சிறுகதை – வாக்கிங் வகையறா

A group of friend going for morning walk

“ஆன்ட்டி, freeயா இருக்கீங்களா?” என போனில் கேட்டாள் சிந்தாமணி.

“ம்ம், இன்னும் அரை மணி நேரம் கழிச்சு தான் இட்லிக்கு மாவு அரைக்க போறேன், இப்போ சும்மா தான் இருக்கேன்” என்றார் சங்கு புஷ்பம்.

சிந்து ஆறாவது மாடியில் இருக்கிறாள். அவள் கணவர் கார் பேக்டரியில் வேலை பார்க்கிறார்.

“யார் போன்ல?” என கேட்டார் நேசப்பா.

“சிந்துங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“என்ன இன்னைக்கு திடீர்னு காலைல உன்கூட மீட்டிங்? எப்பவும் சாயங்காலம் கீழ போகும் போது தானே பேசுவீங்க?” என்றார் நேசப்பா.

“இன்னைக்கு வியாழக்கிழமை. அவங்க எதிர் வீட்டுல இருக்குற காமாட்சி சாய் பாபா கோவிலுக்கு காலைலயே போயிட்டு, பக்கத்துல அவங்க அண்ணி வீட்டுக்கும் போயிட்டு சாயங்காலம் தான் வருவாங்க” என சொல்லி கண் சிமிட்டினார் சங்கு புஷ்பம்.

“சரி, நா போய் மொளகா தூள் அரைச்சிட்டு வந்துடுறேன், நீ பையை ரெடி பண்ணி வை” என சொல்லிவிட்டு குளிக்க போனார் நேசப்பா.

கால் மணி நேரம் கழித்து டோர் பெல் அடித்து விட்டு, தானே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் சிந்து.

“BP மெஷின் குடுங்க ஆன்ட்டி” என சொன்னபடியே துப்பட்டாவை மடித்து டேபிளின் மீது வைத்து விட்டு சோபாவில் போய் உட்கார்ந்தாள்.

“இவ்ளோ அழகா மடிச்சு வெக்குறதுக்கு, நீ அத வீட்லயே வெச்சிட்டு வந்திருக்கலாம்!” என சொல்லி சிரித்தார் சங்கு புஷ்பம்.

சிந்து காண்டாக, “அதை விட ஸ்பெஷல் ஐட்டம் வெளில இருக்கு பாரு, புள்ள புது ஷூ போட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்திருக்கு” என குறும்பாக சொல்லி விட்டு, செருப்பை மாட்டிக்கொண்டு மிஷினுக்கு கிளம்பினார் நேசப்பா.

சிந்துவுக்கு ஆரம்பமே கண்ணை கட்டியது. இதுவே காமாட்சியாக இருந்தால் இந்நேரம் எதுக்கு BP ஏறி இருக்குன்னு மொத்த கதையையும் கேட்டு முடிச்சிருப்பாங்க என நினைத்தாள்.

“இந்தா மிஷின், எவ்ளோ இருக்குன்னு பாத்து வை. நான் போய் கிரைண்டர்ல உளுந்து போட்டுட்டு வரேன்” என சொல்லிவிட்டு கிச்சனுக்குள் போனார்.

இந்த வீட்ல தன்னை ஒரு பேஷண்ட் மாதிரியே ட்ரீட் பண்ண மாட்டேங்குறாங்க என நொந்து கொண்டாள் சிந்து.

“எவ்ளோ இருக்கு” என உள்ளேயிருந்து குரல் வர, “122-83” என்று சொல்லி விட்டு, ரெண்டு கை பருப்பை போட்டுட்டு வர இவ்ளோ நேரமா என அலுத்துக் கொண்டாள் சிந்து.

“நார்மல் தான். நேத்து நைட் சரியா தூங்கலியா?” என மீண்டும் குரல் வந்தது.

Case பைலின் பேஸ் பாயிண்டையே இந்தம்மா புஸ்ஸுன்னு ஆக்கிருச்சு என்பது போல இருந்தது அவளுக்கு. போனை சற்று நேரம் பார்த்தவள், எழுந்து போய் டேபிள் மீதிருந்த வாழை பழத்தை எடுத்துக் கொண்டாள்.

“BP நார்மலாகுறதுக்கு Potassium-rich food சாப்பிடணும்ன்னு google சொல்லுது. நான் ஒரு வாழை பழம் எடுத்துக்குறேன்” என சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள் சிந்து.

உள்ளேயிருந்து “சொய்” என ஒரு சத்தமும், மிக்ஸி ஓடும் சத்தமும் வந்தது. பின்னாலேயே ரச வாசனையும் வந்தது.

வீட்ல ரசாபாசமான சண்டை ஆகி நா ஒருத்தி இங்க வந்து உக்காந்திருக்கேன், இந்தம்மா சவகாசமா ரசம் வெச்சிக்கிட்டு இருக்கு என் நொந்து போனாள் சிந்து.

காமாட்சியா இருந்தா இந்நேரம், வாஸ்து, ரெய்கி, மனவளத்துல நாலு டிப்ஸ்ன்னு இந்நேரம் சிந்துவுக்கு ஒரு closure கொடுத்திருப்பார்கள்.

சற்று நேரத்தில் கையை துடைத்தபடியே வந்த சங்கு புஷ்பம் ” Your Fault Londonன்னு ஒரு British romantic படம் Amazon Primeல உட்டுருக்கான்னு நேஸ் சொன்னாரு. அதான் எல்லா வேலையையும் முடிச்சிட்டு, மத்தியானம் லன்ச்சுக்கு அப்புறம் பாக்கலாம்னு plan” என கெத்தாக சொன்னபடியே வந்து உட்கார, சிந்துவுக்கு அவமானமாக இருந்தது.

பெருசுங்க ரொம்ப ரவுசு பண்ணுதுங்க என நினைத்தாள். பேசாம வேற ஏதாவது கதையை பேசிட்டு கிளம்பலாம் என முடிவுக்கு வந்தாள்.

“நீ என்ன லஞ்சுக்கு பண்ணி இருக்க?” என புஷ்பம் கேட்க, “ஒன்னும் பண்ணல, அவருக்கும் எனக்கும் காலைல கொஞ்சம் சண்டை. பசங்களுக்கு மட்டும் பாக்ஸ் ரெடி பண்ணி அனுப்பிட்டேன். அவரு கேன்டீன்ல சாப்பிட்டுக்குவாரு” என சோகமாக சொன்னாள் சிந்து.

“கொஞ்சுறதுக்கு எதுக்கு சண்டை” என மொக்கை ஜோக் சொல்லி சிரித்து, “பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சா கூட சிம்பிளா முடிச்சிடலாம்” என்றார் சங்கு புஷ்பம்.

காமாட்சியாக இருந்தால் லஞ்ச்சும் குடுத்து, சாயங்காலம் வர்ற பசங்களுக்கும் ஸ்நாக்ஸும் செய்து குடுத்து, எல்லா டீட்டைலையும் உருவியிருப்பார். பழைய சண்டையில் நடந்த, சிந்து கூட மறந்தே போன விஷயங்களை reference ஆக சொல்லி அவர் கட்சிகாரரை மெருகேற்றி அனுப்பி இருப்பார்.

சிந்துவுக்கு பொறுமையே போனது. ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை மதிக்காமல் தன்னை லெப்ட் ஹாண்டில் டீல் பண்ணுவதாக மனதிற்குள் புலம்பினாள். தனக்கு எப்பேர்ப்பட்ட அநீதி இழைக்கபட்டிருக்கிறது என சொல்லி புஷ்பம் வாயாலேயே அவரை உச்சு கொட்ட வைக்க வேண்டும் என முடிவெடுத்தாள்.

“எதுக்குதான் இந்த பொண் ஜென்மம் எடுத்தேன்னு இருக்கு? என லீடு குடுத்தாள் சிந்து.

போச்சுடா..”ஆயிரம் பேரை கூட எதிர்த்து நில், ஆனால் ஒருபோதும் ஒருவரை கூட எதிர்பார்த்து நிற்காதே” என அம்மணி இன்னிக்கு ராத்திரி ஸ்டேட்டஸ் வைக்க போகுது என நினைத்தார் புஷ்பம். Rapid fire மாதிரி ஒரு ரவுண்டு கேட்கலாம் என முடிவெடுத்தார்.

“Shop Manager”க்கு என்ன கொறச்சல்? என்றார் புஷ்பம்.

“இந்த மாசம் அவரோட அக்கா பொண்ணுக்கு கல்யாணம். ஆரி பிளவுஸ் தைக்க காசு கேட்டா, எகிறிட்டு போறார்” என மூக்கை சிந்தினாள்.

“ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே Hubby Loveன்னு கேப்ஷன் போட்டு, புது ஷூ போட்டோவ ஸ்டேட்டஸ் போட்டிருந்த? அதுக்குள்ள என்ன?” என பாய்ண்ட்டை போட்டார் புஷ்பம்.

சிந்து ஒரு நிமிடம் திகைத்துப் போனாள். இந்த அம்மா என்ன சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசுது? அது வாக்கிங் ஷூ. இப்போ சண்டை கல்யாண பார்ட்டிக்கு ட்ரஸ் வாங்குறதுக்கு. இவங்களுக்கு பஞ்சாயத்து புரியறதுக்குள்ளயே தாவு தீந்துடும் என ஆனது அவளுக்கு.

“ஆமா, PCOD பிரச்சினை இருக்கு. டாக்டர் டெய்லி 40 நிமிஷம் நடக்க சொன்னாங்க, அதனால வாங்கி குடுத்தாரு” என மெல்ல சொன்னாள்.

“தங்கமாத்தான் இருக்காரு மனுஷன், நீ ஏற்கனெவே ஆரி பிளவுஸ் வெச்சிருக்க மாதிரி எனக்கு ஞாபகம்.” என குண்டை போட்டார் புஷ்பம்.

சிந்துவுக்கு இந்த அம்மா என்ன நம்ம வீட்டுல bug வெச்சிருக்கா என சந்தேகம் வந்தது.

“அதெல்லாம் டார்க்கு பச்சை, மெரூன் அப்புறம் ஒரு கோல்ட் கலர். மூணு ஜாக்கெட் தெச்சா காம்போ ஆபர்னு பன்னிரெண்டாயிரம் குடுத்து நம்ம வசந்தி அக்கா கிட்ட வாங்குனேன். ஆனா இப்போ அவர் கஸின்ஸ் எல்லாம் சேந்து இந்த கல்யாணத்துக்கு pestal கலர் theme முடிவு பண்ணி இருக்காங்க. அதனால சங்கீத், நலங்கு அப்புறம் முஹுர்த்தம்ன்னு மூணு pestal கலர் பிளவுஸ் வாங்கணும்” என்றாள்.

“ஹிஹிஹி, அதுக்கு உங்க ஊட்டுகார் , இந்த காசுக்கு பத்து ITC, பத்து Tata Motors ஷேர் வாங்கி போட்டாலாவது ப்ரயோஜனம்ன்னு சொன்னாரா?” என சிரிப்பை அடக்கியபடியே கேட்டார் புஷ்பம்.

இதை கேட்டதும் பேயை கல்யாணம் கட்டி, பிசாசுக்கு வாக்கப்பட்டது போலிருந்தது சிந்துவுக்கு. இவங்கல்லாம் ஆனந்த் சார் கோஷ்டி என நினைத்துக் கொண்டாள்.

“இப்போ என்ன? இது ஒரு life time event. இப்படி சிக்கனம் புடிச்சி வாழ்ந்து, திடீர்னு டக்குனு செத்துட்டா, என்ன ஆவுறது?” என வீராப்பாய் கேட்டாள்.

“எல்லாம் நல்லபடியா இருப்போம். வீணா ஏன் கவலை படுற? சாரு உன் health மேல இருக்குற அக்கறையினால் தான ஷூவெல்லாம் வாங்கி தரார். பிஸாத்து ஆரி பிளவுசுக்கு போய், பொட்டுனு போய்ட்டா அப்டீன்னு பேசுற?” என எடுத்துரைத்தார் புஷ்பம்.

கூடவே “என் கதை மட்டும் ஏனோ என்னை பற்றி சிந்திக்காத மனிதர்களால் நிறைந்துள்ளது” என அவளின் ரெண்டாவது ஸ்டேட்டஸுக்கு ஐடியா குடுத்தது போலிருந்தது.

“உஸ்ஸ், வசந்தி அக்காக்கு நான் Prime customer. மூணு பிளவுசு இப்போ பத்தாயிரத்துக்கு தச்சு தர்றதா எனக்கு ஆபர் கொடுத்திருக்காங்க. இவர் என்னடான்னா இப்போதான் ரொம்ப பிகு பண்ணுறார். நான் அவங்ககிட்ட டிசைனெல்லாம் செலக்ட் பண்ணி சொல்லிட்டேன்” என சொன்னாள்.

ஹ்ம்ம், பிரச்சினை முற்றிய நிலையில் இருக்கிறது. இப்போது சொல்வதற்கு ஒன்றும் இல்லை என தோன்றியது புஷ்பத்திற்கு. சரி எதிரி கதையை விட்டு விட்டு தோழியை பற்றி பேசலாம் என முடிவெடுத்தார்.

“வசந்தின்னா, அந்த Gym master பொண்டாட்டியா?” என கேட்டார்.

“ஆமா ஆன்ட்டி, காலைல என்கூட வாக்கிங் வருவாங்க. அவங்க ரொம்ப பிஸியான ஆளு. லாஸ்ட் டைம் அவங்க இன்ஸ்டால, என் போட்டோஸ் போட்டாங்க, செம லைக்ஸ் வந்தது. இப்பவும் pestal கலர் பிளவுஸ் collection launchக்கு என்ன மாடலிங் பண்ண கேட்டு இருக்காங்க” என உற்சாகத்தில் சொல்லி கொண்டே போனாள்.

பூனை குட்டி வெளில வந்துடுத்து moment அது.

“சரி, கலந்து பேசி சுமுகமா முடிவு பண்ணு” என பொதுவாய் சொல்லி “இந்த வாரத்துக்கு மாவு அரைச்சு வைச்சிட்டியா?” என்றார் புஷ்பம்.

“நான் Divine Foodsல subscription வாங்கி இருக்கேன் ஆன்ட்டி. ஒரு வாரத்துக்கு தேவையான மில்லட் மாவெல்லாம் அரைச்சி சில்வர் டப்பால தந்துடுவாங்க. நம்ம சொசைட்டில இருக்க தீபா தான் நடத்துறாங்க. Quality செமயா இருக்கு” என தொடர்ந்தாள்.

“அவங்களும் உன் கூட காலைல வாக்கிங் வராங்களா?” என கேட்டார் புஷ்பம்.

“ஆமா, இப்போ அவங்க எனக்கு close friend ஆகிட்டாங்க” என புல்லரித்து போய் சொன்னாள்.

“இரு மாவு வழிச்சி வெச்சுட்டு வரேன்” என சொல்லிவிட்டு உள்ளே போனார். சங்கு புஷ்பத்திற்கு நேசப்பாவின் மனைவி great என தோன்றியது. பத்து நிமிடம் ஆனது வேலை முடிய.

“நீ வேணா நைட் சாப்பிட்டப்புறம் வாக்கிங் போயேன். PCODக்கும் ஹெல்ப்பா இருக்கும். நீயும், சாரும் நைட் ரெகுலரா ரெண்டு மூணு ரவுண்டு போயிட்டு வந்தீங்கன்னா, எல்லா பிரச்சினையும் freeஆ மனசு விட்டு நிதானமா பேசலாம். காலைல அவர் அரக்க பரக்க கிளம்பும் போது எதை காது குடுத்து கேப்பார்?” என பொறுமையாய் சொன்னார் புஷ்பம்.

சிந்துவுக்கு நல்ல ஐடியா என தோன்றினாலும், சக கோஷ்டியை பிரிந்து வேறு நேரத்தில் வாக்கிங் செல்வதை மனது ஏற்றுக் கொள்ளவில்லை.

“கஷ்டம் ஆன்ட்டி. எல்லாரும் friends ஆகிட்டாங்க” என சிணுங்கினாள் சிந்து.

“நீ அவங்கள பார்க்குல இல்ல பார்க்கிங்லன்னு எங்கயாவது மீட் பண்ண தான் போற. சாரு கூட moon light வாக்கிங் போய் “உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல ஒண்ணும் இல்ல” சாங்குக்கு vibe பண்ணு” என சொல்லி ஒரு பிட்டை போட சிந்துவுக்கு உச்சி குளிர்ந்து போனது.

“சரிங்க ஆன்ட்டி, நான் கிளம்புறேன்” என சொன்னாள் சிந்து.

சற்று நேரத்தில் நேசப்பா வர, மதிய உணவு முடித்து சோபாவில் போய் உட்கார்ந்தார்கள்.

“அந்த புள்ளைக்கு என்ன பிரச்சினையாம்?” என கேட்டார்.

“சொல்றேன், மொதல்ல அந்த டப்பால ஒரு pestal color மாத்திரை அட்டை இருக்கும், அதை எடுத்து குடுங்க” என சொல்லி கையை நீட்டினார் புஷ்பம்.

“எப்போதுலேர்ந்துடி சுகர் மாத்திரைக்கு பேரு ஸ்டைலாச்சு?” என முழித்தார் நேசப்பா.

ஒரு ஜோக் சொல்ட்டா சார்!

பூரி குமாரி : இந்தாங்க கோல், பேஸ்ட், ப்ரஷ்.

பூரி குமாரி : இந்தாங்க காபி.

பூரி குமாரி : இந்தாங்க டிபன்.

பூரி குமாரி : இந்தாங்க கை தொடைக்க டவல்.

கோல்கப்பா : ஏண்டி, நா ஹால்ல இருக்கேன், நீ ரூம்ல போய் ஒண்ணுமே பண்ணாம வேலைய மட்டும் செய்த மாதிரி பேசிகிட்டு இருக்க?

பூரி குமாரி : நீங்க ஏவாமயே வேல பாக்கறதுன்னு எப்படின்னு பிராக்ட்டிஸ் பண்றேன் கோல்!

கோல்கப்பா : ஹிஹிஹி, லொள்ளுடி உனக்கு!


பூரி குமாரி : ஆளும் கட்சிக்கு எது குடைச்சல்?

கோல்கப்பா : GF – Girl friend!

பூரி குமாரி : கூட்டணி கட்சிகளுக்கு என்ன இக்கட்டு?

கோல்கப்பா : TF – Trust factor இல்லாதது!

பூரி குமாரி : எதிர்க்கட்சிகளுக்கு என்ன பயம்?

கோல்கப்பா : PF – Party fund வாங்குனது!

பூரி குமாரி : மக்களுக்கு வேண்டியது என்ன?

கோல்கப்பா : RF – Real facts!


பூரி குமாரி : நம்ம மந்திரி B.Eல டாக்டர் பட்டம் வாங்குன gold medalistம் கோல்.

கோல்கப்பா : B.Eல டாக்டர் பட்டமா? என்னடி சொல்ற?

பூரி குமாரி : ஹிஹிஹி, B.Eன்னா “Boosted Estimate” கோல். அதுலதான் gold medalistம் கோல்.


பூரி குமாரி : ஏங்க, போற போக்க பாத்தா photo synthesis நடக்கும் போல இருக்கு?

கோல்கப்பா : என்னடி சொல்ற?

பூரி குமாரி : சூரியன் இலைய பாக்க, இலை பூவ மலர வெக்க, புது கூட்டணி வரும் போல இருக்குங்க.

கோல்கப்பா : பங்காளிங்க ரெண்டு பெரும் நோட்டு சேர்த்த கோஷ்டி, ஜி ஆளுங்க நோட்டா கூட போட்டி போட்ட கோஷ்டி! நடக்குமா கத?

பூரி குமாரி : யாரு யாரோட சேந்தாலும், ஜனங்களுக்கு நல்லது செய்யணும்னுங்கிற mottoல வந்தா மட்டும் தான் photo synthesis வேலைக்கு ஆகும் கோல்!


பூரி குமாரி : அறிவாலயத்தை செங்கல் செங்கலா உருவிறுவேன்னு ஒரு போலீஸ்கார் சொன்னாரே? இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு கோல்?

கோல்கப்பா : கமலாலயத்தை செங்கல் செங்கலா உருவிகிட்டு இருக்காரு டார்லிங்!

பூரி குமாரி : உருவுற செங்கலயெல்லாம் வெச்சு என்ன பண்ண போறாராம்?

கோல்கப்பா : Scratchலேர்ந்து ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க போறாராம், அன்பே.

பூரி குமாரி : watchக்கு bill கேட்டா, கோச்சுக்கினு போனவர் தானே அவரு ?

கோல்கப்பா : ஹிஹிஹி, விமானத்தை இயக்குற பாக்யம் எல்லார்க்குக்கும் கிடைக்குமா sweety? எதுக்காக சொல்றேன்னா, அதுக்காக சொல்றேன்…

சிறுகதை – மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை..

A 50 year old couple enjoying city skyline

“என்ன கோகி, ஹேர் கலர் பண்ணியிருக்க? நம்ம 25th anniversary வருதுன்னா? ஷில்லாங் பேக்கேஜ் புக் பண்ணட்டுமா? சோமசேகர் கேட்டுக் கொண்டேயிருக்க, ஆபீஸ் பேகை டேபிள் மீது வைத்துவிட்டு நேராக பாத்ரூமிற்குள் நுழைந்தாள் கோகிலா.

சோமா வேலையை தொடர, கோகி வெளியே வர பத்து நிமிடம் ஆனது. நைட்டி மாற்றி, டீ போட்டு எடுத்து வந்து சோபாவில் உட்கார்ந்தாள்.

“என்ன புக் பண்ணட்டுமா, சொல்லு? மேகத்துக்கு நடுவுல, நீயும் நானும் மட்டும். சுற்றிலும் பனிமூட்டம். பக்கத்துல இருக்குற காடு, மலை எல்லாம் மங்கலா தெரிஞ்சாலும் பரவாயில்லை. நமக்கு நாம மட்டும் தெரிஞ்சா போதும்” என உற்சாகமாக தொடர்ந்தார் சோமா.

“Mondayலேர்ந்து ரெண்டு வாரம் கிளையண்ட் விசிட்” என டீ டம்ளரை பார்த்தபடியே சொன்னாள் கோகி.

சோமாவுக்கு இது புதிதில்லை.

ஸ்கிரீனிலிருந்து திரும்பி கோகியை பார்த்தார். புது hair cut. புது hair color.

“இந்த hair cutக்கு என்ன பேரு? மைண்ட்ல இருக்கு, ஆனா பேரு சரியா ஞாபகம் இல்லை” என்றார்.

“பேரெல்லாம் கேக்கலை. Hair density ரொம்ப கொறஞ்சிடுச்சி. அதான் ப்ரீத்தியை எனக்கு எது suit ஆகுமோ அதை பண்ண சொல்லிட்டேன்” என்றாள்.

கோகி கிச்சனுக்குள் சென்று கொண்டே பதில் சொல்லி முடிக்க, சோமா யோசனையில் ஆழ்ந்தார்.

கொஞ்ச நேரத்தில் மகன் சாய் பிரசாத்தும் வர, இரவு உணவு சாப்பிட்டு முடித்து, அவரவர் அடுத்த நாளுக்கான தயாரிப்புகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

கோகிக்கு எட்டரையில் இருந்து பத்து மணி வரை மீட்டிங் இருந்தது. ஹெட்போனை மாட்டிக்கொண்டு, நோட்ஸ் எழுதிக் கொண்டு பிசியாக இருந்தாள்.

“டேய், நான் ஒரு walk போயிட்டு வரேன். பிரேக்ல அம்மா வந்து கேட்டான்னா சொல்லிடு” என்றார் சோமா.

“ஹ்ம்ம், நீயும் தான் டெய்லி சொல்ற. நீ பன்னெண்டு மணி வரைக்கும் வரலேன்னா கூட, அவங்க இழுத்து
போர்த்திகிட்டு தூங்கிடுவாங்க” என கூலாக சொன்னான் சாய்.

சோமாவுக்கு இதுவும் புதிதில்லை. “நீ நேரத்துக்கு தூங்கு, ரொம்ப நேரம் போன் பாக்காத” என சொல்லிவிட்டு கிளம்பினார்.

வீட்டை விட்டு வெளியே வந்ததும், அவருக்கு ஆயாசமாக இருந்தது. இரண்டு கைகளையும் பின்பக்கம் கட்டிக் கொண்டு, நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்.

சமீப காலமாக கோகி மிகவும் சோர்வாக இருக்கிறாள். முன்பெல்லாம் சிறிய விஷயங்களுக்கு கூட சிரித்தவள், இப்போது காரணமில்லாமல் எரிச்சலடைகிறாள். சில நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென அமைதியாகிவிடுகிறாள்.

சோமாவுக்கு புரிந்தது இது வெறும் மனநிலை மாற்றம் அல்ல என்று. அவள் வாழ்க்கையின் ஒரு புதிய பருவத்தைக் கடந்து கொண்டிருக்கிறாள். உடல் அமைதியாக மாற்றம் அடைகிறது. அதனுடன் போராடிக் கொண்டே மனமும் உணர்வுகளும் புதிய சமநிலையைத் தேடிக்கொண்டு இருக்கின்றன.

சோமா அவளைச் சரி செய்ய முயலவில்லை. அதற்கு பதிலாக, அதிகம் பேசினார். குறைவாக வாதிட்டார். சில நாட்களில் அவளுக்கு தனிமை தேவைப்பட்டபோது, அமைதியாக அவளுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

யோசித்தபடியே நடந்து போனதில், அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. வரும் வழியில் பார்மசியில் சில பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினார்.

சாய் தூங்கி விட்டான். கோகியும் ஹாலில் இல்லை. கை கால்களை கழுவிக் கொண்டு, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி எடுத்துக் கொண்டு, பெட்ரூமிற்குள் போனார்.

“கோகி” என மெதுவாக குரல் கொடுத்தார். அசைவில்லை. சரி தூங்கட்டும் என அவரும் படுத்துக் கொண்டார்.

வேலை, நட்பு, சொந்தம் என வாழ்க்கை நிரம்பியே இருந்தது. ஆனால் சில மாதங்களாக, இருவரும் ஒருவருக்கொருவர் அருகில் இருந்தும், ஏதோ ஒரு மெல்லிய வெறுமை மட்டும் நடுவில் படுத்திருக்கிறது. திரும்பத் திரும்ப வந்த யோசனைகளை ஒதுக்கிவிட்டு, எப்படியாவது கொஞ்ச நேரம் தூங்க முயன்றார் சோமா.

மறுநாள் காலை ஐந்து மணி. கோகி விழித்தவுடன் சைட் டேபிளின் மீது இருந்த Biotin supplement box கண்ணில் பட்டது. ஒரு நிமிடம் கோகிக்கு புன்முறுவல் வந்தது. Hair fall பிரச்சினைக்காக வாங்கி வந்திருக்கிறார். சோமாவின் தலையை கோதிக் கொண்டே விட்டத்தை பார்த்தபடி கொஞ்ச நேரம் படுத்திருந்தாள்.

ஒரு காலத்தில் அவர்களுக்கிடையே இப்படிப்பட்ட கிண்டல்கள் தினசரி விஷயமாக இருந்தன. “கோகி, பார்மஸில இருக்கேன், என் கப்போர்டுல protection இருக்கானு பாத்து சொல்லேன்” என சோமா வம்பிழுத்து எவ்வளோவோ நாட்களாகி விட்டது.

ஆனால் அந்த விருப்பம் எங்கேயா, எப்போதோ கோகிக்கு தொலைந்து போய்விட்டதாக உணர்ந்தாள். கடந்த காலங்களில் மிக இயல்பாக இருந்த ஒரு விஷயம், இப்போது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. சோமா அதை புரிந்து கொண்டு காத்திருக்கிறார். அதுதான் சில நேரங்களில் அவளை இன்னும் அதிகமாக நெகிழச் செய்தது.

வெளிச்சம் அறையிலும் பரவ ஆரம்பிக்க, எழுந்து போய் அன்றாட வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். சாய் ஏழு மணிக்கே கிளம்ப, இவர்கள் இருவரும் ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து காரில் கிளம்பினார்கள்.

கோகி டாக்சியில் பயணிப்பது போல, வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். சோமா அமைதியாக
ஓட்டிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் காரினுள் நிலவிய அந்த மௌனம் அவரை என்னவோ செய்தது. போனை எடுத்து ஒரு பாடலை ஒலிக்க விட்டார்.

கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..
கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!
நுரையால் செய்த, சிலையா நீ?

பாடல் தொடர, பல நாட்களாக அடக்கி வைத்திருந்த ஏதோ ஒன்று உள்ளுக்குள் அசைந்தது கோகிக்கு.

காதல், தாய்மை இரண்டு மட்டும்,
பாரம் என்பதை அறியாது!
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்,
பசியோ, வலியோ தெரியாது!

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
உயரம் தூரம் தெரியாது!
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்,
என்னால் தாங்க முடியாது!

இந்த வரிகளை கடக்கும் போது, கோகியின் கை தானாக நீண்டு சோமாவின் தோளில் படர்ந்தது.

சற்று நேரத்தில் ஆபீஸ் வர, “bye சோமா” என சொல்லி காரை விட்டு இறங்க எத்தனித்தாள்.

“ரெண்டு நிமிஷம் இருந்துட்டு போயேன்” என ரோட்டை பார்த்தபடியே சொன்னார்.

கோகி மெதுவாக அவரின் இடது கரத்தை இறுக்கமாக பற்றிக்கொள்ள, சோமா சீட்டில் சரிந்து கண் மூடினார்.

சில நிமிடங்கள் கழித்து “கிளம்பு, ஈவினிங் வரேன் பிக்கப்புக்கு, bye” என்றார்.

மூன்று வாரங்கள் ஆனது. கோகி கிளையண்ட் விசிட் முடிந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தாள். ஷில்லாங் ட்ரிப் பற்றி எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. Anniversaryக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. இப்போது ட்ராவல் ஏற்பாட்டை செய்ய முடியுமா என யோசித்தாள்.

அப்போது ப்ரீத்தியின் கால் வந்தது. “மேம், சார் உங்களுக்கு Spa package புக் பண்ணி இருக்காரு. நேத்து உங்களுக்கு ட்ரை பண்ணேன். உங்க நம்பர் பிசியா இருந்தது. ஸ்லாட் கன்பார்ம் பண்ணிடீங்கன்னா, நான் Martinaவ உங்களுக்கு assign பண்ணிடுறேன்” என்றாள்.

“மதியம் ரெண்டு மணிக்கு வரேன்” என சொல்லி போனை வைத்தாள். சோமா ஏதோ செய்து கொண்டே இருக்கிறார். நாம் அவருக்காக என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுந்தது கோகிக்கு.

என்ன செய்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது என புரியாமல் சோபாவில் சாய்ந்து கண் மூடி யோசித்தாள்.

சோமாவின் போன் வந்தது. “என்ன மண்டைய ஒடச்சிகிட்டு உக்காந்திருக்கியா இன்னும், ரெடியாகி கிளம்பு” என்றார். “சரி சோமா” என்றாள் அவள்.

Spa செஷன் முடிந்ததும் உடலில் தான் நீண்ட நாட்களாகச் சுமந்து வந்த ஒரு கண்ணுக்குத் தெரியாத பாரம் மெதுவாக இறங்கிவிட்டது போல உணர்ந்தாள் கோகி. தோள்களில் இருந்த இறுக்கம் தளர்ந்து கழுத்து, முதுகு, கை கால்கள் என உடலின் ஒவ்வொரு பகுதியும் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கியது போல் இருந்தது.

அன்று இரவு சோமா வாக்கிங் கிளம்பும் போது, கோகியும் சேர்ந்து கிளம்பினாள். “பைக் எடுத்துட்டு வரவா? ஒரு ரவுண்டு போலாமா?” என்றார் சோமா.

அவள் தலையசைக்க, நகரத்து சாலைகளை தவிர்த்து ஹைவேசில் ஒரு நெடிய பயணமாக அது இருந்தது.

“நான் கொஞ்ச தூரம் ஓட்டவா?” என்றாள். சாலையோரம் வண்டியை நிறுத்தி சாவியை கொடுத்தார்.

கோகியின் இரு தோள்களை பற்றி சற்று தூரம் வந்தவர், லேசாக அவள் மீது தலை சாய்த்து கொண்டார். இது அவரின் குறைந்த பட்ச தேவை என உணர்ந்து, சர்வீஸ் ரோட்டுக்கு மாறி ஒரு கையால் வண்டியை ஒட்டிக்கொண்டே, மறு கையால் அவர் கால்களை மென்மையாய் பிடித்து விட்டாள்.

கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பயணம் முடித்து வீடு வந்து சேர்ந்த போது, சோமா பல நாள் வெறுமை நீங்கியது போல உணர்ந்தார்.

அடுத்த நாள் காலை. கோகி நான்கு மணிக்கே விழுத்துக் கொண்டாள். அவள் இரண்டு முறை புரண்டு படுக்க, சோமா “ஓய், சில்வர் கேர்ள், happy anniversary!” என சொல்லி இழுத்து அணைத்துக் கொண்டார். “Happy anniversary மை சில்வர் ஜூபிலி ஹீரோ! என கோகியும் கிசுகிசுப்பாய் சொல்ல, அன்றைய plan என்ன என்று கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டார்கள்.

ஆறு மணிக்கே கோவிலை சென்றடைந்து, சந்நிதி முன் நின்றபோது, அவர்கள் மனக்கண்களில் பல நினைவுகள் ஓடின. முதல் சம்பளம், முதல் வீடு, குழந்தை பிறப்பு, வலி மிகுந்த நாட்கள் மற்றும் சிறு சிறு வெற்றிக்காக வந்து நன்றி சொன்ன தருணங்கள் என ஒவ்வொரு நிகழ்வும் அவர்களுக்குள் ஒரு திரைப்படம் போல விரிந்தது.

அன்று சாயந்திரம் ஆறேழு நண்பர்கள் வீட்டுக்கு வர, ஒன்பது மணி வரை நேரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொருவராய் கிளம்ப, கடைசி நபரை வழி அனுப்பி விட்டு “மெயின் டோர் பூட்டிடவா கோகி” என கேட்டார் சோமா.

மூடிய உள்ளங்கையை கோகி நீட்ட, அவர் மெல்ல அவள் விரல்களை பிரித்தால் அதில் ஒரு சாவி இருந்தது. “போலாமா?” என அவள் கேட்க, ஆச்சர்யத்தில் மூழ்கினார் சோமா.

லிப்டில் முதல் முறையாக பதினாறாவது மாடிக்கு போனார்கள். கோகி மொட்டை மாடி பூட்டை திறக்க, “வாங்க” என சொல்லி வாட்டர் டேங்க் படி மீது ஏறி மேலே போய் நின்றாள். பின்னாலேயே சோமாவும் ஏறி வர, முழு நகரமும் தங்க புள்ளிகளாக ஜொலித்துக் கொண்டிருந்தது.

“என்னடி இங்க கூட்டிட்டு வந்திருக்க?” என அவர் கேட்க, “மேகத்துக்கு நடுவுல, நீங்களும் நானும் மட்டும். சுற்றிலும் பனிமூட்டம். பக்கத்துல இருக்குற ஊரு,காடு, மலை எல்லாம் மங்கலா தெரிஞ்சாலும் பரவாயில்லை. நமக்கு நாம மட்டும் தெரிஞ்சா போதும்” என சொல்லி இறுக கட்டிக் கொண்டாள்.

அவர்கள் எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை. அவன் சட்டையைப் பிடித்திருந்த அவள் விரல்கள் மட்டும் இறுகிக் கொண்டே போக, அவள் முதுகில் இளம் சூடான கண்ணீர் துளிகள் ஒன்றன்பின் ஒன்றாக விழ, “லவ் யூ சோமா” என்றாள்.

அன்று இரவு அவர்கள் ஷில்லாங்கில் இல்லை. ஆனால் ஷில்லாங் தரும் அமைதியும் நெருக்கமும் அவர்களுக்குள் இருந்தது.

சிறுகதை – கோலங்கள்

An image of a house decorated with floor rangoli

“ராஜு அண்ணா, நம்ம வேதநாயகி மேடம் வீட்டு வாசல்ல பால் பாக்கெட் எடுக்காம அப்படியே இருக்கு. அவங்க ஊர்ல இல்லியா?” என செக்யூரிட்டியிடம் கேட்டாள் ஹவுஸ் கீப்பிங் பணிப்பெண் மாதவி.

“எதுவும் சொல்லலியேம்மா? பெல் அடிச்சி பாத்தியா?” என்றார் ராஜு.

“அடிச்சேன்னா..யாரும் தொறக்கல. இன்னும் கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தா மூணு பாக்கெட் பாலும் கெட்டு போயிடும்” என்றாள் மாதவி.

ராஜு அவர்களுக்கு போன் செய்தார். அவர்கள் எடுக்காததால், “நீ என்ன பண்றன்னா, அந்த ப்ளோர்ல இருக்க யார்கிட்டயாவது பால குடுத்து பிரிட்ஜ்ல வெச்சிக்க சொல்லு. அவங்களுக்கு நா மெசேஜ் போட்டுடறேன், வந்தா வாங்கிக்கட்டும்” என்றார்.

“சரிண்ணே” என சொல்லி, அதே ப்ளோரில் இருந்த கோமதி வீட்டுக்கு போனாள்.

“அக்கா, வேதநாயகி மேடம் வீட்டுல இல்ல, இந்த பால பிரிட்ஜ்ல வெச்சிக்குங்க, வந்தா வாங்கிக்கட்டும்” என்றாள் மாதவி.

“நான் மத்தியானத்துக்கு மேல ஊருக்கு போறேன் மாதவி. நாலு நாள் ஆகும் வர்றதுக்கு. நீ வேணா சங்கரிகிட்ட குடுத்துடேன்” என சொன்னாள் கோமதி.

சங்கரி வீட்டு டோர் பெல்லை அடித்துவிட்டு சற்று நேரம் நின்று கொண்டிருந்தாள் மாதவி. கொஞ்ச நேரத்தில் அவள் கணவர் வந்து கதவை திறந்தார். மாதவி சொன்னதை முழுதாய் கேட்டார்.

“அவ நேத்து நைட் ஷிப்ட் பாத்துட்டு, இப்போ தான் வீட்டுக்கு வந்து தூங்குறா. நானும் அரை மணி நேரத்தில் கெளம்பிடுவேன். மத்தியானம் அவங்க வந்து பெல் அடிச்சா அவளுக்கு டிஸ்டர்பா இருக்கும். நீங்க வேணா சஞ்சய் அம்மாகிட்ட குடுத்து போயிடுங்க” என்றார்.

சஞ்சய் வீட்டு பெல்லை அடித்துவிட்டு மூன்றாம் மாடியில் இருந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மாதவி.

கதவை திறந்து “என்ன மாதவி”? என கேட்டாள் சஞ்சய் அம்மா ஷீலா.

“ஷீலாக்கா, இந்த மூணு பாக்கெட் பால் வேதநாயகி மேடம் வீட்டுக்கு வந்திருக்கு. அவங்க ஊர்ல இல்ல. நீங்க பிரிட்ஜ்ல வெச்சிக்குறீங்களா?” என்றாள் மாதவி.

“நான் நேத்து தான் இட்லி மாவு அரைச்சு பிரிட்ஜ்ல வெச்சிருக்கேன். இதை வைக்கிறதுக்கு இடம் இருக்காது. நீ வேணா சங்கரி வீட்டுல குடுத்துடேன்” என சொல்லி அனுப்பி வைத்தாள் ஷீலா.

மாதவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படியே வைத்து விட்டு போனால் கெட்டு போய்விடும். திரும்பவும் ராஜுவின் கேபினை நோக்கி நடந்தாள்.

“பேசாம நீயே வீட்டுக்கு எடுத்திட்டு போய்டு” என்றார் ராஜு.

‘அண்ணே,எங்க வீட்ல ப்ரிட்ஜ் இல்ல, இத்தனை பாக்கெட்டை நான் என்ன பண்றது?” என்றாள் மாதவி.

“சரி நீ ஒண்ணு எடுத்திட்டு போ. கொஞ்ச நேரம் கழிச்சி புவனாவும், ராணியும் வீட்டுக்கு போவாங்க. அவங்க கிட்ட ஆளுக்கொண்ணு குடுத்துடுறேன்” என சொன்னார் ராஜு.

“சரிண்ணே, நாளைக்கு நாங்க மூணு பேரும் ஆளுக்கொரு புது பாக்கெட் பதிலுக்கு வாங்கி குடுத்திடுறோம்” என சொல்லிவிட்டு கிளம்பினாள் மாதவி.

அன்று இரவு எட்டு மணி. ராஜுவுக்கு போன் போட்டு “அண்ணே, அவங்க வந்துட்டாங்களா?” என கேட்டாள்.

“இல்லம்மா, அவங்க திருப்பதிக்கு போயிருக்காங்களாம். நாளைக்கு காலைல பத்து மணி ஆகிடும் வீட்டுக்கு வர்றதுக்குன்னு சொன்னாங்க” என்றார் ராஜு.

“சரிண்ணே” என சொல்லி போனை வைத்தாள்.

மறுநாள் காலை எட்டு மணி. அன்றைய நாளுக்கான மூன்று பாக்கெட் பால் வேதநாயகி மேடம் வீட்டு வாசலில் இருந்தது. தரை மெழுகி சுத்தம் செய்ய வந்த மாதவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பத்து மணி வரை விட்டால் தாங்குமா என யோசித்தாள். மூன்று பாக்கெட்டையும் எடுத்துக் கொண்டு மீண்டும் ராஜுவின் அறைக்கு சென்றாள்.

அவர் டேபிள் மீது ஏற்கனெவே இவர்கள் பதிலுக்கு குடுத்த மூன்று பாக்கெட் இருந்தது.

“என்னண்ணே பண்றது?” என்றாள் மாதவி.

“இரு, பால்காரருக்கு போன் பண்றேன்” என்று அவரிடம் பேசினார்.

“அவரு வேற ஏரியாக்கு போயிட்டாராம், ரிட்டர்ன் வாங்க வர முடியாதுன்னு சொல்றார்” என்றார் ராஜு. பிறகு “பக்கத்து கோயில்ல இப்போ அய்யர் வர்ற நேரம். நீ போய் அவர்கிட்ட குடுத்துடு” என்றார்.

மாதவி தயங்கியவாறே “அண்ணே, அப்புறம் பதிலுக்கு யாருண்ணே ஆறு பாக்கெட் வாங்கி தர்றது?” என கேட்டாள்.

“மேடம் தங்கமானவங்க, அதெல்லாம் ஒண்ணும் கேக்க மாட்டாங்க” என்றார் ராஜு.

மாதவி மொத்த பாக்கெட்டையும் ஒரு துணி பையில் போட்டு அய்யரிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு போனாள்.

அன்று இரவு அவளுக்கு சங்கடமாக இருத்தது. “ஏங்க ஒரு இருநூத்தி அம்பது ரூபா நாளைக்கு காலைல வேணும்” என கணவரிடம் விஷயத்தை சொல்லி கேட்டாள்.

“சரிடி தரேன், ஆனா ஆறு பாக்கெட் வெச்சி அவங்க என்ன பண்ணுவாங்க?” என கேட்டார் அவர்.

“தெரியலீங்க, ஆனா நான் தானே எடுத்திட்டு வந்தேன்” என்றாள் மாதவி.

மறுநாள் காலை. அண்ணாச்சி கடைக்கு போய் விஷயத்தை சொல்லி ஆறு பாக்கெட் பால் வாங்கி கொண்டாள். ஒரு வேளை அவர்கள் மூன்றுக்கு மேல் வேண்டாம் என்றால் உடனே மீதியை திரும்ப தருவதாக ஏற்பாடு.

“இன்னைக்கு இந்நேரம் பால் வந்திருக்குமேம்மா?” என யோசனையாக சொன்னார் அண்ணாச்சி. அதுவும் சரிதான் என தோன்றியது மாதவிக்கு.

“பரவால்ல, எடுத்திட்டு போ, என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்” என சொல்லி அனுப்பினார் அண்ணாச்சி.

மாதவி போய் வேதநாயகி மேடம் வீட்டு டோர் பெல்லை அடித்தாள்.

கதவு திறந்தவுடன், “இந்தாங்க மேடம், ரெண்டு நாள் பாலு. இங்கயே இருந்தா கெட்டு போயிடும்னு எடுத்திட்டு போயிட்டோம். அதான் பதிலுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றாள்.

“லிப்ட்ல, கீழ கிரவுண்ட் ப்ளோர் நோட்டீஸ் போர்டுல பால்காரர் நம்பர் ஒட்டி வெச்சிருக்கோம்ல. சொல்லி இருந்தா அவரே எடுத்திட்டு போயிருப்பார். இன்னைக்கு பால் ஏற்கனவே வந்துடிச்சி. இவ்வளவு எனக்கு தேவைப்படாது. நீயே எடுத்திட்டு போயிடு” என சலித்துக் கொண்டார் வேதா.

“சரிங்கம்மா, அப்போ நா காசா குடுத்துடவா?” என தயங்கியபடியே கேட்டாள் மாதவி.

“எவ்வளவோ தண்ட செலவாகுது! அது மாதிரின்னு நெனச்சுக்குறேன். காசெல்லாம் வேணாம்” என சொல்லி கதவை சாத்தினார்.

மாதவிக்கு சுறுக்கென்று இருந்தது. தளர்வாய் நடந்து அண்ணாச்சி கடைக்கு போய், பால் பாக்கெட்டுகளை ரிட்டர்ன் செய்து பணம் வாங்கி கொண்டு கிளம்பினாள். வீட்டுக்கு போய் கணவரிடம் விஷயத்தை சொல்ல, அவர் சில யோசனைகளை சொன்னார்.

மறுநாள் காலை வழக்கம் போல ஒவ்வொரு ப்ளோராக தரையை சுத்தம் செய்து விட்டு, மூன்றாம் மாடிக்கு வந்தாள். ஏதோ அவளுக்கு வித்தியாசமாக பட்டது. சற்று நின்று நிதானித்து கவனித்தாள். நான்கு வீட்டு வாசலிலும் ரங்கோலி கோல ஸ்டிக்கர்கள் ஒட்டியிருந்தது.

“என்ன மாதவி, சீக்கிரமே வந்துட்ட?” என்றபடி நைட் ஷிப்ட் முடித்து வந்த சங்கரி கேட்டாள்.

“ஆமாக்கா..கொஞ்சம் வெளில போகணும். அதான் சீக்கிரமே வந்துட்டேன். ஸ்டிக்கர் அழகா இருக்குது. அதான் பாத்துக்கிட்டே கொஞ்ச நேரம் நின்னுட்டேன்” என்றாள் மாதவி.

“அதுவா, நம்ம வேதநாயகி மேடம் திருப்பதிலேர்ந்து வாங்கிட்டு வந்தாங்க. நாலு வீட்டுக்கும் யூனிபார்மா இருந்தா நல்லா இருக்கும்னு ஆளுக்கொண்ணு குடுத்தாங்க நேத்து, மேடம் தங்கம்!” என்றாள் சங்கரி.

“ஆமாக்கா” என சொல்லி விட்டு கிளம்பினாள் மாதவி. வீட்டுக்கு போகும் வழியில் கோயிலுக்கு போய் இருநூத்தி அம்பது ரூபாய் அய்யரிடம் கொடுத்து ஏதாவது பிரசாதம் செய்து பக்தர்களுக்கு கொடுக்க சொன்னாள்.

“யாரு பேருக்குமா அர்ச்சனை செய்து பிரசாதம் குடுக்கணும்?” என கேட்டார் அய்யர்.

“தங்கம், சாமி” என சொல்லி விட்டு கிளம்பினாள் மாதவி.

கொஞ்சல்ஸ் ..ஏஞ்சல்ஸ்!

A candid conversation between pani poori couples

பூரி குமாரி : என்ன கோல்கப்பா, நம்பளை ரொம்ப நாளா காணோம்?

கோல்கப்பா குழப்பமாக பார்க்கிறார்.

கோல்கப்பா : என்னடி சொல்ற? நம்பளை காணோம்னு நம்பளே எப்புடிடீ கேக்க முடியும்?

பூரி குமாரி : ஹிஹிஹி, அப்பாவை காணோம்னு, கணவனை காணோம்னு சொல்றதுதான் இன்னிக்கு ட்ரெண்டிங்க்ல இருக்கு!

கோல்கப்பா : ஓ, நீ சட்டசபை லைவ் பாத்துட்டு தான் என்னை மொக்க பண்றியா?

பூரி குமாரி : ஆமாம் கோல், எப்படியோ லைவ் கட்டாகுற பிரச்சினை ஓஞ்சு முடிஞ்சிருக்கு.

கோல்கப்பா : லைவ் கட் பண்றது தவறான செயல் இல்லையா குமாரி?

பூரி குமாரி : தவறான செயல்னு மட்டும் சொன்னா பத்தாது கோல். தவறான, உண்மைக்கு புறம்பான செயல்னு நீட்டி முழக்கி சொல்லுங்க!

கோல்கப்பா : உன்ன பாத்து நா எப்புடிடீ எதிர் கட்சி languageல பேசுறது?

பூரி குமாரி : நா உங்க தாரமா இருந்தாலும், ஆதாரம் இருந்தா தைரியமா சொல்லுங்க கோல்!

கோல்கப்பாவுக்கு வேர்த்து ஊத்துகிறது.

கோல்கப்பா : இந்த fan காத்து எனக்கு பத்தலை, AC வாங்கலாமா? நல்ல brandஆ சொல்லுடி.

பூரி குமாரி : Carrier brand வாங்கலாம் கோல்.

கோல்கப்பா : இந்த வார்த்தைய எங்கயோ கேட்டிருக்கனே?

பூரி குமாரி : careerன் உச்சம், டிபன் கேரியர், பியூஸ் கேரியர் theme தான் ஒரு மாசமா ஓடிக்கிட்டு இருக்கு நாட்டுல!

கோல்கப்பா : ஹ்ம்ம், ஏண்டி என்னை பீதியிலயே வெச்சிருக்கன்னு, உன்கிட்ட நா சொல்லிக்க விரும்புறேன்?

பூரி குமாரி : ஹாஹாஹா, ஏங்க எம்மேல பொத்தாம் பொதுவா ஒரு அவதூற சொல்றீங்க? என்னோட எந்த செயல் உங்கள டென்ஷாக்குச்சுன்னு தெளிவா சொல்லுங்க.

கோல்கப்பா : எனக்கு ஏண்டி ஆயிரம் ரூபா gpay பண்ணிட்டு, “for party fund”ன்னு மெசேஜ் அனுப்புன?

பூரி குமாரி : உங்ககூட பார்க் SOFAல உக்காந்து கதை பேசுவாரே ஒருத்தரு, அவருக்கு இன்னைக்கு birthdayன்னு சொன்னீங்கள்ல? அதான் அனுப்பிச்சேன்.

கோல்கப்பா : எந்த ஊர்லடீ பார்க்குல SOFA போட்டுருக்காங்க?

பூரி குமாரி : SOFAவோ, பெஞ்சோ, எதுவா இருந்தா என்ன? உங்க கோஷ்டி எப்பவும் Systematically Off From Activity மோட்ல தான இருக்கும், அதைத்தான் சொன்னேன். போயிட்டு வாங்க கோல்.

கோல்கப்பா : ஏன் சில தவறான வார்த்தைகளை சொல்ற குமாரி?

பூரி குமாரி : ப்ச்ச்..வெறும் தவறான மட்டும் use பண்ணாதீங்க கோல். அது கூட ஆதாரமில்லாத, பிழையான, போலியான போன்ற வார்த்தைகளை சேர்த்து strongஆ சொல்லுங்க!

கோல்கப்பா : என்னடி சொல்ற? உன்மேல நா complaint சொல்றதுக்கு கூட template தர்ற?

பூரி குமாரி : ஹிஹிஹி, நான் தான் beginningலயே, initial stageலயே உங்களுக்கு சொல்லிட்டேன்ல?

கோல்கப்பா : நிறுத்து, நிறுத்து , நிறுத்து…இந்த phrase எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே?

பூரி குமாரி : அது எங்க கேட்டதுன்னு மக்களுக்கே நல்லா தெரியும், அது நா சொல்லி தெரிய வேண்டியதில்லை!

கோல்கப்பா : ஓ…ஓ.. என்னடி ஆளும் கட்சி languageக்கு டக்குன்னு தாவிட்ட?

பூரி குமாரி : பார்ட்டிக்கு லேட் ஆகுது கோல், கிளம்புங்க.

கோல்கப்பா : என்ன இப்போ போங்கன்னு சொல்லிட்டு, அப்புறம் நான் தான் அனுப்பி வெச்சேன், நான் தான் அனுப்பி வெச்சேன்னு நீ பொங்க கூடாது!

பூரி குமாரி சரோஜா தேவி குரலில் சொல்கிறார்.

பூரி குமாரி : உங்களை தடுக்க நான் யார் கப்பா, கோல்கப்பா? இது உங்கள் உரிமை, நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் பார்ட்டி பண்ணலாம். இது நீங்க சுயேச்சையா எடுக்குற முடிவு கப்பா.. கோல்கப்பா…இதை தடுக்க நான் யார்?

கோல்கப்பா : உன் தமிழ்ல தீய வெக்க! அது சுயேச்சையா இல்ல, சுயமா! பார்ட்டிக்கு போக மனைவி கணவன் கிட்ட permission கேக்குறது தான் மரபு. இப்போ அது மீறப்பட்டு இருக்கு?

பூரி குமாரி : வீட்டு பொறுப்பை சுமப்பதுல எனக்கு பெரும் பங்கு குடுக்குற உங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தில் சம பங்கு குடுக்க ஏன் மனசு வரல? மரபு, மரபுன்னு ஏன் ரப்பர் தோட்ட கோஷ்டி மாதிரி கூவாதீங்க கோல்?

கோல்கப்பா : ரப்பர் தோட்ட கோஷ்டி யாருடி?

பூரி குமாரி : நம்ம தற்போதய எதிர்கட்சியை கவிஞர் அப்படிதான் சொல்கிறார் கோல்! ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதில்லைன்னு ஒரு பன்சை போட்டிருக்கார்!

கோல்கப்பா : குசும்புடி அவருக்கு. உச்சியிலேர்ந்து வேர் வரை ரப்பர் மரத்துல வெட்டு இருக்கும். அது மாதிரி எதிர்கட்சியோட தோல்வி இருக்குனு சொல்ல வரார் போல. சரி நா பார்ட்டிக்கு போகட்டுமா? வேணாமா?

பூரி குமாரி : பார்ட்டிக்கு போக என் கிட்ட எதுக்கு கோல் NOC கேக்குறீங்க?

கோல்கப்பா : நானே ஒரு OC கேஸு! என்ன எதுக்குடி NOC மேட்டர்ல கோத்து விடுற?

பூரி குமாரி : சும்மா ஒரு funக்கு தான் கோல். Evil..Devilன்னு அவங்க சபைல rhyminga பேசும்போது நா சொல்ல கூடாதா.. மக்களே, இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா, உங்க கொஞ்சல்ஸ் ..ஏஞ்சல்ஸ் கோஷ்டிக்கு ஷேர் பண்ணுங்க. Bye!

Post-Election Shakes & Handshakes!

An artistic arrangement of horse-themed playing cards placed on a table. The top row features carousel horses, the middle row shows racing horses, the third row depicts traditional Poikkal Kuthirai folk-art horses, and the bottom row displays black-and-white chess knight horses symbolizing dual political loyalties and shifting alliances. A deck of cards lies to the side, with Tamil text at the top reading “Perplexing Horses.”

கோல்கப்பா : என்ன குமாரி, தேர்தல் முடிந்து புது ஆட்சி அமைந்து இருக்கிறது! இதை எப்படி பார்க்கிறாய்?

பூரிகுமாரி : விசுவாவசு ஆண்டு முடிந்து, அடுத்ததாக பராபவ ஆண்டு கோலாகலமாக தொடங்கியிருக்கிறது கோல்..

கோல்கப்பா : ஹ்ம்ம்..புது வருஷம் ஆரம்பிச்சி ஒரு மாசத்துக்கு மேல ஆகுது..இப்போ என்னடி விசுவாசம் முடிஞ்சி போச்சின்னு சொல்ற?

பூரிகுமாரி : ஹிஹிஹி..அது விசுவாவசு கோல்..நியூஸ் அதிகமா பாத்ததால உங்களுக்கு ஊர் உலகத்துல யாரும் விசுவாசத்தோட இல்லென்ற மாதிரியே நெனைக்குறீங்க..

கோல்கப்பா : என்னமா போ..பராபவ வருஷ சித்திரையில் வந்த தேர்தல் முடிவுகள், பலரோட நித்திரையை கெடுத்திருக்குன்னு தான் சொல்லணும்.

பூரிகுமாரி : ஆமா கோல், கூடவே பல பேரோட முகத்திரையையும் சேத்து கிழிச்சிருக்கு!

கோல்கப்பா : “வைபவத்தில் வாழ்ந்தோர், பராபவத்தில் வீழ்ந்தார்ன்னு” விதி இருக்கும் போல.

பூரிகுமாரி : எவ்வளவு நிகழ்வுகள், எவ்வளவு மாற்றங்கள் இந்த மே மாதத்தில் மட்டும், கோல் ?

கோல்கப்பா : சரித்திரத்தில் முக்கியமான மே மாதம் இது. இந்த கோடை காலம், அரசியலுக்கு புதியவரை கோட்டைக்கு அனுப்பியும், பழம் தின்று கொட்டை போட்டவர்களை வேட்டையாடியும் பதம் பார்த்திருக்கிறது.

பூரிகுமாரி : உண்மை தான் கோல். குதிரை பேர அரசியல் என எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டையும் , குதிரை வேக அரசு இது என ஆளுங்கட்சியின் தற்புகழ்ச்சியையும் என்னவென்று சொல்வது கோல்?

(காக்க காக்க திரைப்படத்தில் வரும் “ஒன்றா ரெண்டா ஆசைகள்” பாடலை முணு முணுக்கிறார் கோல்)

கோல்கப்பா : ஒன்றா ரெண்டா குதிரைகள்,
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?
அன்பே பதவி கேட்கலாம், கட்சி
தாண்டினால் பதவியும் நிலைக்குமா?

(பூரி குமாரி பாடலை தொடர்கிறாள் )

பூரிகுமாரி : பேரத்துக்கு call வந்தாலே,
என் மனசில் மழையடிக்கும்!
மிகப்பிடித்த துறை ஒன்றை,உதடுகளும்
முணுமுணுக்கும்!

கோல்கப்பா : ஹிஹிஹி..கள்ளி, அப்படியே tuneஅ புடிச்சிட்ட.

பூரிகுமாரி : ஆட்சியை காக்க ஒரு தரப்பும், தங்கள் அரசியல் எதிரியை சாய்க்க மறுதரப்பும் மும்முரமாக இருக்கிறார்கள் கோல்.

கோல்கப்பா : இருக்காதா பின்னே..டப்பு என்ஜினும், டபுள் என்ஜினும் ஜிங்கிள்ஸ் மிங்கிள்ஸ் ஆகுற அளவுக்கு போய் இருக்காங்கன்னா பாத்துக்க!

பூரிகுமாரி : ஹிஹிஹி..வெளில குதிரை பேரம்ன்னு ஆளு தரப்பை விமர்சனம் பண்ணிகிட்டே, மறைமுகமா ரெண்டு பெரிய குதிரை லாயமும், ஆதாயம் தேட பாத்திருக்காங்க!

(கோல்கப்பா பாடலை தொடர்கிறார்)

கோல்கப்பா : பீதியிலே போராடும்,
சூரியனை நான் கண்டேன்!
போர்வைகளின் பின்னாலே,
யார் இருப்பாரென நான் கண்டேன்!

பூரிகுமாரி : வாவ், கோல்! அட்டகாசம் போங்க…செம ரொமான்டிக் சாங்க, எப்படி புடிச்சீங்க கோல்?

(கோல்கப்பா முத்தமிழ் அறிஞர் குரலில் சொல்கிறார்)

கோல்கப்பா : அரசியலிலே Alliance என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. Romance என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்!

பூரிகுமாரி : ஹிஹிஹி, அல்டிமேட் பன்ச் கோல்.நம்மளோட இந்த குதிரைங்க போஸ்டருக்கு இதுக்கு மேல லீடு குடுக்க முடியாது! நம்ம வாசகர்களுக்கு ஒவ்வொரு குதிரையை பத்தியும் சொல்லுவோம் கோல்.

கோல்கப்பா : மொதல்ல Merry go round குதிரைங்க. கடந்த அறுபது வருஷமா நம்ம மாநில அரசியல் இரு துருவங்களுக்கு நடுவே சுழன்றுகொண்டே இருக்கும் closed loop ஆகத்தான் இருந்தது. அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை ஒரு கட்சி மேல ஏறும், இன்னொன்னு கீழ இறங்கும். அதனால ஆட்சி சக்கரமும் இவங்களை மட்டுமே மையமா வெச்சி சுற்றிக் கொண்டே இருந்தது.

பூரிகுமாரி : கரெக்ட். இந்த ரெண்டு கட்சிக்கு மட்டும் தான் பந்தயம்ன்னு ஒரு நிலை இருந்தது. வெற்றிக்கோப்பையை நோக்கி வெறித்தனமாக விரையும் குதிரைகள் இவர்கள். புழுதியை பறக்கவிட்டு புயலாய் களப்பணியாற்றி, இறுதி வரை போராடி, கடைசி பாய்ச்சலில் கிரீடம் சூடிய வரலாறும் இவர்களுக்கு உண்டு. பந்தயத்தில் ஜாக்கி பெயர் வாங்கலாம், ஆனால் குதிரையை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது என்னவோ அமைதியாக உழைத்த களப்பணியாளர்கள் தான்! இந்த குதிரைக்கு சக்தி தந்தது கிராமம் தோறும் ஓடிய தொண்டர்களின் கால்கள் தான்!

கோல்கப்பா : அருமையாய் சென்னாய் குமாரி. இப்படி பல்லாண்டுகளாக மாறி மாறி ஆட்சி நடத்தியவர்கள், இன்று ஆரம்பித்து மூன்றே வருடம் ஆன கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதனை “பொய்க்கால் குதிரை” என விமர்சிக்கிறார்கள்.

பூரிகுமாரி : ஆமாம் கோல், நானும் அந்த விமர்சனத்தை பார்த்தேன். முதலில் இந்த கலை வடிவத்தை எதிர்மறை அடையாளமாக பார்ப்பதையே நாம் கடுமையாக கண்டிக்க வேண்டும் கோல்.

கோல்கப்பா : சரியாய் சென்னாய் குமாரி. மரக்கால்களில் நிற்பது எளிதல்ல. தடுமாறாமல் தாளத்தோடு நகர்வது அதைவிட கடினம்! குதிரை வேடம் அணிந்து அதற்கு உயிர் கொடுக்கும் அசைவுகளோடு ஆட அர்ப்பணிப்பும் வேண்டும். விழுந்துவிடும் அபாயம் இருந்தும், சிரித்தபடியே ஆடி மக்களை மகிழ்விப்பதே இந்தக் கலையின் தனிச்சிறப்பு!

பூரிகுமாரி : இப்பேற்பட்ட சிறப்பு மிக்க கலையை, போகிற போக்கில் தவறான உதாரணமாக சொன்னால் எப்படி கோல்?

கோல்கப்பா : இன்னொன்றும் சொல்கிறேன் கேள்.

காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடல்

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட இந்த வரிகள் மரக்கால் கூத்து பற்றியது. இதுவே பிற்காலத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமாக வடிவம் பெற்றது என்ற கருத்தும் உண்டு குமாரி.

பூரிகுமாரி : தானே நிரந்தரம் என கருதியவர்கள், இன்று அந்தரத்தில் தொங்குவதால் என்ன பேசுகிறோம் என தெரியாமல் இந்த மாதிரி பேசுவது தான் கவலையாக இருக்கிறது கோல்.

கோல்கப்பா : ஹ்ம்ம்..இப்போது நடக்கும் அரசியல் சதுரங்கம் மிகுந்த ஆபத்தாக இருக்கிறது குமாரி?

பூரிகுமாரி : ஏன் அப்படி சொல்கிறீர்கள், கோல்?

கோல்கப்பா : சில குதிரைகள் கருப்பாகவும் இல்லாமல், வெள்ளையாகவும் இல்லாமல் ஆட்டத்தில் இருக்கின்றன! யார்னு சொல்லு பாக்கலாம்?

பூரிகுமாரி : ஹ்ம்ம்..ஆட்சிக்கு ஆதரவு தரும் சில கூட்டணி கட்சிகள், சரியா கோல்?

கோல்கப்பா : மிக சரியாய் சொன்னாய் குமாரி. ஒரு பக்கம் இருந்து பார்த்தால் கருப்பு, இன்னொரு பக்கம் இருந்து பார்த்தால் வெள்ளை! அதனால் ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் இவர்களை தங்களுடைய குதிரை என்றே நம்புகின்றனர்.

பூரிகுமாரி : ஆளும் கட்சிக்கு கூட்டாளி போலவும், எதிர்க்கட்சிக்கு பழையபடியே நண்பன் போலவும் இருக்கிறார்கள். இன்றைய தேதியில் இவர்களின் விசுவாசம் யாருக்கு என்பதே புரியாத புதிராக இருக்கிறது கோல்! மக்களே, தேர்தல் முடிந்து மூன்று வார காலத்தில் நடந்த நிகழ்வுகளை பற்றிய எங்களின் பார்வை இது. பிடித்திருந்தால், இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி!

Breaking news!

Madurai constituency DMK leader PTR

பூரி குமாரி : என்ன கோல், மல்லிப்பூ மேன் ஷார்ட் ப்ரேக்குல போறேன்னு பொசுக்குன்னு சொல்லிட்டாரு!

கோல்கப்பா : Reality show விளம்பர இடைவேளையா இது? Ground reality களேபர ஷாக் தான்,வேறென்ன?

பூரி குமாரி : எனக்கென்னமோ வருத்தம் தான். இவரு எப்போ இந்த முடிவை எடுத்திருப்பாரு கோல்?

கோல்கப்பா : ஹிஹிஹி, எப்போ உங்களுக்கு 35% ஓட்டுதான் வந்திருக்கு, மீதி 65% மக்கள் உங்களுக்கு எதிரா ஓட்டு போட்டுருக்காங்கனு அவரு கட்சிக்காரங்க ஆளுங்கட்சியை பாத்து பேச ஆரம்பிச்சாங்களோ, அப்போவே Data மேன் டாட்டா சொல்லிட்டு போறதுன்னு முடிவு பண்ணி இருப்பார்.

பூரி குமாரி : வாஸ்தவம் தான் கோல். நிதர்சனத்தை ஏத்துக்காம, ஊருசனத்தை மடை மாத்துற வேலைதான் நடக்குது. என்னத்த சொல்ல?

கோல்கப்பா : நீ ஏண்டி அவருக்கு ஈடா மூக்கை சிந்துற? national லெவல்ல அவரை தூக்கி புடிச்ச கட்சி, இன்னிக்கு distressல இருக்கு..கொள்கை விளக்கை தேய்ச்சி ஒளியேத்த வேணாமா?

பூரி குமாரி : ஒளியேத்தறத விடுங்க. அவரையே மறைமுகமா வெளியேத்தியே எவ்ளோ நாள் ஆச்சு..

கோல்கப்பா : ஹ்ம்ம்..expatriate நான்னு ஜம்பம் அடிச்சிவரு, அவரு party expiry ஆனதால அவங்களோட affiliate போதும்ன்னு நெனச்சிட்டார் போல!

பூரி குமாரி : ஹிஹிஹி, அவரு எப்பவும் rationalஆ decision எடுக்குறவர் கோல்!

கோல்கப்பா : என்னது, முத்தமிழ் அறிஞர் தான் inspirationன்னு சொல்லிட்டு, migrationல வந்து பத்து வருஷமா பொது வாழ்க்கைல இருந்துட்டு, இன்னைக்கு frustrationல இப்படி ஒரு முடிவு எடுத்திறதா rational decision?

பூரி குமாரி : ஹிஹிஹி, ஆயிரம் ரூபா குடுத்தோம்னு பெருமை பேசுறவங்களுக்கு ரெண்டாயிரம் வருஷம் முன்னாடியே வள்ளுவ பெருந்தகை வகையா இந்த குறளை எழுதி வெச்சிட்டு போய் இருக்காரு கோல் ..

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.

கோல்கப்பா : இதுக்கு அர்த்தம் என்னடி?

பூரி குமாரி : இந்த குறளுக்கு பெருமதிப்பிற்குரிய சாலமன் பாப்பையா அவர்கள் எழுதிய இந்த குறள் விளக்கம் இது தான்.

தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.”

கோல்கப்பா : பரம்பரை பெருமையை தூக்கி புடிச்சி பேசினவருக்கு நச்ன்னு பொருந்துற குறள் இது. நாலு பக்க லெட்டர் எழுதுறத்துக்கு முன்னாடி இந்த ரெண்டடி குறளை ஒரு முறை படித்திருந்தால் அவர் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம் குமாரி..அது சரி, இதற்கு முத்தமிழ் அறிஞர் எழுதிய விளக்கம் என்ன?

பூரி குமாரி : “போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.”

கோல்கப்பா : ஹ்ம்ம். இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா இவர் குறளையும் படிக்கல. அவங்க ஊர்க்காரர் பாப்பையா அவர்கள் எழுதிய விளக்கத்தையும் படிக்கல..அவங்க கட்சி தலைவர் அதுக்கு குடுத்த விளக்கத்தையும் படிக்கலேன்னு..

பூரி குமாரி : அவரை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை கோல். “நிலை மக்கள் சால உடைத்து எனினும்” என்ற குறள் வேண்டுமானால் அவர் முடிவுக்கு காரணமாய் இருக்கலாம்…

கோல்கப்பா : அது என்னடி குறள்?

பூரி குமாரி : புக்க எடுத்து படிச்சி பாருங்க கோல். நாளைக்கு நீங்களே வந்து இன்னும் பத்து குறளை எடுத்துக்காட்டா சொல்லுவீங்க..

கோல்கப்பா : அருமை குமாரி! மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி!

Decoding Winning Moves

Editorial-style political analysis poster titled “Decoding Winning Moves,” representing the strategic planning, campaign execution, and electoral tactics behind a party’s path to forming the government.

பூரி குமாரி : ஹிஹிஹி.. அட்டகாசம் கோல். பத்து நாளா ராப்பகல் பாக்காம நியூஸ் பாத்தது வீணா போகல!

கோல்கப்பா : நியூஸ் பாக்குறது புதுசு இல்ல..ஆனா வர்ற நியூச கேட்டு நம்ம பல்ஸ் ஏறி எறங்குறது தான் புதுசா இருந்துது.

பூரி குமாரி : ஏறி எறங்குறதுன்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது. தலைவர் நாலாவது தடவை லோக் பவன் போகும் போது அடையார் பிரிட்ஜ்ல ஏறி இறங்கினப்புறம் U turn போட்டு திரும்ப பட்டினபாக்கமே போய்ட்டாரு. அப்போ லோக் பவன்ல அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கலன்னு பிளாஷ் கார்டு போட்டான் பாரு தந்திடிவிக்காரன், மெர்சலாயிட்டேன் கோல்.

கோல்கப்பா : போதும்டியெம்மா நாம பட்டது. இவங்கள நேரு ஸ்டேடியத்துக்கு இட்டுக்கினு போய் இட்டுக்கினு வர்றதுக்குள்ள போதும்னு போதும்னு ஆய்டுச்சு! இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம் குமாரி.

பூரி குமாரி : சரி தான் கோல். ஆனா இதுவரை நடந்தது எல்லாம் எப்படி ஸ்டார்ட்டப் கட்சிக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தேடி தந்தது அப்டீன்னு யோசிச்சீங்களா?

கோல்கப்பா : இதுவரை என்ன நடந்தது? பிரச்சாரத்துக்கு போனாரு, பேசுனாரு, அவ்ளோ தான்.

[பிறகு இருவரும் சிறிது நேரம் மொபைலில் தேர்தல் பிரச்சார வீடியோக்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்]

பூரி குமாரி : கோல், இந்த பிரச்சாரத்துக்கு சில நுட்பமான strategyக்களை இவங்க பயன்படுத்தி இருக்காங்க.

கோல்கப்பா : எனக்கு சுமாரான strategyயே நீ சொன்னாத்தான் வெளங்கும். இதுல நுட்பமா யோசிக்கிறதுக்கு நா எங்க போறது? நீயே சொல்லு.

பூரி குமாரி : புதிய கட்சி, பெரும்பாலோனோர் புதிய candidates. தலைவரை தவிர மீதமுள்ள 232 பேரையும் அந்தந்த தொகுதிக்கு போய் தனித்தனியா மக்களுக்கு introduce பண்ணாங்களா?

கோல்கப்பா : இல்ல? அவர் தான் முதல்லயே சொல்லிட்டாரே, 234 தொகுதிலேயும் நான் தான் வேட்பாளர்ன்னு!

பூரி குமாரி : கரெக்டான பாய்ண்ட்ட புடிச்சிடீங்க கோல். இவங்க என்ன பண்ணாங்கன்னா 234 introductions-ஐயும் ஒரே introductionஆ மாத்திட்டாங்க.

கோல்கப்பா : அட ஆமா..

பூரி குமாரி : மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு எல்லாம் நான்தான்னு உதாரணம் சொல்லி, மக்கள் மனச மொதல்ல tune பண்ணாங்க. நான் வேற, அவங்க வேற இல்லன்னு அது மேல கான்க்ரீட்ட ஊத்தி மொழுகினாங்க.

கோல்கப்பா :ஓஓ, கதை அப்படி போகுதா, அப்புறம்?

பூரி குமாரி : இதுக்கு அர்த்தம் என்னன்னா, உங்க ஊர்ல candidate யாரா இருந்தாலும் அவரை நீங்க already கொண்டாடுகிற, உங்களுக்கு நல்லா அறிமுகமான கதாநாயகனோட extensionஆ பாருங்க அப்படீங்குறது தான்.

கோல்கப்பா : ஹ்ம்ம், மேல சொல்லு.

பூரி குமாரி : ஒரு தலைவரின் அடையாளத்துக்குள்ளே எல்லா candidates-ஐயும் சேர்த்து மக்களுக்கு present பண்ணாங்க. இதுக்கு “Identity Compression”னு பேரு.

கோல்கப்பா : சரி, இதை எதுக்கு பண்ணாங்க?

பூரி குமாரி : மக்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா recognize செய்த ஒரு முகத்தை முன்னிலைப்படுத்தும் போது, அந்த கட்சியின் மற்ற candidates எல்லாரும் மக்களுக்கு familiarஆ தெரிய ஆரம்பிப்பாங்க. ஒரு வலுவான தலைவரின் புகழ், செல்வாக்கு, அல்லது மக்கள் ஆதரவை பயன்படுத்தி, அவர் கட்சி சார்ந்த மற்ற வேட்பாளர்களை தேர்தலில் வெற்றி பெற வைக்க செய்யப்படும் யுக்தி இது.

கோல்கப்பா : ஹ்ம்ம், interesting. அதனால தான் unknown candidates கூட totally unknownஆ feel ஆகல போல இருக்கு.

பூரி குமாரி : இந்த யுக்தியை coattail effect அப்படீன்னு சொல்லுவாங்க.

கோல்கப்பா : அருமை..இது இன்றைய சூழலுக்கு எப்படி பொருந்தி இருக்கு பாத்தியா? தலைவர் coattail effect பயன்படுத்தி வெற்றி பெற்று, இப்போ கோட் சூட் போட்டு கோட்டைக்கு போறார்..

பூரி குமாரி : சூப்பர் பாய்ண்ட் கோல்! நீங்க நல்லா கவனிச்சீங்கன்னா, தலைவரோட எல்லா ஸ்பீச்சும் ஒரே பேட்டர்ன்ல இருக்கும்..என் நெஞ்சில் குடியிருக்கும் அப்படீன்னு ஓப்பனிங், கான்பிடன்ட்டா இருங்க, வெற்றி நிச்சயம்னு ரெண்டு கைய விரிச்சி சொல்லி முடிப்பதுன்னு ஒரு consistency maintain பண்ணாங்க.

கோல்கப்பா : ஆமாமா, same slogans, same emotional tone. அதனால என்ன பிரயோஜனம்?

பூரி குமாரி : Brain repeated patterns-ஐ fastஆ accept பண்ணிக்கும். அதே காட்சிகளை திரும்ப திரும்ப பாக்கும் போது ஒரு familiar feeling create பண்ணும்.

கோல்கப்பா : ஓஹோ..

பூரி குமாரி : அதுக்கே இன்னொரு term இருக்கு “Familiar stranger effect”. இதுக்கு அப்புறம் வர்றதுதான் இந்த campaign planல முக்கியமானது. கட்சி தலைவர அறிமுகப்படுத்துற அதே வேளையில, அவருக்கு மக்கள் கிட்ட ஒரு emotional bonding create பண்றது. அவர் திரும்ப திரும்ப சொன்னது என்னன்னா “மத்தவங்களுக்கு வேணா இது எலெக்சன், நா நம்ம வகையறாக்கு இது எமோஷன்” அப்பிடின்னு.

கோல்கப்பா : மிச்சத்தை நான் சொல்றேன். “உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க மகனுக்கு, உங்க புள்ளைக்கு, ஒரே ஒரு வாய்ப்பு குடுங்கன்னு” ஒரு அப்ளிகேஷன் போட்டது! கரெக்ட்டா?

பூரி குமாரி : Exactly கோல். இந்த எடத்துல Parasocial leadership phenomenonஐ அற்புதமா பயன்படுத்தி இருக்காங்க.

கோல்கப்பா : ஹிஹிஹி ..சரியான பம்பரகட்டை மண்டைகாரிடி நீ..அடுத்து என்ன?

பூரி குமாரி : Crownக்கு வர்றதுன்னா சும்மாவா கோல். Crowd choreography strategy இவங்களுக்கு ஒரு வரபிரசாதமா இருந்தது. அலை மோதுற கூட்டம், இளசுங்க போடுற குத்தாட்டம்ன்னு தேர்தல் களம் களை கட்டி இருந்தது. களம் இப்படியிருக்க, தலைவரோட தரை வழி பயணம் முழுக்க லைவில் ஜனரஞ்சகமான பிரச்சார பாடலோடு ஒளிபரப்பாக, மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள்.

கோல்கப்பா : இந்தாடி தண்ணி குடி, அதுக்குள்ள நா கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாத்துக்குறேன்.

பூரி குமாரி : News channels, Youtube live என எங்கு திரும்பினாலும் அவர் பிரச்சாரம் முடித்து திரும்பும் வரை மொத்த மீடியா கவனமும் அவர் மீது தான் இருந்தது.

கோல்கப்பா : சரியா சொன்ன போ. மக்கள் வழி நெடுக பரிசு கொடுக்குறதும், இவங்க மாத்தி மாத்தி பூ தூவிக்கிறதும்னு கண்கொள்ளா காட்சியால்ல இருந்தது!

பூரி குமாரி : அதே தான். காட்சியியல் அரசியல் (Spectacle politics phenomenon) இவங்களுக்கு அமோகமாக உதவி செய்தது கோல்.

கோல்கப்பா : (சரிந்து உட்காருகிறார்), நல்லா பிளான் போட்டு பக்காவா செய்து முடிச்சிருக்காங்க. என்ன சொல்ற?

பூரி குமாரி : கிரவுண்டுல நடந்த இந்த உற்சாகமான people mobility, ஆன்லைன்ல meme-abilityயா convert ஆச்சு. அல்காரிதத்துக்கே அல்லு விட்டு போற அளவுக்கு மக்கள் ரீல்ஸ், மீம்ஸ், போஸ்ட்டுன்னு போட்டு டிஜிட்டல் தளத்தை தடதடக்க வெச்சுட்டாங்க.

கோல்கப்பா : ஆமாடி, நண்டு சிண்டெல்லாம் ரீல்ஸ் போட்டு அதகளபடுத்திட்டாங்க.

பூரி குமாரி : இந்த இமாலய ரீச்னாலதான் அவர் பெரும்பாலான மாவட்டங்களுக்கு நேர்ல போய் பிரச்சாரம் செய்யலேன்னாலும், மக்கள் கிட்ட பல விதங்கள்ல போய் சேர்ந்துட்டாரு.

கோல்கப்பா : இப்படி டிவி, Youtube, இன்ஸ்டாகிராம்னு எங்க பார்த்தாலும் இவங்க content கரை புரண்டு ஓடுதுனதுனால, மக்கள் இந்த கட்சிக்கு பெருமளவு ஆதரவு இருக்குன்னு நம்ப ஆரம்பிச்சாங்க? கரெக்ட்டா?

பூரி குமாரி : சரியா சொன்னீங்க கோல். மக்களை இந்த ஸ்டேஜுக்கு கொண்டு வர்றதுங்குறது எந்த ஒரு ஸ்டார்ட்டப் கட்சிக்கும் சிரமமான காரியம். ஆனா, அந்த ஸ்டேஜுக்கு மக்களை கொண்டு வந்து நிறுத்திட்டா, அடுத்து bandwagon effect அட்டகாசமா வேலை செய்யும்.

கோல்கப்பா : ஜெயிக்கிற குதிரைங்கிற பிம்பம் மக்கள் மத்தியில பரவ ஆரம்பிச்சது, சரியா?

பூரி குமாரி : ஆமாம் கோல். இந்த image எங்க effectiveவா வேலை செஞ்சது தெரியுமா? First time voters மற்றும் undecided voters க்ரூப்புல. First time votersக்கு social media influence அதிகம். அப்புறம் அவங்களுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்கணும்ங்கிற உத்வேகமும் அதிகமா இருக்கும்.

கோல்கப்பா : undecided voters பத்தி சொல்லவே தேவையில்லை. எந்த பக்கம் காத்தடிக்குதோ, அங்க போய் மொத்தமா குத்திடுவாங்க!

பூரி குமாரி : அதே தான் கோல். அதனால தான் இந்த முறை young voters, passive votersஆ இல்லாம, active advocatesஆ மாறிட்டாங்க. இளம் வாக்காளர்களுக்கு “Desire for generational ownership” அதிகமாக இருந்ததால், பரம்பரை வாக்குகள், ஜாதி, மத சார்பு வாக்குகள் எல்லாம் கணிசமான அளவுக்கு traditional கட்சிகளுக்கு போகாமல், ஸ்டார்ட்டப் கட்சிக்கு வந்து சேர்ந்தது.

கோல்கப்பா : யெம்மாடி, தேர்தலில் Single Largest Party (SLP) ஆக வெற்றி பெற இவ்வளவு வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கிறதா?

பூரி குமாரி : எளிமையான சின்னம், திரை கவர்ச்சி என பல விஷயங்கள் இருந்தாலும், ஸ்டார்ட்டப் கட்சி Strategically Leveraged Phenomenaவை (SLP) கச்சிதமாக கையாண்டதால் தான் இந்த வெற்றி கை கூடி வந்திருக்கிறது! இது வெறும் தேர்தல் வெற்றியை பற்றிய analysis இல்லை கோல்.
டிஜிட்டல் மீடியா, ஸ்டார் பவர், mass psychology — இந்த மூணையும் கணக்கா இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு curated campaign, மக்கள் மனசை எப்படி influence பண்ணுச்சுன்றதோட decode!

கோல்கப்பா : மக்களே, இவ்வளவு உத்திகளை திறமையாக கையாண்டு வென்று வந்தவர்கள், அதே உத்வேகத்தோடு ஆட்சியையும் சிறப்பாக நடத்துவார்கள் என நம்புவோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி!