Tamil novel – Jiteswari – Part 11/21

A girl on mobile call

கல்யாணி பிறந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குமரேசனுக்கு ஒரு சாலை விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆறு மாத காலம் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை. காமாட்சி பாண்டிக்கு வந்து அவரை கவனிக்க ஜித்து குழந்தைகளோடு சென்னையில் எப்போதும் போல தொடர்ந்தாள்.

ஆனால் கற்பகத்துக்கும் குமரேசனுக்கும் இந்த நிலை தொடர உடன்பாடில்லை.

“ஏண்டி, எவ்வளவு நடந்தாலும் அங்க போக மாட்டேன்னு இங்கயே இருக்க? அந்த அம்மா இத்தனை நாள் உனக்கு துணையா இருந்தாங்க இல்ல?இப்ப அவங்களுக்கு ஒரு பிரச்சினைனா நீ கூட இருக்க வேணாமா? அவங்க பசங்களுக்கு ஏங்க மாட்டாங்களா? உன்ன மட்டும் பத்தி மட்டும் தான் யோசிப்பியா நீ?” என ஆரம்பித்தார் கற்பகம்.

“மா, விஷயம் புரியாம பேசாத? மாமா இங்க வந்தா பெஸ்ட் ஆஸ்பிடல்ல பாக்கலாம்னு கூப்பிட்டேன். அவர் வர மாட்டேன்னு சொல்றார். எனக்கும் ராஜூவுக்கும் பேங்க் லோன் கமிட்மென்ட் இருக்கு. ராஜுவும் என்ன வரச்சொல்லி கூப்புடலை. நீ ஏன் என் மேல இப்ப கேஸ் எழுதுற?” என திருப்பி கேட்டாள் ஜித்து.

“யாரும் உன்ன வெத்திலை பாக்கு வெச்சு கூப்புட மாட்டாங்க. சூழ்நிலைக்கு ஏற்ப நீதான் புரிஞ்சி நடக்கணும். அங்க போய் ஏதாவது வேலை தேடிக்க. இப்படி ஒரு ஒட்டு உறவும் இல்லாம இருந்து எங்க மானத்த வாங்காத” என திட்ட ஆரம்பித்தார் கற்பகம்.

வினை வீட்டிலேயே இருக்க வீதியை பற்றி உள்ள வேண்டாம். அடுத்த சில மாதத்தில் ராஜுவும் காமாட்சியும் அவளை பாண்டிக்கு வர முயற்சிக்க சொன்னார்கள்.

ஜித்துவுக்கு இக்கட்டான சூழல். ஒரு புறம் வேலை, பேங்க் கடன் மற்றும் மறுபுறம் பாண்டியில் தகுந்த வேலை கிடைக்காத நிலை.

ஆனால் நீண்ட காலம் இந்த பிரச்சினையை அவள் இழுக்க விரும்பவில்லை. மாற்று ஏற்பாடு என்ன என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் துறை சார்ந்த கம்பெனிகளில் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை தேட ஆரம்பித்தாள்.

ராஜுவிடம் பேசி சில மாதங்கள் பொறுக்க சொன்னாள். 

மும்முரமாக நட்பு வட்டத்தில் தகவலை சொல்லி வேலை தேடியதில் அடுத்த ரெண்டு மாதத்தில் ஒரு வாய்ப்பு வந்தது.

எண்ணை நிறுவனங்களுக்கு பணி புரியும் ஒரு சிறிய கன்சல்டன்சியில் ரிமோட் ஜாப் ஒன்று வந்தது.

இது இரண்டு வருட கான்டராக்ட் வேலை. அவள் ஏற்கெனவே பார்த்த அதே வேலை, நல்ல சம்பளம் ஆனால் கம்பெனி மட்டும் மிக சிறியது. அது சுமார் ஐம்பது பேர் மட்டும் கொண்ட ஒரு நிறுவனம்.

ஜித்துவுக்கு கான்டராக்ட் வேலை இன்னும் ஒரு படி கீழ் நிலை. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலைக்கு இது சரியான தீர்வு. எனவே தனிப்பட்ட நலனை கருதாமல் அந்த நிறுவனத்தில் சேர முடிவெடுத்தாள்.

மும்பை வேலையை ராஜினாமா செய்து அடுத்த ரெண்டு மாதத்தில் கன்சல்டன்சி வேலைக்கு சேர்ந்தாள். குழந்தைகளோடு பாண்டிக்கு போய் செட்டிலாகி அவள் வேலையை தொடர்ந்தாள்.

குமரேசனுக்கு கர்வம் கூடியது. கை கால் உடைந்தாலும் அது ஒரு நன்மையில் அவருக்கு முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னார்.

காமாட்சிக்கு எரிச்சல் ஓங்கியது. ஏன் எப்படி அந்த பெண்ணை சத்தாய்க்க வேண்டும்? பேசாமல் சற்று அனுசரித்து சென்னை வந்து தங்கினால் அவளுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்? கணவரின் வறட்டு பிடிவாதத்தால் ஜித்து சிறிதளவும் கீழ் நிலைக்கு போவதை காமாட்சி துளியும் விரும்பவில்லை.

ஆனால் ஜித்து கன்சல்டன்சி வேலையில் பெரிதாய் குறைபட்டுக் கொள்ளவில்லை. அவள் எப்போதும் சென்னையில் இருப்பதை போலவே அவள் தினசரி வேலைகளை பார்த்தாள்.

இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிய இப்போது ஜித்துவுக்கு ஒரு முக்கியமான கால கட்டம்.

இன்னும் சில மாதங்களில் அவள் கான்டராக்ட் முடிய போகிறது.

தற்போது அவள் பணிபுரியும் சவுதி கம்பெனி கிளையண்ட் அவர்களின்  அடுத்த கட்ட ஐந்து வருட கான்ட்ராக்ட்டை ஜித்துவின் கன்சல்டன்சிக்கே  மீண்டும் அளிப்பது என முடிவு செய்திருக்கிறது. 

ஆனால் இரண்டாம் கட்ட ப்ராஜெக்ட்டில் தொடர வேண்டுமென்றால் அவள் நெதர்லாந்து போய் இரண்டு வார ஒர்க்ஷாப்பில் நேரில் பங்கேற்க வேண்டும்.

ஜித்துவுக்கு இந்த ஒர்க்ஷாப் மிக முக்கியமானது.

இரண்டு வாரம் நெதர்லாந்து போய் நேரில் ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்டு ட்ரெயினிங் முடித்து விட்டு வந்தால் போதும். எல்லாம் சுமுகமாக முடிந்தால் அடுத்த ஐந்து வருடம் இப்போது போல பாண்டியில் இருந்தே வீட்டிலிருந்து பணி புரியலாம்.

“ராஜு, நா டூ வீக்ஸ்   நெதர்லாந்து போகணும். ஒர்க்ஷாப் இருக்கு. போயிட்டு வந்தா அஞ்சு வருஷம் இதே மாதிரி ஒர்க் ப்ரம் ஹோம் வேலை செய்யலாம் ” என சொன்னாள் ஜித்து.

“சரி, போயிட்டு வா” என சொல்லிவிட்டு உடனே அறையை விட்டு வெளியேறினான் ராஜு.

விஷயம் குடும்பத்துக்கு தெரிந்ததும் குமரேசன் கச்சேரியை ஆரம்பித்து விட்டார்.

“அந்த வாரம் தான் நம்ம ரமா கல்யாணம் வருது. அப்புறம் போக சொல்லு” என்றார் காமாட்சியிடம்.

ரமா குமரேசனின் தம்பி மகள். அவர் தம்பி வீட்டில் முதல் விசேஷம்.

இல்லேங்க, நம்ம சவுகர்யத்துக்கு கம்பெனில எப்படிங்க மாத்துவாங்க? நாம தான் எல்லாரும் போறோமே, ஜித்து ஒருத்தி வரலேன்னா என்ன?”என மெதுவாய் சொன்னார் காமாட்சி.

“நம்ம குடும்ப விசேஷம் எல்லாத்துக்கும் அவங்க எல்லாரும் ஒருத்தர் தவறாம வராங்க. அவங்க வீட்ல மொதல் விசேஷம். அதுக்கு வீட்டு மருமக இல்லாம போய் நிக்க சொல்றியா? காரு வீடு வேலை பணம்னு இருங்க. நாலு சொந்தம் வேணும்னு நெனைக்காதீங்க. அவன் தான் கவர்ன்மெண்டு வேலைக்கு போறானே? இன்னும் என்ன கொறை” என எகிறினார் குமரேசன்.

“நா ஒருத்தன் கத்தி என்ன ஆக போகுது? அம்மா புள்ள ரெண்டு பேரும் ஜடம் மாதிரி இருக்கீங்க. வாய தொறந்து நல்லது கெட்டது எடுத்து சொன்னா என்ன? அதுக்கு தான் இந்த சம்மந்தம் வரும்போதே சொன்னேன். இது சரிப்படாதுனு. யாரு எம் பேச்ச கேட்டீங்க? இப்ப எல்லார் முன்னாடியும் நா போய் தலையை குனிஞ்சு நிக்க போறேன். அவன் ஒத்த மரமா நிக்க போறான்” என வாய்க்கு வந்ததை பேசித் தீர்த்தார்.

பக்கத்து அறையில் இருந்த ஜித்துவுக்கு சுர்ரென்று ஆனது. இரண்டு வாரம் வேலை விஷயமாய் போய் வருவதற்கு இத்தனை வருடங்களுக்கு பிறகும் குழந்தைகள் பிறந்த பிறகும் வரன் பார்த்த கதையை இழுத்தது அடி முட்டாள்தனமாய் பட்டது.

போய் நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் போல இருந்தது.

சில நிமிடங்கள் நிதானித்தவள் எதுவும் கேட்க வேண்டாம் என முடிவெடுத்தாள். தனக்கு கேட்க வேண்டும், எரிச்சலாகி விஷயம் சூடு பிடிக்க வேண்டும் என திட்டமிட்டு கொட்டப்படும் வார்த்தைகள்.

தான் சொல்லும் காரணத்தையோ பதிலையே துளி கூட மதிக்கப்போவதில்லை. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது.

வீணாய் பேசி உழட்டுவதில் எந்த பயனும் இல்லை.எவ்வளவு விரைவாக இதை மறக்கிறோமோ அவ்வளவு நல்லது என நினைத்துக்கொண்டாள்.

காமாட்சிக்கு சங்கடமாய் இருந்தது.

அந்த பெண் அலட்டாமல் சத்தமில்லாமல் உழைத்துக் கொட்டுகிறாள்.

சகல சௌகர்யங்களையும் செய்து கொடுத்திருக்கிறாள். அவர்கள் சொந்த பந்த வகையறாவில் எந்த மருமகளும் இவள் அளவிற்கு திறமைசாலி கிடையாது. நாம் செய்த புண்ணியம் இந்த மாதிரி ஒரு பொறுப்பான, தன்மையான பெண் குடும்பத்திற்கு அமைவது என பல நேரங்களில் கர்வமாய் இருந்திருக்கிறார்.

இந்த மனுஷனுக்கு மட்டும் புத்தி வேறு மாதிரி இருக்கிறது. கண்டிப்பாய் அவளுக்கு கேட்டிருக்கும். அவள் மனம் என்ன பாடுபடும் என கவலையில் ஆழ்ந்தார்.

சற்று நேரத்தில் டோர் பெல் அடித்தது. காமாட்சி போய் கதவை திறக்க பின்னாலேயே ஜித்துவும் வெளியே வந்தாள்.

சாப்பாடு டெலிவரி வந்திருக்கிறது. இருபத்து நான்கு வகையான பண்டங்களோடு மெகா தாலி.

“வாங்க அத்தை சாப்பிடுவோம்” என அழைத்தாள்.

பெரிய சில்வர் தட்டுகளை கழுவி எடுத்து வந்து வைத்தாள். பொறுமையாக எல்லா டப்பாக்களையும் பிரித்து பாத்திரங்களில் மாற்றி தட்டு போட்டு மூடி வைத்தாள். பேக்கிங் பேப்பர் மற்றும் டேப்பு குப்பை என எல்லாவற்றையும் அள்ளி குப்பையில் போட்டு டேபிளை சுத்தம்  செய்தாள்.

டோர் பெல் அடித்தது. டவுனிலேயே பெஸ்ட் லஸ்ஸி நாலு பேக்.

வாங்கி வந்து கண்ணாடி கப்பை கழுவி ஊற்றி மூடி போட்டு வைத்தாள். 

குமரேசனுக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை.

எப்போது அழைப்பு வரும் என காத்துக் கொண்டிருந்தார்.

எல்லா அயிட்டங்களையும் மாற்றி ஊத்தும்போதே வாசனை வீட்டை நிரப்பி இல்லாத பசியையும் கிளறி விட்டது.

அரை மணி நேரம் ஆனது.

காமாட்சி “வாங்க சாப்பிட” என கூப்பிட்டு முடிப்பதிற்குள் போய் சேரில் உட்கார்ந்தார்.

அட்டகாசமான சாப்பாடு. அருமையான லஸ்ஸி. இருபது நிமிடம் ரசித்து ரசித்து சாப்பிட்டு முடித்தார் குமரேசன்.

Family lunch time

எதிரில் உட்கார்ந்து மெகா தாலியோடு குமரேசனின் ஈகோவையும் சேர்த்து மெதுவாக மென்று முழுங்கிக் கொண்டிருந்தாள் ஜித்து.

இந்த பெண் தனக்கு பிறந்திருக்க வேண்டியவள். ஒரு வார்த்தை பேசாமல்,முகம் சுழிக்காமல் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு தட்டு நல்ல சோறு போட்டு குமரேசனை தட்டி தூக்கியிருக்கிறாள்.

மற்ற குடும்பங்களில் நாராசமாக மாறும் சண்டை, இங்கே டைனிங் டேபிளில் அமர்க்களமாக பரிமாறப்பட்டு கொண்டிருக்கிறது.

நரம்பில்லாமல் பேசும் நாக்கு ஒரு மாற்றுக்காக நல்ல சுவையை அனுபவிக்கட்டும் என நினைத்திருக்கிறாள். அமிலமாக சுட்ட வார்த்தைகள் ஜீரணமாக ஆயிரம் ரெண்டாயிரம் போனால் பரவாயில்லை என நினைத்துக் கொண்டார் காமாட்சி.

ஒரு மெகா தாலியில் ரமா கல்யாண மேட்டர் சுபம் மங்களம் போட்டு முடிக்கப்பட்டது.

Tamil novel – Jiteswari – Part 9/21

Hindu temple

அன்று கோவிலில் தெப்போற்சவம். சாயந்திரம் விளக்கு வைத்ததும் இரண்டு மணி நேரம் இறைவனும் இறைவியும் திருக்குள தெப்பலில் பவனி வந்தார்கள். பக்தர்கள் வெள்ளம் திரளாக இருந்தது.

இந்த கோவில் இறைவிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தி வாய்ந்த தெய்வமாக தென்னிந்தியாவில் போற்றப்படும் தலம்.

நாள் கிழமை முதற்கொண்டு ஆராதனைகள் வரை இறைவியை மையப்படுத்தியே இருக்கும். இறைவன் தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார். கோவிலில் கிடைக்கும் படங்களில் பெரும்பாலும் இறைவி மட்டும் தான் இருப்பார். ஒரு சில படங்களில் மட்டுமே தம்பதி சமேதராக இருப்பர்.

இறைவனுக்கு பக்கத்து மாவட்டத்தில் புகழ் வாய்ந்த திருத்தலம் இருக்கிறது. அங்கு அவர் தான் எல்லாம். அங்கே இறைவி தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார்.

தெப்போற்சவம் அமர்க்களமாக நடந்து முடிந்தது. இறைவி கோவிலுக்குள் திரும்ப மக்கள் அனைவரும் கலைந்து சென்றார்கள்.

“இன்னைக்கு என்ன நம்ம மீன் குட்டிங்க எல்லாம் சுரத்தே இல்லாம இருக்குங்க? கவனிச்சியா?” என்றார் இறைவன்.

“ஆமாங்க, நானும் பார்த்தேன். ஜனங்க, லைட்டு எல்லாத்தயும் பாத்து துள்ளி குதிச்சி வெளையாடுவாங்க. இன்னைக்கு என்னடான்னா ரொம்ப டல்லா இருக்காங்க” என பேசிக்கொண்டே கண்ணை மூடினார் இறைவி.

“நம்ம தங்கராஜ் மேல வருத்தமா இருக்காங்க, கேட்டு பூட்டுனது அவங்களுக்கு விருப்பமில்லை” என கண்டுபிடித்து பேசிக்கொண்டார்கள்.

“சரி ராத்திரி ஒரு எட்டு போய் அவங்ககிட்ட பேசிட்டு வரலாம்” என்றார் இறைவன்.

“ஆமா, இன்னும் ஒரு பூஜை இருக்கு. அது முடியட்டும். எல்லாரும் பூட்டிட்டு போனதும் கெளம்பலாம்” என்றார் இறைவி.

சிலமணி நேரம் முன்பு ஆயிரக்கணக்கானோர் வந்து சென்ற சுவடே இல்லாமல் அமைதியாக இருந்தது கோவில்.

பொழுதோடு போய் யசோதா பசு கோசாலையில் படுத்துவிட்டது.

கோவில் யானை கணேசன் பொழுதுக்கும் நின்ற கால் வலியில் முனகிக்கொண்டு இருந்தது. அடுத்த நாள் காலையில் ராஜ வீதியில் ஊர்வலம் இருக்கிறது. எப்படியும் ஏழு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.

சாயந்திரத்திலிருந்து கால் மாற்றி கால் மாற்றி நின்று சோர்ந்து போயிருந்தது. சற்று நேரத்தில் ஒரு போன் வர பாகன் பேச ஆரம்பித்து விட்டார். கணேசனுக்கு சாப்பாடே வேண்டாம் என தோன்றியது. பேசாமல் போய் புல்லின் மீது படுத்துக் கொண்டது. சற்று நேரம் கழித்து வந்த பாகன் கணேசனை தடவி சமாதானப்படுத்தினார்.

பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு முடித்தது கணேசன். பாகன் தூங்க போக அங்கே வந்த மாருதியிடம் பேச ஆரம்பித்தது.

An elephant at temple

“நாளைக்கு நாளைல ஊர்வலம் போறோம். ரோட்டோரம் ரோஸ்மில்க் குடிச்சிக்கிட்டு எங்கள வச்சி செல்பியா எடுத்து ஸ்டேட்டஸ் போடுவாங்க. எவன் இப்பலாம் பக்தியோட வரான்? ஸ்டேட்டஸ் போட நாலு போட்டா எடுக்க தான் வரானுங்க. இதுக்கு லோக்கல் ஹாலிடே வேற” என புலம்பியது கணேசன்.

“திருக்கோவில்ல இருக்குறக்குற கொளத்துக்குள்ள இருக்குறவங்களுக்கே இவ்ளோ மனக்குறை இருக்கு. இந்த அம்மா என்னடானா என் மேல ஏறி ஒக்காந்துக்கிட்டு ராஜ வீதி சுத்தி வந்து அருள கொட்டப்போகுது. அவங்க காலடியிலேயே கெடக்குற ஜீவன்களுக்கு வேற என்ன போக்கிடம் இருக்கு?” என மாய்ந்து போய் பேசிக்கொண்டிருந்தது கணேசன்.

“திரும்புற பக்கமெல்லாம் வித விதமான பிரச்சினையோட ஜனங்க மொச்சா கடவுளுங்க மட்டும் என்ன பண்ணுவாங்க? அந்த காலத்துல என்ன இவ்ளோ வெரைட்டி பிரச்சினைகளா இருந்துது? சாமி மழையை குடு, வெளச்சலை குடு, ஆடு மாடு கண்ணுகுட்டிய நோய் நொடி இல்லாம பாத்துக்க, குடும்பத்தை காப்பாத்துன்னு விரல் விட்டு சொல்லிடலாம். இன்னும் மிஞ்சி போனா குழந்தய குடு, நோயை தீரு, செல்வத்தை குடுன்னு கேப்பாங்க.

இப்போ என்னடான்னா ஆன்சைட் வேணும். அதுவும் நல்ல வெதர்ல ஷாட் டெர்மா வேணும். கூட நல்ல பிகரா ஏதாவது வரணும். மொக்க க்ளையண்டா இருக்கணும். சவுத் இந்தியன் சோறு கெடைக்கணும்.

லாங் டெர்முன்னா சாமி வீடு புக் பண்ணி குடுக்கணும். நல்ல காரு, அதுவும் அதுவாவே ஓடுற மாதிரி வாங்கி தரணும். அவங்க ஆன்சைட் போன நேரத்துல அவங்க அப்பா அம்மாவுக்கு நோய் நொடியில்லாம பாத்துக்கணும். கூட போற ஸ்பவுசும்கும் மவுஸான வேலை வாங்கி தரணும். இந்த காலத்து மனுஷங்களுக்கு கடவுளா இருக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என வக்காலத்து வாங்கியது மாருதி.

“நீயும் உன் கடவுளோட அசைன்மென்டுக்கு ஆன்சைட் போனவர்தானே? அவரை எப்படி விட்டு குடுப்ப” என கேலி செய்தது கணேசன்.

“ஆமா ஆன்சைட் போய் இவங்கள மாதிரி பன்னா பண்ணேன். என் வாலுல தீய வெச்சு புண்ணானது தான் மிச்சம்” என இடித்தது மாருதி.

“அரே பாபா, அந்த டீம்லயே நீதான் டாப் பர்பாமரு. உன் மேல இருக்குற ப்ரேமத்துல தான், சாமி எல்லா பேமிலி போட்டோ பிரேம்லயும் உன்னை வெச்சிருக்காரு” என கிண்டலடித்து கணேசன்.

மாருதியோடு பேசியதில் கொஞ்சம் ரிலாக்சானது கணேசன். “சரி நான் போய் படுக்கிறேன். நாளைக்கு காலைலயே எழுந்து ரெடியாகணும்? என

சொல்லி மாருதியை வழியனுப்பியது.

Tamil novel – Jiteswari – Part 8/21

A senior couple a temple

அடுத்த நாள் காலையிலேயே புஷ்கரும் கல்யாணியும் கோவிலுக்கு போக ரெடியாகிவிட்டார்கள். நேசப்பாவும் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டுக்கொண்டு கிளம்பினார்.

“ரொம்ப நாளாச்சு கோவிலுக்கு போய். நானும் வரேங்க” என்றார் சங்குபுஷ்பம்.

“பசங்களா, மழை கொட்ட போகுது, கொடை எடுத்துக்குங்க, உங்க பாட்டியும் கோவிலுக்கு வராளாம்” என கிண்டலடித்தார் நேசப்பா.

ஜித்தும் லக்ஷ்மியும் வாக்கிங் முடித்துவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.

ஜித்துக்கு காமாட்சியின் போன் வந்தது.

“நல்லாருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா?” என விசாரித்தாள்.

இரண்டு நிமிடம் பேசி முடித்தவுடன் நேசப்பா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு போய் பால்கனியில் நின்றாள்.

எதிர் பிளாட்டு பால்கனியில் வெளிர் நீல புடவை  காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் சடாரென கற்பகத்தின் நினைவு வந்தது ஜித்துவுக்கு. லேசாக கண்ணீர் துளிர்க்க அந்த நினைவில் ஆழ்வது தன்னை மேலும் பலகீனப்படுத்தும் என திரும்பி ஹாலுக்குள் வந்தாள்.

சங்கு புஷ்பம் குளித்துவிட்டு வர “எங்கம்மா கெளம்புற காலங்காத்தால?” என கேட்டாள் லக்ஷ்மி.

“கோவிலுக்குடி. பசங்கள கூட்டிட்டு போறோம்” என்றார் சங்கு புஷ்பம்.

“ஜித்து நீயும் வரியா? எல்லாரும் சேந்து போகலாம்” என அழைத்தாள் லக்ஷ்மி.

போனை எடுத்து கேலண்டரை பார்த்தாள் ஜித்து. மதியம் ஒரு மணிக்கு தான் ஒரு மீட்டிங் இருந்தது.

“சரி போலாம். பத்து நிமிஷத்துல ரெடியாயிடறேன்” என்றபடி குளிக்க போனாள் ஜித்து.  பிளான் மாறிய பிறகு சங்கு புஷ்பம் கிச்சனுக்குள் நுழைந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரத்தில் எல்லாரும் ரெடியாக டாக்ஸி பிடித்து கோவிலுக்கு

போய் இறங்கி உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் வயதானவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

நேசப்பா சில்லறை எடுத்து குழந்தைகளிடம் கொடுத்து அவர்களுக்கு கொடுக்க சொன்னார்.

ஜித்துவும் லக்ஷ்மியும் பர்ஸை துழாவினார்கள். சில்லறை காசோ, கரன்சியோ எதுவும் இல்லை. துடைத்து வைத்தார் போல இருந்தது பர்ஸ்.

“அம்மா சில்லறை இருந்தா குடு” என்றாள் லக்ஷ்மி.

“ஏண்டி உங்க டிஜிட்டல் இந்தியால தர்மத்துக்கு ஆப்ஷன் இல்லியா?” என நக்கலாய் கேட்டார் சங்கு புஷ்பம்.

“பத்து ரூபாய்க்கு சில்லறை காசு தர இவ்ளோ பேச்சு பேசுற” என்றபடியே சிரித்தாள் லக்ஷ்மி.

போனை லாக்கரில் வைத்து விட்டு வந்ததால் அர்ச்சனை டிக்கெட் மற்றும் நெய் விளக்கு வாங்க, ஐயருக்கு தட்டில் போட, உண்டியலில் போட என

இருவரும் காசுக்காக பவ்யமாக நின்றார்கள்.

சங்கு புஷ்பம் கெத்தாக கரன்சியை எடுத்து எண்ணி, பிறகு சில்லறை காசு எண்ணி கொடுப்பது என ஒரே சீனாக இருந்தது.

“மா, நேத்து மார்க்கெட் போய் கடைசி காசு வரை செலவு பண்ணிட்டோம். நீ ரொம்ப சீன் போடாதே” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

“கொஞ்சமான ஆட்டமா போடுறீங்க போன வச்சிக்கிட்டு. கண்ணு மண்ணு தெரியாம ஊதாரித்தனமா செலவு பண்றீங்க. இப்போ என் டைம்” என காட்டமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

பேசியபடியே வெளி பிரகாரம் சுற்றி குளத்தருகே வந்தார்கள். நேசப்பா ஆபீஸ் ரூமுக்கு போய் கேட் திறப்பது பற்றி விசாரித்தார். ஆபீஸர் வாட்ச்மேனிடம் சாவி கொடுத்து அனுப்பினார்.

குளத்து கேட் திறந்ததும் குழந்தைகள் குக்ஷியானார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தார்கள்.

“கொஞ்சம் மேல வாங்க எல்லாரும்” என அழைத்தார் சங்குபுஷ்பம்.

நாலு படி இறங்கிய ஜித்து “என்னமா?” என்றாள்.

சங்குபுஷ்பம் பக்கவாட்டில் இருந்த மண்டபத்தில் ஏறி தூணில் சாய்ந்து உட்கார்ந்து காலை நீட்டிக்கொண்டார்.

“சுக்கு காபி பிளாஸ்க்ல கொண்டாந்துருக்கேன். குடிச்சுட்டு அப்புறம் போய் படிக்கட்டுல உக்காரலாம்” என பையை பிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

“நெனச்சேன் நீ பைய தூக்கிட்டு கிளம்பும் போதே. என்னென்ன சரக்க உள்ள வெச்சிருக்கியோன்னு. கோவிலுக்கு வந்தா ஜங்க்க்ஷன்ல இருக்குற காபி ஹவுஸ்ல போய் சுக்கு காபி குடிக்கணும்னு ஜித்துக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீ என்னடான்னா வீட்லருந்தே போட்டு எடுத்துட்டு வந்துட்ட” என சிணுங்கினாள் லக்ஷ்மி.

“அம்மா கூட அப்டி தான். பிரிக்க முடியாதது நர்ஸும் பிளாஸ்க்கும் போல” என சொல்லி சிரித்தாள் ஜித்து.

“ஆமா, எங்க காலத்துல இருந்த ஹைடெக் சாமான்ல பிளாஸ்க்கும் ஒண்ணு. வார்டுல பிளாஸ்க் வெச்சிருக்கிற பேஷண்ட் கொஞ்சம் கெத்தாதான் இருப்பாங்க. வயசான இல்லாதவங்களுக்கு சொந்தமா பிளாஸ்க் இருக்கிறதே ஒரு பெரிய கனவு தான். பெரும்பாலானவங்களுக்கு வீட்லேர்ந்து யாரும் வர மாட்டாங்க. கவெர்மென்ட்டு மூணு வேளை சாப்பாடு குடுக்கும். கூட சூடா காபியோ பாலோ குடிச்சே, ஆஸ்பிடல்லேர்ந்து டிஸ்சார்ஜ் ஆகுற வரை ஓட்டிடுவாங்க” என விவரித்தார் சங்கு புஷ்பம்.

புஷ்கரும் கல்யாணியும் அந்த பிளாஸ்கை மரியாதையாக பார்த்தார்கள்.

“பேசாம காபி ஹவுசே போயிருக்கலாம்” என மீண்டும் ஆரம்பித்தாள் லக்ஷ்மி.

“உனக்கென்ன சரக் சரக்குன்னு கார்டு தேய்ப்ப. இல்ல போன எடுத்து காச சுட்டு தள்ளுவ. சுக்கி காபியோடு முடிக்கிற ஆளா நீ? எங்களுக்காவது பென்சன் வருது. உங்களுக்கு அதுவும் கிடையாது. நாப்பத்தஞ்சு வயசாச்சுன்னா பொம்பளைங்களுக்கு எப்படா ரிட்டயர்டு ஆவோம்னு இருக்கும். சுகர் எட்டிப்பாக்கும்.மெனோ பாஸ் வதைக்கும். ஒடம்புல தெம்பு இருந்து வேலைக்குப் போகும்போதே செலவை கண்ட்ரோல்ல வைங்க. இப்போ சேமிக்கலேன்னா பின்னாடி இதே ஜோர்ல செலவு பண்ணமுடியாது” என நிதர்சனத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“நல்லதா ஒரு காபி குடிக்கலாம்னு சொன்னா எனக்கு நரை வந்து கூன் விழுறவரை பயம் காட்டுறியேம்மா? டென்ஷனை கன்ட்ரோல்ல வை, புருஷனை கன்ட்ரோல்ல வை, வெய்ட்ட கன்ட்ரோல்ல வைனு எவ்ளோ ப்ரெஷரும்மா” என அலுத்துக்கொண்டாள்  லக்ஷ்மி. 

நேசப்பா குழந்தைகளுக்காக சர்க்கரைப் பொங்கல் வாங்கி வந்தார். சற்று நேரத்தில் அவர் பின்னாடியே கையில் தூக்கு வாளியுடன் ஒருவர் வந்தார்.

“மேடம் நல்லாருக்கீங்களா?” என்றார்.

“நல்லாருக்கேன் பரணி. தங்கமயிலும் பசங்களும் சௌக்கியமா?” என விசாரித்தார் சங்கு புஷ்பம்.

பரணி கோவில் பணியாளர். தங்கமயில் சில ஆண்டு காலம் அவர்கள் சொசைட்டி ஆபீசில் வேலை பார்த்தாள். மயிலின் இரண்டு டெலிவரியும் சங்கு புஷ்பம் வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் நடந்தது.

“நல்லா இருக்காங்க மேடம். சார தூரத்துல இருந்து பார்த்தேன். அதான் பிரசாதம் தரலாம்னு வந்தேன்” என தொன்னையில் புளியோதரை வைத்து கொடுத்துவிட்டு கிளம்பினார். நிதானமாக சாப்பிட்டு சுக்கு காபியும் குடித்து முடித்தார்கள்.

“மா, காபி அவுஸ் டேஸ்ட் அப்டியே இருக்கு” என புகழ்ந்தாள் லக்ஷ்மி.

“நீங்க வரீங்கன்னு சொன்னதும் அம்மா அந்த காபி அவுஸ்லேர்ந்து மிக்ஸ் வாங்கிட்டு வர சொல்லிட்டா” என சொன்னார் நேசப்பா.

“செம பிளான்மா” என சிரித்தாள் லக்ஷ்மி.

“இந்த கப்பு காப்பிய அம்பது ரூபா சொல்வான். இப்போ பாரு சிம்பிளா முடிஞ்சிது. நீ காபி குடிக்கலாம்னு உள்ள நொழஞ்சி ரெண்டாயிரத்துக்கு கார்டு தேய்ப்ப” என சொன்னார் சங்கு புஷ்பம்

லக்ஷ்மி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்க ஜித்து தலையசைத்தும், புன்னகைத்தும் கேட்டு கொண்டிருந்தாள். நேசப்பாவுக்கு ஜித்து சாதாரணமாக இல்லை என புரிந்தது. யோசனையும் கவலையும் தீவிரமாக குளத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

லஷ்மி காபி டம்ளர்களை வெளியே கொண்டுபோய் கழுவி எடுத்து வந்தாள்.

சங்கு புஷ்பம் அதையெல்லாம் பையில் வைத்துவிட்டு இரண்டு பொரி டப்பாக்களை வெளியே எடுத்தார். புஷ்கருக்கும் கல்யாணிக்கும் ஆளுக்கொன்று கொடுத்தார்.

டப்பாவை கையில் வாங்கிய புஷ்கர் சற்று நேரம் யோசித்தான்.

“தாத்தா நானும் பாட்டியும் அந்த கார் னர் போறோம். நீங்க பாப்பா கூட இங்கயே இருங்க” என்றான்.

“சரிப்பா” என்றார் நேசப்பா.

“மா, நாங்க ஹெவியா சாப்டுட்டோம். கொளத்தை ரெண்டு ரவுண்டு சுத்திட்டு வரோம்” என ஜித்துவோடு கிளம்பினாள் லக்ஷ்மி.

ஜித்துவின் அமைதி லக்ஷ்மிக்கும் கவலையை தந்தது. எதுவானாலும் அவளே சொல்லட்டும் என பொறுத்திருந்தாள். ஆனால் கோவிலுக்கு வந்த பிறகு நாமே ஆரம்பிப்போம் என்ன விஷயம் என கேட்போம் என முடிவெடுத்தாள்.  சற்று நேரம் நடந்த பிறகு மறு கரையில் உட்கார்ந்தார்கள்.

Friends at temple

“மைண்டுல என்னடி போட்டு உருட்டிக்கிட்டு இருக்க? நானும் வந்ததுலேர்ந்து பாக்குறேன். யோசனயாவே இருக்க” என உரிமையாக கேட்டாள் லக்ஷ்மி.

“மும்பை ஆபீஸ் போய் ஜாயின் பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்” என்றாள் ஜித்து.

“அவர் வரேன்னு சொல்லிட்டாரா? என குதூகலமானாள் லக்ஷ்மி.

“இல்ல” என்றாள் ஜித்து.

“அப்போ பசங்கள கூட்டிட்டு நீ மட்டும் போறியா? என நிதானமாக கேட்டாள் லக்ஷ்மி.

“இல்ல, இன்னும் முடிவு பண்ணல” என்றாள் ஜித்து குளத்தை பார்த்தபடியே.

நிஜமாகவே யாரோ தன்னை குளத்துக்குள் உருட்டுவது போல பகீரென ஆனது லக்ஷ்மிக்கு. அவள் காயம் மட்டும் ஆழமானது என புரிந்தது. கைக்குள்ளேயே வைத்து வளர்த்த குழந்தைகளை தீர்க்கமாய் அழைத்து செல்வேன் என சொல்லாமல் விட்டேத்தியாய் இருக்கிறாள்.

“எனக்கு திரும்ப பாண்டி போக விருப்பமில்லை. ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டேன். சங்குமாகிட்டயும் பேசிட்டேன். பத்து நாள் எதை பத்தியும் நினைக்காம வெய்ட் பண்ண சொன்னாங்க. எதுவாயிருந்தாலும் அடுத்த வாரம் பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

“நா மும்பை ஆபீஸ்ல பேசிட்டேன். நாலு மாசம் கழிச்சு ஜாயின் பண்ணுவேன்னு நெனைக்கிறேன். அண்ணன் அடுத்த வீக்கெண்ட் வரேன்னு சொல்லியிருக்கன். சங்குமாதான் அவன்கிட்ட பேசுனாங்க. அவன் இன்னும் என்கிட்டே பேசல. மெசேஜ் மட்டும் போட்டிருக்கான்” என இடியை இறக்கினாள் ஜித்து.

முடிவை வெளிப்படையாக சொன்னவள் இப்போது வரை அதன் காரணத்தை சொல்ல கூச்சப்படுகிறாள்.

கண்டிப்பாக ராஜுவோடு ஏதோ வருத்தம். இந்த எல்லைக்கு போயிருக்கறாள்.

நெதர்லாந்து போகும் முன் நல்லபடியாக இருந்த குடும்பம் இப்போது இந்த நிலையில் நிற்கிறது.

லக்ஷ்மி வேறு பக்கம் முகத்தை திருப்பி கண்ணை மூடிக் கொண்டாள்.

ஜித்துவை நேராய் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. 

இந்த வயதில் இந்த பொண்ணுக்கு ஏன் இந்த நிலை கடவுளே என வருந்தினாள்.    

தன் அம்மாவை நினைத்தாள் லக்ஷ்மி. இவளை கண்டிப்பாக அவர்களால் மட்டுமே தேற்ற முடியும். இவள் இந்த மனநிலையில் எடுத்த ஒரு நல்ல முடிவு இங்கு வந்தது தான்.

ஆனால் சங்கு புஷ்பம் எந்த சலனமும் இல்லாமல் இவளிடம் பேசுவது லக்ஷ்மிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் அனுபவம் அப்படி என நினைத்துக் கொண்டாள்.        

Tamil novel – Jiteswari – Part 7/21

a talk between a crow and monkey

குளத்தின் நடுவே கல் மண்டபம் இருக்கிறது. அதன் அருகே நீரில் சில மீன்கள் கம்பி ஜன்னலருகே நெடு நேரமாக குழந்தைகள் நிற்பதை கவனித்தபடி நீந்தி கொண்டிருந்தன.

பூட்டிய கேட்டை பார்த்தபடியே குழந்தைகள் ஏமாற்றமாக நின்றது குட்டி மீனுக்கு வருத்தமாக இருந்தது.

“அம்மா, ஏன்மா இப்போ கேட் பூட்டி வெக்குறாங்க? அங்க பாரு குட்டி பசங்க சேடா இருக்காங்க” என கேட்டது குட்டி மீன்.

“எல்லாம் அந்த தங்கராஜு வேலை. வர்றவங்க குப்பை போடுறாங்க, லவ்வர்ஸ் வராங்கனு ஏதேதோ காரணம் சொல்லி பூட்டி வெச்சிருக்கான். பாவம் பசங்க, விளையாட முடியாம திரும்ப போறாங்க” என்றது அம்மா மீன்.

மண்டபத்தின் மேலே அமர்ந்திருந்த காகம் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தது. சின்னதாய் பறந்து வந்து தரையில் அமர்ந்தது.

“இப்ப கேட் தொறந்தா நீ என்ன வெளில கெளம்பி போக போறியா?” என நக்கலாக குட்டி மீனிடம் கேட்டது.

வயத்தில் மூத்த காகம் என அம்மா மீன் காதில் சொல்லி குட்டி மீனை அமைதிப்படுத்தியது.

பக்கத்து மரக் கிளையில் அமர்ந்திருந்த குரங்கு இந்த மீட்டிங்கில் வந்து சேர்ந்து கொண்டது. சற்று நேரத்தில் அதற்கு அங்கே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என புரிந்தது.

பதில் வராத காரணத்தால் மீண்டும் காகம் சீண்ட தொடங்கியது.

“உங்களுக்கு என்ன வெயில் மழை கஷ்டமா? சொகுசா தண்ணில இருப்பீங்க. இங்கயே பாசி பூச்சிய தின்னு காலத்த ஓட்டிடுவீங்க. என்ன மாதிரி கோபுரம் மேல வெயில்ல காஞ்சி மழைக்கு நனஞ்சா இருக்கீங்க? தண்ணி வத்துற மாதிரி இருந்தா தங்கராஜு டேங்கர்காரன தண்ணி புல் பண்ண சொல்லிடுவான். நா நாலு தெரு பறந்து போய் எங்க வெந்த சோறு கிடைக்கும்னு அல்லாடிக்கிட்டிருக்கேன்” என நீட்டி முழக்கி பேசியது.

தூணில் சாய்ந்து உட்கார்ந்தபடி காகம் சொல்வதை கேட்டு கொண்டிருந்தது குரங்கு.

குட்டி மீனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. சொல்ல முடியாத சோகம் அதன் கண்ணில் கண்ணீராய் வழிந்தது. அம்மா மீனுக்கு தாளவில்லை.

“நீ தெக்கு கோபுரத்துல நல்ல கூடுல தானே இருக்க? என்னவோ வெந்த சோறு மட்டும்தான் சாப்புடுறேன்னு கதவுடுற. நல்லா வடை, சக்கரபொங்கல்னு வகை வகையா சாப்புடுற. எங்கள வந்து குறை சொல்லுற” என காகத்தை தாளித்தது அம்மா மீன்.

“இது காலைல மெனு. மத்தியானம் பஜார் பக்கம் போய் தள்ளு வண்டி கடை பக்கத்துல தான் ஐய்யாக்கு டியூட்டி. சிக்கன் ரைஸ், பிரைட் பிஷ்னு ஒரு ஒரு புடி புடிப்பார்” என்றது குரங்கு.

“அப்புறம் ஐயா இப்போ தெக்கு கோபுரத்துல இல்ல. வடக்கு கோபுரத்துக்குப் போயிட்டார்” என எக்ஸ்ட்ரா டீடைலை சொன்னது மாருதி.

காகம் தொக்காக மாட்டிக்கொண்டது. என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.

“ஆமா, நா மட்டும் தான் சக்கர பொங்கல் சாப்பிடுறேனா? எனக்கே நாலு தொன்னை தள்ளி அஞ்சாவது தொன்னைல தான் கொஞ்சூண்டு கெடைக்குது. நம்ம கணேசன் அண்ணனை பாருங்க, வெல்லம், சோறு, புல்லுனு ராயலா இருக்காரு” என கோவில் யானையை கோர்த்து விட்டது.

தன் மீது ஒரு குறை சொன்னால் அடுத்தவரோடு கோர்த்துவிடும் மனித புத்தி காகத்துக்கும் தொற்றிக் கொண்டது.

“இப்போ என்ன, அந்த பையன் பொரி போட்டு விளையாடி இருப்பான். நீங்களும் வயறு முட்ட தின்னுட்டு ஆட்டம் போட்டு இருப்பீங்க. கேட்டு பூட்டி இருக்கவே உங்களுக்கு காண்டா இருக்கு. அதுக்கு ஏன் என்ன கழுவி ஊத்துறீங்க?” என பிளேட்டை திருப்பி போட்டது காகம்.  

பாதிக்கப்பட்டவைர்களையே பழி போட்டு ஏளனப்படுத்தும் ஈனபுத்தியையும் தவறாமல் கற்றுக் கொண்டு இருக்கிறது என நினைத்தது குரங்கு.

காகத்தின் வார்த்தைகள் மீன்களின் தன்மானத்தை சீண்டியது.

“கொஞ்சம் நிறுத்தறியா” என்றபடி மீட்டிங்கில் சேர்ந்து கொண்டது பாட்டி மீன்.

“நீ ஏன் வடக்கு கோபுரத்துல போய் கூடு கட்டுன?” என காகத்திடம் கேட்டது.

இந்த கேள்வியை காகம் எதிர்பார்க்கவில்லை.

“அங்க ஒரே சத்தமா இருக்கு. அந்த பக்கம் ப்ளைஓவர் கட்டுறாங்க. டஸ்டும், லொட்டு லொட்டுனு சவுண்டும் நாராசமா இருக்கு. இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமாம் முடிக்க. அது வரை யார் அந்த எடத்துல இருக்குறது. அதான் வடக்கு கோபுரத்துக்கு போயிட்டேன்” என்றது காகம்.

“அது மட்டும் தான் காரணமா?” என கூர்மையாக கேட்டது பாட்டி மீன்.

குரங்குக்கு பாட்டி மீன் கேட்ட கேள்வியின் சூட்சுமம் புரிந்தது. அமைதியாக காகத்தின் பதிலுக்கு காத்திருந்து.

காகம் சில நொடிகள் மெளனமாக இருந்தது.

“இல்ல, தெக்கு கோபுரம் பக்கத்துல மொபைல் டவர் இருக்கு. இஎம்எப் ரேடியேஷன் அதிகமா இருக்கு. என் ஒய்ப்புக்கு கருமுட்டை பிரச்சினை வந்துடிச்சி. இந்த சாமிய வேண்டாத நாளில்லை ஒரு வாரிசை குடுக்க சொல்லி. எங்க அப்பா அம்மாக்கும் திசையறிஞ்சு பறக்குறதுல குறைபாடு வந்துடிச்சி. பக்கத்துல எங்க அக்கா ஊருக்கு போய் பார்த்துட்டு வரதுக்கு அவ்ளோ தடுமாறுறாங்க. ரேடியேஷனால அவங்க பறக்குற திறனும் பாதிக்கப்பட்டிருக்கு. ஒரு நாள் தள்ளு வண்டி பக்கத்துல உக்காந்து சாப்பிடும் போது எப் எம் ரேடியோல மொபைல் டவர் ரேடியேஷன் பத்தி சொன்னாங்க. அப்போ தான் எனக்கும் எங்க பிரச்சினைக்கு காரணம் புரிஞ்சுது. எங்க அம்மா கூட வாஸ்து சரி இல்ல, கூட்ட கொஞ்சம் மாத்தி கட்டுனு பொலம்பிகிட்டு இருந்தாங்க” என ஆதங்கத்தை கொட்டியது காகம்.

“அப்ப வாஸ்து பிரச்சினை இல்ல, டவர்ல இருந்து வர்ற வஸ்து தான் பிரச்சினை” என டிக்ளேர் செய்தது குரங்கு.

“ஆமா, வடக்கு கோபுரம் போனப்புறம் கொஞ்சம் எக்ஸ்போஷர் கம்மியா இருக்கு” என சொன்னது காகம்.

“இஎம்எப் ரேடியேஷன்னா என்ன?” என கேட்டது குட்டி மீன்.

“எலக்ட்ரோ மேக்னடிக் பீல்டு ரேடியேஷன்” என சொன்னது காகம்.

“அது தியரி. பாதிக்கப்பட்டவங்களுக்கு இஎம்எப் ரேடியேஷன்னா, “என்னா மயிருக்கு பிரீ ரேடியேஷன்னு” அர்த்தம். கார்போரேட்டுங்க லாபம் சம்பாதிக்க கால், மெசேஜ், இன்டர்நெட்டுனு பிரீயா குடுத்து மனுஷங்களையும்,பறவைங்களையும் கொல்லுறானுங்க. இந்த பைத்தியங்க பிரீ கால்னு பொழுதுக்கும் பேசி எல்லாரையும் ரேடியேஷனுக்கு எக்ஸ்போஸ் பண்ணுறாங்க” என கோபமாய் சொன்னது குரங்கு.

“எதுக்கு வடக்கு கோபுரம், பேசாம எங்கயாவது ஊர் பக்கம் போக வேண்டியது தான? அதான் அங்க இருந்து நெறய ஆளுங்க இங்க வந்துட்டாங்களே, அங்க டவர் நெறய இருக்காது, நீங்க அங்க போய் சேபா இருக்க வேண்டியது தானே?” என விடாமல் கேட்டது பாட்டி மீன்.  

காகத்துக்கு தான் வாலண்டரியாய் வந்து வண்டியில் ஏறியது புரிந்தது.

“நீங்க என்னை ஊர விட்டே போகவா சொல்றீங்க?” என கான்டெக்ஸ்ட் புரிந்தும் வீம்பாய் கேட்டது.

“உசுருக்கே உத்தரவாதம் இல்ல, இதுல இந்த ஊர் தான் முக்கியமா?” என ஒரு போடு போட்டது பாட்டி மீன்.

கோபுரத்தில் கூடு கட்டுவது சாதாரண காரியமில்லை. பருந்து, வௌவால் என பெரிய கைககள் இருக்கும். இடம் கிடைப்பதே அரிது. காகத்துக்கு இங்கிருந்து போக மனமில்லை. உணவுக்கு பெரிதாய் அலட்டிக் கொள்ள வேண்டாம். பிரசாத பிளேட்டுகள், பொங்கல் வைப்பவர்கள் தருவது, அன்னதான கூடம் என முழு குடும்பமும் நோகாமல் வேலையை முடித்து விடும்.

ஊருக்கு போய் சேர்த்தால் ஏதாவது பழம் கொட்டை என தின்று தான் வாழ வேண்டும். பழைய கஞ்சியை கூட வீணாக்காமல் குடித்து சுத்தமாக புழக்கடையில் பாத்திரங்கள் இருக்கும். சோற்று பருக்கையை நல்ல நாளில் தான் பார்க்க முடியும். 

 “சாவு எல்லாருக்கும் ஒரு நாள் வரத்தான் போகுது. ஏதோ நல்லதா நாலு வாய் தின்னுட்டு சாகணும். ஊர்ல போய் என்னத்த சாப்புட? அமாவாசைக்கு மட்டும் தான் சோறு போடுவாங்க. மத்த நாள் பூவாவுக்கு என்ன பண்றது”? என ஓபனாய் விஷயத்தை சொல்லியது. 

 “ஏன் கேட்டேன்னா, சோறு ஒரு மேட்டர் இல்ல. உனக்கு ஒரு ரிஸ்குன்னா உன் உசுரை காப்பாத்திக்க நீ இடம் மாறுற. தெக்கு கோபுரத்திலேர்ந்து டவர விட தூரமா இருக்குற வடக்கு கோபுரத்துக்கு போயிட்ட. ஆனா எங்க நெலமைய யோசிச்சு பாரு. கொளத்துல ஒரு பிரச்சினைன்னா நாங்க எங்க போறது. இங்கயே இருந்து சாக வேண்டியதுதான். ஆத்துலயோ கடல்லியோ இருந்தோ எங்கயாவது வேற இடத்துக்கு நீந்தி போய் பொழச்சிக்குவோம்” என நிதானமாய் சொன்னது பாட்டி மீன்.

“நீ எப் எம் கேட்டு விவரமா வீடு மாறிட்ட. எங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கு? ஏதோ கோவிலுக்கு வர்றவங்க வந்து படித்தொரையில உக்காந்து கத பேசினா ஏதாவது விஷயம் தெரியும். இப்ப பாரு, பொழுதும் போகாம, நாட்டு நடப்பு எதுவும் தெரியாம மக்கு மாதிரி இருக்கோம்” என தொடர்ந்தது.

குளத்தின் நிலையை அறிந்த குரங்கு சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டது. பெருசு சொல்வது உண்மைதான் என்பது போல தலையாட்டியது.

“நீ நாலு இடத்துக்கு பறக்கிற. பொழுதுக்கும் எங்கயாவது ஏறி உக்காந்துகிட்டு பராக்கு பாக்குற. போதாக்கொறைக்கு இந்த ஜனங்க வேற கா கானு கூப்புட்டு உனக்கு சோறு போடுறாங்க. உனக்கு எங்க கஷ்டம் எப்படி புரியும்?” என பொரிந்து தள்ளியது அம்மா மீன்.

மாமியாரும் மருமகளும் செட்டு சேந்துட்டாங்க. இந்த இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என எண்ணியது காகம். 

“லன்ச் டைம் ஆச்சு. இன்னைக்கு ஒரு தெவச வீட்டுக்கு போகணும். சாயங்காலம் வர்றேன்” என சொல்லி இடத்தை காலி செய்தது காகம்.

பிறகு குரங்கும் தண்ணீரில் குதித்து நீந்தியபடியே படித்துறை பக்கம் போனது.

‘என்னடி அந்த ஆம்பள காக்கா, கொரங்கு கூட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்க?” என்றபடி முறைத்தது கிழட்டு மீன்.

“உனக்கு நல்ல சாவு வரும்னு மட்டும் நினைக்காதே. ஏலம் எடுத்தவன் அடுத்த வாரம் வருவான். நீதான் மொதல்ல மாட்ட போற. உப்புகாரம் தடவி சூடா பொறிச்சி மொடாக்குடிகாரனுக்கு சைட் டிஷ்ஷா போக போற.

செத்தப்புறமும் ஆல்கஹால்ல மெதந்து ஜீரணம் ஆகாம வாந்தியா நாறி போக போற. பொம்பளைங்கள தப்பா பேசுனவனுங்க நல்ல கதி காண மாட்டானுங்க” என திட்டி தீர்த்தது பாட்டி மீன்.

சற்று நேரம் கழித்து கையில் ஒரு பொரி பாக்கெட்டோடு வந்த குரங்கு சரக்கென்று பிரித்து நீரில் கொட்டியது.

Monkey sitting in temple

“குட்டிமா, வா வா வந்து சாப்புடு” என அழைத்தது.

குட்டி மீன் அமைதியாக இருந்தது. “போய் சாப்பிடு” என்றது பாட்டி மீன்.

பிறகு குரங்கிடம் “இந்த பொரிக்காக தான் நாங்க ஏங்கி இருக்கோம்னு நீயும் நெனைக்குறியா மாருதி?” என மெதுவாக கேட்டது.

 குரங்கு தலையை குனிந்து கொண்டது.

“உங்க கஷ்டம் எனக்கு தெரியும் மச்சிமா. என்னால உங்களுக்கு இதை தான் பண்ண முடியும். அந்த தங்கராஜு பய பூட்டு போட்டதுல இருந்து நீங்க அப்செட்டா இருக்கீங்க. பப்ளிக் யாரையும் பாக்க முடியல. டெய்லி அந்த அய்யறு மட்டும் வந்து முங்கிட்டு போறாரு. அவரு கோவணத்தையே எத்தனை நாளு தரிசிக்குறது?” என ஆறுதல் சொன்னது மாருதி.

“என்னை விடு மாருதி. நா வயசானவ. எல்லாத்தையும் பாத்துட்டேன். இந்த குட்டிங்க எல்லாம் லாக்டவுன் சமயத்துல பொறந்துதுங்க. கோவில்ல ஜன நடமாட்டமே ரெண்டு மூணு வருஷமா கெடயாது. இப்பதான் கொஞ்ச நாளா பெரியவங்க, குழந்தைங்க, புருசன் பொண்டாட்டி ஜோடிங்க எல்லாரும் வந்து படித்தொரையில உக்காந்து பேசிட்டு போறாங்க. புள்ளைங்களும் அவங்கள பாத்து விளையாடி சந்தோஷமா இருக்குங்க. இந்த தங்கராஜு கேட்ட பூட்டுனதுல இருந்து அதுங்க ரொம்ப வருத்தமா இருக்குங்க” என வேதனையை கொட்டியது பாட்டி மீன்.

“கரெக்ட்டு தான் மச்சிமா. நாங்களாவது நாலு இடம் சுத்துறோம். ஆளுங்கள பாக்குறோம். பொழுது போயிடுது. நீங்க பாவம், என்ன பண்ணுவீங்க? அந்த காக்கா வெவரம் புரியாம பேசுது. மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க” என பாசமாய் சொன்னது மாருதி.

“அந்த பய கையில பொரி வச்சிருந்தான் உங்களுக்கு குடுக்க. கேட்டு மூடி இருக்கவே போய்ட்டான். பாவம், நம்ம குட்டிமாவும் டல்லா இருந்துதா. அதான் வெளில போய் ஒரு பாக்கெட்டை தூக்கிட்டு வந்துட்டேன்” என விளக்கியது மாருதி.

“ஏன் மாருதி தூக்கிட்டு வந்த? தப்பில்லையா?’ என கேட்டது மச்சிமா.

“ஒரு தப்பும் இல்ல மச்சிமா, சாமி பேரையும் நம்ம கோவில் பேரையும் சொல்லி இவனுங்க எவ்வளவு கொள்ளையடிக்குறானுங்க. பாடாவதிப் பசங்க” என திட்டி தீர்த்தது மாருதி.

“ஏன் மாருதி, சாமி அவங்க கண்ணை குத்தாதா?” என கேட்டது குட்டி மீன்.

“கண்ணை குத்தி என்ன பிரயோஜனம்? அப்புறம் சாமி காப்பாத்துன்னு அவருகிட்ட தான் போய் நிப்பாங்க. அதனால அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி குடுப்பாரு. அப்புறம் குறைந்த பட்ச நியாயமா வேலை செய்வாங்க” என சொன்னது மாருதி.

“எப்போ இவங்களுக்கு நல்ல புத்தி குடுப்பாரு இந்த கொளுத்து கேட்ட தொறக்க?” என ஆர்வமாய் கேட்டது குட்டி மீன்.

“அது சாமிக்கு தான் தெரியும்” என முடித்தது மாருதி.

Tamil novel – Jiteswari – Part 3/21

A woman engineer

ஜிதேஸ்வரி மெக்கானிகல் என்ஜினீயர். திருமணத்திற்கு முன்பு மும்பையில் ஐந்து வருடம் பணியில் இருந்தாள்.  கணவர் ராஜு எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். பாண்டியில் ஈபி ஆபீசில் நிரந்தர வேலையில் இருக்கிறார். ராஜுவின் வரன் வந்தபோது ஜிதேஸ்வரி தனது வருங்கால வேலை வாய்ப்புகளை பற்றி யோசித்தாள்.

ஜிதேஸ்வரி ஒரு சர்வதேச எரிவாயு நிறுவனத்தின் மும்பை கிளையில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். தமிழகத்தில் அது போன்ற நிறுவனங்கள் மிக குறைவு. பாண்டியிலோ ஒன்று கூட கிடையாது.

ஜித்து அவள் பெற்றோரிடம் இந்த வரனை தவிர்க்குமாறு சொல்லி விட்டாள்.

ராஜுவின் குடும்பம் கற்பகத்தின் உறவு வழியில் தூரத்து சொந்தம். விசாரித்ததில் நல்ல குடும்பம் என செய்தி வந்தது. ஜிதேஸ்வரியின் தந்தை இந்த வரனை முடிப்பதில் குறியாய் இருந்தார். நல்ல பையன், நல்ல வேலை மட்டுமல்லாமல் அடிக்கடி போய் பார்க்க ஏதுவாக பாண்டியிலேயே சம்பந்தம் கிடைத்ததில் அவருக்கு பரம சந்தோஷம்.

இது ஊருக்கும் வீட்டாருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவருக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது. ஜிதேஸ்வரி செய்வது ஒரு நுட்பமான வேலை. நல்ல பதவி இந்த வயதிலேயே. அவர் பணி ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தை விட இப்போது அவர் மகள் வாங்குவது அதிகம். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக இன்னும் நல்ல ஊதியம் கிடைக்கும். மேலும் பல நாடுகளில் பணி புரிய வாய்ப்பும் கிடைக்கும். இங்கு தான் அவரின் கவலை நிலைகொண்டது. இந்த ஆண்டு வரன் அமையாவிடில் அடுத்து வரும் ஆண்டுகளில் மகளின் தகுதிக்கேற்ப வரன் தேடுவது மிக சவாலான விஷயமாக இருக்கும். அவர்கள் சார்ந்த சமூகத்தில் அந்த அளவு நிலையில் இருப்பவர்கள் மிகவும் அரிதாக இருந்தது. அப்படி இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வரன்களாக இருந்தார்கள்.

அவருக்கு மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப இஷ்டமில்லை. அதனால் எப்படியாவது இந்த வரன் அமைய வேண்டும் என்று நினைத்தார்.

ராஜுவின் வரனை முடிப்பதில் அவளின் பெற்றோர்கள் மும்முரமாக இருந்தார்கள். ஜிதேஸ்வரிக்கும் ராஜூவை பிடித்திருந்தது. ஆனால் சிக்கல் ராஜுவின் அரசாங்க வேலையும் ஊரும் தான். 

மும்பையில் வேலை பார்க்க விருப்பமா என கேட்டாள் ஜிதேஸ்வரி. ராஜூவை விட அவர் தந்தை இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தார். மகன் எப்போதும் பாண்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம்.

இரண்டு தரப்பும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். சில மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜிதேஸ்வரியின் மீது அழுத்தம் அதிகமானது. ஜிதேஸ்வரி அவள் வேலை செய்யும் கம்பெனியில் சென்னைக்கு மாற்றலுக்கு விசாரித்தாள்.

இடமாற்றல் சாத்தியம் என சொன்னார்கள். ஆனால் அடுத்த பணி உயர்வின் போது மும்பையில் இருக்க வேண்டும். இப்போது இருக்கும் நிலையிலேயே இன்னும் சில ஆண்டுகள் சென்னையில் தொடரலாம் என ஒரு சிக்கலான சூழல். இந்த மாற்றம் முழுமையான பலனளிக்காது என தோன்றியது அவளுக்கு. அப்போதும் ராஜு சென்னைக்கு மாற்றலாகி வரப்போவது இல்லை. வார இறுதி நாட்களில் யாராவது ஒருவர் போய் மற்றொருவரை சந்திக்கும் நிலை.

ராஜுவின் தந்தைக்கு இந்த தாமதம் எரிச்சலூட்டியது. ஒரு வேளை ராஜு மனம் மாறி மும்பை போவதாக முடிவெடுத்தால், அதற்கு பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு வருவது அரிதானதாக இருக்கும். அதனால் பேசாமல் இந்த பெண்ணை விட்டுவிட்டு வேறு வரன் பார்க்கலாம் என முடிவெடுத்தார். இரவு உணவின் போது ராஜுவிடம் இது பற்றி பேசினார்.

“இல்லப்பா, ஜிதேஸ்வரி முடிவெடுக்கட்டும். நாம வெயிட் பண்ணலாம்” என சுருக்குமாய் முடித்தான்.

இந்த பதிலில் ராஜுவின் விருப்பம் வெளிப்படையாக தெரிந்தது. அதனால் இதற்கு மேலும் காத்திருப்பது ஆபத்து என உணர்ந்தார். அடுத்த நாள் ஜிதேஸ்வரியின் தந்தையிடம் நேரில் போய் அவர் கவலையை பகிர்ந்து கொண்டார்.

இரு வீட்டு பெரியோர்களும் தங்கள் பிள்ளைகள் வேறு ஊரில் வசிப்பதை விரும்பவில்லை. ராஜுவின் அப்பா இவ்வளவு தூரம் தானாக முன்வந்து பேசியது பெண் வீட்டாருக்கு பிடித்திருந்தது. ராஜு உறுதியாக இருப்பது இன்னும் சந்தோஷமாக இருந்தது.

மீண்டும் பெண்ணிடம் பேசி விட்டு இந்த வாரத்திற்குள் முடுவு சொல்வதாக சொல்லி அனுப்பி வைத்தார்கள். அந்த வார இறுதியில் மும்பை போய் மகள் வீட்டில் இறங்கினார்கள்.

இந்த விஷயத்திற்காக அவர்கள் இவ்வளவு தொலைவு வந்தது நிலைமையின் வீரியத்தை அவளுக்கு உணர்த்தியது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முழுதாக இந்த வரனை பற்றி விவாதித்தார்கள். சென்னை இட மாற்றலின் விளைவுகளை விவரித்தாள் ஜிதேஸ்வரி. அவள் ஆபீசில் விசாரித்ததே அவர்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. மேலும் ஒரு வாரம் தங்கி இருந்து இன்னும் தீவிரமாக அவளை கரைக்க ஆரம்பித்தார்கள். பத்து நாள் கடந்த பிறகு சென்னை மாற்றலுக்கு ஜிதேஸ்வரி விண்ணப்பித்தாள். அடுத்த ஒரு மாதத்தில் சென்னை வந்து சேர, திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பிறகு இருபதே நாட்களில் திருமணமும் நல்ல படியாக நடந்தது.

A traditional Tamil marriage ceremony

Tamil novel – Jiteswari – Part 1/21

A retired woman enjoying the morning with coffee

அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.

உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.

சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.

எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.

மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.

a senior attending phone call

“சங்குமா, எழுந்துட்டீங்களா? நா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றாள்.

“இல்ல ஜித்து, சொல்லு, எப்ப வர?” என்றார் சங்குபுஷ்பம்.

“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.

“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.

“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.

“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.

“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.

“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.

டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.

லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.

“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.

“அவங்க கிட்டயும், பசங்க கிட்டயும் காலைல ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ஜித்து போன் பண்ணி சொல்லிட்டாளாம்” என்றாள் லக்ஷ்மி.

வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.

லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.

ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.

ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர்
சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.

கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.

கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.

ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.

கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.

சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.

சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.

“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 4/4

சில மாதங்கள் ஆனது. ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பிய சிவா கேட்டான் “என்னம்மா? இன்னைக்கு பச்சை கலர் கேசரி செஞ்சுருக்க, என்ன ஸ்பெஷல்?”

“அம்மா பாஸாயிட்டாங்கன்னா! அதான் ஜாலி மூடுல இருக்காங்க” என சொன்னது சின்ன வாண்டு தேவசேனா.

“ஆமாடா, மத்தியானம் தான் ரிசல்ட் வந்தது. அம்மா டிகிரி வாங்கிட்டேன்!!” என உற்சாகமாக சொன்னாள் தாரா. தபால் வழியில் யோகா இளங்கலை முடித்து இன்று பட்டம் வாங்கியிருக்கிறாள்.

சிவா ஆறாம் வகுப்பு மாணவன். தேவசேனா ஒன்றாம் வகுப்பு. தாராவின் கணவர் மேகநாதன் ஆட்டோ ஓட்டுநர். பகுதி நேரமாக சுவர் பெயிண்டிங் வேலையும் செய்வார்.

“மல்லிகை மலர் பறிக்க, மான் போல துள்ளி வா!

அல்லி மலர் பறிக்க, அன்னநடை போட்டு வா!

டிகிரி நீயும் வாங்க, டைகராக படித்து வா!!  என சிவா குஷியாக பாட ஆரம்பித்தான்.

“அப்போ, அம்மா டைகரா?” என தேவசேனா புலி போல காலை மடக்கி நடந்து வந்து பயமுறுத்த, மூவரும் சேர்ந்து கொல்லென சிரித்தார்கள். சற்று நேரத்தில் மேகநாதனும் வர வீடு களை கட்டியது.

 நால்வரும் கிளம்பி கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்துவிட்டு கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.

பால்காரர் குணவேந்தன் அந்த பக்கம் வந்தார்.

“என்ன மேகா, தாரா பாஸாயிடுச்சுனு எங்க வீட்டம்மா சொல்லுச்சு! நீ எப்போ படிக்க போற?” என்றார்.

மேகநாதன் தலையை திருப்பி கொள்ள, தாராவுக்கு சங்கடமாக இருந்தது.

“குணா மாமா, அத்தை குடிக்குறது இல்லை, நீங்க எப்போ குடியை விட போறீங்க?” என ஒரே போடாக கேட்டான் சிவா.

“அப்பா, அவர் வீட்டு செவத்துல போய் குடி குடியை கெடுக்கும்னு எழுதிட்டு வாப்பா” என்றது சேனா.

குணவேந்தன் குடிவேந்தனாக இருப்பதை குழந்தைகள் சொல்ல, மெதுவாக நகர்ந்தார் அவர்.

“அம்மா, நாங்க போய் யானையை பாத்துட்டு வரோம்” என சொல்லி குழந்தைகள் எழுந்து சென்றார்கள்.

“இன்னைக்கு நா டிகிரி பாஸ் பண்ணிட்டேன்னு கலாவதி டீச்சர் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. வெண்மணி அக்கா கிட்ட காசு குடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பி கேக் வாங்கிட்டு வர சொல்லி எல்லா டீச்சர்ஸுக்கும் என்னை குடுக்க சொன்னாங்க. நானே வாங்கியிருக்கணும், எனக்கு தோணலைங்க” என்றாள் தாரா.

“கரெக்ட்டு தான், இன்னொரு நாள் நீ எல்லாருக்கும் நம்ம சார்பா ஸ்வீட் குடுத்துடு” என்றார் மேகா.

“ஷூ கம்பெனிக்காரங்க சில டாக்குமெண்ட் கேட்டாங்கன்னு டீச்சர் சொன்னாங்க. நாளைக்கு முடிவு பண்ணி சொல்றேன்னு சொல்லி இருக்கேன். ஏதோ ஒரு பயம் மனசுல இருக்கு, ஆனா என்னன்னு சொல்ல தெரியல” என்றாள் தாரா.

“உன்னால முடியும் தாரா, இந்த வேலையில சேரும்போது எவ்வளவு யோசிச்ச? எப்படி இவ்ளோ சின்ன பசங்கள பாத்துகிறதுன்னு? ஆனா இந்த பத்து வருஷத்துல நீ எவ்ளோ இம்ப்ரூவ் ஆகி இருக்கே! இன்னைக்கு அந்த பயம் இருந்த இடம் தெரியாம போயிடுச்சி. அது போல தான் இப்பவும். ஒரு விஷயத்தை புதுசா ஆரம்பிக்கும் போது யாருமே அதுல எக்ஸ்பர்ட் கிடையாது. அதனால முடியும்னு நெனச்சி துணிஞ்சு இறங்கு” என ஊக்கம் கொடுத்தார் மேகா.

“சரிங்க, யோசிக்கிறேன்” என தாரா சொல்ல “வா கெளம்பலாம்” என்றார் மேகா.

அவர் ஆட்டோவை ஓட்ட, மற்ற மூவரும் பின் சீட்டில் உட்கார்ந்தார்கள்.

கோவிலை ஒட்டிய மெயின் ரோட்டில் கல்யாண ஊர்வலம் மெதுவாக போய் கொண்டிருந்தது.

ஆட்டோ டிராபிக்கில் நிற்க, “அம்மா, போன் குடு, எனக்கு போரடிக்குது” என கேட்டது சேனா.

“ஏன், உன்னால கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா?” என திட்டினான் சிவா.

சேனா கோபித்துக் கொண்டு மூஞ்சை திருப்பிக் கொண்டது.

தாரா என்ன செய்வது என யோசிக்கும் போது சேனா கையில் இருந்த வாட்டர் பாட்டில் ஒரு ஐடியாவை கொடுத்தது.

“சேனா, இந்த பாட்டிலை குடு, ஒரு கேம் சொல்லி தரேன்” என வாங்கி அதை அவர்கள் இருவரின் தொடைகளுக்கே நடுவே நிற்க வைத்தாள்.

playtime in Auto

“இதை கார் கியரா நெனச்சுக்கோ. அப்பா வேண்டிய நிறுத்தினா, நியூட்ரல்ல வை. மெதுவா ஸ்டார்ட் பண்ணா இடது பக்கம் போய், மேல் பக்கம் சாய்ச்சு வை. இன்னும் கொஞ்சம் ஸ்பீட் எடுத்தா செகண்ட் கியருக்கு அப்படியே பின்னாடி வா. ஒரே சீரா வண்டி ஓடுச்சுன்னா, கொஞ்சம் வலது பக்கம் வந்து முன்னாடி போ” என விளக்கினாள்.

சேனாவும் சிவாவும்  பயங்கர குஷியாகிவிட்டார்கள். அந்த டிராபிக் ஜாம் அவர்கள் பல முறை கியர் மாற்றி விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தது.

“அப்பா, என்கிட்ட சொல்லாமா ஏம்பா ஸ்பீடு எடுத்த? நான் இன்னும் பர்ஸ்ட் கியர்லயே இருக்கேன்” என அவரை செல்லமாக திட்டியபடியே அவசரமாக பாட்டிலை நகர்த்தினார்கள்.

மேகநாதனும் அவர்கள் விளையாட ஏதுவாக போக்கு காட்டி ஓட்டினார். அரை மணி நேரம் ஆனது வீடு வந்து சேர்வதற்க்கு.

“செம சேனா, அருமையா கார் ஓட்டி எங்களை எல்லாம் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டே!” என பாராட்டினான் சிவா.

“அந்த பார்மசி சந்துல நான் சரியா கியர் போடலண்ணா. நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்கிறேன்” என தைரியமாக சொன்னது.

“பாத்தியா தாரா, இந்த சின்ன பொண்ணுக்கு இருக்குற நம்பிக்கையை? விளையாட்டா ஆரம்பிச்ச விஷயம், இப்போ அவளை ஒரு தேர்ந்த ட்ரைவரா உணர வெச்சிருக்கு. அவ கண்ணுல பயமோ, புது விஷயத்தை பழகுறோம் என்ற என்னமோ துளியும் இல்லை. தெரியலேன்னா வெளிப்படையா அத சொல்லி கத்துக்குறா. தெரியலேன்னு கூச்சப்படல” என மெதுவாக சொன்னார் மேகநாதன்.

தாராவுக்கு பொட்டில் அடித்தாற் போல தெளிவு ஏற்பட்டது.

“தேங்க்ஸுங்க, எனக்கு இப்போ புரிஞ்சிடிச்சு, நா ஹேண்டில் பண்ணிக்குறேன்” என சிரித்தாள் தாரா.

ஆறு மாதம் ஆனது. ஷூ கம்பெனி ப்ராஜெக்ட்டுக்காக, பயிற்சி வகுப்புகளை நேர்த்தியாக நடத்தி கொண்டிருந்தாள் தாரா.

மேகநாதன் இரண்டாவது வண்டி வாங்கி வீட்டின் முன் நிறுத்தினார்.

A new vehicle celebration

“ஹை, நம்ம வீட்டுக்கு குட்டி யானை வந்துடுச்சி!” என சிவா சந்தோஷமாக சொல்ல, “நா இதுக்கு பேரு வெச்சுட்டேன்!” என சொன்னது சேனா.

“என்ன பேருடி?” என ஆர்வமாக கேட்டான் சிவா.

“ரங்கு” என சொல்லி சிரித்தது சேனா. 

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 3/4

Family time

கதை நேரம் முடிந்து குழந்தைகள் வராண்டாவிற்கு செல்ல, ஊர் தலைவரும் கலாவதி டீச்சரும் வந்தார்கள்.

“லட்டு எடுத்துக்கம்மா, பசங்களுக்கும் குடுங்க” என பாக்ஸை நீட்டியவர் “நீ செஞ்சது பெரிய உதவிம்மா, நீ இல்லேன்னா நாங்க அடிக்கடி டவுனுக்கு போய் அலைய வேண்டியதா இருந்திருக்கும்” என சந்தோஷமாக நன்றி சொன்னார்.

கொஞ்ச நேரம் பேசி முடித்து விட்டு அவர் கிளம்ப, கலாவதி டீச்சர் மட்டும் இருந்தார்.

“தாரா, உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார். அவர் சொன்னதின் சுருக்கம் இதுதான்.

பொன்னி நர்ஸ் மற்றும் தலைவர் மூலமாக, தாரா பற்றி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு தெரிய வந்திருக்கிறது.

அவர் தாராவை பகுதி நேரமாக அந்த ஊர் பெண்களுக்கு யோகா சொல்லி தர நியமிக்க முடிவு செய்தார்.

அருகாமையில் இருந்த ஒரு ஷூ கம்பெனியின் CSR டீமிடம் பேசி, ஒரு குறிப்பிட்ட தொகையை தாராவுக்கு ஊதியமாக கொடுக்க ஏற்பாடும் ஆகி இருக்கிறது.

தாராவுக்கு இந்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும், டிப்ளோமா மட்டும் படித்த தான் இதை பெறுப்பேற்று செய்ய முடியுமா என சந்தேகமாக இருந்தது.

மேலும் மாலை நேரத்தில் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இந்த வேலையில் ஈடுபட்டால் எப்படி வீட்டை கவனிப்பது எனவும் குழப்பமாக இருந்தது.

“டிப்ளமோ மட்டும் தான் கைல இருக்கு டீச்சர். இன்னும் டிகிரி முடிக்கல. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு, யோசிச்சு சொல்றேன் டீச்சர், ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் தாரா.

“ஷூ கம்பெனில இந்த ப்ரோக்ராம் அப்ரூவ் ஆக கொஞ்ச நாள் ஆகும், கவலைப்படாதே ” என சொல்லி கிளம்பி போனார் கலாவதி டீச்சர்.

அன்று இரவு உணவு நேரம். “இன்னைக்கு என்ன கதை சொன்னம்மா பசங்களுக்கு?” என கேட்டது சேனா.

“சூப்பரான யானை கதை. சீக்கிரம் சாப்பிட்டு வாங்க, சொல்றேன்” என்றாள் தாரா.

சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்து வரிசையாக பாய் விரித்து தாரா படுக்க, இருவரும் வந்து ஆளுக்கொரு பக்கம் படுத்துக் கொண்டார்கள். மூடிய அவர்கள் கண்களுக்குள் காடு விரிய ஆரம்பித்தது.

கதை கேட்டபடியே மேகநாதன் கிச்சனை சுத்தம் செய்து முடித்தார். பிள்ளைகள் இருவரும் தூங்கிவிட “இங்க வாங்க ஒரு விஷயம் பேசணும்” என அழைத்தாள் தாரா.

டீச்சர் சொன்ன விஷயத்தை சொல்லி தன் குழப்பத்தை விளக்கினாள். பொறுமையாக கேட்ட மேகநாதன் “தாரா, ரங்குவ நெனச்சி பாரு, உன் கேள்விக்கு பதில் கிடைக்கும். இந்த வாய்ப்பு உனக்கு கெடச்சா, நாம ரெண்டாவது வண்டிய கடனில்லாம சீக்கிரம் வாங்கிடலாம்” என சொன்னார்.

அன்று இரவு தூக்கத்தில் பலவகையான பொறுப்புகள் வெவ்வேறு உருவங்களில் அவளை சுற்றி வருவது போல மங்கலாக ஒரு கனவு வந்தது.

அடுத்த வந்த நாட்கள் சாதாரணமாக இருந்தாலும் தாராவின் மண்டைக்குள் பல கேள்விகளை எழுப்பி கொண்டே இருந்தது.

ஒரு நாள் போல, இருபது சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்வது அசாதாரணமான வேலை. அவர்களுக்கு அமைதியான சூழலை அமைத்து கொடுப்பதே பெரும் பொறுப்பு.

ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, பேசி, உணவு கொடுத்து தூங்க வைப்பது என அடிப்படை பராமரிப்பு பணிகள் ஏராளம்.

கூடவே அவர்களின் கற்றல் தேவைகளையும் பூர்த்தி செய்து, அந்த நாளின் முடிவில் அவர்கள் பெற்றோரிடம் நல்ல படியாக ஒப்படைப்பது வரை மறைமுகமான ஒரு அழுத்தம் அவள் மீது இருக்கிறது.

மறுபுறம் வீடு, குழந்தைகள், குடும்பத்தின் பொருளாதார சூழல் என அடுக்கடுக்காய் பல விஷயங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது.

அந்த வாரம் நேரம் கிடைக்கும் போதெல்லாம்  கலாவதி டீச்சரிடம் போய் பேசினாள். அவருடைய அனுபங்களை கேட்கும் போது, தான் மட்டும் இந்த சூழலில் இல்லை என்பது தாராவுக்கு புரிந்தது.

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 2/4

Anganwaadi claaroom

ஒரு காட்டுல, ஒரு குட்டி யானை இருந்தது. அதோட பெரு ரங்கு.

அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் ரங்கு ரொம்ப செல்லம்.

ரங்கு கேட்ட எல்லாம் அதுக்கு கிடைக்கும். நல்ல நல்ல பழங்கள், கரும்பு, கிழங்கு வகைகள்னு அவங்க அப்பா அதுக்கு தேடி தேடி கொண்டு வந்து கொடுப்பாரு.

அவங்க அம்மா ரங்குவோட நல்லா வெளையாடுவாங்க. ரெண்டு பேரும் ஆத்துக்கு போய் தண்ணில ஆட்டம் போடுவாங்க. அப்புறம் அந்த ஆத்தங்கரைல படுத்து கதை பேசி பொழுது போக்குவாங்க.

ஒரு நாள் ரங்கு அவங்க அப்பா அம்மாவோட, காட்டுக்குள்ள ஒரு ட்ரிப் போச்சு.

மத்த அனிமல்ஸ மீட் பண்ணி பேசிகிட்டு இருந்தது. அப்போ அங்க சிங்க ராஜா வந்ததும் எல்லாரும் எழுந்து நின்னு அவருக்கு வணக்கம் சொன்னாங்க.

சிங்க ராஜாவும் தலையை ஆட்டிட்டு அவங்களை கடந்து போய்ட்டாரு. ரங்கு அவங்க அம்மாகிட்ட கேட்டுது “ஏம்மா இவரு மட்டும் ராஜாவா இருக்காரு?”

பார்ட்டி மோடில் இருந்த ரங்குவின் அம்மாவுக்கு இந்த நொய் நொய் கேள்விகள் எரிச்சலாக இருந்தது.

“சிங்கம் தாண்டா எப்பவும் காட்டுக்கு ராஜா, அவர்தான் பவர்புல்” என பொதுவாக சொல்லியது.

ரங்குவுக்கு ஆர்வம் அடங்கவில்லை. அங்கே இருந்த குட்டி குரங்கு சைமனிடம் போய் விளக்கம் கேட்டது.

A candid conversation between animals

மரக் கிளையில் தலை கீழாக தொங்கிக்கொண்டிருந்த அது, ரங்குவுக்கு அற்புதமான ஒரு பதிலை சொன்னது.

“நம்ம தல செம பாஸ்ட்டா ஓடும். அவரை யாரும் பீட் பண்ண முடியாது” என ஊசலாடியபடியே சொன்னது.

ராஜாவாகும் கனவில் இருந்த ரங்குவுக்கு அது பேரிடியான பதில்.

தன்னால் எக்காலத்திலும் ராஜாவாக முடியாது என வருந்தியது. ட்ரிப்பில் இருந்து வாலண்டரியாக ட்ராப் ஆகி போய் மரத்தடியில் படுத்துக் கொண்டது.

சிங்க ராஜா மாதிரி ஓட என்ன வேண்டும் என யோசித்தது. தன்னுடைய எடை தான் முதல் தடை என எண்ணியது.

எப்படியாவது வெயிட் லாஸ் செய்து ஸ்லிம்மாகி வேகமாக ஓடி, காட்டுக்கே ராஜாவாகி காட்ட வேண்டும் என முடிவு செய்தது.

அன்றிலிருந்து அதன் உணவை பெருமளவு குறைக்க ஆரம்பித்தது. நீண்ட தூரம் நடந்தும், ஓடியும் பயிற்சி செய்தது. அதன் விளைவாக சில நாட்களில் அது அதீத பலவீனமாக உணர்ந்தது.

ரங்குவின் பெற்றோர் அதை கூப்பிட்டு பேசினார்கள்.

“இங்க பாரு ரங்கு, கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி படைச்சிருக்கார். சிங்க ராஜா ஓடுவார். ஆனா அவரால ஓரளவுக்கு மேல வெய்ட் தூக்க முடியாது. ஆனா நம்மால முடியும். அதனால நம்ம பிறவிகேத்த இயல்பிலிருந்து நம்ம மாற நெனச்சா, அது பலன் கொடுக்காது. நீ உன்னோட பலத்தை நம்பு, அதில் முன்னேற முயற்சி செய்” என்றார்கள்.

“அப்போ அது ராஜா கனவு கண்டது என்ன ஆச்சு?” என ஆஷாதேவி உஷாராக கேட்டது.

ரங்குவே சமாதானம் ஆனாலும் ஆஷாதேவி தேடி போய் கொளுத்தி போடும் மூடில் இருந்தது.

“இன்னும் இருக்கு கேளுங்க” என தொடர்ந்தாள் தாரா.

அப்பா சொன்ன பேச்சை கேட்டாலும், ரங்கு ஏமாற்றமாக உணர்ந்தது. அடுத்த நாள் ரங்குவின் அம்மா அதை கூட்டிக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நடந்தார். 

“இங்க பாரு தங்கப்பா, ராஜான்னு யாரும் தன்னை தானே சொல்லிக்க முடியாது. அதை மக்கள் சொல்லணும். மக்களுக்கு வேண்டியதை, அவங்க கஷ்டத்தை, அவங்க வாய் விட்டு சொல்லாமலேயே ஒரு மன்னன் தீர்க்கணும். இல்லேன்னா நம்ம சிங்க ராஜ மாதிரி நம்ம பாதுகாப்பை உறுதி செய்யணும். பலத்தை காட்டுறதோ, வேகமா ஓடுறதோ ராஜாவுக்கான தகுதி இல்லை” என மெதுவாக சொல்லி ரங்குவுக்கு புரிய வைத்தது.

“நீ இப்போ குட்டி பையன். நீ நல்ல குணங்களோட வளர்ந்து, இந்த காட்டுல இருக்குறவங்களுக்கு பொறுப்பா உதவி செய்தீன்னா, அவங்களே உன்னை உயர்வா நடத்துவாங்க” என சொன்னது.

“சரிம்மா, புரிஞ்சுக்கிட்டேன். என் பலத்தை எப்படி நான் மெருகேத்துறது?” என ஆர்வமாக கேட்டது.

“நா சொல்றபடி கேளு” என சொன்னது அம்மா.

அன்று சில புற்களை ஒன்று திரட்டி, அந்த புல்கட்டை ரங்குவின் தும்பிக்கையால் தூக்க வைத்தது.

பிறகு சிறு கட்டைகள். அதன் பிறகு கரும்பு கட்டு. தொடர்ந்து வாழை கட்டுகள்.

மறுபுறம் தினமும் நீச்சல் பயிற்சி. ரங்கு வயதிலும் திறனிலும் வளர்ந்து பெரிய மர கட்டைகளை அநாவசியமாக தூக்கும் அளவிற்கு முன்னேறியது.

வருடங்கள் ஆனது. சிங்க ராஜாவுக்கும் வயதானது. அவர் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது.

காட்டில் ஒரு கவலை கண்ணுக்கு தெரியாமல் படர ஆரம்பித்தது. அந்த வருடம் கடும் மழை. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லாரும் எப்படியாடுவது சிங்கத்தை காப்பாற்ற வேண்டும் என கடவுளை வேண்ட ஆரம்பித்தார்கள்.

ஆஷாதேவி கைகூப்பி முதல் ஆளாக கண் மூடி பிரார்த்தனையை ஆரம்பித்தது. லைனாக மற்றவர்களும் பிரேயர் மோடுக்கு போனார்கள்.

ரங்குவும் அதன் நண்பர்களும் எப்படியாவது சிங்க ராஜாவுக்கு வைத்தியம் செய்ய முடிவெடுத்தார்கள்.

ஒருநாள் சைமன் வந்து ரங்குவிடம் ஒரு விஷயத்தை சொன்னது.

“ப்ரோ, ஆத்துக்கு அந்த பக்கம் ஒரு வைத்தியர் இருக்காறாம். பச்சிலை வைத்தியத்துல பெரிய ஆளுன்னு அங்க ஆயா சொல்லுது. அதுவும் பழங்கட்டை. அது சொன்னா சரியாதான் இருக்கும். நீ உதவி செய்தா நாம முயற்சி பண்ணி பாக்கலாம்” என ஆர்வமாக சொன்னது.

“சரி வா, போய் சிங்க ராஜாகிட்ட சொல்லலாம்” என ரெண்டு பெரும் கிளம்பினார்கள்.

ராஜாவின் குகை அமைதியாக இருந்தது. ராணி சிங்கம் சோகத்தில் இருந்தார்.

“ராஜா, நா சைமன் வந்திருக்கேன். ரங்குவும் இருக்கான், கண்ண தொறங்க” என்றது குரங்கு.

ஆஷாதேவி கண்ணே வெளியே வரும் அளவுக்கு வாயை பிளந்து கேட்டு கொண்டிருந்தது.

“தொறந்துட்டாரா கண்ணை?” என ஆர்வமாக கேட்டது.  

 ஆஷாதேவி சிங்க ராஜாவின் பிரேயர் மீட்டிங்கை எப்போதோ மனதில் நடத்தி விட்டது.

“இரு சொல்றங்கள்ல” என்றது ஷைலா.

சிங்க ராணி வந்து உதவி செய்ய, ராஜா பெட்டில் சாய்ந்து உட்கார்ந்தார். குட்டி முயல் கொடுத்த வெந்நீரை வாங்கி மெதுவாய் பருகினார்.

சைமன் வைத்தியர் விஷயத்தை சொல்லி, “ராஜா, நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க, நாங்க உங்களை வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போறோம்” என உறுதியாக சொன்னது.

“என் காலம் முடிஞ்சு போச்சு. நீங்க வாழ வேண்டிய பசங்க. எனக்காக எதுக்காக ரிஸ்க் எடுக்குறீங்க? என்னால எங்கயும் நகர முடியாது. இந்தம்மாவ நல்லா பாத்துக்குங்க” என உயில் மட்டும் எழுதாத குறையாக பேசினார் ராஜா.

“எங்க ஆயா கூட இப்படி தான். டாக்டர் வீட்டுக்கு கூப்பிட்டா ஒடனே வராது. அத ஆட்டோல ஏத்துறதே பெரிய கஷ்டம்” என சொந்த கதையை சொருகியது ஆஷாதேவி.

சிங்க ராணி கண்ணீர் சிந்த, குட்டி முயல் மூக்கை சிந்த, அதை பார்த்த ராஜாவின் மனம் மாறியது.

“ஏதோ இவங்க திருப்திக்காக வரேன்” என ஒப்புக்கொண்டார்.

சைமனும் ரங்குவும் போர் கால அடிப்படையில் வேலையை ஆரம்பித்தார்கள். மழை பொத்துக்கொண்டு ஊத்தியது.

ராஜாவின் கிச்சனில் இருந்து பெரிய வாழை இலைகளை கொண்டு வந்து அவரை சுற்றி கட்டினார்கள்.

ஒரு சந்தன மர பலகையில் புல் கட்டுகளை அடுக்கி, அதன் மீது ராஜாவை தூக்கி உட்கார வைத்தார்கள். பிறகு கயறு போட்டு கட்டி அந்த பலகையை ரங்குவின் மீது தூக்கி வைத்தது சைமன். பிறகு அதுவும் ரங்குவின் மீது ஏறி ராஜாவுக்கு பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டது.

எல்லோரும் வரிசையில் நின்று வழியனுப்ப, ரங்கு சுழன்று ஓடும் ஆற்றில் மெதுவாக இறங்கியது. காற்றும் மழையும் தீவிரமாக, அவர்களுக்கு கண் பார்வையும் மறைக்க ஆரம்பித்தது.

“ப்ரோ, நா இவரை புடிச்சிக்குறேன். நீ அட் அ டைம்ல ஒரு ஸ்டெப் மட்டும் எடுத்து வை” என அட்வைஸ் செய்தது சைமன்.

“நீ கவலைபடாதே, என் வேலையே இதான். நீ அவரை மட்டும் விட்டுராத, கெட்டியா புடிச்சிக்கோ” என சொல்லி எச்சரிக்கையாக நீந்தியது ரங்கு.

ஆற்றின் மறுகரை அடைய ஒரு மணி நேரம் ஆனது.

வைத்தியர் ஆற்றங்கரையில் காத்துக் கொண்டிருந்தார். ரங்குவும் சைமனும் அவரை வணங்கிவிட்டு அவர் குடிலுக்கு பின் தொடர்ந்தார்கள்.

குடிலில் ராஜாவை இறக்கி வைத்தியர் கண்காணிப்பில் விட்டு விட்டு இருவரும் வெளியே நின்றார்கள்.

சற்று நேரம் கழித்து வந்த வைத்தியர், “அவர் நெலமை சரி இல்லை. அதுனால அவர் பத்து நாள் இங்க இருக்கட்டும். என்னால முடிஞ்சதை செய்யுறேன்” என அனுப்பி வைத்தார். பத்து நாள் ஆனது. ராஜா நலமாக இருக்கிறார் என அவரிடம் இருந்து செய்தி வந்தது.

ரங்குவும் சைமனும் மீண்டும் அவரை போய் அழைத்து வந்தார்கள். சிங்கராஜா அவர்கள் இருவரின் பெற்றோருக்கும் கண்ணீரோடு நன்றி தெரிவித்தார்.

“ரங்கு, இனிமேல் நீதான் என்னையும், இந்த காட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும்” என சொல்லி அதை ஆசீர்வதித்தார்.

ரங்கு அவரை வணங்கிவிட்டு, அதன் பெற்றோருக்கும் வணக்கம் வைத்தது.

சைமனும் அதன் மற்ற தோழர்களும் சந்தோஷமாய் கைதட்ட, அந்த காடே உற்சாகமாக இருந்தது. 

கதை முடிய, “இப்போ இந்த கதைல இருந்து நீங்க என்ன கத்துக்கிட்டீங்க?” என கேட்டாள் தாரா.

குழந்தைகள் ஆளாளுக்கு ஒரு மாரலை கண்டுபிடித்து சொன்னார்கள்.

முடிவாக தாரா சொன்னாள் “நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து முயற்சி செய்து, நல்வழியில் நடந்தால், ஒரு நாள் வெற்றி உங்களை தேடி வரும்!”

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 1/4

anganwadi golden jubilee celebration

தாரா அன்று அங்கன்வாடிக்கு சென்று சேரும்போது பெரும்பாலான குழந்தைகள் வந்திருந்தார்கள். உதவியாளர் வெண்மணி அவர்களை அமர வைத்துவிட்டு, தண்ணீர் குடம் கொண்டு வந்து வைத்தார்.

பொன்னி நர்ஸின் போன் வந்தது தாராவுக்கு. “நம்ம கல்பனாவுக்கு பொண்ணு பொறந்திருக்கு தாரா. நார்மல் டெலிவரி. உன்கிட்ட தலைவர் சொல்ல சொன்னார். அப்புறம் வந்து உன்கிட்ட நேர்ல பாத்து பேசுறேன்னார்” என சொல்லி போனை வைத்தார்.

கல்பனா ஊர் தலைவர் மகள். கர்ப்ப காலத்தில் ரெகுலராக அங்கன்வாடிக்கு வருவாள். பேச்சு வாக்கில் ஒரு நாள் சுக பிரசவத்துக்காக சில யோகா முறைகளை டாக்டர் செய்ய சொன்னதாகவும், அதை யாருடைய கண்காணிப்பும் இன்றி தனியே செய்ய பயமாக இருப்பதாகவும் சொன்னாள்.

தாரா யோகாவில் டிப்ளமோ பட்டம் முடித்திருந்தாள். “சரி கல்பனா, நீ கவலைப்படாதே. நா வீட்டுக்கு வந்து நேர்ல சொல்லி தரேன். நீ பயமில்லாம செய்” என சொல்லி ஊக்கப்படுத்தினாள்.

அடுத்த நான்கு மாதம் தாராவின் நேரடி மேற்பார்வையில், யோகா, தியான பயிற்சி மற்றும் ஊட்டசத்து குறிப்புகள் என கல்பனாவுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தது. இன்று அவளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது தாராவுக்கு சந்தோஷமாக இருந்தது. வெண்மணி அம்மாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி விட்டு வகுப்பறைக்கு சென்றாள்.

அன்றைய நாளுக்கான வேலைகளை தாரா யோசித்துக்கொண்டிரும்போது, தூரத்தில் ஷாருக்கின் அழுகுரல் கேட்டது.

“இன்னைக்கும் அழுவுறானா? இவனை எப்படி சமாளிக்க போறம்மா?” என்றார் வெண்மணி.

“வரட்டும், பாத்துக்கலாம்” என சொன்னாள் தாரா.

தேம்பி தேம்பி அழுதபடியே வந்த ஷாருக்கை வெண்மணி வாங்கிக் கொண்டு அவன் அம்மாவை அனுப்பி வைத்தார்.

“ஏன்டா அழுவுற?” என அதட்டலாக கேட்டாள் தாரா.

சற்று அழுகை நின்று, “அக்காக்கு மட்டும் ஜாமென்டரி பாக்ஸ் வாங்கி கொடுத்துட்டாங்க. நா கேட்டா அப்புறம் வாங்கி தரேன்னு சொல்றாங்க” என சொல்லி மீண்டும் அழுகையை ஆரம்பித்தான்.

தாரா யோசிக்க “அவுங்க அக்கா ஆறாம் க்ளாஸ் படிக்குறாங்க. இவனுக்கு எதுக்கு?” என அவனை அல்பமாக பார்த்துக் கொண்டே சொன்னது ஆஷாதேவி.

முக்திக்கு முன் நிலையில் இருப்பது போல இருந்தது ஆஷாதேவியின் உரை.

“சரி வாங்க, எல்லாரும் ரவுண்டா உக்காருங்க, உங்களுக்கு கதை சொல்ல போறேன்” என டாபிக்கை மாற்றினாள் தாரா.

ஷாருக் இன்னும் சமாதானம் ஆகவில்லை. ஜாமென்டரி பாக்ஸ் விஷயத்தில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எண்ணி உருண்டு உருண்டு அழுது கொண்டிருந்தான்.

இப்போது தான் எண்களில் நூறு வரை சொல்ல கற்று கொண்டிருக்கிறான். இவனுக்கு ஜாமென்டரி பாக்ஸ் தேவைப்பட இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது. அக்காவுக்கு கிடைத்தது தனக்கும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தவிர வேறொன்றுமில்லை.

“டேய் ஷாருக், வெண்மணி அம்மாவுக்கு கால் வலி இருக்குது. அவங்களால செடிக்கு தண்ணி ஊத்த முடியல. கொஞ்சம் போய் வராண்டால அழுவுடா, அதுங்களுக்காவது தண்ணி கிடைக்கும்” என ஆஷாதேவி பொறுமையிழந்து கத்தியது.

ஷாருக்கை இன்ப்ளுயன்சாராக கருதி ஷைலா டேமை திறந்தது.

“நீ ஏன் அழுவுற?” என தாரா கேட்க, “அம்மா வேணும்!” என மூக்கை சிந்தியது.

ஷைலா அங்கன்வாடிக்கு வர ஆரம்பித்து பத்து மாதங்களுக்கு மேலாகிறது!

இப்போது என்ன திடீர் அம்மா பாசம் என ஆஷாதேவிக்கு புரியவில்லை.

இதுங்களால் கதை நேரம் குறைவதை அதனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஷாருக்கை அம்போவென விட்டு விட்டு ஷைலாவை மியூட் செய்ய நகர்ந்தது.

தாரா எல்லோரையும் கவனித்தவாறே, பாயை விரித்து ஒவ்வொருவராய் உட்கார வைத்து, சாமிக்கு பூ வைத்து விட்டு, “எல்லாரும் கண் மூடி, கை கூப்புங்க” என சொன்னாள்.

“ஷாருக், வா இங்க வந்து உக்காரு. ஷைலா, நீ இந்த பக்கம் வா” என ரெண்டு பேரையும் தன்னருகே அமர்த்திக் கொண்டாள் தாரா.

“ஷாருக், உனக்கு என்ன அனிமல் புடிக்கும் சொல்லு?” என கேட்டாள்.

“சிங்கம்” என சிவந்த கண்களோடு வீரமாய் சொன்னான் ஷாருக்.

 ஆஷாதேவி வேண்டுமென்றே களுக்கென சத்தமாக சிரிக்க, மற்ற வாண்டுகளும் சிரிக்க ஆரம்பித்தது.

தாராவுக்கே அவன் பதில் சொன்ன வேகம் காமெடியாக இருந்தது.

“சைலன்ஸ், ஷைலா உனக்கு யார் பிடிக்கும்?” என கேட்டாள்.

“யானை” என்றது ஷைலா.

“சூப்பர், இன்னைக்கு நம்ம கதைல சிங்கமும் யானையும் தான் வர போறாங்க” என தாரா சொல்ல, ரெண்டு பேரும் அடுத்த நொடியே உற்சாகமானார்கள். அவரவர் மனதில் அந்த கதைக்களம் விரிய ஆரம்பிக்க, அந்த பள்ளி வளாகம் ஒரு மாய காடாக மாறிக் கொண்டிருந்தது.