Tamil novel – OTP – Part 17/20

A senior man is thinking about a tricky situation

ரத்தினம் அண்ணனை கரைத்து முடிக்கும் போது, சங்கு புஷ்பமும் நேசப்பாவின் நிலையை சுருக்கமாக குமரஜோதிக்கு செய்தியாய் அனுப்பினார்.

பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த அவர் சங்கு புஷ்பம் சொல்வதை செய்வதாக ஒத்துக்கொண்டார்.

நன்றாக சாய்ந்து ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தார் ரத்தினம். “சார் அண்ணன் மேற்கொண்டு ஆக வேண்டியதை பாக்க சொல்லிட்டார். ரெண்டு எல் பிக்ஸ் பண்ண சொன்னாரு” என ஒரு எல்லை ஆட்டையைப் போட்டார்.

“சரிங்க பேசி பாக்குறேன்” என போனை எடுத்தார் சங்கு புஷ்பம். ஒரு பேப்பரில் “சித்தா டாக்டர் நேசமணி நம்பர்” என கொட்டையாக எழுதி கீழே நம்பரை எழுதினார்.

“நேஸ், இந்த ஸ்கிரீன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க” என அழைப்பு விடுத்தார்.

நேசப்பா எழுந்து போய் திரையை சரி செய்தார். இது ரத்தினம் காதால் கேட்டு கண்ணால் பார்த்தது.

நேசப்பா எழுந்தவுடன் சற்றே கண்ணைக் காட்டி பேப்பரை மேஜையில் நகர்த்தி வைத்தார் சங்கு புஷ்பம். திரையை சரி செய்து திரும்பும் போது பேப்பரை கவனித்தவர் அடுத்த ஓவரை வீச ஆரம்பித்தார்.

“நம்ம சித்தா டாக்டரு உங்களுக்கு நல்ல பழக்கமா? என கொக்கியைப் போட்டார் நேசப்பா.

என் வானத்தில் வரும் வானவில்லில் ஏழு நிறமில்லை, எழுபது நிறம் என்ற ரேஞ்சில் மிதப்பமாக இருந்தார் ரத்தினம்.

“இல்லீங்க. நாங்க கட்சிக்கு ரொம்ப விசுவாசமானவங்க. மாற்று கட்சிக்காரங்க கூட தொடர்பு வச்சிக்க மாட்டோம்” என பெருமையாக சொன்னார்.

“நாங்கண்ணா யாரு” என்றார் நேசப்பா.

“நானு, அண்ணன் அப்புறம் கொஞ்சம் முக்கியஸ்தங்க எல்லாருந்தான்” என அவர் அந்தஸ்த்தை அவரே கூட்டிக்கொண்டார்.

“இல்ல பொது வாழ்க்கைல இருக்கீங்க, நாலு நல்லது கெட்டதுல சந்திப்பீங்க. அதான் நேர்ல இல்ல போன்ல பேசிக்குவீங்களா”? என நுணுக்கமான ஒரு கேள்வியை போட்டார்.

சங்கு புஷ்பம் காத்திருந்தது இந்த கேள்விக்குத் தான்.

“இல்லேங்க. போன் தொடர்பு எதுவும் கிடையாதுங்க. நேர்ல பாத்தாலும் வணக்கத்தோடு முடிச்சுக்குவோம். போன்ல நாம ஒண்ணு சொல்ல போய் அத ரெக்கார்டு பண்ணி திரிச்சி போடுறானுங்க மொள்ளமாரி பசங்க. அதனால நம்பரெல்லாம் அநாவசியமா வாங்குறதும் இல்ல குடுக்குறதும் இல்ல” என ரத்தினம் விஸ்க்கி போட்டு டீ ஆற்றினார் நேசப்பாவிடம்.

சங்கு புஷ்பம் காதில் தேனாய் பாய்ந்தது அவர் பதில். சரி கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என தைரியம் வந்தது.

கோமதியின் மெசேஜ் போனில் வர உன்னிப்பாக பார்த்தார் சங்குபுஷ்பம்.

ரத்தினம் கத்தையாக பணத்தை எடுத்து எண்ணி அதில் கொஞ்சம் சங்குபுஷ்பத்திடம் கொடுத்து ஏதோ சொல்வது தெளிவாக இருந்தது. நல்லது என எண்ணிக்கொண்டு கோமதிக்கு ஒரு நன்றியை அனுப்பினார்.

தோராயமாக அவர் ட்ரேஷரு ட்ரோவில் எவ்வளவு இருக்கும் என அந்த வீடியோவிலிருந்து தெரிந்தது.

குமரஜோதிக்கு அவசர செய்தி அனுப்பினார் சங்கு புஷ்பம்.

“நலத்திட்டம் காத்திருக்கிறது. அடையாள அட்டை நகலுடன் வரவும்” என்று.

குமரஜோதிக்கு பரவசம் தாங்கவில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு விரைவாக கிளம்பினார்.

“சார் அவங்க ரெண்டு எல்லுக்கு ஓகே சொல்லிட்டாங்க. ஆனா ஒரு கண்டிஷன். ஒரு எல் இப்பவே தர சொல்றாங்க. ஒரு டாக்குமெண்ட் காப்பி உங்க கிட்ட இப்ப தருவாங்க” என கடையை விரித்தார் சங்கு புஷ்பம்.

“இப்போ அவ்ளோ இல்லீங்களே, ஒரு ரெண்டு நாள் கழிச்சு தரவா” என தவிர்க்கப் பார்த்தார் ரத்தினம்.

“சார் அது நமக்கு ரொம்ப ரிஸ்க்கு. அவங்களுக்கு இப்ப விஷயம் தெரிஞ்சுருச்சு. நீங்க ஒடனே தரேல்லண்ணே நேரா சித்தா டாக்டரு கிட்ட போய் நிப்பாங்க. அப்புறம் இந்த டீலுக்கு நாங்க பொறுப்பு இல்ல. அவர் இந்த பார்ட்டி எலெக்சன்ல நிக்காம இருக்க கூட குடுக்குறேனு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என ரத்தினத்தின் அடி வயிற்றில் ஏற்கெனவே குத்திய இடத்திற்குப் பக்கத்தில் கொஞ்சம் புளியை கரைத்தார் சங்கு புஷ்பம்.

ஜாடை மாடையாய் இவர்களும் தங்களின் கட்சி தாவும் எண்ணத்தையும், ரத்தினத்திற்க்கு அது உண்டாக்கும் அபாயத்தையம் அவர் மூளையில் திணித்தார்கள்.

செத்தாண்டா சேகரு என நிமிர்ந்து உட்கார்ந்தார் நேசமணி. மனைவியிடம் இருந்து குச்சியை இவர் வாங்கிக்கொண்டு ரிலேவில் ஓட ஆரம்பித்தார்.

இப்படி ஒரு சூழ்நிலை வரும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ரத்தினம்.

“சார் எல்லாரும் எங்கள மாதிரி இருக்க மாட்டாங்க. நாங்க டீல் முடியுற வரை ஒரு பைசா அட்வான்ஸ் வாங்க மாட்டோம். ஆனா மத்தவங்க அப்படி கிடையாது. இது ஒரு சிக்கலான விஷயம். காதும் காதும் வெச்ச மாதிரி முடிக்கணும். ரொம்ப இழுக்கக் கூடாது. விஷயம் சித்தா டாக்டருக்கு தெரிஞ்ச நெலமை நம்ம கை மீறி போய்டும்” சங்கு கரைத்த புளியில் சற்று தூக்கலாக காரத்தை கொட்டினார் நேசப்பா.

குச்சி இப்போது சங்கு புஷ்பம் கையில். “சார் இதெல்லாம் ஆரம்பிச்சா ஸ்லோ பண்ண கூடாது. எங்க டீல்ல பாதி அமௌண்ட்டுக்கு படிஞ்சிருக்கு.அதுவே உங்களுக்கு லக்கு. மார்க்கெட் இப்போ ரொம்ப ஸ்பீடு சார். சித்தாக்கு ஒரு போன அவன் போட்டா நம்ம உழைப்பெல்லாம் வேஸ்ட்டு சார்” என்றார்.

“நீங்க வேற அண்ணண் கிட்ட ரெண்டு பேர பிக்ஸ் பண்ணிட்டேன்னு சொல்லிட்டீங்க. அவரும் அமௌண்ட்டுக்கு சரினு சொல்லிட்டாரு. இப்ப நீங்க வெறும் கையோட போய் டீல் முடியலன்னு சொல்ல முடியுமா?” என இன்னொரு பாயிண்ட்டை போட்டார் நேசப்பா.

ரத்தினத்திற்கு காதில் விழுந்த சொற்களில் பாதிதான் மூளையை எட்டியிருந்தது.

மீதி காற்றில் கரைந்து கோபால் சார் வீட்டு பக்கம் போனது. திடீரென நடந்த இந்த நிகழ்வுகளை கோர்வையாக அவரால் உள் வாங்க இயலவில்லை.

“அமௌண்ட்டு கொஞ்சம் ஜாஸ்தி சார் அட்வான்ஸுக்கு. ஒரு பத்தாயிரம்னா பரவால்ல” என சொன்னார் ரத்தினம்.

“சார் அவங்க இங்கேருந்து டாக்டரு கிட்ட போனா அவரு அஞ்சு லட்சத்தை தூக்கி லட்டு மாறி குடுத்து அவங்கள ஆப் பண்ணிடுவாரு” என மீட்டரை ஏற்றினார் நேசப்பா.

யோசித்தவரை ரத்தினத்திற்கு ஒரு எல் உடனே கொடுப்பது தான் புத்திசாலித்தனம் என தோன்றியது.

“சரி சார். ஆனா நா குடுக்குறதுக்கு என்ன ப்ரூப்பு” என விளக்கமாய் கேட்டார் ரத்தினம்.

“ஒரு ப்ரூப்பும் கெடயாது. எதனா இருந்தா பின்னாடி வில்லங்கமாயிடும்” என காட்டமாக சொன்னார் சங்கு புஷ்பம்.

இந்த அம்மா பல ஜென்மமா இந்த தொழில்ல இருக்கும் போல என மலைத்துப் போனார் ரத்தினம்.

“நம்பிக்கை தான் இந்த மாதிரி டீலிங்க்ல முக்கியம். நாளைக்கு உங்கள பகச்சிக்கிட்டு இந்த ஏரியால அவங்களால நடமாட முடியுமா?” என லேசாக ரத்தினத்தின் ஈகோவை முத்தமிட்டார் நேசப்பா.

அந்த முத்தம் ரத்தினத்தை கிறக்கமாக்கியது. “அது எப்படி சார் நடமாட முடியும்? அண்ணன் நல்லவங்களுக்கு நல்லவர். கெட்டவங்களுக்கு கேடு கெட்டவர்” என பன்ச் டயலாக்கை போட்டார் ரத்தினம்.

நாம நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என யோசித்தார் நேசப்பா.

“சார் உங்களுக்கு சரினு தோணுச்சுன்னா குடுங்க, இல்லேன்னா வேணாம்” என பந்தை அவர் பக்கமே போட்டார் சங்கு புஷ்பம்.

நாலு ஆங்கிள்ல நல்லா யோசித்து கொடுக்கலாம் என முடிவெடுத்தார் ரத்தினம்.

அவரே போய் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான ரெண்டாயிரத்தையும் கொடுத்தார் சங்கு புஷ்பத்திடம்.

“மூணு பத்து வரை உங்க டைம்” என்றார் சங்கு புஷ்பம்.

Tamil novel – OTP – Part 16/20

A senior couple handling a politician

நேசிப்பாவிற்க்கு காஃபி குடிக்க வேண்டும் போல இருந்தது. இது இன்னும் எவ்வளவு நேரம் போகும் எனவும் தெரியவில்லை.

சங்கு சிஸ்டத்திலும் போனிலும் மாறி மாறி வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு பாவமாக இருந்தது. மிகவும் காயப்பட்டு போயிருக்கிறாள். அவள் இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்ததே கிடையாது. எப்பொழுதும் சிரிப்பும் பேச்சுமாக இருப்பவள்.

ரத்தினம் உள்ளே வந்ததிலிருந்து அவள் உடல் மொழி முழுதாய் மாறிப் போயிருக்கிறது. பெரும்பாலும் சிஸ்டத்தில் இருந்தாலும் நம் மீது ஒரு கண்ணும் காதும் வைத்திருக்கிறாள். எந்த சூழ்நிலையிலும் அவள் பின் வாங்கவே இல்லை என மனைவியை நினைத்து பூரித்துப் போனார் நேசப்பா.

சங்க மேட்டரை மண்டையில் ஊறப்போட்டு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் ரத்தினம். அவர் முன் இருந்த காலி கோப்பையை ஓரக் கண்ணால் பார்த்து நேசப்பாவிடம் சிக்னல் கொடுத்தார் சங்கு புஷ்பம்.

நாக்கை சுழட்டி கன்னத்தில் துருத்தியபடி முன் மண்டையை லேசாய் ஆட்டினார் நேசப்பா.

பிறகு சற்றே யோசித்தவராக “டூ பில்டர் காஃபி வித்தவுட் சுகர்” என கோபால் சாருக்கு செய்தியனுப்பினார் சங்கு புஷ்பம்.

“சார் பன்னெண்டு நாப்பது. இன்னும் உங்களுக்கு பத்து நிமிஷம் இருக்கு” என்றார் சங்குபுஷ்பம்.

இன்னொருமுறை அவமானப்பட ரத்தினம் தயாராக இல்லை. பேசாமல் கிளம்பி போய் விடலாம் என தோன்றியது.

இன்னும் பத்து நிமிஷம் இருக்கில்ல மேடம், சொல்றேன்” என சொன்னார் ரத்தினம்.

கறார் காட்டுகிறாராம் என மனதிற்குள் இடித்துக் கொண்டார் சங்கு புஷ்பம். 

அடுத்த செய்தியை தண்ணீர் கேன் குமரஜோதிக்கு போட்டார்.

“நேசமணி உங்க மனைவியா” என்று அனுப்பினார்.

ஆமாம் மேடம். என்ன விஷயம் என பதில் வந்தது உடனே.

“உங்க ஹெல்ப் வேணும். முக்கியமான விஷயம். நேசமணியோட அடையாள அட்டை நகலை என் போனுக்கு அனுப்புங்க. டூ ஹவர்ஸ்ல கால் பண்றேன்.

வீட்டுக்கு அவங்களோட வாங்க. மத்தத நேர்ல பேசிக்கலாம்” என்றார் சங்கு புஷ்பம்.

மேடம் கேட்டா சரியான விஷயமாத்தான் இருக்கும். ஏதாவது மகளிர் நலத் திட்டமா இல்லை மகளிர் லோன் விஷயமா இருக்குமா என யோசித்தார்.

ஓகே மேடம் என பதில் வந்தது.

இரண்டு நிமிடங்களில் கணவர் நேசமணி மற்றும் இல்லத்தரசி நேசமணியின் அடையாள அட்டை ப்ரிண்ட்டரில் வெளியே வந்தது“.

இந்த ஒரு கேண்டிடேட்டுக்காக அஞ்சு எல் அண்ணன் ஓகே பண்ணிட்டார். இந்த அம்மா இன்னொரு ஆள ரெடி பண்ணலாம்னு சொல்லுது. இவர்களுக்கே நாலு எல் பேசியாச்சு. இந்த டீலிங்கில் தனக்கு என்ன மிஞ்சும் என கணக்குப் போட்டார் ரத்தினம்.

டாக்டர் நேசமணி வாங்க போறது முக்காவாசி படிச்சவங்க ஓட்டு. இந்த சொசைட்டிலயே ஆயிரத்து ஐநூறு ஒட்டு இருக்கும். இவரு ஒரு ஆயிரமாவது வாங்கிடுவாரு. அப்புறம் இன்னொரு நேசமணி எவ்வளவு ஓட்டு வாங்குறாரோ அது போனஸ்.

அந்த பக்கம் அண்ணன் கொஞ்சம் ஓட்டுக்கு செலவு பண்ணுவார். எப்படியும் ஒரு ஆயிரத்து இருநூறாவது ஓட்டாவது இந்த டீலிங்கால அண்ணிக்கு லாபம். அதுவும் ரெண்டு கேண்டிடேட்டு பிக்ஸ் பண்ணா தனக்கு ரொம்ப கெத்தா இருக்கும் என நினைத்தார்.

டோர் பெல் அடித்தது. கோபால் சார் வீட்டு பணிப்பெண்.

நேசப்பா போய் ட்ரேவை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லி அனுப்பினார்.

ரெண்டு காஃபி இருந்தது. மூவரும் சேர்ந்து ஒரு டிரிங்க்ஸ் பிரேக் எடுத்தார்கள்.

பிரேக் முடிந்து அடுத்த ரெண்டாயிரத்தை கொடுத்தார் ரத்தினம்.

சார் ஒண்ணு பத்து இப்போ. ரெண்டு பத்து வரை உங்க டைம்” என்றார் சங்கு புஷ்பம். எத்தனை கோடி சம்பாதித்தாலும் இந்த அம்மா திருந்தாது என நினைத்தார் ரத்தினம்.

“என்ன சார் சொல்றீங்க. இன்னொரு பார்ட்டி டீலிங் வேணுமா வேணாமா?” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.

“கெடச்சா நல்லது மேடம். ஆனா உங்களுக்கு சொன்ன பட்ஜெட் அவங்களுக்கு தர முடியாது” என நிலைமையை சொன்னார் ரத்தினம்.

“எவ்வளவு முடியும்” என விசாரித்தார் சங்கு புஷ்பம்.

“ஒரு அம்பதாயிரம்” என நிறுத்தினார் ரத்தினம்.

“கஷ்டம் சார். படியாது” அதிகாரமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

ரெண்டாவது நேசமணிய பிக்ஸ் பண்ணிட்டா தரமான சம்பவமா இருக்கும் கட்சில. ஒரு பய நம்ம கிட்ட வர முடியாது. ஆனால் பணம் கையை கடித்தது.

“உங்க அண்ணன்கிட்ட பேசுங்க சார். எங்க ஒருத்தருக்கு தான அமௌன்ட் சொல்லி இருப்பாரு. இப்போ ரெண்டாவது நேசமணிய பத்தி சொல்லி கன்வின்ஸ் பண்ணுங்க. நீங்களா போனா ரேட்டும் கூட, மடங்கவும் மாட்டாங்க” என தூபமிட்டார் சங்கு புஷ்பம்.

இந்த அம்மா என்ன பக்கத்துல இருந்து பாத்தா மாதிரி சொல்லுது.

“யாருங்க அவுங்க? உங்களுக்கு மட்டும் எப்படி ஒத்துப்பாங்க?” என கேட்ட கேள்வியையே திரும்ப கேட்டார் ரத்தினம்.

“சார் அதெல்லாம் எங்க தொழில் மேட்டர் சார். எல்லாத்தயும் வெளில சொல்ல முடியாது” என கண்டிப்பான குரலில் சொன்னார் சங்கு புஷ்பம்.

நாம அப்படி என்ன தொழில் பண்றோம் என மனைவியை பார்த்து புருவம் உயர்த்தினார் நேசப்பா.

அந்த பார்வைக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. சங்கு சிஸ்டத்தை விட்டு எங்கும் திரும்பவில்லை.

“உங்க டீல் மட்டும் சொல்லுங்க சார். அவங்கள நா பேசிக்குறேன்” என்றார் ரத்தினம் நேசப்பாவிடம்.

“ஒன்பது எட்டு ஒன்பது நாலு” என ஆரம்பித்து பத்து இலக்கத்தையும் சொல்லி முடித்தார் சங்கு புஷ்பம்.

“இதான உங்க நம்பர்” எனக் கேட்டார்.

ரத்தினத்தோடு சேர்ந்து நேசப்பாவும் திகிலானார்.

“உங்களுக்கு என் நம்பர் எப்படி மேடம் தெரியும்” என பீதியாக கேட்டார் ரத்தினம்.

“அதான் சொன்னேனே சார். எங்க தொழில்னு” பிடி கொடுக்காமல் சொன்னார் சங்கு புஷ்பம்.

சங்கு ஏன் யாரோ ஒருவருக்கு ஒற்றைக்காலில் நிற்கிறாள் என யோசித்தார் நேசப்பா.

“சரி சார். வேணாம்னா உங்க இஷ்டம். நீங்க அலைஞ்சு திரிஞ்சு கண்டு பிடிங்க. ஆனா அவங்க உங்களுக்கு ஒத்துக்க மாட்டாங்க. இப்ப பாருங்க, மேடம் உக்காந்த இடத்துலயே டீலிங்கை முடிச்சிட்டாங்க” என சங்கு புஷ்பத்தின் கொடியை உயர்த்தினார் நேசப்பா.

காபி இப்போது தான் வேலை செய்கிறது என் நினைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

“அவங்க ஒத்துக்கிட்டாங்களா மேடம்” என வாயை பிளந்தார் ரத்தினம்.

“நா என்ன ஜோக் சொல்றேன்னு நெனைச்சீங்களா. அவங்க ஒத்துக்கிட்டு டாக்குமெண்ட் கூட அனுப்பிட்டாங்க. நீங்க நல்ல அமெளண்டா சொன்னீங்கன்னா முடிச்சிடலாம். இதுல எங்களுக்கு ஒரு நயா பைசா லாபம் கிடையாது.” என டேபிள் மேல் இருந்த பேப்பரை உயர்த்தி காண்பித்தார் சங்கு புஷ்பம்.

“நெஜமாவே இந்த அம்மா சூப்பரா வேல செய்யுது. உக்காந்த எடத்துல இருந்தே வாயக் கூட தொறக்காம ஆள மடக்கியிருக்கு. ஜெகஜ்ஜால கில்லாடியா இருக்கு.

நம்ம ரெண்டு மூணு நாள் தேடி, இங்க அரை நாள் உக்காந்து முட்டி மோதிக்கிட்டு இருக்கோம்” என பிரமித்துப்போனார் ரத்தினம்.

அந்த பிரமிப்பை அழகாய் ஸ்கேன் செய்தார் நேசப்பா.

“அண்ணன் கிட்ட பேசி டீல முடிங்க ரத்தினம். அப்புறம் பாருங்க கட்சில ஒரு பய உங்கள நெருங்க முடியாது. நீங்க வேற லெவெல்ல வருவீங்க” என பூஸ்ட் ஏற்றினார் நேசப்பா.

கடவுளுக்குத்தான் தெரியும் சங்கு என்ன செய்யப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டார்.

நேசப்பா அவர் வேலையை தொடர மீண்டும் ரிலே ரேஸில் ஓடத் தொடங்கினார் சங்கு புஷ்பம்.

லக்ஷ்மி இணையத்தில் இருந்து டாக்டர் நேசமணியின் நம்பரை எடுத்து அனுப்பினார் அம்மாவுக்கு. அம்மாவும் எங்கோ இருக்கும் பெண்ணும் காலை சுற்றிய இந்த பாம்பை அடித்துக் கொல்வது என தீயாய் வேலை பார்த்தார்கள்.

சங்கு புஷ்பம் அதை அவர் போனில் சேவ் செய்தார். பிறகு வாட்சப் போய் பார்த்தார். டிபி இல்லை. நேசமணி என பெயர் மட்டும் இருந்தது. லாஸ்ட் ஸீன் எஸ்டர்டே என இருந்தது. டயல் செய்து பார்த்தார். நாட் ரீச்சபிள். சரியான தருணம் என் முடிவு செய்தார்.

ரத்தினத்திற்கு அவர்களின் வேகம் ஆச்சர்யமாக இருந்தது. இதான் படிச்சவங்களுக்கு வித்தியாசம்.

அவரின் பாதி வேலை குறைந்தது போல உணர்ந்தார். இவ்வளவு தூரம் சொல்கிறார்கள். அண்ணனுக்குப் பேசி பார்க்கலாம் என போனை எடுத்தார் ரத்தினம்.

“ஒரு நிமிஷம். நீங்க பேசிட்டு அவரு ஒத்துக்கிட்டர்னா அவர் எங்களுக்கு கன்பார்ம் பண்ணனும். உங்கள மட்டும் நம்பி இந்த வேலைல எங்களால இறங்க முடியாது. அவர் எங்களுக்கு கோஆப்பரேட் பண்ணனும்” என வலையை விரித்தார் சங்கு புஷ்பம்.

“சொல்லுப்பா ரத்தினம்” என ஆரம்பித்தார் அண்ணன்.

“அண்ணே, நேசமணி சார பாத்துப் பேசிட்டேன். நல்ல படியா முடிஞ்சுது. அப்புறம் அண்ணே, இன்னொரு நேசமணி கேண்டிடேட்டு டீடைல் இருக்கு. அதுவும் பிக்ஸ் ஆகுற மாதிரி இருக்கு. ஆனா அவங்க பட்ஜெட் நீங்க தான் சொல்லணும்” என இழுத்தார் ரத்தினம்.

இவ்வளவு பெரிய வேலக்காரனா இருக்கான். இதெல்லாம் பத்து நாள் நடையாய் நடந்து அவர்களுக்கு புரிய வைத்து அவர்கள் வீட்டில் உள்ளவர்களையும் சரி கட்டி செய்வது. இவன் அரை நாளில் ரெண்டு பேரை பிக்ஸ் பண்ணியிருக்கான் என பூரித்துப் போனார் அண்ணன்.

“சபாஷ் ராஜா. இன்னும் மூணு எல். அதுக்கு மேல தாங்காது. அண்ணிகிட்ட உன்ன பத்தி சொல்லி வெக்குறேன். ராத்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வா” என தாங்கினார் அண்ணன்.

“ரொம்ப நன்றிங்கண்ணே. அவங்க உங்க சைடிலிருந்தும் கன்பார்ம் பண்ண சொல்லி கேட்டிருக்காங்க. டீல் முடிஞ்ச ஒடனே உங்கள திரும்ப கூப்புடுறேன்” என முடித்தார் ரத்தினம்.

“சரி சரி நீ என்ன சொன்னாலும் எனக்கு ஓகே” என்றார் அண்ணண்.

அவர் காதால் கேட்டதை அவரே நம்பவில்லை. நிலை கதவு தாண்டி யாரையும் அவர் அவ்வளவு சீக்கிரம் உள்ளே விடமாட்டார். இப்போ சாப்பாட்டுக்கு கூப்பிடுகிறார்” என அகமகிழ்ந்தார் ரத்தினம்.

Tamil novel – OTP – part 15/20

“சார், பதினொன்னு நாப்பது ஆகுது. லாஸ்ட் டென் மினிட்ஸ்” என்றார் சங்கு புஷ்பம்.

டீலிங் படகு நடு கடலில் இருக்கிறது ரத்தினத்திற்கு. டைம் அவுட் வெளியே குதி என்பது போல் சொன்னார் சங்கு புஷ்பம்.

“ஏம்மா சார் கிட்ட இன்னும் நெறய விஷயம் பேசணும். கொஞ்சம் நேரம் ஆகும்” கடுப்பை அடக்கியபடி சொன்னார் ரத்தினம்.

“அப்போ டைம் எக்ஸ்ட்டென்ஷன்க்கு பே பண்ணிடுங்க சார் இப்போ” என்றார் சங்கு புஷ்பம்.

“ஏம்மா பேசி முடிச்சிட்டு கடைசியா போகும்போது குடுத்துட்டு போறேன்” என்றார் ரத்தினம்.

“சார் அரை மணி நேரமா இல்ல ஒரு மணி நேரமான்னு சொல்லிட்டு பே பண்ணிடுங்க. நாங்க நெக்ஸ்ட் அப்பாயின்ட்மென்ட் அட்டென்ட் பண்ணனும்” என அசால்ட்டாக சொன்னார் சங்கு புஷ்பம்.

தங்களுக்கு வெளியே யாரும் லைன் கட்டி நிற்கவில்லை. இவர் கிளம்பினால் சாப்பிட்டு ஆளுக்கு நாலு மாத்திரை போட்டுக் கொண்டு இழுத்துப்போர்த்தி தூங்கத் தான் போகிறோம்.ஆனாலும் சங்கு ரத்தினத்தை சத்தாய்ப்பது நேசப்பாவிற்கு ஆனந்தமாக இருந்தது.

எரிச்சலோடு மீண்டும் கதவோரம் போய் அவரின் ட்ரெஷரு ட்ரோவு ட்ரவுசரிலிருந்து கரன்சியை எடுத்தார்.

“இந்தாங்க, ரெண்டாயிரம். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு” என் நீட்டினார் ரத்தினம்.

“சார், பன்னெண்டு அம்பதுக்கு உங்க டைம் முடியும்” கரன்சியை எண்ணியபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

பிறகு நிதானமாக மேஜை மீது கரன்சியை பரப்பி அதன் மீது டேபிள்வெயிட் வைத்தார். பக்கத்தில் இருந்த சேனிட்டைசரால் கைகளை துடைத்துக்கொண்டே “நோட்டு கொஞ்சம் ஈரமா இருக்குங்க.காசு மஹாலக்ஷ்மி  சார். இவ்ளோ பெரிய கட்சியில எப்பேர்ப்பட்ட பொறுப்புல இருக்கீங்க. ஒரு நல்ல பர்ஸா வாங்கி யூஸ் பண்ணுங்க சார். அந்த பர்ஸ்ல நாலு ஏலக்கா, நாலு கிராம்பு அப்புறம் கொஞ்சம் பட்டை எல்லாம் ஒரு பச்சை கலரு துணில சுத்தி வைங்க. அப்புறம் பாருங்க உங்க கிராப் எங்க போகுதுன்னு” என வாஞ்சையாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

ட்ரவுசர் போட ஆரம்பித்த காலத்திலிருந்து அது தான் கல்லாப்பெட்டி ரத்தினத்திற்கு.

அடி வயிற்றில் குத்திய ரணம் ஆருகையில் அவர் ஈகோவில் ஒரு இடி இடித்தார் சங்கு புஷ்பம்.

“எப்பேர்ப்பட்ட பொறுப்புனு ” இந்த அம்மா சொல்லுற மாதிரி தான் எந்த பொறுப்புல இருக்கோம்னு குழம்பினார்.

“நாலு எடத்துக்கு போறவரு. பெரிய மனுஷங்களை பாக்குறவரு நீங்க போற எடத்துல எல்லாம் ஒதுக்குப்புறம் தேட முடியுமா. இப்ப வேற எல்லா மூலை முடுக்குலேயும் சிசிடிவி கேமரா இருக்கு” என ஒரு எக்ஸ்ட்ரா பாயிண்ட்டை போட்டார் சங்கு புஷ்பம்.

பகீரென்று ஆனது ரத்தினத்திற்க்கு. பர்ஸ் வாங்கி விட்டுத்தான் மறு வேலை என உறுதியெடுத்தார்.

சக டிரௌசர் கோஷ்டியையும் அலெர்ட் செய்ய வேண்டும் என குறித்துக்கொண்டார்.

வந்த வேலைக்கு பிள்ளையார் சுழி கூட போடாத நிலையில் நாலாயிரம் பணால். இன்னும் இவர்களை வைத்து எப்படி மொத்த டீலிங்கையும் முடிப்பது என நாக்கு தள்ளிப்போனார் ரத்தினம்.

நேசப்பாவிற்கு யோசிக்க நேரம் நிறைய கிடைத்தது.

தொடர்ந்து சங்கு புஷ்பம் ரத்தினத்திடம் பேச்சு கொடுத்துக்கொண்டே போனிலும் சிஸ்டத்திலும் வேலை செய்து கொண்டிருப்பதை கவனித்தார் நேசப்பா.

இப்போது அவர் நிராயுதபாணி. அவர் எதிரே இருக்கும் ரத்தினத்தை நேருக்கு நேர் கையாளுவதே அவருக்கு சவாலான காரியமாக இருந்தது. அதனால் சங்கு புஷ்பம் கொடுக்கிற குறிப்புகளை கொண்டு இந்த சூழ்நிலையை எதிர் கொள்வது என முடிவெடுத்தார்.

சங்கு புஷ்பத்தின் மனம் வேதனையாய் இருந்தது. தலை மறைவு வாழ்க்கை வரை நேசப்பாவை கொண்டு சென்றதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

நமக்கு விருப்பமில்லை என சொல்லி ஒதுங்கிக்கொள்ளலாம். ஆனால் இவர் வேறு இரையை போய் தேடுவதை நிறுத்த முடியாது. எனவே ரத்தினத்திற்கும், அவரின் ஆருயிர் அண்ணனுக்கும்,அருமை அண்ணியின் வெற்றிக்கும்  கன்னி வெடி வைக்க வேலையை ஆரம்பித்தார்.

“நா மட்டுந்தானா இல்ல வேற யாராவது இந்த பேர்ல இருக்காங்களா உங்க டீலிங்க்ல” என அடுத்த ஓவரை வீச ஆரம்பித்தார் நேசமணி.

இக்கட்டான கேள்வி இது ரத்தினத்திற்கு. அவர் இன்னும் டிரௌசர் ட்ராமாவிலிருந்தே வெளியே வரவில்லை.

பர்ஸ் பச்சைக்கலரு துணி என மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவரை வாலன்டரியாக வண்டியில் தூக்கிப் போட்டார் நேசப்பா.

குமாரு, சேகரு என வேட்பாளராக இருந்தால் தெருவுக்கு தெரு அந்த பெயரில் ஆட்கள் இருப்பார்கள்.

பேரம் அவசியமில்லை. ரெண்டு மூணு பலகீனமான ஆட்களை தேற்றி விடலாம்.

இந்த நேசமணி, அலெக்சாண்டர் எல்லாம் இம்சை புடிச்ச பேர்கள். எங்காவது ஒன்றிரண்டு தான் இருக்கும். அதில் ஒன்று வேட்பாளராக இருக்கும். அந்த வார்டில் மாற்றுக்கு எங்கே தேடுவது.

என்ன சொன்னாலும் சிக்கல். இவர் ஒருத்தர் தான் என்றால் ரேட் இன்னும் ஏற்றுவார்.

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க. நம்ம மேட்டர முடிக்கலாம்” என அவசரம் காட்டினார் ரத்தினம்.

“இல்ல நாங்க ஒரு சங்கமா இருந்தா நல்லது பாருங்க” அதான் கேட்டேன் என சொன்னார் நேசப்பா.

சங்கமா, இவங்க ரெண்டு பேரையே சமாளிக்க முடியல. இதுல இவங்க செட்டு சேந்தா அவ்வளவு தான் என பயந்தார் ரத்தினம்.

“நீங்க ஒருத்தரரு தாங்க” என பம்மினார்.

நேற்று வரை அரசியல் வாடையே இல்லாமல் இருந்தவர்கள் இவர்கள்.

இந்த காலை பொழுது அவர்களுக்கு அதன் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

சங்கு புஷ்பமும் கார்பொரேஷன் மற்றும் தேர்தல் ஆணைய வெப்சைட் என எல்லாவற்றையும் துழாவினார். ஓரளவிற்கு அவருக்கு விஷயம் பிடிபட்டது.

லக்ஷ்மி அனுப்பிய லிஸ்டையும் டவுன்லோட் செய்து ப்ரிண்டு எடுத்தார்.

நேசப்பா பேசிக்கொண்டே இருக்க பிரிண்டர் சரக் சரக்கென்று ஓயாமல் வேலை செய்து கொண்டிருந்தது.

“ரத்தினம் நம்பர விசிட்டர் நோட்ல எழுதி இருப்பார். அத எனக்கு வாட்சப் பண்ணுங்க” என செல்லகுமாருக்கு செய்தி அனுப்பினார் சங்கு புஷ்பம்.

அடுத்த செய்தி கல்பனாவுக்கு. சிட்டி போலீசில் வேலை செய்பவர். பி ப்ளாக்கில் குடியிருக்கிறார். இந்த சொசைட்டிக்கு வருவதற்கு முன்பே சங்கு புஷ்பத்திற்கு பழக்கம். அடிதடி, கத்தி குத்து, ஆக்ஸிடெண்ட், சூசைட் அட்டெம்ப்ட் என எல்லா கேசும் ஜி.எச்சுக்கு தான் வரும்.

“சிஸ்டர், இந்த கேஸ கொஞ்சம் மானிட்டர் பண்ணுங்க” என சங்கு புஷ்பத்திடம் உதவிக்கு வருவார் கல்பனா.

அந்த வார்டுல எந்த சிஸ்டர் ஷிப்ட்ல இருக்காங்க என பார்த்து சர்வைலென்சுக்கு சொல்லி வைத்து விடுவார் சங்கு புஷ்பம்.

நைட் ஷிப்ட் நர்சஸம்மா தலைய டேபிள்ள கவுந்துக்கிட்டு தூங்குது என என்ன பேசினாலும் கல்பனா காதுக்குப் போய்விடும். ரெண்டு தனிப்படை போட்டாலும் கிடைக்காத ரிசல்ட் அது.

ஆள் பேரு இரத்தின முத்து சேகர். வயசு அம்பது கிட்ட. கட்சி பேரு ஏரியா பேரு போட்டு டீடெயில்ஸ் கேட்டு அனுப்பினார் கல்பனாவுக்கு. சிக்கலான விஷயத்தில் இருப்பதாக உதவி கேட்டார் சங்கு புஷ்பம்.

மூன்றாவது செய்தி கோமதிக்கு. இன்னைக்கு காலைல பத்து முப்பதுலேர்ந்து பத்து நாப்பதுக்குள்ள பிப்த் ப்ளோர் காரிடார் சிசிடிவி புட்டேஜ் அனுப்பும்மா.

அப்டியே பத்துமணி கிட்ட அவர் விசிட்டர் நோட்ல நேசமணின்னு பேர் எழுதுவாரு. அத ஜூம் பண்ணி எடுத்து போடும்மா”.

பர பரவென்று டைப் செய்து அனுப்பினார் சங்கு புஷ்பம்.

மூவரின் பதிலுக்கு காத்திருக்கும் வேளையில் லக்ஷ்மி அனுப்பிய வாக்காளர் லிஸ்டை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தார் சங்கு புஷ்பம். இன்னொரு பட்சி மாட்டியது.

பக்கத்துத் தெருவில் ஒரு தகுதிவாய்ந்த இல்லத்தரசி இருக்கிறார் நேசமணி என்ற பேரில்.

ரத்தினம் முன்பே இருந்த க்ளாசில் சரக்கு காலியாகி இருந்தது. நேசமணி ஒரு இருபாலர் பெயர் என்பதை அவர் கவனிக்கவில்லை.

வேட்பாளர் ஆண் என்பதால் ஆண் வாக்காளரை தேடுவதிலேயே குறியாய் இருந்திருக்கலாம்.

இதுவரை நடந்தவற்றை மகளுக்கு செய்தியாய் அனுப்பினார். பாவம் அவள். சொல்லாமல் இருந்திருக்கலாம் என நினைத்தார் சங்கு புஷ்பம்.

கணவர் பெயர், முகவரி என கிடைத்த தகவல்களை நோட் செய்து கொண்டார்.

அப்போது தான் அவருக்கு மண்டையில் அடித்தார் போல் அந்த பெயர் ஞாபகம் வந்தது. கணவர் பெயர் குமரஜோதி என இருந்தது. முகவரியும் அவர்கள் கடை இருக்கும் ஏரியா. இவர்கள் சொசைட்டிக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர். நல்ல பழக்கம். குணமான மனிதர்.

சந்தேகமே இல்லாமல் சங்கு புஷ்பத்திற்கு அது கடவுள் இருக்கான் குமாரு மொமெண்ட் தான்.

டிங் என மெசேஜ் வந்தது செல்ல குமரிடமிருந்து. போனை எடுத்து முதலில் சைலண்டில் போட்டார் சங்கு புஷ்பம். ரத்தினம் நம்பர் வந்து சேர்ந்தது.

“இன்னொருத்தர் கெடச்சா ஓகேவா” எனக் கேட்டார் சங்கு புஷ்பம். “யாரு” என புருவத்தை நெளித்தார் ரத்தினம்.

“இன்னொரு நேசமணி கெடச்சா ஓகேவா” என அழுத்திக் கேட்டார் சங்கு புஷ்பம்.

“அது வந்து, இல்லியே” என இழுத்தார்.

“அட நல்லது தானே. ஆள் கூட கூட குழப்பம் கூடும்ல. இன்னும் டாக்டருக்கு ஓட்டு குறையும்ல” என ஒத்து ஊதினார் நேசப்பா.

“இல்லேங்க, இவரு ஒருத்தர் தான்” என திடமாய் சொன்னார் ரத்தினம்.

“சரி, எனக்கு தெரிஞ்சு இன்னொருத்தர் இந்த பேர்ல இருக்காங்க நம்ம ஏரியால.

உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க. நாங்க முடிச்சி தர்றோம்” என சப் காண்ட்ராக்ட் கேட்டார் சங்கு புஷ்பம்.

நேசப்பாவிற்க்கு குதூகலமாக இருந்தது. சங்குவிடம் ஏதோ மேட்டர் இருப்பது புரிந்தது.

இவங்க டீலிங்கே எனக்கு நா சொந்த செலவுல வெச்சுகிட்ட சூனியம். ஒண்ணுமே இல்லாம நாலாயிரம் கோவிந்தா. மானம் மரியாதை எல்லாம் டிரௌசரால காத்துல பறக்குது. செத்து செத்து விளையாடலாம் வான்னு 

கூப்பிடுவது போல் இருந்தது ரத்தினத்திற்கு.

“இல்லேங்க நீங்க டீட்டைல் சொல்லுங்க. நா போய் பேசிக்குறேன்” என இறங்கி வந்தார் ரத்தினம்.

“நீங்க பேசினா அவங்க படிய மாட்டாங்க” என்றார் சங்கு புஷ்பம். “ஏன்?” என விரைப்பாய் கேட்டார் ரத்தினம்.

“அதான் சங்கத்து ரூல்ஸ்!” என்றார் நேசப்பா.

ரத்தினத்திற்கு காலின் கீழே பூமி இரண்டாய் பிளந்தார் போலிருந்தது.

Tamil novel – OTP – part 14/20

A senior woman checking the news in the internet

காபி குடிக்கும் நேரம் இரண்டு தரப்பும் தங்களை கொஞ்சம் தயார் படுத்திக்கொண்டார்கள். “கண்டிப்பா ஜெயிக்க வெச்சுடுவீங்களா” என்றார் நேசப்பா.

ரத்தினம் சற்று முன்னே வந்து “இல்ல சார், எங்க ஆளு ஜெயிக்க வியூகம் சார் இது” என்றார்.

“அப்போ நா தோக்கணுமா?” என நெருடலாய் கேட்டார் நேசமணி.

“அதுக்காகத்தான் சார் இந்த ஆபர். ஜஸ்ட் கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணீங்கன்னா ஈஸியா ஒரு அமௌண்ட் பாக்கலாம்” என்றார் ரத்தினம்.

பல முறை பேப்பரில் படித்த செய்தி இப்போது அவர் முன்னே மலையாய் வந்து நிற்கிறது. திரும்பி சங்கு புஷ்பத்தை பார்க்க, தொடருங்கள் என்பது போல அவர் தலையை ஆட்டினார். தன் சுயமரியாதையின் விலை பட்டியலிடப்பட்டு பேரத்தில் இருப்பது உறுத்தியது. சற்று பிறகுதான் அது வெறும் தன் பெயருக்கான விலை என்று புரிந்தது. மூச்சை இழுத்து விட்டு சாய்ந்து உட்கார்ந்தார் நேசப்பா.

தோத்தா எனக்கு கெட்ட பேராச்சே சார்” என்றார் நேசப்பா.

அதெல்லாம் கொஞ்ச நாள்ல ஜனங்க மறந்துடுவாங்க சார். உங்க லாபத்தை மட்டும் பாருங்க சார். ஒண்ணுமே பண்ணாம உக்காந்த இடத்துல இருந்து ஒரு வாய்ப்பு. இது எல்லாருக்கும் கிடைக்காதுங்க. திரும்பவும் வரும்னு சொல்ல முடியாதுங்க. யோசிச்சு சொல்லுங்க சார்” என மண்டையை கழுவ ஆரம்பித்தார் ரத்தினம்.

அவரின் அனுபவம் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்தது.

ரத்தினத்திற்கு அவர் நாலு வரி முழுதாய் பேசி முடித்த பிறகு தான் நம்பிக்கையை உணர்ந்தார். இன்னும் கொஞ்சம் அழுத்தினால் எப்படியும் முடிக்கலாம் என நினைத்தார்.

நேசப்பா இயல்புக்கு வந்தார். இன்னும் கொஞ்சம் போட்டு வாங்கலாம் என ஆரம்பித்தார்.

“என் பேருக்கு வெறும் மூணு எல் தானா? என்றார். பேரம் ஆரம்பித்தவுடன் ரத்தினத்திற்கு உள்ளே பெருமை பொங்கியது.

இந்த ரத்தினம் பேசினா எந்த கொம்பனும் மடங்கிடுவான் என குதூகலித்தார். என்ன பேச்சுடா சாமி பேசுனாங்க ரெண்டு பேரும் என எரிச்சலானார்.

பல்வேறு உணர்ச்சிகள் அவரை ஆட்கொள்ள, அதில் சிறிது அவரின் உடலிலும் முகத்திலும் தெரிந்தது.

“தோக்கணும், அசிங்கப்படணும், பேரும் கெட்டு போகணும், சொசைட்டில நடமாட முடியாது சார். இவ்வளுவுக்கும் விலை மூணு எல் னா சரிபடாது சார்”, என முகத்தை சுளித்தார் நேசப்பா.

ரத்தினத்திற்கு பொறுமை கொஞ்சம் ஆட்டம் கண்டது.

“சார் நாலு எல் பைனல் பிளஸ் உங்க எல்லா செலவும் எங்களோடது.

சொசைட்டில நடமாட முடியாதுனு பீல் பண்ணீங்கன்னா ஒரு மாசத்துக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஊட்டில ஏர் பிஎன்பில தங்க ஏற்பாடு பண்ணித்தரேன். போய் வர்ற செலவையும் ஏத்துக்கறேன்” சர சரவென பேசி தீர்த்தார் ரத்தினம்.

உயிரோடு பிணமாகவும், தலை குனிந்து நடக்கவும், தலை மறைவாய் வாழும் வரையும் திட்டம் தருவது நேசப்பாவை உலுக்கி எடுத்தது. மிக சாதாரணமாய் ஆரம்பித்த ஒரு சந்திப்பு கொதிநிலையின் உச்சத்திற்கு அவரை கொண்டு சென்றது. தேர்தல் வெற்றிக்காக சக மனிதனை விலை பேசுவது, அந்த சமூகத்தில் எளிய விளிம்பு நிலையில் இருக்கும் வாக்காளர்களை குழப்பி, தவறாக வழி நடத்தி ஆதாயம் காண்பது என அராஜகத்தின் முழு உருவமும் அவர் முன்னே விஸ்வரூபமாய் நின்றது.

வாழ்நாள் முழுவதும் நேர்மையாகவும் வலுவான தார்மீக கொள்கை பிடிப்புள்ளவராகவும் எல்லா சூழ்நிலைகளையும் சந்தித்தவர் நேசப்பா. அவர் கண்ணியத்தின் மீதும் நன்னெறிப் பண்புகள் மீதும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு, அவரின் தனிப்பட்ட விழுமியங்கள் சூறையாடப்படும் அபாயத்திலிருந்தது. சமூக, அரசியல் மற்றும் பண செல்வாக்கோடு மூர்க்கமாகவும் அலட்சியமாகவும் நடத்தி அவரை இணங்கிப் போகும்படி செய்துவிடலாம் என எந்த எல்லைக்கும் செல்பவராக ரத்தினம் இருந்தார்.

பொருளாதார ரீதியாகவோ மன வலிமை ரீதியாகவோ பலகீனமானவர்களை எளிய இலக்குகளாக குறி வைக்கிறார்கள் ரத்தினம் போன்றவர்கள்.

உறுதியாகவும், மன உந்துதலோடும், நிதானமாக உணர்வுகளை கட்டுக்குள் வைத்தும் இந்த இழிவான போக்கில் சிக்காமல் இருக்க வழி வகைகளை சிந்தித்தார்கள் நேசப்பாவும் சங்கு புஷ்பமும்.

“ஓ.டி.பி வந்திருக்கு நேஸ். டென்ஷன் ஆகாதீங்க” என்றார் சங்கு புஷ்பம் சிஸ்டத்தில் பார்த்தபடியே. போனை எடுத்து குறுஞ்செய்தியை படித்தார் நேசப்பா.

“ஒரு திமிரெடுத்த பொறம்போக்கு” என செய்தி அனுப்பி இருந்தார் சங்கு புஷ்பம்.

லேசாக புன்னகைத்த படியே வாய்க்கு வந்த நாலு இலக்க எண்ணை சொன்னார் நேசப்பா.

ஓ.டி.பிக்கு எதுக்கு டென்ஷன் ஆவணும், இவரு ஏன் சிரிக்கணும் என முழித்தார் ரத்தினம்.

Tamil novel – OTP – Part 13/20

A woman professor discussing with her students

லக்ஷ்மிக்கு மனது சங்கடமாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் எப்படி தனியாக இந்த பிரச்சினையை சமாளிக்கப் போகிறார்கள் என மனது வருத்தப்பட்டார்.

தொடர்ந்து சங்கு புஷ்பம் அனுப்பும் செய்திகளில் இருந்து அங்கு என்ன நிலவரம் என தெரிந்து கொண்டார். செய்தி கேட்டதிலிருந்து இணையத்தில் இந்த தேர்தல், இதற்கு முன் நடந்த தேர்தலின் முடிவுகள் மற்றும் வாக்காளர் தகவல்கள் என எல்லா விஷயங்களையும் தேடி தேடி படித்தார்.

தனக்கு கிடைத்த எல்லா விஷங்களையும் அம்மாவுக்கு அனுப்பி வைத்தார். ஏதாவது ஒரு வகையில் அது அவர்களுக்கு உதவலாம் என் நம்பினார்.

கேண்டிடேட்டு புஷ்பாவுக்கு எதிராக டாக்டர் நேசமணி.

டாக்டர் நேசமணிக்கு வரும் வாக்குகளை பிரிக்க மற்றும் மக்களை குழப்ப அதே பெயரில் இருக்கும் சிலரை டம்மி வேட்பாளர்களாக நிறுத்துவது. சில வார்டுகளில் சொற்ப வாக்குகளில் வெற்றி வித்தியாசம் இருந்தது. ஆளும் கட்சி, எதிர் கட்சி, பிற வளர்ந்து வரும் கட்சிகள் ஏன் சுயேச்சை வேட்பாளருக்கு எதிராக கூட கடந்த தேர்தலில் இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டதை கவனித்தார். அது கேண்டிடேட்டு லிஸ்டில் அப்பட்டமாக தெரிந்தது.

யார் இதை செய்தார்கள் என பெரும்பாலும் பொது வெளியில் தெரியாது.

பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் இந்த போக்கு காணப்பட்டது.

படித்த வாக்காளர்களும் பாமரர்களும் பெரும்பாலும் அவர்கள் வார்டின் முழு லிஸ்டையும் அலசி ஆராய்வதில்லை. அது தெரிந்தாலும் பெரிதாய் எடுத்து கொள்வது இல்லை.

கேண்டிடேட்டு மற்றும் வாக்காளர்களும் இடையே இதில் நுட்பமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த டம்மி கேண்டிடேட்டுகள்.

அவர்கள் அரசியல் மற்றும் பொது வாழ்வில் இல்லாமல் இருக்கும் சாமானிய மக்கள்.

அவர்களுக்கு இருக்கும் தேவைகள் அல்லது பலகீனங்களின் காரணமாக டம்மியாக களம் காண்பவர்கள்.

அவர்களின் பெயரையும் சுய மரியாதையும் ஏதோ ஒரு அழுத்தம் அல்லது நிர்பந்தம் காரணமாக விலைக்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள்.

லக்ஷ்மி கடந்த தேர்தல் முடிவுகளை மீண்டும் ஒரு முறை எடுத்துக் பார்த்தார்.

எந்த ஒரு வார்டிலும் அதில் போட்டியிட போகும் நபரை அந்த கட்சி சார்ந்த அல்லது அரசியல் தொடர்புடைய நபர்களுக்கு மட்டுமே இவர் வேட்பாளராக வருவார் என தெரிந்திருக்கும்.

பிரபலமான சுயேச்சை என்றால் கூட ஊகிக்க முடியும்.

ஆனால் பொது ஜனத்துக்கு தெரியவோ ஊகிக்கவோ வாய்ப்பு மிக குறைவு.

அதனால் இந்த அணுகுமுறையின் ஊற்றுக் கண் பொது ஜனம் அல்ல, கட்சி சார்புடையவர்கள் என முடிவுக்கு வந்தார்.

அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அல்லல் படும் பொது ஜனம் கண்டிப்பாக இந்த குறுக்கு வழி வாய்ப்பை பற்றி சிந்திக்கவோ அல்லது அது தொடர்பான தகவல்களை அணுகவோ இயலாதவர்கள்.

அடி மட்டத்தில், சமூக அல்லது பொருளாதார செல்வாக்கு இல்லாதவர்களாக இருக்கும் இவர்களை குறி வைத்து செய்யப்படும் இந்த இழி செயல் தடுக்கப் பட வேண்டும் என நினைத்தார் லக்ஷ்மி. இதை செய்பவர்கள் பொது சமூகத்தில் ஆதாரத்தோடு வெளிப்பட வேண்டும் என எண்ணினார்.

அந்த வார்டில் பதினாறாயிரம் வாக்காளர்கள் இருந்தார்கள் பட்டியலில். லக்ஷ்மி அந்த லிஸ்டை பிரிண்ட் எடுத்தார். நன்றாக படிக்கும் சில மாணவிகளை அழைத்து நேசமணி மற்றும் புஷ்பா பெயர் உள்ளவர்களை குறித்துக் கொள்ள சொன்னார்.

அதில் எல்லா காம்பினேஷன்களும் அடக்கம். வெறும் புஷ்பா மட்டுமல்லாமல் புஷ்பவல்லி, புஷ்ப குமாரி, புஷ்பா ராஜ் என ஆண் மற்றும் பெண் பெயர்களும் தேடப்பட்டது.

அதே போல நேசமணி என்ற பெயருக்கும். நேசமலர், நேசகொடி, நேசசெடி என எது இருந்தாலும் குறித்துக் கொண்டார்கள்.

முழு லிஸ்டும் ரெடியானது. புஷ்பா பெயரில் பதினெட்டு பேர். நேசமணி காம்பினேஷனில் மூன்று பேர்.

எல்லாவற்றையும் ஒரு எக்சல் ஷீட்டில் போட்டு அம்மாவுக்கு அனுப்பினார் லக்ஷ்மி. அந்த லிஸ்டில் சங்கு புஷ்பமும் இருந்தார்.

Tamil novel – OTP – Part 12/20

TN politician enjoying his meal

பத்து நிமிடம் கழித்து ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்தார் நேசமணி.

“ரத்தினம் சார், மணி இப்போ பத்து அம்பது. பதினொன்னு அம்பதுக்கு உங்க டைம் முடியும்” என்றார் சங்கு புஷ்பம்.

இந்த அம்மா சரியான எரிச்சல் டேங்கர் என கறுவினார் ரத்தினம்.

உதார் பேச்சு பேசியோ நைச்சியமாக பேசியோ ஆளுக்கேற்றார் போல் வளைந்து கொடுத்து போனவர். பல ஆண்டுகளாக வாங்கியே பழக்கப்பட்ட கைகள்.

கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல தன்னிடமிருந்தே பணம் வாங்கியதை அவர் மனம் ஏற்க மறுத்தது.

உங்க பேர் என்ன சார்? என்ன விஷயமா பாக்க வந்தீங்க? என்றார்.

“சார், என் பேரு ரத்தினமுத்துசேகர். நம்ம தொகுதி எக்ஸ் எம்எல்ஏ கட்சிலேர்ந்து வரேன். கார்ப்பொரேஷன் எலெக்க்ஷன் விஷயமா பேசணும்” என்றார்.

சேகரா இவரு. அவளை கைலயே புடிக்க முடியாது என மனதில் நினைத்துக்கொண்டார் நேசப்பா.

ரத்தினம் சுத்தி சுத்தி பார்வையை ஓட்டி ஹாலை நோட்டமிட்டார்.

சங்கு புஷ்பம் சிஸ்டத்தை ஆன் செய்து நோட்பேடை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“சார், நீங்க ஜோசியம் இல்ல வாஸ்து அது மாதிரி ஏதாவது பாக்குறீங்களா?”

என்றார் ரத்தினம். “இல்லிங்க” என்றார் நேசப்பா.

“அப்போ, இந்த வெயிட் லாஸ், ஹீலிங் அந்த மாதிரியா? என்றார். “இல்லிங்க” என்றார் நேசப்பா.

“மேடம் கன்சல்டேஷன் சார்ஜ் கேட்டாங்க. அதான் எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமுன்னு கேட்டேன்” என்றார் ரத்தினம்.

“ஏதோ ஒரு வேலையா தான என்ன பாக்க வந்தீங்க. அதுக்காக தான்”

என ரத்தினதினின் கண்களை ஊடுருவியபடியே சொன்னார் நேசப்பா.

“என்ன தேவைக்காக என்கிட்ட வந்தீங்கன்னு தெரியாது. ஆனா என் நேரத்தோட மதிப்பு எனக்கு தெரியும்” என்றார் நேசப்பா.

இந்த ரெண்டு பேரும் ஒரு மார்க்கமான டிசைனா இருக்காங்களே என உள்ளுக்குள் அரற்றினார் ரத்தினம்.

“கார்பொரேஷன் எலெக்க்ஷன்ல நீங்க சுயேச்சையா நிக்கணும் சார். அத பத்தி பேச தான் வந்தேன்” என்றார் ரத்தினம்.

“எலெக்க்ஷன் விஷயம்னு சொல்றீங்க. தனியா வந்துருக்கீங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“ஆமாங்க, கஷ்டப்பட்டு வியூகம் அமைச்சு செஞ்சா கூட வர்றவன் பேர வாங்கிட்டு போயிடுவான். அதான் நா மட்டும் வந்தேன்” என்றார் ரத்தினம்.

“சார் ரொம்ப ஸ்ட்ராங்கான பெர்சோனாலிடியா இருக்கீங்க. நல்லது சார். நா நேரா விஷயத்துக்கு வரேன்.

அவர் அண்ணி வேட்பாளராக இருப்பதை சொன்னார்.

“அண்ணிய விட சித்தா டாக்டர் நேசமணி பவர்புல் இந்த வார்டுல. அதுனால அதே பேர்ல இருக்குறவங்கள கேண்டிடேட்டா சுயேச்சையா நிக்க வெக்க ஏற்பாடு பண்றேன். கொஞ்சம் ஓட்டு பிரியும். அது எங்களுக்கு சாதகமா இருக்கும்னு நம்புறன். அப்புறம் உங்களுக்கு என்ன பண்ணணுமோ அதையும் பண்ணிடுவோம் என்றார்” ரத்தினம்.

“என்ன பண்ணுவீங்க சார்” என்றார் நேசமணி.

“எல்லா செலவும் அண்ணன் பார்த்துப்பார் சார், நீங்க பேப்பர்ஸ் மட்டும் கரெக்ட்டா குடுத்தா போதும். பசங்கள வச்சி எல்லா வேலையும் பக்கவா நடக்கும் சார். உங்க நாமினேஷன் ஓகே ஆச்சுன்னா ஒரு அமௌன்ட் குடுத்துருவோம்” என்றார் ரத்தினம்.

“எவ்ளோ தருவீங்க” என்றார் நேசப்பா.

“ஒரு மூணு எல் தருவார் சார் அண்ணன்” என்றார் அவர்.

சந்தேகப்பட்ட விஷயம் தெளிவாகி விட்டது. இது காலை சுற்றிய பாம்பு என நினைத்தார் சங்கு புஷ்பம். சிஸ்டத்தில் அமர்ந்தபடியே லக்ஷ்மிக்கு போனில் செய்தி அனுப்பினார்.

“அரசியல் விஷயமா வந்து இருக்கீங்க, உங்களுக்கு எதுவும் சாப்பிட தர மறந்துட்டேன் பாருங்க. இதோ வரேன்” என உள்ளே போனார் நேசப்பா.

ரத்தினத்திற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. எப்படியும் படிந்து விடுவார் என தோன்றியது.

“இந்தாங்க சாப்பிடுங்க”, என ட்ரேவை வைத்தார் நேசப்பா.

ஒரு சின்ன பிளேட்டில் பிரியாணியும் ஒரு கிளாஸ் விஸ்கியும் இருந்தது.

அடி வயிற்றில் சரக்கென்று கத்தியால் குத்தியது போலிருந்தது ரத்தினத்திற்கு.

அவர் முகம் வெளிறிப்போனது

“இது இது” என ஏதோ சொல்ல வந்து தடுமாறினார்.

“சாப்பிடுங்க சார். எங்க ஆளுங்களை இத்தனை வருஷமா கூட்டிட்டு போய் கவனிச்சுக்கிட்டீங்க. ஒரு நாள் நாங்க செய்ய கூடாதா” என்றார் நேசப்பா.

எதிரியின் அடி வயிற்றில் கத்தியால் குத்தியும் வஞ்சம் தீராமல் அவன் கன்னத்தில் பளுக் பளுக்கென்று போட்டார் போல வந்து விழுந்தது அந்த வார்த்தைகள்.

“இது சரி இல்லீங்க. இப்ப வேணாம் சார்” என நாக்குழறினர் ரத்தினம்.

இது அவர் இதுவரை சந்திக்காத ஒரு நிகழ்வு. இந்த விதமான உபசரிப்பு அவரின் மொத்த தயாரிப்பையும் சீர்குலைத்தது. யாரை பார்க்க வந்தோம் என்ன பேச வந்தோம் என சில நிமிடம் எல்லாம் மறந்து தத்தளித்தார் ரத்தினம்.

“ஓ, பகல்ல சாப்பிடறதில்லையா, சரி காபி டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா?” என வலையை விரித்தார் நேசப்பா.

ரத்தினத்திற்கு ஒரு பிடிப்பு கிடைத்தார் போலிருந்தது. ஆனாலும் அந்த டிரே அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.

“ஏம்மா அபர், சாருக்கு காபியாவது குடும்மா என்றார் நேசப்பா.

ரத்தினத்திற்கு போன மூச்சு வந்தார் போலிருந்தது. பேச்சை இலகுவாக்க “மேடம் பேர் என்ன சார்” என்றார்.

“ஏங்க லிஸ்ட்ல இவர் பேர் பக்கத்துலயே என் பேரும் இருந்திருக்கும். வெறும் நேசமணி மட்டும் தான் நோட் பண்ணுவீங்களா” என கேட்டார் சங்கு புஷ்பம்.

“அவங்க எஸ் பி சார்” என்றார் நேசப்பா. ரத்தினத்திற்கு தூக்கி வாரி போட்டது.

“சங்கு புஷ்பம் சார்” என்றார் நேசப்பா சிரித்துக்கொண்டே.

முதல் பத்து நிமிடத்திலேயே கண்ணை கட்டியது ரத்தினத்திற்கு. பேசாம அரை மணிக்கு ஆயிரம் மட்டும் கொடுத்திருக்கலாம் என நினைத்தார்.

“காபில சர்க்கரை போடவாங்க?” என உள்ளிருந்து கேட்டார் சங்கு புஷ்பம்.

“வேணாம் சார்” என மெலிதான குரலில் சொன்னார் ரத்தினம்.

“பிபீ, சாருக்கு சர்க்கரை வேணாமாம்” என்றார் நேசப்பா நமுட்டு சிரிப்போடு.

“பிபீ இல்ல சார். நார்மல் தான். சுகர் மட்டுந்தான்” என்றார் ரத்தினம்.

“சங்கு புஷ்பத்தோட இன்னொரு பேரு பட்டர்பிளை பீ. அத தான் சுருக்கி என்ன பிபீனு கூப்பிடுவாரு” என சொல்லிய படியே காபி கொடுத்தார் சங்கு புஷ்பம்.

இடைப்பட்ட நேரத்தில் ரத்தினத்தின் பார்வை அடிக்கடி விஸ்க்கி கிளாஸ் மீது விழுந்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்திற்க்கு மேல் அதன் ஈர்ப்பு அவர் சுய கட்டுப்பாட்டை தகர்த்தது. அடி வயிற்றில் வாங்கிய கத்திக் குத்தின் ரணம் சிறு வடு கூட இல்லாமல் மறைந்து போனது. விஸ்க்கி கிளாஸ் வேலை செய்யும் என நேசப்பா நினைத்தது பொய்யாகவில்லை.

ஆனால் விஸ்க்கியை விட அந்த கிளாசை கட்சிக்காரர் அவ்வளவு நேசிப்பார் என நேசப்பாவே எதிர்பார்க்கவில்லை. எல்லாம் கோபால் சார் உபயம்.

ரத்தினம் ஆர்வம் தாளாமல் வாய் விட்டே கேட்டு விட்டார்.

“சார், இந்த கிளாஸ் சூப்பரா இருக்கு. எங்க சார் வாங்குனீங்க, எவ்ளோ விலை” என்றார்?

“அமெரிக்காவுல. ஜோடி பத்தாயிரம் நம்ம ஊர் வெலைல” கெத்தாக சொன்னார் நேசப்பா.

மூச்சடைத்துப் போவதற்கு முன் ஸ்டேஜில் இருந்தார் ரத்தினம்.

“அப்ப இந்த ஒரு கிளாஸ் மட்டும் அஞ்சாயிரமா சார்?” என வாயை பிளந்தார்.

“அஞ்சாயிரத்து சொச்சம் உள்ள இருக்க சரக்கு இல்லாம” என சொன்னார் சங்கு புஷ்பம்.

“கிளாஸ்ஸே அஞ்சாயிரம்னா சரக்கு எவ்ளோ இருக்கும்” என கணக்குப் போட்டார்.

ஆனாலும் சரக்கை விட அவரை சுண்டி இழுத்தது என்னவோ அந்த கிளாஸ் தான்.

ஒரு சைடில் இருந்து பார்க்க க்ளாஸுக்குள் கிளாஸ் போல் இருந்தது.

நீண்ட ஐங்கோண வடிவ வெளிப்புறமும் வைன் கிளாஸ் போன்ற உட்புறமும் மேலிருந்து உள்ளே பார்த்தால் சிறிய தங்க நிற சாண்ட்லியர் விளக்கு தரையில் பட்டு ஜொலிப்பதை போல விஸ்க்கி மிதந்து கொண்டிருந்தது.

ஐம்பது மில்லி கூட இல்லாத திரவம் முழு கோப்பையையும் வெளிற் மஞ்சள் நிறமாக்கியது.

சற்றே உட்புறம் குவிந்த வாய்ப்பகுதி தங்க வளையம் போல இருந்தது. கால் கோப்பைக்கும் கீழே இருந்தது விஸ்க்கி. மீதி இருந்த முக்கால் பகுதி காலி கோப்பையை ரசித்துக்கொண்டே இருந்தார் ரத்தினம்.

உயர் தர கண்ணாடியில் அருமையான வளைவுகளைக்கொண்டு பார்க்க கச்சிதமாக இருந்தது. மனதிற்குள் ஆருயிர் அண்ணனை நினைத்துக்கொண்டார் ரத்தினம்.

“பிச்சைக்கார பய. என்ன பதவி காசு இருந்து என்ன பிரயோஜனம். மாடு மாதிரி வேல செஞ்சாலும் ரெண்டு ரூபா பிளாஸ்டிக் கப்புல குடுக்குறான். அதுல ஊத்திக் குடிக்கவே என்னவோ வள்ளல் பிரபு மாதிரி பேசுறான்.

சார் தங்கம். நல்ல மனசுக்காரர். ஊரு பேரு தெரியாத எனக்கே அஞ்சாயிரம் ரூபா க்ளாஸ்ல அசால்ட்டா தர்றார்.

மனுஷன்னா இவர்தான்யா நல்ல மனுஷன். இந்த டீலிங் நல்ல படியா முடிஞ்சா அப்புறம் சாருகிட்ட டச்சுலேயே இருக்கணும் ” என யோசனை புல்லட்டை தாறுமாறாய் ஓட்டினார் ரத்தினம்.

“சார், பிரியாணி சாப்பிடலேன்னா பரவாயில்ல.போகும் போது பார்சல் பண்ணி தரேன். இதை குடிங்க சார்” என கிளாசை நீட்டினார் நேசப்பா.

ரத்தினம் அசடாய் நெளிய, “இது உங்களுக்கு, காபி எனக்கு” என்றார் நேசப்பா.

புறக் காரணிகளால் வரும் ஆர்வம், எரிச்சல், பதட்டம், குழப்பம், தடுமாற்றம் போன்ற எல்லா உணர்வுகளுக்கும் எளிதாய் இரையானார் ரத்தினம்.

சூழ்நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ள அவர் எடுத்துக் கொள்ளும் காலம் அதிகம். அது இங்கே அவர் முன் இருக்கும் எதிராளிகளுக்கு யோசிக்க அதிக நேரத்தை அளித்தது.

சங்கு புஷ்பமும் நேசப்பாவும் சொல்லாலும் செயலாலும் அதை ஒருவர் மாற்றி ஒருவர் செய்து அவரை நெருக்கி கொண்டிருந்தார்கள்.

Tamil novel – OTP – Part 11/20

TN politicians conversation

புஷ்பா அண்ணிக்கு நேரடி அரசியல் அனுபவம் கிடையாது. மக்கள் தொடர்பும் கிடையாது.

கட்சிக்காரர்களின் நல்லது கெட்டது நிகழ்வுகளில் அண்ணன் மட்டும் தான் வருவார்.

அண்ணிக்கு இப்போது திடீர் ஆசை கவுன்சிலராகி விட வேண்டும் என்று.

ஒரே பெண் அவர்களுக்கு. கல்யாண சம்பந்தம் பேசும்போது அண்ணனும் அண்ணியும் ஆளுக்கொரு பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

தன் சமூகத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உயர் அந்தஸ்த்தில் உள்ள எல்லா வரன்களையும் குறித்து வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அண்ணி கவுன்சிலராவது, அடுத்து அண்ணன் எம்எல்ஏ ஆவது, பவரும் பசையும் இரு கரை புரண்டு ஓடுவது, பிறகு மாநில தலைமையும் அவரின் கிச்சனும் சேர்ந்து மகளுக்கு அட்சதை போட்டு திருமணம் நடத்துவது, அதை போட்டோ எடுத்து ஹாலில் மாட்டுவது என அவர்களுக்கு சின்ன சின்ன ஆசைகள் இருந்தது.

அந்த சின்ன ஆசைகளில் ஒரு ஆசையை நிறைவேற்றியே தீர்வது என கங்கணம் கட்டிக்க கொண்டு அண்ணிக்காக தேர்தல் வேலைகளை ஆரம்பித்தார் ரத்தினம்.

எல்லா நிலையிலும் பிரதான கட்சிகள் ரெண்டு மட்டும் தான் மாநிலம் முழுவதும்.

அண்ணியார் அதில் ஒரு கட்சி வேட்பாளர். அவருக்கு எதிராக முக்கியமான போட்டியாளர் தற்போதய ஆளுங்கட்சியை சேர்ந்த சித்தா டாக்டர் நேசமணி. மற்ற வேட்பாளர்கள் பற்றி அக்கறையில்லை.

இப்பகுதியில் இரு பிரதான கட்சிகளும் சம பலத்தில் இருக்கிறது. படித்தவர்கள், பாமரர்கள் என சரி அளவில் இருப்பவர்கள்.

அண்ணியார் நம்பி இருப்பது பாமரர் ஓட்டு வங்கி. அண்ணன் எப்படியும் கடைசி நேரத்தில் பசையை இறக்கி தன்னை ஜெயிக்க வைத்து விடுவார் என நினைக்கிறார் அண்ணி.

சித்தா டாக்டரும் மக்களுக்கு நல்ல அறிமுகம். கை சுத்தமானவர். குறை சொல்ல பெரிதாக எதுவும் இல்லை.

இந்த நிலையில் அண்ணியாரின் வெற்றிக்கு தன் பங்கை எப்படி ஆற்றுவது என யோசித்தார் ரத்தினம்.

அவர் சும்மா இருந்தாலும் அவரின் பல்லாண்டு கால அனுபவம் அவர் மூளையை தூங்க விடவில்லை. இரண்டு மூன்று நாட்கள் எல்லா வித்தைகளையும் யோசித்து பார்த்து அலசி ஆராய்ந்து கடைசியில் ஒரு வியூகத்தை அமைத்தார்.

நம்பிக்கையோடு போய் அண்ணனைப் பார்த்தார்.

“என்ன ரத்தினம், ஆளையே காணோம். அண்ணி உன்ன என்ன காணாமேன்னு கேட்டுக்கிட்டிருந்தா” என பாசத்தை தூவினார் அண்ணன்.

“அட நா எங்கண்ணே போகப்போறேன். நம்ம அண்ணி விஷயமாத்தான் கொஞ்சம் வேல பாத்துட்ருந்தேன்” என் பிட்டை போட்டார் ரத்தினம்.

“அருமைப்பா, என்ன விஷயம் சொல்லு” என் கூர்ந்து கேட்க ஆரம்பித்தார் அண்ணன்.

ரத்தினம் முழுதாய் சொல்லி முடிக்க “நல்ல கிரவுண்ட் ஒர்க் பண்ணியிருக்க ரத்தினம். இதான் ஒரிஜினல் கட்சிக்காரனுக்கும் ஐடி விங்காரனுக்கும் வித்தியாசம். போன்ல போட்டோ போஸ்ட்டு போட்டே மேல வந்துடறானுங்க” என மாசெவை குதறினார்.

“கட்சிக்காரன் ஐடி விங்ல இருக்கலாம். ஆனா ஐடி விங்ல இருக்குற எல்லாரும் கட்சிக்காரங்க ஆக மாட்டாங்க” என நிதர்சனத்தை சொன்னார் அண்ணன்.

பிறகு சற்று யோசித்தவர் “ஒண்ணும் பிரச்சினை இருக்காதில்ல ரத்தினம். பாத்து ஹாண்டில் பண்ணு” என்றார்.

அப்பாடா என்றிருந்தது ரத்தினத்திற்கு. எடுத்த எடுப்பில் நிராகரிக்கவில்லை.

பார்த்து செய் என்கிறார். அண்ணனிடம் க்ரீன் சிக்னல் வாங்கியது உற்சாகத்தை கூட்டியது ரத்தினத்திற்கு.

“நன்றிண்ணே. எல்லா வேலையும் பக்காவா கச்சிதமா நடக்கும்ணே. ஆனா கேண்டிடேட்டு செலவு கொஞ்சம் ஆகும்ணே” என இழுத்தார் ரத்தினம்.

கூட இருக்குற ஆளுங்களிலேயே இவன் ஒருத்தன் தான் தானா வந்து ஒரு மேட்டர சொல்றான். வேலக்காரனா இருக்கான். மத்தவன்லாம் மண்டைய கழுவி வச்சிருக்கானுங்க. கார்ல பின்னாடி சீட் தேய்க்க தான் லாயக்கு புடிச்சவுனுங்க என் மனதிற்குள் அவர் டீமை திட்டி தீர்த்தார்.

அதெல்லாம் பாத்துக்கலாம் ரத்தினம். தோரயமா எவ்ளோ ஆகும்” என கேட்டார்.

கரன்சி மேட்டர் வரை இந்த பிளான் இன்றே வரும் என ரத்தினம் நினைக்கவில்லை.

இப்போதான் சூதானமா இருக்கணும் என மூச்சை இழுத்து விட்டார் ரத்தினம்.

“ஒரு அஞ்சு எல் ஆகும்ணே கேண்டிடேட் படிய. அப்புறம் நீங்க பாத்து எனக்கு என்ன தந்தாலும் ஒக்கேண்ணே” என தைரியமாய் சொல்லி முடித்தார் ரத்தினம்.

அடுத்த இரண்டு நிமிடங்கள் முள் மேல் நிற்பது போல் இருந்தார் ரத்தினம். அவர் அரசியல் வாழ்க்கையில் அவர் கையாளப்போகும் மிக உச்சபட்சமான ஒரு தொகை.

“சரி, நல்ல படியா செய் ரத்தினம்” என ஆசீர்வதித்தார் அண்ணன். அடுத்த நொடி அனிச்சையாக அண்ணண் காலில் லேண்ட் ஆனார் அன்புத் தம்பி இரத்தின முத்து சேகர். 

Tamil novel – OTP – Part 10/20

TN politician aiming for power

ரத்தினத்திற்கு தெரிந்த ஒரே தொழில் கட்சிப்பணி. தெரிந்த ஒரே கட்சி அவர் கட்சி மட்டுமே. கட்சியில் என்ன பணி என்றால் அவர் இருக்கும் நிலையில் பணம் தவிர மற்ற எல்லாமும் என சொல்லலாம்.

கிளை மட்டத்தில் இருந்து ஆரம்பித்து இருபது ஆண்டுகளாக களத்தில் பணியாற்றி ஒன்றியத்தின் அருகே இப்போது தான் கரை சேர்ந்திருக்கார்.

மாவட்ட அளவில் நல்ல அறிமுகம் இருந்தாலும் இன்னும் ஒரு படி முன்னேற்றத்திற்க்காக காத்திருக்கிறார்.

நிரந்தர தொழில் என்று எதுவும் கிடையாது. வருமானம் மழையாக இல்லெயென்றாலும் சமயங்களில் தூறலாகவோ இல்லை சாரலாகவோ இருக்கும்.

கருமேகம் சூழ்வது போல் எங்கு பிரச்சினையோ, வில்லங்கமோ இருக்கிறதோ, அங்கே வீசும் காற்றின் திசைக்கேற்ப சாய்பவர்.

விசுவாசத்தையும் உழைப்பையும் மட்டுமே கொட்டி கட்சியில் முன்னேற முடியும் என்று இன்று வரை நம்புபவர்.

தன் அனுபவத்தாலும் திறனாலும் தன்னால் நூதனமான முறையில் செயலாற்ற முடியும் என ஆழமான எண்ணம் உடையவர்.

கட்சி சகாக்களை ஒருங்கிணைத்தாலும் சிறு ஒளி கீற்று கூட மற்றவர் மீது விழாமல் பார்த்துக்கொள்வார்.

இப்போது அவர் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். கார்பொரேஷன் தேர்தல் காலம்.

ரத்தினத்தின் ஏரியாவில் அவர் கட்சி வேட்பாளராக நிற்பது எக்ஸ் எம்எல்ஏ மனைவி திருமதி புஷ்பா.

எக்ஸ் எம்எல்ஏ சமீபத்தில் ரத்தினத்திற்கு ஆருயிர் அண்ணனாக கிடைத்தவர்.

நீண்ட காலம் தூரத்தில் இருந்து ரத்தினத்தின் செயல் பாடுகளை பார்த்தவர் அண்ணன்.

சில மாதங்கள் முன்பு அவர் வலது கரம் அகால மரணமடைய புது வலது கரமாய் ஆனார் ரத்தினம்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்ட சபை தேர்தல். அண்ணனுக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது.

இப்போது மனைவி கவுன்சிலராகி, பிறகு அவரும் எம்எல்ஏ ஆகி விடுவார் என திட்டம்.

கார்பொரேஷன் அளவிலும் மாநில அளவிலும் தனக்கு இன்னும் சற்று பவர் கூடும் என நாடி நரம்பெல்லாம் நம்பிக்கை கொப்பளிக்க இருப்பவர் ரத்தினம்.

அரசாங்க கேபினட்டை விட கிச்சன் கேபினட்டின் செல்வாக்கு அதிகம் என கண்கூடாக பார்த்தவர் ரத்தினம். சில இடங்களில் ரெண்டு மூணு கிச்சன் கூட இருக்கும்.

அதற்கு வாழும் உதாரணம் அவர் அண்ணன். மாநில கிச்சன் கேபினட்டின் செல்லபிள்ளை.

ஸ்டேட்டு கிச்சனோ லோக்கல் கிச்சனோ, க்ளவுடு கிச்சனோ, எந்த கிச்சன் செல்வாக்கு கிடைத்தாலும் மிக்சர் சாப்பிட்டே அடுத்த நிலைக்கு போலாம் என்பது எழுதப்படாத விதி.

அண்ணியை வெற்றிக்கொடி நாட்ட வைத்துவிட்டால் பொலீரோ காரின் பின் சீட் தனக்கு மட்டும் தான் என தீர்க்கமாக நம்பினார் ரத்தினம்.

ஒரு பக்கம் எம்எல்ஏக்கு அருகாமை, இன்னொரு புறம் பொலீரோவில் ட்ரிப் அடித்து எப்படியாவது மேயருக்கு அறிமுகமாவது.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அரசாங்கம் போட்டதோ இல்லையோ ரத்தினம் தன் வளர்ச்சிக்கான திட்டத்தை தெளிவாக போட்டார்.

பிற்காலத்தில் இருவரில் காற்று யார் பக்கம் வீசுகிறதோ அங்கே சாமரம் வீசுவது என முடிவெடுத்தார்.

ஒரு திரைப்படத்தில் சொப்னா அண்ணிக்கு கேன்சர் என போலியாக அவருக்காக உருகி உருகி பிராத்திப்பார் அண்ணனின் நண்பர். அது போல போலியாக அண்ணிக்காகவும் அண்ணனுக்காகவும் உருகுவதாகவும் உயிரையே கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஒரு கூட்டம் இப்போது சமூகத்தில் ஊடுருவி இருக்கிறது.

அந்த கூட்டம் உண்மையானது இல்லை என்பதும் எல்லா அண்ணன் அண்ணிகளுக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும். ஆனால் இரு தரப்பும் மக்கள் மன்றத்தில் அதை ஒரு கலாச்சாரமாக கடை பிடித்து வருகிறார்கள்.

அது உட்கட்சி ஜன நாயகத்துக்கும், தேர்தல் ஜன நாயகத்துக்கும் வந்திருக்கும் கேன்சர் என மக்களுக்கு மட்டும் தெரியும்.

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 11/11

Tamil story about a young family

அந்த வாரம் அமைதியாக கழிந்தது. ராஜு பெரும்பாலும் சுரத்தே இல்லாமல் இருந்தான்.

அவன் செய்த தவறு அவனுக்கே உறுத்தலாக இருந்தது. சுதாவை நேருக்கு நேராய் பார்ப்பதையே தவிர்த்தான்.

ஒரு நாள் அவன் ஆபிசிலிருந்து வந்ததும் மணி சார் போன் வந்தது. அவரின் இருபதாவது கல்யாண நாளுக்கான அழைப்பு.

வரதாவும் மணி சாரும் ராஜுவிடம் பேசி விட்டு, சுதாவிடமும் பேசி அழைப்பு விடுத்தார்கள்.

தாதிபத்ரியில் இருக்கும் புக்கா ராமலிங்கேசுவர ஸ்வாமி கோவிலில் வரும் வெள்ளியன்று காலை ஒன்பது மணிக்கு சிறப்பு பூஜை என வரதா விவரம் சொன்னார்.

அவள் சுருக்கமாக நடந்த விஷயங்களை வரதாவிடம் சொன்னாள்.

“சுதா, இது இயல்பானது. குறிப்பாக அப்பாக்களுக்கு இருக்கும் ஒரு குணம். அவர்களால் அவ்வளவு எளிதாக தங்கள் குழந்தையின் நிலையை ஜீரணம் செய்ய முடியாது. அவர்களுக்கும் பாசம் இருக்கும். ஆனால் அதை மீறி ஒரு கையாலாகாத உணர்வு அவர்களுக்கு மேலோங்கி இருக்கும். அது அவர்களை சில சமயம் ஒதுங்கி போகும் முடிவை எடுக்க வைக்கும். அதனால் நீ இதை கவனமாக கையாண்டது சரிதான்” என சொன்னார் வரதா.

“நா அவர்கிட்ட சில சமயங்கள்ல கடுமையா பேச வேண்டியிருந்தது வரதா. இப்போ அமைதியா அவர் கெளம்பி போறத வேடிக்கை பார்த்துட்டு, அப்புறம் தனியா பவாவை கவனிக்குறேன்னு சுய பச்சாதாபத்துல இருக்குறது சரியில்லேன்னு தோணுச்சு. நீங்க, ஆண்ட்ரியா எல்லாரும் கஷ்டமான நேரத்துல எனக்கு துணையா இருந்தீங்க. மணி சார் அவர்கிட்டயும் பேசி இருக்கார். ரொம்ப தேங்க்ஸ் வரதா. நாங்க நிச்சயமாக பூஜைக்கு வருகிறோம்” என சொல்லி போனை வைத்தாள் சுதா.

ராமலிங்கேசுவர ஸ்வாமி சுதாவுக்கு மிகவும் பிடித்தமான கோவில். சுயம்பு வடிவாக சிவ பெருமான் பெண்ணா நதி கரையில் அருள் பாலிக்கும் திருத்தலம். விஜயநகர பேரரசர் காலத்து பழமையான கோவில்.

வெள்ளிகிழமையன்று காலை கோவிலுக்கு போய் பூஜையில் கலந்துகொண்டு பிறகு மண்டபத்தில் உட்கார்ந்தார்கள். பவா தூண்களை பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். விஷ்ணு சன்னதியின் முன்னால் இருந்த தூண்களை ஒரு பக்தர் தட்டி விட மெதுவான ஓசை கேட்டது. பவாவுக்கும் அது கேட்டிருக்க வேண்டும். சிரித்தபடியே கண்ணில் மின்னல் தெறிக்க திரும்பி பார்த்தது. அவர் மெதுவாய் ஒவ்வொரு தூணாய் தட்ட அதன் பார்வையில் சந்தோஷம் தெரிந்தது.

ராஜுவுக்கு கண்களில் நீர் பெருக்கெடுக்க ஓடி போய் பவாவை அள்ளிக் கொண்டான். சுதாவுக்கு கண்ணீர் கட்டு படுத்தமுடியவில்லை.

வரதா வந்து அந்த தூண்களின் சிறப்பம்சங்களை  விளக்கினார். இயரிங் எயிட் உதவியுடன் இருந்தாலும் அந்த மெல்லிய நுட்பமான ஓசையை அவளால் கேட்க இயன்றது சுதாவுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தது.

ஒரு மணி நேரம் பொறுமையாக கோவிலை சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் கல் மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள்.

“சுதா, எனக்கு மனசு தெளிஞ்சுடுச்சி, சாரி, நா உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்” என மெதுவாய் சொன்னான் ராஜு.

“நீ தெளிவா இருந்தா எனக்கு அது போதும் ராஜு ” என ஆறுதலாய் சொன்னாள் சுதா.

“இந்த கோவில் தான் சுதா எனக்கு புத்திய குடுத்திருக்கு. இந்த கோபுரத்தை பாத்தியா? பாதிலேயே நிக்குது. சர்வ வல்லமை படைச்ச சாமியே பூர்த்தியாகாத ஒரு கோவில்ல இருக்கார். வர்ற ஜனங்க அதுல இருக்க சிற்ப வேலைகளை தான் ரசிக்குறாங்களே தவிர, அது முழுமையடையலேன்னு  யாரும் அதை குறையா சொல்லல.

சாமிக்கு இல்லாத சக்தியான்னு யோசிச்சு பார்த்தேன். அவர் நினைச்சார்னா இந்த கோவிலை பூர்த்தி செய்து இருக்கலாம். ஆனா அது ஏன் அவர் செய்யலேன்னு யோசிச்சேன். எனக்கு பதில் பிடிபடலை.

ஆனா நம்ம வாழ்கையை பத்தி எனக்கு தெளிவு கிடைச்சிருக்கு. நம்ம பவாகிட்ட இருக்க குறைய நா ரொம்ப பெரிய விஷயமா மனசுல போட்டு குழப்பிக்கிட்டு உங்களை விட்டு பிரியுற முடிவுக்கே வந்துட்டேன். ஆனா நீ இந்த குடும்பத்துல இருக்க அழகை பாத்ததால என்னை சகிச்சுகிட்டு வாழுற. ரொம்ப சாரி சுதா, என்னை நெனச்சா எனக்கே வெக்கமா இருக்கு” என்றான் ராஜு.

சுதாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. “சாரி ராஜு, நானும் உன் விஷயத்துல கடுமையா நடந்துக்கிட்டேன். இன்ஸ்டால போஸ்ட் பண்ணது கூட நீ சொல்லாம முடிவெடுத்ததால தான். மற்றபடி உன்ன விட்டு கொடுக்கணும்னு இல்ல. ஜெபாக்கு விஷயம் தெரிஞ்சுது ஆண்ட்ரியா மூலமாக. மணி சார் கிடையாது. ஆண்ட்ரியா உன்னோட சிச்சுவேஷன, நீ என்ன மைண்ட்செட்ல இருக்கேன்னு ஜெபாக்கு தெளிவா சொல்லி இருக்கா. அவர் அன்னிக்கு உன்கிட்ட பேசினது கூட நீ உணரணும்னு தானே தவிர, உன்னை காயப்படுத்த இல்லை” என்றாள் சுதா.

“நீ எனக்கு பெரிய உபகாரம் பண்ணி இருக்கே சுதா” என சொல்லி பவாவை இறுக அணைத்துக் கொண்டான்

மகிழ்ச்சியில் தாதிபத்ரியின் தங்க புத்ரியாக ஜொலித்தாள் சுதா!

சிறப்பு குறுநாவல் – தாதிபத்ரியின் தங்கபுத்திரி – Part 10/11

A mother thinking about her child's future

சுதாவுக்கு அன்று அதிகாலையிலேயே தூக்கம் கலைந்தது. நேரம் ஐந்து பதினைந்து.

பல் துலக்கி, குளித்து காபி போட்டு குடித்து முடித்தாள். பவாவுக்கு பால் பாட்டில் ரெடி செய்து குடிக்க கொடுத்தாள். 

பவா பால் குடித்து விட்டு தூக்கத்தை தொடர ராஜூவை எழுப்பினாள்.

“ராஜு, காபி போட்டு வச்சிருக்கேன். பவா பால் குடிச்சுட்டா. நா கோவிலுக்கு போயிட்டு வரேன்” என சொல்லிவிட்டு கிளம்பினாள்.

பத்து நிமிடத்தில் ரெடியாகி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

கோவில் கூட்டமில்லாமல் காலியாக இருந்தது.

நின்று நிதானமாக சாமி கும்பிட்டு விட்டு வழியே வந்து கல் மண்டபத்தில் உட்கார்ந்தாள்.

இன்றைய பொழுது நல்ல படியாக இருக்க வேண்டும், கடவுளே எனக்கு தெளிவான புத்தியை கொடு என பிரார்த்தனை செய்தாள்.

அம்மாவிடம் பேச விடும் போல தோன்றியது. ஏழு மணி. இந்நேரம் எழுந்திருப்பார்கள், போன் போடலாம் என தோன்றியது.

போன் போட்டு தன் மனதில் உள்ளதை முழுவதுமாய் சொல்லி முடித்தாள்.

“சுதா, நீ எடுத்த முடிவு நல்லது தான். ஆனா, அதை உன் மனசு காயப்பட்டு இருக்கும் போதே செயல்

படுத்தணும்னு நினைக்காதே” என்றாள் அம்மா.

“அதான்மா என் பிரச்சினை. எனக்கு ராஜுவோட நெலமை நல்லா புரியுது. ஆனா அதே சமயம் அவன் செஞ்ச செயல் என்னை ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கு. நா எப்படி இத டீல் பண்றதுன்னு எனக்கு தெரியலைம்மா” என சொன்னாள்.

அம்மா சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

பிறகு “சுதா, இதுக்கு என்னால உனக்கு நேரடியான பதிலை சொல்ல முடியாது. ஆனா மகாகவி பாரதியாரோட ஒரு பாடல் உனக்கு தேவையான பதிலை குடுக்கும்னு நினைக்குறேன். மனமென்னும் பெண்ணே அப்படீன்னு ஒரு பாடல் இருக்கு. படிச்சி பாரு. அதுல நீ தேடிக்கிட்டிருக்குற கேள்விக்கு விடை இருக்கும்” என சொல்லி போனை வைத்தாள்.

சுதா அந்த பாடலை போனில் தேடி எடுத்து படித்தாள்.

A Bharathiyar poem about mind and soul.

முழு பாடலையும் திரும்ப திரும்ப படித்து உள் வாங்கிக் கொண்டாள்.

புத்தி வேறு, மனம் வேறு என்று சொல்வார்கள். புத்தியின் சொல்படி கேட்டு மனம் இயங்க வேண்டும்.

ஆனால், பல சமயம் புற சூழ்நிலையின் தூண்டல்களால் மனம் அலைபாயும். அத்தகைய சமயங்களில் புத்தியானது மனத்திற்கு ஒரு நல்ல ஆசானாக இருந்து அறிவுரை சொல்லவேண்டியது அவசியம்.

அடுத்த இரண்டு நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பாடலை படித்து, அதன் அர்த்தத்தை முழுதாக புரிந்து கொள்ள முயற்சி செய்தாள். மூன்றாம் நாள் மனம் தெளிவாய் ஆனது.