Tamil novel – Jiteswari – Part 15/21

Amsterdam riverfront

ரமா கல்யாணம் நாளை. ஜித்து வீடியோ கால் செய்து ரமாவின் அலங்காரத்தை பார்த்து சந்தோஷமாக பேசி வெளியே கிளம்பினாள்.

அங்கே பாண்டியில் ரமாவுக்கு நல்லபடியாக திருமண முடிந்தது. வெளியாட்கள் பெரும்பாலானோர் கிளம்ப நெருங்கிய சொந்தங்கள் மட்டும் மண்டபத்தில் இருந்தது.

ராஜுவின் அக்கா கணவர் ரவீந்தர் தாதிபத்திரி சிமெண்ட் பேக்டரியில் என்ஜினீயராக இருக்கிறார். அவரின் பள்ளி நண்பரும் பாண்டியில் வங்கி மேனேஜராக இருக்கும் பாலாவும் உறவுக்கார சிறுவர் சிறுமிகளின் அருகே அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்தில் ராஜும் அவரது தந்தையும் அங்கே வந்து அமர்ந்தார்கள். பேச்சுவாக்கில் சிறுவர்கள் எதிர்காலத்தில் என்ன படிப்பது என ரவியுடன் விவாதித்து கொண்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் கேட்ட குமரேசன் “எல்லாரும் நல்லா படிச்சு நம்ம ராஜு மாதிரி நல்ல அரசாங்க வேலைக்கு போகணும்” என பெருமை தூக்கலாக சொன்னார். “ஆமா கவர்மெண்டு வேல தான் காலத்துக்கும் நல்லது” என பக்கத்தில் இருந்தவர் ஆமோதித்தார்.

“என்ன பெரிய கவர்மெண்டு வேல. பசங்களா, நல்லா படிச்சு நம்ம ஜித்து மாதிரி வேலைக்கு போகணும். நல்ல சம்பளம். வெளி நாட்டுக்கு போய் வேல பாக்கலாம். இங்க குண்டு சட்டியில குதிரை ஓட்ட வேணாம்” என சத்தமாக சொன்னார் ரவீந்தர்.

ராஜூவுக்கும் குமரேசனுக்கும் சங்கடமாக இருந்தது.

“உங்களுக்கு தெரியுமா ரவீந்தர்? இவங்க ஹவுசிங் லோன் எங்க பிரான்ச்ல தான் இருக்கு. ஜித்துவோட இன்கம்னால தான் நல்ல அமவுண்ட்டுக்கு லோன் சேங்க்ஷன் ஆச்சு. ஜித்து தான் மெயின் அப்ளிக்கன்ட். இவங்க ரெண்டு பேரும் கோ-அப்ளிக்கன்ட்ஸ்” என விலாவரியாய் சொன்னார் பாலா.

சிறுவர்கள் ஆர்வமாகி விசாரிக்க ரவீந்தரும் பாலாவும் மேற்கொண்டு விஷயங்களை ராஜு ஜித்து தம்பதிகளை உதாரணம் காட்டி விளக்க ஆரம்பித்தார்கள்.

குமரேசனுக்கு அந்த இடத்தில் இருக்க மனம் ஒப்பவில்லை. அவர் கிளம்ப ராஜுவும் அவரை தொடர்ந்து வெளியேறினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் மண்டபம் முழுவதும் இதுவே பேசு பொருளாக இருந்தது.

ரமாவின் மாமியார் வந்து காமாட்சியின் அருகே உட்கார்ந்து ஜித்துவை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். காமாட்சி எல்லா விஷயங்களையும் கெத்தாக சொல்ல அவர் ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தார்.

“ஜித்துக்கிட்ட பேசணும். நா போய் அவரை கூட்டிட்டு வரேன்” என சொல்லி எழுந்து போனார்.

அதுவரை காத்திருந்த குமரேசன் காமாட்சியை ரூமிற்குள் அழைத்து ஜித்துவை திட்டி தீர்த்தார். ஏன் சம்மந்தமில்லாமல் இங்கு இல்லாத ஒரு பெண்ணை திட்டுகிறார் என காமாட்சிக்கு விளங்கவில்லை. ராஜுவும் முகம் தெளிவில்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததை கவனித்தார்.

“ஏண்டா அப்பாவும் பையனும் ஒரு மாதிரி இருக்கீங்க?” என கேட்டார் காமாட்சி.

ஒன்றும் சொல்லாமல் ராஜு முறைத்துவிட்டு நகர, “கல்யாணாத்த வெச்சிக்கிட்டு ஊருக்கு போக வேணாம்னு சொன்னா கேட்டாளா? இப்ப பாரு இவன் அவமானபட்டு நிக்குறான். அடுத்த வாரம் போயிருந்தா காதும் காதும் வெச்ச மாதிரி நமக்குள்ளேயே இருந்திருக்கும். இப்ப இவன குண்டு சட்டினு கிண்டல் பண்றாங்க” என எகிறினார்.

ரவீந்தரை மனதில் கரித்துக்  கொட்டினாள் காமாட்சி.

“எல்லாம் நீ குடுக்குற எடம். குடும்ப கவுரவம் இப்ப காத்துல பறக்குது” என மனைவியையும் சேர்த்து திட்ட ஆரம்பித்தார்.

எப்படியோ புலம்புங்கள் என காமாட்சி அங்கேயிருந்து நகர்ந்தார்.

அன்று மாலை ரிசப்ஷன் ஆரம்பித்து அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. இரவு பத்தரை வாக்கில் ரமாவின் மாமனார் சற்று ஓய்வெடுக்க மேடையின் கீழே வந்து குமரேசன் அருகே உட்கார்ந்தார்.

“உங்க மருமக பாரின்ல இருக்காங்களா? என விசாரித்தார்.

“ஆமாம், ரெண்டு வாரம் ஒர்க்ஷாப். அதுக்கு போயிருக்கு” என இறுக்கமாய் சொன்னார்.

“வீடியோ கால் போடுங்க. ரமாவ பாத்து பேசட்டும். அப்படியே நாங்களும் பேசுறோம்” என சொல்லி சிரித்தார்.

வேறு வழியில்லாமல் குமரேசன் காமாட்சியை கூப்பிட்டு போன் போட சொன்னார்.

காமாட்சி போன் போட ஜித்து பதிலளிக்கவில்லை.  அப்போது ஜித்து ரேஷ்மியுடன் முதல் நாள் போட்டிங்க் போன இடத்துக்கு மீண்டும் தனியே போய் இருந்தாள். போன் பையில் சைலென்டில் இருந்தது.

நாலைந்து முறை காமாட்சி போன் போட்டு பார்த்தார்.

“எடுக்கலீங்க. ஏதாவது வேலையா இருப்பா. மிஸ்ட் கால் பாத்தா அவளே கூப்பிடுவா” என சொல்லி போனை பையில் போட்டு கொண்டார் காமாட்சி.

“என்ன பெரிய வேலை. பாரின் போனா குடி கூத்துனு கும்மாளம் போடுவாங்க. எங்க நெதானத்துல இருக்க போறாங்க போன எடுக்க” என ஒரு சொந்தகார மூதேவி சொன்னது.

காமாட்சி அந்த ஆளை திட்ட குமரேசன் விருட்டென்று அங்கிருந்து எழுந்து கிளம்பினார்.

வீட்டுக்கு போய் குமரேசன் பேயாட்டம் ஆடி தீர்த்தார். வாய்க்கு வந்த வார்த்தைகளை கொட்டினார். அந்த நேரம் பார்த்து ஜித்து போன் வந்தது.

காமாட்சி முழிக்க “எடுத்து பேசு” என அதட்டினார்.

காமாட்சி பேச ஆரம்பிக்க பின்னாலிருந்து குமரேசன் கத்த ஆரம்பித்தார்.

“இவ்ளோ நேரம் எங்க போனானு கேளு, எத்தனை முறை போட்டோம் ஏன் எடுக்கலைனு கேளு” என கத்தினார்.

“ஆன்ட்டி, நா போட்டிங் போயிருந்தேன். இப்ப தான் பார்த்தேன். ஏன் டென்ஷான இருக்காரு?” என கேட்டாள் ஜித்து.

அவளுக்கு பதில் சொல்வதற்கு முன் அவர் வாயை அடைப்பதற்காக “ஏங்க அவ போட்டிங் போயிருக்கா. இப்ப தான் போன பாத்து திரும்ப கூப்பிடுறா. சும்மா கத்தாதீங்க” என்றார் காமாட்சி.

“என்ன இங்க பாண்டில இல்லாத போட்டிங்கா? அங்க போய் புதுசா பாக்க. ஒரு போன் வந்தா எடுத்து பேச முடியாதா?” என மீண்டும் எகிறினார்.

தான் போனை எடுக்காததால் பயந்து போய் இருக்கிறார். அதனால் கோபப்படுகிறார் என நினைத்தாள் ஜித்து.

“ஏங்க போட்டிங் போனது ஒரு குற்றமா? விடுங்க” என்றார் காமாட்சி.

“போட்டிங் போனாளா இல்ல பெட்டுக்கு போனாளா, யாருக்கு தெரியும்? இதுக்கு தான் பம்பாய்க்காரி வேணாம்னு படிச்சு படிச்சு சொன்னேன். அம்மாவும் பையனும் ஒத்த கால்ல நின்னீங்க. இப்ப பாரு இவன் தலை  குனிஞ்சு நிக்குறான்” என தேவையில்லாமல் வார்த்தையை விட்டார் குமரேசன்.

“என்ன பேச்சு பேசுறீங்க, நாக்கை அடக்குங்க” என கத்தினார் காமாட்சி.

ஜித்துவுக்கு தான் கேட்ட வார்த்தை எதையும் ஏற்று கொள்ள இயலவில்லை.

“ஏன்டா மரம் மாதிரி நிக்குற, நாலு கேள்வி நல்லா கேளு அவளை”என்றார் குமரேசன்.    

ராஜு அந்த இடத்தில் இருக்கிறான். அவன் முன்பு தான் இவ்வளவு பேச்சும் என தெரிந்து கொண்டாள்.

காமாட்சி சுதாரித்து போனை கட் செய்வதற்குள் “நா உங்க பேச்ச கேக்காதது தப்பு தான்ப்பா” என்றான் ராஜு.

 காமாட்சி போனை கட் செய்வதற்குள் ஜித்துவே போனை வைத்து விட்டாள்.

ஜித்துவுக்கு அது நிலவை நோக்கிய பயணமாக தோன்றியதால் மறுநாளும் அதே இடத்திற்கு வந்திருந்தாள். இப்போது இந்த பேச்சுகளை கேட்ட பிறகு இப்படியே பயணப்பட்டு இந்த பூமியை விட்டு எங்கோ தொலைதூரம் போய் விட்டால் நல்லது என தோன்றியது. முதல் நாள் ரசித்த நிலவை மீண்டும் பார்க்கும் விருப்பமில்லாமல் தரையை பார்த்தபடியே வெகு நேரம் அமர்ந்திருந்தாள்.

அந்த வார்த்தைகள் கொடுத்த வலி எவ்வளவு வீரியமானது என உணரவே அவளுக்கு சற்று நேரமானது.

மீண்டும் காமாட்சியின் போன் வந்தது.

ஜித்து எடுத்தவுடன் “இவங்களுக்கு நல்ல சாவே வராது. பொம்பளைங்கள தப்பா பேசுனவனுங்க நல்ல கதி காண மாட்டானுங்க. நீ எதுவும் மனசுல வெச்சுக்காதே. பத்திரமா ரூமுக்கு போயிட்டு எனக்கு போன் பண்ணு. இருக்குற கொஞ்ச நாள்ல அங்க இதையே நெனச்சுக்கிட்டு இருக்காதா. அவ்வளவு தூரம் தனியா போன பொண்ணு நல்லபடியா வந்து சேரணும்னு நா கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கேன். இந்த நாதாரி மனுஷன் புத்தி கெட்டு பேசுறார். எனக்காக மன்னிச்சுடுமா” என தயங்கியபடியே சொன்னார் காமாட்சி.

எதுவும் சொல்லும் மன நிலையில் அவள் இல்லை. சரியென்று சொல்லி போனை  வைத்தாள்.

நேரம் ஆக ஆக குளிர் அதிகமானது. ஜித்து எழுந்து கோட்டை மாட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

மனைவியாக, அம்மாவாக, மருமகளாக அல்லாமல் ஜித்து என்ற தனி பிறவியை மட்டும் நோக்கி வீசப்பட்ட அம்புகள் அவை. அந்த வார்த்தைகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல என தோன்றியது அவளுக்கு.

ஒரு மணி நேரம் நடந்தவள் அப்பகுதியில் நதியின் கடைசி முனை வரை போய் சேர்ந்திருந்தாள். சற்று நேரம் முன்பு அவளை சந்தோஷமாக சுமந்த நதி இப்போது அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

அவள் நின்ற இடத்தின் அருகே அவளையே வாஞ்சையாய் பார்த்துக் கொண்டிருந்தது லிண்டன் மரம்.

“நீ ஒரு அருமையான மனைவி ஜித்து. ராஜு ஈஸ் கிப்ட்டட். ஸோ இந்த மரம் உன்ன ப்ளேஸ் பண்ணுதுனு நா நம்புறேன்” என ரேஷ்மி சொல்லிய வார்த்தைகள் அவளின் மனதை இன்னும் ரணமாக்கியது.

அங்கிருந்து பார்த்தால் ஒரு பெரிய டாய் ஹவுஸ் தெரிந்தது. மீண்டும் இந்த பக்கம் வருவாளா என தெரியாததால் அந்த கடைக்குள் நுழைந்தாள். வண்ண வண்ண பொம்மைகள் குவிந்து கிடந்தன. புஷ்கருக்கும் கல்யாணிக்கும் பிடித்த மாதிரியான பொம்மைகளை தேர்வு செய்து கொண்டு பணம் செலுத்த வரிசையில் போய் நின்றாள்.

“நா உன்னோட பில் பே பண்ணட்டுமா? என பின்பக்கமிருந்து ஒரு குரல் கேட்டது. வேறு யார் கார்சன் தான்.

அவள் அருகே குனிந்து “பியாண்ட் இமாஜினரி லேவிஷ் லைப்ஸ்டைல்” என முணுமுணுத்தார்.

நாம் ஏன் கார்சனை அடிக்கடி சந்திக்கிறோம் என ஜித்து நினைக்கையில் வரிசை நகர அவள் போய் பணம் செலுத்தி பொருட்களை கவரில் போட்டு எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

ஆட்டோமேட்டிக் டோர் தானாய் திறக்க கடையை விட்டு வெளியே வந்தாள். கார்சனும் பக்கத்தில் நடக்க ஆரம்பித்தார்.

“ஜித், நா உன்னை வேணும்னே பாலோ பண்ணலை. ஜஸ்ட் ஷாப்பிங் வந்த போது உன்னை பார்த்தேன். இப்ப அந்த ஆட்டோ டோர் தொறந்தது இல்ல, அது போல தான் உன்ன பார்த்தா என்னால ரியாக்ட் பண்ணாம இருக்க முடியல. ஐ அம் ஜஸ்ட் லைக் தட் சென்சார் அண்ட் ஆக்ட்ஸ் ஈவன் வித்தவுட் பிஸிக்கல் கான்டாக்ட்” என விஷமமாய் சொன்னார்.

இந்த ஆள் என்ன ஜென்மம் என நினைத்தபடியே போனை பார்க்க அவள் புக் செய்த டாக்ஸி அங்கே வந்தது. பேசாமல் ஏறி உட்கார்ந்து கதவை சார்த்த கார்சன் அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தார்.

Tamil novel – Jiteswari – Part 2/21

Covid hospital situation

அவர் கணவர் ஒரு வாரம் கழித்து குணமாகி வெளியே வந்தார். பத்து நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை கற்பகத்திற்கு.

“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என செய்தி அனுப்பினார் இரவு. மறு காலை காலமானார். ஒரிசாவில் இருந்து மகனும் பாண்டியில் இருந்து மகளும் வர இயலாத சூழல்.

சாவின் விளிம்பு வரை சென்று மீண்ட நிலையில் பித்து பிடித்தார் போல இருந்தார் அவர் கணவர். செய்தி வர சங்கு புஷ்பமும் நேசப்பாவும் ஒடிந்து போனார்கள். நடக்க கூடாது என்று வேண்டிய ஒன்று நடந்து விட்டது.

கதறும் பிள்ளைகளை தாங்கவோ, கடந்து போனவருக்கு மரியாதை செய்யவோ இயலாத சூழல். இரண்டு மணி நேரம் அமைதியாக போனது.

சங்கு புஷ்பம் ஆனந்துக்கு போன் போட்டார்.

ஆனந்த் ஒரு மணி நேரத்தில் இரண்டு செட் கவச உடைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பிள்ளைகள் யாருக்கும் சொல்லாமல் இருவரும் கிளம்பி மருத்துவமனைக்கு போய் சேர்ந்தார்கள்.

அங்கே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார் கற்பகத்தின் கணவர்.

நேசப்பா போனதும் பாய்ந்து கட்டிக் கொண்டு கதறினார்.

சங்கு புஷ்பம் அவரை தாங்கலாய் பிடிக்க அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.

அரை மணி நேரம் ஆனது அவர் சற்று நிதானமாக.

ஜித்து போன் வந்தது அப்பாவிற்கு. அவர் போனை எடுத்து சங்கு புஷ்பத்திடம் நீட்ட உடைந்து போனார் சங்கு புஷ்பம்.

நேசப்பா கைத்தாங்கலாக அவரை அழைத்து சென்று காரில் அமர வைத்தார்.

அந்த நிமிடம் அந்த போனின் ஓசை சங்கு புஷ்பத்தின் மனதை பிசைந்தது. முதலில் அதை சைலண்டில் போட்டார். அவர்களுக்கு விஷயம் தெரியும். அப்பாவிடம் பேச விரும்புகிறாள்.

கால் ஹிஸ்டரியை பார்த்தார். வெறும் இரண்டு நிமிடம் மட்டும் பேசியிருக்கிறார்கள் காலையில். மகனிடமும் சில நிமிடங்கள்.

முழு கவச உடையில் சங்கு புஷ்பம் உள்ளே போனார். சக சிஸ்டர்கள் எல்லாரும் ஆழ்ந்த வருத்தத்திலும் பணிச் சுமையிலும் இருந்தார்கள்.

சற்று நேரம் எட்ட இருந்து கற்பகத்தை பார்த்தார்.

“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என அவரின் கடைசி செய்தி மனதில் நிழலாடியது.

ஜித்துக்கு போன் போட்டார். “அம்மாவ பாக்குறியாடா கண்ணா” என மெதுவாய் கேட்டார்.

அந்த பக்கம் கேட்ட ஓலக்குரல் சங்கு புஷ்பத்தின் திடத்தை அசைத்துப் பார்த்தது. மகளும் மகனும் பார்த்து  கதற அந்த சிறிய போனை பிடிக்கக்கூட வலுவில்லாமல் நின்றார் சங்கு புஷ்பம்.

பிறகு அங்கு வந்த ஆனந்த், வலுக்கட்டாயமாய் சங்கு புஷ்பத்தை வெளியே அழைத்து வந்தார்.

அங்கே இருந்த சிறிய கட்டை சுவரின் மீது அமர்ந்தார் சங்கு புஷ்பம். சற்று நேரத்தில் வண்டி வர இறுதி சடங்கிற்கு கிளம்பினார்கள்.

எட்ட நின்றவாறு நேசப்பாவும் சங்குபுஷ்பமும் அவரவர் போனில் ஜித்துக்கும் அவர் அண்ணனுக்கும் காண்பித்தார்கள். சிம்பிளாக சில சாங்கியங்களை அவர் கணவர் செய்ய ஐந்து நிமிடங்களில் உள்ளே போனார் கற்பகம்.

ஆறாத்துயருடன் மகளும் மகனும் விடையளிக்க வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

அடுத்த இரண்டு நாட்கள் அவர்கள் இருவரின் போனும் அமைதியாக இருந்தது. யாருடனும் பேசும் மன நிலையில் அவர்கள் இல்லை.

அவர்கள் இருவருமே ஓரிரண்டு வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேசவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து சற்று கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் அழைத்து செல்ல மகன் வர கற்பகத்தின் கணவர் ஒரிசா கிளம்பினார்.

ஜித்து வந்து அவர்களை வழியனுப்பி பிறகு இவர்களை சந்தித்து பேசி விட்டு பாண்டிக்கு கிளம்பி போனாள்.