சிறுகதை – யானும் நீயும் எவ்வழி அறிதும்?

A tamil girl standing in balcony

Part 1

இந்திரா ஆபீஸ் முடித்து வீட்டுக்கு வந்து பார்த்தால் மானசியிடம் இருந்து மூன்று மிஸ்ட் கால்கள் வந்திருந்தது.

“என்னடி இத்தனை போன் போட்டிருக்க?” என கால் செய்து கேட்டாள் இந்திரா.

“இந்துக்கா, ஐடி ரிட்டர்ன்ஸ் பைல் பண்ண இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. அதான் கால் பண்ணேன். நான் இன்னிக்கு பண்ண போறேன், உனக்கும் பண்ணிடவா?” என கேட்டாள் மானசி.

மானசி இந்திராவின் சித்தப்பா பெண். மூன்று மாதங்களுக்கு முன்தான் பெண் குழந்தை பிறந்திருக்கிறது அவளுக்கு.

“நீயே குழந்தய தனியா பாத்துக்குற, கொஞ்சம் டைம் கெடச்சா ரெஸ்ட் எடுடி. உன்ன தொல்ல பண்ண வேணாம்னுன்னு தான் தீப்தியை வர சொல்லி இருக்கேன். வெள்ளிக்கிழமை ஆபீஸ் முடிச்சிட்டு வந்து பண்ணி தரேன்னு சொல்லி இருக்கா” என சொன்னாள் இந்திரா.

தீப்தி மானசியின் சொந்த தங்கை. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாள். இந்திராவின் வீட்டிலிருந்து அரை மணி நேரம் தான் அவள் சித்தப்பா வீடு.

“அந்த நாய் லாஸ்ட் டே வரைக்கும் இப்படித்தான் இழுக்கும். அவகிட்ட நீ நல்லா மாட்ட போற. உன் பேங்க் பேலன்ஸ், சேவிங்ஸ் எல்லாம் நோட் பணிக்குவா..நெக்ஸ்ட் பர்த்டேக்கு உன்கிட்ட என்ன டிமாண்ட் வைக்க போறான்னு பாரு” என வார்னிங் கொடுத்தாள் மானசி.

இந்திராவுக்கு சிரிப்பாக வந்தது. “அவளுக்கு போன் பண்ணி கேட்டேன்டி பைல் பண்ணி தர்றியான்னு..அதுக்கு அவ என்ன கேட்டா தெரியுமா?” என நிறுத்தினாள் இந்திரா.

“சொன்னேன்ல, உன்கிட்ட வசமா ஏதோ எதிர்பாப்பான்னு..என்ன கேட்டா?” என கொக்கரித்தாள் மானசி.

“பொடி தோசை” என சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னாள் இந்திரா.

“ஹாஹ்ஹா , எனக்கு புரிஞ்சிடிச்சு, அம்மா இப்போ அவளை டயட்ல போட்டிருக்காங்க. பட்டர், ghee எதையும் அவ கண்ல காமிக்குறது இல்ல” என தீப்தியின் craving கதையை சொன்னாள் மானசி.

கொஞ்ச நேரம் தீப்திக்கு வரன் பார்க்கும் கதையும், அதற்கு அவள் பிடி கொடுக்காததும் ஓடியது.

“அவ கிட்ட பேசேங்க்கா..அம்மா ரொம்ப படுறாங்க அவகிட்ட” என கவலையாய் சொன்னாள் மானசி.

“வரட்டும், நானே ஆரம்பிச்சா, இந்த சாக்க வெச்சு அவளை கூப்பிட்ட மாதிரி நினைப்பா.. அவளே பேச்சுவாக்குல இந்த டாபிக்க ஓபன் பண்ணுறாளான்னு பாக்குறேன்..நாம பேசுறதுக்கு முன்னாடி அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்குவோம்..அவளே சொல்லட்டும் எந்த விஷயத்தால அவ தயங்குறான்னு..இதான் அவளோட எண்ணமுன்னு தெரிஞ்சிகிட்ட, நமக்கு தெரிஞ்ச நல்லது கெட்டதை சொல்லலாம்” என எப்படி இந்த விஷயத்தை தீப்திக்கு எந்த ஸ்ட்ரெஸ்ஸும் கொடுக்காமல் பேசுவது என விவாதித்தார்கள்.

மானசி பேசி விட்டு போனை வைக்க, இந்துவுக்கு மனம் பல கேள்விகளை முன் வைத்தது. தீப்தி தெளிவான பெண். நல்ல குணம், அறிவு, பொறுமை என எல்லாம் இருக்கிறது.திருமணம் ஆயிரம் காலத்து பயிர், பண்ணிக்கோ என்றால் ஏற இறங்க பார்த்து விட்டு நடையை கட்டி விடுவாள். அதனால் அவளை பேசவிட்டு பிறகு தான் பேசுவோம் என முடிவெடுத்தாள்.

Part 2Part 2

“மா, நாளைக்கு ஆபீஸ் முடிஞ்சதும் நான் இந்து அக்கா வீட்டுக்கு போறேன். நீ அக்காக்கு ஏதாவது குடுத்தனுப்புறதா இருந்தா, நைட்டே பேக் பண்ணி வைச்சிடு” என ராஜத்திடம் சொல்லி கொண்டே வேலைக்கு கிளம்பினாள் தீப்தி. சிவகுரு வாக்கிங் முடித்து வந்து சோபாவில் உட்கார்ந்தார்.

“சரிடி” என சொல்லிவிட்டு, அவருக்கு டீ கொண்டு போய் கொடுத்தார் ராஜம்.

“ஏங்க, இன்னும் நாலு நாளைக்கு தான் சுகர் மாத்திரை இருக்கு. சனிக்கிழமை காலைல ப்ளட் டெஸ்ட் எடுத்துட்டா, சாயங்காலம் டாக்டரை பாத்துடலாம்” என சொன்னார் ராஜம்.

“எங்க அக்கா உன்ன விட ஆறு வயசு பெரியவங்க. அவங்களுக்கே இன்னும் சுகர் வரல. எனக்கும் வரல. நீ கொஞ்சம் வாய கட்டு, நல்லா நட. இப்போ பார்டர்ல தானே இருக்கு ” என டிவி பார்த்தபடியே சொன்னார் சிவகுரு.

தீப்திக்கு சுர்ரென்று ஆனது. “பெரியப்பா உங்கள விட நாலு வருஷம் பெரியவர். அவர் நல்லா தானே இருக்காரு. நீங்க ஏன் முட்டிவலின்னு கோடாரி தைலமும் கையுமா இருக்கீங்க?” என கேட்டாள்.

அவரிடம் பதிலில்லை. ராஜம் பேசாமல் கிச்சனுக்குள் போய் வேலையை தொடர ஆரம்பித்தார். “இந்த லட்சணத்தை அனுபவிக்க தான், ஊரு ஊரா எனக்கு பையன் பாக்குறீங்களா?” என கேட்டு விட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

“ஏண்டி, உங்க அப்பா ஒரு வார்த்தை சொன்னா, பிலு பிலுன்னு உலுக்கி எடுக்குற? என்ன சொன்னாலும் சனி கிழமை என் கூட வரத்தான் போறாரு” என ஆதங்கமாய் சொல்லிக்கொண்டே அடுப்பில் தோசை கல்லை வைத்தார் ராஜம்.

“உனக்காக கேக்குற வரை கம்முனு இருப்ப..கூட என் விஷயத்தை சேத்து சொன்னா, அவருக்கு பலமா முட்டு குடுப்ப” என கொக்கியை போட்டாள் தீப்தி.

“நாங்க என்ன கல்யாண வாழ்க்கைக்கு நாங்க தான் பெஞ்ச் மார்க்குன்னு சொல்லிக்கிட்டா சுத்துறோம். எங்கள ஏண்டி உன் முடிவுக்கு அளவுகோலா வெக்குற?” என கேட்டார் ராஜம்.

“இங்க பாரு, அப்பப்போ ஹர்ட் ஆகுறதுக்கும், அப்புறம் சகஜமா இருக்குறதுக்கும்நீ பழகிக்கிட்ட மாதிரி என்னால இருக்க முடியாது” என டீ டம்ளர்களை கழுவிக்கொண்டே கொண்டே சொன்னாள் தீப்தி.

ராஜம் திருப்பி கொடுப்பதென்று முடிவு செய்தார்.

“ஒரு கைல கார் ஓட்டிகிட்டே, மறுகையால பொண்டாட்டி கால அமுக்கி விடுறதெல்லாம் ரீல்ஸா தான் வரும். நிஜ வாழ்க்கைல ஒருத்தர் கால ஒருத்தர் வாரி விடுற சம்பவமும் நடக்கத்தான் செய்யும். Linkedin, Naukriல வேலை தேடுற மாதி, இன்ஸ்டால வாழ்க்கையோட அர்த்தத்தை தேடாதே” என நறுக்கென்று சொன்னார்.

கல்லும் களமும் சூடு பிடித்தது. ராஜம் தோசை ஊற்ற ஆரம்பித்தார்.

தன் வாழ்க்கையின் முக்கியமான முடிவில் தான் எடுக்கும் நிலைப்பாட்டை, ரீல்ஸ் இன்ப்ளூயன்ஸாக குறைத்து மதிப்பிடுவது தீப்திக்கு எரிச்சலை தந்தது.”காலை வாரும் வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்ச ஒரு விஷயத்துல எதுக்கு இறங்கணும்? அனுசரிச்சு, அனுசரிச்சு சலிச்சி போய் வாழுறதுக்கு, சுதந்திரமா வாழ்க்கைய தனியாவே அனுபவிச்சு வாழலாம்” என அடமாய் சொல்லிக்கொண்டே முதல் அடை தோசையை உள்ளே தள்ளினாள்.

“இந்த வெண்ணை மாதிரி பேசுற பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை. எங்க வாழ்க்கையையோ, சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையையோ நீ என்ன தான் ஸ்கேன் பண்ணாலும், உன்னால முழுசா தெரிஞ்சிக்க முடியாது. அரை குறை அறிவோட முடிவெக்குறத விட பெரிய அபாயம் எதுவும் கிடையாது” என தீர்க்கமாய் சொன்னார் ராஜம்.

ஹ்ம்ம்..அடைக்கு தொட்டுக்க அவமானமும் கொடுக்கிறாள் அம்மா.தீப்திக்கு உஷ்ணம் ஏறியது.

“கடவுள கட்டிக்கிட்டாலும் கடுப்பிலாத வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடையாது” என ராஜம் தொடர்ந்தார். தீப்தியை வெண்ணை டேக் உருக்கி எடுத்ததில் கொஞ்சம் லேகில் இருந்தாள்.

“உங்க கிரிக்கெட் கடவுள் சச்சின் கூட, எல்லா ஓவர்லேயும், ஆறு பாலையும் வெளாச மாட்டார். நின்னு நிதானிச்சு பாத்து பக்குவமா தான் ஆடுவார். எதிராளி கிட்ட இன்ஸ்டன்ட்டா ப்ரூவ் பண்ணணும்ங்கிற அவசியம் என்ன? மேரேஜ் லைப்பும் அப்படிதான்” என தீப்திக்கு புரியும் பாஷையில் சொன்னார் ராஜம்.

“ஹ்ம்..” என ஆமோதித்தாள் தீப்தி. இதை கண்டிப்பாக மறுக்க முடியாது.

“உன் கேஸ ஸ்ட்ராங்காக்க, ஆயிரம் மைல் தள்ளி இருக்குற சச்சினை வம்படியா கொண்டாந்து குறுக்கால விட்டு எனக்கு கட்டைய போடுறல்ல?” என சிரித்துக் கொண்டே கேட்டாள் தீப்தி.

“உன் லேங்குவேஜ்ல சொன்னாதான் உனக்கு மண்டைல ஏறும்” என உரைத்தார் ராஜம்.

தீப்திக்கு உள்காயம் இன்னும் கொஞ்சம் இருந்தது,

“அப்பாவோட இந்த லேங்குவேஜ நீ அக்செப்ட் பண்ணிக்கிட்ட மாதிரி தான் எல்லாம்” என மீண்டும் ஆரம்பப் புள்ளியிலேயே போய் நின்றாள்.

லேப் டெஸ்டுக்கு கணவர் கடுப்பேற்றியதை விட, இந்த டாபிக்கை வைத்து இவள் கடுப்பேற்றுவது ராஜத்தின் பொறுமையை சோதித்தது.

“நான் என்னத்த அக்செப்ட் பண்ணிக்கிட்டேன்கிறத நீ கண்ட? நானும் மனுஷி தான். எனக்கும் கோவம், வருத்தம் எல்லாம் இருக்கு ஆனா அதை ஆர்கியுமெண்ட்ல தான் காட்டணும்னு என்ன அவசியம் இருக்கு?” என கோபமாக கேட்டார்.

“வேற எப்புடி காமிக்குற?” என பொறுமையாக கேட்டாள் தீப்தி.

“சாயங்காலம் வா, ரீல்ஸ் எடுத்து வெச்சிருக்கேன். எல்லாத்தையும் உங்களுக்கு படங்காட்டணும்னு ஏன் எதிர்பாக்குறீங்க? அன்பா இருந்தா ஆசையோட கவனிச்சிக்குறதுக்கும், வெறுப்பேத்துனா கடமைக்கு குடும்பம் நடத்துறதுக்கும் எங்களுக்கு தெரியும்” என சுட சுட பதில் வந்தது.

“அவர் நேத்து நைட் பேசின பேச்சுக்கே, அவருக்கு மண்டகப்படி இன்னும் பெண்டிங்ல இருக்கு” என அடுத்த திரியை கொளுத்தினார் ராஜம்.

“அவர் ட்ரெஸ்ஸ அயர்ன் பண்ணி வெச்சிட்டு, லன்ச் பேகும் பேக் பண்ணிட்ட. இதுல என்ன வீர வசனம் பேசுற?” என விடாப் பிடியாய் கேட்டாள் தீப்தி.

“கடமைக்கு வேல பாக்குறதுக்கும், கரிசனத்துல அவரை பாத்துக்குறதும் வித்தியாசம் இருக்குடி” என சூட்சுமமாய் சொன்னார் ராஜம்.

“உருட்டி போட்டா போண்டா, தட்டி போட்டா வடை” என கீழ்க்கண்ணால் மாவு பாத்திரத்தை பார்த்தபடியே சொன்னாள் தீப்தி.

“உங்களா கூட இருந்தா காஷ்மீர்லேர்ந்து கன்னியாகுமாரி வரை நடந்தா கூட சுகர் குறையாது. இப்போ அவர் வண்டி சாவிய எடுத்துக்கிட்டு கீழ போயிட்டு திருப்பி வீட்டுக்கு வராரா இல்லியா பாரு” என sizzler ஆக புகைந்து puzzle போட்டார் ராஜம்.

சிவகுரு குளித்துவிட்டு வந்து, டிபன் சாப்பிட்டு விட்டு, ரெடியாகி ஆபீசுக்கு கிளம்பி போனார்.

மூன்று மாடி படி இறங்கி போக வேண்டும். மீண்டும் மூன்று மாடி ஏறி வர வேண்டும்.

ஹால் அமைதியாக இருக்க, தீப்திக்கு நிலை கொள்ளவில்லை. பால்கனியில் இருந்து எட்டி பார்க்கலாமா என தோன்றியது. அவர் டக்கென்று மேலே பார்த்தால் மாட்டிக் கொள்வோம் என பேசாமல் உட்கார்ந்து விட்டாள்.

ராகி கஞ்சியை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டிருந்தார் ராஜம்.

மெயின் டோர் திறக்கும் சத்தம் கேட்டது. தீப்திக்கு தலை சுற்றியது. அம்மாவை பார்க்கவே திராணியில்லாமல் டிவி பார்ப்பது போல் உட்கார்ந்திருந்தாள்.

சிவகுரு நேராக உள்ளே போனார். ஐந்து நிமிடம் ஆனது. வேறு சட்டை மாற்றிக் கொண்டு, அவசர அவசரமாக கிளம்பி போனார்.

அம்மாவின் வராகி மோட் வேலை செய்து விட்டது. அவருக்கே இந்த கதி என்றால் தான் எம்மாத்திரம் என பயந்தாள் தீப்தி. ஆனாலும் ஆர்வம் மண்டையை குடைய சரண்டர் மோடுக்கு போனாள்.

“செம ஆளுமா நீ..எதுக்கு அவர் வந்து சட்டையை மாத்திட்டு போறாரு?” என கேட்டாள் பவ்யமாக கேட்டாள்.

“எல்லா ஸ்டோரியும் எல்லோருக்கும் தெரியணும்னு அவசியம் இல்லை” என மீண்டும் குட்டினார் ராஜம்.

“மையிலே குயிலேன்னு பேசணும்னு யாரும் எதிர்பாக்கலை. ஆனா மயிறாச்சேன்னு பேசினா, பேசினவங்க தான் எக்ஸ்ட்ரா மைல் நடக்கணும். யாரை எப்போ எங்க வெக்கணும்னு எங்களுக்கும் தெரியும்” என கம்பீரமாக சொன்னார் ராஜம்.

“மையிலே குயிலேன்னு பேசணும்னு யாரும் எதிர்பாக்கலை. ஆனா மயிறாச்சேன்னு பேசினா, பேசினவங்க தான் எக்ஸ்ட்ரா மைல் நடக்கணும். யாரை எப்போ எங்க வெக்கணும்னு எங்களுக்கும் தெரியும்” என கம்பீரமாக சொன்னார் ராஜம்.

இன்னைக்கு நைட்டே இந்து அக்கா வீட்டுக்கு போயிடலாமா என யோசனை வந்தது தீப்திக்கு.

“சரிம்மா, டென்சன் ஆவதே” என காலில் விழாத குறையாக சொல்லிவிட்டு தலை மறைவானாள்.

விஷயம் இதுதான். முதல் நாளும் சிவகுரு குதர்க்கமாக வாயை விட்டிருக்கிறார். ராஜம் இரவு படுக்க போகும் முன், அடுத்த நாளுக்கான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கும் போது ஏதோ பேசி இருக்கிறார். அவர் பைல்களை எடுத்து அவர் ஆபீஸ் பேகில் வைத்து விட்டு திரும்பியவர், அவர் பால் பாயிண்ட் பேனா டேபிள் மீது அப்படியே இருப்பதை பார்த்தார். சாதாரணமாக இருந்தால் அதன் முனையை உள்ளே அழுத்தி விட்டு, பைக்குள் வைத்திருப்பார். அடுத்த நாள் காலை துரை சிங்கம் அப்படியே பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு கிளம்ப, பார்க்கிங் போவதற்குள் பாக்கெட்டின் அருகே இங்க் கறையானது. சீனியர் கோஷ்டி கவனித்து சொல்ல, கோடாரி தைலம் இருக்கும் நம்பிக்கையில் மூன்று மாடி ஏறி வந்து சட்டை மாற்றிக் கொண்டு போகிறார். வகை தொகையில்லாமல் விமர்சனம் செய்தால் கரிசனம் காணாமல் போய் விடும் என உணர்ந்து கொண்டிருப்பார் சிவகுரு.

Part 3

அடுத்த நாள் இரவு ஏழு மணி. தீப்தி இந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அதற்கு முன்னரே ராஜத்தின் briefing வந்து சேர்ந்தது இந்துவுக்கு.

“மொதல்ல ghee தூக்கலா ஊத்தி மூணு பொடி தோசை போடு” என சொல்லிவிட்டு “என்ன மாமா, இன்னிக்கு சீக்கிரம் வந்துடீங்க?” என விக்ரமை கேட்ட படியே லேப்டாப்பை ஆன் செய்ய போனாள் தீப்தி.

“மாமாக்கு செய்த கோதுமை உப்புமா இருக்கு, ஒரு கரண்டி வெக்கவா?” என கேட்டாள் இந்து.

“வயசானப்புறம் அந்த வடக்கன்ஸ் சாப்பாடு தான். இப்போதைக்கு வேணாம்” என தீப்தி சொல்ல, விக்ரம் இந்துவை ஏற இறங்க பார்த்தார்.

சாப்பிடும் போதே இந்துவின் பைனான்ஸ் மேட்டரை ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து கொண்டாள்.

“பேமிலி இன்சூரன்ஸ் எவ்ளோ கட்டுற?”

“ஸ்கூல் பீஸ் எவ்ளோ கட்டுற?”

“வீட்டு லோனுக்கு எவ்வளுவு குடுக்குற?”

இந்து ஒவ்வொன்றாக சொல்ல IT returns பைல் செய்து முடித்தாள் தீப்தி. “மாமாக்கும் பண்ணனுமா?” என கேட்டாள்.

“அவரே பைல் பண்ணிட்டாரு” என சுருக்கமாய் சொன்னாள் இந்து.

தீப்தி மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஷட்டவுன் செய்து விட்டு போய் பால்கனியில் நின்றாள்.

குடும்ப பாரத்தை சமமாக சுமந்து கொண்டிருகிறாள் அக்கா. தான் மட்டும் பைல் செய்து கொள்ள தெரிகிறது. அவளுக்கும் செய்து கொடுத்தால் என்ன என கோபம் தலைக்கேறியது.

எல்லா வேலையையும் முடித்து விட்டு இந்துவும் வந்து பால்கனி சேரில் உட்கார்ந்து கொண்டாள்.

“ஏன் தொரை உனக்கு பண்ண மாட்டாரா?” என கேட்டாள் தீப்தி.

“இருபது தோசை செய்வதற்கு முன் பேசியது இந்துவுக்கு சட்டென்று பிடிபடவில்லை.

“என்னடி சொல்ற?” என குழப்பமாக கேட்டாள்.

“அவருக்கு returns பைல் பண்ணும் போது, உனக்கும் சேர்த்து பண்ணா என்ன?” என கொதிப்பாக கேட்டாள்.

இந்துவுக்கு சிரிப்பு வந்தது. “அதுவா, கேட்டா பண்ணுவாரு. நான் தான் கேக்கலை” என சொன்னாள்.

“கேட்டாத் தான் பண்ணுவாரா? அவரு கேட்டு கேட்டு தான் நீ எல்லாத்தையும் அவருக்கு செய்யுறியா? என மீண்டும் குடைந்தாள்.

“உனக்கு ஈகோ. நான் ஏன் கேக்கணும்னு. வாய தொறந்து கேட்டு வேலைய முடிக்க வேண்டியது தானே” என விக்ரமை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டே கேட்டாள் தீப்தி.

“ஈகோவெல்லாம் ஒண்ணுமில்லை. அவரும் கேக்கலை, நானும் சொல்லலை. அவ்ளோதான்” என்றாள் இந்து.

“ஆனா, நீ நேத்து வரை எதிர்பார்த்த இல்ல?” என கேட்டாள்.

“ஆமாடி, அதுக்கென்ன? எப்போவும், எல்லா வேலைலேயும் அவங்க கவனம் இருக்காதுடி. அதுக்காக வருத்தப் பட்டு என்ன பிரயோஜனம் சொல்லு?” என திரும்ப கேட்டாள் இந்து.

“எல்லா வேலைலயும் அவங்க கவனம் இருக்கும். இது உன் தனிப்பட்ட விஷயம். இது குடும்ப வேலை இல்லைனு அவர் நெனைச்சது தான் காரணம், கரெக்ட்டா?” என கேட்டாள்.

முதல் நாள் சித்தியிடம் இவள் பொங்கியது இந்துவுக்கு நினைவுக்கு வந்தது. ஒரு நாள். ஒரு செயல். ஒரு பேச்சு. அதை அளவுகோலாக கொண்டு ஒரு மனிதரை, குறிப்பாக வீட்டு ஆண்களை எடை போடுவதும், திருமண வாழ்க்கையை எள்ளலாக பேசுவதும் தீப்தியின் சமீப கால வாடிக்கையாக இருக்கிறது.

நீண்ட நாட்களாக கட்டமைக்கப்பட்ட ஒவ்வொருவரின் முழு குடும்ப அமைப்பிலும், அந்த தம்பதிகள் பல நிலைகளை ஒன்றாக தாண்டி வருகிறார்கள். விக்ரமின் செயல்பாடும் அந்த வகை தான். இந்து வேலை, குடும்பம், பண விவகாரம் என எல்லாவற்றையும் கையாள்வதால் returns பைல் பண்ணுவதை அவள் பார்த்துக் கொள்வாள், இல்லை மானசி செய்து விடுவாள் என நினைத்திருப்பார். அதை ஒரு குற்றமாக தீப்தி பார்ப்பது இந்துவுக்கு கவலையாக இருந்தது.

“நீ என்ன ஊர் ஒலகத்துல ருக்குறவங்களுக்கு perfect marriage நடத்துறது தான் ஒரே வேலைன்னு நெனச்சிக்கிட்டு இருக்கியா?” என உதாராக கேட்டாள் இந்து.

தீப்தி இந்த கேள்வியை சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவளுக்கு நடந்திருக்கும் அநியாயத்துக்கு நான் நீதி கேட்டால், என்னை காரா பூந்தி ரேஞ்சுக்கு ட்ரீட் செய்கிறாள் என நினைத்தாள்.

என்ன யோசித்தும் இந்த கேள்விக்கு என்ன கவுண்டர் கொடுப்பது என பிடிபடவில்லை தீப்திக்கு.

“இப்போ நீ பைல் பண்ணியே, அது இன்னிக்கான கணக்கு வழக்கா? என கேட்டாள் இந்து.

“இல்ல,லாஸ்ட் ஒரு வருஷத்துக்கு” என காற்றில் போவது போல பதில் சொன்னாள்.

“ஹா, அதே மாதிரி தான். மேரேஜ் லைப்ல நீ டெய்லி கணக்கு வழக்கு பாத்தீன்னா வேலைக்கு ஆகாது. இது காலத்தும் இருக்க போகும் பயணம். ஏற்றம் இரக்கம், குற்றம் குறை என எல்லாம் தான் இருக்கும். ஆனால் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால், நாங்கள் எவ்வளுக்கெவ்வளவு ஒருவருக்காக மற்றொருவர் இருந்திருக்கிறோம் என எங்களுக்கு மட்டும் தான் முழுசாக தெரியும். அதனால, அம்மாவை பாத்து, என்னை பாத்து, மானசியோட வாழ்க்கையை பாத்து உன்னோட பயணமும் இதே மாதிரி தான் இருக்கும்னு நினைக்காதே” என தெளிவுபடுத்தினாள் இந்து.

“நன் ரெடி இந்து அக்கா” என சொன்னாள் தீப்தி.

சிறுகதை – திருமதி.வெறும் பானுமதி

A 50 year old tamil woman sitting at living room

Part 1

இரவு பத்து மணி. அம்மாவின் ரூமில் இன்னும் ரீடிங் லைட் எரிந்து கொண்டு இருக்கிறது.

“பூரணி, அம்மா டிஸ்டர்ப்டா இருக்காங்கன்னு நெனைக்குறேன்” என கவலையாய் சொன்னான் பாலன்.

“கண்டிப்பாங்க, அவங்க மனசுல என்னென்ன ஓடும்னு நெனச்சாலே எனக்கு வருத்தமா இருக்குங்க. இல்லாதவர்ன்னு ஆனவர் அப்படியே இல்லாமலேயே இருந்திருக்கலாம். இப்போ திடீர்னு ரெண்டாந்தாரத்து பொண்ணுக்கு கல்யாணம், அதுக்கு பத்திரிகை வைக்க வராருன்னா அவங்க மனநிலை எப்படி இருக்கும்?” என ஆதங்கமாய் சொன்னாள் பூரணி.

பாலன் படுக்கையில் இருந்து எழுந்து ஜன்னலின் அருகே போய் நின்றான். அவன் எட்டு வயதாக இருக்கும் போது அப்பாவின் foundry தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அடுத்த வருடத்திலேயே அவர் நடத்தி வந்த சிட் பண்டு தொழிலும் முடங்க, சுமார் எட்டு லட்ச ரூபாய் கடன் சேர்ந்தது.

அப்பாவுக்கு தொழிலில் பணம் போனதைவிட, ஊரில் கவுரவம் போனது பெரும் தலை குனிவாக இருந்தது. இருக்கும் நகை, வீடு இதையெல்லாம் விற்று பாதி கடனையாவது உடனே கொடுத்துவிடலாம் என அம்மா யோசனை சொன்னாள்.

தோற்ற மனிதனாக, திரும்ப பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிக்க அவர் விரும்பவில்லை.

“எல்லாத்தையும் வித்து பாதி பேருக்கு குடுத்தாலும், ஊர்க்காரங்க நான் மோசம் பண்ணிட்டேன்னு தானே சொல்வாங்க? அதனால, நான் வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ போய் வேலை செஞ்சு பணம் அனுப்பினேன்னா, நீ கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிடு. ஜனங்களும் மகாதேவன் குடும்பத்தை பிரிஞ்சி கஷ்டப்பட்டு, கடனை அடைச்சான்னு சொல்லுவாங்க” என விளக்கம் சொன்னார்.

தூரத்து சொந்தம் வழியாக குஜராத் ஜாம் நகரில் இருந்த பேக்டரியில் மெக்கானிக் வேலை அவருக்கு கிடைக்க, குடும்பத்தை இங்கேயே இருக்க சொல்லி விட்டு அவர் மட்டும் கிளம்பி போனார்.

தினமும் வீடு தேடி வரும் கடன்காரர்களுக்கு அம்மா தான் பதில் சொல்லி சமாளிப்பாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை கறி கடையில் அம்மா நின்று கொண்டிருந்த போது, அங்கே வந்த பெண்மணியின் பார்வையில் கூனி குறுகி போனதாக அழுதது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஊரார் பணத்தை கொடுக்க வக்கில்லாமல் இருப்பவர்களுக்கு, கறி சோறு ஒரு கேடா என வசவு வாங்கியதை சொல்லி கதறியதும் அவன் நினைவை விட்டு அகலவில்லை.

சுமார் ஒரு வருட காலம், மாதம் ஒரு லெட்டரும் கொஞ்சம் பணமும் அனுப்பி கொண்டிருந்தார். இரண்டாம் வருடம் கடிதங்கள் குறைய, பணம் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. மூன்றாம் வருடம் ஒரே ஒரு கடிதம் மட்டும் வந்தது. வேலைக்கு வந்த இடத்தில ஒரு இக்கட்டான சூழ்நிலையால், தான் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த கடிதத்துக்கு அம்மா பதில் போட்டால், அந்த வருட லீவுக்கு அவர் மட்டும் வீட்டுக்கு வருவதாகவும் எழுதியிருந்தார்.

அம்மா அந்த கடிதத்திற்கு பதில் எழுதவில்லை.

முதல் வேலையாக நகை, வீடு, நிலம் என என்னென்ன இருந்ததோ எல்லாவற்றையும் விற்று, முக்கால்வாசி கடனை அடைத்து விட்டு, சிப்காட்டுக்கு பக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினாள். அதே ஏரியாவில் இருந்த foundry பேக்டரியில் மாதம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு mould helper வேலைக்கு சேர்ந்தாள். பாலனின் படிப்புக்கும், வீட்டு செலவுக்கும் அந்த பணம் சரியாய் போக, மீதி கடனை அடைக்க விழி பிதுங்கி நின்றாள்.

பேக்டரியில் மாலை ஆறு மணிக்கு வேலை முடிந்த பிறகு, பகுதி நேரமாக இரவு வரை கேட்டரிங் கம்பெனியில் தினக்கூலியாக வேலை செய்தாள். நான்கு வருடம் ஆனது பைசா சுத்தமாக கடனை கட்டி முடிக்க அம்மாவுக்கு.

பத்து வருட அனுபவத்திற்கு பிறகு சூபர்வைசர் பதவி வந்ததும் கொஞ்சம் வாழ்க்கை முன்னேறியது அவர்களுக்கு.

இப்போது பாலனுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் பிறந்து விட்டது. அவன் தாலுக்கா ஆபீஸிலும், பூரணி ஆஸ்பிடல் லேபிலும் வேலை பார்க்க, குடும்பம் ஒரு வழியாக தலையெடுத்திருக்கிறது.

“நான் போய் அம்மாகிட்ட பேசிட்டு வரேன்” என பூரணியிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் பாலன்.

அம்மா டேபிள் மீது நோட்டை வைத்துக் கொண்டு ஸ்ரீ ராமஜெயம் எழுதிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் பழைய டைரிகள் சில இருந்தன.

“மா” என மெலிதாய் அழைத்தான் பாலன்.

“சொல்லுடா” என எழுதிவதை நிறுத்தி விட்டு கேட்டாள் பானுமதி.

“உனக்கு அவரை பாக்க வேணாம்னா இப்போ கூட சொல்லுமா, அவரை வர வேணாம்னு சொல்லிடலாம்” என தரையை பார்த்தபடியே சொன்னான்.

“ம்ம்..அவர்கிட்ட பேசுறதுல எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை” என தீர்க்கமாய் சொன்னார் பானுமதி.

“உண்மையாத்தான் சொல்றியா? இல்ல, அவர வர வேணாம்னு சொன்னா, அவர் வருத்தப்படுவார்னு நெனைக்குறியா?” என கேட்டான்.

“ப்ச், இத பத்தி எனக்கு ரொம்ப யோசிக்க தோணல பாலா. வரட்டான்னு கேட்டாரு, வாங்கன்னு சொல்லிட்டோம். வரட்டும், பேசட்டும், கிளம்பட்டும்” என விட்டேத்தியாய் பதில் சொன்னாள்.

“இது உனக்கு எவ்வளுவு வலியா இருக்கும்னு அவருக்கு புரியாதும்மா. ஆனா எனக்கும் பூரணிக்கும் தெரியும். இதை நீ கோ த்ரூ பண்ணணுமாங்கிறது தான் என் கவலையே?” என விடாமல் கேட்டான் பாலன்.

“எவ்வளோ வலிகளை அனுபவிச்சுட்டேன், அவமானங்களை பாத்துட்டேன். அதுலேர்ந்தெல்லாம் மீண்டும் வந்துட்டேன். அதை அவர் பாக்கணுமில்லையா? அதனால அவர் வரட்டும்” என சொன்னார் பானுமதி.

பாலனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அம்மாவின் ஒப்புதலில் இருந்த இந்த நல்ல விஷயத்தை தான் எப்படி பார்க்க தவறினோம் என யோசித்தான்.

“நீ இன்னும் என்னை காயம்பட்டவளாவே பாக்குற. எங்க நான் திரும்பவும் காய பட்டுடுவேனோன்னு பயப்படுற. பாலா, என் மனசுக்குள்ள இப்போ எதுவும் இல்லை. ஆனா அவர் மனசுல எவ்வளுவு இருக்கும்னு எனக்கு தெரியும். நம்மள பாக்க வரட்டான்னு அவர் கேக்கவே, அவருக்கு பல நாள் தேவைபட்டிருக்கும்” என மெதுவாய் சொன்னார் பானுமதி.

பாலனுக்கு அம்மா சொல்வது உண்மைதான் என தோன்றியது.

“நீ ஆயிரம் காரணம் சொன்னாலும், நாளைக்கு உன் மனநிலை எப்படி இருக்கும்னு உனக்கே தெரியாதும்மா. அதனால நீ இந்த ரிஸ்க்கை எடுக்க போறியான்னு யோசிச்சு சொல்லு” என நிதானமாய் கேட்டான் பாலன்.

ஒருவேளை அம்மாவுக்கும் அவரை ஒரு முறை பார்க்கலாம் என்று அடி மனசில் ஆசை இருக்கலாம். தான் ரொம்ப கேட்டு அவளை சங்கடப்படுத்துகிறோமோ என யோசித்தான்.

“பாலா, நாளைக்கு என்னங்குறது தெரிஞ்சுட்டா வாழ்க்கைல என்ன சுவாரஸ்யம் இருக்கு சொல்லு? கல்லு விழும்போது மட்டும் தான் குளம் தளும்புதாடா?” என அவன் கையை பற்றிக் கொண்டு கேட்டார் பானுமதி.

அந்த பதிலின் கணம் அவன் கட்டுப்பாட்டை உடைக்க, அப்படியே அம்மாவின் தோளில் சாய்ந்து அழுதான்.

இந்த சந்திப்பு அம்மாவை விட தனக்கு தான் அதிக மனஉளைச்சலை தருகிறது என அப்போது தான் அவனே தெரிந்து கொண்டான்.

பானுமதி அமைதியாக இருந்தார். சற்று நேரம் கழித்து, “சாயந்திரம் நாலு மணிக்கு மேல வரேன்னு சொல்லி இருக்காரு. லைட்டா டிபன் மட்டும் செய்து வெக்கலாம்னு இருக்கேன். சுகர் வந்திருக்குமோ என்னவோ? யாருக்கு தெரியும்” என சொல்லிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தார்.

என்ன டிபன் செய்வது என்பது வரை யோசித்து வைத்திருப்பவளிடம், தான் முட்டாள்தனமாக எவ்வளவு கேள்விகளை கேட்டிருக்கிறோம் என அவனுக்கு உறைத்தது. என்ன இருந்தாலும் இது அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள்.

“சாரிம்மா” என சொன்னான் பாலன்.

“விடுடா..நீ ஏன் பதட்டமா இருக்கேன்னு எனக்கு தெரியும்டா” சொன்னார் பானுமதி.

பாலன் எழுந்து கதவருகே செல்ல, “பூரணியால நேரடியா என்கிட்ட இதை பேச முடியாது. அவளும் உன்னை மாதிரி தான் குழப்பத்துல இருப்பா. என்ன பத்தி கவலைப்பட வேணாம்னு அவகிட்ட சொல்லு” என ஞாபகமாய் சொல்லி அனுப்பினார்.

Part 2

அடுத்த நாள் காலை. குழந்தையை பள்ளிக்கு அனுப்பி விட்டு, பூரணியும் பாலனும் வேலைக்கு கிளம்ப, வீடு அமைதியாக இருந்தது. ஆனால் பானுமதியின் மனம் மட்டும் தத்தளித்துக் கொண்டிருந்தது. எதற்காக இப்போது வருகிறார்? எப்படி இருப்பார்? என்ன பேசுவார்? எவ்வளவு நேரம் இருப்பார்? தான் என்ன பேசுவது? எப்படி அழைப்பது? என்ன உடுத்துவது? என ஆயிரம் கேள்விகள் அவரை துளைத்து எடுத்தது.

அரைமணி நேரம் அப்படியே சோபாவில் உட்கார்ந்திருந்தார். அவர் இப்போது ஒரு விருந்தாளியாக மட்டுமே வருகிறார் என நூறு முறை தனக்கே சொல்லிக் கொண்டார். எக்காரணம் கொண்டும் அவர் முன்னால் கண் கலங்கக் கூடாது என முடிவெடுத்தார்.

கேசரி செய்து, பாயசம் வைக்கலாமா என மனதில் இருந்து ஒரு கேள்வி வந்தது. வேண்டாம், அவர் என்ன ராணுவத்தில் சேவை செய்துகொண்டு, எல்லையிலா வாழ்கிறார்? வேண்டியதில்லை என புத்தி சொல்லியது.

சற்று நேரத்தில் பானுமதிக்கு தன் நிலை தெளிவாய் புரிந்தது. பாலன் தவித்ததில் தவறில்லை என நினைத்தார்.

மனம் சஞ்சலமாய் இருக்க ஸ்ரீ ராமஜெயம் எழுத ஆரம்பித்தார். நாலு தடவை எழுதியதும், தான் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறோம் என புரிய, அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தார்.

இந்த அழுகை தவிர்க்க வேண்டியதில்லை..தொடரட்டும் என ஒன்று விடாமல் நிதானமாக கிளறி அசைபோட்டு பார்த்தார். இவ்வளுவு நாள் நினைக்கக் கூடாது என கட்டுப் படுத்திக் கொண்டிருந்த, அத்தனை
கோணங்களையும் நுணுக்கமாக எண்ணிப் பார்த்தார்.

தான் நினைத்திருந்தால் இந்த சந்திப்பை வேண்டாம் என சொல்லி இருக்கலாம்? ஏன் அவரை சந்திக்க ஒத்துக் கொண்டோம்? இன்னும் என் மனசில் மிச்சம் என்ன இருக்கிறது? என கூச்சமின்றி தன்னை தானே கேட்டு கொண்டார்.

பாசம்? காதல்? தகப்பன் ஸ்தானம்? பானுமதிக்கு இதில் எதுவும் இல்லை என்பது தெளிவாக புரிந்ததில் சற்றே நிம்மதியாக உணர்ந்தார்.

நீண்ட நேரம் அழுததில் கண்கள் வீங்கியிருக்கும் என குளிர்ந்த நீரில் முகம் கழுவி விட்டு வந்தார். ஐஸ் பேக்கை எடுத்து கண்களுக்கு வைத்துக் கொண்டு, சோபாவில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டார்.

மனம் மீண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தது. அவர் கேட்டால் திரும்பவும் ஒன்று சேர விருப்பமா? என உடைத்துக் கேட்டது. அவரே அவருக்கு தவிர்த்துக் கொண்ட முக்கியமான கேள்வி இது.

இல்லை என உள்ளேயிருந்து பதில் வந்தது.

இது தான் கடைசி வாய்ப்பு. உறுதியான நிலைப்பாடா இது என மனம் மீண்டும் கேட்டது.

பானுமதி அது கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு எழுந்து போய் சமைக்க ஆரம்பித்தார்.

காலத்துக்கும் தேவையில்லை என ஆன உறவிற்கு, விருந்தோம்பல் எதற்கு என மீண்டும் ஒரு கேள்வி வந்தது.

பானுமதி கிச்சன் வேலையை அப்படியே விட்டு விட்டு மீண்டும் போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டார்.

தனக்கே தான் உண்மையை சொல்லாத வரை, இந்த போராட்டம் இருக்கும் என அவருக்கு தோன்றியது.

ஈகோ. தான் மீண்டு விட்டோம் என்ற கர்வம். நான் கௌரவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என பறை சாற்றிக் கொள்ளும் ஆர்வம். அவர் துரோகத்தை உரமாக்கிக் கொண்டோம் என உணர்த்துவது. அவரின் கோழைத்தனத்தால் அவர் இழந்ததை காட்டுவது என சரமாரியாக பதில்கள் வந்து கொட்டியது.

சரி, தன் மனதில், உணர்வில் எதுவும் மிச்சமில்லை. வீட்டில் என்ன இருக்கிறது என யோசித்தார். பீரோவின் மேல் இருந்த பெட்டியை எடுத்து பார்த்தார். திருமண போட்டோ, அவர் பெயர் பலகை என சில சமாச்சாரங்கள் இருந்தது.

குக்கர் விசில் வந்தது. போட்டோவை அப்படியே வைத்து விட்டு போய், விட்ட இடத்தில இருந்து சமையலை தொடர்ந்தார்.

போன் அடித்தது. “ஆட்டோ ஏறிட்டேன். இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துடுவேன்” என மகாதேவன் சொன்னார்.

பானுமதிக்கு குழப்பமாக இருந்தது. சாயந்திரம் நாலு மணிக்கு வருவதாக சொன்னவர், மத்தியானமே வருகிறாரே என பரபரப்பானாள்.

அப்போது தான், தான் இன்னும் ரெடியாகவில்லை என உரைத்தது.

சமையலை அப்படியே நிறுத்தி விட்டு ரூமிற்குள் ஓடினார். சட்டென்று புடவை மாற்றி, தலை வாரி ரெடியானார். ஐஸ் பேக் வைத்தது நல்லது என சொல்லிக் கொண்டார்.

டோர் பெல் அடித்தது. பானுமதிக்கு கால்கள் பின்னியது.

தன் தயாரிப்புகள் எதுவும் சொதப்பக் கூடாது என வேண்டிக் கொண்டார்.

Part 3

வெள்ளை வேட்டியும், வெளிர் சந்தன நிற அரைக் கை சட்டையும் உடுத்தி, சற்றே மேடிட்ட தொப்பையோடு இருந்தார் மகாதேவன். கருப்பு பிரேம் போட்ட கண்ணாடியும், சற்றே முன்னேறிய மண்டையும் வயதை சொன்னது. எடை கூடாமல் அதே உடல் பருமனோடும், சற்றே தளர்ந்த தோள்களோடும், ஒரு கையில் கட்டை பையோடு நின்றார்.

பானுமதிக்கு வாய் உலர்ந்து போனது.

அனிச்சையாக கட்டை பையை வாங்க நீண்ட கையை கட்டுப்படுத்திக் கொண்டாள். அந்த கணத்தில், என்ன நிகழ்ந்தாலும் தான் அசைந்து கொடுக்க மாட்டோம் என உணர்ந்தும் கொண்டார்.

அவள் மனதில் தைரியம் பொங்கி வர, “வாங்க” என அவர் கண்களை பார்த்துக் கூப்பிட்டாள் .

மகாதேவன் பானுமதியை வைத்த கண்ணை வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தார். வாழ்க்கை எவ்வளவு புரட்டி போட்ட போதும் தெளிவாகவும், இயல்பாகவும் இவள் எப்படி இருக்கிறாள் என அவருக்கு புரியவில்லை. தாறுமாறாக எடை கூடாமல், பதவிசாகவும் பளிச்சென்றும் இருப்பதாகவும் எண்ணினார்.

“உக்காருங்க” என சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள். இதயம் படபடவென அடித்துக் கொள்ள, தண்ணீர் கொண்டு போய் கொடுத்தாள். அதை வாங்கி பருகிவிட்டு தரையையே பார்த்துக் கொண்டு, சொம்பை திரும்ப கொடுத்தார்.

அதை கொண்டு போய் மீண்டும் கிச்சனில் வைத்தாள். தான் மீண்டும் மீண்டும் இங்கே வருவது ஏன் என அவளையே கேட்டு கொண்டாள். இயல்பு நிலை அவ்வளவு சீக்கிரம் வராது என தோன்றியது.

“டீ குடிக்குறீங்களா? இல்ல கொஞ்ச நேரத்துல சாப்பாடு சாப்பிடுறீங்களா? லன்ச் டைம் ஆயிடுச்சே?” என கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்து கேட்டாள்.

“கொஞ்ச நேரம் ஆகட்டும், நீ வந்து உக்காரு” என தயக்கமாக கூப்பிட்டார் மகாதேவன்.

அவள் எதிரேயிருந்த சோபாவில் வந்து உட்கார, என்ன பேசுவது என இருவரும் யோசித்தார்கள்.

நல்லா இருக்கியா என முதலில் யார் கேட்பது என ஒரு மௌன போராட்டம் அங்கே நடந்து கொண்டிருந்தது.

இருவருக்கும் அது அர்த்தமற்ற கேள்வி என தோன்றியதால் அது கேட்கப் படவில்லை.

பானுமதிக்கு அங்கே நிலவிய அமைதி பொறுமையை சோதித்தது. “பையன் சொந்தமா?” என கேட்டாள்.

இந்த கேள்வியை மகாதேவன் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.

இன்னும் குசலம் விசாரிக்கவில்லை, நலம் விசாரிக்கவில்லை. இவள் எல்லாவற்றையும் அநாவசியமாக கடந்து போய் இந்த கேள்வியில் நின்றது அவருக்கு இலகுவாக இருந்தது.

“ஆமா, சுஷ்மாவோட சித்தப்பா பையன். கனடால ரெண்டு தலை முறைக்கு முன்னாடியே செட்டில் ஆயிட்டாங்க” என பெருமையாக சொன்னார்.

அடுத்த அரை மணி நேரம் கனடா சம்பந்தக் கதையும், பாலனின் கல்யாண கதையும் சுவாரஸ்யமாக ஓடியது.

மகாதேவனின் இறுக்கம் காணாமல் போயிருந்தது. ஒரு காலை மடக்கியும், மறு காலை தொங்கப் போட்டும், சோபாவில் சாய்ந்து ரிலாக்ஸ்டாக உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்.

பானுமதிக்கு சமையல் இன்னும் முடியவில்லை என ஞாபகம் வந்தது. ரெண்டு மூணு ஆல்பங்களை கொண்டு வந்து அவரிடம் கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் போனாள்.

ஸ்ஸ்..அப்பாடா என இருந்தது அவளுக்கு. எதுவும் உறுத்தலாக இல்லாமல் இப்படியே பொதுவாக பேசி அனுப்பி விட வேண்டும் என முடிவெடுத்தாள்.

கொஞ்ச நேரம் எந்த சத்தமும் இல்லாததால் ஹாலுக்கு வந்தாள். அவர் சுவரில் இருந்த போட்டோக்களை அருகில் போய் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

“நீயும் வா, சேர்ந்து ஆல்பம் பாக்கலாம்” என சொன்னார்.

அவளுக்கு நாம என்ன கைடு வேலையா பாக்குறோம் என தோன்றியது.

“நீங்க பாருங்க, நான் கொஞ்சம் வேலையை முடிச்சிட்டு வரேன்’ என மீண்டும் உள்ளே போனாள்.

பத்து நிமிடத்தில் எல்லா வேலையையும் முடித்து விட்டு எதிர் சோபாவில் போய் உட்கார்ந்தாள்.

“பாத்ரூம் எங்க இருக்கு?” என கேட்டார்.

“ஹால்ல அந்த பக்கம் இருக்கு. அது இந்தியன். உள்ளே ரூம்ல வெஸ்டர்ன் இருக்கு” என சொன்னாள்.

மகாதேவன் உள் ரூமிற்குள் போனார். மணி ரெண்டாக போகிறது. ஐந்து மணி ஆகும் எல்லோரும் வீடு வந்து சேர. அது வரை எப்படி நேரத்தை ஓட்டுவது என யோசித்தாள்.

பாத்ரூம் போய்விட்டு வெளியே வந்த மகாதேவனின் கண்ணில் அந்த பெட்டி பட்டது. எட்டி பார்த்தார். அவர்களின் திருமண போட்டோ, அவரின் பெயர் பலகை மற்றும் சில சாமான்கள். அவருக்கு சொல்ல முடியாத ஒரு ஆனந்தம் பொங்கி வந்தது. தன் வருகை அவளுக்கு ஒரு ஆர்வத்தை தூண்டியதாக புரிந்து கொண்டார்.

ஆல்பத்தை எடுத்துக் கொண்டு, எதிர் சோபாவில் போய் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.

பானுமதி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்றே பக்க வாட்டில் திரும்பி அமர்ந்து கொண்டு அமைதியாக இருந்தாள். எங்கெங்கு அவளின் படங்கள் இருந்ததோ, அங்கெல்லாம் நிறுத்தி நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தார் அவர். பூரணியின் பெற்றோர் யார் என கேட்டு தெரிந்து கொண்டார்.

“சாப்பிடுறீங்களா?டைம் ஆகுது” என எழுந்து கொண்டாள் அவள்.

“சரி” என அவரும் பின் தொடர்ந்தார்.

அவருக்கு பரிமாறிவிட்டு, அவளும் சாப்பிட மகாதேவனின் மனம் ரெக்கை கட்டி பறந்தது.

மேக்சிமம் ஒரு காபி மட்டும் கிடைக்கும் என நினைத்திருந்தார்.

இருவரும் சாப்பிட்டு எழுந்து போய் கையை கழுவி விட்டு வர, மகாதேவன் பானுமதியின் புடவை தலைப்பால் கையை துடைத்துக் கொண்டார்.

அவள் திகைத்துப் போய் பார்க்க, மெலிதாக சிரித்துவிட்டு ஹாலுக்கு போனார்.

அவளுக்கு அது சொல்ல முடியாத அசூயையாக இருந்தது.

எச்சில் தட்டு இன்னும் டேபிள் மேல் இருந்தது. முதல் வேலையாக அதை கொண்டு போய் கழுவி வைத்தாள்.

“டெய்லி ஸ்ரீ ராமஜெயம் எழுதுவியா?” என நோட்டை புரட்டியபடியே கேட்டார் மகாதேவன்.

பதிலேதும் சொல்லாமல் கடிகாரத்தை பார்த்தாள் பானுமதி.

“என்ன நல்ல நேரமான்னு பாக்கறியா?” என சூசகமாக கேட்டபடியே பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

இதற்கு மேல் பொறுமை தாங்காது என அவளுக்கு தோன்றியது.

பல வருடங்கள் கழித்து சந்திக்க வருபர் கூனி குறுகி அவமானத்தில் இருக்க வேண்டாம் என இதுவரை இயல்பாக பேசியது இந்த இடத்தில் வந்து நிற்கிறது.

“இப்போவும் தலைக்கு ஊத்திக்குறியா?” என வந்த அடுத்த கேள்வியில், பானுமதியின் தலையிலிருந்து பாதம் வரை அதிர்ந்து போயிற்று.

இப்போது இருக்கும் குறைந்த பட்ச உறவை கூட தலை முழுக வேண்டும் என அவள் முடிவெடுத்தாள்.

“இல்ல..சும்மாதான் கேட்டேன்..உடம்பை பாத்துக்க” என இழுத்தார்.

“மூணு டு நாலரை இன்னிக்கு எம கண்டம். அதுக்குள்ள பத்திரிகை குடுத்துடுங்க” என நகர்ந்து போய் ஆல்பங்களை அடுக்கியபடியே சொன்னாள் பானுமதி.

“அதுவும் சரிதான்” என எழுந்து போய் கட்டை பையிலிருந்து ஒரு பத்திரிகையை எடுத்து வந்தார்.

பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்து “திருமதி பானுமதி” என பெயரை எழுதியவர் ஒரு நொடி அப்படியே
உறைந்து நின்றார்.

அவர் கண்கள் பானுமதி என்ற பெயருக்கு பின்னால் நிலை கொண்டு நிற்க, பேனா முனை காத்துக் கொண்டு இருந்தது.

“பானுமதி ராமசந்திரன்” என சொன்னாள் அவள்.

மகாதேவனின் முகம் வெளிறி போனது. “நீ..நீ..உனக்கு?” என அவருக்கு வாய் திக்கியது.

“சும்மா சொன்னேன், வெறும் திருமதி பானுமதி தான்” என கூர்மையாக சொன்னாள்.

அவர் திகைத்துப் போய், என்ன செய்கிறோம் என தெரியாமல், அந்த பத்திரிகையை டக்கென்று டேபிள் மீது வைத்தார்.

“பானுமதி ராமசந்திரன்” என சொற்றொடரில் இருந்து அவர் இன்னும் வெளியே வரவில்லை.

பானுமதி மகாதேவன் என எழுத அவருக்கு உரிமையில்லை என அவர் உணர்ந்த நொடி அது. வெறும் பானுமதி என எழுதி இயல்பாக கொடுத்திருக்கலாம்.

ஆனால் இன்றைய பானுமதியின் பெயருக்கு பிறகு, வேறொரு நபரின் பெயர் இருக்குமா என அவர் சந்தேகித்ததின் விளைவு தான் அந்த ஒரு நொடி நிதானிப்பு.

ஆழ் மனதில் அவருக்கிருந்த நீண்ட நாள் குற்ற உணர்வும், இன்று அவரை ஈர்த்த பானுமதியின் வயதுக்கேற்ற வசீகரமும், அவரை அறியாமல் அவருக்குள் இருந்த அழுக்குப் பக்கங்களை காட்டிக் கொடுத்தது.

“நான் எப்போதும் பானுமதி மகாதேவனாவே இருப்பேன்னு நீங்க நெனைச்சதால தானே பத்திரிகை குடுக்க வந்தீங்க. இந்நேரம் நானும் எனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கிட்டு இருந்திருந்தா, இந்த பத்திரிகையை வாங்குற தகுதி இல்லாதவளா இருந்திருப்பேன்ல?” என அமைதியாக கேட்டாள் அவள்.

மகாதேவன் குனிந்த தலையை நிமிரவே இல்லை.

“நீங்க விட்டுட்டு போன மாதிரியே நான் அப்படியே இருக்கணும்னு எதிர்பாக்குறதும், நீங்க வந்த ஒடனே, நீங்க விட்டுட்டு போறதுக்கு முன்னாடி இருந்த மாதிரியே நான் இருக்கணும்னு எதிர்பாக்குறதும் உங்களுக்கு உறுத்தலியா?” என கேட்டாள்.

கட்டை பையை எடுத்து அவள் நீட்ட, அவர் அதை தயக்கமாக வாங்கி கொண்டார்.

“இதை மறந்துட்டேன்” என டேபிளை நோக்கி போய், அந்த பத்திரிகையும் கொண்டு வந்து பையில் வைத்தாள்.

மகாதேவன் கிளம்பியதும், கதவை அறைந்து சாத்தி விட்டு சோபாவில் வந்து உட்கார்ந்தாள்.

டேபிளின் மீதி இருந்த ஸ்ரீ ராமஜெயம் நோட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

Tamil novel – Jiteswari – Part 2/21

Covid hospital situation

அவர் கணவர் ஒரு வாரம் கழித்து குணமாகி வெளியே வந்தார். பத்து நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை கற்பகத்திற்கு.

“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என செய்தி அனுப்பினார் இரவு. மறு காலை காலமானார். ஒரிசாவில் இருந்து மகனும் பாண்டியில் இருந்து மகளும் வர இயலாத சூழல்.

சாவின் விளிம்பு வரை சென்று மீண்ட நிலையில் பித்து பிடித்தார் போல இருந்தார் அவர் கணவர். செய்தி வர சங்கு புஷ்பமும் நேசப்பாவும் ஒடிந்து போனார்கள். நடக்க கூடாது என்று வேண்டிய ஒன்று நடந்து விட்டது.

கதறும் பிள்ளைகளை தாங்கவோ, கடந்து போனவருக்கு மரியாதை செய்யவோ இயலாத சூழல். இரண்டு மணி நேரம் அமைதியாக போனது.

சங்கு புஷ்பம் ஆனந்துக்கு போன் போட்டார்.

ஆனந்த் ஒரு மணி நேரத்தில் இரண்டு செட் கவச உடைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பிள்ளைகள் யாருக்கும் சொல்லாமல் இருவரும் கிளம்பி மருத்துவமனைக்கு போய் சேர்ந்தார்கள்.

அங்கே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார் கற்பகத்தின் கணவர்.

நேசப்பா போனதும் பாய்ந்து கட்டிக் கொண்டு கதறினார்.

சங்கு புஷ்பம் அவரை தாங்கலாய் பிடிக்க அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.

அரை மணி நேரம் ஆனது அவர் சற்று நிதானமாக.

ஜித்து போன் வந்தது அப்பாவிற்கு. அவர் போனை எடுத்து சங்கு புஷ்பத்திடம் நீட்ட உடைந்து போனார் சங்கு புஷ்பம்.

நேசப்பா கைத்தாங்கலாக அவரை அழைத்து சென்று காரில் அமர வைத்தார்.

அந்த நிமிடம் அந்த போனின் ஓசை சங்கு புஷ்பத்தின் மனதை பிசைந்தது. முதலில் அதை சைலண்டில் போட்டார். அவர்களுக்கு விஷயம் தெரியும். அப்பாவிடம் பேச விரும்புகிறாள்.

கால் ஹிஸ்டரியை பார்த்தார். வெறும் இரண்டு நிமிடம் மட்டும் பேசியிருக்கிறார்கள் காலையில். மகனிடமும் சில நிமிடங்கள்.

முழு கவச உடையில் சங்கு புஷ்பம் உள்ளே போனார். சக சிஸ்டர்கள் எல்லாரும் ஆழ்ந்த வருத்தத்திலும் பணிச் சுமையிலும் இருந்தார்கள்.

சற்று நேரம் எட்ட இருந்து கற்பகத்தை பார்த்தார்.

“சங்கு சிஸ்டர், ஜித்த பார்த்துக்குங்க” என அவரின் கடைசி செய்தி மனதில் நிழலாடியது.

ஜித்துக்கு போன் போட்டார். “அம்மாவ பாக்குறியாடா கண்ணா” என மெதுவாய் கேட்டார்.

அந்த பக்கம் கேட்ட ஓலக்குரல் சங்கு புஷ்பத்தின் திடத்தை அசைத்துப் பார்த்தது. மகளும் மகனும் பார்த்து  கதற அந்த சிறிய போனை பிடிக்கக்கூட வலுவில்லாமல் நின்றார் சங்கு புஷ்பம்.

பிறகு அங்கு வந்த ஆனந்த், வலுக்கட்டாயமாய் சங்கு புஷ்பத்தை வெளியே அழைத்து வந்தார்.

அங்கே இருந்த சிறிய கட்டை சுவரின் மீது அமர்ந்தார் சங்கு புஷ்பம். சற்று நேரத்தில் வண்டி வர இறுதி சடங்கிற்கு கிளம்பினார்கள்.

எட்ட நின்றவாறு நேசப்பாவும் சங்குபுஷ்பமும் அவரவர் போனில் ஜித்துக்கும் அவர் அண்ணனுக்கும் காண்பித்தார்கள். சிம்பிளாக சில சாங்கியங்களை அவர் கணவர் செய்ய ஐந்து நிமிடங்களில் உள்ளே போனார் கற்பகம்.

ஆறாத்துயருடன் மகளும் மகனும் விடையளிக்க வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

அடுத்த இரண்டு நாட்கள் அவர்கள் இருவரின் போனும் அமைதியாக இருந்தது. யாருடனும் பேசும் மன நிலையில் அவர்கள் இல்லை.

அவர்கள் இருவருமே ஓரிரண்டு வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேசவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து சற்று கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் அழைத்து செல்ல மகன் வர கற்பகத்தின் கணவர் ஒரிசா கிளம்பினார்.

ஜித்து வந்து அவர்களை வழியனுப்பி பிறகு இவர்களை சந்தித்து பேசி விட்டு பாண்டிக்கு கிளம்பி போனாள்.

Tamil novel – Jiteswari – Part 1/21

A retired woman enjoying the morning with coffee

அன்று வியாழக்கிழமை. காலையில் எழுந்து காபி குடித்துக்கொண்டே, பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்குபுஷ்பம். நேசப்பா விடியற்காலையில் எழுந்து விடுவார். வெயிலுக்கு முன் கிச்சன் வேலைகளை முடிப்பது அவர்கள் வழக்கம். ஒன்பது மணிக்குள் சமைத்து முடித்து, பிறகு அன்றாட வேலைகளை கவனிப்பார்கள்.

உள்ளே மிக்சி சத்தம் கேட்டது. காலை டிபன் நேசப்பா ரெடி செய்துவிடுவார். கூடவே மதிய உணவுக்கான எல்லா காய்களையும் நறுக்கி வைத்து விடுவார். அரிசியும் பருப்பும் ஊற வைத்து, இஞ்சி பூண்டு உரித்து, கறிவேப்பிலையையும் தேவையான அளவு அலசி வைத்து விடுவார்.

சங்கு புஷ்பத்திற்கு காலையில் எழுவது சற்று சிரமமான காரியம். கால் நரம்பு வலியால் பல நாட்கள் இரவு சரியான தூக்கம் இருக்காது. விடியற்காலையில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விடுவார். எழுந்ததும் முழு மூச்சாக எந்த வேலையும் செய்ய முடியாது.

எட்டு மணிக்கு பிறகு தான் அவரால் சற்று நடக்க முடியும். எனவே நேசப்பா எல்லா ஏற்பாடுகளையும் தயார் செய்து விடுவார். சங்குபுஷ்பம் கிச்சன் உள்ளே போனால் அரை மணி நேரத்தில் மதிய உணவை செய்து முடித்து விடுவார்.

மணி ஏழேமுக்கால் ஆனது. போன் அடித்தது. ஜிதேஸ்வரியின் அழைப்பு.

a senior attending phone call

“சங்குமா, எழுந்துட்டீங்களா? நா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்றாள்.

“இல்ல ஜித்து, சொல்லு, எப்ப வர?” என்றார் சங்குபுஷ்பம்.

“நைட் ப்ளயிட் இங்க. காலைல நாலு மணிக்கு நம்ம ஏர்போர்ட்டுக்கு வந்துடுவேன். நா பாண்டி போகல. வீட்டுக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என தயங்கியபடி சொன்னாள் ஜிதேஸ்வரி.

“வா வா” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“அப்புறம் ஒர்க்ஷாப்பு எப்படி போச்சு?” என விசாரித்தார். ஐந்து நிமிடம் பேசி முடித்து பிறகு கிச்சன் சேரில் போய் உட்கார்ந்தார். நேசப்பா போனில் பாட்டு கேட்டபடியே வேலையில் மும்முரமாய் இருந்தார்.

“ஏங்க நாளைக்கு காலைல ஜித்து வீட்டுக்கு வரேன்னு சொன்னா. ரெண்டு மூணு நாள் இங்க இருந்துட்டு அப்புறம் பாண்டிக்கு போறாளாம்” என சொன்னார் சங்குபுஷ்பம்.

“காலைல எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வருது? நா போய் கூட்டிட்டு வரேன்” என்றார் நேசப்பா.

“நாலு மணிக்கு வண்டி லேண்ட் ஆகுமாம்.வெளில வர நாலரை ஆகும்னு சொன்னா. உங்களை அனுப்புறேன்னு சொன்னேன். வேணாம், நானே டாக்சி புடிச்சி வரேன்னு சொல்றா” என்றார் சங்குபுஷ்பம்.

“அது அப்படி தான் சொல்லும். அதுக்காக நாம போகாம இருக்க முடியுமா? நா போறேன்” என்றார் நேசப்பா.

“சரிங்க, நீங்க போயிட்டு வாங்க. குமார காலைல மூணு மணிக்கு வர சொல்லிடுங்க. விடியற்காலைல நீங்க ஓட்ட வேணாம்” என்றார் சங்குபுஷ்பம்.

டிபன் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டு ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்கள்.

லக்ஷ்மியின் போன் வந்தது. “மா, நா நாளைக்கு நைட்டு வீட்டுக்கு வரேன். ஜித்து பேசுனா காலைல. பசங்கள கூட்டிட்டு என்ன அங்க வர சொல்லிட்டா. நா சாயந்திரம் காலேஜ் முடிச்சிட்டு அப்டியே பசங்கள கூட்டிட்டு ஒரு ஆறு மணிக்கு கெளம்பிடுவேன்” என்றாள்.

“சரி, காமாட்சி ஆன்ட்டி கிட்ட சொல்லி பசங்க பேக ரெடி பண்ண சொல்லிட்டியா?” என்றார் சங்கு புஷ்பம். காமாட்சி ஜிதேஸ்வரியின் மாமியார். நல்ல குணமான பெண்மணி.

“அவங்க கிட்டயும், பசங்க கிட்டயும் காலைல ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே ஜித்து போன் பண்ணி சொல்லிட்டாளாம்” என்றாள் லக்ஷ்மி.

வரும் வாரம் திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் பொது விடுமுறை. அரிதாக நான்கு நாட்கள் தொடர்ந்து கிடைக்கிறது.

லக்ஷ்மி சங்குபுஷ்பத்தின் இளைய மகள். பாண்டியில் கல்லூரியில் ப்ரொபஸராக இருப்பவள். ஜித்தும் லக்ஷ்மியும் தோழிகள். சற்று ஏறக்குறைய ஒரே வயதுடையவர்கள்.

ஜிதேஸ்வரி சங்குபுஷ்பம் பெறாத மகள். அவருடன் நர்ஸாக பணிபுரிந்த கற்பகம் சிஸ்டரின் மகள். இருவரும் பணிக்காலம் முழுவதும் ஓரே இடத்தில் வேலை பார்த்தவர்கள்.

ஜிதேஸ்வரி பிறந்ததும் அவரை முதலில் கையில் ஏந்தியவர் சங்குபுஷ்பம். ஜிதேஸ்வரி மட்டுமில்லை. அவர்கள் குடும்பத்திலும், நட்பு வட்டாரத்திலும் பெரும்பாலான குழந்தைகளை முதலில் அணைத்துக் கொண்டவர்
சங்குபுஷ்பம். யார் தெரிந்தவர்கள் பிரசவத்திற்காக சேர்ந்தாலும், அவர் ஷிப்ட் முடிந்த பின்பும் காத்திருந்து, தாயையும் சேயையும் நல்லபடியாக பார்த்த பிறகு தான் வீட்டுக்குப் போவார்.

கற்பகம் சில வருடம் முன்பு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரின் இறுதி நாட்களில் நேரில் போய் பார்க்க முடியாத சூழல்.

கற்பகத்திற்கு அவரின் உடல் நிலை புரிந்து விட்டது. அவர் கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரே மகன் ஒரிசாவில் இரும்பு கம்பெனியில் வேலை செய்கிறான்.

ஜிதேஸ்வரி திருமணமாகி பாண்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள்.

கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சங்கு புஷ்பத்திற்கு போன் பேசினார். நேசப்பாவும், அவரும் அந்த தம்பதிகளுக்கு ஆறுதலாக இருந்தார்கள்.

நேசப்பா சற்று தைரியசாலி, ஆனால் மென்மையான மனம் கொண்டவர்.

சங்கு புஷ்பம் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் சர்வ ஜாக்கிரதையாக பயணித்து அவர்களுக்கு தேவையான உணவையும் புத்தகங்களையும் கோவில் ப்ரசாதங்களையும் மருத்துவமனை வாசலில் கொண்டு சேர்த்து விடுவார்.

சங்குபுஷ்பம் வார்டு பாய் ஆனந்திடம் சொல்லி வைத்து விடுவார்.

“ஏன் மேடம் சார் வெளில வரார்? இங்க நெலமை ரொம்ப மோசமா இருக்கு. அவங்களுக்கு என்ன தரணும்னு சொல்லுங்க. நா ஏற்பாடு பண்ணுறேன்” என்றார் ஆனந்த்.