
ஜித்து நெதர்லாந்தில் இருந்து திரும்ப வந்து சென்னையில் சங்கு புஷ்பம் வீட்டில் போய் தங்கினாள். லக்ஷ்மியும் குழந்தைகளும் வர வீடு கலகலப்பாக இருந்தது.
அன்று மாலை ஜித்துவும் லக்ஷ்மியும் மார்க்கெட்டுக்கு போக, நேசப்பா புஷ்கரையும் கல்யாணியையும் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
சாமி கும்பிட்டு வெளியே சுற்றி குளமருகே வந்தார்கள். குளம் பூட்டி இருந்தது. கம்பி வழியாக உள்ளே எட்டி பார்த்தார்கள்.
“தாத்தா, நெறய பிஷ் இருக்குல்ல” என சொன்னான் புஷ்கர்.
“ஆனா உள்ள போக முடியாதே” என வருத்தப்பட்டது கல்யாணி.
குளம் நிறைய நீர் இருந்தது. ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் மரகத பச்சை நிறமாகவும், சற்று தள்ளி இருந்து பார்த்தால் நீல பச்சையாகவும் இருந்தது.
“தாத்தா, ஏன் இந்த தண்ணி க்ரீன் கலர்ல இருக்கு? என கேட்டது கல்யாணி.
“இந்த கொளத்துல பாசி அதிகமா இருக்குமா. அதான் க்ரீன் கலர்ல இருக்கு. அதனால தண்ணியும் க்ரீனா தெரியுது” என்றார் நேசப்பா.
“ஏன் பாசி அதிகமா இருக்கு?” என அடுத்த கேள்வி வந்தது.
“இந்த தண்ணி புளோ ஆகாதுமா. நிலத்தடி தண்ணியோட மழை தண்ணியும் சேர்ந்து இங்கயே தான் இருக்கும். பக்கத்துல எவ்ளோ பெரிய மரம் இருக்கு பாரு. அதுலேர்ந்து விழுற இலையெல்லாம் தண்ணில விழும். அது இந்த பாசி அல்கெக்கு எல்லாம் நல்ல உரமா மாறிடும். அப்போ இன்னும் அதிகமா வளரும்” என விவரித்தார் நேசப்பா.
“அப்போ இது டர்ட்டி வாட்டரா? என்றான் புஷ்கர்.
“இல்லப்பா. இது நல்ல தண்ணி தான். கோவில்காரங்க இன்னும் கொஞ்சம் பராமரிப்பு செஞ்சா க்ளீனாய்டும்” என்றார் நேசப்பா.
“என்ன செஞ்சா க்ளீனாகும்? என கேட்டது கல்யாணி.
“ரெகுலரா பராமரிக்கணும்மா. பாசி ஆல்கேவெல்லாம் ரிமூவ் பண்ணனும். அந்த மரத்துக்கு கீழ கொளத்து பக்கம் கொஞ்சம் நெட்டு போடலாம். இலை குச்சியெல்லாம் தண்ணில விழாது. ரெகுலரா பிரெஷ் தண்ணிய பம்பு வச்சி கொளத்துக்கு அனுப்பனும்” என தனக்கு தெரிந்ததை சொன்னார் நேசப்பா.
“இதெல்லாம் சாமி பாக்காதா தாத்தா? இது அவர் வீடு தானே? என தெளிவாய் கேட்டது கல்யாணி.
துணுக்குற்று போனார் நேசப்பா.
“ஏண்டி, சாமி என்ன பண்ண முடியும்? கோவில் ஆளுங்க தான் மெயின்டெயின் பண்ணணும்” என பதில் சொன்னான் புஷ்கர்.
“அவங்க வேலைய ஒழுங்கா செய்யலேன்னா கண்ணை குத்தலாம்ல சாமி” என குண்டைப் போட்டது கல்யாணி.
“ஏன் தாத்தா, சாமி அவங்க கண்ணை குத்தாதா?” என தொடர்ந்தான் புஷ்கர்.
நேசப்பா சற்று யோசித்தார்.
“கண்ணை குத்தி என்ன பிரயோஜனம்? அப்புறம் சாமி காப்பாத்துன்னு அவருகிட்ட தான் போய் நிப்பாங்க. அதனால அப்பப்ப கொஞ்சம் நல்ல புத்தி குடுப்பாரு. அப்புறம் ஒழுங்கா வேலை செய்வாங்க” என சொன்னார்.
“எப்போ இவங்களுக்கு நல்ல புத்தி குடுப்பாரு இந்த கொளுத்த க்ளீன் பண்ண?” என விடாமல் கேட்டது கல்யாணி.
“அது சாமிக்கு தான் தெரியும்” என முடித்தார் நேசப்பா.
அந்தி சாயும் வேளை. இளம் சூடான மெல்லிய கதிர்கள் நீரின் மேல் பட்டு அன்றைய நாளுக்கான இறுதியில் விடை பெற்றுக்கொண்டன.
ஏற்கெனவே பெரிதாக சலனமில்லாமல் இருக்கும் குளம், அடுத்து வரும் இரவுக்கு மெளனமாக தயாரானது. சூரிய கதிர்கள் இரக்கமே இல்லாமல் குளத்தின் மேலிருந்த அழகான பச்சை கம்பளத்தை வாரி சுருட்டிக் கொண்டு கிளம்பியது.
வண்ணத்தை இழந்த வருத்தமில்லாமல் குட்டி அணில் போட்ட சிறு கொட்டையில் தளும்பி தளும்பி சந்தோஷப்பட்டது குளம். சற்று நேரத்தில் மெதுவாக எட்டிப் பார்த்த நிலா கருமையான குளத்தின் மேல் தன் ஒளியை பாய்ச்சியது. அடர் நீலமாக மாறிய குளம் அங்காங்கே வெள்ளி பிரகாசத்தை தெளித்தது.
“தாத்தா எனக்கு பிஷ் பாக்கணும். எப்போ கேட்டு ஓப்பன் பண்ணுவாங்க?” என ஆசையாய் கேட்டான் புஷ்கர்.
“ஆமா தாத்தா. எனக்கும் உள்ள போய் பாக்கணும்னு ஆசையா இருக்கு” என சொன்னது கல்யாணி.
நேசப்பா சுற்றி பார்த்தார். போர்டு எதுவும் இல்லை.
“வாங்க, ஆபீஸ் ரூம்ல போய் கேக்கலாம்” என அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
“சார், கொளம் எப்போ சார் தொறப்பீங்க?” என கேட்டார் நேசப்பா.
பைலில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

“சார், காலைல ஆறு டு ஏழு தொறப்போம். அய்யர் வந்து வேலைய முடிச்சிட்டாருன்னா பூட்டிடுவோம். பப்ளிக் உள்ள போக முடியாது” என்றார் ஆபீசர்.
“அப்போ பிஷ்ஷு வெளில வருமா எங்கள பாக்க?” என மெதுவாய் கேட்டது கல்யாணி.
சடாரென்று நிமிர்ந்து உட்கார்ந்து மேலும் கீழும் பார்த்தார் ஆபீசர்.
டேபிளை விட சற்று அதிக உயரம் தான் இருந்தது கல்யாணி.
எழுதி கொண்டிருந்த பேனாவை மூடி வைத்தார். பக்கத்தில் இருந்த சேரை காட்டி அவர்களை உட்கார சொன்னார்.
“இல்லமா, கோவிலுக்கு ஜனங்க நெறய வராங்க இல்ல. அவங்க கொண்டு வர பொருளால நெறய குப்பை கொளத்துல சேருது. அப்புறம் கவனிக்குறைவா இருந்தாங்கன்னா தவறி விழுந்துடுவாங்க. அதனால தான் பூட்டி வச்சிட்டோம்” என விளக்கினார் ஆபீசர்.
“ஆனா தண்ணி ஏன் டர்டியா இருக்கு? பூட்டியே இருந்தா அது கிளீனா தான இருக்கணும்” என கேட்டான் புஷ்கர்.
பங்கமான கேள்வி. அவமானமாக இருந்தது ஆபீஸருக்கு.
“சாமி இன்னும் புத்தி குடுக்கலண்ணா கிளீன் பண்றதுக்கு” என சுருக்கமாய் சொன்னது கல்யாணி.
இப்போது பெருத்த அவமானமாக இருந்தது ஆபீஸருக்கு. சங்கடமாய் நெளிந்தார்.
“நாளைக்கு காலைல வா பாப்பா. சாவி வாங்கி வெச்சுருக்கேன்” என்றார் ஆபீசர்.
“தேங்க்ஸ் அங்கிள்” என சொல்லி புறப்பட்டார்கள் இருவரும்.