Tamil novel – OTP – Part 11/20

புஷ்பா அண்ணிக்கு நேரடி அரசியல் அனுபவம் கிடையாது. மக்கள் தொடர்பும் கிடையாது.

கட்சிக்காரர்களின் நல்லது கெட்டது நிகழ்வுகளில் அண்ணன் மட்டும் தான் வருவார்.

அண்ணிக்கு இப்போது திடீர் ஆசை கவுன்சிலராகி விட வேண்டும் என்று.

ஒரே பெண் அவர்களுக்கு. கல்யாண சம்பந்தம் பேசும்போது அண்ணனும் அண்ணியும் ஆளுக்கொரு பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

தன் சமூகத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உயர் அந்தஸ்த்தில் உள்ள எல்லா வரன்களையும் குறித்து வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அண்ணி கவுன்சிலராவது, அடுத்து அண்ணன் எம்எல்ஏ ஆவது, பவரும் பசையும் இரு கரை புரண்டு ஓடுவது, பிறகு மாநில தலைமையும் அவரின் கிச்சனும் சேர்ந்து மகளுக்கு அட்சதை போட்டு திருமணம் நடத்துவது, அதை போட்டோ எடுத்து ஹாலில் மாட்டுவது என அவர்களுக்கு சின்ன சின்ன ஆசைகள் இருந்தது.

அந்த சின்ன ஆசைகளில் ஒரு ஆசையை நிறைவேற்றியே தீர்வது என கங்கணம் கட்டிக்க கொண்டு அண்ணிக்காக தேர்தல் வேலைகளை ஆரம்பித்தார் ரத்தினம்.

எல்லா நிலையிலும் பிரதான கட்சிகள் ரெண்டு மட்டும் தான் மாநிலம் முழுவதும்.

அண்ணியார் அதில் ஒரு கட்சி வேட்பாளர். அவருக்கு எதிராக முக்கியமான போட்டியாளர் தற்போதய ஆளுங்கட்சியை சேர்ந்த சித்தா டாக்டர் நேசமணி. மற்ற வேட்பாளர்கள் பற்றி அக்கறையில்லை.

இப்பகுதியில் இரு பிரதான கட்சிகளும் சம பலத்தில் இருக்கிறது. படித்தவர்கள், பாமரர்கள் என சரி அளவில் இருப்பவர்கள்.

அண்ணியார் நம்பி இருப்பது பாமரர் ஓட்டு வங்கி. அண்ணன் எப்படியும் கடைசி நேரத்தில் பசையை இறக்கி தன்னை ஜெயிக்க வைத்து விடுவார் என நினைக்கிறார் அண்ணி.

சித்தா டாக்டரும் மக்களுக்கு நல்ல அறிமுகம். கை சுத்தமானவர். குறை சொல்ல பெரிதாக எதுவும் இல்லை.

இந்த நிலையில் அண்ணியாரின் வெற்றிக்கு தன் பங்கை எப்படி ஆற்றுவது என யோசித்தார் ரத்தினம்.

அவர் சும்மா இருந்தாலும் அவரின் பல்லாண்டு கால அனுபவம் அவர் மூளையை தூங்க விடவில்லை. இரண்டு மூன்று நாட்கள் எல்லா வித்தைகளையும் யோசித்து பார்த்து அலசி ஆராய்ந்து கடைசியில் ஒரு வியூகத்தை அமைத்தார்.

நம்பிக்கையோடு போய் அண்ணனைப் பார்த்தார்.

“என்ன ரத்தினம், ஆளையே காணோம். அண்ணி உன்ன என்ன காணாமேன்னு கேட்டுக்கிட்டிருந்தா” என பாசத்தை தூவினார் அண்ணன்.

“அட நா எங்கண்ணே போகப்போறேன். நம்ம அண்ணி விஷயமாத்தான் கொஞ்சம் வேல பாத்துட்ருந்தேன்” என் பிட்டை போட்டார் ரத்தினம்.

“அருமைப்பா, என்ன விஷயம் சொல்லு” என் கூர்ந்து கேட்க ஆரம்பித்தார் அண்ணன்.

ரத்தினம் முழுதாய் சொல்லி முடிக்க “நல்ல கிரவுண்ட் ஒர்க் பண்ணியிருக்க ரத்தினம். இதான் ஒரிஜினல் கட்சிக்காரனுக்கும் ஐடி விங்காரனுக்கும் வித்தியாசம். போன்ல போட்டோ போஸ்ட்டு போட்டே மேல வந்துடறானுங்க” என மாசெவை குதறினார்.

“கட்சிக்காரன் ஐடி விங்ல இருக்கலாம். ஆனா ஐடி விங்ல இருக்குற எல்லாரும் கட்சிக்காரங்க ஆக மாட்டாங்க” என நிதர்சனத்தை சொன்னார் அண்ணன்.

பிறகு சற்று யோசித்தவர் “ஒண்ணும் பிரச்சினை இருக்காதில்ல ரத்தினம். பாத்து ஹாண்டில் பண்ணு” என்றார்.

அப்பாடா என்றிருந்தது ரத்தினத்திற்கு. எடுத்த எடுப்பில் நிராகரிக்கவில்லை.

பார்த்து செய் என்கிறார். அண்ணனிடம் க்ரீன் சிக்னல் வாங்கியது உற்சாகத்தை கூட்டியது ரத்தினத்திற்கு.

“நன்றிண்ணே. எல்லா வேலையும் பக்காவா கச்சிதமா நடக்கும்ணே. ஆனா கேண்டிடேட்டு செலவு கொஞ்சம் ஆகும்ணே” என இழுத்தார் ரத்தினம்.

கூட இருக்குற ஆளுங்களிலேயே இவன் ஒருத்தன் தான் தானா வந்து ஒரு மேட்டர சொல்றான். வேலக்காரனா இருக்கான். மத்தவன்லாம் மண்டைய கழுவி வச்சிருக்கானுங்க. கார்ல பின்னாடி சீட் தேய்க்க தான் லாயக்கு புடிச்சவுனுங்க என் மனதிற்குள் அவர் டீமை திட்டி தீர்த்தார்.

அதெல்லாம் பாத்துக்கலாம் ரத்தினம். தோரயமா எவ்ளோ ஆகும்” என கேட்டார்.

கரன்சி மேட்டர் வரை இந்த பிளான் இன்றே வரும் என ரத்தினம் நினைக்கவில்லை.

இப்போதான் சூதானமா இருக்கணும் என மூச்சை இழுத்து விட்டார் ரத்தினம்.

“ஒரு அஞ்சு எல் ஆகும்ணே கேண்டிடேட் படிய. அப்புறம் நீங்க பாத்து எனக்கு என்ன தந்தாலும் ஒக்கேண்ணே” என தைரியமாய் சொல்லி முடித்தார் ரத்தினம்.

அடுத்த இரண்டு நிமிடங்கள் முள் மேல் நிற்பது போல் இருந்தார் ரத்தினம். அவர் அரசியல் வாழ்க்கையில் அவர் கையாளப்போகும் மிக உச்சபட்சமான ஒரு தொகை.

“சரி, நல்ல படியா செய் ரத்தினம்” என ஆசீர்வதித்தார் அண்ணன். அடுத்த நொடி அனிச்சையாக அண்ணண் காலில் லேண்ட் ஆனார் அன்புத் தம்பி இரத்தின முத்து சேகர். 

Tamil parody song – DMK vs TVK

TVK Thiruchy meeting effect on DMK Udayanidhi Stalin

ஜூனியர் தலீவர்:
திருச்சி குலுங்கையிலே
ஊரே திரள்கையிலே
அந்த அரும்பு மலர்கையிலே
நான் பவரை நெனக்கலியே
கில்லி அருவா வெட்டிருச்சே!

உடன் பிறப்பு:
விஜயி வெட்டருவா
உன் ஆசை பட்டுருமா
உன் கோஷம் எடுபடுமா?

நான் எலக்க்ஷன் நெனக்கலியே
நெஞ்சுறுகி போயிருச்சே
நெஞ்சுறுகி போயிருச்சே!

ஜூனியர் தலீவர்:
பரிசா குடுக்கலியே
என் உழைப்பு குறையலியே
நாம் தாழ்வும் பழகலியே
உன் முகத்தை பார்க்கையிலே
என் துன்பம் ஏறிடுச்சே!

உடன் பிறப்பு:
ராசா தேறிடணும்
நாம் மோசம் புரிஞ்சிக்கணும்
புது பாதை பார்த்துக்கணும்!

நல்ல திசையில் நடக்கையிலே
எதிர் காலம் பொறந்திடுமே
எதிர் காலம் பொறந்திடுமே!

ஜூனியர் தலீவர்:
வாழ்க்கை பூடகமா
என் பொழப்பு பொய் கணக்கா
தினந்தேறும் பெரும் களவா
என் விதிய எழுதையிலே
அந்த சாமியும் உறங்கியதே!

உடன் பிறப்பு:
ஐயா கலங்காதே
சூரியன் உடையாதே
ஊர் வஞ்சம் நெலைக்காதே!

நீ உள நாள் மட்டும் தான்
இந்த உசிரும் போகாதே
இந்த உசிரும் போகாதே!

Tamil novel – OTP – part 10/20

ரத்தினத்திற்கு தெரிந்த ஒரே தொழில் கட்சிப்பணி. தெரிந்த ஒரே கட்சி அவர் கட்சி மட்டுமே. கட்சியில் என்ன பணி என்றால் அவர் இருக்கும் நிலையில் பணம் தவிர மற்ற எல்லாமும் என சொல்லலாம்.

கிளை மட்டத்தில் இருந்து ஆரம்பித்து இருபது ஆண்டுகளாக களத்தில் பணியாற்றி ஒன்றியத்தின் அருகே இப்போது தான் கரை சேர்ந்திருக்கார்.

மாவட்ட அளவில் நல்ல அறிமுகம் இருந்தாலும் இன்னும் ஒரு படி முன்னேற்றத்திற்க்காக காத்திருக்கிறார்.

நிரந்தர தொழில் என்று எதுவும் கிடையாது. வருமானம் மழையாக இல்லெயென்றாலும் சமயங்களில் தூறலாகவோ இல்லை சாரலாகவோ இருக்கும்.

கருமேகம் சூழ்வது போல் எங்கு பிரச்சினையோ, வில்லங்கமோ இருக்கிறதோ, அங்கே வீசும் காற்றின் திசைக்கேற்ப சாய்பவர்.

விசுவாசத்தையும் உழைப்பையும் மட்டுமே கொட்டி கட்சியில் முன்னேற முடியும் என்று இன்று வரை நம்புபவர்.

தன் அனுபவத்தாலும் திறனாலும் தன்னால் நூதனமான முறையில் செயலாற்ற முடியும் என ஆழமான எண்ணம் உடையவர்.

கட்சி சகாக்களை ஒருங்கிணைத்தாலும் சிறு ஒளி கீற்று கூட மற்றவர் மீது விழாமல் பார்த்துக்கொள்வார்.

இப்போது அவர் அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். கார்பொரேஷன் தேர்தல் காலம்.

ரத்தினத்தின் ஏரியாவில் அவர் கட்சி வேட்பாளராக நிற்பது எக்ஸ் எம்எல்ஏ மனைவி திருமதி புஷ்பா.

எக்ஸ் எம்எல்ஏ சமீபத்தில் ரத்தினத்திற்கு ஆருயிர் அண்ணனாக கிடைத்தவர்.

நீண்ட காலம் தூரத்தில் இருந்து ரத்தினத்தின் செயல் பாடுகளை பார்த்தவர் அண்ணன்.

சில மாதங்கள் முன்பு அவர் வலது கரம் அகால மரணமடைய புது வலது கரமாய் ஆனார் ரத்தினம்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்ட சபை தேர்தல். அண்ணனுக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது.

இப்போது மனைவி கவுன்சிலராகி, பிறகு அவரும் எம்எல்ஏ ஆகி விடுவார் என திட்டம்.

கார்பொரேஷன் அளவிலும் மாநில அளவிலும் தனக்கு இன்னும் சற்று பவர் கூடும் என நாடி நரம்பெல்லாம் நம்பிக்கை கொப்பளிக்க இருப்பவர் ரத்தினம்.

அரசாங்க கேபினட்டை விட கிச்சன் கேபினட்டின் செல்வாக்கு அதிகம் என கண்கூடாக பார்த்தவர் ரத்தினம். சில இடங்களில் ரெண்டு மூணு கிச்சன் கூட இருக்கும்.

அதற்கு வாழும் உதாரணம் அவர் அண்ணன். மாநில கிச்சன் கேபினட்டின் செல்லபிள்ளை.

ஸ்டேட்டு கிச்சனோ லோக்கல் கிச்சனோ, க்ளவுடு கிச்சனோ, எந்த கிச்சன் செல்வாக்கு கிடைத்தாலும் மிக்சர் சாப்பிட்டே அடுத்த நிலைக்கு போலாம் என்பது எழுதப்படாத விதி.

அண்ணியை வெற்றிக்கொடி நாட்ட வைத்துவிட்டால் பொலீரோ காரின் பின் சீட் தனக்கு மட்டும் தான் என தீர்க்கமாக நம்பினார் ரத்தினம்.

ஒரு பக்கம் எம்எல்ஏக்கு அருகாமை, இன்னொரு புறம் பொலீரோவில் ட்ரிப் அடித்து எப்படியாவது மேயருக்கு அறிமுகமாவது.

அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அரசாங்கம் போட்டதோ இல்லையோ ரத்தினம் தன் வளர்ச்சிக்கான திட்டத்தை தெளிவாக போட்டார்.

பிற்காலத்தில் இருவரில் காற்று யார் பக்கம் வீசுகிறதோ அங்கே சாமரம் வீசுவது என முடிவெடுத்தார்.

ஒரு திரைப்படத்தில் சொப்னா அண்ணிக்கு கேன்சர் என போலியாக அவருக்காக உருகி உருகி பிராத்திப்பார் அண்ணனின் நண்பர். அது போல போலியாக அண்ணிக்காகவும் அண்ணனுக்காகவும் உருகுவதாகவும் உயிரையே கொடுக்க தயாராக இருப்பதாகவும் ஒரு கூட்டம் இப்போது சமூகத்தில் ஊடுருவி இருக்கிறது.

அந்த கூட்டம் உண்மையானது இல்லை என்பதும் எல்லா அண்ணன் அண்ணிகளுக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும். ஆனால் இரு தரப்பும் மக்கள் மன்றத்தில் அதை ஒரு கலாச்சாரமாக கடை பிடித்து வருகிறார்கள்.

அது உட்கட்சி ஜன நாயகத்துக்கும், தேர்தல் ஜன நாயகத்துக்கும் வந்திருக்கும் கேன்சர் என மக்களுக்கு மட்டும் தெரியும்.

Tamil novel – OTP – Part 9/20

நா டக்குனு குளிச்சிட்டு வரேன். நீ ஆரிப் கிட்ட சொல்லி ஒரு பார்சல் ஒடனே அனுப்ப சொல்லு. இன்னைக்கு கொஞ்சம் ஃபன்  பண்ணலாம்” என்றார் நேசமணி.

சிரித்தபடியே “நீங்களும் குளிச்சிட்டு வந்து கோபால் சார்கிட்ட கொஞ்சம் வாங்கி வைங்க. எப்படியும் அவர் பிரிட்ஜ்ல ஸ்டாக் பண்ணிருப்பார்” என்றார் சங்கு புஷ்பம்.

“அப்ப வர்றவர் இன்னைக்கு செத்தான்டா சேகர் கதைதான்” என்றார் சங்கு புஷ்பம்.

சற்று நேரத்தில் ஆரிப் டெலிவரி கொடுக்க, கோபால் சார் கலாய்த்து விட்டு ஒரு அழகான கோப்பையையும் பாட்டிலையும் தர, நேசமணி கிட்சனில் ரெடி செய்து வைத்தார். “அபர், நா சர்வ் பண்றேன். நீ வர வேணாம் என்றார்.

எல்லா ப்ளாக்கையும் சுற்றி கடைசியில் அரைமணி நேரம் கழித்து வந்து சேர்ந்தார் கட்சிக்காரர். டோர் பெல் அடித்தது. சங்கு புஷ்பம் போய் கதவை திறந்தார்.

“அம்மா, சார் இருக்காருங்களா” என்றார்.

“ஐயா தான் இருக்காரு” என்றார் சங்கு புஷ்பம்.

கட்சிக்காரர் குழப்பமாக பார்க்க “அம்மா இருந்தா ஐயாதான் இருப்பாரு. மேடம் இருந்தாதான் சார் இருப்பாரு” என்றார் சங்கு புஷ்பம்.

“சாரி மேடம், ஐயா இருக்காருங்களா” என்றார் அவர்.

லேசாய் புன்னகைத்தபடியே “உக்காருங்க சார்” என காரிடாரில் இருந்த சேரை காண்பித்தார் சங்கு புஷ்பம்.

அந்த ப்ளோரில் இருந்த நான்கு வீடும் சேர்ந்து ஆண் பெண் என யாராக இருந்தாலும் மணி கணக்கில் பேசுவதென்றால் இந்த இடம் என்று முடிவானது. பிள்ளைகள் படிக்க, பெண்கள் புழங்க என வீட்டு ஹால் பிரைவசி பிழைத்தது.

காலப்போக்கில் லேப் சாம்பிள், சாமான் ரிப்பேர் என யார் வந்தாலும் இந்த இடம் என்றானது.

காரிடாரில் பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்தது ரத்தினத்துக்கு உறுத்தியது. எல்லா ப்ளாக்கும் சுற்றியதில் களைப்பாக இருந்தார். கசங்காத வேட்டி சட்டையில் ஐம்பது வயது நெருக்கத்தில் தெரிந்தார்.

“எவ்வளவு நேரம் சார் பாக்கணும்” என்றார் சங்கு புஷ்பம்.

இந்த கேள்வியை எதிர்பாராதவராக சற்று தடுமாறிப் போனார் அவர்.

“ஒரு அரை மணி நேரம், இல்ல ஒரு மணி நேரம்” என்றார் அவர்.

“அரை மணி நேரம்னா ஆயிரம் ரூபா, ஒரு மணி நேரம்னா ரெண்டாயிரம் ரூபா” என்றார் சங்கு புஷ்பம்.

“என்ன மேடம், புரியல” என்றார் ரத்தினம்.

“ஆமா சார். இதான் அவர் கன்சல்டேஷன் சார்ஜ். பே பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க. பைவ் மினிட்ஸ்ல வருவார்” என்றார் சங்கு புஷ்பம்.

“மேடம், நா சும்மா அவர்கிட்ட ஒரு விஷயம் பேசிட்டு போலாம்னு வந்தேன். கன்சல்டேஷன் இல்ல” என்றார் அவர்.

“சார் மட்டுமில்ல நானும் யார்கிட்டயும் சும்மா பேசுறதில்ல” என்றார் சங்கு புஷ்பம்.

“இல்ல மேடம். சார்கிட்ட நா மொதல்ல பேசுறேன். அப்புறம் அவர் கேட்டார்னா நா தர்றேன் மேடம்” என்றார்.

“நீங்க பே பண்ணா தான் அவர் உங்கள பார்ப்பார்” என மீண்டும் உறுதியாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

“நா அவரை பாக்க முக்கால் மணி நேரம் வெயிட் பண்ணியிருக்கேன். நீங்க என்னடான்னா என்கிட்டே காசு கேக்குறீங்க” என உதாராய் சொன்னார் ரத்தினம்.

“என்ன சார் நீங்க நெஜமாவே புரியாம தான பேசுறீங்களா? நெக்ஸ்ட் டைம் வரும்போது அப்பாயின்மெண்ட் வாங்கிட்டு வாங்க. நேரா வந்து பாக்கலாம்” என காட்டமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

ஆரம்பத்தில் இருந்தே காக்க வைத்தது ரத்தினத்திற்கு சோதனையாய் இருந்தது. எப்படியோ வந்த வேலை முடிந்தால் போதும் என தோன்றியது.

பக்குவமாக பேசி காரியத்தை முடிக்க என்ன செய்வது என்று யோசித்தார்.

இந்த அம்மா புரியாம கேக்குது. இப்போ குடுத்துடுவோம். அப்புறம் சார பாத்து பேசி சரி பண்ணிக்கலாம் என முடிவு செய்தார்.

“சரிங்க மேடம், தரேன்” என பாக்கெட்டை துழாவினார். கொஞ்சம் குறைவாய் இருந்தது.

“போன்ல அனுப்பிடவா மேடம்” என்றார்.

“கேஷ் மட்டும்தான் வாங்குவோம்” என சுருக்கமாய் முடித்தார் சங்கு புஷ்பம்.

ஆயாசமாய் பெருமூச்சு விட்ட ரத்தினம் சற்று நகர்ந்து ஒரு ஓரமாய் போய் நின்றார்.

சுற்றி ஒரு பார்வையை ஓட விட்டு மெதுவாய் வேட்டியை உயர்த்தி டிரௌசர் பாக்கெட்டில் இருந்து ஒரு கட்டு கரன்சியை வெளியே எடுத்தார்.

கீழே பார்க்கில் விளையாடும் குழந்தைகளை ரசித்தபடியே இவரையும் நோட்டமிட்ட சங்கு புஷ்பத்திற்கு சிரிப்பு கட்டுப்படுத்த முடியவில்லை.

சாலை பக்கம் திரும்பி ஒரு நிமிஷம் நின்றவர் நிதானித்தபடி காத்திருந்தார்.

யாராவது தன்னை பார்க்கிறார்களா என சுற்றி பார்த்த ரத்தினம் நேராக போய் நின்றது சிசிடிவி கேமரா முன்பு பாப்பரப்பா என்று.

அந்த பக்கம் மானிட்டர் ரூமில் இருக்கும் கோமதியை நினைத்து புன்னகைத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

பத்து புது இருநூறு ருபாய் தாள்களாக ரெண்டாயிரம் எடுத்து கொடுத்தார்.

தேங்க்ஸ் சொல்லி சங்கு புஷ்பம் வாங்கி கொண்டு உள்ளே செல்ல மண்டை காய்ந்து போனார் கட்சிக்காரர்.

இரண்டு நிமிடம் கழித்து “உள்ள வாங்க சார்” என கூப்பிட்டார் சங்கு புஷ்பம்.

Tamil mini novel – Origami – Worry Kammi – part 4/4

நேரமாக நேரமாக அவனுக்கு வியர்த்து ஊத்தியது. Origami லேசு பட்ட விஷயமில்லை. நுணுக்கமாக செய்ய வேண்டும். ஒரு மடிப்பு தவறினாலும் மொத்தமும் சொதப்பி விடும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அதை சரியாக செய்து அதன் காரணத்தையும் தெளிவாக நடுவர்களிடம் சொல்ல வேண்டும். சீவலுக்கு இது சவாலான காரியமாக இருக்கும். எப்படி சமாளிக்க போகிறதோ என மண்டை காய்ந்து போனான்.

வேலை மும்முரத்தில் இருந்த சரண்யாவுக்கு சிற்பியின் மனநிலை அந்நியமாக இருந்தது.

“ஏண்டா, அவளையே நெனச்சுக்கிட்டு இருக்க? சாப்பிட்டு இந்த பைய சைக்கிள்ள வச்சு எடுத்திட்டு போய் மாதுரி மேடம் வீட்ல குடுத்துட்டு வா” என்றாள்.   

பன்னிரண்டு மணி ஆனது. சிற்பி பூமாலைகளை கொடுத்து விட்டு நகர, “இந்தாப்பா, இந்த பூ சரடை அம்மா கிட்ட குடு” என்றார் மாதுரி மேடம். அதை வாங்கி கொண்டு வேகமாக பள்ளிக்கு சைக்கிளில் சென்றான்.

பள்ளி வளாகம் அமைதியாக இருந்தது. மெயின் பில்டிங்கில் மட்டும் ஆள் நடமாட்டம் தெரிந்தது.

சிற்பி சைக்கிளை நிறுத்தி பூட்டி விட்டு உள்ளே செல்ல, PT சாரிடம் மாட்டிக் கொண்டான்.

“டாய், ஏண்டா கலர் ட்ரெஸ்ல வந்திருக்க?” என தடுத்தி நிறுத்தினார்.

பச்சை பொய்யை பட்டென்று சொன்னான். “டீச்சர் பூ எடுத்திட்டு பன்னெண்டு மணிக்கு வர சொன்னாங்க சார்” என்றான்.

“ஓடு, ஓடு, சீக்கிரம் போ” என உள்ளே விட்டார் PT சார்.

மாதுரி மேடத்திற்கு மனதுக்குள் நன்றி சொல்லி காரிடார் ஜன்னலருகே போய் நின்றான்.

ஜட்ஜ் டேபிள் மீது பால் ரோஜா நிற தாமரை அழகாய் மலர்ந்திருந்தது.

“பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி சித்திர வள்ளி, போர்த் பி” என மைக்கில் சொன்னார் எச் எம் டீச்சர்.

எல்லாரும் கை தட்ட சந்தோஷமும் வெட்கமுமாய் தலை குனிந்து சிரித்தபடியே மேடை ஏறியது சீவல்.

மெடல், ட்ரோபி, பரிசு பண கவர் மற்றும் புத்தகம் என கை நிறைய அள்ளிக்கொண்டு, வாய் நிறைய சிரித்தது.

சிற்பிக்கு மனம் சிறகடித்துப் பறந்தது. அப்படியே போய் சீவலை தூக்கிக் கொள்ள வேண்டும் என ஆசை ஓங்கியது.

அடுத்தடுத்த மாணவர்கள் பரிசு வாங்க, மீண்டும் சீவலின் பெயர் வந்தது. இந்த முறை ஆர்ட் போட்டிக்கு. Origami லோட்டஸுக்கும் முதல் பரிசு. மீண்டும் எழுந்து பின் பக்கம் ஸ்கர்ட்டை நீவி விட்ட படியே சீவல் மேடையை நோக்கி நடக்க எச் எம் டீச்சர் அதன் கன்னத்தில் செல்லமாய் தட்டி கொடுத்து அணைத்துக் கொண்டார்.

இது போதாதா!  சீவல் காலம் முழுக்க அதன் புகழை அதுவே பாடிக் கொள்ள! எங்க டீச்சர்ஸ் எனக்கு கிளாப் பண்ணாங்க, எங்க எச் எம் டீச்சர் என்ன ஹக்கு பண்ணாங்க என வாழ்நாள் சாதனை அவளுக்கு அது.

நிறைவாக நிகழ்ச்சி முடியும் தருவாயில் நன்றி உரை சொன்ன எச் எம் டீச்சர் சொன்ன விஷயம் சிற்பிக்கு காதில் தேனாய் பாய்ந்தது. பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர், ஐந்து குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக சொல்ல, தேர்வு குழு கூடி பேசி முடிவு செய்த பெயர்களில் ஒன்று சித்திர வள்ளி – போர்த் பி!

சீவலின் தோழிகள் அதை தோள் மீது தூக்கி பிடித்து சிரிக்க, சிற்பிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

அவளின் வகுப்பு ஆசிரியரும் வந்து போட்டோ எடுக்க அந்த இடம் களை கட்டியது.

நிகழ்ச்சி முடிந்து ஒவ்வொருவராய் வெளியேறும் வரை சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தான் சிற்பி.

வெளியே வந்த சீவல் அவனை கண்டதும் “சிப்பின்னா” என முத்து தங்கமாய் வந்து கட்டிக் கொண்டது.

முதல் வேலையாய் ஒரு சாக்லெட்டை பையிலிருந்து எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டது.

சதீஷும் ராஜுவும் வந்து சேர அவர்கள் சீவலை தோளில் தூக்கி சுற்றி கொண்டாடி தீர்த்தார்கள்.

வீட்டுக்கு போகும் வழியில் சீவலிடம் கேட்டான் “ஏண்டி, பேச்சு போட்டி பத்தி எதுவும் சொல்லல? என்ன பேசுன”?

“அண்ணா, பேச்சு போட்டிக்கு பேரு குடுத்த பொண்ணு இன்னைக்கு வரல, அதனால தமிழம்மா என்ன பேசரியான்னு கேட்டாங்க. நா நீ சொல்லி குடுத்த ப்ளோரா கதையை சொன்னேன். சூப்பரா இருக்கு, இதையே சொல்லிடு, ஆர்ட்டுக்கும், பேச்சு போட்டிக்கும் வேற வேற ஜட்ஜு தான் வருவாங்கனு சொல்லி லாஸ்ட் மினிட்ல என்ன பேச சொல்லி ஸ்டேஜுக்கு அனுப்பிட்டாங்க” என்றாள் குஷியாக.

“உனக்கு சரி லக்கு இன்னைக்கு” என சொன்னான் சிற்பி. 

வீட்டுக்கு வந்து அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட பிறகு சரண்யாவுக்கு பூரிப்பு அதிகமானது.

சீவலுக்கு பிடித்த பச்சை கலர் கேசரியை உடனே செய்து முடித்தாள்.

இடையே வந்த இரண்டு மூன்று போன்கள் பேசி முடிக்கும் போது “மா, உனக்கு நெறய ஒர்க் வருது, கரெக்டா? என ஆசையாய் சிரித்தான் சிற்பி.

பிறகு “மா, இன்னைக்கு உனக்கும் லக்கி டே” என்றான்.

 “சீவல், எனக்கு ஒரு லோட்டஸ் செய்து தரியா?” என ஆசையாக கேட்டாள் சரண்யா.

“உனக்கு எதுக்குமா?” என்றான் சிற்பி.

“சங்கு புஷ்பம் ஆன்ட்டிக்கு குடுக்க! வாழ வழி காட்டுறவங்களும் ஆசான் தானே!” என சிரித்தாள் சரண்யா.

“Origami உன் worryய கம்மி பண்ணிடுச்சுமா!” என கேசரியை வழித்து சாப்பிட்டபடியே சொன்னது சீவல்.