
Part 1
இரவு பத்து மணி. அம்மாவின் ரூமில் இன்னும் ரீடிங் லைட் எரிந்து கொண்டு இருக்கிறது.
“பூரணி, அம்மா டிஸ்டர்ப்டா இருக்காங்கன்னு நெனைக்குறேன்” என கவலையாய் சொன்னான் பாலன்.
“கண்டிப்பாங்க, அவங்க மனசுல என்னென்ன ஓடும்னு நெனச்சாலே எனக்கு வருத்தமா இருக்குங்க. இல்லாதவர்ன்னு ஆனவர் அப்படியே இல்லாமலேயே இருந்திருக்கலாம். இப்போ திடீர்னு ரெண்டாந்தாரத்து பொண்ணுக்கு கல்யாணம், அதுக்கு பத்திரிகை வைக்க வராருன்னா அவங்க மனநிலை எப்படி இருக்கும்?” என ஆதங்கமாய் சொன்னாள் பூரணி.
பாலன் படுக்கையில் இருந்து எழுந்து ஜன்னலின் அருகே போய் நின்றான். அவன் எட்டு வயதாக இருக்கும் போது அப்பாவின் foundry தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அடுத்த வருடத்திலேயே அவர் நடத்தி வந்த சிட் பண்டு தொழிலும் முடங்க, சுமார் எட்டு லட்ச ரூபாய் கடன் சேர்ந்தது.
அப்பாவுக்கு தொழிலில் பணம் போனதைவிட, ஊரில் கவுரவம் போனது பெரும் தலை குனிவாக இருந்தது. இருக்கும் நகை, வீடு இதையெல்லாம் விற்று பாதி கடனையாவது உடனே கொடுத்துவிடலாம் என அம்மா யோசனை சொன்னாள்.
தோற்ற மனிதனாக, திரும்ப பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க அவர் விரும்பவில்லை.
“எல்லாத்தையும் வித்து பாதி பேருக்கு குடுத்தாலும், ஊர்க்காரங்க நான் மோசம் பண்ணிட்டேன்னு தானே சொல்வாங்க? அதனால, நான் வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ போய் வேலை செஞ்சு பணம் அனுப்பினேன்னா, நீ கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிடு. ஜனங்களும் மகாதேவன் குடும்பத்தை பிரிஞ்சி கஷ்டப்பட்டு, கடனை அடைச்சான்னு சொல்லுவாங்க” என விளக்கம் சொன்னார்.
தூரத்து சொந்தம் வழியாக குஜராத் ஜாம் நகரில் இருந்த பேக்டரியில் மெக்கானிக் வேலை அவருக்கு கிடைக்க, குடும்பத்தை இங்கேயே இருக்க சொல்லி விட்டு அவர் மட்டும் கிளம்பி போனார்.
தினமும் வீடு தேடி வரும் கடன்காரர்களுக்கு அம்மா தான் பதில் சொல்லி சமாளிப்பாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை கறி கடையில் அம்மா நின்று கொண்டிருந்த போது, அங்கே வந்த பெண்மணியின் பார்வையில் கூனி குறுகி போனதாக அழுதது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஊரார் பணத்தை கொடுக்க வக்கில்லாமல் இருப்பவர்களுக்கு, கறி சோறு ஒரு கேடா என வசவு வாங்கியதை சொல்லி கதறியதும் அவன் நினைவை விட்டு அகலவில்லை.
சுமார் ஒரு வருட காலம், மாதம் ஒரு லெட்டரும் கொஞ்சம் பணமும் அனுப்பி கொண்டிருந்தார். இரண்டாம் வருடம் கடிதங்கள் குறைய, பணம் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. மூன்றாம் வருடம் ஒரே ஒரு கடிதம் மட்டும் வந்தது. வேலைக்கு வந்த இடத்தில ஒரு இக்கட்டான சூழ்நிலையால், தான் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த கடிதத்துக்கு அம்மா பதில் போட்டால், அந்த வருட லீவுக்கு அவர் மட்டும் வீட்டுக்கு வருவதாகவும் எழுதியிருந்தார்.
அம்மா அந்த கடிதத்திற்கு பதில் எழுதவில்லை.
முதல் வேலையாக நகை, வீடு, நிலம் என என்னென்ன இருந்ததோ எல்லாவற்றையும் விற்று, முக்கால்வாசி கடனை அடைத்து விட்டு, சிப்காட்டுக்கு பக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினாள். அதே ஏரியாவில் இருந்த foundry பேக்டரியில் மாதம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு mould helper வேலைக்கு சேர்ந்தாள். பாலனின் படிப்புக்கும், வீட்டு செலவுக்கும் அந்த பணம் சரியாய் போக, மீதி கடனை அடைக்க விழி பிதுங்கி நின்றாள்.
பேக்டரியில் மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்த பிறகு, பகுதி நேரமாக இரவு வரை கேட்டரிங் கம்பெனியில் தினக்கூலியாக வேலை செய்தாள். நான்கு வருடம் ஆனது பைசா சுத்தமாக கடனை கட்டி முடிக்க அம்மாவுக்கு.
பத்து வருட அனுபவத்திற்கு பிறகு சூபர்வைசர் பதவி வந்ததும் கொஞ்சம் வாழ்க்கை முன்னேறியது அவர்களுக்கு.
இப்போது பாலனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டது. அவன் தாலுக்கா ஆபீஸிலும், பூரணி ஆஸ்பிடல் லேபிலும் வேலை பார்க்க, குடும்பம் ஒரு வழியாக தலையெடுத்திருக்கிறது.
“நான் போய் அம்மாகிட்ட பேசிட்டு வரேன்” என பூரணியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் பாலன்.
அம்மா டேபிள் மீது நோட்டை வைத்துக் கொண்டு ஸ்ரீ ராமஜெயம் எழுதிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் பழைய டைரிகள் சில இருந்தன.
“மா” என மெலிதாய் அழைத்தான் பாலன்.
“சொல்லுடா” என எழுதிவதை நிறுத்தி விட்டு கேட்டாள் பானுமதி.
“உனக்கு அவரை பாக்க வேணாம்னா இப்போ கூட சொல்லுமா, அவரை வர வேணாம்னு சொல்லிடலாம்” என தரையை பார்த்தபடியே சொன்னான்.
“ம்ம்..அவர்கிட்ட பேசுறதுல எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை” என தீர்க்கமாய் சொன்னார் பானுமதி.
“உண்மையாத்தான் சொல்றியா? இல்ல, அவர வர வேணாம்னு சொன்னா, அவர் வருத்தப்படுவார்னு நெனைக்குறியா?” என கேட்டான்.
“ப்ச், இத பத்தி எனக்கு ரொம்ப யோசிக்க தோணல பாலா. வரட்டான்னு கேட்டாரு, வாங்கன்னு சொல்லிட்டோம். வரட்டும், பேசட்டும், கிளம்பட்டும்” என விட்டேத்தியாய் பதில் சொன்னாள்.
“இது உனக்கு எவ்வளுவு வலியா இருக்கும்னு அவருக்கு புரியாதும்மா. ஆனா எனக்கும் பூரணிக்கும் தெரியும். இதை நீ கோ த்ரூ பண்ணணுமாங்கிறது தான் என் கவலையே?” என விடாமல் கேட்டான் பாலன்.
“எவ்வளோ வலிகளை அனுபவிச்சுட்டேன், அவமானங்களை பாத்துட்டேன். அதுலேர்ந்தெல்லாம் மீண்டும் வந்துட்டேன். அதை அவர் பாக்கணுமில்லையா? அதனால அவர் வரட்டும்” என சொன்னார் பானுமதி.
பாலனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அம்மாவின் ஒப்புதலில் இருந்த இந்த நல்ல விஷயத்தை தான் எப்படி பார்க்க தவறினோம் என யோசித்தான்.
“நீ இன்னும் என்னை காயம்பட்டவளாவே பாக்குற. எங்க நான் திரும்பவும் காய பட்டுடுவேனோன்னு பயப்படுற. பாலா, என் மனசுக்குள்ள இப்போ எதுவும் இல்லை. ஆனா அவர் மனசுல எவ்வளுவு இருக்கும்னு எனக்கு தெரியும். நம்மள பாக்க வரட்டான்னு அவர் கேக்கவே, அவருக்கு பல நாள் தேவைபட்டிருக்கும்” என மெதுவாய் சொன்னார் பானுமதி.
பாலனுக்கு அம்மா சொல்வது உண்மைதான் என தோன்றியது.
“நீ ஆயிரம் காரணம் சொன்னாலும், நாளைக்கு உன் மனநிலை எப்படி இருக்கும்னு உனக்கே தெரியாதும்மா. அதனால நீ இந்த ரிஸ்க்கை எடுக்க போறியான்னு யோசிச்சு சொல்லு” என நிதானமாய் கேட்டான் பாலன்.
ஒருவேளை அம்மாவுக்கும் அவரை ஒரு முறை பார்க்கலாம் என்று அடி மனசில் ஆசை இருக்கலாம். தான் ரொம்ப கேட்டு அவளை சங்கடப்படுத்துகிறோமோ என யோசித்தான்.
“பாலா, நாளைக்கு என்னங்குறது தெரிஞ்சுட்டா வாழ்க்கைல என்ன சுவாரஸ்யம் இருக்கு சொல்லு? கல்லு விழும்போது மட்டும் தான் குளம் தளும்புதாடா?” என அவன் கையை பற்றிக் கொண்டு கேட்டார் பானுமதி.
அந்த பதிலின் கணம் அவன் கட்டுப்பாட்டை உடைக்க, அப்படியே அம்மாவின் தோளில் சாய்ந்து அழுதான்.
இந்த சந்திப்பு அம்மாவை விட தனக்கு தான் அதிக மனஉளைச்சலை தருகிறது என அப்போது தான் அவனே தெரிந்து கொண்டான்.
பானுமதி அமைதியாக இருந்தார். சற்று நேரம் கழித்து, “சாயந்திரம் நாலு மணிக்கு மேல வரேன்னு சொல்லி இருக்காரு. லைட்டா டிபன் மட்டும் செய்து வெக்கலாம்னு இருக்கேன். சுகர் வந்திருக்குமோ என்னவோ? யாருக்கு தெரியும்” என சொல்லிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தார்.
என்ன டிபன் செய்வது என்பது வரை யோசித்து வைத்திருப்பவளிடம், தான் முட்டாள்தனமாக எவ்வளவு கேள்விகளை கேட்டிருக்கிறோம் என அவனுக்கு உறைத்தது. என்ன இருந்தாலும் இது அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள்.
“சாரிம்மா” என சொன்னான் பாலன்.
“விடுடா..நீ ஏன் பதட்டமா இருக்கேன்னு எனக்கு தெரியும்டா” சொன்னார் பானுமதி.
பாலன் எழுந்து கதவருகே செல்ல, “பூரணியால நேரடியா என்கிட்ட இதை பேச முடியாது. அவளும் உன்னை மாதிரி தான் குழப்பத்துல இருப்பா. என்ன பத்தி கவலைப்பட வேணாம்னு அவகிட்ட சொல்லு” என ஞாபகமாய் சொல்லி அனுப்பினார்.
Part 2
அடுத்த நாள் காலை. குழந்தையை பள்ளிக்கு அனுப்பி விட்டு, பூரணியும் பாலனும் வேலைக்கு கிளம்ப, வீடு அமைதியாக இருந்தது. ஆனால் பானுமதியின் மனம் மட்டும் தத்தளித்துக் கொண்டிருந்தது. எதற்காக இப்போது வருகிறார்? எப்படி இருப்பார்? என்ன பேசுவார்? எவ்வளவு நேரம் இருப்பார்? தான் என்ன பேசுவது? எப்படி அழைப்பது? என்ன உடுத்துவது? என ஆயிரம் கேள்விகள் அவரை துளைத்து எடுத்தது.
அரைமணி நேரம் அப்படியே சோபாவில் உட்கார்ந்திருந்தார். அவர் இப்போது ஒரு விருந்தாளியாக மட்டுமே வருகிறார் என நூறு முறை தனக்கே சொல்லிக் கொண்டார். எக்காரணம் கொண்டும் அவர் முன்னால் கண் கலங்கக் கூடாது என முடிவெடுத்தார்.
கேசரி செய்து, பாயசம் வைக்கலாமா என மனதில் இருந்து ஒரு கேள்வி வந்தது. வேண்டாம், அவர் என்ன ராணுவத்தில் சேவை செய்துகொண்டு, எல்லையிலா வாழ்கிறார்? வேண்டியதில்லை என புத்தி சொல்லியது.
சற்று நேரத்தில் பானுமதிக்கு தன் நிலை தெளிவாய் புரிந்தது. பாலன் தவித்ததில் தவறில்லை என நினைத்தார்.
மனம் சஞ்சலமாய் இருக்க ஸ்ரீ ராமஜெயம் எழுத ஆரம்பித்தார். நாலு தடவை எழுதியதும், தான் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறோம் என புரிய, அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தார்.
இந்த அழுகை தவிர்க்க வேண்டியதில்லை..தொடரட்டும் என ஒன்று விடாமல் நிதானமாக கிளறி அசைபோட்டு பார்த்தார். இவ்வளுவு நாள் நினைக்கக் கூடாது என கட்டுப் படுத்திக் கொண்டிருந்த, அத்தனை
கோணங்களையும் நுணுக்கமாக எண்ணிப் பார்த்தார்.
தான் நினைத்திருந்தால் இந்த சந்திப்பை வேண்டாம் என சொல்லி இருக்கலாம்? ஏன் அவரை சந்திக்க ஒத்துக் கொண்டோம்? இன்னும் என் மனசில் மிச்சம் என்ன இருக்கிறது? என கூச்சமின்றி தன்னை தானே கேட்டு கொண்டார்.
பாசம்? காதல்? தகப்பன் ஸ்தானம்? பானுமதிக்கு இதில் எதுவும் இல்லை என்பது தெளிவாக புரிந்ததில் சற்றே நிம்மதியாக உணர்ந்தார்.
நீண்ட நேரம் அழுததில் கண்கள் வீங்கியிருக்கும் என குளிர்ந்த நீரில் முகம் கழுவி விட்டு வந்தார். ஐஸ் பேக்கை எடுத்து கண்களுக்கு வைத்துக் கொண்டு, சோபாவில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டார்.
மனம் மீண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தது. அவர் கேட்டால் திரும்பவும் ஒன்று சேர விருப்பமா? என உடைத்துக் கேட்டது. அவரே அவருக்கு தவிர்த்துக் கொண்ட முக்கியமான கேள்வி இது.
இல்லை என உள்ளேயிருந்து பதில் வந்தது.
இது தான் கடைசி வாய்ப்பு. உறுதியான நிலைப்பாடா இது என மனம் மீண்டும் கேட்டது.
பானுமதி அது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு எழுந்து போய் சமைக்க ஆரம்பித்தார்.
காலத்துக்கும் தேவையில்லை என ஆன உறவிற்கு, விருந்தோம்பல் எதற்கு என மீண்டும் ஒரு கேள்வி வந்தது.
பானுமதி கிச்சன் வேலையை அப்படியே விட்டு விட்டு மீண்டும் போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டார்.
தனக்கே தான் உண்மையை சொல்லாத வரை, இந்த போராட்டம் இருக்கும் என அவருக்கு தோன்றியது.
ஈகோ. தான் மீண்டு விட்டோம் என்ற கர்வம். நான் கௌரவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என பறை சாற்றிக் கொள்ளும் ஆர்வம். அவர் துரோகத்தை உரமாக்கிக் கொண்டோம் என உணர்த்துவது. அவரின் கோழைத்தனத்தால் அவர் இழந்ததை காட்டுவது என சரமாரியாக பதில்கள் வந்து கொட்டியது.
சரி, தன் மனதில், உணர்வில் எதுவும் மிச்சமில்லை. வீட்டில் என்ன இருக்கிறது என யோசித்தார். பீரோவின் மேல் இருந்த பெட்டியை எடுத்து பார்த்தார். திருமண போட்டோ, அவர் பெயர் பலகை என சில சமாச்சாரங்கள் இருந்தது.
குக்கர் விசில் வந்தது. போட்டோவை அப்படியே வைத்து விட்டு போய், விட்ட இடத்தில இருந்து சமையலை தொடர்ந்தார்.
போன் அடித்தது. “ஆட்டோ ஏறிட்டேன். இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துடுவேன்” என மகாதேவன் சொன்னார்.
பானுமதிக்கு குழப்பமாக இருந்தது. சாயந்திரம் நாலு மணிக்கு வருவதாக சொன்னவர், மத்தியானமே வருகிறாரே என பரபரப்பானாள்.
அப்போது தான், தான் இன்னும் ரெடியாகவில்லை என உரைத்தது.
சமையலை அப்படியே நிறுத்தி விட்டு ரூமிற்குள் ஓடினார். சட்டென்று புடவை மாற்றி, தலை வாரி ரெடியானார். ஐஸ் பேக் வைத்தது நல்லது என சொல்லிக் கொண்டார்.
டோர் பெல் அடித்தது. பானுமதிக்கு கால்கள் பின்னியது.
தன் தயாரிப்புகள் எதுவும் சொதப்பக் கூடாது என வேண்டிக் கொண்டார்.
Part 3
வெள்ளை வேட்டியும், வெளிர் சந்தன நிற அரைக் கை சட்டையும் உடுத்தி, சற்றே மேடிட்ட தொப்பையோடு இருந்தார் மகாதேவன். கருப்பு பிரேம் போட்ட கண்ணாடியும், சற்றே முன்னேறிய மண்டையும் வயதை சொன்னது. எடை கூடாமல் அதே உடல் பருமனோடும், சற்றே தளர்ந்த தோள்களோடும், ஒரு கையில் கட்டை பையோடு நின்றார்.
பானுமதிக்கு வாய் உலர்ந்து போனது.
அனிச்சையாக கட்டை பையை வாங்க நீண்ட கையை கட்டுப்படுத்திக் கொண்டாள். அந்த கணத்தில், என்ன நிகழ்ந்தாலும் தான் அசைந்து கொடுக்க மாட்டோம் என உணர்ந்தும் கொண்டார்.
அவள் மனதில் தைரியம் பொங்கி வர, “வாங்க” என அவர் கண்களை பார்த்துக் கூப்பிட்டாள் .
மகாதேவன் பானுமதியை வைத்த கண்ணை வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தார். வாழ்க்கை எவ்வளவு புரட்டி போட்ட போதும் தெளிவாகவும், இயல்பாகவும் இவள் எப்படி இருக்கிறாள் என அவருக்கு புரியவில்லை. தாறுமாறாக எடை கூடாமல், பதவிசாகவும் பளிச்சென்றும் இருப்பதாகவும் எண்ணினார்.
“உக்காருங்க” என சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். இதயம் படபடவென அடித்துக் கொள்ள, தண்ணீர் கொண்டு போய் கொடுத்தாள். அதை வாங்கி பருகிவிட்டு தரையையே பார்த்துக் கொண்டு, சொம்பை திரும்ப கொடுத்தார்.
அதை கொண்டு போய் மீண்டும் கிச்சனில் வைத்தாள். தான் மீண்டும் மீண்டும் இங்கே வருவது ஏன் என அவளையே கேட்டு கொண்டாள். இயல்பு நிலை அவ்வளவு சீக்கிரம் வராது என தோன்றியது.
“டீ குடிக்குறீங்களா? இல்ல கொஞ்ச நேரத்துல சாப்பாடு சாப்பிடுறீங்களா? லன்ச் டைம் ஆயிடுச்சே?” என கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்து கேட்டாள்.
“கொஞ்ச நேரம் ஆகட்டும், நீ வந்து உக்காரு” என தயக்கமாக கூப்பிட்டார் மகாதேவன்.
அவள் எதிரேயிருந்த சோபாவில் வந்து உட்கார, என்ன பேசுவது என இருவரும் யோசித்தார்கள்.
நல்லா இருக்கியா என முதலில் யார் கேட்பது என ஒரு மௌன போராட்டம் அங்கே நடந்து கொண்டிருந்தது.
இருவருக்கும் அது அர்த்தமற்ற கேள்வி என தோன்றியதால் அது கேட்கப் படவில்லை.
பானுமதிக்கு அங்கே நிலவிய அமைதி பொறுமையை சோதித்தது. “பையன் சொந்தமா?” என கேட்டாள்.
இந்த கேள்வியை மகாதேவன் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.
இன்னும் குசலம் விசாரிக்கவில்லை, நலம் விசாரிக்கவில்லை. இவள் எல்லாவற்றையும் அநாவசியமாக கடந்து போய் இந்த கேள்வியில் நின்றது அவருக்கு இலகுவாக இருந்தது.
“ஆமா, சுஷ்மாவோட சித்தப்பா பையன். கனடால ரெண்டு தலை முறைக்கு முன்னாடியே செட்டில் ஆயிட்டாங்க” என பெருமையாக சொன்னார்.
அடுத்த அரை மணி நேரம் கனடா சம்பந்தக் கதையும், பாலனின் கல்யாண கதையும் சுவாரஸ்யமாக ஓடியது.
மகாதேவனின் இறுக்கம் காணாமல் போயிருந்தது. ஒரு காலை மடக்கியும், மறு காலை தொங்கப் போட்டும், சோபாவில் சாய்ந்து ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்.
பானுமதிக்கு சமையல் இன்னும் முடியவில்லை என ஞாபகம் வந்தது. ரெண்டு மூணு ஆல்பங்களை கொண்டு வந்து அவரிடம் கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் போனாள்.
ஸ்ஸ்..அப்பாடா என இருந்தது அவளுக்கு. எதுவும் உறுத்தலாக இல்லாமல் இப்படியே பொதுவாக பேசி அனுப்பி விட வேண்டும் என முடிவெடுத்தாள்.
கொஞ்ச நேரம் எந்த சத்தமும் இல்லாததால் ஹாலுக்கு வந்தாள். அவர் சுவரில் இருந்த போட்டோக்களை அருகில் போய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.
“நீயும் வா, சேர்ந்து ஆல்பம் பாக்கலாம்” என சொன்னார்.
அவளுக்கு நாம என்ன கைடு வேலையா பாக்குறோம் என தோன்றியது.
“நீங்க பாருங்க, நான் கொஞ்சம் வேலையை முடிச்சிட்டு வரேன்’ என மீண்டும் உள்ளே போனாள்.
பத்து நிமிடத்தில் எல்லா வேலையையும் முடித்து விட்டு எதிர் சோபாவில் போய் உட்கார்ந்தாள்.
“பாத்ரூம் எங்க இருக்கு?” என கேட்டார்.
“ஹால்ல அந்த பக்கம் இருக்கு. அது இந்தியன். உள்ளே ரூம்ல வெஸ்டர்ன் இருக்கு” என சொன்னாள்.
மகாதேவன் உள் ரூமிற்குள் போனார். மணி ரெண்டாக போகிறது. ஐந்து மணி ஆகும் எல்லோரும் வீடு வந்து சேர. அது வரை எப்படி நேரத்தை ஓட்டுவது என யோசித்தாள்.
பாத்ரூம் போய்விட்டு வெளியே வந்த மகாதேவனின் கண்ணில் அந்த பெட்டி பட்டது. எட்டி பார்த்தார். அவர்களின் திருமண போட்டோ, அவரின் பெயர் பலகை மற்றும் சில சாமான்கள். அவருக்கு சொல்ல முடியாத ஒரு ஆனந்தம் பொங்கி வந்தது. தன் வருகை அவளுக்கு ஒரு ஆர்வத்தை தூண்டியதாக புரிந்து கொண்டார்.
ஆல்பத்தை எடுத்துக் கொண்டு, எதிர் சோபாவில் போய் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.
பானுமதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்றே பக்க வாட்டில் திரும்பி அமர்ந்து கொண்டு அமைதியாக இருந்தாள். எங்கெங்கு அவளின் படங்கள் இருந்ததோ, அங்கெல்லாம் நிறுத்தி நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தார் அவர். பூரணியின் பெற்றோர் யார் என கேட்டு தெரிந்து கொண்டார்.
“சாப்பிடுறீங்களா?டைம் ஆகுது” என எழுந்து கொண்டாள் அவள்.
“சரி” என அவரும் பின் தொடர்ந்தார்.
அவருக்கு பரிமாறிவிட்டு, அவளும் சாப்பிட மகாதேவனின் மனம் ரெக்கை கட்டி பறந்தது.
மேக்சிமம் ஒரு காபி மட்டும் கிடைக்கும் என நினைத்திருந்தார்.
இருவரும் சாப்பிட்டு எழுந்து போய் கையை கழுவி விட்டு வர, மகாதேவன் பானுமதியின் புடவை தலைப்பால் கையை துடைத்துக் கொண்டார்.
அவள் திகைத்துப் போய் பார்க்க, மெலிதாக சிரித்துவிட்டு ஹாலுக்கு போனார்.
அவளுக்கு அது சொல்ல முடியாத அசூயையாக இருந்தது.
எச்சில் தட்டு இன்னும் டேபிள் மேல் இருந்தது. முதல் வேலையாக அதை கொண்டு போய் கழுவி வைத்தாள்.
“டெய்லி ஸ்ரீ ராமஜெயம் எழுதுவியா?” என நோட்டை புரட்டியபடியே கேட்டார் மகாதேவன்.
பதிலேதும் சொல்லாமல் கடிகாரத்தை பார்த்தாள் பானுமதி.
“என்ன நல்ல நேரமான்னு பாக்கறியா?” என சூசகமாக கேட்டபடியே பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
இதற்கு மேல் பொறுமை தாங்காது என அவளுக்கு தோன்றியது.
பல வருடங்கள் கழித்து சந்திக்க வருபர் கூனி குறுகி அவமானத்தில் இருக்க வேண்டாம் என இதுவரை இயல்பாக பேசியது இந்த இடத்தில் வந்து நிற்கிறது.
“இப்போவும் தலைக்கு ஊத்திக்குறியா?” என வந்த அடுத்த கேள்வியில், பானுமதியின் தலையிலிருந்து பாதம் வரை அதிர்ந்து போயிற்று.
இப்போது இருக்கும் குறைந்த பட்ச உறவை கூட தலை முழுக வேண்டும் என அவள் முடிவெடுத்தாள்.
“இல்ல..சும்மாதான் கேட்டேன்..உடம்பை பாத்துக்க” என இழுத்தார்.
“மூணு டு நாலரை இன்னிக்கு எம கண்டம். அதுக்குள்ள பத்திரிகை குடுத்துடுங்க” என நகர்ந்து போய் ஆல்பங்களை அடுக்கியபடியே சொன்னாள் பானுமதி.
“அதுவும் சரிதான்” என எழுந்து போய் கட்டை பையிலிருந்து ஒரு பத்திரிகையை எடுத்து வந்தார்.
பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்து “திருமதி பானுமதி” என பெயரை எழுதியவர் ஒரு நொடி அப்படியே
உறைந்து நின்றார்.
அவர் கண்கள் பானுமதி என்ற பெயருக்கு பின்னால் நிலை கொண்டு நிற்க, பேனா முனை காத்துக் கொண்டு இருந்தது.
“பானுமதி ராமசந்திரன்” என சொன்னாள் அவள்.
மகாதேவனின் முகம் வெளிறி போனது. “நீ..நீ..உனக்கு?” என அவருக்கு வாய் திக்கியது.
“சும்மா சொன்னேன், வெறும் திருமதி பானுமதி தான்” என கூர்மையாக சொன்னாள்.
அவர் திகைத்துப் போய், என்ன செய்கிறோம் என தெரியாமல், அந்த பத்திரிகையை டக்கென்று டேபிள் மீது வைத்தார்.
“பானுமதி ராமசந்திரன்” என சொற்றொடரில் இருந்து அவர் இன்னும் வெளியே வரவில்லை.
பானுமதி மகாதேவன் என எழுத அவருக்கு உரிமையில்லை என அவர் உணர்ந்த நொடி அது. வெறும் பானுமதி என எழுதி இயல்பாக கொடுத்திருக்கலாம்.
ஆனால் இன்றைய பானுமதியின் பெயருக்கு பிறகு, வேறொரு நபரின் பெயர் இருக்குமா என அவர் சந்தேகித்ததின் விளைவு தான் அந்த ஒரு நொடி நிதானிப்பு.
ஆழ் மனதில் அவருக்கிருந்த நீண்ட நாள் குற்ற உணர்வும், இன்று அவரை ஈர்த்த பானுமதியின் வயதுக்கேற்ற வசீகரமும், அவரை அறியாமல் அவருக்குள் இருந்த அழுக்குப் பக்கங்களை காட்டிக் கொடுத்தது.
“நான் எப்போதும் பானுமதி மகாதேவனாவே இருப்பேன்னு நீங்க நெனைச்சதால தானே பத்திரிகை குடுக்க வந்தீங்க. இந்நேரம் நானும் எனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கிட்டு இருந்திருந்தா, இந்த பத்திரிகையை வாங்குற தகுதி இல்லாதவளா இருந்திருப்பேன்ல?” என அமைதியாக கேட்டாள் அவள்.
மகாதேவன் குனிந்த தலையை நிமிரவே இல்லை.
“நீங்க விட்டுட்டு போன மாதிரியே நான் அப்படியே இருக்கணும்னு எதிர்பாக்குறதும், நீங்க வந்த ஒடனே, நீங்க விட்டுட்டு போறதுக்கு முன்னாடி இருந்த மாதிரியே நான் இருக்கணும்னு எதிர்பாக்குறதும் உங்களுக்கு உறுத்தலியா?” என கேட்டாள்.
கட்டை பையை எடுத்து அவள் நீட்ட, அவர் அதை தயக்கமாக வாங்கி கொண்டார்.
“இதை மறந்துட்டேன்” என டேபிளை நோக்கி போய், அந்த பத்திரிகையும் கொண்டு வந்து பையில் வைத்தாள்.
மகாதேவன் கிளம்பியதும், கதவை அறைந்து சாத்தி விட்டு சோபாவில் வந்து உட்கார்ந்தாள்.
டேபிளின் மீதி இருந்த ஸ்ரீ ராமஜெயம் நோட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.




