்புல குடுங்க சார் போதும். ரெண்டு பேருக்கும் சுகர்” என்று சிரித்தார் சங்கு புஷ்பம்.

“நீங்க சாப்பிடுங்க மேடம். அப்புறம் வர்ற கெஸ்ட்டுக்கு எல்லாம் குடுங்க” என்றார் வள்ளியப்பன்.

“வீணாக்காமல் கெஸ்ட்டுக்கு தாராளமா தரலாம் சார். ஆனா நூறு குட்டி கப்பும் ஸ்பூனும் கழுவணும் இந்த பாட்டிலை முடிக்க” என நிஜத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“அது என்னவோ உண்மை தான்” என ஒப்புக் கொண்டார் வள்ளியப்பன்.

“சார், இன்னைக்கு லிஸ்ட் அனுப்பலாம்னு இருக்கோம். ப்ரீயா எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் போடாதீங்க. ரெண்டு பார் டிஷ் வாஷ் சோப்பு போடுங்க” என ரெக்வஸ்ட்டை சொன்னார் சங்கு புஷ்பம்.

கொல்லென்று அடக்க முடியாமல் கண்ணில் நீர் வர சிரித்தார் வள்ளியப்பன்.

“இன்னைக்கு என் நாள் நல்லபடியா ஆரம்பமாகுது. இதை நெனச்சு சிரிச்சே இன்னைக்கு பொழுது போகும்” என்றார் வள்ளியப்பன்.

காபியோடு நேசமணி வந்து சிரிப்பில் கலந்து கொண்டார். அரை மணி நேரம் கா கலப்பாக போனது.

“சரிங்க சார். பார்க்கலாம்” என சொல்லி கிளம்பினார்.

ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு பஞ்சாமிர்த பாட்டிலை சிஸ்டம் டேபிள் மேல் வைத்தார்கள்.

அடுத்து வரும் கெஸ்ட்டுக்கு மறக்காமல் கொடுக்க. அப்போது அவர்களுக்குத் தெரியாது அந்த கெஸ்டிடம் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று.

Tamil novel – OTP – Part 5/20

A warm conversation between wo ladies

இரண்டு மாதம் ஆனது. மொத்தம் இருபத்து மூன்று டெலிவரி அன்றோடு சேர்த்து.

நெறய ஓசிடி கேள்வி பட்டிருக்கிறோம். இந்த ஆன்லைன் ஆர்டரிங் ஓசிடி இவர்களை பாடாய் படுத்தியது.

இது த்ரீஓ சிடி. அது அவர்களின் பர்ஸுக்கும் நல்லதில்லை, அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் நல்லதில்லை என நினைத்துக்கொண்டார்கள்.

இரவு எட்டு மணிக்கு வந்தாள் அமராவதி.

“உள்ள வாம்மா” என்றார் நேசப்பா.

“அபர், நீ பேசிக்கிட்டு இரு. நான் கிட்சனுக்கு போறேன்” என கிளம்பினார் நேசப்பா.

“உக்காரு அமராவதி, காபி சாப்பிடுறியா இல்ல க்ரீன் டீ வேணுமா?” என்றார் சங்கு புஷ்பம்.

“க்ரீன் டீ ஆன்ட்டி” என்றாள். 

டேபிள் பேனை போட்டுவிட்டு சேரை பக்கத்தில் இழுத்து போட்டுக்கொண்டு டைரியை எடுத்தார் சங்கு புஷ்பம்.

“இன்னியோட இருபத்து மூன்று டெலிவரி வாங்கி இருக்கோம். அதுல பதினாலு மதியம் ரெண்டுலேர்ந்து நாலுக்குள்ள.

நாங்க டேப்லெட் போட்டு தூங்குற நேரம். அப்புறம் ஒவ்வொரு டெலிவரிக்கும் மூணு போன் கால் அட்டென்ட் பண்ணணும்.

ஸோ, கலெக்க்ஷன் சார்ஜ் இருபத்தி அஞ்சு ரூபா ஒரு டெலிவரிக்கு. மொத்தம் ஐநூத்தி எழுபத்தி அஞ்சு ரூபா ஆச்சு. என் நம்பர்க்கு அனுப்பிடுமா” என்றார் சங்கு புஷ்பம்.

“சாரி ஆன்ட்டி. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்றாள் அமராவதி.

எமெர்ஜென்சிக்கு வாங்கி வெக்கலாம். ஆனா மைன்ட்லெஸ் ஷாப்பிங்க்கு ஹெல்ப் பண்ண முடியதுமா என நினைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

பிறகு கிச்சன் பக்கம் திரும்பி “நேஸ், அமருக்கு ஒரு க்ரீன் டீ குடுங்க” என்றார் அபராஜிதா.

Tamil novel – OTP – Part 4/20

Jovial dinner time conversation between a senior couple

பொழுது போக இரவு எட்டு மணிக்கு அமராவதி வந்து பார்சலை பெற்றுக்கொண்டாள். அடுத்த இரண்டு வாரத்தில் ஐந்து பார்சல் வந்தது.

“அபர், நீ உள்ள போய் படு. நா இன்னைக்கு தூங்கல” என்றார் நேசப்பா.

இன்னைக்கு டெலிவரி தேதி. மெயின் கேட்டுக்கு போன் போட்டார்.

“செல்லம், இன்னைக்கு பார்சல் வரும். போன் பண்ணாத. உள்ள அனுப்பிடு” என்றார்.

“சார், நீங்க ஒருத்தர் தான் சார் என்ன இந்த வயசுலயும் செல்லம்னு கூப்பிடுறீங்க” என சிரித்தார் செல்ல குமார்.

அடுத்து “பக்தா, இன்னைக்கு பார்சல் வரும். போன் பண்ணாத. மேடம் தூங்குறாங்க.உள்ள அனுப்பிடு” என்றார் நேசப்பா.

சரி சார் என்றார் ஜி பிளாக் செக்யூரிட்டி பக்தவத்சலம்.

ஐந்து மணி ஆனது. சங்கு புஷ்பம் எழுந்து காபி போட்டு வைத்து முகம் கழுவ போனார். காய்ந்த துணி எடுக்க நேசப்பா போக பெல் அடித்தது.

“நா போறேன் இரு” என்றார் நேசப்பா.

“இன்னைக்கு என்ன வந்திருக்கு?” என்றார் சங்கு புஷ்பம். “சேப்டி ஸ்டிக்!” என்றார் நேசப்பா.

“கான்ட்ராக்டர் நல்ல மனுஷன், சாப்ட் ஆன ஆளா தெரியுறார். அந்த அம்மா ஏன் ஸ்டிக் வாங்குதுனு தெரியல?” என்றார் நேசப்பா.

“டிபென்சா இல்ல அபென்சா” என சிரித்தார் சங்கு புஷ்பம்.

எட்டு மணிக்கு அமராவதி வந்தாள். “என்னம்மா சேப்டி ஸ்டிக்” என்றார் சங்கு புஷ்பம்.

“டாக் சேப்டிகாக ஆன்ட்டி. வாக்கிங் போகும் போது தொல்லையா இருக்கு” என சலித்தாள்.

“நீ இண்டோர் தான போவ. ட்ரெட் மில்ல”

“ஆமா ஆன்ட்டி. நேத்து மோட்டார் பெல்ட் போய்டுச்சு. அதான் வெளில நடக்கலாம்னு” என்று சொல்லி கிளம்பினாள்”. சரிம்மா என்றார் சங்குபுஷ்பம்.

“மோட்டார் பெல்ட் நானூறு இல்ல ஐநூறு. இந்த ஸ்டிக் முன்னூறு” என சிரித்தார் நேசப்பா.

“ஆமா, யாரு இப்போ அவ்ளோ சீக்கிரம் ரிப்பேர் பண்ணி யூஸ் பண்றாங்க” என கேட்டார் சங்குபுஷ்பம்.

அடுத்த நாள் சன் ஸ்கிரீன் வந்தது. அடுத்த நாள் ஸ்லிங் பாக் வந்தது.

இவங்க அமரவாதியா இல்ல ஆர்டர்வாதியா என சிரித்தார் சங்குபுஷ்பம்.

“நாளைக்கு என்னவா இருக்கும்? ஷூ, சன் க்ளாஸ், பிட் பேண்ட்?” லிஸ்ட் போட்டார் நேசப்பா.

பாக்கலாம் என பேசிக்கொண்டே இரவு உணவு சாப்பிட்டார்கள் இருவரும்.

“அம்மா டெலிவரி” குரல் கேட்டது. “இரு நா போறேன்” என்றார் நேசப்பா.

வெரிகோஸ் பேண்டேஜை மாட்டியபடியே “என்ன நேஸ்?” என்றார் சங்கு புஷ்பம்.

“லூப்ரிக்கண்ட்” என சொல்லி திரும்பி கதவை பூட்டி னார் அவர்.

கொல்லென்று சத்தமாக கண்ணில் நீர் வர சிரித்தார் சங்கு புஷ்பம்.

இருவரும் சிரித்து, கண்ணீர் துடைத்து அமைதியாக சிறிது நேரம் ஆனது.

“அது ட்ரெட்மில் மோட்டார் லூப்ரிக்கண்ட், தொள்ளாயிரம்” என நேசப்பா பார்த்து சொல்ல, இருவரும் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

இரவு எட்டு மணிக்கு அமராவதி வந்தாள். “நீ போய் குடு” என்றார் நேசப்பா.

மூச்சை இழுத்து விட்டு சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு கொடுத்தார் சங்கு புஷ்பம்.

“ரிப்பேர் ஆன மஷினிக்கு இது எதுக்குமா?” என்றார்.

“இல்ல ஆன்ட்டி, டூ வீக்ஸ் முன்னாடி பிப்டி பெர்ஸன்ட் ஆபர் போட்டான். அதான் கார்த்தி ஆர்டர் பண்ணிட்டார். அதுக்கு அப்புறம் தான் ரிப்பேர் ஆச்சு” என்றாள்.

இரவு சாப்பிட்டுக்கொண்டே நேசப்பா சொன்னார் “முன்னூறு ரூபா பெல்ட். சீக்கிரம் மாத்தி இருந்தா நாலாயிரம் செலவு இல்ல” என்றார்.

“டாக் ஸ்டிக், சன் ஸ்கிரீன், பாக், ஏங்க தெருவுல இறங்கி நடக்க இவ்வளவு செலவா?” என்றார் சங்கு புஷ்பம்.

“வாக்கிங்க விட அந்த எக்ஸ்பிரியன்ஸ் முக்கியம்னு நெனைக்குற ஜெனெரேஷன் இது அபர்மா” என்றார் நேசப்பா.

“நோட் பண்ணுங்க நேஸ் இனிமே” என்றார் சங்கு புஷ்பம்.

Tami novel – OTP – Part 3/20

An aged lady sitting next to the phone

அமராவதி குடி வந்து ஒரு வாரம் ஆனது. வாசலில் உருளியில் பூ வைத்து கொண்டிருந்தார் புஷ்பம்.

வேலைக்கு கிளம்ப வெளியே வந்த அமராவதி புஷ்பத்திடம் ஏதோ சொல்ல வந்தபோது “அடடா, ஒரு புஷ்பமே பூ வைக்கிறதே” என்றபடி வாக்கிங் முடித்து வந்தார் நேசப்பா.

மூவரும் சேர்ந்து சிரிக்க, பிறகு என்ன விஷயம் என்றார் புஷ்பம்.

“ஆன்ட்டி இன்னைக்கு ஒரு டெலிவெரி எனக்கு வரும். கொஞ்சம் வாங்கி வைக்க முடியுமா” என்றாள் அமராவதி.

சரிம்மா என புஷ்பம் சொல்ல நன்றி சொல்லி கிளம்பினாள்.

நேசப்பா பேங்க் வேலை முடித்து வர ஒரு மணிஆனது. கதவை திறந்த கையோடு போய் பெட் ரூமில் ஏசி போட்டு வைத்தார் சங்கு புஷ்பம். மதியம் சாப்பிட்டு முடித்து ஆளுக்கு நாலு மாத்திரை போட்டு இரண்டு மணிக்கு படுத்தார்கள்.

நேசப்பாவிற்கு சிறு வெளிச்சம் இருந்தாலும் தூக்கம் வராது. அடர் நிற திரை போட்டு கதவு அடைத்து படுத்து விடுவார். ஹாலின் கிழக்கு பக்கம் லோ லையிங் சோபா சங்கு புஷ்பத்தின் இடம்.

மூன்று மணிக்கு லேண்ட் லைன் அடித்தது. மெயின் கேட் செக்யூரிட்டி செல்லகுமார்.

“அம்மா, பார்சல் வந்திருக்கு அமராவதி மேடம் வீட்டுக்கு. உங்க வீட்ல குடுக்க சொன்னாங்க. அனுப்பவா?” என்றார்.

சரி என சொல்லி வந்து உட்கார்ந்தார் சங்கு புஷ்பம்.

மெயின் கேட்டில் இருந்து ஜி பிளாக் வர ஐந்து நிமிடம் ஆகும். இதான் சௌத் விங்கில் லாஸ்ட் பிளாக். அரை மணி நேரம் ஆனது.

“என்ன செல்லகுமார், டெலிவரி எதுவும் வரலையே” என கேட்டார் சங்குபுஷ்பம்.

“அம்மா, அவர் மத்த ப்ளாக்ல குடுத்துட்டு வருவார்னு நெனைக்கிறேன்” என்றார் செல்ல குமார்.

சரி கொஞ்சம் படுக்கலாம் என போனார் சங்கு புஷ்பம். லேண்ட் லைன் அடித்தது. பாய்ந்து எடுத்தார் அவர். நேசப்பாவுக்கு கேட்டால் அவரும் எழுந்து விடுவார் என்று.

ஜி பிளாக் செக்யூரிட்டி பக்தவத்சலம். “அம்மா, பார்சல் வந்திருக்கு அமராவதி மேடம் வீட்டுக்கு. உங்க வீட்ல குடுக்க சொன்னாங்க. அனுப்பவா?” என்றார்.

சரி என சொல்லி கதவை திறந்து வைத்து உட்கார்ந்தார் சங்குபுஷ்பம். இரண்டு நிமிடம் கழித்து டெலிவரி வந்தது. பார்சலை வாங்கி வைத்து கதவை பூட்டி வந்து படுத்தார் சங்குபுஷ்பம்.

காலிங் பெல் அடித்தது. புஷ்பத்திற்கு மண்டை சுர்ரென்று ஆனது.

“அம்மா கையெழுத்து வாங்க மறந்துட்டேன்” என நின்றார் அவர். சரியென்று போட்டு கொடுத்து அனுப்பி மணி பார்த்தால் மூணு ஐம்பது.

யாரு புஷ்பம் என வந்தார் நேசப்பா. ஐந்து வரை தூங்குபவர் முன்கூட்டியே எழுந்து விட்டார். டெலிவரிங்க அமராவதிக்கு என்றார் சங்கு புஷ்பம்.

அதன் நீ அமராம சுத்திகிட்டு இருக்கியா என நக்கலடித்தார்.

Tamil novel – OTP – Part 2/20

A senior couple shares lovely bonding, caring for each other

சங்கு புஷ்பம் முப்பது ஆண்டுகள் நர்சாக இருந்து ஓய்வு பெற்றவர். நேசப்பா தபால் துறையில் முப்பத்திமூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர். நாற்பது ஆண்டுகால திருமண வாழ்வில் பெரும்பாலான நாட்கள் வேலை நிமித்தம் வேறு வேறு ஊர்களில் பணியாற்றி ஓய்வுக்கு பிறகு ஒன்றாக வாழ்பவர்கள்.

இரண்டு மகனும் ஒரு மகளும் இருந்தாலும் தனி வீட்டில் தங்கள் போக்கில், தங்கள் வயதுக்கேற்ற வாழ்க்கை முறையை சுதந்திரமாக ரசிக்கிறவர்கள்.

An aged pair goes for a morning walk on the beach, spending quality time together

பண்டிகை நாட்களிலும் வார இறுதிகளிலும் வரும் நேசப்பாவை சில மணி துளிகள் இருவரும் மனம் விட்டு பேச இயலாத பெரும் நெருக்கடியான கால கட்டம். கூட்டு குடும்பமும், புஷ்பத்தின் ஷிப்ட் நேரங்களும் அவர்களின் சந்திப்பு பொழுதுகளை சுருக்கியே வைத்திருந்தது.

நேசப்பாவின் கடிதங்களை கூட திருமணமான புதிதில் தனியாக பெற இயலாத சூழல். நேசப்பா அவருடைய பிரியங்களை கொட்டி மருத்துவமனை முகவரிக்கு தனியாக அனுப்பும் கடிதங்கள் தான் அவர்களை பல ஆண்டுகள் பிணைத்திருந்தது.

ஆக ஓய்வுக்கு பிறகு அவர்களின் கூட்டை அவர்கள் எப்போதோ தீர்மானித்தார்கள். ஒரு கூரையின் கீழ் ஒரு முழு பொழுது வாழாதவர்கள், பணி நிறைவு வரை தனி தனியாக ஓடியவர்கள், எல்லை கோடு கடந்து கீழே விழும்போது தங்களை தாங்களே தாங்கிக்கொள்ள முடிவெடுத்தார்கள்.

கணக்கில்லா நாட்களையும் முடிவில்லா பொழுதுகளையும் பெரும் பாரம் சுமக்க இழந்தவர்கள், மீதமிருக்கும் கணங்களை தங்களுக்காக மட்டும் பொத்தி வைக்கிறார்கள். பெற்றதையும் சுற்றத்தையும் மரத்தும் மறந்தும் தள்ளி நிற்கிறார்கள்.

After retirement, the couple spends more time together, walking in the park, having casual conversation

பணிக்காலத்தில் நோயை வென்ற வாழக்கையையும், தூரத்து உறவுகளின் தகவலையே மருந்தாக மூன்று தசாப்தங்களாக சக மனிதர்களுக்கு பரிசளித்தவர்கள். நேசமும்,பாசமும், மனிதமும் ரத்த உறவில் மட்டும் காணாமல் எண்ணில்லா தருணங்களை சமூகத்தில் சுவைத்தவர்கள்.

இன்று நாற்பது ஏக்கரில் எண்ணூறு குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பில் ஐந்து ஆண்டுகளாக குடியிருக்கிறார்கள். அனுசரணையும் ஆறுதலும் இடம், பொருள், மனிதர் உணர்ந்து அளிக்க தெரிந்தவர்கள். சுரண்டுபவரும் ஏய்ப்பவரும் யாராக இருந்தாலும் துறக்க துணிந்தவர்கள்.

A group of retired friends spending quality time

Tamil novel – OTP- Part 1/20

An elderly woman warmly welcomes her young new neighbor couple

டோர் பெல் அடித்தது. “சங்கு புஷ்பம் போய் பார்” என்றார் நேசமணி. வெரிகோஸ் கால் பட்டையை அட்ஜஸ்ட் செய்தபடியே எழுந்து போனார் சங்கு புஷ்பம்.

“ஆன்ட்டி நாங்க பக்கத்து பிளாட்டுக்கு புதுசா வந்திருக்கிறோம். ஹலோ சொல்லிட்டு போலாம்னு வந்தோம். என் பேரு அமராவதி. இவர் பேரு கார்த்தி” என்றாள் அந்தப் பெண்.

உள்ள வாங்கம்மா என்றார் சங்கு புஷ்பம்.

வடை போட்டு முடித்து கை துடைத்தபடியே வந்தார் நேசமணி. முப்பதுகளில் இருக்கும் இருவரும் சற்று யோசித்தபடியே உட்கார்ந்தார்கள்.

நாங்க ஜி 501 பிளாட்டுக்கு காலைல தான் வந்தோம். சொந்த ஊர் நெல்லூர் எங்களுக்கு. இங்க ரெண்டு வருஷம் ஹைவேஸ் ரோடு கான்ட்ராக்ட் இவருக்கு. நானும் ஐடி பார்க்ல ஒர்க் பண்றேன். அமராவதி பேசிக்கொண்டிருக்க கார்த்தி ஏதோ யோசனையாய் இருந்தார்.

“காபியா, டீயா? என்ன சாப்பிடுறீங்க?” என்றார் நேசமணி. “எதுவா இருந்தாலும் ஓகே சார்” என்றார்கள்.

“அபராஜிதா, இவங்களுக்கு உன் ஸ்பெஷல் பில்டர் காபி போட்டு கொடு என்றார் நேசமணி. சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்து ஹாலை நோட்டமிட்டார் கார்த்தி. தீர்க்கமாய் நேசமணியை பார்த்தபடியே உள்ளே போனார் சங்கு புஷ்பம்.

இஸ்திரி, எலெக்ட்ரிசியன், பணிப்பெண் என எல்லா போன் நம்பர்களையும் பெற்றுக்கொண்டு காபி குடித்து முடித்து “மறக்காம சொசைட்டி குரூப்ல ஆட் பண்ணிடுங்க ஆன்ட்டி” என்று சொல்லி இருவரும் கிளம்பினார்கள்.

வழி அனுப்பி கதவை சாற்றி திரும்பும்போது டக்கென்று “யாரு ஆண்ட்டி அபராஜிதா?” என்றார் கார்த்தி.

“நான் தான்பா அது. என் பேரு சங்கு புஷ்பம். அங்கிள் நல்ல மூட்ல கூப்பிடறது அபராஜிதா” என லேசாக சிரித்தபடியே சொல்ல, அது அவளோட ஹிந்தி பேரு என சிரித்தார் நேசமணி.

ஒரு நிமிடம் தன் கணவரின் மேல் அமராவதியின் பார்வை தெறித்தது. கார்த்தி அதை தவற விட நேசப்பாவும், சங்கு புஷ்பமும் நமுட்டு சிரிப்போடு உள்ளே வந்தார்கள்.