Tamil novel – Jiteswari – Part 10/21

Temple night

இறைவனும் இறைவியும் கிளம்பி வந்து குளத்தின் நடுவே இருந்த கல் மண்டபத்தில் உட்கார்ந்தார்கள்.

வடக்கு கோபுரத்திலிருந்து பார்த்த காகம் பறந்து போய் மாருதியிடம் விஷயத்தை சொல்லி எழுப்பியது.

இருவரும் போய் கல் மண்டபத்தின் ஓரத்தில் காதை தீட்டிக்கொண்டு உட்கார்ந்தார்கள்.

“என்ன மாருதி, சௌக்கியமா?” என்றார் இறைவன்.

மாருதி பணிவாய் வணக்கம் வைத்து விட்டு குளத்தின் மீது பார்வையை வீசியது.

“என்ன தாதா, நீங்க சௌக்கியமா?” என்றார் இறைவன் காகத்தை பார்த்து.

காகம் உள்ளுக்குள் நடுங்கியது. மெலிதாய் தலையசைத்து மௌனமாய் அமர்ந்திருந்தது.

“நீங்க ரெண்டு பெரும் தானே இவங்க லீகல் டீம்” என சிரித்தார் இறைவன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே மச்சிமா வந்து வணங்கினார். மற்ற மீன்களும் அவர் பின் சூழ்ந்து கொண்டு நின்றன.

இறைவி குட்டி மீனை பார்த்து “இங்கே வா” என்கிறார்.

“உனக்கு போரடிக்குதா இங்கே?” என வாஞ்சையாக கேட்டார்.

“ஆமாம்” என பயத்தோடு சொன்னது குட்டி மீன்.

“சரி, உன்னையும் உன் பேமிலியையும் பக்கத்துல இருக்குற ஆத்துக்கு அனுப்பவா? அங்க நீங்க ஜாலியா விளையாடலாம். நெறய ஜனங்க வருவாங்க” என கேட்டார் இறைவி. 

“வேண்டாம்” என சொல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டது காகம்.

“இல்ல, வேணாம்மா. நாங்க இங்கயே இருக்கோம்” என சொன்னது குட்டி மீன்.

“ஏன்?” என கேட்டார் இறைவி.

“நீ ஏன் அவங்க நோ சொல்லணும்னு வேண்டிக்கிட்ட?” என டக்கென்று அதே நேரத்தில் காகத்திடம் கேட்டார் இறைவன்.

தொக்காய் மாட்டியது காகம். அஜெண்டா அண்டாவில் தானாய் குதித்து மாட்டிக் கொண்டது.

டெம்பிள் ஓனர் கேட்கிறார். எந்த டெம்ப்ளேட்டில் பதில் சொல்வது என யோசித்தது.

“என்ன, ஓனர பத்தி என்ன யோசனை?” என அதை மீண்டும் சீண்டினார் இறைவன்.

இந்த கேள்வியில் டெம்ப்ளேட்டை முடிவு செய்தது காகம்.

“இல்ல சாமி, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல. ஆத்து தண்ணி ரொம்ப மாசா இருக்கு. ஜனங்க குடிக்கவும் லாயக்கு இல்லை. மீனுங்க வாழவும் லாயக்கு இல்லை. அங்க போய் சாகுறதுக்கு இதுங்க இங்கயே பொழச்சி இருக்கலாம்” என விளக்க தீபத்தை ஏற்றியது காகம்.

“ஏன் மாசா இருக்கு? யாரு பண்ற வேலை இது” என கோபமாய் கேட்டார் இறைவி.

“உன் டெம்ப்ளேட் ஒர்க்அவுட் ஆயிடுச்சி. டீடைலா சொல்லு” என சிரித்தார் இறைவன்.

ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும். ஆனா நம்மள வெச்சி செய்றாங்க என நினைத்தது காகம்.

“அதான் எங்க டெம்ப்ளேட்” என சொன்னார் இறைவன்.

காகத்துக்கு கேம் புரிந்து விட்டது.

பேசாமல் தெரிந்ததை சொல்லி விடலாம் என ஆரம்பித்தது.

“எல்லாம் அந்த சிமெண்டு பேக்டரியால வந்து வினை. அவனுங்க கழிவையெல்லாம் ஆத்து தண்ணில கொட்டுறானுங்க. மாசு வாரியமும் கண்டுக்காம இருக்கு. ஜனங்க போராடி போராடி அலுத்துப் போய்ட்டாங்க. பேக்டரிகாரனுங்க ஊருக்கு தண்ணி சுத்திகரிக்குற மெஷினை போட்டு பிரச்சினையை அமுக்கிட்டாங்க. நல்ல தண்ணி கெடைக்குறதால ஜனங்களும் அந்த பிரச்சினையை அப்படியே விட்டுட்டாங்க. பாவம், இந்த மீனுங்க தான் கூண்டோடு அழியுதுங்க” என விவரித்தது காகம்.

மச்சிமாவும் மற்றும் சில மீன்களும் குனிந்து கண்ணீர் சிந்தின.

Fish family

அவர்கள் இனத்தின் அழிவை யாரோ ஒருவர் விவரிக்கும் போது தாங்கள் தப்பி பிழைத்ததற்கு சந்தோஷப்படுவதா அல்லது தங்கள் இனத்தின் அழிவிற்காக வேதனைப்படுவதா என புரியாமல் இருந்தன.

இறைவி கண் மூடி இந்த டாபிக்கை யோசித்தார்.

அந்த ஓனர் தன்னுடைய பரம பக்தர் என தெரிய வந்தது.

பேக்டரி லாபத்தில் கோவிலுக்கு ஒரு தொகையை உபயமாக கொடுத்திருக்கிறார்.

“அந்த ஓனர் உங்க டிவோடீ தான். நம்ம கோவிலுக்கு கூட நெறய காசு குடுத்து இருக்காரு. அந்த குஷில நீங்களும் அந்த ஆளு வேண்டுற காண்ட்ராக்டெல்லாம் முடிச்சு தரீங்க” என தைரியமாய் சொல்லி விட்டது காகம்.

“நெலம் நீரெல்லாம் பாழாக்கிட்டு, இந்த கொளுத்த காப்பாத்துறேன்னு சுத்து செவரு கட்ட, கேட்டு போடன்னு நிதி குடுத்திருக்கான். அதையும் போர்ட் போட்டு மாட்டி நல்லவன் பேரெடுக்குறான். இதே போர்ட ஆத்தோரம் வெப்பானா? நான்தான் இத நஞ்சாக்கிட்டேன்னு” என திட்டி தீர்த்தது மச்சிமா.  

சிமெண்டு பாக்டரி ஓனர் கிழவன் சிக்கி சின்னா பின்னமானார்.

“ஏதோ உண்டில ஐஞ்சு பத்து போடுறவனை ஒண்ணும் செக் பண்ண வேண்டியதில்லை. லம்பா ஒரு தொகையை ஒருத்தன் குடுத்தா, டியூ டிலிஜன்ஸ் பாக்காம எப்புடி வாங்கலாம்?” என முதல் கேள்வியை கேட்டது மாருதி.

“இது கார்பொரேட் குரங்கு” என நினைத்துக் கொண்டார் இறைவி.

இறைவன் இறைவியை பார்த்தார். பிறகு மச்சிமாவிடம் பேச ஆரம்பித்தார்.

“நாங்க இந்த விஷயத்துக்கு ரொம்ப வருத்தப்படறோம். தப்பு செஞ்சவங்களுக்கு நாங்க தக்க தண்டனையை கொடுப்போம். இனிமே இந்த மாதிரி நடக்காம நாங்க பாத்துக்கறோம்” என்றார்.

“என்ன நீங்களும் ராஜா மாதிரியே பேசுறீங்க? அவரும் அப்டி தான். எங்க யார் செத்தாலும், ரேப்பு நடந்தாலும் ஒரு லெட்டரை எங்களுக்கு போட்டுட்டு அந்த விஷயத்தை கெடப்புல போட்டுடுவாரு” என காகம் ராஜாவை கோர்த்துவிட்டது.

முதலில் சிமெண்ட் கம்பெனி ஓனர் கிழவன். இப்போது ராஜா.

அடுத்து லிஸ்டில் இருப்பது தாங்கள் தான் என அப்போது அவர்களுக்கு தெரியவில்லை.

“சரி, அந்த ஓனர் பண்ண தப்புக்கு அவர் பதில் சொல்லியாகணும். அவர் அனுபவிப்பார். கேட்டு தொறக்க ஏற்பாடு பண்றோம்” என்றார் இறைவி.

“ஆத்து தண்ணிய சுத்தம் பண்ணி தருவீங்களா, ப்ளீஸ்” என்றது குட்டி மீன்.

“கண்டிப்பா, அந்த ஓனர இனிமே பொறுப்பா இருக்க சொல்றேன். நல்ல மழையை குடுத்து அந்த ஆற்றை வளமாக்குறேன்” என உத்திரவாதம் கொடுத்தார் இறைவி.

மச்சிம்மாவும் மீன்கள் கூட்டமும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார்கள்.

சரியான மங்குனி கூட்டம் என மனதிற்குள் திட்டியது காகம். இன்னும் எவ்ளோ இருக்கு சரி பண்ண. இதுங்க என்னடான்னா இதுக்கே சந்தோசப்படுதுங்க. இதுங்களுக்கு சுய புத்தியே இல்ல என கருவியது.

“ஏங்க, நாமளும் வாட்டர் பவுண்டைன் போடலாமா கொளத்துல. அப்டியே கொஞ்சம் நல்ல லைட்டிங்கும் பண்ணா ஆம்பியன்ஸ் நல்லாயிருக்கும்” என கேட்டார் இறைவி.  

இரண்டு மாவட்டம் தாண்டி இறைவியின் சகோதரியின் திருத்தலம் இருக்கிறது. நீரூற்று வைத்த குளம் இருக்கிறது அங்கே.

“மந்திரி சம்மந்தி தான் அந்த கான்டராக்ட செய்யுறாரு. உங்க அக்கா கோவிலுக்கும் அவரு தான் பவுண்டைன் போட்டாரு. கூட கொஞ்சம் அமௌண்டையும் ஆட்டையை போட்டாரு அந்த டீலிங்க்ல” என சொல்லியது காகம்.

லிஸ்ட் நீண்டு கொண்டே போனது. இறைவன் அதையும் நோட் செய்து கொண்டார். காகத்தின் டெம்பிளேட் நன்றாக வேலை செய்தது.

“உனக்கு ஒண்ணும் பிராது இல்லியா? சௌகர்யமா இருக்கியா?” என டாபிக்கை காகத்தின் பக்கம் திருப்பினார் இறைவன்.

“ஏதோ உங்க புண்ணியத்தால சாப்பாட்டுக்கு கொறையில்லாம இருக்கேன். வேளா வேளைக்கு வயிறார சாப்புடறேன். வேற என்ன வேணும் ஒரு ஜீவனுக்கு?” என பவ்யமாய் பதில் சொன்னது காகம்.

தன்னிடம் வரும்போது காகம் சட்டென்று நியூட்ரல் கியருக்கு மாறியது மச்சிமாவுக்கு உறுத்தலாக இருந்தது.

நேத்து தான் ரேடியேஷனுக்கு பயந்து வீடு மாறின கதையை சொல்லுச்சு. இன்னிக்கு என்னடான்னா ஒண்ணும் பிரச்சினை இல்லேன்னு சொல்லுது” என மனதிற்குள் அலுத்துக் கொண்டது.

“ஆனா கொஞ்சம் கில்டியா பீல் பண்றேன்” என இழுத்தது காகம்.

மாருதிக்கு காகத்தின் அடுத்த அஜெண்டா புரிந்தது. ஆனாலும் பேசாமல் இருந்தது. தன்னிடம் கேட்டால் பதில் சொல்லலாம் என நினைத்தது.

“சொல்லு கேக்குறோம்” என்றார் இறைவன்.

“இல்ல, கணேசன் அண்ணனுக்கு நல்ல சாப்பாடு போடுறீங்க. நம்ம கோசாலைல இருக்குற யசோதாவுக்கும் ஒரு குறைவும் இல்ல. நானும் மாருதியும் அலைஞ்சு திரிஞ்சு கோவிலுக்குள்ள வயித்த நெறைச்சுக்கறோம். ஆனா இந்த மீனுங்களுக்கு தான் ஒரு வழியுமில்லை. இயற்கையாவே அதுங்களுக்கு கெடைக்குற புழு பூச்சி பாசிய தின்னு வாழுதுங்க. எல்லாருக்கும் படியளக்குற நீங்க அதுங்களுக்கு ஒரு வழி பண்ணலாமுல்ல? ஏதோ சில பக்தர்கள் புண்ணியத்துல அப்பப்போ கொஞ்சம் பொரி சாப்பிட்டுதுங்க. அதையும் அந்த தங்கராஜு பய பூட்டு போட்டு தடுத்துட்டான். அதுங்க மனசு எவ்வளவு வேதனையா இருக்கும்? நாங்க எல்லாம் உங்க படைப்பு தானே. உங்க வீட்ல இருக்கவுங்க, கோவிலுக்கு வர பக்தர்கள் எல்லாருக்கும் குறைவில்லாம உணவை குடுக்குற நீங்க, ஏன் இந்த மீன் குட்டிகளை மறந்தீங்க? நா வேளாவேளைக்கு சாப்பிடும் போது இதுங்க ஞாபகம் வருது, கூடவே தங்க ராஜு மேல கோவமும் வருது” என சொல்லி முடித்தது காகம்.

மாருதியும் மச்சிமாவும் வாயடைத்துப் போனார்கள். 

இறைவனும் இறைவியும் அதே நிலையில் தான் இருந்தார்கள்.

“உங்கள் காலடியிலேயே வாழும் இவர்களுக்கு என்ன கருணை காட்டினீர்கள் இதுவரை? உணவும் இல்லை. உற்சாகமும் இல்லை. இந்த மீன்கள் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த கோவிலில் எந்த மனித நடமாட்டமும் இல்லாமல் வெறுமையாக இருக்கின்றன. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?” என பொரிந்து தள்ளியது காகம்.

மாருதிக்கு காகத்தின் மீது பெரும் மரியாதை ஏற்பட்டது. இனியும் தான் வாய் மூடி இருப்பது இழிவு என கருதியது.

“மன்னியுங்கள் மச்சிமா. இவ்வளவு நாள் இதை ஏன் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் எப்போதோ தீர்வு கண்டிருக்கலாமே?” என கேட்டார் இறைவி.

“படைத்த தாய்க்கு தெரியாதா பிள்ளைகளின் நிலை” என இருந்து விட்டோம் என அப்பாவியாய் சொன்னது மச்சிமா.

“என்னையும் மன்னித்துக் கொள்ளுங்கள் மச்சிமா. நாங்களும் எங்கள் அருகிலேயே வாழும் உங்களை கவனிக்கத் தவறிவிட்டோம்” என வருந்தினார் இறைவன்.

மச்சிமா பதறி விட்டது. இவ்வளவு தூரம் இவர்கள் பணிவாய் மன்னிப்பு கேட்பார்கள் என அது எதிர்பார்க்கவில்லை.

மாருதி காகத்தை பெருமையாய் பார்த்தது. மிகவும் நுட்பமான விஷயத்தை தைரியமாக வாதம் செய்து தீர்த்து வைத்திருக்கிறது. 

கடவுளின் காலடியிலேயே இருந்தாலும் எந்த பிரச்சினையாய் இருந்தாலும் வாய் திறந்து கேட்டால் தான் தீர்வு கிடைக்கும் என அவர்களுக்கு தெளிவாய் புரிந்தது.

Leave a comment