சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 4/4

சில மாதங்கள் ஆனது. ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பிய சிவா கேட்டான் “என்னம்மா? இன்னைக்கு பச்சை கலர் கேசரி செஞ்சுருக்க, என்ன ஸ்பெஷல்?”

“அம்மா பாஸாயிட்டாங்கன்னா! அதான் ஜாலி மூடுல இருக்காங்க” என சொன்னது சின்ன வாண்டு தேவசேனா.

“ஆமாடா, மத்தியானம் தான் ரிசல்ட் வந்தது. அம்மா டிகிரி வாங்கிட்டேன்!!” என உற்சாகமாக சொன்னாள் தாரா. தபால் வழியில் யோகா இளங்கலை முடித்து இன்று பட்டம் வாங்கியிருக்கிறாள்.

சிவா ஆறாம் வகுப்பு மாணவன். தேவசேனா ஒன்றாம் வகுப்பு. தாராவின் கணவர் மேகநாதன் ஆட்டோ ஓட்டுநர். பகுதி நேரமாக சுவர் பெயிண்டிங் வேலையும் செய்வார்.

“மல்லிகை மலர் பறிக்க, மான் போல துள்ளி வா!

அல்லி மலர் பறிக்க, அன்னநடை போட்டு வா!

டிகிரி நீயும் வாங்க, டைகராக படித்து வா!!  என சிவா குஷியாக பாட ஆரம்பித்தான்.

“அப்போ, அம்மா டைகரா?” என தேவசேனா புலி போல காலை மடக்கி நடந்து வந்து பயமுறுத்த, மூவரும் சேர்ந்து கொல்லென சிரித்தார்கள். சற்று நேரத்தில் மேகநாதனும் வர வீடு களை கட்டியது.

 நால்வரும் கிளம்பி கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்துவிட்டு கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.

பால்காரர் குணவேந்தன் அந்த பக்கம் வந்தார்.

“என்ன மேகா, தாரா பாஸாயிடுச்சுனு எங்க வீட்டம்மா சொல்லுச்சு! நீ எப்போ படிக்க போற?” என்றார்.

மேகநாதன் தலையை திருப்பி கொள்ள, தாராவுக்கு சங்கடமாக இருந்தது.

“குணா மாமா, அத்தை குடிக்குறது இல்லை, நீங்க எப்போ குடியை விட போறீங்க?” என ஒரே போடாக கேட்டான் சிவா.

“அப்பா, அவர் வீட்டு செவத்துல போய் குடி குடியை கெடுக்கும்னு எழுதிட்டு வாப்பா” என்றது சேனா.

குணவேந்தன் குடிவேந்தனாக இருப்பதை குழந்தைகள் சொல்ல, மெதுவாக நகர்ந்தார் அவர்.

“அம்மா, நாங்க போய் யானையை பாத்துட்டு வரோம்” என சொல்லி குழந்தைகள் எழுந்து சென்றார்கள்.

“இன்னைக்கு நா டிகிரி பாஸ் பண்ணிட்டேன்னு கலாவதி டீச்சர் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. வெண்மணி அக்கா கிட்ட காசு குடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பி கேக் வாங்கிட்டு வர சொல்லி எல்லா டீச்சர்ஸுக்கும் என்னை குடுக்க சொன்னாங்க. நானே வாங்கியிருக்கணும், எனக்கு தோணலைங்க” என்றாள் தாரா.

“கரெக்ட்டு தான், இன்னொரு நாள் நீ எல்லாருக்கும் நம்ம சார்பா ஸ்வீட் குடுத்துடு” என்றார் மேகா.

“ஷூ கம்பெனிக்காரங்க சில டாக்குமெண்ட் கேட்டாங்கன்னு டீச்சர் சொன்னாங்க. நாளைக்கு முடிவு பண்ணி சொல்றேன்னு சொல்லி இருக்கேன். ஏதோ ஒரு பயம் மனசுல இருக்கு, ஆனா என்னன்னு சொல்ல தெரியல” என்றாள் தாரா.

“உன்னால முடியும் தாரா, இந்த வேலையில சேரும்போது எவ்வளவு யோசிச்ச? எப்படி இவ்ளோ சின்ன பசங்கள பாத்துகிறதுன்னு? ஆனா இந்த பத்து வருஷத்துல நீ எவ்ளோ இம்ப்ரூவ் ஆகி இருக்கே! இன்னைக்கு அந்த பயம் இருந்த இடம் தெரியாம போயிடுச்சி. அது போல தான் இப்பவும். ஒரு விஷயத்தை புதுசா ஆரம்பிக்கும் போது யாருமே அதுல எக்ஸ்பர்ட் கிடையாது. அதனால முடியும்னு நெனச்சி துணிஞ்சு இறங்கு” என ஊக்கம் கொடுத்தார் மேகா.

“சரிங்க, யோசிக்கிறேன்” என தாரா சொல்ல “வா கெளம்பலாம்” என்றார் மேகா.

அவர் ஆட்டோவை ஓட்ட, மற்ற மூவரும் பின் சீட்டில் உட்கார்ந்தார்கள்.

கோவிலை ஒட்டிய மெயின் ரோட்டில் கல்யாண ஊர்வலம் மெதுவாக போய் கொண்டிருந்தது.

ஆட்டோ டிராபிக்கில் நிற்க, “அம்மா, போன் குடு, எனக்கு போரடிக்குது” என கேட்டது சேனா.

“ஏன், உன்னால கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா?” என திட்டினான் சிவா.

சேனா கோபித்துக் கொண்டு மூஞ்சை திருப்பிக் கொண்டது.

தாரா என்ன செய்வது என யோசிக்கும் போது சேனா கையில் இருந்த வாட்டர் பாட்டில் ஒரு ஐடியாவை கொடுத்தது.

“சேனா, இந்த பாட்டிலை குடு, ஒரு கேம் சொல்லி தரேன்” என வாங்கி அதை அவர்கள் இருவரின் தொடைகளுக்கே நடுவே நிற்க வைத்தாள்.

playtime in Auto

“இதை கார் கியரா நெனச்சுக்கோ. அப்பா வேண்டிய நிறுத்தினா, நியூட்ரல்ல வை. மெதுவா ஸ்டார்ட் பண்ணா இடது பக்கம் போய், மேல் பக்கம் சாய்ச்சு வை. இன்னும் கொஞ்சம் ஸ்பீட் எடுத்தா செகண்ட் கியருக்கு அப்படியே பின்னாடி வா. ஒரே சீரா வண்டி ஓடுச்சுன்னா, கொஞ்சம் வலது பக்கம் வந்து முன்னாடி போ” என விளக்கினாள்.

சேனாவும் சிவாவும்  பயங்கர குஷியாகிவிட்டார்கள். அந்த டிராபிக் ஜாம் அவர்கள் பல முறை கியர் மாற்றி விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தது.

“அப்பா, என்கிட்ட சொல்லாமா ஏம்பா ஸ்பீடு எடுத்த? நான் இன்னும் பர்ஸ்ட் கியர்லயே இருக்கேன்” என அவரை செல்லமாக திட்டியபடியே அவசரமாக பாட்டிலை நகர்த்தினார்கள்.

மேகநாதனும் அவர்கள் விளையாட ஏதுவாக போக்கு காட்டி ஓட்டினார். அரை மணி நேரம் ஆனது வீடு வந்து சேர்வதற்க்கு.

“செம சேனா, அருமையா கார் ஓட்டி எங்களை எல்லாம் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டே!” என பாராட்டினான் சிவா.

“அந்த பார்மசி சந்துல நான் சரியா கியர் போடலண்ணா. நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்கிறேன்” என தைரியமாக சொன்னது.

“பாத்தியா தாரா, இந்த சின்ன பொண்ணுக்கு இருக்குற நம்பிக்கையை? விளையாட்டா ஆரம்பிச்ச விஷயம், இப்போ அவளை ஒரு தேர்ந்த ட்ரைவரா உணர வெச்சிருக்கு. அவ கண்ணுல பயமோ, புது விஷயத்தை பழகுறோம் என்ற என்னமோ துளியும் இல்லை. தெரியலேன்னா வெளிப்படையா அத சொல்லி கத்துக்குறா. தெரியலேன்னு கூச்சப்படல” என மெதுவாக சொன்னார் மேகநாதன்.

தாராவுக்கு பொட்டில் அடித்தாற் போல தெளிவு ஏற்பட்டது.

“தேங்க்ஸுங்க, எனக்கு இப்போ புரிஞ்சிடிச்சு, நா ஹேண்டில் பண்ணிக்குறேன்” என சிரித்தாள் தாரா.

ஆறு மாதம் ஆனது. ஷூ கம்பெனி ப்ராஜெக்ட்டுக்காக, பயிற்சி வகுப்புகளை நேர்த்தியாக நடத்தி கொண்டிருந்தாள் தாரா.

மேகநாதன் இரண்டாவது வண்டி வாங்கி வீட்டின் முன் நிறுத்தினார்.

A new vehicle celebration

“ஹை, நம்ம வீட்டுக்கு குட்டி யானை வந்துடுச்சி!” என சிவா சந்தோஷமாக சொல்ல, “நா இதுக்கு பேரு வெச்சுட்டேன்!” என சொன்னது சேனா.

“என்ன பேருடி?” என ஆர்வமாக கேட்டான் சிவா.

“ரங்கு” என சொல்லி சிரித்தது சேனா. 

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 3/4

Family time

கதை நேரம் முடிந்து குழந்தைகள் வராண்டாவிற்கு செல்ல, ஊர் தலைவரும் கலாவதி டீச்சரும் வந்தார்கள்.

“லட்டு எடுத்துக்கம்மா, பசங்களுக்கும் குடுங்க” என பாக்ஸை நீட்டியவர் “நீ செஞ்சது பெரிய உதவிம்மா, நீ இல்லேன்னா நாங்க அடிக்கடி டவுனுக்கு போய் அலைய வேண்டியதா இருந்திருக்கும்” என சந்தோஷமாக நன்றி சொன்னார்.

கொஞ்ச நேரம் பேசி முடித்து விட்டு அவர் கிளம்ப, கலாவதி டீச்சர் மட்டும் இருந்தார்.

“தாரா, உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார். அவர் சொன்னதின் சுருக்கம் இதுதான்.

பொன்னி நர்ஸ் மற்றும் தலைவர் மூலமாக, தாரா பற்றி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு தெரிய வந்திருக்கிறது.

அவர் தாராவை பகுதி நேரமாக அந்த ஊர் பெண்களுக்கு யோகா சொல்லி தர நியமிக்க முடிவு செய்தார்.

அருகாமையில் இருந்த ஒரு ஷூ கம்பெனியின் CSR டீமிடம் பேசி, ஒரு குறிப்பிட்ட தொகையை தாராவுக்கு ஊதியமாக கொடுக்க ஏற்பாடும் ஆகி இருக்கிறது.

தாராவுக்கு இந்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும், டிப்ளோமா மட்டும் படித்த தான் இதை பெறுப்பேற்று செய்ய முடியுமா என சந்தேகமாக இருந்தது.

மேலும் மாலை நேரத்தில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இந்த வேலையில் ஈடுபட்டால் எப்படி வீட்டை கவனிப்பது எனவும் குழப்பமாக இருந்தது.

“டிப்ளமோ மட்டும் தான் கைல இருக்கு டீச்சர். இன்னும் டிகிரி முடிக்கல. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு, யோசிச்சு சொல்றேன் டீச்சர், ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் தாரா.

“ஷூ கம்பெனில இந்த ப்ரோக்ராம் அப்ரூவ் ஆக கொஞ்ச நாள் ஆகும், கவலைப்படாதே ” என சொல்லி கிளம்பி போனார் கலாவதி டீச்சர்.

அன்று இரவு உணவு நேரம். “இன்னைக்கு என்ன கதை சொன்னம்மா பசங்களுக்கு?” என கேட்டது சேனா.

“சூப்பரான யானை கதை. சீக்கிரம் சாப்பிட்டு வாங்க, சொல்றேன்” என்றாள் தாரா.

சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்து வரிசையாக பாய் விரித்து தாரா படுக்க, இருவரும் வந்து ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டார்கள். மூடிய அவர்கள் கண்களுக்குள் காடு விரிய ஆரம்பித்தது.

கதை கேட்டபடியே மேகநாதன் கிச்சனை சுத்தம் செய்து முடித்தார். பிள்ளைகள் இருவரும் தூங்கிவிட “இங்க வாங்க ஒரு விஷயம் பேசணும்” என அழைத்தாள் தாரா.

டீச்சர் சொன்ன விஷயத்தை சொல்லி தன் குழப்பத்தை விளக்கினாள். பொறுமையாக கேட்ட மேகநாதன் “தாரா, ரங்குவ நெனச்சி பாரு, உன் கேள்விக்கு பதில் கிடைக்கும். இந்த வாய்ப்பு உனக்கு கெடச்சா, நாம ரெண்டாவது வண்டிய கடனில்லாம சீக்கிரம் வாங்கிடலாம்” என சொன்னார்.

அன்று இரவு தூக்கத்தில் பலவகையான பொறுப்புகள் வெவ்வேறு உருவங்களில் அவளை சுற்றி வருவது போல மங்கலாக ஒரு கனவு வந்தது.

அடுத்த வந்த நாட்கள் சாதாரணமாக இருந்தாலும் தாராவின் மண்டைக்குள் பல கேள்விகளை எழுப்பி கொண்டே இருந்தது.

ஒரு நாள் போல, இருபது சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்வது அசாதாரணமான வேலை. அவர்களுக்கு அமைதியான சூழலை அமைத்து கொடுப்பதே பெரும் பொறுப்பு.

ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, பேசி, உணவு கொடுத்து தூங்க வைப்பது என அடிப்படை பராமரிப்பு பணிகள் ஏராளம்.

கூடவே அவர்களின் கற்றல் தேவைகளையும் பூர்த்தி செய்து, அந்த நாளின் முடிவில் அவர்கள் பெற்றோரிடம் நல்ல படியாக ஒப்படைப்பது வரை மறைமுகமான ஒரு அழுத்தம் அவள் மீது இருக்கிறது.

மறுபுறம் வீடு, குழந்தைகள், குடும்பத்தின் பொருளாதார சூழல் என அடுக்கடுக்காய் பல விஷயங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது.

அந்த வாரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம்  கலாவதி டீச்சரிடம் போய் பேசினாள். அவருடைய அனுபங்களை கேட்கும் போது, தான் மட்டும் இந்த சூழலில் இல்லை என்பது தாராவுக்கு புரிந்தது.

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 2/4

Anganwaadi claaroom

ஒரு காட்டுல, ஒரு குட்டி யானை இருந்தது. அதோட பெரு ரங்கு.

அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் ரங்கு ரொம்ப செல்லம்.

ரங்கு கேட்ட எல்லாம் அதுக்கு கிடைக்கும். நல்ல நல்ல பழங்கள், கரும்பு, கிழங்கு வகைகள்னு அவங்க அப்பா அதுக்கு தேடி தேடி கொண்டு வந்து கொடுப்பாரு.

அவங்க அம்மா ரங்குவோட நல்லா வெளையாடுவாங்க. ரெண்டு பேரும் ஆத்துக்கு போய் தண்ணில ஆட்டம் போடுவாங்க. அப்புறம் அந்த ஆத்தங்கரைல படுத்து கதை பேசி பொழுது போக்குவாங்க.

ஒரு நாள் ரங்கு அவங்க அப்பா அம்மாவோட, காட்டுக்குள்ள ஒரு ட்ரிப் போச்சு.

மத்த அனிமல்ஸ மீட் பண்ணி பேசிகிட்டு இருந்தது. அப்போ அங்க சிங்க ராஜா வந்ததும் எல்லாரும் எழுந்து நின்னு அவருக்கு வணக்கம் சொன்னாங்க.

சிங்க ராஜாவும் தலையை ஆட்டிட்டு அவங்களை கடந்து போய்ட்டாரு. ரங்கு அவங்க அம்மாகிட்ட கேட்டுது “ஏம்மா இவரு மட்டும் ராஜாவா இருக்காரு?”

பார்ட்டி மோடில் இருந்த ரங்குவின் அம்மாவுக்கு இந்த நொய் நொய் கேள்விகள் எரிச்சலாக இருந்தது.

“சிங்கம் தாண்டா எப்பவும் காட்டுக்கு ராஜா, அவர்தான் பவர்புல்” என பொதுவாக சொல்லியது.

ரங்குவுக்கு ஆர்வம் அடங்கவில்லை. அங்கே இருந்த குட்டி குரங்கு சைமனிடம் போய் விளக்கம் கேட்டது.

A candid conversation between animals

மரக் கிளையில் தலை கீழாக தொங்கிக்கொண்டிருந்த அது, ரங்குவுக்கு அற்புதமான ஒரு பதிலை சொன்னது.

“நம்ம தல செம பாஸ்ட்டா ஓடும். அவரை யாரும் பீட் பண்ண முடியாது” என ஊசலாடியபடியே சொன்னது.

ராஜாவாகும் கனவில் இருந்த ரங்குவுக்கு அது பேரிடியான பதில்.

தன்னால் எக்காலத்திலும் ராஜாவாக முடியாது என வருந்தியது. ட்ரிப்பில் இருந்து வாலண்டரியாக ட்ராப் ஆகி போய் மரத்தடியில் படுத்துக் கொண்டது.

சிங்க ராஜா மாதிரி ஓட என்ன வேண்டும் என யோசித்தது. தன்னுடைய எடை தான் முதல் தடை என எண்ணியது.

எப்படியாவது வெயிட் லாஸ் செய்து ஸ்லிம்மாகி வேகமாக ஓடி, காட்டுக்கே ராஜாவாகி காட்ட வேண்டும் என முடிவு செய்தது.

அன்றிலிருந்து அதன் உணவை பெருமளவு குறைக்க ஆரம்பித்தது. நீண்ட தூரம் நடந்தும், ஓடியும் பயிற்சி செய்தது. அதன் விளைவாக சில நாட்களில் அது அதீத பலவீனமாக உணர்ந்தது.

ரங்குவின் பெற்றோர் அதை கூப்பிட்டு பேசினார்கள்.

“இங்க பாரு ரங்கு, கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி படைச்சிருக்கார். சிங்க ராஜா ஓடுவார். ஆனா அவரால ஓரளவுக்கு மேல வெய்ட் தூக்க முடியாது. ஆனா நம்மால முடியும். அதனால நம்ம பிறவிகேத்த இயல்பிலிருந்து நம்ம மாற நெனச்சா, அது பலன் கொடுக்காது. நீ உன்னோட பலத்தை நம்பு, அதில் முன்னேற முயற்சி செய்” என்றார்கள்.

“அப்போ அது ராஜா கனவு கண்டது என்ன ஆச்சு?” என ஆஷாதேவி உஷாராக கேட்டது.

ரங்குவே சமாதானம் ஆனாலும் ஆஷாதேவி தேடி போய் கொளுத்தி போடும் மூடில் இருந்தது.

“இன்னும் இருக்கு கேளுங்க” என தொடர்ந்தாள் தாரா.

அப்பா சொன்ன பேச்சை கேட்டாலும், ரங்கு ஏமாற்றமாக உணர்ந்தது. அடுத்த நாள் ரங்குவின் அம்மா அதை கூட்டிக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நடந்தார். 

“இங்க பாரு தங்கப்பா, ராஜான்னு யாரும் தன்னை தானே சொல்லிக்க முடியாது. அதை மக்கள் சொல்லணும். மக்களுக்கு வேண்டியதை, அவங்க கஷ்டத்தை, அவங்க வாய் விட்டு சொல்லாமலேயே ஒரு மன்னன் தீர்க்கணும். இல்லேன்னா நம்ம சிங்க ராஜ மாதிரி நம்ம பாதுகாப்பை உறுதி செய்யணும். பலத்தை காட்டுறதோ, வேகமா ஓடுறதோ ராஜாவுக்கான தகுதி இல்லை” என மெதுவாக சொல்லி ரங்குவுக்கு புரிய வைத்தது.

“நீ இப்போ குட்டி பையன். நீ நல்ல குணங்களோட வளர்ந்து, இந்த காட்டுல இருக்குறவங்களுக்கு பொறுப்பா உதவி செய்தீன்னா, அவங்களே உன்னை உயர்வா நடத்துவாங்க” என சொன்னது.

“சரிம்மா, புரிஞ்சுக்கிட்டேன். என் பலத்தை எப்படி நான் மெருகேத்துறது?” என ஆர்வமாக கேட்டது.

“நா சொல்றபடி கேளு” என சொன்னது அம்மா.

அன்று சில புற்களை ஒன்று திரட்டி, அந்த புல்கட்டை ரங்குவின் தும்பிக்கையால் தூக்க வைத்தது.

பிறகு சிறு கட்டைகள். அதன் பிறகு கரும்பு கட்டு. தொடர்ந்து வாழை கட்டுகள்.

மறுபுறம் தினமும் நீச்சல் பயிற்சி. ரங்கு வயதிலும் திறனிலும் வளர்ந்து பெரிய மர கட்டைகளை அநாவசியமாக தூக்கும் அளவிற்கு முன்னேறியது.

வருடங்கள் ஆனது. சிங்க ராஜாவுக்கும் வயதானது. அவர் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது.

காட்டில் ஒரு கவலை கண்ணுக்கு தெரியாமல் படர ஆரம்பித்தது. அந்த வருடம் கடும் மழை. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லாரும் எப்படியாடுவது சிங்கத்தை காப்பாற்ற வேண்டும் என கடவுளை வேண்ட ஆரம்பித்தார்கள்.

ஆஷாதேவி கைகூப்பி முதல் ஆளாக கண் மூடி பிரார்த்தனையை ஆரம்பித்தது. லைனாக மற்றவர்களும் பிரேயர் மோடுக்கு போனார்கள்.

ரங்குவும் அதன் நண்பர்களும் எப்படியாவது சிங்க ராஜாவுக்கு வைத்தியம் செய்ய முடிவெடுத்தார்கள்.

ஒருநாள் சைமன் வந்து ரங்குவிடம் ஒரு விஷயத்தை சொன்னது.

“ப்ரோ, ஆத்துக்கு அந்த பக்கம் ஒரு வைத்தியர் இருக்காறாம். பச்சிலை வைத்தியத்துல பெரிய ஆளுன்னு அங்க ஆயா சொல்லுது. அதுவும் பழங்கட்டை. அது சொன்னா சரியாதான் இருக்கும். நீ உதவி செய்தா நாம முயற்சி பண்ணி பாக்கலாம்” என ஆர்வமாக சொன்னது.

“சரி வா, போய் சிங்க ராஜாகிட்ட சொல்லலாம்” என ரெண்டு பெரும் கிளம்பினார்கள்.

ராஜாவின் குகை அமைதியாக இருந்தது. ராணி சிங்கம் சோகத்தில் இருந்தார்.

“ராஜா, நா சைமன் வந்திருக்கேன். ரங்குவும் இருக்கான், கண்ண தொறங்க” என்றது குரங்கு.

ஆஷாதேவி கண்ணே வெளியே வரும் அளவுக்கு வாயை பிளந்து கேட்டு கொண்டிருந்தது.

“தொறந்துட்டாரா கண்ணை?” என ஆர்வமாக கேட்டது.  

 ஆஷாதேவி சிங்க ராஜாவின் பிரேயர் மீட்டிங்கை எப்போதோ மனதில் நடத்தி விட்டது.

“இரு சொல்றங்கள்ல” என்றது ஷைலா.

சிங்க ராணி வந்து உதவி செய்ய, ராஜா பெட்டில் சாய்ந்து உட்கார்ந்தார். குட்டி முயல் கொடுத்த வெந்நீரை வாங்கி மெதுவாய் பருகினார்.

சைமன் வைத்தியர் விஷயத்தை சொல்லி, “ராஜா, நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க, நாங்க உங்களை வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போறோம்” என உறுதியாக சொன்னது.

“என் காலம் முடிஞ்சு போச்சு. நீங்க வாழ வேண்டிய பசங்க. எனக்காக எதுக்காக ரிஸ்க் எடுக்குறீங்க? என்னால எங்கயும் நகர முடியாது. இந்தம்மாவ நல்லா பாத்துக்குங்க” என உயில் மட்டும் எழுதாத குறையாக பேசினார் ராஜா.

“எங்க ஆயா கூட இப்படி தான். டாக்டர் வீட்டுக்கு கூப்பிட்டா ஒடனே வராது. அத ஆட்டோல ஏத்துறதே பெரிய கஷ்டம்” என சொந்த கதையை சொருகியது ஆஷாதேவி.

சிங்க ராணி கண்ணீர் சிந்த, குட்டி முயல் மூக்கை சிந்த, அதை பார்த்த ராஜாவின் மனம் மாறியது.

“ஏதோ இவங்க திருப்திக்காக வரேன்” என ஒப்புக்கொண்டார்.

சைமனும் ரங்குவும் போர் கால அடிப்படையில் வேலையை ஆரம்பித்தார்கள். மழை பொத்துக்கொண்டு ஊத்தியது.

ராஜாவின் கிச்சனில் இருந்து பெரிய வாழை இலைகளை கொண்டு வந்து அவரை சுற்றி கட்டினார்கள்.

ஒரு சந்தன மர பலகையில் புல் கட்டுகளை அடுக்கி, அதன் மீது ராஜாவை தூக்கி உட்கார வைத்தார்கள். பிறகு கயறு போட்டு கட்டி அந்த பலகையை ரங்குவின் மீது தூக்கி வைத்தது சைமன். பிறகு அதுவும் ரங்குவின் மீது ஏறி ராஜாவுக்கு பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டது.

எல்லோரும் வரிசையில் நின்று வழியனுப்ப, ரங்கு சுழன்று ஓடும் ஆற்றில் மெதுவாக இறங்கியது. காற்றும் மழையும் தீவிரமாக, அவர்களுக்கு கண் பார்வையும் மறைக்க ஆரம்பித்தது.

“ப்ரோ, நா இவரை புடிச்சிக்குறேன். நீ அட் அ டைம்ல ஒரு ஸ்டெப் மட்டும் எடுத்து வை” என அட்வைஸ் செய்தது சைமன்.

“நீ கவலைபடாதே, என் வேலையே இதான். நீ அவரை மட்டும் விட்டுராத, கெட்டியா புடிச்சிக்கோ” என சொல்லி எச்சரிக்கையாக நீந்தியது ரங்கு.

ஆற்றின் மறுகரை அடைய ஒரு மணி நேரம் ஆனது.

வைத்தியர் ஆற்றங்கரையில் காத்துக் கொண்டிருந்தார். ரங்குவும் சைமனும் அவரை வணங்கிவிட்டு அவர் குடிலுக்கு பின் தொடர்ந்தார்கள்.

குடிலில் ராஜாவை இறக்கி வைத்தியர் கண்காணிப்பில் விட்டு விட்டு இருவரும் வெளியே நின்றார்கள்.

சற்று நேரம் கழித்து வந்த வைத்தியர், “அவர் நெலமை சரி இல்லை. அதுனால அவர் பத்து நாள் இங்க இருக்கட்டும். என்னால முடிஞ்சதை செய்யுறேன்” என அனுப்பி வைத்தார். பத்து நாள் ஆனது. ராஜா நலமாக இருக்கிறார் என அவரிடம் இருந்து செய்தி வந்தது.

ரங்குவும் சைமனும் மீண்டும் அவரை போய் அழைத்து வந்தார்கள். சிங்கராஜா அவர்கள் இருவரின் பெற்றோருக்கும் கண்ணீரோடு நன்றி தெரிவித்தார்.

“ரங்கு, இனிமேல் நீதான் என்னையும், இந்த காட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும்” என சொல்லி அதை ஆசீர்வதித்தார்.

ரங்கு அவரை வணங்கிவிட்டு, அதன் பெற்றோருக்கும் வணக்கம் வைத்தது.

சைமனும் அதன் மற்ற தோழர்களும் சந்தோஷமாய் கைதட்ட, அந்த காடே உற்சாகமாக இருந்தது. 

கதை முடிய, “இப்போ இந்த கதைல இருந்து நீங்க என்ன கத்துக்கிட்டீங்க?” என கேட்டாள் தாரா.

குழந்தைகள் ஆளாளுக்கு ஒரு மாரலை கண்டுபிடித்து சொன்னார்கள்.

முடிவாக தாரா சொன்னாள் “நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து முயற்சி செய்து, நல்வழியில் நடந்தால், ஒரு நாள் வெற்றி உங்களை தேடி வரும்!”

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 1/4

anganwadi golden jubilee celebration

தாரா அன்று அங்கன்வாடிக்கு சென்று சேரும்போது பெரும்பாலான குழந்தைகள் வந்திருந்தார்கள். உதவியாளர் வெண்மணி அவர்களை அமர வைத்துவிட்டு, தண்ணீர் குடம் கொண்டு வந்து வைத்தார்.

பொன்னி நர்ஸின் போன் வந்தது தாராவுக்கு. “நம்ம கல்பனாவுக்கு பொண்ணு பொறந்திருக்கு தாரா. நார்மல் டெலிவரி. உன்கிட்ட தலைவர் சொல்ல சொன்னார். அப்புறம் வந்து உன்கிட்ட நேர்ல பாத்து பேசுறேன்னார்” என சொல்லி போனை வைத்தார்.

கல்பனா ஊர் தலைவர் மகள். கர்ப்ப காலத்தில் ரெகுலராக அங்கன்வாடிக்கு வருவாள். பேச்சு வாக்கில் ஒரு நாள் சுக பிரசவத்துக்காக சில யோகா முறைகளை டாக்டர் செய்ய சொன்னதாகவும், அதை யாருடைய கண்காணிப்பும் இன்றி தனியே செய்ய பயமாக இருப்பதாகவும் சொன்னாள்.

தாரா யோகாவில் டிப்ளமோ பட்டம் முடித்திருந்தாள். “சரி கல்பனா, நீ கவலைப்படாதே. நா வீட்டுக்கு வந்து நேர்ல சொல்லி தரேன். நீ பயமில்லாம செய்” என சொல்லி ஊக்கப்படுத்தினாள்.

அடுத்த நான்கு மாதம் தாராவின் நேரடி மேற்பார்வையில், யோகா, தியான பயிற்சி மற்றும் ஊட்டசத்து குறிப்புகள் என கல்பனாவுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தது. இன்று அவளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது தாராவுக்கு சந்தோஷமாக இருந்தது. வெண்மணி அம்மாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி விட்டு வகுப்பறைக்கு சென்றாள்.

அன்றைய நாளுக்கான வேலைகளை தாரா யோசித்துக்கொண்டிரும்போது, தூரத்தில் ஷாருக்கின் அழுகுரல் கேட்டது.

“இன்னைக்கும் அழுவுறானா? இவனை எப்படி சமாளிக்க போறம்மா?” என்றார் வெண்மணி.

“வரட்டும், பாத்துக்கலாம்” என சொன்னாள் தாரா.

தேம்பி தேம்பி அழுதபடியே வந்த ஷாருக்கை வெண்மணி வாங்கிக் கொண்டு அவன் அம்மாவை அனுப்பி வைத்தார்.

“ஏன்டா அழுவுற?” என அதட்டலாக கேட்டாள் தாரா.

சற்று அழுகை நின்று, “அக்காக்கு மட்டும் ஜாமென்டரி பாக்ஸ் வாங்கி கொடுத்துட்டாங்க. நா கேட்டா அப்புறம் வாங்கி தரேன்னு சொல்றாங்க” என சொல்லி மீண்டும் அழுகையை ஆரம்பித்தான்.

தாரா யோசிக்க “அவுங்க அக்கா ஆறாம் க்ளாஸ் படிக்குறாங்க. இவனுக்கு எதுக்கு?” என அவனை அல்பமாக பார்த்துக் கொண்டே சொன்னது ஆஷாதேவி.

முக்திக்கு முன் நிலையில் இருப்பது போல இருந்தது ஆஷாதேவியின் உரை.

“சரி வாங்க, எல்லாரும் ரவுண்டா உக்காருங்க, உங்களுக்கு கதை சொல்ல போறேன்” என டாபிக்கை மாற்றினாள் தாரா.

ஷாருக் இன்னும் சமாதானம் ஆகவில்லை. ஜாமென்டரி பாக்ஸ் விஷயத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எண்ணி உருண்டு உருண்டு அழுது கொண்டிருந்தான்.

இப்போது தான் எண்களில் நூறு வரை சொல்ல கற்று கொண்டிருக்கிறான். இவனுக்கு ஜாமென்டரி பாக்ஸ் தேவைப்பட இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது. அக்காவுக்கு கிடைத்தது தனக்கும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தவிர வேறொன்றுமில்லை.

“டேய் ஷாருக், வெண்மணி அம்மாவுக்கு கால் வலி இருக்குது. அவங்களால செடிக்கு தண்ணி ஊத்த முடியல. கொஞ்சம் போய் வராண்டால அழுவுடா, அதுங்களுக்காவது தண்ணி கிடைக்கும்” என ஆஷாதேவி பொறுமையிழந்து கத்தியது.

ஷாருக்கை இன்ப்ளுயன்சாராக கருதி ஷைலா டேமை திறந்தது.

“நீ ஏன் அழுவுற?” என தாரா கேட்க, “அம்மா வேணும்!” என மூக்கை சிந்தியது.

ஷைலா அங்கன்வாடிக்கு வர ஆரம்பித்து பத்து மாதங்களுக்கு மேலாகிறது!

இப்போது என்ன திடீர் அம்மா பாசம் என ஆஷாதேவிக்கு புரியவில்லை.

இதுங்களால் கதை நேரம் குறைவதை அதனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஷாருக்கை அம்போவென விட்டு விட்டு ஷைலாவை மியூட் செய்ய நகர்ந்தது.

தாரா எல்லோரையும் கவனித்தவாறே, பாயை விரித்து ஒவ்வொருவராய் உட்கார வைத்து, சாமிக்கு பூ வைத்து விட்டு, “எல்லாரும் கண் மூடி, கை கூப்புங்க” என சொன்னாள்.

“ஷாருக், வா இங்க வந்து உக்காரு. ஷைலா, நீ இந்த பக்கம் வா” என ரெண்டு பேரையும் தன்னருகே அமர்த்திக் கொண்டாள் தாரா.

“ஷாருக், உனக்கு என்ன அனிமல் புடிக்கும் சொல்லு?” என கேட்டாள்.

“சிங்கம்” என சிவந்த கண்களோடு வீரமாய் சொன்னான் ஷாருக்.

 ஆஷாதேவி வேண்டுமென்றே களுக்கென சத்தமாக சிரிக்க, மற்ற வாண்டுகளும் சிரிக்க ஆரம்பித்தது.

தாராவுக்கே அவன் பதில் சொன்ன வேகம் காமெடியாக இருந்தது.

“சைலன்ஸ், ஷைலா உனக்கு யார் பிடிக்கும்?” என கேட்டாள்.

“யானை” என்றது ஷைலா.

“சூப்பர், இன்னைக்கு நம்ம கதைல சிங்கமும் யானையும் தான் வர போறாங்க” என தாரா சொல்ல, ரெண்டு பேரும் அடுத்த நொடியே உற்சாகமானார்கள். அவரவர் மனதில் அந்த கதைக்களம் விரிய ஆரம்பிக்க, அந்த பள்ளி வளாகம் ஒரு மாய காடாக மாறிக் கொண்டிருந்தது.

Tamil short story – பீல் குட் மொமண்ட்ஸ்

A lovely couple enjoying happy retirement

“லக்ஷ்மி, அப்பா எங்கேன்னு பாரு” என ஹாலில் இருந்து சொன்னார் சங்கு புஷ்பம்.

“அவர் பாத்ரூம்ல இருக்காரும்மா” என்றாள் லக்ஷ்மி.

“கொஞ்சம் போய் பாரும்மா, அவர் உள்ள போய் ரொம்ப நேரமாச்சு” என்றார் சங்கு புஷ்பம்.

காலையில் சீக்கிரமே எழுந்து விடுவார் நேசப்பா. காபி போட்டு, காய் நறுக்கி, வாக்கிங் கிளம்ப வேண்டிய நேரம் இது! இன்னும் பாத்ரூமிலுருந்து வெளியே வரமால் என்ன செய்கிறார்? என யோசித்தார் சங்கு புஷ்பம்.

“மா, அவரு என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா?” என சிரித்தபடியே வந்தாள் லக்ஷ்மி.

“சொல்லு!” என ஆர்வமாக கேட்டார் சங்கு புஷ்பம்.

“ஷேவ் பண்ணிக்கிட்டு இருக்காரும்மா? அதுவும் லெப்ட் ஹேண்ட்ல!” என்றாள் லக்ஷ்மி.

“வலது கைல ஏதாவது சுளுக்கா? இல்ல ஷோல்டர் வலியா? அவர் எதுவும் என்கிட்ட சொல்லலியேம்மா” என கவலையோடு சொன்னார் சங்கு புஷ்பம்.

“ஆமாம்மா, கொஞ்ச நாளா அவரு நார்மலா இல்ல. கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்குறார்” என யோசனையாக சொன்னாள் லக்ஷ்மி.

“வயசான காலத்துல இந்த ஆர்த்தோ, நியூரோ டாக்டருங்களுக்கு பீஸ் குடுத்தே மாள மாட்டேங்குது! இவரு வேற என்ன புது பைல போட வைக்க போறாருன்னு தெரியல” என புலம்ப ஆரம்பித்தார் சங்குபுஷ்பம்.

“மா, அதெல்லாம் எதுவும் சீரியஸா இருக்காது. நீ கவலைப்படாதே, நா வாக்கிங் போறேன்” என தேற்றினாள் லக்ஷ்மி.

கால் மணி நேரம் கழித்தது நெசப்பா காபி கப்போடு வந்தார்.

“இந்தாம்மா காபி” என மனைவியிடம் நீட்டினார்.

a husband serving coffee

“என்ன, வர வர மரியாதை கொறையுது? லெப்ட் ஹேண்ட்ல காபி தரீங்க?” என முறைத்தார் சங்குபுஷ்பம்.

“நீ தானே சொல்வ, மரியாதை மனசுல இருந்தா போதும்னு” என கண்ணடித்தபடியே சொன்னார் நேசப்பா.

“அப்ப மரியாதை இல்ல, அப்படி தானே?” என காபியை விட சூடாக கேட்டார் புஷ்பம்.

“காபி போட்டு கொண்டாந்து கைல குடுக்குற ஆள ஏண்டி ரோஸ்ட் பண்ற? என கூலாக கேட்டார் நேசப்பா.

“இது என்ன புது பழக்கம்? அந்த கையில ஏதாவது பிரச்சனையா? சிரிச்சி சிரிச்சி வலிய மறைக்குறீங்களா? அப்புறம் ஏதாவது பெரிய செலவா இழுத்து விடபோறீங்க? எதுவுமா இருந்தாலும் ஆரம்ப நிலையிலேயே வாய தொறந்து சொல்லுங்க! டாக்டரை பாத்து சரி பண்ணிக்கலாம்” என படபடப்பாக பேசினார் புஷ்பம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என சிரித்தார் நேசப்பா.

“நாங்க உங்களை கவனிக்காம இல்லை! கொஞ்ச நாளாவே நீங்க இடது கையால தான் பல வேலைகளை செய்யுறீங்க” என கவலை குறையாமல் சொன்னார் புஷ்பம்.

a man doing household activities

“நீ ஏன் சின்ன விஷயத்துக்கு இவ்ளோ யோசிக்குற? நான் சில வேலைகளை இடது கையால செய்றது உண்மை தான். ஆனா அதுக்கு ஒரு காரணம் இருக்கு” என சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னார் நேசப்பா.

சங்கு புஷ்பத்திற்க்கு காண்டு ஏறியது.

அந்த நேரத்தில் நேசப்பா போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

“ஹர்ப்ரீத், இன்னைக்கு ஏழு மணி செஷனை ஏழரைக்கு மாத்தி இருக்காங்க. நா போய் காய் கட் பண்ணி வெச்சுட்டு கிளம்புறேன்” என நகர்ந்தார் நேசப்பா.

ஹர்ப்ரீத் பஞ்சாபி பெண்மணி. சுமார் ஐம்பது வயது இருக்கும். பிஸியோதெரபி டாக்டர். இவர்கள் அபார்ட்மெண்டில் சில மாதங்களுக்கு முன்பு குடியேறி இருக்கிறார். சொசைட்டி சீனியர்களுக்கு பீஸ் வாங்காத கன்சல்டன்ட். காலையில் வாக்கிங் போகும் மொத்த பெருசுகளுக்கும் நல்ல தோழியாகி விட்டார்.

பத்து நிமிஷத்தில் நேசப்பா ரெடியாகி வந்து ஷூ போட குனிந்தார்.

புஷ்பம் அவரையே உற்று நோக்க, ஷூவை போட்டபடியே “ரொம்ப கவலைப்படாதே! எல்லாத்துக்கும் புது கனெக்க்ஷன் தான் காரணம்” என சிரித்தபடியே பாதியிலேயே நிறுத்தினார் நேசப்பா.

“என்ன புது கனெக்க்ஷன்?” என முழித்தார் புஷ்பம்.

“இங்க பாரு, நாம எப்பவும் வலது கையால தான் பெரும்பாலான தினசரி வேலைகளை செய்வோம். அந்த பழக்கத்தை மாத்தி இடது கையால சின்ன சின்ன வேலைகளை செய்யும் போது நம்ம மூளைல புதுசா நரம்பு இணைப்புகள் உருவாகும். அது மறதி குறைய உதவும். கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு நன்றாகும். இதை Non-Dominant Hand Practise என சொல்வார்கள்” என விளக்கினார் நேசப்பா.

“அப்படியா, இதை மொதல்லயே சொல்ல வேண்டியது தானே?” என நிம்மதியாக சொல்லியபடியே கிச்சனுக்கு எழுந்து போனார் புஷ்பம்.

மெல்லிசாக விசிலடித்தபடியே கிளம்பி போனார் நேசப்பா.

வாக்கிங் முடித்து லக்ஷ்மி வந்தாள். புஷ்பம் நேசப்பாவின் Non-Dominant Hand Practise விஷயத்தை சொன்னார்.

“ஹ்ம்ம், புது விஷயமா தான் இருக்கு! நீயும் ட்ரை பண்ணுமா” என சொல்லிவிட்டு குளிக்க போனாள்.

இரண்டு நாட்கள் கழித்து புஷ்பம் கோவிலுக்கு போய்விட்டு வந்து, சொசைட்டி பார்க்கில் உட்கார்ந்து அவர் சகாக்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ஹர்ப்ரீத் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

“நாளைக்கு நைட் என்னோட பர்த்டே பார்ட்டி பிளான் பண்ணி இருக்கேன். ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துடுங்க” என அனைவருக்கும் அழைப்பு விடுத்து விட்டு கிளம்பினார்.

வீட்டுக்கு வந்ததும் நேசப்பாவிடம் சொன்னார் புஷ்பம்.

“ஆமா, எங்க ஆளுங்களையும் கூப்பிட்டு இருக்காங்க, எப்படியும் ஒரு இருபத்தஞ்சு பேரு வருவாங்கனு சொன்னாங்க. நீயும் லக்ஷ்மியும் போய் நாளைக்கு கிப்ட் வாங்கிட்டு வாங்க” என சொன்னார்.

“அதெல்லாம் வேணாம்னு அவங்க தெளிவா சொல்லிட்டாங்க” என்றார் புஷ்பம்.

அடுத்த நாள் ஏழு மணிக்கு எல்லோரும் ஹர்ப்ரீத் வீட்டில் ஆஜரானார்கள். நேசப்பாவின் கோஷ்டி ஹர்ப்ரீத் பட்டேலை ஏகத்துக்கும் கொண்டாடினார்கள்.

சற்று நேரத்தில் சாப்பாடு டெலிவரி வர எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

நேசப்பாவும் புஷ்பமும் சாப்பிட ஆரம்பிக்க, அவர்கள் அருகில் வந்தார் ஹர்ப்ரீத்.

“நேஸ், நீங்களும் என்ன மாதிரி லெப்ட் ஹாண்ட் பர்ஸனா? ஸோ, ஸ்வீட்” என்றபடியே அவரை ஜென்டிலாக அணைத்துக் கொண்டார்.

a candid conversation at party

தட்டை டேபிள் மீது வைத்து விட்டு நேசப்பாவும் ஹர்ப்ரீத்தை மரியாதை நிமித்தமாக அணைத்துக் கொண்டார்!

“நீங்க லெப்ட் ஹாண்ட் பர்ஸனா?” என கேட்டார் நேசப்பா.

இது உலக மகா நடிப்புடா சாமி என தோன்றியது சங்கு புஷ்பத்திற்கு!

“ஆமா நேஸ்” என உற்சாகமாக சொன்னார் ஹர்ப்ரீத்.

“அப்பாடா, இன்னைக்கு எனக்கு டின்னர் டைம்ல “எல்போ க்ளாஷ்” ப்ராப்ளம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்” என்றார் நேசப்பா.

புஷ்பத்திற்கு இன்னைக்கு வீட்டில் க்ளாஷ் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

“எல்போ க்ளாஷ்னா என்ன?” என பொதுவாக கேட்டார் புஷ்பம்.

“சீ சங்குமா, இப்போ நா லெப்ட் ஹாண்ட். என் பக்கத்துல ரைட் ஹாண்ட் பர்ஸன் உட்கார்ந்து சாப்பிடும்போது, அந்த பர்சனோட கை, என் கைல இடிக்க சான்ஸ் இருக்கு. இது பொதுவா எங்களுக்கு நடக்கும். ஆனா நேஸ் மாதிரி லெப்ட் ஹாண்ட் பர்ஸன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடும்போது எங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை” என விளக்கினார் ஹர்ப்ரீத்.

“லவ்லி, ஸோ ஸ்வீட்” என சொல்லி சிரித்தார் புஷ்பம்.

“சரி நீங்க சாப்பிடுங்க. ” என நகர ஆரம்பிக்கும் போது, “நீயும் எங்க கூட சாப்பிடேன் சங்கு” என அழைத்தார் நேசப்பா.

“நா ரைட் ஹாண்ட் பர்ஸன் நேஸ்! உங்களுக்கு இடிக்கும்!!” என சீனியர் கேர்ள்ஸ் கோஷ்டி பக்கம் தட்டை எடுத்து கொண்டு போனார்.

நேசப்பா பாந்தமாக சப்பாத்தியை இடது கையால் பிய்த்து, அதை லேசாக க்ரேவியில் தோய்த்து உள்ளே தள்ளி கொண்டிருந்தார்.

கேக், குலாப் ஜாமூன் என லைனாக வந்த அனைத்தையும் கச்சிதமாக, சிந்தாமல் சிதறாமல், லெப்ட் ஹாண்டில் சாப்பிட்டு முடித்தார்.

பத்து மணிக்கு பார்ட்டி முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், சங்கு புஷ்பம் முதல் வேலையாக லக்ஷ்மியின் ரூமிற்க்கு சென்றார்.

புஷ்பம் சொல்ல சொல்ல, லக்ஷ்மி உன்னிப்பாக கேட்டு விட்டு, விழுந்து விழுந்து கண்ணில் நீர் வர சிரித்தாள்.

“மா, நா ஒண்ணு சொல்லுவேன், என்ன திட்டாதே!” என இழுத்தாள்.

“சொல்லு” என்கிறார் புஷ்பம்.

எதையோ அவள் சொல்ல ஆரம்பிக்க, மீண்டும் அடக்க முடியாமல் சிரிப்பை தொடர்ந்தாள்.

“சொல்லிட்டு சிரியேண்டி” என அதட்டினார் புஷ்பம்.

சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு லக்ஷ்மி ஆரம்பித்தாள்.

“மா, நா நெனைக்கிறேன் NDHPனா “Non-Dominant Hand Practise” இல்லை! “Nesappa Dates Harpreet Patel”. கூட்டி கழிச்சி பாரு என் கணக்கு சரியா வரும்” என பன்ச் டயலாக்கை போட்டாள்.

“அடிப்பாவி, கதை அப்படி போகுதா? அந்த மனுஷன் புது கனெக்க்ஷன்னு பேசும் போதே நா யோசிச்சிருக்கணும்” என மெலிதாய் சிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

அம்மாவும் மகளும் அடுத்த இருபது நிமிடம் நேசப்பாவின் லெப்ட் ஹாண்ட் அட்ராசிட்டிகளை பேசி விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

feel good moment between mother and daughter

“மா, வயசான காலத்துல இதுவும் நல்லது தாம்மா! தான் கவனிக்கப்படலை, அட்ராக்ட்டிவா இல்லேன்னு நெனச்சி முடங்கிடாம, அவர் பிளேபுல்லா இருக்கிறது நல்ல விஷயம். நம்ம அப்பாவை பத்தி நமக்கு தெரியும். டீசண்டான மனுஷன். இந்த மாதிரி சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் அவர் மைண்டை பிரெஷ்ஷா வெச்சிக்க ஹெல்ப் பண்ணும்” என சொன்னாள் லக்ஷ்மி.

“சின்ராசுக்கு இந்த வயசுல சின்ன சின்ன பீல் குட் மொமண்ட்ஸ் தேவைப்படுது!” என சொல்லியபடியே தூங்க போனார் சங்கு புஷ்பம்.

மாத்திரைகளை போட்டு கொண்டு, கிச்சனை க்ளீன் செய்துவிட்டு, சோபாவில் உட்கார்ந்து லக்ஷ்மி சொன்ன விஷயங்களை தேடி படித்து பார்த்தார். உண்மை தான் அவள் சொன்னது. தன்னை சமாதானபடுத்த அவள் எதுவும் பொய்யான விஷயங்களை சொல்லவில்லை.

ஹால் விளக்குகளை அணைத்து விட்டு “ஏங்க, ஆறு மணிக்கு அலாரம் வெச்சுடுங்க” என சொல்லிவிட்டு போய் கட்டிலில் படுத்துக் கொண்டார்.

“ஏண்டி ஆறு மணிக்கு எழுந்து என்னடி பண்ண போற?” என கேட்டார் நேசப்பா.

“திலீப் சார் “Deep Healing Synaptic Pathway” அப்படீன்னு சீனியர் சிட்டிசன்ஸுக்கு செஷன் எடுக்குறாராம் பார்க்குல. டின்னர்ல பேசிக்கிட்டுருக்கும் போது சொன்னார்” என்றார் புஷ்பம்.

“அந்த ஆர்மில இருந்து VRS வாங்குன டாக்டர்தானே?” என கேட்டார் நேசப்பா.

“ஆமாங்க” என்றார் புஷ்பம்.

“பாத்ரூம் போயிட்டு வரேன்” என சொல்லி விட்டு லக்ஷ்மி ரூமிற்க்கு போனார் நேசப்பா.

“என்ன, உங்க அம்மா Healing கிளாஸ் போக போறாளாமே? உன்கிட்ட சொன்னாளா?” என கேட்டார்.

“முழுசா சொல்லுப்பா! நானே பாதி தூக்கத்துல இருக்கேன். நீ வேற பிட்டு பிட்டா சொல்ற” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

நேசப்பா சொல்லி முடிக்க, “ஆமாப்பா, அம்மா சொன்னாங்க. “DHSP” இப்போ ரொம்ப பேமஸ். ஆனா இதுல ஒரு மேட்டர் இருக்கு கவனிச்சியா?” என கண்ணடித்தபடியே கேட்டாள் லக்ஷ்மி.

அவருக்கு கேக்கும், குலாப் ஜாமூனும் ரிவர்சில் வந்து தொண்டையை அடைத்தது.

“என்ன மேட்டர்” என தக்கி தக்கி கேட்டார்.

Dileep Heals Sangu Pushpam” என சொல்லி போர்வையை தலை வரை மூடி கொண்டு சிரித்தாள்.

மறுநாள் காலை சங்கு புஷ்பம் ஆறு மணிக்கு ரெடியாக, நேசப்பா காபி கொடுத்தார். வலது கையில்!

a husband serving coffee

முற்றும்

தமிழ் சிறுகதை – காகித கப்பல்

A mother and child playing in rain with paper boat at temple

“காவ்யா, எழுந்திரு, ஸ்கூலுக்கு ரெடியாகணும்” என எழுப்பினாள் யமுனா.

“மா, சூப்பரா ஒரு கனவுமா, என்ன எழுப்பிட்டியே” என்றபடி படுக்கையிலிருந்து எழுந்தாள் காவ்யா.

ஆறு வயது. ஒன்றாம் வகுப்பு முடிக்கப்போகிறாள்.

அப்படியே அவளை அள்ளி அணைத்து மீண்டும் படுக்கையில் சரித்து தானும் பக்கத்தில் படுத்தாள் யமுனா.

“வாவ், சொல்லு என்ன கனவு?” என கேட்டாள்.

“மா, நானும் ஒரு பிங்க் ஏஞ்சலும் கார்டன்ல கை கோர்த்து நடந்து போறோம்.

வைட் பட்டர்பிளை நம்ம பால்கனிக்கு வருமே அதுவும் வந்துது  எங்களோட.

நாங்க பேசிட்டே கார்டன சுத்தி நடந்தோம்.ஏஞ்சல் என்கிட்டே என்ன வேணும்னு கேட்டாங்க? என் பிரெண்ட் அனுஷாவோட டாக் அவுஸ் ஒடஞ்சி போச்சி, அத பிக்ஸ் பண்ணி தர சொல்லி கேட்டோம்” என்றாள்.

“ஓ, அனுஷாவும் வந்தாளா ட்ரீம்ல?” என கேட்டேன்.

“ஆமாம்மா, அனுஷா அப்புறம் அவளோட பப்பி” என்றாள்.

“ஏஞ்சல் என்ன சொன்னாங்க?” என ஆர்வமாய் கேட்டேன்.

“அவங்க ஓகே சொல்லிட்டு பப்பியோட வீட்டை சரி பண்ணிட்டாங்க” என்றாள்.

“ஏண்டி வைட் பட்டர்பிளை, அனுஷா,பப்பி எல்லாரும் ஏஞ்சல மீட் பண்ணிருக்காங்க. ஆனா என்ன மட்டும் உன் கனவுல கூப்பிடலை?” என செல்லமாய் கோபித்து கொண்டேன்.

“மா அதுக்குள்ள நீ என்ன எழுப்பிட்ட. சரி, நா திரும்ப தூங்குறேன், என் கனவுல வா” என நைஸாய் படுத்துக்கொண்டாள்.

“ஹா, இந்த கதையெல்லாம் வேணாம், எழுந்து வா, குளிக்கலாம்” என்றேன் சிரித்துக்கொண்டே.

“நேத்து நைட்டும் அப்பா வீட்டுக்கு வரலியாம்மா” என சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே கேட்டாள்.

விடிந்ததும் பேசி சிரித்தாலும் அவள் ஏங்குவது வலியை தந்தது. அவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது அவருக்கு ஒரு ஏஞ்சல் இருப்பதை.

“இல்லடா, வா வந்து ப்ரஷ் பண்ணு” என தூக்கி கொண்டு போய் பாத்ரூமில் நிற்க வைத்தேன்.

“நா குட் நைட் மெசேஜ் அனுப்பினேன்மா, அவர் ரிப்ளை கூட பண்ணல” என அலுத்துக் கொண்டாள்.

“அப்பா பிஸியா இருக்காரும்மா” என சொல்லி, வேறு ஏதோ கதைகளை பேசி அவளை சமாதானப்படுத்தினேன்.

“நீ  பேக் ரெடி பண்ணு, நா உனக்கு தோசை ஊத்துறேன்” என சொல்லி கிச்சனுக்குள் போனேன்.

அம்மாவின் போன் வந்தது. “அவர் வந்தாராடி?” என்றாள்.

“நா இன்னைக்கு சாயந்திரம் லாயர பாக்க போலாம்னு இருக்கேன்” என்றேன்.

“ஏண்டி, உனக்கு பொறுமையே கிடையாதா? ஒரு பொண்ணு இருக்கா, மனசுல வச்சி நடந்துக்க” என அழுத்தமாக சொன்னாள்.

“எனக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு அமைதியா இருக்கணுமா? இல்ல நம்ம வீட்டுல ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு இருக்கானு வெயிட் பண்ணணுமா?” என கோபம் தெறிக்க கேட்டேன்.

“இன்னும் மூணு வருஷத்துல எல்லாம் சரிஆகிடும்னு நம்ம ஜோசியர் சொல்றார். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரும்மா” என்றாள்.

“இந்த லட்சணத்தை தான் அவர் சொன்னாரு நல்ல ஜாதகம்னு என் தலைல கட்டி வச்ச? காவ்யா சொல்ற விதத்துல சொன்னா புரிஞ்சிப்பா. நானும் அவளும் எங்க வாழ்க்கையை பாத்துக்குறோம். தயவு செஞ்சு அட்வைஸ் பண்ணாதே” என்றேன்.

வட்டமாய் ஒரு தோசை சுட்டு முடிப்பதற்குள் வாழ்க்கையை ஒரு சுற்று மனதிற்குள் ஓட்டி பார்த்து விட்டேன்.

அம்மா போனை வைக்க, நானும் காவ்யாவும் பள்ளிக்கு கிளம்பினோம்.

“மா, இரு வரேன்’ என அவள் ரூமிற்குள் ஓடினாள்.

திரும்ப வந்து “இந்தா” என சொல்லி ஒரு பேப்பரை நீட்டினாள்.

தினசரி காலண்டரில் தேதி கிழித்த பேப்பர்.

“என்ன” என கேட்டேன்.

“பிரிச்சு படி” என்றாள்.

“யூ ஆர் மை ஏஞ்சல்” என எழுதியிருந்தாள்.

“ஸ்வீட்ட்டு, தேங்க்ஸ். என்ன இந்த பேப்பர்ல எழுதி இருக்க?” என்றேன்.

“எங்க டீச்சர் சொன்னாங்கமா, இந்த மாதிரி வேஸ்ட் பேப்பர்ல ஏதாவது கிராப்ட் பண்ணுங்கன்னு. ஆனா டெய்லி கிராப்ட் பண்ண முடியாதுல. அதான் எழுதிட்டேன்” என்றாள் சிரித்தபடி.

“சூப்பர்” என சொல்லி பார்க்கிங் நோக்கி நடந்தோம்.

“மா, அனுஷாவோட பப்பிக்கு ஹவுஸ் சரியாகுமா” என திடீரென கேட்டாள்.

“அவங்க அம்மா கொஞ்சம் பிஸியா இருக்காங்கம்மா, இன்னும் ஒரு வாரத்துல சரி பண்றேன்னு சொல்லி இருக்காங்க. இன்னைக்கு வாக்கிங் வந்தா கேக்குறேன்” என சொல்லி வண்டியை கிளப்பினோம்.

“மா, ஒரு கேம். அனுஷாவோட பர்த்டே டென்த் ஆகஸ்ட். இப்போ நா ஸ்கூல் போறதுக்குள்ள அந்த நம்பரை பாத்துட்டேன்னா, அவ பப்பியோட அவுஸ் சரியாகிடும்” என வெளியே பார்த்துக் கொண்டே சொன்னாள்.

காரில் போகும் போது போன் பார்க்காமல் இருக்க ஒரு நாள் விளையாட்டாய் ஆரம்பித்தது, இன்று வரை தொடர்கிறது. தினம் ஒரு எண். தினம் ஒரு கேள்விக்கான பதில்.

அம்மாவின் போன் மீண்டும் வந்தது.

“சாரிடி, காலைல உன்ன டென்ஷானாக்கிட்டேன். சாயந்திரம் நானும் அப்பாவும் வீட்டுக்கு வரோம்” என்றாள்.

“சரிம்மா” என சொல்லி போனை வைத்தேன்.

“ஹேய், அது பப்பியோட அவுஸ் தானே, அப்போ பப்பியோட பர்த்டே தானே பாக்கணும்? ” என அவளை சீண்டினேன்.

திரு திருவென முழித்தது காவ்யா.

சற்று யோசித்து, “ஹா, எனக்கு பீவர் வந்தா நீயும் விபூதி வச்சிக்குறேல்ல! எனக்கு சரியாகிடுது. அது மாதிரி தான்” என ஒரு பாயிண்டை போட்டது.

“நீ தான் ஸ்மார்ட் ஆச்சே” என சொன்னதும் கை தட்டி  சிரித்தது.

ஸ்கூல் வந்து சேர “மா, இன்னும் நம்பரை பாக்கலியே” என சோர்வாய் சொன்னாள்.

“இன்னைக்குள்ள கண்டிப்பா பாப்போம்” என சொல்லி கிளம்பினேன்.

அன்று மாலை அம்மாவும் அப்பாவும் வந்து விட்டார்கள். மழை வரும் போல இருந்தது.

“லாயர் என்ன சொல்றார்?” என பொதுவாக கேட்டார்.

“சீக்கிரம் முடிக்கலாம்னு” சொல்லி இருக்கார் என்றபடி உள்ளே போனேன்.

“டிரஸ் மாத்திக்க, எல்லாரும் கோவிலுக்கு போலாம்” என்றபடியே டீ கொடுத்தாள் அம்மா.

“ஏன் ஜோசியரை அங்க வர சொல்லி இருக்கியா?” என கேட்டேன்.

பதிலேதும் சொல்லாமல் திரும்ப போய் விட்டாள்.

மூச்சு முட்டுவது போல இருந்தது யமுனாவிற்க்கு. வாழவும் வழியில்லாமல், அதிலிருந்து வெளியேறவும் வழியில்லாமல் திணறலாய் இருந்தது.

பேசாமல் கல்யாணம் பண்ணாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். இல்லை இவர்கள் பாரமாய் உணர்ந்தால் படிப்புக்கு ஏற்ற வேலையில் எங்காவது வேறு ஊரிலாவது வாழ்ந்திருக்கலாம்.”மா, நா ரெடி ஆகிட்டேன்” என காவ்யா வர, தான் இன்னும் தயாராகாமல் இருப்பது உரைத்தது.

“பத்து நிமிஷம், ரெடி ஆகிட்டு வரேன்’ என சொல்லி அனுப்பினேன்.

கோவிலுக்கு போய் சாமி பார்த்துவிட்டு கல் திண்ணையில் போய் உட்கார்ந்தோம். நல்ல மழை.

நினைத்த மாதிரியே ஜோசியரும் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவர், எங்களை பார்த்ததும் டவலை போர்த்திக் கொண்டு எங்களை நோக்கி வந்தார்.

சற்று நேரம் பொதுவாக பேசியவர், பிறகு என்னிடம் “யமுனா, அம்மா என்கிட்டே பேசுனாங்க. அவருக்கு ரெண்டாம்  வீடு இப்போ கெட்டு போய் இருக்கு, கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்மா”, என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“அம்மா இவரு வீடு எல்லாம் பிக்ஸ் பண்ணுவாரா? அங்கிள், என் பிரெண்டோட வீடு ரிப்பேரா இருக்கு, சரி பண்ணி தரீங்களா?” என குறுக்கே வந்து கேட்டது காவ்யா.

அவர் முழிக்க எனக்கு சிரிப்பாய் வந்தது.

நாயின் வீடு கூட சரியாகும். ஆனால் நாய் புத்தி உள்ளவர்கள் என்றும் திருந்த போவதில்லை என நினைத்துக் கொண்டேன்.

காவ்யா மாதிரி க்ளையண்ட்டை எதிர்பாக்காதவர் உடனே கிளம்பி போய் விட்டார்.

மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

கால் வலி ஆரம்பிக்க, “வா காவ்யா அந்த ஓரம் போய் உட்காரலாம்” என அழைத்தேன்.

“மா, ரொம்ப போரடிக்குது” என சிணுங்கினாள்.

“அங்க தூண்ல ஒரு பை கட்டி இருக்கு பாரு, அதுல இருந்து ஒரு பேப்பர் எடுத்துட்டு வா, நா உனக்கு போட் செய்து தரேன்” என அம்மா சொல்ல “சரி பாட்டி” என ஓடியது காவ்யா.

அனுஷா அம்மாவிடம் இருந்து போன் வர பேசியதில் சில நிமிடங்கள்  கழிந்தது.

“அம்மா இங்க பாரு சர்ப்ரைஸ்” என வந்தாள் காவ்யா.

“உன் பர்த்டே டேட் பாரு” என தினசரி காலண்டர் பேப்பரை காட்டி சிரித்தாள்.

“உனக்கு இன்னிக்கு லக்கி டேமா” என சொல்லிவிட்டு என்னிடம் பேப்பரை நீட்டியது.

விபூதி பிரசாதம் மடிக்க தினசரி காலண்டர் பேப்பர் ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் கப்பல் செய்ய ஒரு பேப்பரை எடுக்க அது என் பிறந்த நாளாய் அமைந்தது.

அம்மா கப்பல் செய்து கொடுக்க, காவ்யா மழை நீரில் அதை விட்டது.

பெரும் மழை காற்றோடு வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.

கப்பல் ஆடி ஆடி பயணிக்க சற்று தூரம் காவ்யாவும் அதனுடன் நகர்ந்து சென்றாள்.

சற்று நேரம் கழித்து அதை நீரில் இருந்து எடுத்து மீண்டும் பிரித்து அந்த மண்டப தரையில் வைத்து விட்டாள்.

“ஆமா, ஏன் அந்த கப்பலை பிரிச்சுட்டே?” என  கேட்டேன்.

“அது ரொம்ப சேடா இருந்துது மா” என்றாள் காவ்யா.

“கப்பலா?” என்றேன்.

“பேப்பர் மா!” என்றாள்.

“கரெக்ட், பேப்பர் தான், ஏன் சேடா இருந்துது? அது உன் கிட்ட என்ன சொல்லுச்சு?” என கேட்டேன்.

“நானும் ஒரு வீட்ல காலண்டர்ல சேபா இருந்தேன். என்ன ஏன் கப்பல் பண்ணி காத்து மழைல விட்டீங்க? என்ன ஏன் கஷ்டப்படுத்துறீங்கன்னு பீல் பண்ணுதும்மா” என சொன்னாள் காவ்யா.

கண்ணை கட்டியது எனக்கு.

நிஜம் தான். வேணாம்னா தூக்கி ஒரு ஓரமா வெச்சிருக்கலாம்.கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும்னு அதை கொண்டு வந்து இந்த பைல போட்டுட்டாங்க. சரி ஏதோ விபூதி பொட்டலம் மடிக்கவாவது மட்டும் உபயோகபடுத்தியிருக்கலாம். அத கப்பல் செஞ்சு வேடிக்கை பாக்குறோம்.

வெறும் காலி கப்பல், ஒரு பாரமும் சுமக்காமல் ஜாலியாக ஆடி ஆடி போய் கொண்டிருக்கிறது என நாம் நினைக்கிறோம். ஆனால் காற்று மழையில் பழக்கமில்லாத வகையில், திசையறியாமல் பயணிப்பதை விட வேறு எது பெரும் பாரமாய் இருக்க முடியும்” என மனதிற்குள் நினைத்து கொண்டேன்.

“உங்க வீட்டுல தாண்டி பேப்பர் பேசும், சைக்கிள் பேசும், நாய் குட்டி பேசும்” என முறைத்தாள் அம்மா.

“எல்லாம் பேசும்மா, நாம தான் கவனிக்கிறது இல்ல. அது சரி, பெத்த பொண்ணு, நா வாய தொறந்து என் கஷ்டத்த சொன்னாலே உன்னால புரிஞ்சிக்க முடியல” என்றேன்.

“இந்த கப்பல் மாதிரி தான்மா  நானும். வாழ்க்கை என்ன எங்க கூட்டிட்டு போகுது, எதிர்காலம் எப்படினு தெரியாம தத்தளிக்குறேன். உங்களுக்கு கடமை முடியனும்னு கல்யாணத்த பண்ணிடுறீங்க. அப்புறம் சமூகத்துக்காக அமைதியா காலத்தை ஓட்ட சொல்றீங்க” என்றேன்.

சற்று நேரத்தில் மழை சற்று குறைய வீட்டுக்கு கிளம்ப எழுந்தோம்.

“அடுத்த முறை லாயர பாக்க போனீன்னா சொல்லு ,நானும் கூட வரேன்” என்றாள் அம்மா.

மழையும் விட மனசும் தெளிவாக இருந்தது.

“அம்மா அங்க பாரு, நா தேடுன நம்பர்” என காண்பித்தாள் காவ்யா.

போற்றி மாலையின் எண்ணிக்கை பளிச்சென கல்வெட்டில் இருந்தது.

“மா, இன்னைக்கு உனக்கும் லக்கி டே, பப்பிக்கும் லக்கி டே!” என சிரித்தாள் காவ்யா.

தமிழ் சிறுகதை – அஞ்சு வார தீபம்

Diya made by lemon skin, ghee and cotton wick to pray Goddess Durga

“வண்ணமதிக்கு எப்போடா வரன் பாக்க ஆரம்பிக்க போற”? என கேட்டாள் பாட்டி.

“கடைசி பரீட்சை முடியட்டும்மா. நம்ம சாம்பமூர்த்தி தங்கமான புள்ளைன்னு ஒரு ஆபீசர் வரன் பத்தி சொல்லி இருக்கார். ஆவணி மாசம் பேசி முடிக்கலாம்” என்றார் அப்பா.

“வேலைக்கு போய் செட்டில் ஆகிட்டு கல்யாணம் பண்ணிக்குறேன் பாட்டி” என்றேன் நான்.

“நீ செட்டில் ஆகுற வரைக்கும் சிங்கிளா இருக்கவன், அங்கிள் வயசுல இருப்பான். அறுபது வயசு வரை வேலை செய்யலாம், ஆனா கல்யாணம் காலா காலத்துல பண்ணனும். புள்ளைங்கள பெத்து மட்டும் எங்க கிட்ட குடுத்துடு, நாங்க இத்தனை பேரு எதுக்கு இருக்கோம்? எங்க செல்லங்களை நாங்க பாத்துக்குறோம், நீ வேலைக்கு போ, யாரு தடுக்க போறா? என அக்காவுக்கு சொன்ன அதே ப்ளூ பிரிண்டை முகம் சிவக்க எனக்கும் சொன்னாள்.

பிறகு “அம்மனுக்கு அஞ்சு வாரம் தீபம் ஏத்தி வேண்டிக்க, நல்லது நடக்கும்!” என முடித்தாள்.

முதல் வாரம். கோவிலின் வெளி பிரகாரத்தில் இருந்த துர்கை சன்னதி முன் போய் நின்றேன்.

“என்ன வேண்டுதல்?” என்றார் அம்மன்.

“நல்லது நடக்க!” என்றேன்.

“பெற்றவர் கடமையை முடிக்கவா? உன் கனவுகள் சிறக்கவா? யாருக்கு நல்லது நடக்க?” என்றார்.

“நீங்க பாத்து எது நடத்தி குடுத்தாலும் சரி” என்றேன்.

“உங்கப்பாகிட்ட பேசுற மாதிரி பழம் மாதிரி என்கிட்ட பேசாதே. உனக்கு என்ன வேணும்னு தெளிவா சொல்லு” கிண்டலாய் சொன்னார் அம்மன்.

“யோசிச்சு சொல்றேன், இந்த கனிய குறுக்கில நறுக்கவா? இல்ல நெடுக்குல நறுக்கவா? எப்படி பிழிந்து தீபம் ஏற்றட்டும்? என சந்தேகம் கேட்டேன்.

“எப்படியாவது நறுக்கு. ஆனா இந்த குடும்பத்தை நல்லா தெரியும், இந்த வரன் கட்டி தங்கம்னு எவனாவது சொன்னா அவனை நறுக்கி தொரத்திடு! ஊர்ல இருக்க எல்லா வரனையும் சாம்பமூர்த்தி கட்டி தங்கம்னு தான் சொல்லுவான், உங்க ஆளுங்கள விட்டு நல்லா விசாரிக்க சொல்லு. அங்காளி பங்காளின்னு உங்க அம்மா வடிச்சு கொட்டுனாங்கல்ல, அந்த தீவட்டி தடியனுங்கள தீர விசாரிக்க சொல்லு. முடிஞ்சா நீயே பேசி பாரு.

சாம்பமூர்த்தி பேச்ச நம்புனவங்களுக்கு சம்பவம் காரண்ட்டி, சொல்லிட்டேன். உமன் எம்பவர்மெண்டு பத்தியெல்லாம் பேசி பரிசு வாங்கி இருக்க, நல்லா விசாரிச்சு, ஒடச்சி பேசி முடிவெடு.அப்புறம் வாரா வாரம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல லெமன வாங்கிட்டு வந்து என்கிட்ட சொல்யூஷன் கேட்காதே! என்றார் அம்மன்.

இரண்டாம் வாரம்.”திரி போட்டு எண்ணெய் ஊற்றவா? எண்ணெய் ஊற்றிவிட்டு திரி போடவா? என்றேன்.

“எப்படி வேண்டுமானாலும் போடு. ஆனால் வாழ்க்கை உன்னை புரட்டி போட்டாலும், உருட்டி போட்டாலும், மனச மட்டும் விட்டுடாதே. தாய் தகப்பன் தாங்காட்டாலும் சின்ன புள்ளைல இருந்து என்ன சுத்தி சுத்தி வந்த உன்னை நா விட்டு விடுவேனா?” என்றார்.

மூன்றாவது வாரம். “மூச்சு விடாமல் உன் போற்றி மாலையை சொல்லட்டுமா?” என்றேன்.

“எதுக்கு? ரிலாக்ஸ்டாவே சொல்லு. ஆனா எந்த உறவாவது மூச்சு முட்டுற மாதிரி இருந்தா ஊர் போற்றுதலுக்காக வாய் மூடி இருக்காதே” என்றார்.

நான்காம் வாரம். சாமிக்கு மட்டும் படையல், திருவிழா எல்லாம். உனக்கில்லயா? என்றேன்.

வாரா வாரம் உனக்கு ஏன் புத்தி சொல்றேன்னு இப்போ புரியுதா? என்றார்.

அஞ்சாம் வாரம். “காலம் முழுக்க எனக்கு வழி துணையா வரீங்களா? என்றேன்.

“காலமெல்லாம் வர முடியாது. வேணும்னா நீ ஹால் டிக்கெட் எடுத்துட்டு போகும்போதெல்லாம் எக்ஸாம் ஹால் வரைக்கும் துணையா வரேன். எப்படியாவது நல்லா படிச்சி, பாஸாகி, பொழச்சிக்க” என்கிறார்.

சில மாதங்கள் கழித்து அம்மன் முன் ஒரு கவரை வைத்து கும்பிட்டேன்.

“என்ன கல்யாண பத்திரிகையா? என கேட்டார் அம்மன்.

“இல்லை, என் அப்பாயின்மென்ட் ஆர்டர்”என்றேன். “நா பாஸாகிட்டேன்” என என்னை பார்த்து முதல் முறை சிரித்தார் அம்மன்.