சிறுகதை – கோலங்கள்

An image of a house decorated with floor rangoli

“ராஜு அண்ணா, நம்ம வேதநாயகி மேடம் வீட்டு வாசல்ல பால் பாக்கெட் எடுக்காம அப்படியே இருக்கு. அவங்க ஊர்ல இல்லியா?” என செக்யூரிட்டியிடம் கேட்டாள் ஹவுஸ் கீப்பிங் பணிப்பெண் மாதவி.

“எதுவும் சொல்லலியேம்மா? பெல் அடிச்சி பாத்தியா?” என்றார் ராஜு.

“அடிச்சேன்னா..யாரும் தொறக்கல. இன்னும் கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தா மூணு பாக்கெட் பாலும் கெட்டு போயிடும்” என்றாள் மாதவி.

ராஜு அவர்களுக்கு போன் செய்தார். அவர்கள் எடுக்காததால், “நீ என்ன பண்றன்னா, அந்த ப்ளோர்ல இருக்க யார்கிட்டயாவது பால குடுத்து பிரிட்ஜ்ல வெச்சிக்க சொல்லு. அவங்களுக்கு நா மெசேஜ் போட்டுடறேன், வந்தா வாங்கிக்கட்டும்” என்றார்.

“சரிண்ணே” என சொல்லி, அதே ப்ளோரில் இருந்த கோமதி வீட்டுக்கு போனாள்.

“அக்கா, வேதநாயகி மேடம் வீட்டுல இல்ல, இந்த பால பிரிட்ஜ்ல வெச்சிக்குங்க, வந்தா வாங்கிக்கட்டும்” என்றாள் மாதவி.

“நான் மத்தியானத்துக்கு மேல ஊருக்கு போறேன் மாதவி. நாலு நாள் ஆகும் வர்றதுக்கு. நீ வேணா சங்கரிகிட்ட குடுத்துடேன்” என சொன்னாள் கோமதி.

சங்கரி வீட்டு டோர் பெல்லை அடித்துவிட்டு சற்று நேரம் நின்று கொண்டிருந்தாள் மாதவி. கொஞ்ச நேரத்தில் அவள் கணவர் வந்து கதவை திறந்தார். மாதவி சொன்னதை முழுதாய் கேட்டார்.

“அவ நேத்து நைட் ஷிப்ட் பாத்துட்டு, இப்போ தான் வீட்டுக்கு வந்து தூங்குறா. நானும் அரை மணி நேரத்தில் கெளம்பிடுவேன். மத்தியானம் அவங்க வந்து பெல் அடிச்சா அவளுக்கு டிஸ்டர்பா இருக்கும். நீங்க வேணா சஞ்சய் அம்மாகிட்ட குடுத்து போயிடுங்க” என்றார்.

சஞ்சய் வீட்டு பெல்லை அடித்துவிட்டு மூன்றாம் மாடியில் இருந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி.

கதவை திறந்து “என்ன மாதவி”? என கேட்டாள் சஞ்சய் அம்மா ஷீலா.

“ஷீலாக்கா, இந்த மூணு பாக்கெட் பால் வேதநாயகி மேடம் வீட்டுக்கு வந்திருக்கு. அவங்க ஊர்ல இல்ல. நீங்க பிரிட்ஜ்ல வெச்சிக்குறீங்களா?” என்றாள் மாதவி.

“நான் நேத்து தான் இட்லி மாவு அரைச்சு பிரிட்ஜ்ல வெச்சிருக்கேன். இதை வைக்கிறதுக்கு இடம் இருக்காது. நீ வேணா சங்கரி வீட்டுல குடுத்துடேன்” என சொல்லி அனுப்பி வைத்தாள் ஷீலா.

மாதவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படியே வைத்து விட்டு போனால் கெட்டு போய்விடும். திரும்பவும் ராஜுவின் கேபினை நோக்கி நடந்தாள்.

“பேசாம நீயே வீட்டுக்கு எடுத்திட்டு போய்டு” என்றார் ராஜு.

‘அண்ணே,எங்க வீட்ல ப்ரிட்ஜ் இல்ல, இத்தனை பாக்கெட்டை நான் என்ன பண்றது?” என்றாள் மாதவி.

“சரி நீ ஒண்ணு எடுத்திட்டு போ. கொஞ்ச நேரம் கழிச்சி புவனாவும், ராணியும் வீட்டுக்கு போவாங்க. அவங்க கிட்ட ஆளுக்கொண்ணு குடுத்துடுறேன்” என சொன்னார் ராஜு.

“சரிண்ணே, நாளைக்கு நாங்க மூணு பேரும் ஆளுக்கொரு புது பாக்கெட் பதிலுக்கு வாங்கி குடுத்திடுறோம்” என சொல்லிவிட்டு கிளம்பினாள் மாதவி.

அன்று இரவு எட்டு மணி. ராஜுவுக்கு போன் போட்டு “அண்ணே, அவங்க வந்துட்டாங்களா?” என கேட்டாள்.

“இல்லம்மா, அவங்க திருப்பதிக்கு போயிருக்காங்களாம். நாளைக்கு காலைல பத்து மணி ஆகிடும் வீட்டுக்கு வர்றதுக்குன்னு சொன்னாங்க” என்றார் ராஜு.

“சரிண்ணே” என சொல்லி போனை வைத்தாள்.

மறுநாள் காலை எட்டு மணி. அன்றைய நாளுக்கான மூன்று பாக்கெட் பால் வேதநாயகி மேடம் வீட்டு வாசலில் இருந்தது. தரை மெழுகி சுத்தம் செய்ய வந்த மாதவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பத்து மணி வரை விட்டால் தாங்குமா என யோசித்தாள். மூன்று பாக்கெட்டையும் எடுத்துக் கொண்டு மீண்டும் ராஜுவின் அறைக்கு சென்றாள்.

அவர் டேபிள் மீது ஏற்கனெவே இவர்கள் பதிலுக்கு குடுத்த மூன்று பாக்கெட் இருந்தது.

“என்னண்ணே பண்றது?” என்றாள் மாதவி.

“இரு, பால்காரருக்கு போன் பண்றேன்” என்று அவரிடம் பேசினார்.

“அவரு வேற ஏரியாக்கு போயிட்டாராம், ரிட்டர்ன் வாங்க வர முடியாதுன்னு சொல்றார்” என்றார் ராஜு. பிறகு “பக்கத்து கோயில்ல இப்போ அய்யர் வர்ற நேரம். நீ போய் அவர்கிட்ட குடுத்துடு” என்றார்.

மாதவி தயங்கியவாறே “அண்ணே, அப்புறம் பதிலுக்கு யாருண்ணே ஆறு பாக்கெட் வாங்கி தர்றது?” என கேட்டாள்.

“மேடம் தங்கமானவங்க, அதெல்லாம் ஒண்ணும் கேக்க மாட்டாங்க” என்றார் ராஜு.

மாதவி மொத்த பாக்கெட்டையும் ஒரு துணி பையில் போட்டு அய்யரிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு போனாள்.

அன்று இரவு அவளுக்கு சங்கடமாக இருத்தது. “ஏங்க ஒரு இருநூத்தி அம்பது ரூபா நாளைக்கு காலைல வேணும்” என கணவரிடம் விஷயத்தை சொல்லி கேட்டாள்.

“சரிடி தரேன், ஆனா ஆறு பாக்கெட் வெச்சி அவங்க என்ன பண்ணுவாங்க?” என கேட்டார் அவர்.

“தெரியலீங்க, ஆனா நான் தானே எடுத்திட்டு வந்தேன்” என்றாள் மாதவி.

மறுநாள் காலை. அண்ணாச்சி கடைக்கு போய் விஷயத்தை சொல்லி ஆறு பாக்கெட் பால் வாங்கி கொண்டாள். ஒரு வேளை அவர்கள் மூன்றுக்கு மேல் வேண்டாம் என்றால் உடனே மீதியை திரும்ப தருவதாக ஏற்பாடு.

“இன்னைக்கு இந்நேரம் பால் வந்திருக்குமேம்மா?” என யோசனையாக சொன்னார் அண்ணாச்சி. அதுவும் சரிதான் என தோன்றியது மாதவிக்கு.

“பரவால்ல, எடுத்திட்டு போ, என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்” என சொல்லி அனுப்பினார் அண்ணாச்சி.

மாதவி போய் வேதநாயகி மேடம் வீட்டு டோர் பெல்லை அடித்தாள்.

கதவு திறந்தவுடன், “இந்தாங்க மேடம், ரெண்டு நாள் பாலு. இங்கயே இருந்தா கெட்டு போயிடும்னு எடுத்திட்டு போயிட்டோம். அதான் பதிலுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றாள்.

“லிப்ட்ல, கீழ கிரவுண்ட் ப்ளோர் நோட்டீஸ் போர்டுல பால்காரர் நம்பர் ஒட்டி வெச்சிருக்கோம்ல. சொல்லி இருந்தா அவரே எடுத்திட்டு போயிருப்பார். இன்னைக்கு பால் ஏற்கனவே வந்துடிச்சி. இவ்வளவு எனக்கு தேவைப்படாது. நீயே எடுத்திட்டு போயிடு” என சலித்துக் கொண்டார் வேதா.

“சரிங்கம்மா, அப்போ நா காசா குடுத்துடவா?” என தயங்கியபடியே கேட்டாள் மாதவி.

“எவ்வளவோ தண்ட செலவாகுது! அது மாதிரின்னு நெனச்சுக்குறேன். காசெல்லாம் வேணாம்” என சொல்லி கதவை சாத்தினார்.

மாதவிக்கு சுறுக்கென்று இருந்தது. தளர்வாய் நடந்து அண்ணாச்சி கடைக்கு போய், பால் பாக்கெட்டுகளை ரிட்டர்ன் செய்து பணம் வாங்கி கொண்டு கிளம்பினாள். வீட்டுக்கு போய் கணவரிடம் விஷயத்தை சொல்ல, அவர் சில யோசனைகளை சொன்னார்.

மறுநாள் காலை வழக்கம் போல ஒவ்வொரு ப்ளோராக தரையை சுத்தம் செய்து விட்டு, மூன்றாம் மாடிக்கு வந்தாள். ஏதோ அவளுக்கு வித்தியாசமாக பட்டது. சற்று நின்று நிதானித்து கவனித்தாள். நான்கு வீட்டு வாசலிலும் ரங்கோலி கோல ஸ்டிக்கர்கள் ஒட்டியிருந்தது.

“என்ன மாதவி, சீக்கிரமே வந்துட்ட?” என்றபடி நைட் ஷிப்ட் முடித்து வந்த சங்கரி கேட்டாள்.

“ஆமாக்கா..கொஞ்சம் வெளில போகணும். அதான் சீக்கிரமே வந்துட்டேன். ஸ்டிக்கர் அழகா இருக்குது. அதான் பாத்துக்கிட்டே கொஞ்ச நேரம் நின்னுட்டேன்” என்றாள் மாதவி.

“அதுவா, நம்ம வேதநாயகி மேடம் திருப்பதிலேர்ந்து வாங்கிட்டு வந்தாங்க. நாலு வீட்டுக்கும் யூனிபார்மா இருந்தா நல்லா இருக்கும்னு ஆளுக்கொண்ணு குடுத்தாங்க நேத்து, மேடம் தங்கம்!” என்றாள் சங்கரி.

“ஆமாக்கா” என சொல்லி விட்டு கிளம்பினாள் மாதவி. வீட்டுக்கு போகும் வழியில் கோயிலுக்கு போய் இருநூத்தி அம்பது ரூபாய் அய்யரிடம் கொடுத்து ஏதாவது பிரசாதம் செய்து பக்தர்களுக்கு கொடுக்க சொன்னாள்.

“யாரு பேருக்குமா அர்ச்சனை செய்து பிரசாதம் குடுக்கணும்?” என கேட்டார் அய்யர்.

“தங்கம், சாமி” என சொல்லி விட்டு கிளம்பினாள் மாதவி.