காபி குடிக்கும் நேரம் இரண்டு தரப்பும் தங்களை கொஞ்சம் தயார் படுத்திக்கொண்டார்கள். “கண்டிப்பா ஜெயிக்க வெச்சுடுவீங்களா” என்றார் நேசப்பா.
ரத்தினம் சற்று முன்னே வந்து “இல்ல சார், எங்க ஆளு ஜெயிக்க வியூகம் சார் இது” என்றார்.
“அப்போ நா தோக்கணுமா?” என நெருடலாய் கேட்டார் நேசமணி.
“அதுக்காகத்தான் சார் இந்த ஆபர். ஜஸ்ட் கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணீங்கன்னா ஈஸியா ஒரு அமௌண்ட் பாக்கலாம்” என்றார் ரத்தினம்.
பல முறை பேப்பரில் படித்த செய்தி இப்போது அவர் முன்னே மலையாய் வந்து நிற்கிறது. திரும்பி சங்கு புஷ்பத்தை பார்க்க, தொடருங்கள் என்பது போல அவர் தலையை ஆட்டினார். தன் சுயமரியாதையின் விலை பட்டியலிடப்பட்டு பேரத்தில் இருப்பது உறுத்தியது. சற்று பிறகுதான் அது வெறும் தன் பெயருக்கான விலை என்று புரிந்தது. மூச்சை இழுத்து விட்டு சாய்ந்து உட்கார்ந்தார் நேசப்பா.
தோத்தா எனக்கு கெட்ட பேராச்சே சார்” என்றார் நேசப்பா.
அதெல்லாம் கொஞ்ச நாள்ல ஜனங்க மறந்துடுவாங்க சார். உங்க லாபத்தை மட்டும் பாருங்க சார். ஒண்ணுமே பண்ணாம உக்காந்த இடத்துல இருந்து ஒரு வாய்ப்பு. இது எல்லாருக்கும் கிடைக்காதுங்க. திரும்பவும் வரும்னு சொல்ல முடியாதுங்க. யோசிச்சு சொல்லுங்க சார்” என மண்டையை கழுவ ஆரம்பித்தார் ரத்தினம்.
அவரின் அனுபவம் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்தது.
ரத்தினத்திற்கு அவர் நாலு வரி முழுதாய் பேசி முடித்த பிறகு தான் நம்பிக்கையை உணர்ந்தார். இன்னும் கொஞ்சம் அழுத்தினால் எப்படியும் முடிக்கலாம் என நினைத்தார்.
நேசப்பா இயல்புக்கு வந்தார். இன்னும் கொஞ்சம் போட்டு வாங்கலாம் என ஆரம்பித்தார்.
“என் பேருக்கு வெறும் மூணு எல் தானா? என்றார். பேரம் ஆரம்பித்தவுடன் ரத்தினத்திற்கு உள்ளே பெருமை பொங்கியது.
இந்த ரத்தினம் பேசினா எந்த கொம்பனும் மடங்கிடுவான் என குதூகலித்தார். என்ன பேச்சுடா சாமி பேசுனாங்க ரெண்டு பேரும் என எரிச்சலானார்.
பல்வேறு உணர்ச்சிகள் அவரை ஆட்கொள்ள, அதில் சிறிது அவரின் உடலிலும் முகத்திலும் தெரிந்தது.
“தோக்கணும், அசிங்கப்படணும், பேரும் கெட்டு போகணும், சொசைட்டில நடமாட முடியாது சார். இவ்வளுவுக்கும் விலை மூணு எல் னா சரிபடாது சார்”, என முகத்தை சுளித்தார் நேசப்பா.
ரத்தினத்திற்கு பொறுமை கொஞ்சம் ஆட்டம் கண்டது.
“சார் நாலு எல் பைனல் பிளஸ் உங்க எல்லா செலவும் எங்களோடது.
சொசைட்டில நடமாட முடியாதுனு பீல் பண்ணீங்கன்னா ஒரு மாசத்துக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஊட்டில ஏர் பிஎன்பில தங்க ஏற்பாடு பண்ணித்தரேன். போய் வர்ற செலவையும் ஏத்துக்கறேன்” சர சரவென பேசி தீர்த்தார் ரத்தினம்.
உயிரோடு பிணமாகவும், தலை குனிந்து நடக்கவும், தலை மறைவாய் வாழும் வரையும் திட்டம் தருவது நேசப்பாவை உலுக்கி எடுத்தது. மிக சாதாரணமாய் ஆரம்பித்த ஒரு சந்திப்பு கொதிநிலையின் உச்சத்திற்கு அவரை கொண்டு சென்றது. தேர்தல் வெற்றிக்காக சக மனிதனை விலை பேசுவது, அந்த சமூகத்தில் எளிய விளிம்பு நிலையில் இருக்கும் வாக்காளர்களை குழப்பி, தவறாக வழி நடத்தி ஆதாயம் காண்பது என அராஜகத்தின் முழு உருவமும் அவர் முன்னே விஸ்வரூபமாய் நின்றது.
வாழ்நாள் முழுவதும் நேர்மையாகவும் வலுவான தார்மீக கொள்கை பிடிப்புள்ளவராகவும் எல்லா சூழ்நிலைகளையும் சந்தித்தவர் நேசப்பா. அவர் கண்ணியத்தின் மீதும் நன்னெறிப் பண்புகள் மீதும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு, அவரின் தனிப்பட்ட விழுமியங்கள் சூறையாடப்படும் அபாயத்திலிருந்தது. சமூக, அரசியல் மற்றும் பண செல்வாக்கோடு மூர்க்கமாகவும் அலட்சியமாகவும் நடத்தி அவரை இணங்கிப் போகும்படி செய்துவிடலாம் என எந்த எல்லைக்கும் செல்பவராக ரத்தினம் இருந்தார்.
பொருளாதார ரீதியாகவோ மன வலிமை ரீதியாகவோ பலகீனமானவர்களை எளிய இலக்குகளாக குறி வைக்கிறார்கள் ரத்தினம் போன்றவர்கள்.
உறுதியாகவும், மன உந்துதலோடும், நிதானமாக உணர்வுகளை கட்டுக்குள் வைத்தும் இந்த இழிவான போக்கில் சிக்காமல் இருக்க வழி வகைகளை சிந்தித்தார்கள் நேசப்பாவும் சங்கு புஷ்பமும்.
லக்ஷ்மிக்கு மனது சங்கடமாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் எப்படி தனியாக இந்த பிரச்சினையை சமாளிக்கப் போகிறார்கள் என மனது வருத்தப்பட்டார்.
தொடர்ந்து சங்கு புஷ்பம் அனுப்பும் செய்திகளில் இருந்து அங்கு என்ன நிலவரம் என தெரிந்து கொண்டார். செய்தி கேட்டதிலிருந்து இணையத்தில் இந்த தேர்தல், இதற்கு முன் நடந்த தேர்தலின் முடிவுகள் மற்றும் வாக்காளர் தகவல்கள் என எல்லா விஷயங்களையும் தேடி தேடி படித்தார்.
தனக்கு கிடைத்த எல்லா விஷங்களையும் அம்மாவுக்கு அனுப்பி வைத்தார். ஏதாவது ஒரு வகையில் அது அவர்களுக்கு உதவலாம் என் நம்பினார்.
கேண்டிடேட்டு புஷ்பாவுக்கு எதிராக டாக்டர் நேசமணி.
டாக்டர் நேசமணிக்கு வரும் வாக்குகளை பிரிக்க மற்றும் மக்களை குழப்ப அதே பெயரில் இருக்கும் சிலரை டம்மி வேட்பாளர்களாக நிறுத்துவது. சில வார்டுகளில் சொற்ப வாக்குகளில் வெற்றி வித்தியாசம் இருந்தது. ஆளும் கட்சி, எதிர் கட்சி, பிற வளர்ந்து வரும் கட்சிகள் ஏன் சுயேச்சை வேட்பாளருக்கு எதிராக கூட கடந்த தேர்தலில் இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டதை கவனித்தார். அது கேண்டிடேட்டு லிஸ்டில் அப்பட்டமாக தெரிந்தது.
யார் இதை செய்தார்கள் என பெரும்பாலும் பொது வெளியில் தெரியாது.
பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் இந்த போக்கு காணப்பட்டது.
படித்த வாக்காளர்களும் பாமரர்களும் பெரும்பாலும் அவர்கள் வார்டின் முழு லிஸ்டையும் அலசி ஆராய்வதில்லை. அது தெரிந்தாலும் பெரிதாய் எடுத்து கொள்வது இல்லை.
கேண்டிடேட்டு மற்றும் வாக்காளர்களும் இடையே இதில் நுட்பமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த டம்மி கேண்டிடேட்டுகள்.
அவர்கள் அரசியல் மற்றும் பொது வாழ்வில் இல்லாமல் இருக்கும் சாமானிய மக்கள்.
அவர்களுக்கு இருக்கும் தேவைகள் அல்லது பலகீனங்களின் காரணமாக டம்மியாக களம் காண்பவர்கள்.
அவர்களின் பெயரையும் சுய மரியாதையும் ஏதோ ஒரு அழுத்தம் அல்லது நிர்பந்தம் காரணமாக விலைக்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள்.
லக்ஷ்மி கடந்த தேர்தல் முடிவுகளை மீண்டும் ஒரு முறை எடுத்துக் பார்த்தார்.
எந்த ஒரு வார்டிலும் அதில் போட்டியிட போகும் நபரை அந்த கட்சி சார்ந்த அல்லது அரசியல் தொடர்புடைய நபர்களுக்கு மட்டுமே இவர் வேட்பாளராக வருவார் என தெரிந்திருக்கும்.
பிரபலமான சுயேச்சை என்றால் கூட ஊகிக்க முடியும்.
ஆனால் பொது ஜனத்துக்கு தெரியவோ ஊகிக்கவோ வாய்ப்பு மிக குறைவு.
அதனால் இந்த அணுகுமுறையின் ஊற்றுக் கண் பொது ஜனம் அல்ல, கட்சி சார்புடையவர்கள் என முடிவுக்கு வந்தார்.
அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அல்லல் படும் பொது ஜனம் கண்டிப்பாக இந்த குறுக்கு வழி வாய்ப்பை பற்றி சிந்திக்கவோ அல்லது அது தொடர்பான தகவல்களை அணுகவோ இயலாதவர்கள்.
அடி மட்டத்தில், சமூக அல்லது பொருளாதார செல்வாக்கு இல்லாதவர்களாக இருக்கும் இவர்களை குறி வைத்து செய்யப்படும் இந்த இழி செயல் தடுக்கப் பட வேண்டும் என நினைத்தார் லக்ஷ்மி. இதை செய்பவர்கள் பொது சமூகத்தில் ஆதாரத்தோடு வெளிப்பட வேண்டும் என எண்ணினார்.
அந்த வார்டில் பதினாறாயிரம் வாக்காளர்கள் இருந்தார்கள் பட்டியலில். லக்ஷ்மி அந்த லிஸ்டை பிரிண்ட் எடுத்தார். நன்றாக படிக்கும் சில மாணவிகளை அழைத்து நேசமணி மற்றும் புஷ்பா பெயர் உள்ளவர்களை குறித்துக் கொள்ள சொன்னார்.
அதில் எல்லா காம்பினேஷன்களும் அடக்கம். வெறும் புஷ்பா மட்டுமல்லாமல் புஷ்பவல்லி, புஷ்ப குமாரி, புஷ்பா ராஜ் என ஆண் மற்றும் பெண் பெயர்களும் தேடப்பட்டது.
அதே போல நேசமணி என்ற பெயருக்கும். நேசமலர், நேசகொடி, நேசசெடி என எது இருந்தாலும் குறித்துக் கொண்டார்கள்.
முழு லிஸ்டும் ரெடியானது. புஷ்பா பெயரில் பதினெட்டு பேர். நேசமணி காம்பினேஷனில் மூன்று பேர்.
எல்லாவற்றையும் ஒரு எக்சல் ஷீட்டில் போட்டு அம்மாவுக்கு அனுப்பினார் லக்ஷ்மி. அந்த லிஸ்டில் சங்கு புஷ்பமும் இருந்தார்.
“அண்ணிய விட சித்தா டாக்டர் நேசமணி பவர்புல் இந்த வார்டுல. அதுனால அதே பேர்ல இருக்குறவங்கள கேண்டிடேட்டா சுயேச்சையா நிக்க வெக்க ஏற்பாடு பண்றேன். கொஞ்சம் ஓட்டு பிரியும். அது எங்களுக்கு சாதகமா இருக்கும்னு நம்புறன். அப்புறம் உங்களுக்கு என்ன பண்ணணுமோ அதையும் பண்ணிடுவோம் என்றார்” ரத்தினம்.
“என்ன பண்ணுவீங்க சார்” என்றார் நேசமணி.
“எல்லா செலவும் அண்ணன் பார்த்துப்பார் சார், நீங்க பேப்பர்ஸ் மட்டும் கரெக்ட்டா குடுத்தா போதும். பசங்கள வச்சி எல்லா வேலையும் பக்கவா நடக்கும் சார். உங்க நாமினேஷன் ஓகே ஆச்சுன்னா ஒரு அமௌன்ட் குடுத்துருவோம்” என்றார் ரத்தினம்.
“எவ்ளோ தருவீங்க” என்றார் நேசப்பா.
“ஒரு மூணு எல் தருவார் சார் அண்ணன்” என்றார் அவர்.
சந்தேகப்பட்ட விஷயம் தெளிவாகி விட்டது. இது காலை சுற்றிய பாம்பு என நினைத்தார் சங்கு புஷ்பம். சிஸ்டத்தில் அமர்ந்தபடியே லக்ஷ்மிக்கு போனில் செய்தி அனுப்பினார்.
“அரசியல் விஷயமா வந்து இருக்கீங்க, உங்களுக்கு எதுவும் சாப்பிட தர மறந்துட்டேன் பாருங்க. இதோ வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.
ரத்தினத்திற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. எப்படியும் படிந்து விடுவார் என தோன்றியது.
“இந்தாங்க சாப்பிடுங்க”, என ட்ரேவை வைத்தார் நேசப்பா.
ஒரு சின்ன பிளேட்டில் பிரியாணியும் ஒரு கிளாஸ் விஸ்கியும் இருந்தது.
அடி வயிற்றில் சரக்கென்று கத்தியால் குத்தியது போலிருந்தது ரத்தினத்திற்கு.
அவர் முகம் வெளிறிப்போனது
“இது இது” என ஏதோ சொல்ல வந்து தடுமாறினார்.
“சாப்பிடுங்க சார். எங்க ஆளுங்களை இத்தனை வருஷமா கூட்டிட்டு போய் கவனிச்சுக்கிட்டீங்க. ஒரு நாள் நாங்க செய்ய கூடாதா” என்றார் நேசப்பா.
எதிரியின் அடி வயிற்றில் கத்தியால் குத்தியும் வஞ்சம் தீராமல் அவன் கன்னத்தில் பளுக் பளுக்கென்று போட்டார் போல வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.
“இது சரி இல்லீங்க. இப்ப வேணாம் சார்” என நாக்குழறினர் ரத்தினம்.
இது அவர் இதுவரை சந்திக்காத ஒரு நிகழ்வு. இந்த விதமான உபசரிப்பு அவரின் மொத்த தயாரிப்பையும் சீர்குலைத்தது. யாரை பார்க்க வந்தோம் என்ன பேச வந்தோம் என சில நிமிடம் எல்லாம் மறந்து தத்தளித்தார் ரத்தினம்.
“ஓ, பகல்ல சாப்பிடறதில்லையா, சரி காபி டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?” என வலையை விரித்தார் நேசப்பா.
ரத்தினத்திற்கு ஒரு பிடிப்பு கிடைத்தார் போலிருந்தது. ஆனாலும் அந்த டிரே அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.
முதல் பத்து நிமிடத்திலேயே கண்ணை கட்டியது ரத்தினத்திற்கு. பேசாம அரை மணிக்கு ஆயிரம் மட்டும் கொடுத்திருக்கலாம் என நினைத்தார்.
“காபில சர்க்கரை போடவாங்க?” என உள்ளிருந்து கேட்டார் சங்கு புஷ்பம்.
“வேணாம் சார்” என மெலிதான குரலில் சொன்னார் ரத்தினம்.
“பிபீ, சாருக்கு சர்க்கரை வேணாமாம்” என்றார் நேசப்பா நமுட்டு சிரிப்போடு.
“பிபீ இல்ல சார். நார்மல் தான். சுகர் மட்டுந்தான்” என்றார் ரத்தினம்.
“சங்கு புஷ்பத்தோட இன்னொரு பேரு பட்டர்பிளை பீ. அத தான் சுருக்கி என்ன பிபீனு கூப்பிடுவாரு” என சொல்லிய படியே காபி கொடுத்தார் சங்கு புஷ்பம்.
இடைப்பட்ட நேரத்தில் ரத்தினத்தின் பார்வை அடிக்கடி விஸ்க்கி கிளாஸ் மீது விழுந்து கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்திற்க்கு மேல் அதன் ஈர்ப்பு அவர் சுய கட்டுப்பாட்டை தகர்த்தது. அடி வயிற்றில் வாங்கிய கத்திக் குத்தின் ரணம் சிறு வடு கூட இல்லாமல் மறைந்து போனது. விஸ்க்கி கிளாஸ் வேலை செய்யும் என நேசப்பா நினைத்தது பொய்யாகவில்லை.
ஆனால் விஸ்க்கியை விட அந்த கிளாசை கட்சிக்காரர் அவ்வளவு நேசிப்பார் என நேசப்பாவே எதிர்பார்க்கவில்லை. எல்லாம் கோபால் சார் உபயம்.
ரத்தினம் ஆர்வம் தாளாமல் வாய் விட்டே கேட்டு விட்டார்.
“சார், இந்த கிளாஸ் சூப்பரா இருக்கு. எங்க சார் வாங்குனீங்க, எவ்ளோ விலை” என்றார்?
“அமெரிக்காவுல. ஜோடி பத்தாயிரம் நம்ம ஊர் வெலைல” கெத்தாக சொன்னார் நேசப்பா.
மூச்சடைத்துப் போவதற்கு முன் ஸ்டேஜில் இருந்தார் ரத்தினம்.
“அப்ப இந்த ஒரு கிளாஸ் மட்டும் அஞ்சாயிரமா சார்?” என வாயை பிளந்தார்.
“அஞ்சாயிரத்து சொச்சம் உள்ள இருக்க சரக்கு இல்லாம” என சொன்னார் சங்கு புஷ்பம்.
“கிளாஸ்ஸே அஞ்சாயிரம்னா சரக்கு எவ்ளோ இருக்கும்” என கணக்குப் போட்டார்.
ஆனாலும் சரக்கை விட அவரை சுண்டி இழுத்தது என்னவோ அந்த கிளாஸ் தான்.
ஒரு சைடில் இருந்து பார்க்க க்ளாஸுக்குள் கிளாஸ் போல் இருந்தது.
நீண்ட ஐங்கோண வடிவ வெளிப்புறமும் வைன் கிளாஸ் போன்ற உட்புறமும் மேலிருந்து உள்ளே பார்த்தால் சிறிய தங்க நிற சாண்ட்லியர் விளக்கு தரையில் பட்டு ஜொலிப்பதை போல விஸ்க்கி மிதந்து கொண்டிருந்தது.
ஐம்பது மில்லி கூட இல்லாத திரவம் முழு கோப்பையையும் வெளிற் மஞ்சள் நிறமாக்கியது.
சற்றே உட்புறம் குவிந்த வாய்ப்பகுதி தங்க வளையம் போல இருந்தது. கால் கோப்பைக்கும் கீழே இருந்தது விஸ்க்கி. மீதி இருந்த முக்கால் பகுதி காலி கோப்பையை ரசித்துக்கொண்டே இருந்தார் ரத்தினம்.
உயர் தர கண்ணாடியில் அருமையான வளைவுகளைக்கொண்டு பார்க்க கச்சிதமாக இருந்தது. மனதிற்குள் ஆருயிர் அண்ணனை நினைத்துக்கொண்டார் ரத்தினம்.
“பிச்சைக்கார பய. என்ன பதவி காசு இருந்து என்ன பிரயோஜனம். மாடு மாதிரி வேல செஞ்சாலும் ரெண்டு ரூபா பிளாஸ்டிக் கப்புல குடுக்குறான். அதுல ஊத்திக் குடிக்கவே என்னவோ வள்ளல் பிரபு மாதிரி பேசுறான்.
சார் தங்கம். நல்ல மனசுக்காரர். ஊரு பேரு தெரியாத எனக்கே அஞ்சாயிரம் ரூபா க்ளாஸ்ல அசால்ட்டா தர்றார்.
மனுஷன்னா இவர்தான்யா நல்ல மனுஷன். இந்த டீலிங் நல்ல படியா முடிஞ்சா அப்புறம் சாருகிட்ட டச்சுலேயே இருக்கணும் ” என யோசனை புல்லட்டை தாறுமாறாய் ஓட்டினார் ரத்தினம்.
“சார், பிரியாணி சாப்பிடலேன்னா பரவாயில்ல.போகும் போது பார்சல் பண்ணி தரேன். இதை குடிங்க சார்” என கிளாசை நீட்டினார் நேசப்பா.
புறக் காரணிகளால் வரும் ஆர்வம், எரிச்சல், பதட்டம், குழப்பம், தடுமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளுக்கும் எளிதாய் இரையானார் ரத்தினம்.
சூழ்நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள அவர் எடுத்துக் கொள்ளும் காலம் அதிகம். அது இங்கே அவர் முன் இருக்கும் எதிராளிகளுக்கு யோசிக்க அதிக நேரத்தை அளித்தது.
சங்கு புஷ்பமும் நேசப்பாவும் சொல்லாலும் செயலாலும் அதை ஒருவர் மாற்றி ஒருவர் செய்து அவரை நெருக்கி கொண்டிருந்தார்கள்.
புஷ்பா அண்ணிக்கு நேரடி அரசியல் அனுபவம் கிடையாது. மக்கள் தொடர்பும் கிடையாது.
கட்சிக்காரர்களின் நல்லது கெட்டது நிகழ்வுகளில் அண்ணன் மட்டும் தான் வருவார்.
அண்ணிக்கு இப்போது திடீர் ஆசை கவுன்சிலராகி விட வேண்டும் என்று.
ஒரே பெண் அவர்களுக்கு. கல்யாண சம்பந்தம் பேசும்போது அண்ணனும் அண்ணியும் ஆளுக்கொரு பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
தன் சமூகத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உயர் அந்தஸ்த்தில் உள்ள எல்லா வரன்களையும் குறித்து வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அண்ணி கவுன்சிலராவது, அடுத்து அண்ணன் எம்எல்ஏ ஆவது, பவரும் பசையும் இரு கரை புரண்டு ஓடுவது, பிறகு மாநில தலைமையும் அவரின் கிச்சனும் சேர்ந்து மகளுக்கு அட்சதை போட்டு திருமணம் நடத்துவது, அதை போட்டோ எடுத்து ஹாலில் மாட்டுவது என அவர்களுக்கு சின்ன சின்ன ஆசைகள் இருந்தது.
அந்த சின்ன ஆசைகளில் ஒரு ஆசையை நிறைவேற்றியே தீர்வது என கங்கணம் கட்டிக்க கொண்டு அண்ணிக்காக தேர்தல் வேலைகளை ஆரம்பித்தார் ரத்தினம்.
எல்லா நிலையிலும் பிரதான கட்சிகள் ரெண்டு மட்டும் தான் மாநிலம் முழுவதும்.
அண்ணியார் அதில் ஒரு கட்சி வேட்பாளர். அவருக்கு எதிராக முக்கியமான போட்டியாளர் தற்போதய ஆளுங்கட்சியை சேர்ந்த சித்தா டாக்டர் நேசமணி. மற்ற வேட்பாளர்கள் பற்றி அக்கறையில்லை.
இப்பகுதியில் இரு பிரதான கட்சிகளும் சம பலத்தில் இருக்கிறது. படித்தவர்கள், பாமரர்கள் என சரி அளவில் இருப்பவர்கள்.
அண்ணியார் நம்பி இருப்பது பாமரர் ஓட்டு வங்கி. அண்ணன் எப்படியும் கடைசி நேரத்தில் பசையை இறக்கி தன்னை ஜெயிக்க வைத்து விடுவார் என நினைக்கிறார் அண்ணி.
சித்தா டாக்டரும் மக்களுக்கு நல்ல அறிமுகம். கை சுத்தமானவர். குறை சொல்ல பெரிதாக எதுவும் இல்லை.
இந்த நிலையில் அண்ணியாரின் வெற்றிக்கு தன் பங்கை எப்படி ஆற்றுவது என யோசித்தார் ரத்தினம்.
அவர் சும்மா இருந்தாலும் அவரின் பல்லாண்டு கால அனுபவம் அவர் மூளையை தூங்க விடவில்லை. இரண்டு மூன்று நாட்கள் எல்லா வித்தைகளையும் யோசித்து பார்த்து அலசி ஆராய்ந்து கடைசியில் ஒரு வியூகத்தை அமைத்தார்.
நம்பிக்கையோடு போய் அண்ணனைப் பார்த்தார்.
“என்ன ரத்தினம், ஆளையே காணோம். அண்ணி உன்ன என்ன காணாமேன்னு கேட்டுக்கிட்டிருந்தா” என பாசத்தை தூவினார் அண்ணன்.
“அட நா எங்கண்ணே போகப்போறேன். நம்ம அண்ணி விஷயமாத்தான் கொஞ்சம் வேல பாத்துட்ருந்தேன்” என் பிட்டை போட்டார் ரத்தினம்.
“அருமைப்பா, என்ன விஷயம் சொல்லு” என் கூர்ந்து கேட்க ஆரம்பித்தார் அண்ணன்.
“கட்சிக்காரன் ஐடி விங்ல இருக்கலாம். ஆனா ஐடி விங்ல இருக்குற எல்லாரும் கட்சிக்காரங்க ஆக மாட்டாங்க” என நிதர்சனத்தை சொன்னார் அண்ணன்.
பிறகு சற்று யோசித்தவர் “ஒண்ணும் பிரச்சினை இருக்காதில்ல ரத்தினம். பாத்து ஹாண்டில் பண்ணு” என்றார்.
அப்பாடா என்றிருந்தது ரத்தினத்திற்கு. எடுத்த எடுப்பில் நிராகரிக்கவில்லை.
பார்த்து செய் என்கிறார். அண்ணனிடம் க்ரீன் சிக்னல் வாங்கியது உற்சாகத்தை கூட்டியது ரத்தினத்திற்கு.
“நன்றிண்ணே. எல்லா வேலையும் பக்காவா கச்சிதமா நடக்கும்ணே. ஆனா கேண்டிடேட்டு செலவு கொஞ்சம் ஆகும்ணே” என இழுத்தார் ரத்தினம்.
கூட இருக்குற ஆளுங்களிலேயே இவன் ஒருத்தன் தான் தானா வந்து ஒரு மேட்டர சொல்றான். வேலக்காரனா இருக்கான். மத்தவன்லாம் மண்டைய கழுவி வச்சிருக்கானுங்க. கார்ல பின்னாடி சீட் தேய்க்க தான் லாயக்கு புடிச்சவுனுங்க என் மனதிற்குள் அவர் டீமை திட்டி தீர்த்தார்.
அதெல்லாம் பாத்துக்கலாம் ரத்தினம். தோரயமா எவ்ளோ ஆகும்” என கேட்டார்.
கரன்சி மேட்டர் வரை இந்த பிளான் இன்றே வரும் என ரத்தினம் நினைக்கவில்லை.
இப்போதான் சூதானமா இருக்கணும் என மூச்சை இழுத்து விட்டார் ரத்தினம்.
“ஒரு அஞ்சு எல் ஆகும்ணே கேண்டிடேட் படிய. அப்புறம் நீங்க பாத்து எனக்கு என்ன தந்தாலும் ஒக்கேண்ணே” என தைரியமாய் சொல்லி முடித்தார் ரத்தினம்.
அடுத்த இரண்டு நிமிடங்கள் முள் மேல் நிற்பது போல் இருந்தார் ரத்தினம். அவர் அரசியல் வாழ்க்கையில் அவர் கையாளப்போகும் மிக உச்சபட்சமான ஒரு தொகை.
“சரி, நல்ல படியா செய் ரத்தினம்” என ஆசீர்வதித்தார் அண்ணன். அடுத்த நொடி அனிச்சையாக அண்ணண் காலில் லேண்ட் ஆனார் அன்புத் தம்பி இரத்தின முத்து சேகர்.
ரத்தினத்திற்கு தெரிந்த ஒரே தொழில் கட்சிப்பணி. தெரிந்த ஒரே கட்சி அவர் கட்சி மட்டுமே. கட்சியில் என்ன பணி என்றால் அவர் இருக்கும் நிலையில் பணம் தவிர மற்ற எல்லாமும் என சொல்லலாம்.
கிளை மட்டத்தில் இருந்து ஆரம்பித்து இருபது ஆண்டுகளாக களத்தில் பணியாற்றி ஒன்றியத்தின் அருகே இப்போது தான் கரை சேர்ந்திருக்கார்.
மாவட்ட அளவில் நல்ல அறிமுகம் இருந்தாலும் இன்னும் ஒரு படி முன்னேற்றத்திற்க்காக காத்திருக்கிறார்.
நிரந்தர தொழில் என்று எதுவும் கிடையாது. வருமானம் மழையாக இல்லெயென்றாலும் சமயங்களில் தூறலாகவோ இல்லை சாரலாகவோ இருக்கும்.
கருமேகம் சூழ்வது போல் எங்கு பிரச்சினையோ, வில்லங்கமோ இருக்கிறதோ, அங்கே வீசும் காற்றின் திசைக்கேற்ப சாய்பவர்.
விசுவாசத்தையும் உழைப்பையும் மட்டுமே கொட்டி கட்சியில் முன்னேற முடியும் என்று இன்று வரை நம்புபவர்.
தன் அனுபவத்தாலும் திறனாலும் தன்னால் நூதனமான முறையில் செயலாற்ற முடியும் என ஆழமான எண்ணம் உடையவர்.
கட்சி சகாக்களை ஒருங்கிணைத்தாலும் சிறு ஒளி கீற்று கூட மற்றவர் மீது விழாமல் பார்த்துக்கொள்வார்.
இப்போது அவர் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். கார்பொரேஷன் தேர்தல் காலம்.
ரத்தினத்தின் ஏரியாவில் அவர் கட்சி வேட்பாளராக நிற்பது எக்ஸ் எம்எல்ஏ மனைவி திருமதி புஷ்பா.
எக்ஸ் எம்எல்ஏ சமீபத்தில் ரத்தினத்திற்கு ஆருயிர் அண்ணனாக கிடைத்தவர்.
நீண்ட காலம் தூரத்தில் இருந்து ரத்தினத்தின் செயல் பாடுகளை பார்த்தவர் அண்ணன்.
சில மாதங்கள் முன்பு அவர் வலது கரம் அகால மரணமடைய புது வலது கரமாய் ஆனார் ரத்தினம்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்ட சபை தேர்தல். அண்ணனுக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது.
இப்போது மனைவி கவுன்சிலராகி, பிறகு அவரும் எம்எல்ஏ ஆகி விடுவார் என திட்டம்.
கார்பொரேஷன் அளவிலும் மாநில அளவிலும் தனக்கு இன்னும் சற்று பவர் கூடும் என நாடி நரம்பெல்லாம் நம்பிக்கை கொப்பளிக்க இருப்பவர் ரத்தினம்.
அரசாங்க கேபினட்டை விட கிச்சன் கேபினட்டின் செல்வாக்கு அதிகம் என கண்கூடாக பார்த்தவர் ரத்தினம். சில இடங்களில் ரெண்டு மூணு கிச்சன் கூட இருக்கும்.
அதற்கு வாழும் உதாரணம் அவர் அண்ணன். மாநில கிச்சன் கேபினட்டின் செல்லபிள்ளை.
ஸ்டேட்டு கிச்சனோ லோக்கல் கிச்சனோ, க்ளவுடு கிச்சனோ, எந்த கிச்சன் செல்வாக்கு கிடைத்தாலும் மிக்சர் சாப்பிட்டே அடுத்த நிலைக்கு போலாம் என்பது எழுதப்படாத விதி.
அண்ணியை வெற்றிக்கொடி நாட்ட வைத்துவிட்டால் பொலீரோ காரின் பின் சீட் தனக்கு மட்டும் தான் என தீர்க்கமாக நம்பினார் ரத்தினம்.
ஒரு பக்கம் எம்எல்ஏக்கு அருகாமை, இன்னொரு புறம் பொலீரோவில் ட்ரிப் அடித்து எப்படியாவது மேயருக்கு அறிமுகமாவது.
அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அரசாங்கம் போட்டதோ இல்லையோ ரத்தினம் தன் வளர்ச்சிக்கான திட்டத்தை தெளிவாக போட்டார்.
பிற்காலத்தில் இருவரில் காற்று யார் பக்கம் வீசுகிறதோ அங்கே சாமரம் வீசுவது என முடிவெடுத்தார்.
ஒரு திரைப்படத்தில் சொப்னா அண்ணிக்கு கேன்சர் என போலியாக அவருக்காக உருகி உருகி பிராத்திப்பார் அண்ணனின் நண்பர். அது போல போலியாக அண்ணிக்காகவும் அண்ணனுக்காகவும் உருகுவதாகவும் உயிரையே கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஒரு கூட்டம் இப்போது சமூகத்தில் ஊடுருவி இருக்கிறது.
அந்த கூட்டம் உண்மையானது இல்லை என்பதும் எல்லா அண்ணன் அண்ணிகளுக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும். ஆனால் இரு தரப்பும் மக்கள் மன்றத்தில் அதை ஒரு கலாச்சாரமாக கடை பிடித்து வருகிறார்கள்.
அது உட்கட்சி ஜன நாயகத்துக்கும், தேர்தல் ஜன நாயகத்துக்கும் வந்திருக்கும் கேன்சர் என மக்களுக்கு மட்டும் தெரியும்.
மறு நாள் காலை டோர் பெல் அடித்தது. அதே தெருவில் மளிகை கடை வைத்திருக்கும் வள்ளியப்பன் வந்திருந்தார்.
“உள்ள வாங்க சார்” என வரவேற்றார் நேசமணி.
“வாங்க சார். எப்படி இருக்கீங்க” என்றபடியே உள்ளேயிருந்து வந்தார் சங்கு புஷ்பம்.
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க” என நலம் விசாரித்தார்.
அவரோடு நீண்டகால நட்பு இவர்களுக்கு. இன்றளவும் அவர் கடையில் தான் பொருட்களை வாங்குவார்கள்.
என்ன டிஸ்கவுண்ட் போட்டாலும் ஆன்லைனில் வாங்க மாட்டார்கள். ஒண்ணாம் தேதியானால் லிஸ்ட் போட்டு போனில் அனுப்பி விடுவார்கள். கடை பையன் கொண்டு வந்து கொடுத்து விடுவான்.
ஒரு ஸ்திரமான வாடிக்கையாளராக அவரின் தொழிலுக்கு ஆதரவு தந்து வருகிறார்கள். அதனால் இவர்கள் மீது சற்று அதிக மரியாதையும் பிரியமுமாய் இருப்பார் வள்ளியப்பன்.
“சாரி சார். காலங்காத்தால வந்துட்டேன்” என்றார்.
“இந்தாங்க பஞ்சாமிர்தம். பையன் கல்யாணத்துக்காக திருச்செந்தூர் முருகருக்கு வேண்டிக்கிட்டேன். போயிட்டு நேத்து நைட் தான் வந்தோம்” என்றபடியே ஒரு பாட்டிலை நீட்டினார்.
சங்கு புஷ்பம் நன்றி சொல்லி பய பக்தியாக பெற்றுக் கொண்டார்.
“நீ பேசிகிட்டு இரு அபர். நா போய் இவருக்கு என் ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.
“சார் நெக்ஸ்ட் டைம் சின்னதா ஒரு கப்புல குடுங்க சார் போதும். ரெண்டு பேருக்கும் சுகர்” என்று சிரித்தார் சங்கு புஷ்பம்.
“நீங்க சாப்பிடுங்க மேடம். அப்புறம் வர்ற கெஸ்ட்டுக்கு எல்லாம் குடுங்க” என்றார் வள்ளியப்பன்.
“வீணாக்காமல் கெஸ்ட்டுக்கு தாராளமா தரலாம் சார். ஆனா நூறு குட்டி கப்பும் ஸ்பூனும் கழுவணும் இந்த பாட்டிலை முடிக்க” என நிஜத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.
“அது என்னவோ உண்மை தான்” என ஒப்புக் கொண்டார் வள்ளியப்பன்.
“சார், இன்னைக்கு லிஸ்ட் அனுப்பலாம்னு இருக்கோம். ப்ரீயா எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் போடாதீங்க. ரெண்டு பார் டிஷ் வாஷ் சோப்பு போடுங்க” என ரெக்வஸ்ட்டை சொன்னார் சங்கு புஷ்பம்.
கொல்லென்று அடக்க முடியாமல் கண்ணில் நீர் வர சிரித்தார் வள்ளியப்பன்.
“இன்னைக்கு என் நாள் நல்லபடியா ஆரம்பமாகுது. இதை நெனச்சு சிரிச்சே இன்னைக்கு பொழுது போகும்” என்றார் வள்ளியப்பன்.
காபியோடு நேசமணி வந்து சிரிப்பில் கலந்து கொண்டார். அரை மணி நேரம் கா கலப்பாக போனது.
“சரிங்க சார். பார்க்கலாம்” என சொல்லி கிளம்பினார்.
ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொண்டு பஞ்சாமிர்த பாட்டிலை சிஸ்டம் டேபிள் மேல் வைத்தார்கள்.
அடுத்து வரும் கெஸ்ட்டுக்கு மறக்காமல் கொடுக்க. அப்போது அவர்களுக்குத் தெரியாது அந்த கெஸ்டிடம் இருந்து கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று.