Tamil novel – Jiteswari – Part 14/21

Amsterdam boat ride

செஷன் முடிந்ததும் விருட்டென்று கிளம்பி ரேஷ்மியின் ப்ளோருக்கு போனாள். இருவரும் கிளம்பி டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்கள்.

இயல்பு நிலை என்பது இங்கிருந்து கிளம்பும் வரை சத்தியமாக இருக்காது என நினைத்தாள். திரும்ப ஆபீஸ் போகும் எண்ணமில்லை ஜித்துவுக்கு.

சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்தில் ரேஷ்மிக்கு ஒரு முக்கியமான அழைப்பு வர அவள் வீட்டுக்கு கிளம்பினாள். ஜித்துவும் கெஸ்ட் ஹவுஸ் போய் உடையை மாற்றிக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள். மாலை ஐந்து மணிக்கு காபி குடித்துக் கொண்டே மெயில் செக் செய்தாள். தான் பதிலளிக்க வேண்டிய எந்த செய்தியும் இல்லை.

நிம்மதியாக ஆப் செய்து டேபிள் மீது வைத்து வெளியே கிளம்ப ரெடியானாள்.

ரஷ்மியின் போன் வந்தது. மதியம் பாதியிலேயே கிளம்பி விட்டதால் இப்போது கெஸ்ட் ஹவுஸ் வந்து கொண்டிருக்கிறாள். ஜித்துவை போட்டிங் அழைத்து சென்று பிறகு ஷாப்பிங் முடித்து இரவு திரும்புவதாக சொன்னாள்.

இருவரும் கிளம்பி பஸ் பிடித்து பிரின்சஸ் கேனல் வந்து சேர்ந்தார்கள்.

Amsterdam city walk

சூரியன் மறையும் மஞ்சள் மாலைப் பொழுது. 

அடர் பச்சை நிற நதியோடையின் இருகரையிலும் வெளிர் பச்சை மரங்கள் வரிசையாக நின்றன. கிட்டத்தட்ட ரெண்டு மைல் தூரம் ஒரே நேர்கோடாக ஓடுகிறது நதி.

ரேஷ்மி டிக்கட் வாங்கி வர இருவரும் படகில் ஏறி உட்கார்ந்தார்கள். இரண்டு மணி நேர படகு சவாரி நகரின் முக்கிய நதியோடைகள் வழியாக.

அடர் நிற முன் பக்க கோபுர அமைப்பு கொண்ட பதினேழாம் நூற்றாண்டு கால கட்டிடங்களும், தேவாலயமும் நகரின் வரலாற்றையும் பண்பாட்டையும் பிரதிபலித்தன. மெதுவாய் ஊர்ந்த படகிலிருந்த ஜித்துவின் மீது கரையோரம் இருந்து லிண்டன் மரங்கள் சில ஹார்ட் ஷேப் இலைகளை தூவியது.

“ஜித்து, இந்த லிண்டன் மரங்களுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது” என அவள் தோளின் மீதிருந்த பூக்களையும் சில இலைகளையும் எடுத்து ஜித்துவிடம் கொடுத்தபடியே சொன்னாள்  ரேஷ்மி.

“என்ன ஸ்பெஷல் இந்த மரத்துக்கு?” என கேட்டாள் ஜித்து.

“லிண்டன் மரம் பெரேயா என்ற ஜெர்மானிய பெண் கடவுளோடு தொடர்புடையது. அன்பு, காதல், உண்மை மற்றும் பாதுகாப்பை குறிக்கும் கடவுளாக கருதப்படுகிறார். இந்த மரம் காதலர்களின் புனித மரம் என வணங்கி இதன் அருகில் திருமண நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார்கள். இந்த மரத்தடியில் மனிதர்கள் பொய் பேச மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த காலத்தில் இதன் அடியில் நீதி விசாரணைகள் நடத்துவார்களாம். கிரீக்கர்கள் லிண்டன் மரத்தை நல்ல திருமண பந்தத்துக்கும், அருமையான மனைவிக்குமான குறியீடாக நம்புகிறார்கள்” என விளக்கினாள்.

“இந்த ரெண்டு இலை, நாலு பூ என் மேல விழுந்ததுக்கு ஏண்டி மைத்தாலஜியெல்லாம் பேசுற” என சிரித்தாள் ஜித்து.

ஜித்து நீ என்ன கோ த்ரூ பண்றேன்னு எனக்கு தெரியும். நீ ஒரு அருமையான மனைவி. ராஜு ஈஸ் கிப்ட்டட். ஸோ இந்த மரம் உன்ன ப்ளேஸ் பண்ணுதுனு நா நம்புறேன்” என ஆதரவாய் சொன்னாள் ரேஷ்மி.

ரேஷ்மி சொல்வதை புன்னகையோடு கேட்டுக்கொண்டே அவள் மீது விழுந்த லிண்டன் இலையையும் பூக்களையும் பர்சில் பத்திரப்படுத்தினாள் ஜித்து.

சற்று நேரத்தில் இருள் சூழ கரு நீல நீரில் பக்கவாட்டு கட்டிடங்களின் தங்க நிற விளக்குகள் பட்டு ஒளி வீச அந்த குறுகலான நீரோடை மினுக்க ஆரம்பித்தது. படகின் நேரெதிராக வானத்தில் பௌர்ணமி நிலா கம்பீரமாக தோன்றியது. இரண்டு மைல் நீளத்திற்கு ஒரே நேர் கோடாக அந்த படகு பயணம் இருந்தது.

ஜித்துவுக்கு அது நிலவை நோக்கிய பயணமாக தோன்றியது.

இப்படியே பயணப்பட்டு நிலவில் போய் இறங்கும்படியான மனநிலை அவளுக்கு மிகுந்த பரவசத்தை தந்தது. அக்கம்பக்கம் சுற்றிப் பார்க்கும் விருப்பமில்லாமல் நிலவை மட்டும் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

இரண்டு மணி நேரம் ரம்மியமாக இருந்தது. படகிலிருந்து வெளியேறி இரவு உணவு சாப்பிட்டு ரேஷ்மி நாளை ஆபீசில் சந்திக்கலாம் என சொல்லி விடை பெற்றுக்கொண்டு கிளம்பினாள்.

ஜித்து அந்த நதியோரம் இருந்த சிமெண்ட்டு பெஞ்சில் போய் உட்கார்ந்தாள். லிண்டன் மர நினைவு வர போனை எடுத்து அதைப் பற்றி தேடினாள். அது நம்ம ஊர் எலுமிச்சை மர வகை என தெரிந்ததும் லேசாய் புன்னகைத்தாள் கொண்டாள். அந்த மரத்தின் இன்னோர் சிறப்பம்சம் அது தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் என இருந்தது. சடாரென கார்சனின் நினைவு வந்தது ஜித்துவுக்கு.

ரேஷ்மி சொன்னது சரிதான். இந்த லிண்டன் மரம் தன் பாதுகாப்பை உறுதி செய்வதாக மனதார நம்பினாள்.

இதன் மூலமாக குறியீடாக இயற்கை ஒரு விதமான மனவலிமையை அவளுக்கு கொடுத்தது. 

கார்சனின் அன்றைய செய்கை அநாகரீகத்தின் உச்சமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அத்துமீறிய அவரின் நடத்தையோ சொல்லோ அவளின் முழு நாளையும் பாதித்தது. இன்னும் ஒரு வாரம் எப்படி ஓட்டுவது என ஒரு புறம் மேலோட்டமாய் கவலையாய் இருந்தாலும், ஆழ்மனம் கார்சனுக்கான எதிர்வினையை யோசிக்க ஆரம்பித்தது.

Tamil novel – Jiteswari – Part 2/21

Covid hospital situation

அவர் கணவர் ஒரு வாரம் கழித்து குணமாகி வெளியே வந்தார். பத்து நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை கற்பகத்திற்கு.

“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என செய்தி அனுப்பினார் இரவு. மறு காலை காலமானார். ஒரிசாவில் இருந்து மகனும் பாண்டியில் இருந்து மகளும் வர இயலாத சூழல்.

சாவின் விளிம்பு வரை சென்று மீண்ட நிலையில் பித்து பிடித்தார் போல இருந்தார் அவர் கணவர். செய்தி வர சங்கு புஷ்பமும் நேசப்பாவும் ஒடிந்து போனார்கள். நடக்க கூடாது என்று வேண்டிய ஒன்று நடந்து விட்டது.

கதறும் பிள்ளைகளை தாங்கவோ, கடந்து போனவருக்கு மரியாதை செய்யவோ இயலாத சூழல். இரண்டு மணி நேரம் அமைதியாக போனது.

சங்கு புஷ்பம் ஆனந்துக்கு போன் போட்டார்.

ஆனந்த் ஒரு மணி நேரத்தில் இரண்டு செட் கவச உடைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பிள்ளைகள் யாருக்கும் சொல்லாமல் இருவரும் கிளம்பி மருத்துவமனைக்கு போய் சேர்ந்தார்கள்.

அங்கே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார் கற்பகத்தின் கணவர்.

நேசப்பா போனதும் பாய்ந்து கட்டிக் கொண்டு கதறினார்.

சங்கு புஷ்பம் அவரை தாங்கலாய் பிடிக்க அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.

அரை மணி நேரம் ஆனது அவர் சற்று நிதானமாக.

ஜித்து போன் வந்தது அப்பாவிற்கு. அவர் போனை எடுத்து சங்கு புஷ்பத்திடம் நீட்ட உடைந்து போனார் சங்கு புஷ்பம்.

நேசப்பா கைத்தாங்கலாக அவரை அழைத்து சென்று காரில் அமர வைத்தார்.

அந்த நிமிடம் அந்த போனின் ஓசை சங்கு புஷ்பத்தின் மனதை பிசைந்தது. முதலில் அதை சைலண்டில் போட்டார். அவர்களுக்கு விஷயம் தெரியும். அப்பாவிடம் பேச விரும்புகிறாள்.

கால் ஹிஸ்டரியை பார்த்தார். வெறும் இரண்டு நிமிடம் மட்டும் பேசியிருக்கிறார்கள் காலையில். மகனிடமும் சில நிமிடங்கள்.

முழு கவச உடையில் சங்கு புஷ்பம் உள்ளே போனார். சக சிஸ்டர்கள் எல்லாரும் ஆழ்ந்த வருத்தத்திலும் பணிச் சுமையிலும் இருந்தார்கள்.

சற்று நேரம் எட்ட இருந்து கற்பகத்தை பார்த்தார்.

“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என அவரின் கடைசி செய்தி மனதில் நிழலாடியது.

ஜித்துக்கு போன் போட்டார். “அம்மாவ பாக்குறியாடா கண்ணா” என மெதுவாய் கேட்டார்.

அந்த பக்கம் கேட்ட ஓலக்குரல் சங்கு புஷ்பத்தின் திடத்தை அசைத்துப் பார்த்தது. மகளும் மகனும் பார்த்து  கதற அந்த சிறிய போனை பிடிக்கக்கூட வலுவில்லாமல் நின்றார் சங்கு புஷ்பம்.

பிறகு அங்கு வந்த ஆனந்த், வலுக்கட்டாயமாய் சங்கு புஷ்பத்தை வெளியே அழைத்து வந்தார்.

அங்கே இருந்த சிறிய கட்டை சுவரின் மீது அமர்ந்தார் சங்கு புஷ்பம். சற்று நேரத்தில் வண்டி வர இறுதி சடங்கிற்கு கிளம்பினார்கள்.

எட்ட நின்றவாறு நேசப்பாவும் சங்குபுஷ்பமும் அவரவர் போனில் ஜித்துக்கும் அவர் அண்ணனுக்கும் காண்பித்தார்கள். சிம்பிளாக சில சாங்கியங்களை அவர் கணவர் செய்ய ஐந்து நிமிடங்களில் உள்ளே போனார் கற்பகம்.

ஆறாத்துயருடன் மகளும் மகனும் விடையளிக்க வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

அடுத்த இரண்டு நாட்கள் அவர்கள் இருவரின் போனும் அமைதியாக இருந்தது. யாருடனும் பேசும் மன நிலையில் அவர்கள் இல்லை.

அவர்கள் இருவருமே ஓரிரண்டு வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேசவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து சற்று கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் அழைத்து செல்ல மகன் வர கற்பகத்தின் கணவர் ஒரிசா கிளம்பினார்.

ஜித்து வந்து அவர்களை வழியனுப்பி பிறகு இவர்களை சந்தித்து பேசி விட்டு பாண்டிக்கு கிளம்பி போனாள்.

Tamil novel – Jiteswari – Part 1/21

A retired woman enjoying the morning with coffee

அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.

உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.

சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.

எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.

மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.

a senior attending phone call

“சங்குமா, எழுந்துட்டீங்களா? நா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றாள்.

“இல்ல ஜித்து, சொல்லு, எப்ப வர?” என்றார் சங்குபுஷ்பம்.

“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.

“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.

“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.

“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.

“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.

“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.

டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.

லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.

“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.

“அவங்க கிட்டயும், பசங்க கிட்டயும் காலைல ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ஜித்து போன் பண்ணி சொல்லிட்டாளாம்” என்றாள் லக்ஷ்மி.

வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.

லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.

ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.

ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர்
சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.

கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.

கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.

ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.

கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.

சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.

சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.

“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.