சிறுகதை – ரோஸ்மேரி

A middle-aged woman working as a Manager looking at the town from her house balcony

ஒரு கையில் ஜிம் பேகும், மறு கையில் தண்ணீர் பாட்டிலும் இருக்க, கை முட்டியால் டோர் பெல்லை அழுத்தினாள் ரோஸ்மேரி.

“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என கதவை திறந்தபடியே கேட்டான் அருண்.

ஒரு கணம் சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள். யாரும் வெளியில் இல்லை. உள்ளே நுழைந்து ஷூவை கழட்டி ஸ்டாண்டில் வைத்து விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.

ஒன்பது வயது பென்னி ஓரக்கண்ணால் பார்த்தபடியே வீட்டுப்பாடம் எழுதி கொண்டிருந்தது.

“சுஜியோட நாத்தனார பொண்ணு பாக்க சேலத்துலேர்ந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சாயங்காலம் வராங்களாம். அவ மாமனார் மாமியார் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து நம்மள வர சொல்லி கூப்டுட்டு போனாங்க. இன்னைக்கு காந்தி ஜெயந்தி, பப்ளிக் ஹாலிடே, அதனால எல்லாரும் வீட்ல இருப்போம்னு சொல்லிட்டு போக வந்தாங்களாம். நீ என்னடான்னா ஊர் மேஞ்சிட்டு வர?” என கத்தினான் அருண்.

சுஜி அருணின் பெரியப்பா மகள். அருணை விட எட்டு வயது மூத்தவள். இருவரும் ஒரே ஏரியாவில் குடியிருப்பதால் இரு குடும்பங்களுக்கும் நெருக்கம் அதிகம்.

“காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக்கு தான் மூடி இருக்கும். ஜிம்முக்கு போறதுக்கு என்ன பிரச்சினை?” என கால் விரல்களை நீவி விட்டபடியே கேட்டாள் ரோஸ்மேரி.

அருணுக்கு அஹிம்சை முறையில் அடி வயிற்றில் கத்தியை இறக்கினாள் அவள்.

“இன்னைக்கு வராங்கன்னு தெரிஞ்சு தானே காலைல பேட்மிட்டன் விளையாட போகாம வீட்ல இருந்தீங்க? நான் கிளம்பும் போதே சொல்லி இருந்தா வீட்லயே இருந்திருப்பேன்ல?” என தொடர்ந்தாள் ரோஸ்மேரி.

பென்னி எழுதுவதை நிறுத்தி விட்டு டேபிளில் தலையை குனிந்து கொண்டது.

“ஏன் மேடம் மேனேஜர் போஸ்ட் பந்தாவ எல்லாருகிட்டயும் காட்டுவீங்களா? ஸ்லாட் புக் பண்ணிட்டு வந்தா தான் உங்களை பாக்க முடியுமோ?” என இழுத்தான் அருண்.

“பென்னி, கெவின் வீட்டுக்கு போய் பழைய பேப்பர் கொஞ்சம் வாங்கிட்டு வா. மத்தியானம் ஆக்ட்டிவிட்டி பண்ணலாம்” என சொல்லி விட்டு குளிக்க போனாள்.

பாத்ரூமிற்குள் நுழைந்து தாளிட்டதும், ரோஸ்மேரி வேகமாக ஆடைகளை களைந்து ஹாங்கரில் போட்டாள்.

தலையிலிருந்து கால் வரை தன் மீது வீசப்பட்ட வார்த்தை அழுக்குகள் போக அப்படியே ஷவரில் நின்று கொண்டிருந்தாள்.

“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என்ற வார்த்தைகள் அவளை கடும் கோபத்துக்கு ஆளாக்கி இருந்தன.

இதற்கு அழுகை தேவையில்லை என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். முதல் நாளே இந்த காட்சிக்கான ஒத்திகை வேறொரு மனதில் நடந்திருக்கிறது. அது இன்று அரங்கேற்றப் பட்டிருக்கிறது.

சமீபமாய் கற்றுக் கொண்ட, மொத்த கெட்ட வார்த்தைகளையும் வரிசையாக சொல்லிப் பார்த்தாள். சற்றே திருப்தியாக இருந்தது.

குழாயை நிறுத்தி தலை துவட்டியபடியே இந்த நாளை எப்படி கடப்பது என யோசித்தாள். குளித்து விட்டு வெளியே வந்தவுடன் “அம்மா, சுஜி அத்தை போன் பண்ணி இருக்காங்க” என ஓடி வந்தான் பென்னி.

“ரோஸ், அஞ்சு மணிக்கு வந்துடும்மா. கனி ஹெவி மேக்கப் எல்லாம் வேணாம், பார்லர் போக மாட்டேன்னு சொல்லுது. நீ கொஞ்சம் சீக்கிரம் வந்து மைல்டா டச்சப் பண்ணி விட்டுடுமா. அப்புறம், ஒரு இருபத்தியஞ்சு டிபன் நைட்டுக்கு ஆர்டர் பண்ணி இருக்கோம். அதனால் நீ எதுவும் செய்யாத” என சரளமாக பேசிக் கொண்டே போனாள் சுஜி.

“சரிங்க அண்ணி, வந்துடறேன்” என சில வார்த்தைகள் பேசி விட்டு போனை வைத்தாள் ரோஸ்மேரி.

ட்ரையர் போட்டு தலையை காய வைத்து விட்டு, “பென்னி, பேப்பர், சிசர் எல்லாம் எடுத்துட்டு வா” என கூப்பிட்டாள்.

வெறும் கையேடு பென்னி வந்து மடியில் உட்கார்ந்து கொண்டான்.

“நீ சேடா இருக்கியா?” என்றான்.

“சேடா இல்ல..வார்மா இருக்கேன். தலைக்கு சூடா ட்ரையர் போட்டிருக்கேன் இல்ல?” என கண் சிமிட்டி சிரித்தாள்.

“இல்லை, டாடி பேசினது rudeமா” என்றான்.

“May be அவர் ஏதாவது டென்க்ஷனா இருந்திருப்பார். Its okடா ” என்றாள் அவள்.

பென்னி எழுந்து போவதாய் இல்லை. “டைமாகுது பாரு. சாயந்திரம் அத்தை வீட்டுக்கு போயிடுவோம். எல்லாத்தையும் எடுத்துட்டு வா” என சொல்லி அனுப்பினாள்.

சற்று நேரத்தில் மீண்டும் மீதும் சுஜியின் போன் வந்தது. “சாரி ரோஸ். அருண் அப்படி உன்கிட்ட பேசி இருக்கக் கூடாது. அம்மா போன் பண்ணி சொல்லி வருத்தப்பட்டாங்க. நான் நைட் அவன்கிட்ட பேசுறேன்” என சொல்லி விட்டு போனை வைத்தாள்.

எப்படி அத்தை வரை விஷயம் போனது என அவளுக்கு புரியவில்லை. கால் லாக் செக் செய்ததில் அத்தையின் போன் வந்தது தெரிய வந்தது அவளுக்கு.

“பென்னி, இங்க வா” என கூப்பிட்டாள்.

“பாட்டி போன் பண்ணாங்களா?” என கேட்டாள்.

“ஆமாம். நீ பாத்ரூம்ல இருந்த. அதான் நான் அட்டென்ட் பண்ணி பேசுனேன்” என்றான்.

“அவங்க என்ன கேட்டாங்க? நீ என்ன சொன்ன?” என கேட்டாள்.

“அம்மா கிட்ட அர்ஜெண்டா பேசணும், போன குடுடான்னு சொன்னாங்க. நான் அவுத்து விட்ட மாடு இப்போ குளிக்குதுன்னு சொன்னேன்” என குண்டை தூக்கிப் போட்டான்.

“பென்னி..” என அவனை தீர்க்கமாய் பார்த்தாள் ரோஸ்மேரி.

“எனக்கு குட் மேனர்ஸ், பேட் மேனர்ஸ் நீதான் சொல்லி தர்ற. அவருக்கு அவங்க மம்மி தான சொல்லி தரணும்?” என நீட்டி முழக்கி பேசியது.

“பென்னி, அப்பா பேசினது தப்பு தான். ஆனா அது நம்ம பேமிலி மேட்டர். இனிமே இந்த மாதிரி அதிகப்ரசங்கி வேலை எல்லாம் பாக்காத. புரியுதா?” என்றாள்.

அவன் முழித்தபடியே, “பாட்டியும் நம்ம பேமிலி தானே?” என்றான்.

நாலு சுவரை தாண்டியவர் அவர் என எப்படி சொல்லி விளங்க வைப்பது என அவளுக்கு தெரியவில்லை.

“இங்க பாரு, பாட்டி, தாத்தா, அப்புறம் அத்தை எல்லாம் நம்ம பேமிலி தான். ஆனா இந்த வீட்டுக்குள்ள நாம மூணு பேரு மட்டும் தான் இருக்கோம். அதனால இனிமே வீட்டுக்குள்ள நடக்குற பர்சனல் விஷயங்களை எல்லார் கிட்டேயும் பேசிகிட்டு இருக்காத? புரியுதா?” என அதட்டினாள்.

ராஜமாதா கனி மேக்கப் விஷயமாக பேச போன் போட்டு இருப்பார். பென்னி நடந்தை சொல்ல, உடனே சுஜிக்கு சொல்லி இருக்கிறார். “அவன் காலைலயே ஏதோ ஏடாகூடமா பேசி வெச்சிருக்கான். நீ போன் போட்டு அவளை சமாதானப்படுத்து” என ரிலே செய்திருக்கிறார். இதற்குள் எதார்த்தமாக சுஜி பேசி விட, மீண்டும் போன் செய்து சாரி சொல்லி இருக்கிறாள்.

வாரம் முழுக்க வேலை செய்து விட்டு சனி ஞாயிறு ரிலாக்ஸ் செய்யலாம் என்றால், ஏதாவது ஒரு ஏழரை வந்து நிற்கிறது என நினைத்துக் கொண்டாள்.

பென்னியை மடை மாற்றி craft செய்து முடிக்கும் போது ஒரு மணி ஆனது. மீண்டும் ராஜமாதாவின் போன்.

“சொல்லுங்க அத்தை” என்றாள்.

“இல்ல, அவனுக்கு போன் போட்டேன். ரிங் போகுது, ஆனா எடுக்கலை…” என இழுத்தார்.

“போன சார்ஜுல போட்டுட்டு வெளில போய் இருக்கார் அத்தை” என்றாள்.

“சாப்ட்டீங்களாம்மா, மணி ஒண்ணாகுதே? இன்னிக்கு என்ன சமையல்?” என கேட்டார்.

வானிலை எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வம். ஆதர்சனத்தின் லட்சணத்தை அறிந்து கொள்ளும் ஆவல்.

“ஹா, சாம்பார், மீன் வறுவல் அப்புறம் அவருக்கு முட்டை பொடிமாஸ் செஞ்சிருக்கேன். சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுக்க போறேன். அப்போதான் சாயங்காலம் ப்ரெஷ்ஷா இருக்கும்” என நார்மல்சி ரசத்தை சொட்ட விட்டாள் ரோஸ்மேரி.

ராஜமாதாவுக்கு படு திருப்தியாக இருந்தது. நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என புளகாகிதம் அடைந்தார்.

“படு..படு. நல்லா ரெஸ்ட் எடு. வாரம் முழுக்க வேலைல டென்க்ஷனா இருந்திருப்ப” என ஸ்லோவாய் ரிவர்ஸ் கியரில் நகர்ந்தார்.

ரோஸ்மேரி லேசாக ஒரு தடவை தலையை உலுக்கிக் கொண்டாள். இந்நேரம் அவள் சாப்பிட்ட பிறகு தூங்க போகும் செய்தி மூன்று நான்கு பேருக்கு போய் சேர்ந்திருக்கும். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கண்டிப்பாய் எந்த போனும் வராது.

பென்னியும் அவளும் சாப்பிட்டு முடித்த பிறகு, பென்னியை தூங்க வைத்து விட்டு ஹாலுக்கு வந்தாள்.

தொரை சாப்பாட்டுக்கு வரும் களை தெரியவில்லை. மீதம் இருந்த எல்லாவற்றையும் மூடி ப்ரிட்ஜில் வைத்து விட்டு Netflixல் கொரியன் படம் பார்த்தாள். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.

படம் முடிந்த பிறகு, எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்தாள். கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்த போது, முகத்தை விட மனம் தான் களைப்பாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது.

சற்று நேரம் அங்கேயே நின்றவள், ஹாலுக்கு வந்து கெவினின் அம்மாவுக்கு போன் போட்டாள்.

“டெய்சி, நான் கொஞ்சம் lowஆ இருக்கேன். ஒரு பங்க்ஷனுக்கு போகணும். எனக்கு கொஞ்சம் வந்து மேக்கப் பண்ண முடியுமா?” என கேட்டாள்.

“லேவண்டர் ஆர் சாண்டல்? என்ன வேணும்” என கேட்டாள் டெய்சி.

“Anything is fine” என்றாள் ரோஸ்மேரி.

டெய்சி வருவதற்குள் டீ போட்டு வைத்தாள். பென்னியை எழுப்பி ஸ்னாக்ஸ் கொடுத்து விட்டு, அவனுக்கு ட்ரெஸ் அயர்ன் செய்து வைத்தாள்.

கால் மணி நேரத்தில் டெய்சி வர, காலையில் செய்த craftஐ பற்றி பேசிக்கொண்டே ரெண்டு பேரும் டீ குடித்தார்கள்.

அடுத்த அரை மணி நேரத்தில் face massage மற்றும் லைட்டாக மேக்கப் செய்து விட்டு டெய்சி கிளம்ப, பென்னியும் அவளும் ட்ரெஸ் செய்து கொண்டு கிளம்பினார்கள்.

“வெளில போனா, ஒரு போன் பண்ணி எப்போ வருவீங்கன்னு கேக்க மாட்டியா?” என்றபடி உள்ளே வந்தான் அருண்.

“பென்னி, நீ போய் பார்க்கிங்க்ல இரு, நான் bag எடுத்துக்கிட்டு ரெண்டு நிமிஷத்துல வரேன்” என சொல்லி முதல் வேலையாக பென்னியை pack செய்தாள்.

“போன வீட்ல வெச்சிட்டு போயிட்டீங்க. அப்புறம் என்ன கேள்வி இது?” என குழப்பமாக கேட்டாள் ரோஸ்மேரி.

“ஹா, போன் இருந்தா மட்டும் பத்து போன் லைனா போட போறியா? சுதன் wife அவன் போன் எடுக்கலேன்னா, ஒடனே எனக்கு போடுவாங்க. அண்ணா, சுதன் உங்க கூட இருக்காரா? மத்தியானம் சாப்பிட்டாரான்னு அவ்ளோ அக்கறையா கேப்பாங்க” என குதித்தான்.

காலையிலே இந்த காட்சிக்கான ஒத்திகை அவன் மனதில் நடந்திருக்கிறது. அது இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இந்த instant அண்ணன் தங்கச்சி விஷயத்தில் ரோஸுக்கு உடன்பாடில்லை. இது தேவையில்லாத ஆணி என தோன்றியது. மைண்டுக்குள் ஹீட்டர் switch நிறுத்தினோமா என யோசித்தாள். நிறுத்தியிருந்தால் நல்லது என நினைத்துக் கொண்டாள்.

“சுதன் பொண்டாட்டி, மதன் பொண்டாட்டி கதையெல்லாம், இந்த மன்மதன் பொண்டாட்டிக்கு தேவையில்லை. ஏற்கனவே பென்னி அத்தை கிட்ட கொளுத்தி போட்டிருக்கான். இதுல லேட்டா போனீங்கன்னா, இன்னிக்கு செத்தீங்க. நாங்க கெளம்புறோம். சீக்கிரம் வந்து சேருங்க” என சொல்லி விட்டு கிளம்பினாள் ரோஸ்.

மத்தியானம் நேரத்தோடு வந்து, காதல் தூவி செய்யப்பட்ட முட்டை பொடிமாஸ் சாப்பிட்டு தூங்கி எழுந்திருந்தால், இல்லை கூட உட்கார்ந்து அந்த கொரியன் படத்தை பார்த்திருந்தால் கூட, இந்நேரம் “அவுத்து விட்ட மாடு” கூலாகி இருக்கும்.

சும்மா நசநசவென்று பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு காண்டாக இருந்தது.

அருண் போய் குழாயை திறக்க, சில்லென்று தண்ணீர் கொட்டியது. டவலை சுற்றிக் கொண்டு, ஹீட்டர் ஆன் செய்துவிட்டு போய் சேரில் உட்கார்ந்து கொண்டான். பசி வேறு வயிற்றை கிள்ளியது.

பிரிட்ஜை திறந்து பார்த்தால் முட்டை பொடிமாஸ் அம்சமாக உட்கார்ந்திருந்தது.

பத்து நிமிடத்தில் அவசர அவசரமாக குளித்து ரெடியாகி வந்து, எல்லவற்றையும் சூடு செய்து சாப்பிட்டு முடித்தான். மம்மிஜியின் போன் வந்தது.

“சொல்லுங்க மம்மி” என்றான்.

“சம்மந்தி வீட்டுக்கு பங்ஷனுக்கு நேரத்தோட வரணும்ங்கிற அறிவு கிடையாதா உனக்கு? உன் பொண்டாட்டியும் புள்ளையும் வந்துட்டாங்க. மச்சான் ரொம்ப பிஸியான்னு சுஜி வீட்டுக்காரர் நக்கலா கேக்குறார்? ” என காய்ச்சி எடுத்தார் ராஜமாதா.

“அவ ஏன் சீக்கிரம் போகணும்?” என குதர்க்கமாய் கேட்டான் அருண்.

“நான் தான் அவளை சீக்கிரம் வர சொன்னேன். என்ன மயிருக்கு போன வீட்டுல வெச்சிட்டு வெளியில சுத்துற? காலைலேர்ந்து உனக்கு ட்ரை பண்றேன். இப்போ வந்து சவகாசமா கேக்குற?” என பொரிந்து தள்ளினார்.

மாமாவை கூல் படுத்த ஹெவி பர்பார்மென்ஸ் வேறு கொடுக்க வேண்டும். மினுக்காக சுற்ற முடியாது. தன்னை தானே திட்டிக் கொண்டே கிளம்பினான் அருண்.

அருணுக்காக சுஜி வீட்டு வாசலிலேயே காத்திருந்தார் மம்மிஜி.

“வளர்ந்த புள்ளைய வெச்சிக்கிட்டு பேசுற பேச்சாடா இதெல்லாம்? என அபத்தமாக ஆரம்பித்தார்.

“என்ன பெருசா சொல்லிட்டேன்? எந்த வீட்டுலயும் பேசாததா?” என பம்மலாக சொன்னான் அருண்.

“வாய ஒடச்சிடுவேன், ஜிம்முக்கு போயிட்டு வந்தவளை எதுக்கு வம்பிழுத்த? சுஜி நேத்தே உன்கிட்ட சொல்லி அனுப்பிச்சாளா, இல்லியா? இன்னைக்கு காலைல அவங்க அத்தை மாமா வீட்டுக்கு வருவாங்கன்னு? நீ சொல்லியிருந்தா அவ வீட்லயே இருந்திருப்பா, இல்லியா?” என கொக்கியை போட்டார்.

அருண் பேசாமலிருக்க, “பசங்க எல்லாருக்கும் நல்ல இடம் அமையணும்னு அவங்கவங்க வேண்டிக்கிட்டு இருக்காங்க. அப்படியே அமைஞ்சாலும், அதுக்கப்புறம் நல்ல வேலை, புள்ளை குட்டின்னு இருக்கணும்னு நாங்க சாகுற வரை அல்லாடிக்கிட்டு இருக்கோம். நல்லா போகுற வாழ்க்கைல, வம்படியா பேசி விளையாடிகிட்டு இருக்குற நீ. பாத்து நடந்துக்க, எந்த பொண்ணும் கண்ட கண்ட பேச்ச சகிச்சிக்கிட்டு குப்பை கொட்டுறது இல்ல இந்த காலத்துல” என பரேடு விட்டார் மம்மிஜி.

வாசலிலேயே tarbulanceஇல் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளே வந்தான் அருண். சுஜி கேவலமாக பார்த்து விட்டு உள்ளே போக, அவன் லேட்டாக வந்த கோபத்தில் மாமாவும் முகம் கொடுத்துப் பேசவில்லை.

அடுத்த இரண்டு மணி நேரம் அருண் பம்பரமாக சுழன்று சுழன்று வேலை செய்தான். தம்பியென்று ஒருத்தன் இருந்தால், அது சுஜிக்கு அருண் இருப்பது போல இருக்க வேண்டும் என மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கிளம்பும் போது சர்டிபிகேட் கொடுத்தார்கள்.

“மம்மி, ஜோயல் எங்க? நான் வந்ததிலிருந்து அவனை பாக்கலை” என கேட்டான் அருண். ஜோயல் சுஜியின் மூத்த மகன். பத்தாம் வகுப்பு படிக்கிறான்.

“அவன் இன்னிக்கு basketball டீம் செலக்சனுக்கு போய் இருக்கான்” என பெருமையாக சொன்னார் மம்மிஜி.

பெண் பார்க்கும் படலம் நல்ல படியாய் முடிந்து எல்லோரும் கிளம்ப, பென்னி போய் ரோஸ்மேரியின் மடியில் உட்கார்ந்து கொண்டான்.

“மா, நான் ஒண்ணு பாத்தேன், உன்கிட்ட சொல்லணும்” என அவள் காதருகே வந்து சொன்னான்.

ரெண்டு பெரும் எழுந்து போய் போர்டிகோவில் இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தார்கள்.

“சொல்லுடா?” என கேட்டாள் ரோஸ்.

“நம்ம கனி சித்திய பாக்க இப்போ ஒரு அங்கிள் வந்தாரே, அவரு ரொம்ப poorஆ, மா? என கேட்டான்.

“ஏண்டா?” என வியப்பாக கேட்டாள்.

“சொல்லேன், உண்மையா அவரு நல்ல கம்பெனில தான் வேலை செய்யுறாரா?” என தொடர்ந்தான்.

“டேய், அவருக்கு சொந்தமா பிளாட், கார், பைக் எல்லாம் இருக்கு. நல்ல வசதியாதான் இருக்காரு. இப்போ என்ன உனக்கு?” என அலுத்துக் கொண்டாள் ரோஸ்.

பென்னி அமைதியாக உட்கார்ந்திருந்தான். “சரி சொல்லு, அவரு ஏன் poorஆ அப்படீன்னு என்கிட்டே கேட்ட?” என விடாமல் கேட்டாள்.

“அம்மா, இங்க பாரு, நீங்க எல்லாரும் வாசல்கிட்ட போய் அவங்க கார்ல ஏறும் போது பேசிக்கிட்டு இருந்தீங்களா? அப்போ அவரு உள்ள போய் சித்திகிட்ட தனியா bye சொல்லிட்டு வந்தார்” என டீடைலை சொன்னான்.

“சரிடா, அதுக்கென்ன?” என்றாள்.

“அவர் bye சொல்லிட்டு கதவுகிட்ட வந்து சேர்ல உக்காந்து ஷூ மாட்டும் போது நான் அவரை பாத்துகிட்டு தான் இருந்தேன். அவர் ரெண்டு சாக்ஸுலயும் ஓட்டை இருந்துது” என அப்பாவியாய் சொன்னான் பென்னி.

ரோஸுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கண்ணில் நீர் வர சிரித்து முடித்தாள்.

“அவரு poorஆ ம்மா? நம்ம சித்திய நல்லா பாத்துக்குவாரா?” என கேட்டான்.

இது தான் கார்ப்பொரேட் வாழ்க்கையின் பகுமானம் என எப்படி சொல்லி அவனுக்கு புரிய வைப்பது என தோன்றியது ரோஸுக்கு.

“இல்லடா பென்னி, அவர்கிட்ட பணம் தேவையான அளவுக்கு இருக்கு. ஆனா தனக்கு என்ன செஞ்சிக்கணும்னு அவருக்கு தெரியல” என சொன்னாள்.

“அது அவர் பர்சனல் ஐட்டம்டா. யாரும் பாக்க போறதில்லைன்னு நெனச்சு அவர் use பண்ணிக்கிட்டு இருக்காரு. இல்ல கெளம்புற அவசரத்துல, எது கெடச்சுதோ அதை போட்டுக்கிட்டு அலட்சியமா வந்திருப்பாரு” என அவனை சமாதானப்படுத்தினாள்.

“யாரும் பாக்க போறதில்லைன்னா, இது மாதிரி கண்டதை போட்டுக்கிட்டு வரலாமாம்மா?” என ஆதங்கமாய் கேட்டான்.

“தப்பு தாண்டா. இங்க பாரு, யாரை பத்தியும் உடனே முடிவு பண்ண கூடாது. நான் சுஜி அத்தை கிட்ட சொல்லி நல்லா விசாரிக்க சொல்றேன்” என அவனை ஒரு மார்க்கமாய் செட்டிங் செய்தாள்.

இரவு சாப்பாடு முடிந்து எல்லோரும் கிளம்ப தயாரானார்கள். ரோஸ் சுஜியிடம் தனிப்பட்ட முறையில் பென்னியின் அப்சர்வேஷனை சொல்லி மீண்டும் ஒரு முறை தீர விசாரிக்க சொன்னாள்.

சுஜிக்கும் இது ஒரு red flag ஆக இருந்தது. “பணம் காசு இருக்கிறது இருக்கட்டும், பையன் எப்படின்னு இன்னும் கொஞ்சம் க்ளோஸ் சர்க்கிள்ள தீவிரமா விசாரிக்கணும்” என தீர்க்கமாய் சொன்னாள்.

சற்று நேரத்தில் வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது. ஜோயல் செலக்சன் முடிந்து ஒரு கையில் பேகும், மறு கையில் வாட்டர் பாட்டிலும் இருக்க, கை முட்டியால் டோர் பெல் அடித்தான்.

“அவுத்து விட்ட மாடு மாதிரி எங்க போயிட்டு வர?” என கதவை திறந்தபடியே கேட்டான் பென்னி.

ஹாலில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போக, “டேய், என்னடா பேச்சு இது?” என அதட்டினான் அருண்.

“அம்மா வெளில போயிட்டு லேட்டா வந்தா, நீங்க இப்படி தானே சொல்வீங்க?” என அருணிடம் கேட்டான் பென்னி.

சிறுகதை – மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை..

A 50 year old couple enjoying city skyline

“என்ன கோகி, ஹேர் கலர் பண்ணியிருக்க? நம்ம 25th anniversary வருதுன்னா? ஷில்லாங் பேக்கேஜ் புக் பண்ணட்டுமா? சோமசேகர் கேட்டுக் கொண்டேயிருக்க, ஆபீஸ் பேகை டேபிள் மீது வைத்துவிட்டு நேராக பாத்ரூமிற்குள் நுழைந்தாள் கோகிலா.

சோமா வேலையை தொடர, கோகி வெளியே வர பத்து நிமிடம் ஆனது. நைட்டி மாற்றி, டீ போட்டு எடுத்து வந்து சோபாவில் உட்கார்ந்தாள்.

“என்ன புக் பண்ணட்டுமா, சொல்லு? மேகத்துக்கு நடுவுல, நீயும் நானும் மட்டும். சுற்றிலும் பனிமூட்டம். பக்கத்துல இருக்குற காடு, மலை எல்லாம் மங்கலா தெரிஞ்சாலும் பரவாயில்லை. நமக்கு நாம மட்டும் தெரிஞ்சா போதும்” என உற்சாகமாக தொடர்ந்தார் சோமா.

“Mondayலேர்ந்து ரெண்டு வாரம் கிளையண்ட் விசிட்” என டீ டம்ளரை பார்த்தபடியே சொன்னாள் கோகி.

சோமாவுக்கு இது புதிதில்லை.

ஸ்கிரீனிலிருந்து திரும்பி கோகியை பார்த்தார். புது hair cut. புது hair color.

“இந்த hair cutக்கு என்ன பேரு? மைண்ட்ல இருக்கு, ஆனா பேரு சரியா ஞாபகம் இல்லை” என்றார்.

“பேரெல்லாம் கேக்கலை. Hair density ரொம்ப கொறஞ்சிடுச்சி. அதான் ப்ரீத்தியை எனக்கு எது suit ஆகுமோ அதை பண்ண சொல்லிட்டேன்” என்றாள்.

கோகி கிச்சனுக்குள் சென்று கொண்டே பதில் சொல்லி முடிக்க, சோமா யோசனையில் ஆழ்ந்தார்.

கொஞ்ச நேரத்தில் மகன் சாய் பிரசாத்தும் வர, இரவு உணவு சாப்பிட்டு முடித்து, அவரவர் அடுத்த நாளுக்கான தயாரிப்புகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

கோகிக்கு எட்டரையில் இருந்து பத்து மணி வரை மீட்டிங் இருந்தது. ஹெட்போனை மாட்டிக்கொண்டு, நோட்ஸ் எழுதிக் கொண்டு பிசியாக இருந்தாள்.

“டேய், நான் ஒரு walk போயிட்டு வரேன். பிரேக்ல அம்மா வந்து கேட்டான்னா சொல்லிடு” என்றார் சோமா.

“ஹ்ம்ம், நீயும் தான் டெய்லி சொல்ற. நீ பன்னெண்டு மணி வரைக்கும் வரலேன்னா கூட, அவங்க இழுத்து
போர்த்திகிட்டு தூங்கிடுவாங்க” என கூலாக சொன்னான் சாய்.

சோமாவுக்கு இதுவும் புதிதில்லை. “நீ நேரத்துக்கு தூங்கு, ரொம்ப நேரம் போன் பாக்காத” என சொல்லிவிட்டு கிளம்பினார்.

வீட்டை விட்டு வெளியே வந்ததும், அவருக்கு ஆயாசமாக இருந்தது. இரண்டு கைகளையும் பின்பக்கம் கட்டிக் கொண்டு, நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்.

சமீப காலமாக கோகி மிகவும் சோர்வாக இருக்கிறாள். முன்பெல்லாம் சிறிய விஷயங்களுக்கு கூட சிரித்தவள், இப்போது காரணமில்லாமல் எரிச்சலடைகிறாள். சில நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அமைதியாகிவிடுகிறாள்.

சோமாவுக்கு புரிந்தது இது வெறும் மனநிலை மாற்றம் அல்ல என்று. அவள் வாழ்க்கையின் ஒரு புதிய பருவத்தைக் கடந்து கொண்டிருக்கிறாள். உடல் அமைதியாக மாற்றம் அடைகிறது. அதனுடன் போராடிக் கொண்டே மனமும் உணர்வுகளும் புதிய சமநிலையைத் தேடிக்கொண்டு இருக்கின்றன.

சோமா அவளைச் சரி செய்ய முயலவில்லை. அதற்கு பதிலாக, அதிகம் பேசினார். குறைவாக வாதிட்டார். சில நாட்களில் அவளுக்கு தனிமை தேவைப்பட்டபோது, அமைதியாக அவளுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

யோசித்தபடியே நடந்து போனதில், அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. வரும் வழியில் பார்மசியில் சில பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினார்.

சாய் தூங்கி விட்டான். கோகியும் ஹாலில் இல்லை. கை கால்களை கழுவிக் கொண்டு, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி எடுத்துக் கொண்டு, பெட்ரூமிற்குள் போனார்.

“கோகி” என மெதுவாக குரல் கொடுத்தார். அசைவில்லை. சரி தூங்கட்டும் என அவரும் படுத்துக் கொண்டார்.

வேலை, நட்பு, சொந்தம் என வாழ்க்கை நிரம்பியே இருந்தது. ஆனால் சில மாதங்களாக, இருவரும் ஒருவருக்கொருவர் அருகில் இருந்தும், ஏதோ ஒரு மெல்லிய வெறுமை மட்டும் நடுவில் படுத்திருக்கிறது. திரும்பத் திரும்ப வந்த யோசனைகளை ஒதுக்கிவிட்டு, எப்படியாவது கொஞ்ச நேரம் தூங்க முயன்றார் சோமா.

மறுநாள் காலை ஐந்து மணி. கோகி விழித்தவுடன் சைட் டேபிளின் மீது இருந்த Biotin supplement box கண்ணில் பட்டது. ஒரு நிமிடம் கோகிக்கு புன்முறுவல் வந்தது. Hair fall பிரச்சினைக்காக வாங்கி வந்திருக்கிறார். சோமாவின் தலையை கோதிக் கொண்டே விட்டத்தை பார்த்தபடி கொஞ்ச நேரம் படுத்திருந்தாள்.

ஒரு காலத்தில் அவர்களுக்கிடையே இப்படிப்பட்ட கிண்டல்கள் தினசரி விஷயமாக இருந்தன. “கோகி, பார்மஸில இருக்கேன், என் கப்போர்டுல protection இருக்கானு பாத்து சொல்லேன்” என சோமா வம்பிழுத்து எவ்வளோவோ நாட்களாகி விட்டது.

ஆனால் அந்த விருப்பம் எங்கேயா, எப்போதோ கோகிக்கு தொலைந்து போய்விட்டதாக உணர்ந்தாள். கடந்த காலங்களில் மிக இயல்பாக இருந்த ஒரு விஷயம், இப்போது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. சோமா அதை புரிந்து கொண்டு காத்திருக்கிறார். அதுதான் சில நேரங்களில் அவளை இன்னும் அதிகமாக நெகிழச் செய்தது.

வெளிச்சம் அறையிலும் பரவ ஆரம்பிக்க, எழுந்து போய் அன்றாட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். சாய் ஏழு மணிக்கே கிளம்ப, இவர்கள் இருவரும் ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து காரில் கிளம்பினார்கள்.

கோகி டாக்சியில் பயணிப்பது போல, வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். சோமா அமைதியாக
ஓட்டிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் காரினுள் நிலவிய அந்த மௌனம் அவரை என்னவோ செய்தது. போனை எடுத்து ஒரு பாடலை ஒலிக்க விட்டார்.

கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..
கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!
நுரையால் செய்த, சிலையா நீ?

பாடல் தொடர, பல நாட்களாக அடக்கி வைத்திருந்த ஏதோ ஒன்று உள்ளுக்குள் அசைந்தது கோகிக்கு.

காதல், தாய்மை இரண்டு மட்டும்,
பாரம் என்பதை அறியாது!
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்,
பசியோ, வலியோ தெரியாது!

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
உயரம் தூரம் தெரியாது!
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்,
என்னால் தாங்க முடியாது!

இந்த வரிகளை கடக்கும் போது, கோகியின் கை தானாக நீண்டு சோமாவின் தோளில் படர்ந்தது.

சற்று நேரத்தில் ஆபீஸ் வர, “bye சோமா” என சொல்லி காரை விட்டு இறங்க எத்தனித்தாள்.

“ரெண்டு நிமிஷம் இருந்துட்டு போயேன்” என ரோட்டை பார்த்தபடியே சொன்னார்.

கோகி மெதுவாக அவரின் இடது கரத்தை இறுக்கமாக பற்றிக்கொள்ள, சோமா சீட்டில் சரிந்து கண் மூடினார்.

சில நிமிடங்கள் கழித்து “கிளம்பு, ஈவினிங் வரேன் பிக்கப்புக்கு, bye” என்றார்.

மூன்று வாரங்கள் ஆனது. கோகி கிளையண்ட் விசிட் முடிந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தாள். ஷில்லாங் ட்ரிப் பற்றி எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. Anniversaryக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. இப்போது ட்ராவல் ஏற்பாட்டை செய்ய முடியுமா என யோசித்தாள்.

அப்போது ப்ரீத்தியின் கால் வந்தது. “மேம், சார் உங்களுக்கு Spa package புக் பண்ணி இருக்காரு. நேத்து உங்களுக்கு ட்ரை பண்ணேன். உங்க நம்பர் பிசியா இருந்தது. ஸ்லாட் கன்பார்ம் பண்ணிடீங்கன்னா, நான் Martinaவ உங்களுக்கு assign பண்ணிடுறேன்” என்றாள்.

“மதியம் ரெண்டு மணிக்கு வரேன்” என சொல்லி போனை வைத்தாள். சோமா ஏதோ செய்து கொண்டே இருக்கிறார். நாம் அவருக்காக என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுந்தது கோகிக்கு.

என்ன செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என புரியாமல் சோபாவில் சாய்ந்து கண் மூடி யோசித்தாள்.

சோமாவின் போன் வந்தது. “என்ன மண்டைய ஒடச்சிகிட்டு உக்காந்திருக்கியா இன்னும், ரெடியாகி கிளம்பு” என்றார். “சரி சோமா” என்றாள் அவள்.

Spa செஷன் முடிந்ததும் உடலில் தான் நீண்ட நாட்களாகச் சுமந்து வந்த ஒரு கண்ணுக்குத் தெரியாத பாரம் மெதுவாக இறங்கிவிட்டது போல உணர்ந்தாள் கோகி. தோள்களில் இருந்த இறுக்கம் தளர்ந்து கழுத்து, முதுகு, கை கால்கள் என உடலின் ஒவ்வொரு பகுதியும் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கியது போல் இருந்தது.

அன்று இரவு சோமா வாக்கிங் கிளம்பும் போது, கோகியும் சேர்ந்து கிளம்பினாள். “பைக் எடுத்துட்டு வரவா? ஒரு ரவுண்டு போலாமா?” என்றார் சோமா.

அவள் தலையசைக்க, நகரத்து சாலைகளை தவிர்த்து ஹைவேசில் ஒரு நெடிய பயணமாக அது இருந்தது.

“நான் கொஞ்ச தூரம் ஓட்டவா?” என்றாள். சாலையோரம் வண்டியை நிறுத்தி சாவியை கொடுத்தார்.

கோகியின் இரு தோள்களை பற்றி சற்று தூரம் வந்தவர், லேசாக அவள் மீது தலை சாய்த்து கொண்டார். இது அவரின் குறைந்த பட்ச தேவை என உணர்ந்து, சர்வீஸ் ரோட்டுக்கு மாறி ஒரு கையால் வண்டியை ஒட்டிக்கொண்டே, மறு கையால் அவர் கால்களை மென்மையாய் பிடித்து விட்டாள்.

கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பயணம் முடித்து வீடு வந்து சேர்ந்த போது, சோமா பல நாள் வெறுமை நீங்கியது போல உணர்ந்தார்.

அடுத்த நாள் காலை. கோகி நான்கு மணிக்கே விழுத்துக் கொண்டாள். அவள் இரண்டு முறை புரண்டு படுக்க, சோமா “ஓய், சில்வர் கேர்ள், happy anniversary!” என சொல்லி இழுத்து அணைத்துக் கொண்டார். “Happy anniversary மை சில்வர் ஜூபிலி ஹீரோ! என கோகியும் கிசுகிசுப்பாய் சொல்ல, அன்றைய plan என்ன என்று கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டார்கள்.

ஆறு மணிக்கே கோவிலை சென்றடைந்து, சந்நிதி முன் நின்றபோது, அவர்கள் மனக்கண்களில் பல நினைவுகள் ஓடின. முதல் சம்பளம், முதல் வீடு, குழந்தை பிறப்பு, வலி மிகுந்த நாட்கள் மற்றும் சிறு சிறு வெற்றிக்காக வந்து நன்றி சொன்ன தருணங்கள் என ஒவ்வொரு நிகழ்வும் அவர்களுக்குள் ஒரு திரைப்படம் போல விரிந்தது.

அன்று சாயந்திரம் ஆறேழு நண்பர்கள் வீட்டுக்கு வர, ஒன்பது மணி வரை நேரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொருவராய் கிளம்ப, கடைசி நபரை வழி அனுப்பி விட்டு “மெயின் டோர் பூட்டிடவா கோகி” என கேட்டார் சோமா.

மூடிய உள்ளங்கையை கோகி நீட்ட, அவர் மெல்ல அவள் விரல்களை பிரித்தால் அதில் ஒரு சாவி இருந்தது. “போலாமா?” என அவள் கேட்க, ஆச்சர்யத்தில் மூழ்கினார் சோமா.

லிப்டில் முதல் முறையாக பதினாறாவது மாடிக்கு போனார்கள். கோகி மொட்டை மாடி பூட்டை திறக்க, “வாங்க” என சொல்லி வாட்டர் டேங்க் படி மீது ஏறி மேலே போய் நின்றாள். பின்னாலேயே சோமாவும் ஏறி வர, முழு நகரமும் தங்க புள்ளிகளாக ஜொலித்துக் கொண்டிருந்தது.

“என்னடி இங்க கூட்டிட்டு வந்திருக்க?” என அவர் கேட்க, “மேகத்துக்கு நடுவுல, நீங்களும் நானும் மட்டும். சுற்றிலும் பனிமூட்டம். பக்கத்துல இருக்குற ஊரு,காடு, மலை எல்லாம் மங்கலா தெரிஞ்சாலும் பரவாயில்லை. நமக்கு நாம மட்டும் தெரிஞ்சா போதும்” என சொல்லி இறுக கட்டிக் கொண்டாள்.

அவர்கள் எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை. அவன் சட்டையைப் பிடித்திருந்த அவள் விரல்கள் மட்டும் இறுகிக் கொண்டே போக, அவள் முதுகில் இளம் சூடான கண்ணீர் துளிகள் ஒன்றன்பின் ஒன்றாக விழ, “லவ் யூ சோமா” என்றாள்.

அன்று இரவு அவர்கள் ஷில்லாங்கில் இல்லை. ஆனால் ஷில்லாங் தரும் அமைதியும் நெருக்கமும் அவர்களுக்குள் இருந்தது.

சிறுகதை – கோலங்கள்

An image of a house decorated with floor rangoli

“ராஜு அண்ணா, நம்ம வேதநாயகி மேடம் வீட்டு வாசல்ல பால் பாக்கெட் எடுக்காம அப்படியே இருக்கு. அவங்க ஊர்ல இல்லியா?” என செக்யூரிட்டியிடம் கேட்டாள் ஹவுஸ் கீப்பிங் பணிப்பெண் மாதவி.

“எதுவும் சொல்லலியேம்மா? பெல் அடிச்சி பாத்தியா?” என்றார் ராஜு.

“அடிச்சேன்னா..யாரும் தொறக்கல. இன்னும் கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தா மூணு பாக்கெட் பாலும் கெட்டு போயிடும்” என்றாள் மாதவி.

ராஜு அவர்களுக்கு போன் செய்தார். அவர்கள் எடுக்காததால், “நீ என்ன பண்றன்னா, அந்த ப்ளோர்ல இருக்க யார்கிட்டயாவது பால குடுத்து பிரிட்ஜ்ல வெச்சிக்க சொல்லு. அவங்களுக்கு நா மெசேஜ் போட்டுடறேன், வந்தா வாங்கிக்கட்டும்” என்றார்.

“சரிண்ணே” என சொல்லி, அதே ப்ளோரில் இருந்த கோமதி வீட்டுக்கு போனாள்.

“அக்கா, வேதநாயகி மேடம் வீட்டுல இல்ல, இந்த பால பிரிட்ஜ்ல வெச்சிக்குங்க, வந்தா வாங்கிக்கட்டும்” என்றாள் மாதவி.

“நான் மத்தியானத்துக்கு மேல ஊருக்கு போறேன் மாதவி. நாலு நாள் ஆகும் வர்றதுக்கு. நீ வேணா சங்கரிகிட்ட குடுத்துடேன்” என சொன்னாள் கோமதி.

சங்கரி வீட்டு டோர் பெல்லை அடித்துவிட்டு சற்று நேரம் நின்று கொண்டிருந்தாள் மாதவி. கொஞ்ச நேரத்தில் அவள் கணவர் வந்து கதவை திறந்தார். மாதவி சொன்னதை முழுதாய் கேட்டார்.

“அவ நேத்து நைட் ஷிப்ட் பாத்துட்டு, இப்போ தான் வீட்டுக்கு வந்து தூங்குறா. நானும் அரை மணி நேரத்தில் கெளம்பிடுவேன். மத்தியானம் அவங்க வந்து பெல் அடிச்சா அவளுக்கு டிஸ்டர்பா இருக்கும். நீங்க வேணா சஞ்சய் அம்மாகிட்ட குடுத்து போயிடுங்க” என்றார்.

சஞ்சய் வீட்டு பெல்லை அடித்துவிட்டு மூன்றாம் மாடியில் இருந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி.

கதவை திறந்து “என்ன மாதவி”? என கேட்டாள் சஞ்சய் அம்மா ஷீலா.

“ஷீலாக்கா, இந்த மூணு பாக்கெட் பால் வேதநாயகி மேடம் வீட்டுக்கு வந்திருக்கு. அவங்க ஊர்ல இல்ல. நீங்க பிரிட்ஜ்ல வெச்சிக்குறீங்களா?” என்றாள் மாதவி.

“நான் நேத்து தான் இட்லி மாவு அரைச்சு பிரிட்ஜ்ல வெச்சிருக்கேன். இதை வைக்கிறதுக்கு இடம் இருக்காது. நீ வேணா சங்கரி வீட்டுல குடுத்துடேன்” என சொல்லி அனுப்பி வைத்தாள் ஷீலா.

மாதவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படியே வைத்து விட்டு போனால் கெட்டு போய்விடும். திரும்பவும் ராஜுவின் கேபினை நோக்கி நடந்தாள்.

“பேசாம நீயே வீட்டுக்கு எடுத்திட்டு போய்டு” என்றார் ராஜு.

‘அண்ணே,எங்க வீட்ல ப்ரிட்ஜ் இல்ல, இத்தனை பாக்கெட்டை நான் என்ன பண்றது?” என்றாள் மாதவி.

“சரி நீ ஒண்ணு எடுத்திட்டு போ. கொஞ்ச நேரம் கழிச்சி புவனாவும், ராணியும் வீட்டுக்கு போவாங்க. அவங்க கிட்ட ஆளுக்கொண்ணு குடுத்துடுறேன்” என சொன்னார் ராஜு.

“சரிண்ணே, நாளைக்கு நாங்க மூணு பேரும் ஆளுக்கொரு புது பாக்கெட் பதிலுக்கு வாங்கி குடுத்திடுறோம்” என சொல்லிவிட்டு கிளம்பினாள் மாதவி.

அன்று இரவு எட்டு மணி. ராஜுவுக்கு போன் போட்டு “அண்ணே, அவங்க வந்துட்டாங்களா?” என கேட்டாள்.

“இல்லம்மா, அவங்க திருப்பதிக்கு போயிருக்காங்களாம். நாளைக்கு காலைல பத்து மணி ஆகிடும் வீட்டுக்கு வர்றதுக்குன்னு சொன்னாங்க” என்றார் ராஜு.

“சரிண்ணே” என சொல்லி போனை வைத்தாள்.

மறுநாள் காலை எட்டு மணி. அன்றைய நாளுக்கான மூன்று பாக்கெட் பால் வேதநாயகி மேடம் வீட்டு வாசலில் இருந்தது. தரை மெழுகி சுத்தம் செய்ய வந்த மாதவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பத்து மணி வரை விட்டால் தாங்குமா என யோசித்தாள். மூன்று பாக்கெட்டையும் எடுத்துக் கொண்டு மீண்டும் ராஜுவின் அறைக்கு சென்றாள்.

அவர் டேபிள் மீது ஏற்கனெவே இவர்கள் பதிலுக்கு குடுத்த மூன்று பாக்கெட் இருந்தது.

“என்னண்ணே பண்றது?” என்றாள் மாதவி.

“இரு, பால்காரருக்கு போன் பண்றேன்” என்று அவரிடம் பேசினார்.

“அவரு வேற ஏரியாக்கு போயிட்டாராம், ரிட்டர்ன் வாங்க வர முடியாதுன்னு சொல்றார்” என்றார் ராஜு. பிறகு “பக்கத்து கோயில்ல இப்போ அய்யர் வர்ற நேரம். நீ போய் அவர்கிட்ட குடுத்துடு” என்றார்.

மாதவி தயங்கியவாறே “அண்ணே, அப்புறம் பதிலுக்கு யாருண்ணே ஆறு பாக்கெட் வாங்கி தர்றது?” என கேட்டாள்.

“மேடம் தங்கமானவங்க, அதெல்லாம் ஒண்ணும் கேக்க மாட்டாங்க” என்றார் ராஜு.

மாதவி மொத்த பாக்கெட்டையும் ஒரு துணி பையில் போட்டு அய்யரிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு போனாள்.

அன்று இரவு அவளுக்கு சங்கடமாக இருத்தது. “ஏங்க ஒரு இருநூத்தி அம்பது ரூபா நாளைக்கு காலைல வேணும்” என கணவரிடம் விஷயத்தை சொல்லி கேட்டாள்.

“சரிடி தரேன், ஆனா ஆறு பாக்கெட் வெச்சி அவங்க என்ன பண்ணுவாங்க?” என கேட்டார் அவர்.

“தெரியலீங்க, ஆனா நான் தானே எடுத்திட்டு வந்தேன்” என்றாள் மாதவி.

மறுநாள் காலை. அண்ணாச்சி கடைக்கு போய் விஷயத்தை சொல்லி ஆறு பாக்கெட் பால் வாங்கி கொண்டாள். ஒரு வேளை அவர்கள் மூன்றுக்கு மேல் வேண்டாம் என்றால் உடனே மீதியை திரும்ப தருவதாக ஏற்பாடு.

“இன்னைக்கு இந்நேரம் பால் வந்திருக்குமேம்மா?” என யோசனையாக சொன்னார் அண்ணாச்சி. அதுவும் சரிதான் என தோன்றியது மாதவிக்கு.

“பரவால்ல, எடுத்திட்டு போ, என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்” என சொல்லி அனுப்பினார் அண்ணாச்சி.

மாதவி போய் வேதநாயகி மேடம் வீட்டு டோர் பெல்லை அடித்தாள்.

கதவு திறந்தவுடன், “இந்தாங்க மேடம், ரெண்டு நாள் பாலு. இங்கயே இருந்தா கெட்டு போயிடும்னு எடுத்திட்டு போயிட்டோம். அதான் பதிலுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றாள்.

“லிப்ட்ல, கீழ கிரவுண்ட் ப்ளோர் நோட்டீஸ் போர்டுல பால்காரர் நம்பர் ஒட்டி வெச்சிருக்கோம்ல. சொல்லி இருந்தா அவரே எடுத்திட்டு போயிருப்பார். இன்னைக்கு பால் ஏற்கனவே வந்துடிச்சி. இவ்வளவு எனக்கு தேவைப்படாது. நீயே எடுத்திட்டு போயிடு” என சலித்துக் கொண்டார் வேதா.

“சரிங்கம்மா, அப்போ நா காசா குடுத்துடவா?” என தயங்கியபடியே கேட்டாள் மாதவி.

“எவ்வளவோ தண்ட செலவாகுது! அது மாதிரின்னு நெனச்சுக்குறேன். காசெல்லாம் வேணாம்” என சொல்லி கதவை சாத்தினார்.

மாதவிக்கு சுறுக்கென்று இருந்தது. தளர்வாய் நடந்து அண்ணாச்சி கடைக்கு போய், பால் பாக்கெட்டுகளை ரிட்டர்ன் செய்து பணம் வாங்கி கொண்டு கிளம்பினாள். வீட்டுக்கு போய் கணவரிடம் விஷயத்தை சொல்ல, அவர் சில யோசனைகளை சொன்னார்.

மறுநாள் காலை வழக்கம் போல ஒவ்வொரு ப்ளோராக தரையை சுத்தம் செய்து விட்டு, மூன்றாம் மாடிக்கு வந்தாள். ஏதோ அவளுக்கு வித்தியாசமாக பட்டது. சற்று நின்று நிதானித்து கவனித்தாள். நான்கு வீட்டு வாசலிலும் ரங்கோலி கோல ஸ்டிக்கர்கள் ஒட்டியிருந்தது.

“என்ன மாதவி, சீக்கிரமே வந்துட்ட?” என்றபடி நைட் ஷிப்ட் முடித்து வந்த சங்கரி கேட்டாள்.

“ஆமாக்கா..கொஞ்சம் வெளில போகணும். அதான் சீக்கிரமே வந்துட்டேன். ஸ்டிக்கர் அழகா இருக்குது. அதான் பாத்துக்கிட்டே கொஞ்ச நேரம் நின்னுட்டேன்” என்றாள் மாதவி.

“அதுவா, நம்ம வேதநாயகி மேடம் திருப்பதிலேர்ந்து வாங்கிட்டு வந்தாங்க. நாலு வீட்டுக்கும் யூனிபார்மா இருந்தா நல்லா இருக்கும்னு ஆளுக்கொண்ணு குடுத்தாங்க நேத்து, மேடம் தங்கம்!” என்றாள் சங்கரி.

“ஆமாக்கா” என சொல்லி விட்டு கிளம்பினாள் மாதவி. வீட்டுக்கு போகும் வழியில் கோயிலுக்கு போய் இருநூத்தி அம்பது ரூபாய் அய்யரிடம் கொடுத்து ஏதாவது பிரசாதம் செய்து பக்தர்களுக்கு கொடுக்க சொன்னாள்.

“யாரு பேருக்குமா அர்ச்சனை செய்து பிரசாதம் குடுக்கணும்?” என கேட்டார் அய்யர்.

“தங்கம், சாமி” என சொல்லி விட்டு கிளம்பினாள் மாதவி.

Tamil novel – Jiteswari – Part 11/21

A girl on mobile call

கல்யாணி பிறந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குமரேசனுக்கு ஒரு சாலை விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆறு மாத காலம் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை. காமாட்சி பாண்டிக்கு வந்து அவரை கவனிக்க ஜித்து குழந்தைகளோடு சென்னையில் எப்போதும் போல தொடர்ந்தாள்.

ஆனால் கற்பகத்துக்கும் குமரேசனுக்கும் இந்த நிலை தொடர உடன்பாடில்லை.

“ஏண்டி, எவ்வளவு நடந்தாலும் அங்க போக மாட்டேன்னு இங்கயே இருக்க? அந்த அம்மா இத்தனை நாள் உனக்கு துணையா இருந்தாங்க இல்ல?இப்ப அவங்களுக்கு ஒரு பிரச்சினைனா நீ கூட இருக்க வேணாமா? அவங்க பசங்களுக்கு ஏங்க மாட்டாங்களா? உன்ன மட்டும் பத்தி மட்டும் தான் யோசிப்பியா நீ?” என ஆரம்பித்தார் கற்பகம்.

“மா, விஷயம் புரியாம பேசாத? மாமா இங்க வந்தா பெஸ்ட் ஆஸ்பிடல்ல பாக்கலாம்னு கூப்பிட்டேன். அவர் வர மாட்டேன்னு சொல்றார். எனக்கும் ராஜூவுக்கும் பேங்க் லோன் கமிட்மென்ட் இருக்கு. ராஜுவும் என்ன வரச்சொல்லி கூப்புடலை. நீ ஏன் என் மேல இப்ப கேஸ் எழுதுற?” என திருப்பி கேட்டாள் ஜித்து.

“யாரும் உன்ன வெத்திலை பாக்கு வெச்சு கூப்புட மாட்டாங்க. சூழ்நிலைக்கு ஏற்ப நீதான் புரிஞ்சி நடக்கணும். அங்க போய் ஏதாவது வேலை தேடிக்க. இப்படி ஒரு ஒட்டு உறவும் இல்லாம இருந்து எங்க மானத்த வாங்காத” என திட்ட ஆரம்பித்தார் கற்பகம்.

வினை வீட்டிலேயே இருக்க வீதியை பற்றி உள்ள வேண்டாம். அடுத்த சில மாதத்தில் ராஜுவும் காமாட்சியும் அவளை பாண்டிக்கு வர முயற்சிக்க சொன்னார்கள்.

ஜித்துவுக்கு இக்கட்டான சூழல். ஒரு புறம் வேலை, பேங்க் கடன் மற்றும் மறுபுறம் பாண்டியில் தகுந்த வேலை கிடைக்காத நிலை.

ஆனால் நீண்ட காலம் இந்த பிரச்சினையை அவள் இழுக்க விரும்பவில்லை. மாற்று ஏற்பாடு என்ன என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் துறை சார்ந்த கம்பெனிகளில் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை தேட ஆரம்பித்தாள்.

ராஜுவிடம் பேசி சில மாதங்கள் பொறுக்க சொன்னாள். 

மும்முரமாக நட்பு வட்டத்தில் தகவலை சொல்லி வேலை தேடியதில் அடுத்த ரெண்டு மாதத்தில் ஒரு வாய்ப்பு வந்தது.

எண்ணை நிறுவனங்களுக்கு பணி புரியும் ஒரு சிறிய கன்சல்டன்சியில் ரிமோட் ஜாப் ஒன்று வந்தது.

இது இரண்டு வருட கான்டராக்ட் வேலை. அவள் ஏற்கெனவே பார்த்த அதே வேலை, நல்ல சம்பளம் ஆனால் கம்பெனி மட்டும் மிக சிறியது. அது சுமார் ஐம்பது பேர் மட்டும் கொண்ட ஒரு நிறுவனம்.

ஜித்துவுக்கு கான்டராக்ட் வேலை இன்னும் ஒரு படி கீழ் நிலை. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலைக்கு இது சரியான தீர்வு. எனவே தனிப்பட்ட நலனை கருதாமல் அந்த நிறுவனத்தில் சேர முடிவெடுத்தாள்.

மும்பை வேலையை ராஜினாமா செய்து அடுத்த ரெண்டு மாதத்தில் கன்சல்டன்சி வேலைக்கு சேர்ந்தாள். குழந்தைகளோடு பாண்டிக்கு போய் செட்டிலாகி அவள் வேலையை தொடர்ந்தாள்.

குமரேசனுக்கு கர்வம் கூடியது. கை கால் உடைந்தாலும் அது ஒரு நன்மையில் அவருக்கு முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னார்.

காமாட்சிக்கு எரிச்சல் ஓங்கியது. ஏன் எப்படி அந்த பெண்ணை சத்தாய்க்க வேண்டும்? பேசாமல் சற்று அனுசரித்து சென்னை வந்து தங்கினால் அவளுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்? கணவரின் வறட்டு பிடிவாதத்தால் ஜித்து சிறிதளவும் கீழ் நிலைக்கு போவதை காமாட்சி துளியும் விரும்பவில்லை.

ஆனால் ஜித்து கன்சல்டன்சி வேலையில் பெரிதாய் குறைபட்டுக் கொள்ளவில்லை. அவள் எப்போதும் சென்னையில் இருப்பதை போலவே அவள் தினசரி வேலைகளை பார்த்தாள்.

இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிய இப்போது ஜித்துவுக்கு ஒரு முக்கியமான கால கட்டம்.

இன்னும் சில மாதங்களில் அவள் கான்டராக்ட் முடிய போகிறது.

தற்போது அவள் பணிபுரியும் சவுதி கம்பெனி கிளையண்ட் அவர்களின்  அடுத்த கட்ட ஐந்து வருட கான்ட்ராக்ட்டை ஜித்துவின் கன்சல்டன்சிக்கே  மீண்டும் அளிப்பது என முடிவு செய்திருக்கிறது. 

ஆனால் இரண்டாம் கட்ட ப்ராஜெக்ட்டில் தொடர வேண்டுமென்றால் அவள் நெதர்லாந்து போய் இரண்டு வார ஒர்க்ஷாப்பில் நேரில் பங்கேற்க வேண்டும்.

ஜித்துவுக்கு இந்த ஒர்க்ஷாப் மிக முக்கியமானது.

இரண்டு வாரம் நெதர்லாந்து போய் நேரில் ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்டு ட்ரெயினிங் முடித்து விட்டு வந்தால் போதும். எல்லாம் சுமுகமாக முடிந்தால் அடுத்த ஐந்து வருடம் இப்போது போல பாண்டியில் இருந்தே வீட்டிலிருந்து பணி புரியலாம்.

“ராஜு, நா டூ வீக்ஸ்   நெதர்லாந்து போகணும். ஒர்க்ஷாப் இருக்கு. போயிட்டு வந்தா அஞ்சு வருஷம் இதே மாதிரி ஒர்க் ப்ரம் ஹோம் வேலை செய்யலாம் ” என சொன்னாள் ஜித்து.

“சரி, போயிட்டு வா” என சொல்லிவிட்டு உடனே அறையை விட்டு வெளியேறினான் ராஜு.

விஷயம் குடும்பத்துக்கு தெரிந்ததும் குமரேசன் கச்சேரியை ஆரம்பித்து விட்டார்.

“அந்த வாரம் தான் நம்ம ரமா கல்யாணம் வருது. அப்புறம் போக சொல்லு” என்றார் காமாட்சியிடம்.

ரமா குமரேசனின் தம்பி மகள். அவர் தம்பி வீட்டில் முதல் விசேஷம்.

இல்லேங்க, நம்ம சவுகர்யத்துக்கு கம்பெனில எப்படிங்க மாத்துவாங்க? நாம தான் எல்லாரும் போறோமே, ஜித்து ஒருத்தி வரலேன்னா என்ன?”என மெதுவாய் சொன்னார் காமாட்சி.

“நம்ம குடும்ப விசேஷம் எல்லாத்துக்கும் அவங்க எல்லாரும் ஒருத்தர் தவறாம வராங்க. அவங்க வீட்ல மொதல் விசேஷம். அதுக்கு வீட்டு மருமக இல்லாம போய் நிக்க சொல்றியா? காரு வீடு வேலை பணம்னு இருங்க. நாலு சொந்தம் வேணும்னு நெனைக்காதீங்க. அவன் தான் கவர்ன்மெண்டு வேலைக்கு போறானே? இன்னும் என்ன கொறை” என எகிறினார் குமரேசன்.

“நா ஒருத்தன் கத்தி என்ன ஆக போகுது? அம்மா புள்ள ரெண்டு பேரும் ஜடம் மாதிரி இருக்கீங்க. வாய தொறந்து நல்லது கெட்டது எடுத்து சொன்னா என்ன? அதுக்கு தான் இந்த சம்மந்தம் வரும்போதே சொன்னேன். இது சரிப்படாதுனு. யாரு எம் பேச்ச கேட்டீங்க? இப்ப எல்லார் முன்னாடியும் நா போய் தலையை குனிஞ்சு நிக்க போறேன். அவன் ஒத்த மரமா நிக்க போறான்” என வாய்க்கு வந்ததை பேசித் தீர்த்தார்.

பக்கத்து அறையில் இருந்த ஜித்துவுக்கு சுர்ரென்று ஆனது. இரண்டு வாரம் வேலை விஷயமாய் போய் வருவதற்கு இத்தனை வருடங்களுக்கு பிறகும் குழந்தைகள் பிறந்த பிறகும் வரன் பார்த்த கதையை இழுத்தது அடி முட்டாள்தனமாய் பட்டது.

போய் நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் போல இருந்தது.

சில நிமிடங்கள் நிதானித்தவள் எதுவும் கேட்க வேண்டாம் என முடிவெடுத்தாள். தனக்கு கேட்க வேண்டும், எரிச்சலாகி விஷயம் சூடு பிடிக்க வேண்டும் என திட்டமிட்டு கொட்டப்படும் வார்த்தைகள்.

தான் சொல்லும் காரணத்தையோ பதிலையே துளி கூட மதிக்கப்போவதில்லை. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது.

வீணாய் பேசி உழட்டுவதில் எந்த பயனும் இல்லை.எவ்வளவு விரைவாக இதை மறக்கிறோமோ அவ்வளவு நல்லது என நினைத்துக்கொண்டாள்.

காமாட்சிக்கு சங்கடமாய் இருந்தது.

அந்த பெண் அலட்டாமல் சத்தமில்லாமல் உழைத்துக் கொட்டுகிறாள்.

சகல சௌகர்யங்களையும் செய்து கொடுத்திருக்கிறாள். அவர்கள் சொந்த பந்த வகையறாவில் எந்த மருமகளும் இவள் அளவிற்கு திறமைசாலி கிடையாது. நாம் செய்த புண்ணியம் இந்த மாதிரி ஒரு பொறுப்பான, தன்மையான பெண் குடும்பத்திற்கு அமைவது என பல நேரங்களில் கர்வமாய் இருந்திருக்கிறார்.

இந்த மனுஷனுக்கு மட்டும் புத்தி வேறு மாதிரி இருக்கிறது. கண்டிப்பாய் அவளுக்கு கேட்டிருக்கும். அவள் மனம் என்ன பாடுபடும் என கவலையில் ஆழ்ந்தார்.

சற்று நேரத்தில் டோர் பெல் அடித்தது. காமாட்சி போய் கதவை திறக்க பின்னாலேயே ஜித்துவும் வெளியே வந்தாள்.

சாப்பாடு டெலிவரி வந்திருக்கிறது. இருபத்து நான்கு வகையான பண்டங்களோடு மெகா தாலி.

“வாங்க அத்தை சாப்பிடுவோம்” என அழைத்தாள்.

பெரிய சில்வர் தட்டுகளை கழுவி எடுத்து வந்து வைத்தாள். பொறுமையாக எல்லா டப்பாக்களையும் பிரித்து பாத்திரங்களில் மாற்றி தட்டு போட்டு மூடி வைத்தாள். பேக்கிங் பேப்பர் மற்றும் டேப்பு குப்பை என எல்லாவற்றையும் அள்ளி குப்பையில் போட்டு டேபிளை சுத்தம்  செய்தாள்.

டோர் பெல் அடித்தது. டவுனிலேயே பெஸ்ட் லஸ்ஸி நாலு பேக்.

வாங்கி வந்து கண்ணாடி கப்பை கழுவி ஊற்றி மூடி போட்டு வைத்தாள். 

குமரேசனுக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை.

எப்போது அழைப்பு வரும் என காத்துக் கொண்டிருந்தார்.

எல்லா அயிட்டங்களையும் மாற்றி ஊத்தும்போதே வாசனை வீட்டை நிரப்பி இல்லாத பசியையும் கிளறி விட்டது.

அரை மணி நேரம் ஆனது.

காமாட்சி “வாங்க சாப்பிட” என கூப்பிட்டு முடிப்பதிற்குள் போய் சேரில் உட்கார்ந்தார்.

அட்டகாசமான சாப்பாடு. அருமையான லஸ்ஸி. இருபது நிமிடம் ரசித்து ரசித்து சாப்பிட்டு முடித்தார் குமரேசன்.

Family lunch time

எதிரில் உட்கார்ந்து மெகா தாலியோடு குமரேசனின் ஈகோவையும் சேர்த்து மெதுவாக மென்று முழுங்கிக் கொண்டிருந்தாள் ஜித்து.

இந்த பெண் தனக்கு பிறந்திருக்க வேண்டியவள். ஒரு வார்த்தை பேசாமல்,முகம் சுழிக்காமல் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு தட்டு நல்ல சோறு போட்டு குமரேசனை தட்டி தூக்கியிருக்கிறாள்.

மற்ற குடும்பங்களில் நாராசமாக மாறும் சண்டை, இங்கே டைனிங் டேபிளில் அமர்க்களமாக பரிமாறப்பட்டு கொண்டிருக்கிறது.

நரம்பில்லாமல் பேசும் நாக்கு ஒரு மாற்றுக்காக நல்ல சுவையை அனுபவிக்கட்டும் என நினைத்திருக்கிறாள். அமிலமாக சுட்ட வார்த்தைகள் ஜீரணமாக ஆயிரம் ரெண்டாயிரம் போனால் பரவாயில்லை என நினைத்துக் கொண்டார் காமாட்சி.

ஒரு மெகா தாலியில் ரமா கல்யாண மேட்டர் சுபம் மங்களம் போட்டு முடிக்கப்பட்டது.

Tamil novel – Jiteswari – Part 9/21

Hindu temple

அன்று கோவிலில் தெப்போற்சவம். சாயந்திரம் விளக்கு வைத்ததும் இரண்டு மணி நேரம் இறைவனும் இறைவியும் திருக்குள தெப்பலில் பவனி வந்தார்கள். பக்தர்கள் வெள்ளம் திரளாக இருந்தது.

இந்த கோவில் இறைவிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சக்தி வாய்ந்த தெய்வமாக தென்னிந்தியாவில் போற்றப்படும் தலம்.

நாள் கிழமை முதற்கொண்டு ஆராதனைகள் வரை இறைவியை மையப்படுத்தியே இருக்கும். இறைவன் தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார். கோவிலில் கிடைக்கும் படங்களில் பெரும்பாலும் இறைவி மட்டும் தான் இருப்பார். ஒரு சில படங்களில் மட்டுமே தம்பதி சமேதராக இருப்பர்.

இறைவனுக்கு பக்கத்து மாவட்டத்தில் புகழ் வாய்ந்த திருத்தலம் இருக்கிறது. அங்கு அவர் தான் எல்லாம். அங்கே இறைவி தனி சன்னதியில் சமர்த்தாக இருப்பார்.

தெப்போற்சவம் அமர்க்களமாக நடந்து முடிந்தது. இறைவி கோவிலுக்குள் திரும்ப மக்கள் அனைவரும் கலைந்து சென்றார்கள்.

“இன்னைக்கு என்ன நம்ம மீன் குட்டிங்க எல்லாம் சுரத்தே இல்லாம இருக்குங்க? கவனிச்சியா?” என்றார் இறைவன்.

“ஆமாங்க, நானும் பார்த்தேன். ஜனங்க, லைட்டு எல்லாத்தயும் பாத்து துள்ளி குதிச்சி வெளையாடுவாங்க. இன்னைக்கு என்னடான்னா ரொம்ப டல்லா இருக்காங்க” என பேசிக்கொண்டே கண்ணை மூடினார் இறைவி.

“நம்ம தங்கராஜ் மேல வருத்தமா இருக்காங்க, கேட்டு பூட்டுனது அவங்களுக்கு விருப்பமில்லை” என கண்டுபிடித்து பேசிக்கொண்டார்கள்.

“சரி ராத்திரி ஒரு எட்டு போய் அவங்ககிட்ட பேசிட்டு வரலாம்” என்றார் இறைவன்.

“ஆமா, இன்னும் ஒரு பூஜை இருக்கு. அது முடியட்டும். எல்லாரும் பூட்டிட்டு போனதும் கெளம்பலாம்” என்றார் இறைவி.

சிலமணி நேரம் முன்பு ஆயிரக்கணக்கானோர் வந்து சென்ற சுவடே இல்லாமல் அமைதியாக இருந்தது கோவில்.

பொழுதோடு போய் யசோதா பசு கோசாலையில் படுத்துவிட்டது.

கோவில் யானை கணேசன் பொழுதுக்கும் நின்ற கால் வலியில் முனகிக்கொண்டு இருந்தது. அடுத்த நாள் காலையில் ராஜ வீதியில் ஊர்வலம் இருக்கிறது. எப்படியும் ஏழு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.

சாயந்திரத்திலிருந்து கால் மாற்றி கால் மாற்றி நின்று சோர்ந்து போயிருந்தது. சற்று நேரத்தில் ஒரு போன் வர பாகன் பேச ஆரம்பித்து விட்டார். கணேசனுக்கு சாப்பாடே வேண்டாம் என தோன்றியது. பேசாமல் போய் புல்லின் மீது படுத்துக் கொண்டது. சற்று நேரம் கழித்து வந்த பாகன் கணேசனை தடவி சமாதானப்படுத்தினார்.

பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு முடித்தது கணேசன். பாகன் தூங்க போக அங்கே வந்த மாருதியிடம் பேச ஆரம்பித்தது.

An elephant at temple

“நாளைக்கு நாளைல ஊர்வலம் போறோம். ரோட்டோரம் ரோஸ்மில்க் குடிச்சிக்கிட்டு எங்கள வச்சி செல்பியா எடுத்து ஸ்டேட்டஸ் போடுவாங்க. எவன் இப்பலாம் பக்தியோட வரான்? ஸ்டேட்டஸ் போட நாலு போட்டா எடுக்க தான் வரானுங்க. இதுக்கு லோக்கல் ஹாலிடே வேற” என புலம்பியது கணேசன்.

“திருக்கோவில்ல இருக்குறக்குற கொளத்துக்குள்ள இருக்குறவங்களுக்கே இவ்ளோ மனக்குறை இருக்கு. இந்த அம்மா என்னடானா என் மேல ஏறி ஒக்காந்துக்கிட்டு ராஜ வீதி சுத்தி வந்து அருள கொட்டப்போகுது. அவங்க காலடியிலேயே கெடக்குற ஜீவன்களுக்கு வேற என்ன போக்கிடம் இருக்கு?” என மாய்ந்து போய் பேசிக்கொண்டிருந்தது கணேசன்.

“திரும்புற பக்கமெல்லாம் வித விதமான பிரச்சினையோட ஜனங்க மொச்சா கடவுளுங்க மட்டும் என்ன பண்ணுவாங்க? அந்த காலத்துல என்ன இவ்ளோ வெரைட்டி பிரச்சினைகளா இருந்துது? சாமி மழையை குடு, வெளச்சலை குடு, ஆடு மாடு கண்ணுகுட்டிய நோய் நொடி இல்லாம பாத்துக்க, குடும்பத்தை காப்பாத்துன்னு விரல் விட்டு சொல்லிடலாம். இன்னும் மிஞ்சி போனா குழந்தய குடு, நோயை தீரு, செல்வத்தை குடுன்னு கேப்பாங்க.

இப்போ என்னடான்னா ஆன்சைட் வேணும். அதுவும் நல்ல வெதர்ல ஷாட் டெர்மா வேணும். கூட நல்ல பிகரா ஏதாவது வரணும். மொக்க க்ளையண்டா இருக்கணும். சவுத் இந்தியன் சோறு கெடைக்கணும்.

லாங் டெர்முன்னா சாமி வீடு புக் பண்ணி குடுக்கணும். நல்ல காரு, அதுவும் அதுவாவே ஓடுற மாதிரி வாங்கி தரணும். அவங்க ஆன்சைட் போன நேரத்துல அவங்க அப்பா அம்மாவுக்கு நோய் நொடியில்லாம பாத்துக்கணும். கூட போற ஸ்பவுசும்கும் மவுஸான வேலை வாங்கி தரணும். இந்த காலத்து மனுஷங்களுக்கு கடவுளா இருக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?” என வக்காலத்து வாங்கியது மாருதி.

“நீயும் உன் கடவுளோட அசைன்மென்டுக்கு ஆன்சைட் போனவர்தானே? அவரை எப்படி விட்டு குடுப்ப” என கேலி செய்தது கணேசன்.

“ஆமா ஆன்சைட் போய் இவங்கள மாதிரி பன்னா பண்ணேன். என் வாலுல தீய வெச்சு புண்ணானது தான் மிச்சம்” என இடித்தது மாருதி.

“அரே பாபா, அந்த டீம்லயே நீதான் டாப் பர்பாமரு. உன் மேல இருக்குற ப்ரேமத்துல தான், சாமி எல்லா பேமிலி போட்டோ பிரேம்லயும் உன்னை வெச்சிருக்காரு” என கிண்டலடித்து கணேசன்.

மாருதியோடு பேசியதில் கொஞ்சம் ரிலாக்சானது கணேசன். “சரி நான் போய் படுக்கிறேன். நாளைக்கு காலைலயே எழுந்து ரெடியாகணும்? என

சொல்லி மாருதியை வழியனுப்பியது.

Tamil novel – Jiteswari – Part 8/21

A senior couple a temple

அடுத்த நாள் காலையிலேயே புஷ்கரும் கல்யாணியும் கோவிலுக்கு போக ரெடியாகிவிட்டார்கள். நேசப்பாவும் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டுக்கொண்டு கிளம்பினார்.

“ரொம்ப நாளாச்சு கோவிலுக்கு போய். நானும் வரேங்க” என்றார் சங்குபுஷ்பம்.

“பசங்களா, மழை கொட்ட போகுது, கொடை எடுத்துக்குங்க, உங்க பாட்டியும் கோவிலுக்கு வராளாம்” என கிண்டலடித்தார் நேசப்பா.

ஜித்தும் லக்ஷ்மியும் வாக்கிங் முடித்துவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.

ஜித்துக்கு காமாட்சியின் போன் வந்தது.

“நல்லாருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா?” என விசாரித்தாள்.

இரண்டு நிமிடம் பேசி முடித்தவுடன் நேசப்பா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு போய் பால்கனியில் நின்றாள்.

எதிர் பிளாட்டு பால்கனியில் வெளிர் நீல புடவை  காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் சடாரென கற்பகத்தின் நினைவு வந்தது ஜித்துவுக்கு. லேசாக கண்ணீர் துளிர்க்க அந்த நினைவில் ஆழ்வது தன்னை மேலும் பலகீனப்படுத்தும் என திரும்பி ஹாலுக்குள் வந்தாள்.

சங்கு புஷ்பம் குளித்துவிட்டு வர “எங்கம்மா கெளம்புற காலங்காத்தால?” என கேட்டாள் லக்ஷ்மி.

“கோவிலுக்குடி. பசங்கள கூட்டிட்டு போறோம்” என்றார் சங்கு புஷ்பம்.

“ஜித்து நீயும் வரியா? எல்லாரும் சேந்து போகலாம்” என அழைத்தாள் லக்ஷ்மி.

போனை எடுத்து கேலண்டரை பார்த்தாள் ஜித்து. மதியம் ஒரு மணிக்கு தான் ஒரு மீட்டிங் இருந்தது.

“சரி போலாம். பத்து நிமிஷத்துல ரெடியாயிடறேன்” என்றபடி குளிக்க போனாள் ஜித்து.  பிளான் மாறிய பிறகு சங்கு புஷ்பம் கிச்சனுக்குள் நுழைந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரத்தில் எல்லாரும் ரெடியாக டாக்ஸி பிடித்து கோவிலுக்கு

போய் இறங்கி உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் வயதானவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

நேசப்பா சில்லறை எடுத்து குழந்தைகளிடம் கொடுத்து அவர்களுக்கு கொடுக்க சொன்னார்.

ஜித்துவும் லக்ஷ்மியும் பர்ஸை துழாவினார்கள். சில்லறை காசோ, கரன்சியோ எதுவும் இல்லை. துடைத்து வைத்தார் போல இருந்தது பர்ஸ்.

“அம்மா சில்லறை இருந்தா குடு” என்றாள் லக்ஷ்மி.

“ஏண்டி உங்க டிஜிட்டல் இந்தியால தர்மத்துக்கு ஆப்ஷன் இல்லியா?” என நக்கலாய் கேட்டார் சங்கு புஷ்பம்.

“பத்து ரூபாய்க்கு சில்லறை காசு தர இவ்ளோ பேச்சு பேசுற” என்றபடியே சிரித்தாள் லக்ஷ்மி.

போனை லாக்கரில் வைத்து விட்டு வந்ததால் அர்ச்சனை டிக்கெட் மற்றும் நெய் விளக்கு வாங்க, ஐயருக்கு தட்டில் போட, உண்டியலில் போட என

இருவரும் காசுக்காக பவ்யமாக நின்றார்கள்.

சங்கு புஷ்பம் கெத்தாக கரன்சியை எடுத்து எண்ணி, பிறகு சில்லறை காசு எண்ணி கொடுப்பது என ஒரே சீனாக இருந்தது.

“மா, நேத்து மார்க்கெட் போய் கடைசி காசு வரை செலவு பண்ணிட்டோம். நீ ரொம்ப சீன் போடாதே” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

“கொஞ்சமான ஆட்டமா போடுறீங்க போன வச்சிக்கிட்டு. கண்ணு மண்ணு தெரியாம ஊதாரித்தனமா செலவு பண்றீங்க. இப்போ என் டைம்” என காட்டமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

பேசியபடியே வெளி பிரகாரம் சுற்றி குளத்தருகே வந்தார்கள். நேசப்பா ஆபீஸ் ரூமுக்கு போய் கேட் திறப்பது பற்றி விசாரித்தார். ஆபீஸர் வாட்ச்மேனிடம் சாவி கொடுத்து அனுப்பினார்.

குளத்து கேட் திறந்ததும் குழந்தைகள் குக்ஷியானார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தார்கள்.

“கொஞ்சம் மேல வாங்க எல்லாரும்” என அழைத்தார் சங்குபுஷ்பம்.

நாலு படி இறங்கிய ஜித்து “என்னமா?” என்றாள்.

சங்குபுஷ்பம் பக்கவாட்டில் இருந்த மண்டபத்தில் ஏறி தூணில் சாய்ந்து உட்கார்ந்து காலை நீட்டிக்கொண்டார்.

“சுக்கு காபி பிளாஸ்க்ல கொண்டாந்துருக்கேன். குடிச்சுட்டு அப்புறம் போய் படிக்கட்டுல உக்காரலாம்” என பையை பிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

“நெனச்சேன் நீ பைய தூக்கிட்டு கிளம்பும் போதே. என்னென்ன சரக்க உள்ள வெச்சிருக்கியோன்னு. கோவிலுக்கு வந்தா ஜங்க்க்ஷன்ல இருக்குற காபி ஹவுஸ்ல போய் சுக்கு காபி குடிக்கணும்னு ஜித்துக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீ என்னடான்னா வீட்லருந்தே போட்டு எடுத்துட்டு வந்துட்ட” என சிணுங்கினாள் லக்ஷ்மி.

“அம்மா கூட அப்டி தான். பிரிக்க முடியாதது நர்ஸும் பிளாஸ்க்கும் போல” என சொல்லி சிரித்தாள் ஜித்து.

“ஆமா, எங்க காலத்துல இருந்த ஹைடெக் சாமான்ல பிளாஸ்க்கும் ஒண்ணு. வார்டுல பிளாஸ்க் வெச்சிருக்கிற பேஷண்ட் கொஞ்சம் கெத்தாதான் இருப்பாங்க. வயசான இல்லாதவங்களுக்கு சொந்தமா பிளாஸ்க் இருக்கிறதே ஒரு பெரிய கனவு தான். பெரும்பாலானவங்களுக்கு வீட்லேர்ந்து யாரும் வர மாட்டாங்க. கவெர்மென்ட்டு மூணு வேளை சாப்பாடு குடுக்கும். கூட சூடா காபியோ பாலோ குடிச்சே, ஆஸ்பிடல்லேர்ந்து டிஸ்சார்ஜ் ஆகுற வரை ஓட்டிடுவாங்க” என விவரித்தார் சங்கு புஷ்பம்.

புஷ்கரும் கல்யாணியும் அந்த பிளாஸ்கை மரியாதையாக பார்த்தார்கள்.

“பேசாம காபி ஹவுசே போயிருக்கலாம்” என மீண்டும் ஆரம்பித்தாள் லக்ஷ்மி.

“உனக்கென்ன சரக் சரக்குன்னு கார்டு தேய்ப்ப. இல்ல போன எடுத்து காச சுட்டு தள்ளுவ. சுக்கி காபியோடு முடிக்கிற ஆளா நீ? எங்களுக்காவது பென்சன் வருது. உங்களுக்கு அதுவும் கிடையாது. நாப்பத்தஞ்சு வயசாச்சுன்னா பொம்பளைங்களுக்கு எப்படா ரிட்டயர்டு ஆவோம்னு இருக்கும். சுகர் எட்டிப்பாக்கும்.மெனோ பாஸ் வதைக்கும். ஒடம்புல தெம்பு இருந்து வேலைக்குப் போகும்போதே செலவை கண்ட்ரோல்ல வைங்க. இப்போ சேமிக்கலேன்னா பின்னாடி இதே ஜோர்ல செலவு பண்ணமுடியாது” என நிதர்சனத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“நல்லதா ஒரு காபி குடிக்கலாம்னு சொன்னா எனக்கு நரை வந்து கூன் விழுறவரை பயம் காட்டுறியேம்மா? டென்ஷனை கன்ட்ரோல்ல வை, புருஷனை கன்ட்ரோல்ல வை, வெய்ட்ட கன்ட்ரோல்ல வைனு எவ்ளோ ப்ரெஷரும்மா” என அலுத்துக்கொண்டாள்  லக்ஷ்மி. 

நேசப்பா குழந்தைகளுக்காக சர்க்கரைப் பொங்கல் வாங்கி வந்தார். சற்று நேரத்தில் அவர் பின்னாடியே கையில் தூக்கு வாளியுடன் ஒருவர் வந்தார்.

“மேடம் நல்லாருக்கீங்களா?” என்றார்.

“நல்லாருக்கேன் பரணி. தங்கமயிலும் பசங்களும் சௌக்கியமா?” என விசாரித்தார் சங்கு புஷ்பம்.

பரணி கோவில் பணியாளர். தங்கமயில் சில ஆண்டு காலம் அவர்கள் சொசைட்டி ஆபீசில் வேலை பார்த்தாள். மயிலின் இரண்டு டெலிவரியும் சங்கு புஷ்பம் வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் நடந்தது.

“நல்லா இருக்காங்க மேடம். சார தூரத்துல இருந்து பார்த்தேன். அதான் பிரசாதம் தரலாம்னு வந்தேன்” என தொன்னையில் புளியோதரை வைத்து கொடுத்துவிட்டு கிளம்பினார். நிதானமாக சாப்பிட்டு சுக்கு காபியும் குடித்து முடித்தார்கள்.

“மா, காபி அவுஸ் டேஸ்ட் அப்டியே இருக்கு” என புகழ்ந்தாள் லக்ஷ்மி.

“நீங்க வரீங்கன்னு சொன்னதும் அம்மா அந்த காபி அவுஸ்லேர்ந்து மிக்ஸ் வாங்கிட்டு வர சொல்லிட்டா” என சொன்னார் நேசப்பா.

“செம பிளான்மா” என சிரித்தாள் லக்ஷ்மி.

“இந்த கப்பு காப்பிய அம்பது ரூபா சொல்வான். இப்போ பாரு சிம்பிளா முடிஞ்சிது. நீ காபி குடிக்கலாம்னு உள்ள நொழஞ்சி ரெண்டாயிரத்துக்கு கார்டு தேய்ப்ப” என சொன்னார் சங்கு புஷ்பம்

லக்ஷ்மி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்க ஜித்து தலையசைத்தும், புன்னகைத்தும் கேட்டு கொண்டிருந்தாள். நேசப்பாவுக்கு ஜித்து சாதாரணமாக இல்லை என புரிந்தது. யோசனையும் கவலையும் தீவிரமாக குளத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

லஷ்மி காபி டம்ளர்களை வெளியே கொண்டுபோய் கழுவி எடுத்து வந்தாள்.

சங்கு புஷ்பம் அதையெல்லாம் பையில் வைத்துவிட்டு இரண்டு பொரி டப்பாக்களை வெளியே எடுத்தார். புஷ்கருக்கும் கல்யாணிக்கும் ஆளுக்கொன்று கொடுத்தார்.

டப்பாவை கையில் வாங்கிய புஷ்கர் சற்று நேரம் யோசித்தான்.

“தாத்தா நானும் பாட்டியும் அந்த கார் னர் போறோம். நீங்க பாப்பா கூட இங்கயே இருங்க” என்றான்.

“சரிப்பா” என்றார் நேசப்பா.

“மா, நாங்க ஹெவியா சாப்டுட்டோம். கொளத்தை ரெண்டு ரவுண்டு சுத்திட்டு வரோம்” என ஜித்துவோடு கிளம்பினாள் லக்ஷ்மி.

ஜித்துவின் அமைதி லக்ஷ்மிக்கும் கவலையை தந்தது. எதுவானாலும் அவளே சொல்லட்டும் என பொறுத்திருந்தாள். ஆனால் கோவிலுக்கு வந்த பிறகு நாமே ஆரம்பிப்போம் என்ன விஷயம் என கேட்போம் என முடிவெடுத்தாள்.  சற்று நேரம் நடந்த பிறகு மறு கரையில் உட்கார்ந்தார்கள்.

Friends at temple

“மைண்டுல என்னடி போட்டு உருட்டிக்கிட்டு இருக்க? நானும் வந்ததுலேர்ந்து பாக்குறேன். யோசனயாவே இருக்க” என உரிமையாக கேட்டாள் லக்ஷ்மி.

“மும்பை ஆபீஸ் போய் ஜாயின் பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்” என்றாள் ஜித்து.

“அவர் வரேன்னு சொல்லிட்டாரா? என குதூகலமானாள் லக்ஷ்மி.

“இல்ல” என்றாள் ஜித்து.

“அப்போ பசங்கள கூட்டிட்டு நீ மட்டும் போறியா? என நிதானமாக கேட்டாள் லக்ஷ்மி.

“இல்ல, இன்னும் முடிவு பண்ணல” என்றாள் ஜித்து குளத்தை பார்த்தபடியே.

நிஜமாகவே யாரோ தன்னை குளத்துக்குள் உருட்டுவது போல பகீரென ஆனது லக்ஷ்மிக்கு. அவள் காயம் மட்டும் ஆழமானது என புரிந்தது. கைக்குள்ளேயே வைத்து வளர்த்த குழந்தைகளை தீர்க்கமாய் அழைத்து செல்வேன் என சொல்லாமல் விட்டேத்தியாய் இருக்கிறாள்.

“எனக்கு திரும்ப பாண்டி போக விருப்பமில்லை. ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டேன். சங்குமாகிட்டயும் பேசிட்டேன். பத்து நாள் எதை பத்தியும் நினைக்காம வெய்ட் பண்ண சொன்னாங்க. எதுவாயிருந்தாலும் அடுத்த வாரம் பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

“நா மும்பை ஆபீஸ்ல பேசிட்டேன். நாலு மாசம் கழிச்சு ஜாயின் பண்ணுவேன்னு நெனைக்கிறேன். அண்ணன் அடுத்த வீக்கெண்ட் வரேன்னு சொல்லியிருக்கன். சங்குமாதான் அவன்கிட்ட பேசுனாங்க. அவன் இன்னும் என்கிட்டே பேசல. மெசேஜ் மட்டும் போட்டிருக்கான்” என இடியை இறக்கினாள் ஜித்து.

முடிவை வெளிப்படையாக சொன்னவள் இப்போது வரை அதன் காரணத்தை சொல்ல கூச்சப்படுகிறாள்.

கண்டிப்பாக ராஜுவோடு ஏதோ வருத்தம். இந்த எல்லைக்கு போயிருக்கறாள்.

நெதர்லாந்து போகும் முன் நல்லபடியாக இருந்த குடும்பம் இப்போது இந்த நிலையில் நிற்கிறது.

லக்ஷ்மி வேறு பக்கம் முகத்தை திருப்பி கண்ணை மூடிக் கொண்டாள்.

ஜித்துவை நேராய் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. 

இந்த வயதில் இந்த பொண்ணுக்கு ஏன் இந்த நிலை கடவுளே என வருந்தினாள்.    

தன் அம்மாவை நினைத்தாள் லக்ஷ்மி. இவளை கண்டிப்பாக அவர்களால் மட்டுமே தேற்ற முடியும். இவள் இந்த மனநிலையில் எடுத்த ஒரு நல்ல முடிவு இங்கு வந்தது தான்.

ஆனால் சங்கு புஷ்பம் எந்த சலனமும் இல்லாமல் இவளிடம் பேசுவது லக்ஷ்மிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் அனுபவம் அப்படி என நினைத்துக் கொண்டாள்.        

Tamil novel – Jiteswari – Part 7/21

a talk between a crow and monkey

குளத்தின் நடுவே கல் மண்டபம் இருக்கிறது. அதன் அருகே நீரில் சில மீன்கள் கம்பி ஜன்னலருகே நெடு நேரமாக குழந்தைகள் நிற்பதை கவனித்தபடி நீந்தி கொண்டிருந்தன.

பூட்டிய கேட்டை பார்த்தபடியே குழந்தைகள் ஏமாற்றமாக நின்றது குட்டி மீனுக்கு வருத்தமாக இருந்தது.

“அம்மா, ஏன்மா இப்போ கேட் பூட்டி வெக்குறாங்க? அங்க பாரு குட்டி பசங்க சேடா இருக்காங்க” என கேட்டது குட்டி மீன்.

“எல்லாம் அந்த தங்கராஜு வேலை. வர்றவங்க குப்பை போடுறாங்க, லவ்வர்ஸ் வராங்கனு ஏதேதோ காரணம் சொல்லி பூட்டி வெச்சிருக்கான். பாவம் பசங்க, விளையாட முடியாம திரும்ப போறாங்க” என்றது அம்மா மீன்.

மண்டபத்தின் மேலே அமர்ந்திருந்த காகம் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தது. சின்னதாய் பறந்து வந்து தரையில் அமர்ந்தது.

“இப்ப கேட் தொறந்தா நீ என்ன வெளில கெளம்பி போக போறியா?” என நக்கலாக குட்டி மீனிடம் கேட்டது.

வயத்தில் மூத்த காகம் என அம்மா மீன் காதில் சொல்லி குட்டி மீனை அமைதிப்படுத்தியது.

பக்கத்து மரக் கிளையில் அமர்ந்திருந்த குரங்கு இந்த மீட்டிங்கில் வந்து சேர்ந்து கொண்டது. சற்று நேரத்தில் அதற்கு அங்கே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது என புரிந்தது.

பதில் வராத காரணத்தால் மீண்டும் காகம் சீண்ட தொடங்கியது.

“உங்களுக்கு என்ன வெயில் மழை கஷ்டமா? சொகுசா தண்ணில இருப்பீங்க. இங்கயே பாசி பூச்சிய தின்னு காலத்த ஓட்டிடுவீங்க. என்ன மாதிரி கோபுரம் மேல வெயில்ல காஞ்சி மழைக்கு நனஞ்சா இருக்கீங்க? தண்ணி வத்துற மாதிரி இருந்தா தங்கராஜு டேங்கர்காரன தண்ணி புல் பண்ண சொல்லிடுவான். நா நாலு தெரு பறந்து போய் எங்க வெந்த சோறு கிடைக்கும்னு அல்லாடிக்கிட்டிருக்கேன்” என நீட்டி முழக்கி பேசியது.

தூணில் சாய்ந்து உட்கார்ந்தபடி காகம் சொல்வதை கேட்டு கொண்டிருந்தது குரங்கு.

குட்டி மீனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. சொல்ல முடியாத சோகம் அதன் கண்ணில் கண்ணீராய் வழிந்தது. அம்மா மீனுக்கு தாளவில்லை.

“நீ தெக்கு கோபுரத்துல நல்ல கூடுல தானே இருக்க? என்னவோ வெந்த சோறு மட்டும்தான் சாப்புடுறேன்னு கதவுடுற. நல்லா வடை, சக்கரபொங்கல்னு வகை வகையா சாப்புடுற. எங்கள வந்து குறை சொல்லுற” என காகத்தை தாளித்தது அம்மா மீன்.

“இது காலைல மெனு. மத்தியானம் பஜார் பக்கம் போய் தள்ளு வண்டி கடை பக்கத்துல தான் ஐய்யாக்கு டியூட்டி. சிக்கன் ரைஸ், பிரைட் பிஷ்னு ஒரு ஒரு புடி புடிப்பார்” என்றது குரங்கு.

“அப்புறம் ஐயா இப்போ தெக்கு கோபுரத்துல இல்ல. வடக்கு கோபுரத்துக்குப் போயிட்டார்” என எக்ஸ்ட்ரா டீடைலை சொன்னது மாருதி.

காகம் தொக்காக மாட்டிக்கொண்டது. என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.

“ஆமா, நா மட்டும் தான் சக்கர பொங்கல் சாப்பிடுறேனா? எனக்கே நாலு தொன்னை தள்ளி அஞ்சாவது தொன்னைல தான் கொஞ்சூண்டு கெடைக்குது. நம்ம கணேசன் அண்ணனை பாருங்க, வெல்லம், சோறு, புல்லுனு ராயலா இருக்காரு” என கோவில் யானையை கோர்த்து விட்டது.

தன் மீது ஒரு குறை சொன்னால் அடுத்தவரோடு கோர்த்துவிடும் மனித புத்தி காகத்துக்கும் தொற்றிக் கொண்டது.

“இப்போ என்ன, அந்த பையன் பொரி போட்டு விளையாடி இருப்பான். நீங்களும் வயறு முட்ட தின்னுட்டு ஆட்டம் போட்டு இருப்பீங்க. கேட்டு பூட்டி இருக்கவே உங்களுக்கு காண்டா இருக்கு. அதுக்கு ஏன் என்ன கழுவி ஊத்துறீங்க?” என பிளேட்டை திருப்பி போட்டது காகம்.  

பாதிக்கப்பட்டவைர்களையே பழி போட்டு ஏளனப்படுத்தும் ஈனபுத்தியையும் தவறாமல் கற்றுக் கொண்டு இருக்கிறது என நினைத்தது குரங்கு.

காகத்தின் வார்த்தைகள் மீன்களின் தன்மானத்தை சீண்டியது.

“கொஞ்சம் நிறுத்தறியா” என்றபடி மீட்டிங்கில் சேர்ந்து கொண்டது பாட்டி மீன்.

“நீ ஏன் வடக்கு கோபுரத்துல போய் கூடு கட்டுன?” என காகத்திடம் கேட்டது.

இந்த கேள்வியை காகம் எதிர்பார்க்கவில்லை.

“அங்க ஒரே சத்தமா இருக்கு. அந்த பக்கம் ப்ளைஓவர் கட்டுறாங்க. டஸ்டும், லொட்டு லொட்டுனு சவுண்டும் நாராசமா இருக்கு. இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமாம் முடிக்க. அது வரை யார் அந்த எடத்துல இருக்குறது. அதான் வடக்கு கோபுரத்துக்கு போயிட்டேன்” என்றது காகம்.

“அது மட்டும் தான் காரணமா?” என கூர்மையாக கேட்டது பாட்டி மீன்.

குரங்குக்கு பாட்டி மீன் கேட்ட கேள்வியின் சூட்சுமம் புரிந்தது. அமைதியாக காகத்தின் பதிலுக்கு காத்திருந்து.

காகம் சில நொடிகள் மெளனமாக இருந்தது.

“இல்ல, தெக்கு கோபுரம் பக்கத்துல மொபைல் டவர் இருக்கு. இஎம்எப் ரேடியேஷன் அதிகமா இருக்கு. என் ஒய்ப்புக்கு கருமுட்டை பிரச்சினை வந்துடிச்சி. இந்த சாமிய வேண்டாத நாளில்லை ஒரு வாரிசை குடுக்க சொல்லி. எங்க அப்பா அம்மாக்கும் திசையறிஞ்சு பறக்குறதுல குறைபாடு வந்துடிச்சி. பக்கத்துல எங்க அக்கா ஊருக்கு போய் பார்த்துட்டு வரதுக்கு அவ்ளோ தடுமாறுறாங்க. ரேடியேஷனால அவங்க பறக்குற திறனும் பாதிக்கப்பட்டிருக்கு. ஒரு நாள் தள்ளு வண்டி பக்கத்துல உக்காந்து சாப்பிடும் போது எப் எம் ரேடியோல மொபைல் டவர் ரேடியேஷன் பத்தி சொன்னாங்க. அப்போ தான் எனக்கும் எங்க பிரச்சினைக்கு காரணம் புரிஞ்சுது. எங்க அம்மா கூட வாஸ்து சரி இல்ல, கூட்ட கொஞ்சம் மாத்தி கட்டுனு பொலம்பிகிட்டு இருந்தாங்க” என ஆதங்கத்தை கொட்டியது காகம்.

“அப்ப வாஸ்து பிரச்சினை இல்ல, டவர்ல இருந்து வர்ற வஸ்து தான் பிரச்சினை” என டிக்ளேர் செய்தது குரங்கு.

“ஆமா, வடக்கு கோபுரம் போனப்புறம் கொஞ்சம் எக்ஸ்போஷர் கம்மியா இருக்கு” என சொன்னது காகம்.

“இஎம்எப் ரேடியேஷன்னா என்ன?” என கேட்டது குட்டி மீன்.

“எலக்ட்ரோ மேக்னடிக் பீல்டு ரேடியேஷன்” என சொன்னது காகம்.

“அது தியரி. பாதிக்கப்பட்டவங்களுக்கு இஎம்எப் ரேடியேஷன்னா, “என்னா மயிருக்கு பிரீ ரேடியேஷன்னு” அர்த்தம். கார்போரேட்டுங்க லாபம் சம்பாதிக்க கால், மெசேஜ், இன்டர்நெட்டுனு பிரீயா குடுத்து மனுஷங்களையும்,பறவைங்களையும் கொல்லுறானுங்க. இந்த பைத்தியங்க பிரீ கால்னு பொழுதுக்கும் பேசி எல்லாரையும் ரேடியேஷனுக்கு எக்ஸ்போஸ் பண்ணுறாங்க” என கோபமாய் சொன்னது குரங்கு.

“எதுக்கு வடக்கு கோபுரம், பேசாம எங்கயாவது ஊர் பக்கம் போக வேண்டியது தான? அதான் அங்க இருந்து நெறய ஆளுங்க இங்க வந்துட்டாங்களே, அங்க டவர் நெறய இருக்காது, நீங்க அங்க போய் சேபா இருக்க வேண்டியது தானே?” என விடாமல் கேட்டது பாட்டி மீன்.  

காகத்துக்கு தான் வாலண்டரியாய் வந்து வண்டியில் ஏறியது புரிந்தது.

“நீங்க என்னை ஊர விட்டே போகவா சொல்றீங்க?” என கான்டெக்ஸ்ட் புரிந்தும் வீம்பாய் கேட்டது.

“உசுருக்கே உத்தரவாதம் இல்ல, இதுல இந்த ஊர் தான் முக்கியமா?” என ஒரு போடு போட்டது பாட்டி மீன்.

கோபுரத்தில் கூடு கட்டுவது சாதாரண காரியமில்லை. பருந்து, வௌவால் என பெரிய கைககள் இருக்கும். இடம் கிடைப்பதே அரிது. காகத்துக்கு இங்கிருந்து போக மனமில்லை. உணவுக்கு பெரிதாய் அலட்டிக் கொள்ள வேண்டாம். பிரசாத பிளேட்டுகள், பொங்கல் வைப்பவர்கள் தருவது, அன்னதான கூடம் என முழு குடும்பமும் நோகாமல் வேலையை முடித்து விடும்.

ஊருக்கு போய் சேர்த்தால் ஏதாவது பழம் கொட்டை என தின்று தான் வாழ வேண்டும். பழைய கஞ்சியை கூட வீணாக்காமல் குடித்து சுத்தமாக புழக்கடையில் பாத்திரங்கள் இருக்கும். சோற்று பருக்கையை நல்ல நாளில் தான் பார்க்க முடியும். 

 “சாவு எல்லாருக்கும் ஒரு நாள் வரத்தான் போகுது. ஏதோ நல்லதா நாலு வாய் தின்னுட்டு சாகணும். ஊர்ல போய் என்னத்த சாப்புட? அமாவாசைக்கு மட்டும் தான் சோறு போடுவாங்க. மத்த நாள் பூவாவுக்கு என்ன பண்றது”? என ஓபனாய் விஷயத்தை சொல்லியது. 

 “ஏன் கேட்டேன்னா, சோறு ஒரு மேட்டர் இல்ல. உனக்கு ஒரு ரிஸ்குன்னா உன் உசுரை காப்பாத்திக்க நீ இடம் மாறுற. தெக்கு கோபுரத்திலேர்ந்து டவர விட தூரமா இருக்குற வடக்கு கோபுரத்துக்கு போயிட்ட. ஆனா எங்க நெலமைய யோசிச்சு பாரு. கொளத்துல ஒரு பிரச்சினைன்னா நாங்க எங்க போறது. இங்கயே இருந்து சாக வேண்டியதுதான். ஆத்துலயோ கடல்லியோ இருந்தோ எங்கயாவது வேற இடத்துக்கு நீந்தி போய் பொழச்சிக்குவோம்” என நிதானமாய் சொன்னது பாட்டி மீன்.

“நீ எப் எம் கேட்டு விவரமா வீடு மாறிட்ட. எங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கு? ஏதோ கோவிலுக்கு வர்றவங்க வந்து படித்தொரையில உக்காந்து கத பேசினா ஏதாவது விஷயம் தெரியும். இப்ப பாரு, பொழுதும் போகாம, நாட்டு நடப்பு எதுவும் தெரியாம மக்கு மாதிரி இருக்கோம்” என தொடர்ந்தது.

குளத்தின் நிலையை அறிந்த குரங்கு சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டது. பெருசு சொல்வது உண்மைதான் என்பது போல தலையாட்டியது.

“நீ நாலு இடத்துக்கு பறக்கிற. பொழுதுக்கும் எங்கயாவது ஏறி உக்காந்துகிட்டு பராக்கு பாக்குற. போதாக்கொறைக்கு இந்த ஜனங்க வேற கா கானு கூப்புட்டு உனக்கு சோறு போடுறாங்க. உனக்கு எங்க கஷ்டம் எப்படி புரியும்?” என பொரிந்து தள்ளியது அம்மா மீன்.

மாமியாரும் மருமகளும் செட்டு சேந்துட்டாங்க. இந்த இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என எண்ணியது காகம். 

“லன்ச் டைம் ஆச்சு. இன்னைக்கு ஒரு தெவச வீட்டுக்கு போகணும். சாயங்காலம் வர்றேன்” என சொல்லி இடத்தை காலி செய்தது காகம்.

பிறகு குரங்கும் தண்ணீரில் குதித்து நீந்தியபடியே படித்துறை பக்கம் போனது.

‘என்னடி அந்த ஆம்பள காக்கா, கொரங்கு கூட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்க?” என்றபடி முறைத்தது கிழட்டு மீன்.

“உனக்கு நல்ல சாவு வரும்னு மட்டும் நினைக்காதே. ஏலம் எடுத்தவன் அடுத்த வாரம் வருவான். நீதான் மொதல்ல மாட்ட போற. உப்புகாரம் தடவி சூடா பொறிச்சி மொடாக்குடிகாரனுக்கு சைட் டிஷ்ஷா போக போற.

செத்தப்புறமும் ஆல்கஹால்ல மெதந்து ஜீரணம் ஆகாம வாந்தியா நாறி போக போற. பொம்பளைங்கள தப்பா பேசுனவனுங்க நல்ல கதி காண மாட்டானுங்க” என திட்டி தீர்த்தது பாட்டி மீன்.

சற்று நேரம் கழித்து கையில் ஒரு பொரி பாக்கெட்டோடு வந்த குரங்கு சரக்கென்று பிரித்து நீரில் கொட்டியது.

Monkey sitting in temple

“குட்டிமா, வா வா வந்து சாப்புடு” என அழைத்தது.

குட்டி மீன் அமைதியாக இருந்தது. “போய் சாப்பிடு” என்றது பாட்டி மீன்.

பிறகு குரங்கிடம் “இந்த பொரிக்காக தான் நாங்க ஏங்கி இருக்கோம்னு நீயும் நெனைக்குறியா மாருதி?” என மெதுவாக கேட்டது.

 குரங்கு தலையை குனிந்து கொண்டது.

“உங்க கஷ்டம் எனக்கு தெரியும் மச்சிமா. என்னால உங்களுக்கு இதை தான் பண்ண முடியும். அந்த தங்கராஜு பய பூட்டு போட்டதுல இருந்து நீங்க அப்செட்டா இருக்கீங்க. பப்ளிக் யாரையும் பாக்க முடியல. டெய்லி அந்த அய்யறு மட்டும் வந்து முங்கிட்டு போறாரு. அவரு கோவணத்தையே எத்தனை நாளு தரிசிக்குறது?” என ஆறுதல் சொன்னது மாருதி.

“என்னை விடு மாருதி. நா வயசானவ. எல்லாத்தையும் பாத்துட்டேன். இந்த குட்டிங்க எல்லாம் லாக்டவுன் சமயத்துல பொறந்துதுங்க. கோவில்ல ஜன நடமாட்டமே ரெண்டு மூணு வருஷமா கெடயாது. இப்பதான் கொஞ்ச நாளா பெரியவங்க, குழந்தைங்க, புருசன் பொண்டாட்டி ஜோடிங்க எல்லாரும் வந்து படித்தொரையில உக்காந்து பேசிட்டு போறாங்க. புள்ளைங்களும் அவங்கள பாத்து விளையாடி சந்தோஷமா இருக்குங்க. இந்த தங்கராஜு கேட்ட பூட்டுனதுல இருந்து அதுங்க ரொம்ப வருத்தமா இருக்குங்க” என வேதனையை கொட்டியது பாட்டி மீன்.

“கரெக்ட்டு தான் மச்சிமா. நாங்களாவது நாலு இடம் சுத்துறோம். ஆளுங்கள பாக்குறோம். பொழுது போயிடுது. நீங்க பாவம், என்ன பண்ணுவீங்க? அந்த காக்கா வெவரம் புரியாம பேசுது. மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க” என பாசமாய் சொன்னது மாருதி.

“அந்த பய கையில பொரி வச்சிருந்தான் உங்களுக்கு குடுக்க. கேட்டு மூடி இருக்கவே போய்ட்டான். பாவம், நம்ம குட்டிமாவும் டல்லா இருந்துதா. அதான் வெளில போய் ஒரு பாக்கெட்டை தூக்கிட்டு வந்துட்டேன்” என விளக்கியது மாருதி.

“ஏன் மாருதி தூக்கிட்டு வந்த? தப்பில்லையா?’ என கேட்டது மச்சிமா.

“ஒரு தப்பும் இல்ல மச்சிமா, சாமி பேரையும் நம்ம கோவில் பேரையும் சொல்லி இவனுங்க எவ்வளவு கொள்ளையடிக்குறானுங்க. பாடாவதிப் பசங்க” என திட்டி தீர்த்தது மாருதி.

“ஏன் மாருதி, சாமி அவங்க கண்ணை குத்தாதா?” என கேட்டது குட்டி மீன்.

“கண்ணை குத்தி என்ன பிரயோஜனம்? அப்புறம் சாமி காப்பாத்துன்னு அவருகிட்ட தான் போய் நிப்பாங்க. அதனால அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி குடுப்பாரு. அப்புறம் குறைந்த பட்ச நியாயமா வேலை செய்வாங்க” என சொன்னது மாருதி.

“எப்போ இவங்களுக்கு நல்ல புத்தி குடுப்பாரு இந்த கொளுத்து கேட்ட தொறக்க?” என ஆர்வமாய் கேட்டது குட்டி மீன்.

“அது சாமிக்கு தான் தெரியும்” என முடித்தது மாருதி.

Tamil novel – Jiteswari – Part 3/21

A woman engineer

ஜிதேஸ்வரி மெக்கானிகல் என்ஜினீயர். திருமணத்திற்கு முன்பு மும்பையில் ஐந்து வருடம் பணியில் இருந்தாள்.  கணவர் ராஜு எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். பாண்டியில் ஈபி ஆபீசில் நிரந்தர வேலையில் இருக்கிறார். ராஜுவின் வரன் வந்தபோது ஜிதேஸ்வரி தனது வருங்கால வேலை வாய்ப்புகளை பற்றி யோசித்தாள்.

ஜிதேஸ்வரி ஒரு சர்வதேச எரிவாயு நிறுவனத்தின் மும்பை கிளையில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். தமிழகத்தில் அது போன்ற நிறுவனங்கள் மிக குறைவு. பாண்டியிலோ ஒன்று கூட கிடையாது.

ஜித்து அவள் பெற்றோரிடம் இந்த வரனை தவிர்க்குமாறு சொல்லி விட்டாள்.

ராஜுவின் குடும்பம் கற்பகத்தின் உறவு வழியில் தூரத்து சொந்தம். விசாரித்ததில் நல்ல குடும்பம் என செய்தி வந்தது. ஜிதேஸ்வரியின் தந்தை இந்த வரனை முடிப்பதில் குறியாய் இருந்தார். நல்ல பையன், நல்ல வேலை மட்டுமல்லாமல் அடிக்கடி போய் பார்க்க ஏதுவாக பாண்டியிலேயே சம்பந்தம் கிடைத்ததில் அவருக்கு பரம சந்தோஷம்.

இது ஊருக்கும் வீட்டாருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவருக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது. ஜிதேஸ்வரி செய்வது ஒரு நுட்பமான வேலை. நல்ல பதவி இந்த வயதிலேயே. அவர் பணி ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தை விட இப்போது அவர் மகள் வாங்குவது அதிகம். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக இன்னும் நல்ல ஊதியம் கிடைக்கும். மேலும் பல நாடுகளில் பணி புரிய வாய்ப்பும் கிடைக்கும். இங்கு தான் அவரின் கவலை நிலைகொண்டது. இந்த ஆண்டு வரன் அமையாவிடில் அடுத்து வரும் ஆண்டுகளில் மகளின் தகுதிக்கேற்ப வரன் தேடுவது மிக சவாலான விஷயமாக இருக்கும். அவர்கள் சார்ந்த சமூகத்தில் அந்த அளவு நிலையில் இருப்பவர்கள் மிகவும் அரிதாக இருந்தது. அப்படி இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வரன்களாக இருந்தார்கள்.

அவருக்கு மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப இஷ்டமில்லை. அதனால் எப்படியாவது இந்த வரன் அமைய வேண்டும் என்று நினைத்தார்.

ராஜுவின் வரனை முடிப்பதில் அவளின் பெற்றோர்கள் மும்முரமாக இருந்தார்கள். ஜிதேஸ்வரிக்கும் ராஜூவை பிடித்திருந்தது. ஆனால் சிக்கல் ராஜுவின் அரசாங்க வேலையும் ஊரும் தான். 

மும்பையில் வேலை பார்க்க விருப்பமா என கேட்டாள் ஜிதேஸ்வரி. ராஜூவை விட அவர் தந்தை இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தார். மகன் எப்போதும் பாண்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம்.

இரண்டு தரப்பும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். சில மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜிதேஸ்வரியின் மீது அழுத்தம் அதிகமானது. ஜிதேஸ்வரி அவள் வேலை செய்யும் கம்பெனியில் சென்னைக்கு மாற்றலுக்கு விசாரித்தாள்.

இடமாற்றல் சாத்தியம் என சொன்னார்கள். ஆனால் அடுத்த பணி உயர்வின் போது மும்பையில் இருக்க வேண்டும். இப்போது இருக்கும் நிலையிலேயே இன்னும் சில ஆண்டுகள் சென்னையில் தொடரலாம் என ஒரு சிக்கலான சூழல். இந்த மாற்றம் முழுமையான பலனளிக்காது என தோன்றியது அவளுக்கு. அப்போதும் ராஜு சென்னைக்கு மாற்றலாகி வரப்போவது இல்லை. வார இறுதி நாட்களில் யாராவது ஒருவர் போய் மற்றொருவரை சந்திக்கும் நிலை.

ராஜுவின் தந்தைக்கு இந்த தாமதம் எரிச்சலூட்டியது. ஒரு வேளை ராஜு மனம் மாறி மும்பை போவதாக முடிவெடுத்தால், அதற்கு பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு வருவது அரிதானதாக இருக்கும். அதனால் பேசாமல் இந்த பெண்ணை விட்டுவிட்டு வேறு வரன் பார்க்கலாம் என முடிவெடுத்தார். இரவு உணவின் போது ராஜுவிடம் இது பற்றி பேசினார்.

“இல்லப்பா, ஜிதேஸ்வரி முடிவெடுக்கட்டும். நாம வெயிட் பண்ணலாம்” என சுருக்குமாய் முடித்தான்.

இந்த பதிலில் ராஜுவின் விருப்பம் வெளிப்படையாக தெரிந்தது. அதனால் இதற்கு மேலும் காத்திருப்பது ஆபத்து என உணர்ந்தார். அடுத்த நாள் ஜிதேஸ்வரியின் தந்தையிடம் நேரில் போய் அவர் கவலையை பகிர்ந்து கொண்டார்.

இரு வீட்டு பெரியோர்களும் தங்கள் பிள்ளைகள் வேறு ஊரில் வசிப்பதை விரும்பவில்லை. ராஜுவின் அப்பா இவ்வளவு தூரம் தானாக முன்வந்து பேசியது பெண் வீட்டாருக்கு பிடித்திருந்தது. ராஜு உறுதியாக இருப்பது இன்னும் சந்தோஷமாக இருந்தது.

மீண்டும் பெண்ணிடம் பேசி விட்டு இந்த வாரத்திற்குள் முடுவு சொல்வதாக சொல்லி அனுப்பி வைத்தார்கள். அந்த வார இறுதியில் மும்பை போய் மகள் வீட்டில் இறங்கினார்கள்.

இந்த விஷயத்திற்காக அவர்கள் இவ்வளவு தொலைவு வந்தது நிலைமையின் வீரியத்தை அவளுக்கு உணர்த்தியது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முழுதாக இந்த வரனை பற்றி விவாதித்தார்கள். சென்னை இட மாற்றலின் விளைவுகளை விவரித்தாள் ஜிதேஸ்வரி. அவள் ஆபீசில் விசாரித்ததே அவர்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. மேலும் ஒரு வாரம் தங்கி இருந்து இன்னும் தீவிரமாக அவளை கரைக்க ஆரம்பித்தார்கள். பத்து நாள் கடந்த பிறகு சென்னை மாற்றலுக்கு ஜிதேஸ்வரி விண்ணப்பித்தாள். அடுத்த ஒரு மாதத்தில் சென்னை வந்து சேர, திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பிறகு இருபதே நாட்களில் திருமணமும் நல்ல படியாக நடந்தது.

A traditional Tamil marriage ceremony

Tamil novel – Jiteswari – Part 1/21

A retired woman enjoying the morning with coffee

அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.

உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.

சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.

எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.

மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.

a senior attending phone call

“சங்குமா, எழுந்துட்டீங்களா? நா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றாள்.

“இல்ல ஜித்து, சொல்லு, எப்ப வர?” என்றார் சங்குபுஷ்பம்.

“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.

“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.

“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.

“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.

“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.

“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.

டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.

லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.

“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.

“அவங்க கிட்டயும், பசங்க கிட்டயும் காலைல ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ஜித்து போன் பண்ணி சொல்லிட்டாளாம்” என்றாள் லக்ஷ்மி.

வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.

லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.

ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.

ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர்
சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.

கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.

கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.

ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.

கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.

சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.

சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.

“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.

சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 4/4

சில மாதங்கள் ஆனது. ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பிய சிவா கேட்டான் “என்னம்மா? இன்னைக்கு பச்சை கலர் கேசரி செஞ்சுருக்க, என்ன ஸ்பெஷல்?”

“அம்மா பாஸாயிட்டாங்கன்னா! அதான் ஜாலி மூடுல இருக்காங்க” என சொன்னது சின்ன வாண்டு தேவசேனா.

“ஆமாடா, மத்தியானம் தான் ரிசல்ட் வந்தது. அம்மா டிகிரி வாங்கிட்டேன்!!” என உற்சாகமாக சொன்னாள் தாரா. தபால் வழியில் யோகா இளங்கலை முடித்து இன்று பட்டம் வாங்கியிருக்கிறாள்.

சிவா ஆறாம் வகுப்பு மாணவன். தேவசேனா ஒன்றாம் வகுப்பு. தாராவின் கணவர் மேகநாதன் ஆட்டோ ஓட்டுநர். பகுதி நேரமாக சுவர் பெயிண்டிங் வேலையும் செய்வார்.

“மல்லிகை மலர் பறிக்க, மான் போல துள்ளி வா!

அல்லி மலர் பறிக்க, அன்னநடை போட்டு வா!

டிகிரி நீயும் வாங்க, டைகராக படித்து வா!!  என சிவா குஷியாக பாட ஆரம்பித்தான்.

“அப்போ, அம்மா டைகரா?” என தேவசேனா புலி போல காலை மடக்கி நடந்து வந்து பயமுறுத்த, மூவரும் சேர்ந்து கொல்லென சிரித்தார்கள். சற்று நேரத்தில் மேகநாதனும் வர வீடு களை கட்டியது.

 நால்வரும் கிளம்பி கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்துவிட்டு கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.

பால்காரர் குணவேந்தன் அந்த பக்கம் வந்தார்.

“என்ன மேகா, தாரா பாஸாயிடுச்சுனு எங்க வீட்டம்மா சொல்லுச்சு! நீ எப்போ படிக்க போற?” என்றார்.

மேகநாதன் தலையை திருப்பி கொள்ள, தாராவுக்கு சங்கடமாக இருந்தது.

“குணா மாமா, அத்தை குடிக்குறது இல்லை, நீங்க எப்போ குடியை விட போறீங்க?” என ஒரே போடாக கேட்டான் சிவா.

“அப்பா, அவர் வீட்டு செவத்துல போய் குடி குடியை கெடுக்கும்னு எழுதிட்டு வாப்பா” என்றது சேனா.

குணவேந்தன் குடிவேந்தனாக இருப்பதை குழந்தைகள் சொல்ல, மெதுவாக நகர்ந்தார் அவர்.

“அம்மா, நாங்க போய் யானையை பாத்துட்டு வரோம்” என சொல்லி குழந்தைகள் எழுந்து சென்றார்கள்.

“இன்னைக்கு நா டிகிரி பாஸ் பண்ணிட்டேன்னு கலாவதி டீச்சர் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. வெண்மணி அக்கா கிட்ட காசு குடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பி கேக் வாங்கிட்டு வர சொல்லி எல்லா டீச்சர்ஸுக்கும் என்னை குடுக்க சொன்னாங்க. நானே வாங்கியிருக்கணும், எனக்கு தோணலைங்க” என்றாள் தாரா.

“கரெக்ட்டு தான், இன்னொரு நாள் நீ எல்லாருக்கும் நம்ம சார்பா ஸ்வீட் குடுத்துடு” என்றார் மேகா.

“ஷூ கம்பெனிக்காரங்க சில டாக்குமெண்ட் கேட்டாங்கன்னு டீச்சர் சொன்னாங்க. நாளைக்கு முடிவு பண்ணி சொல்றேன்னு சொல்லி இருக்கேன். ஏதோ ஒரு பயம் மனசுல இருக்கு, ஆனா என்னன்னு சொல்ல தெரியல” என்றாள் தாரா.

“உன்னால முடியும் தாரா, இந்த வேலையில சேரும்போது எவ்வளவு யோசிச்ச? எப்படி இவ்ளோ சின்ன பசங்கள பாத்துகிறதுன்னு? ஆனா இந்த பத்து வருஷத்துல நீ எவ்ளோ இம்ப்ரூவ் ஆகி இருக்கே! இன்னைக்கு அந்த பயம் இருந்த இடம் தெரியாம போயிடுச்சி. அது போல தான் இப்பவும். ஒரு விஷயத்தை புதுசா ஆரம்பிக்கும் போது யாருமே அதுல எக்ஸ்பர்ட் கிடையாது. அதனால முடியும்னு நெனச்சி துணிஞ்சு இறங்கு” என ஊக்கம் கொடுத்தார் மேகா.

“சரிங்க, யோசிக்கிறேன்” என தாரா சொல்ல “வா கெளம்பலாம்” என்றார் மேகா.

அவர் ஆட்டோவை ஓட்ட, மற்ற மூவரும் பின் சீட்டில் உட்கார்ந்தார்கள்.

கோவிலை ஒட்டிய மெயின் ரோட்டில் கல்யாண ஊர்வலம் மெதுவாக போய் கொண்டிருந்தது.

ஆட்டோ டிராபிக்கில் நிற்க, “அம்மா, போன் குடு, எனக்கு போரடிக்குது” என கேட்டது சேனா.

“ஏன், உன்னால கொஞ்ச நேரம் சும்மா இருக்க முடியாதா?” என திட்டினான் சிவா.

சேனா கோபித்துக் கொண்டு மூஞ்சை திருப்பிக் கொண்டது.

தாரா என்ன செய்வது என யோசிக்கும் போது சேனா கையில் இருந்த வாட்டர் பாட்டில் ஒரு ஐடியாவை கொடுத்தது.

“சேனா, இந்த பாட்டிலை குடு, ஒரு கேம் சொல்லி தரேன்” என வாங்கி அதை அவர்கள் இருவரின் தொடைகளுக்கே நடுவே நிற்க வைத்தாள்.

playtime in Auto

“இதை கார் கியரா நெனச்சுக்கோ. அப்பா வேண்டிய நிறுத்தினா, நியூட்ரல்ல வை. மெதுவா ஸ்டார்ட் பண்ணா இடது பக்கம் போய், மேல் பக்கம் சாய்ச்சு வை. இன்னும் கொஞ்சம் ஸ்பீட் எடுத்தா செகண்ட் கியருக்கு அப்படியே பின்னாடி வா. ஒரே சீரா வண்டி ஓடுச்சுன்னா, கொஞ்சம் வலது பக்கம் வந்து முன்னாடி போ” என விளக்கினாள்.

சேனாவும் சிவாவும்  பயங்கர குஷியாகிவிட்டார்கள். அந்த டிராபிக் ஜாம் அவர்கள் பல முறை கியர் மாற்றி விளையாடுவதற்கு ஏதுவாக இருந்தது.

“அப்பா, என்கிட்ட சொல்லாமா ஏம்பா ஸ்பீடு எடுத்த? நான் இன்னும் பர்ஸ்ட் கியர்லயே இருக்கேன்” என அவரை செல்லமாக திட்டியபடியே அவசரமாக பாட்டிலை நகர்த்தினார்கள்.

மேகநாதனும் அவர்கள் விளையாட ஏதுவாக போக்கு காட்டி ஓட்டினார். அரை மணி நேரம் ஆனது வீடு வந்து சேர்வதற்க்கு.

“செம சேனா, அருமையா கார் ஓட்டி எங்களை எல்லாம் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டே!” என பாராட்டினான் சிவா.

“அந்த பார்மசி சந்துல நான் சரியா கியர் போடலண்ணா. நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்கிறேன்” என தைரியமாக சொன்னது.

“பாத்தியா தாரா, இந்த சின்ன பொண்ணுக்கு இருக்குற நம்பிக்கையை? விளையாட்டா ஆரம்பிச்ச விஷயம், இப்போ அவளை ஒரு தேர்ந்த ட்ரைவரா உணர வெச்சிருக்கு. அவ கண்ணுல பயமோ, புது விஷயத்தை பழகுறோம் என்ற என்னமோ துளியும் இல்லை. தெரியலேன்னா வெளிப்படையா அத சொல்லி கத்துக்குறா. தெரியலேன்னு கூச்சப்படல” என மெதுவாக சொன்னார் மேகநாதன்.

தாராவுக்கு பொட்டில் அடித்தாற் போல தெளிவு ஏற்பட்டது.

“தேங்க்ஸுங்க, எனக்கு இப்போ புரிஞ்சிடிச்சு, நா ஹேண்டில் பண்ணிக்குறேன்” என சிரித்தாள் தாரா.

ஆறு மாதம் ஆனது. ஷூ கம்பெனி ப்ராஜெக்ட்டுக்காக, பயிற்சி வகுப்புகளை நேர்த்தியாக நடத்தி கொண்டிருந்தாள் தாரா.

மேகநாதன் இரண்டாவது வண்டி வாங்கி வீட்டின் முன் நிறுத்தினார்.

A new vehicle celebration

“ஹை, நம்ம வீட்டுக்கு குட்டி யானை வந்துடுச்சி!” என சிவா சந்தோஷமாக சொல்ல, “நா இதுக்கு பேரு வெச்சுட்டேன்!” என சொன்னது சேனா.

“என்ன பேருடி?” என ஆர்வமாக கேட்டான் சிவா.

“ரங்கு” என சொல்லி சிரித்தது சேனா.