
செஷன் முடிந்ததும் விருட்டென்று கிளம்பி ரேஷ்மியின் ப்ளோருக்கு போனாள். இருவரும் கிளம்பி டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்கள்.
இயல்பு நிலை என்பது இங்கிருந்து கிளம்பும் வரை சத்தியமாக இருக்காது என நினைத்தாள். திரும்ப ஆபீஸ் போகும் எண்ணமில்லை ஜித்துவுக்கு.
சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்தில் ரேஷ்மிக்கு ஒரு முக்கியமான அழைப்பு வர அவள் வீட்டுக்கு கிளம்பினாள். ஜித்துவும் கெஸ்ட் ஹவுஸ் போய் உடையை மாற்றிக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். மாலை ஐந்து மணிக்கு காபி குடித்துக் கொண்டே மெயில் செக் செய்தாள். தான் பதிலளிக்க வேண்டிய எந்த செய்தியும் இல்லை.
நிம்மதியாக ஆப் செய்து டேபிள் மீது வைத்து வெளியே கிளம்ப ரெடியானாள்.
ரஷ்மியின் போன் வந்தது. மதியம் பாதியிலேயே கிளம்பி விட்டதால் இப்போது கெஸ்ட் ஹவுஸ் வந்து கொண்டிருக்கிறாள். ஜித்துவை போட்டிங் அழைத்து சென்று பிறகு ஷாப்பிங் முடித்து இரவு திரும்புவதாக சொன்னாள்.
இருவரும் கிளம்பி பஸ் பிடித்து பிரின்சஸ் கேனல் வந்து சேர்ந்தார்கள்.

சூரியன் மறையும் மஞ்சள் மாலைப் பொழுது.
அடர் பச்சை நிற நதியோடையின் இருகரையிலும் வெளிர் பச்சை மரங்கள் வரிசையாக நின்றன. கிட்டத்தட்ட ரெண்டு மைல் தூரம் ஒரே நேர்கோடாக ஓடுகிறது நதி.
ரேஷ்மி டிக்கட் வாங்கி வர இருவரும் படகில் ஏறி உட்கார்ந்தார்கள். இரண்டு மணி நேர படகு சவாரி நகரின் முக்கிய நதியோடைகள் வழியாக.
அடர் நிற முன் பக்க கோபுர அமைப்பு கொண்ட பதினேழாம் நூற்றாண்டு கால கட்டிடங்களும், தேவாலயமும் நகரின் வரலாற்றையும் பண்பாட்டையும் பிரதிபலித்தன. மெதுவாய் ஊர்ந்த படகிலிருந்த ஜித்துவின் மீது கரையோரம் இருந்து லிண்டன் மரங்கள் சில ஹார்ட் ஷேப் இலைகளை தூவியது.
“ஜித்து, இந்த லிண்டன் மரங்களுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது” என அவள் தோளின் மீதிருந்த பூக்களையும் சில இலைகளையும் எடுத்து ஜித்துவிடம் கொடுத்தபடியே சொன்னாள் ரேஷ்மி.
“என்ன ஸ்பெஷல் இந்த மரத்துக்கு?” என கேட்டாள் ஜித்து.
“லிண்டன் மரம் பெரேயா என்ற ஜெர்மானிய பெண் கடவுளோடு தொடர்புடையது. அன்பு, காதல், உண்மை மற்றும் பாதுகாப்பை குறிக்கும் கடவுளாக கருதப்படுகிறார். இந்த மரம் காதலர்களின் புனித மரம் என வணங்கி இதன் அருகில் திருமண நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார்கள். இந்த மரத்தடியில் மனிதர்கள் பொய் பேச மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த காலத்தில் இதன் அடியில் நீதி விசாரணைகள் நடத்துவார்களாம். கிரீக்கர்கள் லிண்டன் மரத்தை நல்ல திருமண பந்தத்துக்கும், அருமையான மனைவிக்குமான குறியீடாக நம்புகிறார்கள்” என விளக்கினாள்.
“இந்த ரெண்டு இலை, நாலு பூ என் மேல விழுந்ததுக்கு ஏண்டி மைத்தாலஜியெல்லாம் பேசுற” என சிரித்தாள் ஜித்து.
ஜித்து நீ என்ன கோ த்ரூ பண்றேன்னு எனக்கு தெரியும். நீ ஒரு அருமையான மனைவி. ராஜு ஈஸ் கிப்ட்டட். ஸோ இந்த மரம் உன்ன ப்ளேஸ் பண்ணுதுனு நா நம்புறேன்” என ஆதரவாய் சொன்னாள் ரேஷ்மி.
ரேஷ்மி சொல்வதை புன்னகையோடு கேட்டுக்கொண்டே அவள் மீது விழுந்த லிண்டன் இலையையும் பூக்களையும் பர்சில் பத்திரப்படுத்தினாள் ஜித்து.
சற்று நேரத்தில் இருள் சூழ கரு நீல நீரில் பக்கவாட்டு கட்டிடங்களின் தங்க நிற விளக்குகள் பட்டு ஒளி வீச அந்த குறுகலான நீரோடை மினுக்க ஆரம்பித்தது. படகின் நேரெதிராக வானத்தில் பௌர்ணமி நிலா கம்பீரமாக தோன்றியது. இரண்டு மைல் நீளத்திற்கு ஒரே நேர் கோடாக அந்த படகு பயணம் இருந்தது.
ஜித்துவுக்கு அது நிலவை நோக்கிய பயணமாக தோன்றியது.
இப்படியே பயணப்பட்டு நிலவில் போய் இறங்கும்படியான மனநிலை அவளுக்கு மிகுந்த பரவசத்தை தந்தது. அக்கம்பக்கம் சுற்றிப் பார்க்கும் விருப்பமில்லாமல் நிலவை மட்டும் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
இரண்டு மணி நேரம் ரம்மியமாக இருந்தது. படகிலிருந்து வெளியேறி இரவு உணவு சாப்பிட்டு ரேஷ்மி நாளை ஆபீசில் சந்திக்கலாம் என சொல்லி விடை பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.
ஜித்து அந்த நதியோரம் இருந்த சிமெண்ட்டு பெஞ்சில் போய் உட்கார்ந்தாள். லிண்டன் மர நினைவு வர போனை எடுத்து அதைப் பற்றி தேடினாள். அது நம்ம ஊர் எலுமிச்சை மர வகை என தெரிந்ததும் லேசாய் புன்னகைத்தாள் கொண்டாள். அந்த மரத்தின் இன்னோர் சிறப்பம்சம் அது தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் என இருந்தது. சடாரென கார்சனின் நினைவு வந்தது ஜித்துவுக்கு.
ரேஷ்மி சொன்னது சரிதான். இந்த லிண்டன் மரம் தன் பாதுகாப்பை உறுதி செய்வதாக மனதார நம்பினாள்.
இதன் மூலமாக குறியீடாக இயற்கை ஒரு விதமான மனவலிமையை அவளுக்கு கொடுத்தது.
கார்சனின் அன்றைய செய்கை அநாகரீகத்தின் உச்சமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அத்துமீறிய அவரின் நடத்தையோ சொல்லோ அவளின் முழு நாளையும் பாதித்தது. இன்னும் ஒரு வாரம் எப்படி ஓட்டுவது என ஒரு புறம் மேலோட்டமாய் கவலையாய் இருந்தாலும், ஆழ்மனம் கார்சனுக்கான எதிர்வினையை யோசிக்க ஆரம்பித்தது.

