ஒரு பேரே வரலாறு!

A pani poori couple chatting in the garden

கோல்கப்பா : என்ன குமாரி, ஆட்சி மாறுனா காட்சி மாறும்ன்னு பாத்தா இந்த மாதிரி நடக்குது?

பூரி குமாரி : காட்சி மாறலீங்க! சாரை சாரையா கட்சி மாறுறதுதான் நடக்குது!

கோல்கப்பா : ஹம்ம்..இது not good-ka!

பூரி குமாரி : ஆமாம் bro, இது very wrong bro!

கோல்கப்பா : தொடவும் மாட்டோம், தொட்டவுங்களையும் விட மாட்டோம்னு கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு வீர வசனம் ஒலிச்சுதே, நீ கேட்டியா அதை?

பூரி குமாரி : ஒலிச்சு என்ன பிரயோஜனம் கோல். பலிச்சிருந்தா பாராட்டலாம். பல்லிளிச்சா என்ன சொல்றது?

கோல்கப்பா : புதுசா வந்தவருன்னு பாக்காம, மக்கள் boss பொறுப்பை குடுத்து, கோட்டைக்கு அனுப்பி இருக்காங்க, ஆனா பொது சுகாதாரத்துல விளையாடுனவருக்கு green pass குடுத்து கட்சிக்குள்ள சேத்தத எந்த வகையில நியாயப்படுத்த போறாங்கன்னு தெரியல?

பூரி குமாரி : எனக்கென்னமோ, மக்கள் சக்தி மட்டும் தான் தூய சக்தின்னு சொல்லிக்குற அருகதை இருக்குற ஒரே சக்தியா படுது! அந்த தூய சக்தி, ஆட்சியாளர்கள் பின்னால பெருந்திரளா போனதாலதான், இந்த வெற்றி அவங்களுக்கு கை கூடி இருக்கு. ஆனா, ஆட்சியை தக்க வெச்சுக்க, ஒரு சில இடங்கள் மட்டுமே குறையுற நெலமையுல, இப்படி குற்ற பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பது எனக்கு ஒரு குறளை நினைவுபடுத்துகிறது கோல்.

கோல்கப்பா : என்ன குறள் குமாரி?

பூரி குமாரி : நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

இதன் பொருள் என்னன்னா, “ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை”.

கோல்கப்பா : அருமை குமாரி. பல விஷயங்களில் மாற்றம் என்பதை முன்னெடும் இந்த அரசுக்கு, குற்ற பின்புலம் இருப்பவர்களை அரவணைத்து செல்லும் இந்த போக்கு, ஒரு மிக பெரிய சறுக்கல் தான் குமாரி.

பூரி குமாரி : ஆமாம் கோல். இதை தான் வள்ளுவர் “இறைமாட்சி” அதிகாரத்தில், ஒரு அரசன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டிருக்க வேண்டும், எவ்வாறு நீதி, அறிவு, துணிவு, குடிமக்கள் நலம் ஆகியவற்றைப் பேண வேண்டும் என்பதைக் கூறுகிறார்.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு

இந்த குறளுக்கு, “அரசநெறியிலிருந்தும் வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டை விட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்” என புலியூர் கேசிகன் அவர்களின் உரை கூறுகிறது.

கோல்கப்பா : “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் ” என வாழ்த்துரை சொல்லி இவர்களை சேர்க்கும் அளவிற்க்கா இவர்களின் உழைப்பு இருந்திருக்கிறது? மாசற்ற சக்தியாக புதியவர்கள் வந்திருக்கிறார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு இவர்கள் கொடுக்கும் கூலி இது தானா குமாரி?

பூரி குமாரி : பொருத்தமாக சொன்னீர்கள் கோல். எதிரியும் எதிரியும் சேர்ந்து ‘புடலங்கா” கூட்டணி அமைக்கிறார்கள் என ஒரு மாண்புமிகு சொல்லி இருக்கிறாரே, கவனித்தீர்களா கோல்?

கோல்கப்பா : அவங்க புடலங்கா கூட்டணி அமைச்சா,அதை மக்கள் பாத்துக்குவாங்க! இவங்க தடபுடலா குட்காமேன கட்சில சேத்ததுக்கு தான் பதில் சொல்லணும் குமாரி.

பூரி குமாரி : “தேர்தல் அரசியல் தெரிந்த ஆட்கள் தேவை” என்பதால் தான் சேர்த்தோம் என சொல்கிறார்களே கோல்?

கோல்கப்பா : தேர்தல் அரசியல் தெரிந்த ஆட்களுக்கு, டாட்டா சொல்லி அனுப்பியதும் இதே மக்கள் தான் என்பதை எவ்வளவு சவுகரியமாக மறந்து விட்டார்கள் பார்த்தியாடி?

பூரி குமாரி : முலாம் பூசிய வார்த்தைகளை, காலம் எப்போதும் குறித்து வைத்துக் கொள்ளும் கோல்.

கோல்கப்பா : “ஒரு பேரே வரலாறு” என்ற தலைவரின் கனவை மெய்ப்பித்த மக்களுக்கு, கட்சியில் சேர வருபவர்களின் வரலாறையும், அவர் கொஞ்சம் ஆராய்ந்து சேர்த்துக் கொள்வது தான் தக்க கைமாறாக இருக்க முடியும் குமாரி.

பூரி குமாரி : முத்தாய்ப்பாக ஒரு கருத்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் கோல். மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். Bye.