சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 3/4

Family time

கதை நேரம் முடிந்து குழந்தைகள் வராண்டாவிற்கு செல்ல, ஊர் தலைவரும் கலாவதி டீச்சரும் வந்தார்கள்.

“லட்டு எடுத்துக்கம்மா, பசங்களுக்கும் குடுங்க” என பாக்ஸை நீட்டியவர் “நீ செஞ்சது பெரிய உதவிம்மா, நீ இல்லேன்னா நாங்க அடிக்கடி டவுனுக்கு போய் அலைய வேண்டியதா இருந்திருக்கும்” என சந்தோஷமாக நன்றி சொன்னார்.

கொஞ்ச நேரம் பேசி முடித்து விட்டு அவர் கிளம்ப, கலாவதி டீச்சர் மட்டும் இருந்தார்.

“தாரா, உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார். அவர் சொன்னதின் சுருக்கம் இதுதான்.

பொன்னி நர்ஸ் மற்றும் தலைவர் மூலமாக, தாரா பற்றி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு தெரிய வந்திருக்கிறது.

அவர் தாராவை பகுதி நேரமாக அந்த ஊர் பெண்களுக்கு யோகா சொல்லி தர நியமிக்க முடிவு செய்தார்.

அருகாமையில் இருந்த ஒரு ஷூ கம்பெனியின் CSR டீமிடம் பேசி, ஒரு குறிப்பிட்ட தொகையை தாராவுக்கு ஊதியமாக கொடுக்க ஏற்பாடும் ஆகி இருக்கிறது.

தாராவுக்கு இந்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும், டிப்ளோமா மட்டும் படித்த தான் இதை பெறுப்பேற்று செய்ய முடியுமா என சந்தேகமாக இருந்தது.

மேலும் மாலை நேரத்தில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இந்த வேலையில் ஈடுபட்டால் எப்படி வீட்டை கவனிப்பது எனவும் குழப்பமாக இருந்தது.

“டிப்ளமோ மட்டும் தான் கைல இருக்கு டீச்சர். இன்னும் டிகிரி முடிக்கல. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு, யோசிச்சு சொல்றேன் டீச்சர், ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் தாரா.

“ஷூ கம்பெனில இந்த ப்ரோக்ராம் அப்ரூவ் ஆக கொஞ்ச நாள் ஆகும், கவலைப்படாதே ” என சொல்லி கிளம்பி போனார் கலாவதி டீச்சர்.

அன்று இரவு உணவு நேரம். “இன்னைக்கு என்ன கதை சொன்னம்மா பசங்களுக்கு?” என கேட்டது சேனா.

“சூப்பரான யானை கதை. சீக்கிரம் சாப்பிட்டு வாங்க, சொல்றேன்” என்றாள் தாரா.

சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்து வரிசையாக பாய் விரித்து தாரா படுக்க, இருவரும் வந்து ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டார்கள். மூடிய அவர்கள் கண்களுக்குள் காடு விரிய ஆரம்பித்தது.

கதை கேட்டபடியே மேகநாதன் கிச்சனை சுத்தம் செய்து முடித்தார். பிள்ளைகள் இருவரும் தூங்கிவிட “இங்க வாங்க ஒரு விஷயம் பேசணும்” என அழைத்தாள் தாரா.

டீச்சர் சொன்ன விஷயத்தை சொல்லி தன் குழப்பத்தை விளக்கினாள். பொறுமையாக கேட்ட மேகநாதன் “தாரா, ரங்குவ நெனச்சி பாரு, உன் கேள்விக்கு பதில் கிடைக்கும். இந்த வாய்ப்பு உனக்கு கெடச்சா, நாம ரெண்டாவது வண்டிய கடனில்லாம சீக்கிரம் வாங்கிடலாம்” என சொன்னார்.

அன்று இரவு தூக்கத்தில் பலவகையான பொறுப்புகள் வெவ்வேறு உருவங்களில் அவளை சுற்றி வருவது போல மங்கலாக ஒரு கனவு வந்தது.

அடுத்த வந்த நாட்கள் சாதாரணமாக இருந்தாலும் தாராவின் மண்டைக்குள் பல கேள்விகளை எழுப்பி கொண்டே இருந்தது.

ஒரு நாள் போல, இருபது சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்வது அசாதாரணமான வேலை. அவர்களுக்கு அமைதியான சூழலை அமைத்து கொடுப்பதே பெரும் பொறுப்பு.

ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, பேசி, உணவு கொடுத்து தூங்க வைப்பது என அடிப்படை பராமரிப்பு பணிகள் ஏராளம்.

கூடவே அவர்களின் கற்றல் தேவைகளையும் பூர்த்தி செய்து, அந்த நாளின் முடிவில் அவர்கள் பெற்றோரிடம் நல்ல படியாக ஒப்படைப்பது வரை மறைமுகமான ஒரு அழுத்தம் அவள் மீது இருக்கிறது.

மறுபுறம் வீடு, குழந்தைகள், குடும்பத்தின் பொருளாதார சூழல் என அடுக்கடுக்காய் பல விஷயங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது.

அந்த வாரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம்  கலாவதி டீச்சரிடம் போய் பேசினாள். அவருடைய அனுபங்களை கேட்கும் போது, தான் மட்டும் இந்த சூழலில் இல்லை என்பது தாராவுக்கு புரிந்தது.

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 1/4

anganwadi golden jubilee celebration

தாரா அன்று அங்கன்வாடிக்கு சென்று சேரும்போது பெரும்பாலான குழந்தைகள் வந்திருந்தார்கள். உதவியாளர் வெண்மணி அவர்களை அமர வைத்துவிட்டு, தண்ணீர் குடம் கொண்டு வந்து வைத்தார்.

பொன்னி நர்ஸின் போன் வந்தது தாராவுக்கு. “நம்ம கல்பனாவுக்கு பொண்ணு பொறந்திருக்கு தாரா. நார்மல் டெலிவரி. உன்கிட்ட தலைவர் சொல்ல சொன்னார். அப்புறம் வந்து உன்கிட்ட நேர்ல பாத்து பேசுறேன்னார்” என சொல்லி போனை வைத்தார்.

கல்பனா ஊர் தலைவர் மகள். கர்ப்ப காலத்தில் ரெகுலராக அங்கன்வாடிக்கு வருவாள். பேச்சு வாக்கில் ஒரு நாள் சுக பிரசவத்துக்காக சில யோகா முறைகளை டாக்டர் செய்ய சொன்னதாகவும், அதை யாருடைய கண்காணிப்பும் இன்றி தனியே செய்ய பயமாக இருப்பதாகவும் சொன்னாள்.

தாரா யோகாவில் டிப்ளமோ பட்டம் முடித்திருந்தாள். “சரி கல்பனா, நீ கவலைப்படாதே. நா வீட்டுக்கு வந்து நேர்ல சொல்லி தரேன். நீ பயமில்லாம செய்” என சொல்லி ஊக்கப்படுத்தினாள்.

அடுத்த நான்கு மாதம் தாராவின் நேரடி மேற்பார்வையில், யோகா, தியான பயிற்சி மற்றும் ஊட்டசத்து குறிப்புகள் என கல்பனாவுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தது. இன்று அவளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது தாராவுக்கு சந்தோஷமாக இருந்தது. வெண்மணி அம்மாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி விட்டு வகுப்பறைக்கு சென்றாள்.

அன்றைய நாளுக்கான வேலைகளை தாரா யோசித்துக்கொண்டிரும்போது, தூரத்தில் ஷாருக்கின் அழுகுரல் கேட்டது.

“இன்னைக்கும் அழுவுறானா? இவனை எப்படி சமாளிக்க போறம்மா?” என்றார் வெண்மணி.

“வரட்டும், பாத்துக்கலாம்” என சொன்னாள் தாரா.

தேம்பி தேம்பி அழுதபடியே வந்த ஷாருக்கை வெண்மணி வாங்கிக் கொண்டு அவன் அம்மாவை அனுப்பி வைத்தார்.

“ஏன்டா அழுவுற?” என அதட்டலாக கேட்டாள் தாரா.

சற்று அழுகை நின்று, “அக்காக்கு மட்டும் ஜாமென்டரி பாக்ஸ் வாங்கி கொடுத்துட்டாங்க. நா கேட்டா அப்புறம் வாங்கி தரேன்னு சொல்றாங்க” என சொல்லி மீண்டும் அழுகையை ஆரம்பித்தான்.

தாரா யோசிக்க “அவுங்க அக்கா ஆறாம் க்ளாஸ் படிக்குறாங்க. இவனுக்கு எதுக்கு?” என அவனை அல்பமாக பார்த்துக் கொண்டே சொன்னது ஆஷாதேவி.

முக்திக்கு முன் நிலையில் இருப்பது போல இருந்தது ஆஷாதேவியின் உரை.

“சரி வாங்க, எல்லாரும் ரவுண்டா உக்காருங்க, உங்களுக்கு கதை சொல்ல போறேன்” என டாபிக்கை மாற்றினாள் தாரா.

ஷாருக் இன்னும் சமாதானம் ஆகவில்லை. ஜாமென்டரி பாக்ஸ் விஷயத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எண்ணி உருண்டு உருண்டு அழுது கொண்டிருந்தான்.

இப்போது தான் எண்களில் நூறு வரை சொல்ல கற்று கொண்டிருக்கிறான். இவனுக்கு ஜாமென்டரி பாக்ஸ் தேவைப்பட இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது. அக்காவுக்கு கிடைத்தது தனக்கும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தவிர வேறொன்றுமில்லை.

“டேய் ஷாருக், வெண்மணி அம்மாவுக்கு கால் வலி இருக்குது. அவங்களால செடிக்கு தண்ணி ஊத்த முடியல. கொஞ்சம் போய் வராண்டால அழுவுடா, அதுங்களுக்காவது தண்ணி கிடைக்கும்” என ஆஷாதேவி பொறுமையிழந்து கத்தியது.

ஷாருக்கை இன்ப்ளுயன்சாராக கருதி ஷைலா டேமை திறந்தது.

“நீ ஏன் அழுவுற?” என தாரா கேட்க, “அம்மா வேணும்!” என மூக்கை சிந்தியது.

ஷைலா அங்கன்வாடிக்கு வர ஆரம்பித்து பத்து மாதங்களுக்கு மேலாகிறது!

இப்போது என்ன திடீர் அம்மா பாசம் என ஆஷாதேவிக்கு புரியவில்லை.

இதுங்களால் கதை நேரம் குறைவதை அதனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஷாருக்கை அம்போவென விட்டு விட்டு ஷைலாவை மியூட் செய்ய நகர்ந்தது.

தாரா எல்லோரையும் கவனித்தவாறே, பாயை விரித்து ஒவ்வொருவராய் உட்கார வைத்து, சாமிக்கு பூ வைத்து விட்டு, “எல்லாரும் கண் மூடி, கை கூப்புங்க” என சொன்னாள்.

“ஷாருக், வா இங்க வந்து உக்காரு. ஷைலா, நீ இந்த பக்கம் வா” என ரெண்டு பேரையும் தன்னருகே அமர்த்திக் கொண்டாள் தாரா.

“ஷாருக், உனக்கு என்ன அனிமல் புடிக்கும் சொல்லு?” என கேட்டாள்.

“சிங்கம்” என சிவந்த கண்களோடு வீரமாய் சொன்னான் ஷாருக்.

 ஆஷாதேவி வேண்டுமென்றே களுக்கென சத்தமாக சிரிக்க, மற்ற வாண்டுகளும் சிரிக்க ஆரம்பித்தது.

தாராவுக்கே அவன் பதில் சொன்ன வேகம் காமெடியாக இருந்தது.

“சைலன்ஸ், ஷைலா உனக்கு யார் பிடிக்கும்?” என கேட்டாள்.

“யானை” என்றது ஷைலா.

“சூப்பர், இன்னைக்கு நம்ம கதைல சிங்கமும் யானையும் தான் வர போறாங்க” என தாரா சொல்ல, ரெண்டு பேரும் அடுத்த நொடியே உற்சாகமானார்கள். அவரவர் மனதில் அந்த கதைக்களம் விரிய ஆரம்பிக்க, அந்த பள்ளி வளாகம் ஒரு மாய காடாக மாறிக் கொண்டிருந்தது.