Tamil novel – Jiteswari – Part 3/21

A woman engineer

ஜிதேஸ்வரி மெக்கானிகல் என்ஜினீயர். திருமணத்திற்கு முன்பு மும்பையில் ஐந்து வருடம் பணியில் இருந்தாள்.  கணவர் ராஜு எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். பாண்டியில் ஈபி ஆபீசில் நிரந்தர வேலையில் இருக்கிறார். ராஜுவின் வரன் வந்தபோது ஜிதேஸ்வரி தனது வருங்கால வேலை வாய்ப்புகளை பற்றி யோசித்தாள்.

ஜிதேஸ்வரி ஒரு சர்வதேச எரிவாயு நிறுவனத்தின் மும்பை கிளையில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். தமிழகத்தில் அது போன்ற நிறுவனங்கள் மிக குறைவு. பாண்டியிலோ ஒன்று கூட கிடையாது.

ஜித்து அவள் பெற்றோரிடம் இந்த வரனை தவிர்க்குமாறு சொல்லி விட்டாள்.

ராஜுவின் குடும்பம் கற்பகத்தின் உறவு வழியில் தூரத்து சொந்தம். விசாரித்ததில் நல்ல குடும்பம் என செய்தி வந்தது. ஜிதேஸ்வரியின் தந்தை இந்த வரனை முடிப்பதில் குறியாய் இருந்தார். நல்ல பையன், நல்ல வேலை மட்டுமல்லாமல் அடிக்கடி போய் பார்க்க ஏதுவாக பாண்டியிலேயே சம்பந்தம் கிடைத்ததில் அவருக்கு பரம சந்தோஷம்.

இது ஊருக்கும் வீட்டாருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவருக்கு உள்ளூர ஒரு பயம் இருந்தது. ஜிதேஸ்வரி செய்வது ஒரு நுட்பமான வேலை. நல்ல பதவி இந்த வயதிலேயே. அவர் பணி ஓய்வு பெறும்போது வாங்கிய சம்பளத்தை விட இப்போது அவர் மகள் வாங்குவது அதிகம். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் நிச்சயமாக இன்னும் நல்ல ஊதியம் கிடைக்கும். மேலும் பல நாடுகளில் பணி புரிய வாய்ப்பும் கிடைக்கும். இங்கு தான் அவரின் கவலை நிலைகொண்டது. இந்த ஆண்டு வரன் அமையாவிடில் அடுத்து வரும் ஆண்டுகளில் மகளின் தகுதிக்கேற்ப வரன் தேடுவது மிக சவாலான விஷயமாக இருக்கும். அவர்கள் சார்ந்த சமூகத்தில் அந்த அளவு நிலையில் இருப்பவர்கள் மிகவும் அரிதாக இருந்தது. அப்படி இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வரன்களாக இருந்தார்கள்.

அவருக்கு மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப இஷ்டமில்லை. அதனால் எப்படியாவது இந்த வரன் அமைய வேண்டும் என்று நினைத்தார்.

ராஜுவின் வரனை முடிப்பதில் அவளின் பெற்றோர்கள் மும்முரமாக இருந்தார்கள். ஜிதேஸ்வரிக்கும் ராஜூவை பிடித்திருந்தது. ஆனால் சிக்கல் ராஜுவின் அரசாங்க வேலையும் ஊரும் தான். 

மும்பையில் வேலை பார்க்க விருப்பமா என கேட்டாள் ஜிதேஸ்வரி. ராஜூவை விட அவர் தந்தை இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தார். மகன் எப்போதும் பாண்டியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அவர் எண்ணம்.

இரண்டு தரப்பும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். சில மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜிதேஸ்வரியின் மீது அழுத்தம் அதிகமானது. ஜிதேஸ்வரி அவள் வேலை செய்யும் கம்பெனியில் சென்னைக்கு மாற்றலுக்கு விசாரித்தாள்.

இடமாற்றல் சாத்தியம் என சொன்னார்கள். ஆனால் அடுத்த பணி உயர்வின் போது மும்பையில் இருக்க வேண்டும். இப்போது இருக்கும் நிலையிலேயே இன்னும் சில ஆண்டுகள் சென்னையில் தொடரலாம் என ஒரு சிக்கலான சூழல். இந்த மாற்றம் முழுமையான பலனளிக்காது என தோன்றியது அவளுக்கு. அப்போதும் ராஜு சென்னைக்கு மாற்றலாகி வரப்போவது இல்லை. வார இறுதி நாட்களில் யாராவது ஒருவர் போய் மற்றொருவரை சந்திக்கும் நிலை.

ராஜுவின் தந்தைக்கு இந்த தாமதம் எரிச்சலூட்டியது. ஒரு வேளை ராஜு மனம் மாறி மும்பை போவதாக முடிவெடுத்தால், அதற்கு பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு வருவது அரிதானதாக இருக்கும். அதனால் பேசாமல் இந்த பெண்ணை விட்டுவிட்டு வேறு வரன் பார்க்கலாம் என முடிவெடுத்தார். இரவு உணவின் போது ராஜுவிடம் இது பற்றி பேசினார்.

“இல்லப்பா, ஜிதேஸ்வரி முடிவெடுக்கட்டும். நாம வெயிட் பண்ணலாம்” என சுருக்குமாய் முடித்தான்.

இந்த பதிலில் ராஜுவின் விருப்பம் வெளிப்படையாக தெரிந்தது. அதனால் இதற்கு மேலும் காத்திருப்பது ஆபத்து என உணர்ந்தார். அடுத்த நாள் ஜிதேஸ்வரியின் தந்தையிடம் நேரில் போய் அவர் கவலையை பகிர்ந்து கொண்டார்.

இரு வீட்டு பெரியோர்களும் தங்கள் பிள்ளைகள் வேறு ஊரில் வசிப்பதை விரும்பவில்லை. ராஜுவின் அப்பா இவ்வளவு தூரம் தானாக முன்வந்து பேசியது பெண் வீட்டாருக்கு பிடித்திருந்தது. ராஜு உறுதியாக இருப்பது இன்னும் சந்தோஷமாக இருந்தது.

மீண்டும் பெண்ணிடம் பேசி விட்டு இந்த வாரத்திற்குள் முடுவு சொல்வதாக சொல்லி அனுப்பி வைத்தார்கள். அந்த வார இறுதியில் மும்பை போய் மகள் வீட்டில் இறங்கினார்கள்.

இந்த விஷயத்திற்காக அவர்கள் இவ்வளவு தொலைவு வந்தது நிலைமையின் வீரியத்தை அவளுக்கு உணர்த்தியது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முழுதாக இந்த வரனை பற்றி விவாதித்தார்கள். சென்னை இட மாற்றலின் விளைவுகளை விவரித்தாள் ஜிதேஸ்வரி. அவள் ஆபீசில் விசாரித்ததே அவர்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்தது. மேலும் ஒரு வாரம் தங்கி இருந்து இன்னும் தீவிரமாக அவளை கரைக்க ஆரம்பித்தார்கள். பத்து நாள் கடந்த பிறகு சென்னை மாற்றலுக்கு ஜிதேஸ்வரி விண்ணப்பித்தாள். அடுத்த ஒரு மாதத்தில் சென்னை வந்து சேர, திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பிறகு இருபதே நாட்களில் திருமணமும் நல்ல படியாக நடந்தது.

A traditional Tamil marriage ceremony