சிறுகதை – யானும் நீயும் எவ்வழி அறிதும்?

A tamil girl standing in balcony

Part 1

இந்திரா ஆபீஸ் முடித்து வீட்டுக்கு வந்து பார்த்தால் மானசியிடம் இருந்து மூன்று மிஸ்ட் கால்கள் வந்திருந்தது.

“என்னடி இத்தனை போன் போட்டிருக்க?” என கால் செய்து கேட்டாள் இந்திரா.

“இந்துக்கா, ஐடி ரிட்டர்ன்ஸ் பைல் பண்ண இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. அதான் கால் பண்ணேன். நான் இன்னிக்கு பண்ண போறேன், உனக்கும் பண்ணிடவா?” என கேட்டாள் மானசி.

மானசி இந்திராவின் சித்தப்பா பெண். மூன்று மாதங்களுக்கு முன்தான் பெண் குழந்தை பிறந்திருக்கிறது அவளுக்கு.

“நீயே குழந்தய தனியா பாத்துக்குற, கொஞ்சம் டைம் கெடச்சா ரெஸ்ட் எடுடி. உன்ன தொல்ல பண்ண வேணாம்னுன்னு தான் தீப்தியை வர சொல்லி இருக்கேன். வெள்ளிக்கிழமை ஆபீஸ் முடிச்சிட்டு வந்து பண்ணி தரேன்னு சொல்லி இருக்கா” என சொன்னாள் இந்திரா.

தீப்தி மானசியின் சொந்த தங்கை. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாள். இந்திராவின் வீட்டிலிருந்து அரை மணி நேரம் தான் அவள் சித்தப்பா வீடு.

“அந்த நாய் லாஸ்ட் டே வரைக்கும் இப்படித்தான் இழுக்கும். அவகிட்ட நீ நல்லா மாட்ட போற. உன் பேங்க் பேலன்ஸ், சேவிங்ஸ் எல்லாம் நோட் பணிக்குவா..நெக்ஸ்ட் பர்த்டேக்கு உன்கிட்ட என்ன டிமாண்ட் வைக்க போறான்னு பாரு” என வார்னிங் கொடுத்தாள் மானசி.

இந்திராவுக்கு சிரிப்பாக வந்தது. “அவளுக்கு போன் பண்ணி கேட்டேன்டி பைல் பண்ணி தர்றியான்னு..அதுக்கு அவ என்ன கேட்டா தெரியுமா?” என நிறுத்தினாள் இந்திரா.

“சொன்னேன்ல, உன்கிட்ட வசமா ஏதோ எதிர்பாப்பான்னு..என்ன கேட்டா?” என கொக்கரித்தாள் மானசி.

“பொடி தோசை” என சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னாள் இந்திரா.

“ஹாஹ்ஹா , எனக்கு புரிஞ்சிடிச்சு, அம்மா இப்போ அவளை டயட்ல போட்டிருக்காங்க. பட்டர், ghee எதையும் அவ கண்ல காமிக்குறது இல்ல” என தீப்தியின் craving கதையை சொன்னாள் மானசி.

கொஞ்ச நேரம் தீப்திக்கு வரன் பார்க்கும் கதையும், அதற்கு அவள் பிடி கொடுக்காததும் ஓடியது.

“அவ கிட்ட பேசேங்க்கா..அம்மா ரொம்ப படுறாங்க அவகிட்ட” என கவலையாய் சொன்னாள் மானசி.

“வரட்டும், நானே ஆரம்பிச்சா, இந்த சாக்க வெச்சு அவளை கூப்பிட்ட மாதிரி நினைப்பா.. அவளே பேச்சுவாக்குல இந்த டாபிக்க ஓபன் பண்ணுறாளான்னு பாக்குறேன்..நாம பேசுறதுக்கு முன்னாடி அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்குவோம்..அவளே சொல்லட்டும் எந்த விஷயத்தால அவ தயங்குறான்னு..இதான் அவளோட எண்ணமுன்னு தெரிஞ்சிகிட்ட, நமக்கு தெரிஞ்ச நல்லது கெட்டதை சொல்லலாம்” என எப்படி இந்த விஷயத்தை தீப்திக்கு எந்த ஸ்ட்ரெஸ்ஸும் கொடுக்காமல் பேசுவது என விவாதித்தார்கள்.

மானசி பேசி விட்டு போனை வைக்க, இந்துவுக்கு மனம் பல கேள்விகளை முன் வைத்தது. தீப்தி தெளிவான பெண். நல்ல குணம், அறிவு, பொறுமை என எல்லாம் இருக்கிறது.திருமணம் ஆயிரம் காலத்து பயிர், பண்ணிக்கோ என்றால் ஏற இறங்க பார்த்து விட்டு நடையை கட்டி விடுவாள். அதனால் அவளை பேசவிட்டு பிறகு தான் பேசுவோம் என முடிவெடுத்தாள்.

Part 2Part 2

“மா, நாளைக்கு ஆபீஸ் முடிஞ்சதும் நான் இந்து அக்கா வீட்டுக்கு போறேன். நீ அக்காக்கு ஏதாவது குடுத்தனுப்புறதா இருந்தா, நைட்டே பேக் பண்ணி வைச்சிடு” என ராஜத்திடம் சொல்லி கொண்டே வேலைக்கு கிளம்பினாள் தீப்தி. சிவகுரு வாக்கிங் முடித்து வந்து சோபாவில் உட்கார்ந்தார்.

“சரிடி” என சொல்லிவிட்டு, அவருக்கு டீ கொண்டு போய் கொடுத்தார் ராஜம்.

“ஏங்க, இன்னும் நாலு நாளைக்கு தான் சுகர் மாத்திரை இருக்கு. சனிக்கிழமை காலைல ப்ளட் டெஸ்ட் எடுத்துட்டா, சாயங்காலம் டாக்டரை பாத்துடலாம்” என சொன்னார் ராஜம்.

“எங்க அக்கா உன்ன விட ஆறு வயசு பெரியவங்க. அவங்களுக்கே இன்னும் சுகர் வரல. எனக்கும் வரல. நீ கொஞ்சம் வாய கட்டு, நல்லா நட. இப்போ பார்டர்ல தானே இருக்கு ” என டிவி பார்த்தபடியே சொன்னார் சிவகுரு.

தீப்திக்கு சுர்ரென்று ஆனது. “பெரியப்பா உங்கள விட நாலு வருஷம் பெரியவர். அவர் நல்லா தானே இருக்காரு. நீங்க ஏன் முட்டிவலின்னு கோடாரி தைலமும் கையுமா இருக்கீங்க?” என கேட்டாள்.

அவரிடம் பதிலில்லை. ராஜம் பேசாமல் கிச்சனுக்குள் போய் வேலையை தொடர ஆரம்பித்தார். “இந்த லட்சணத்தை அனுபவிக்க தான், ஊரு ஊரா எனக்கு பையன் பாக்குறீங்களா?” என கேட்டு விட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

“ஏண்டி, உங்க அப்பா ஒரு வார்த்தை சொன்னா, பிலு பிலுன்னு உலுக்கி எடுக்குற? என்ன சொன்னாலும் சனி கிழமை என் கூட வரத்தான் போறாரு” என ஆதங்கமாய் சொல்லிக்கொண்டே அடுப்பில் தோசை கல்லை வைத்தார் ராஜம்.

“உனக்காக கேக்குற வரை கம்முனு இருப்ப..கூட என் விஷயத்தை சேத்து சொன்னா, அவருக்கு பலமா முட்டு குடுப்ப” என கொக்கியை போட்டாள் தீப்தி.

“நாங்க என்ன கல்யாண வாழ்க்கைக்கு நாங்க தான் பெஞ்ச் மார்க்குன்னு சொல்லிக்கிட்டா சுத்துறோம். எங்கள ஏண்டி உன் முடிவுக்கு அளவுகோலா வெக்குற?” என கேட்டார் ராஜம்.

“இங்க பாரு, அப்பப்போ ஹர்ட் ஆகுறதுக்கும், அப்புறம் சகஜமா இருக்குறதுக்கும்நீ பழகிக்கிட்ட மாதிரி என்னால இருக்க முடியாது” என டீ டம்ளர்களை கழுவிக்கொண்டே கொண்டே சொன்னாள் தீப்தி.

ராஜம் திருப்பி கொடுப்பதென்று முடிவு செய்தார்.

“ஒரு கைல கார் ஓட்டிகிட்டே, மறுகையால பொண்டாட்டி கால அமுக்கி விடுறதெல்லாம் ரீல்ஸா தான் வரும். நிஜ வாழ்க்கைல ஒருத்தர் கால ஒருத்தர் வாரி விடுற சம்பவமும் நடக்கத்தான் செய்யும். Linkedin, Naukriல வேலை தேடுற மாதி, இன்ஸ்டால வாழ்க்கையோட அர்த்தத்தை தேடாதே” என நறுக்கென்று சொன்னார்.

கல்லும் களமும் சூடு பிடித்தது. ராஜம் தோசை ஊற்ற ஆரம்பித்தார்.

தன் வாழ்க்கையின் முக்கியமான முடிவில் தான் எடுக்கும் நிலைப்பாட்டை, ரீல்ஸ் இன்ப்ளூயன்ஸாக குறைத்து மதிப்பிடுவது தீப்திக்கு எரிச்சலை தந்தது.”காலை வாரும் வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்ச ஒரு விஷயத்துல எதுக்கு இறங்கணும்? அனுசரிச்சு, அனுசரிச்சு சலிச்சி போய் வாழுறதுக்கு, சுதந்திரமா வாழ்க்கைய தனியாவே அனுபவிச்சு வாழலாம்” என அடமாய் சொல்லிக்கொண்டே முதல் அடை தோசையை உள்ளே தள்ளினாள்.

“இந்த வெண்ணை மாதிரி பேசுற பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லை. எங்க வாழ்க்கையையோ, சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையையோ நீ என்ன தான் ஸ்கேன் பண்ணாலும், உன்னால முழுசா தெரிஞ்சிக்க முடியாது. அரை குறை அறிவோட முடிவெக்குறத விட பெரிய அபாயம் எதுவும் கிடையாது” என தீர்க்கமாய் சொன்னார் ராஜம்.

ஹ்ம்ம்..அடைக்கு தொட்டுக்க அவமானமும் கொடுக்கிறாள் அம்மா.தீப்திக்கு உஷ்ணம் ஏறியது.

“கடவுள கட்டிக்கிட்டாலும் கடுப்பிலாத வாழ்க்கைக்கு உத்திரவாதம் கிடையாது” என ராஜம் தொடர்ந்தார். தீப்தியை வெண்ணை டேக் உருக்கி எடுத்ததில் கொஞ்சம் லேகில் இருந்தாள்.

“உங்க கிரிக்கெட் கடவுள் சச்சின் கூட, எல்லா ஓவர்லேயும், ஆறு பாலையும் வெளாச மாட்டார். நின்னு நிதானிச்சு பாத்து பக்குவமா தான் ஆடுவார். எதிராளி கிட்ட இன்ஸ்டன்ட்டா ப்ரூவ் பண்ணணும்ங்கிற அவசியம் என்ன? மேரேஜ் லைப்பும் அப்படிதான்” என தீப்திக்கு புரியும் பாஷையில் சொன்னார் ராஜம்.

“ஹ்ம்..” என ஆமோதித்தாள் தீப்தி. இதை கண்டிப்பாக மறுக்க முடியாது.

“உன் கேஸ ஸ்ட்ராங்காக்க, ஆயிரம் மைல் தள்ளி இருக்குற சச்சினை வம்படியா கொண்டாந்து குறுக்கால விட்டு எனக்கு கட்டைய போடுறல்ல?” என சிரித்துக் கொண்டே கேட்டாள் தீப்தி.

“உன் லேங்குவேஜ்ல சொன்னாதான் உனக்கு மண்டைல ஏறும்” என உரைத்தார் ராஜம்.

தீப்திக்கு உள்காயம் இன்னும் கொஞ்சம் இருந்தது,

“அப்பாவோட இந்த லேங்குவேஜ நீ அக்செப்ட் பண்ணிக்கிட்ட மாதிரி தான் எல்லாம்” என மீண்டும் ஆரம்பப் புள்ளியிலேயே போய் நின்றாள்.

லேப் டெஸ்டுக்கு கணவர் கடுப்பேற்றியதை விட, இந்த டாபிக்கை வைத்து இவள் கடுப்பேற்றுவது ராஜத்தின் பொறுமையை சோதித்தது.

“நான் என்னத்த அக்செப்ட் பண்ணிக்கிட்டேன்கிறத நீ கண்ட? நானும் மனுஷி தான். எனக்கும் கோவம், வருத்தம் எல்லாம் இருக்கு ஆனா அதை ஆர்கியுமெண்ட்ல தான் காட்டணும்னு என்ன அவசியம் இருக்கு?” என கோபமாக கேட்டார்.

“வேற எப்புடி காமிக்குற?” என பொறுமையாக கேட்டாள் தீப்தி.

“சாயங்காலம் வா, ரீல்ஸ் எடுத்து வெச்சிருக்கேன். எல்லாத்தையும் உங்களுக்கு படங்காட்டணும்னு ஏன் எதிர்பாக்குறீங்க? அன்பா இருந்தா ஆசையோட கவனிச்சிக்குறதுக்கும், வெறுப்பேத்துனா கடமைக்கு குடும்பம் நடத்துறதுக்கும் எங்களுக்கு தெரியும்” என சுட சுட பதில் வந்தது.

“அவர் நேத்து நைட் பேசின பேச்சுக்கே, அவருக்கு மண்டகப்படி இன்னும் பெண்டிங்ல இருக்கு” என அடுத்த திரியை கொளுத்தினார் ராஜம்.

“அவர் ட்ரெஸ்ஸ அயர்ன் பண்ணி வெச்சிட்டு, லன்ச் பேகும் பேக் பண்ணிட்ட. இதுல என்ன வீர வசனம் பேசுற?” என விடாப் பிடியாய் கேட்டாள் தீப்தி.

“கடமைக்கு வேல பாக்குறதுக்கும், கரிசனத்துல அவரை பாத்துக்குறதும் வித்தியாசம் இருக்குடி” என சூட்சுமமாய் சொன்னார் ராஜம்.

“உருட்டி போட்டா போண்டா, தட்டி போட்டா வடை” என கீழ்க்கண்ணால் மாவு பாத்திரத்தை பார்த்தபடியே சொன்னாள் தீப்தி.

“உங்களா கூட இருந்தா காஷ்மீர்லேர்ந்து கன்னியாகுமாரி வரை நடந்தா கூட சுகர் குறையாது. இப்போ அவர் வண்டி சாவிய எடுத்துக்கிட்டு கீழ போயிட்டு திருப்பி வீட்டுக்கு வராரா இல்லியா பாரு” என sizzler ஆக புகைந்து puzzle போட்டார் ராஜம்.

சிவகுரு குளித்துவிட்டு வந்து, டிபன் சாப்பிட்டு விட்டு, ரெடியாகி ஆபீசுக்கு கிளம்பி போனார்.

மூன்று மாடி படி இறங்கி போக வேண்டும். மீண்டும் மூன்று மாடி ஏறி வர வேண்டும்.

ஹால் அமைதியாக இருக்க, தீப்திக்கு நிலை கொள்ளவில்லை. பால்கனியில் இருந்து எட்டி பார்க்கலாமா என தோன்றியது. அவர் டக்கென்று மேலே பார்த்தால் மாட்டிக் கொள்வோம் என பேசாமல் உட்கார்ந்து விட்டாள்.

ராகி கஞ்சியை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டிருந்தார் ராஜம்.

மெயின் டோர் திறக்கும் சத்தம் கேட்டது. தீப்திக்கு தலை சுற்றியது. அம்மாவை பார்க்கவே திராணியில்லாமல் டிவி பார்ப்பது போல் உட்கார்ந்திருந்தாள்.

சிவகுரு நேராக உள்ளே போனார். ஐந்து நிமிடம் ஆனது. வேறு சட்டை மாற்றிக் கொண்டு, அவசர அவசரமாக கிளம்பி போனார்.

அம்மாவின் வராகி மோட் வேலை செய்து விட்டது. அவருக்கே இந்த கதி என்றால் தான் எம்மாத்திரம் என பயந்தாள் தீப்தி. ஆனாலும் ஆர்வம் மண்டையை குடைய சரண்டர் மோடுக்கு போனாள்.

“செம ஆளுமா நீ..எதுக்கு அவர் வந்து சட்டையை மாத்திட்டு போறாரு?” என கேட்டாள் பவ்யமாக கேட்டாள்.

“எல்லா ஸ்டோரியும் எல்லோருக்கும் தெரியணும்னு அவசியம் இல்லை” என மீண்டும் குட்டினார் ராஜம்.

“மையிலே குயிலேன்னு பேசணும்னு யாரும் எதிர்பாக்கலை. ஆனா மயிறாச்சேன்னு பேசினா, பேசினவங்க தான் எக்ஸ்ட்ரா மைல் நடக்கணும். யாரை எப்போ எங்க வெக்கணும்னு எங்களுக்கும் தெரியும்” என கம்பீரமாக சொன்னார் ராஜம்.

“மையிலே குயிலேன்னு பேசணும்னு யாரும் எதிர்பாக்கலை. ஆனா மயிறாச்சேன்னு பேசினா, பேசினவங்க தான் எக்ஸ்ட்ரா மைல் நடக்கணும். யாரை எப்போ எங்க வெக்கணும்னு எங்களுக்கும் தெரியும்” என கம்பீரமாக சொன்னார் ராஜம்.

இன்னைக்கு நைட்டே இந்து அக்கா வீட்டுக்கு போயிடலாமா என யோசனை வந்தது தீப்திக்கு.

“சரிம்மா, டென்சன் ஆவதே” என காலில் விழாத குறையாக சொல்லிவிட்டு தலை மறைவானாள்.

விஷயம் இதுதான். முதல் நாளும் சிவகுரு குதர்க்கமாக வாயை விட்டிருக்கிறார். ராஜம் இரவு படுக்க போகும் முன், அடுத்த நாளுக்கான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கும் போது ஏதோ பேசி இருக்கிறார். அவர் பைல்களை எடுத்து அவர் ஆபீஸ் பேகில் வைத்து விட்டு திரும்பியவர், அவர் பால் பாயிண்ட் பேனா டேபிள் மீது அப்படியே இருப்பதை பார்த்தார். சாதாரணமாக இருந்தால் அதன் முனையை உள்ளே அழுத்தி விட்டு, பைக்குள் வைத்திருப்பார். அடுத்த நாள் காலை துரை சிங்கம் அப்படியே பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு கிளம்ப, பார்க்கிங் போவதற்குள் பாக்கெட்டின் அருகே இங்க் கறையானது. சீனியர் கோஷ்டி கவனித்து சொல்ல, கோடாரி தைலம் இருக்கும் நம்பிக்கையில் மூன்று மாடி ஏறி வந்து சட்டை மாற்றிக் கொண்டு போகிறார். வகை தொகையில்லாமல் விமர்சனம் செய்தால் கரிசனம் காணாமல் போய் விடும் என உணர்ந்து கொண்டிருப்பார் சிவகுரு.

Part 3

அடுத்த நாள் இரவு ஏழு மணி. தீப்தி இந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அதற்கு முன்னரே ராஜத்தின் briefing வந்து சேர்ந்தது இந்துவுக்கு.

“மொதல்ல ghee தூக்கலா ஊத்தி மூணு பொடி தோசை போடு” என சொல்லிவிட்டு “என்ன மாமா, இன்னிக்கு சீக்கிரம் வந்துடீங்க?” என விக்ரமை கேட்ட படியே லேப்டாப்பை ஆன் செய்ய போனாள் தீப்தி.

“மாமாக்கு செய்த கோதுமை உப்புமா இருக்கு, ஒரு கரண்டி வெக்கவா?” என கேட்டாள் இந்து.

“வயசானப்புறம் அந்த வடக்கன்ஸ் சாப்பாடு தான். இப்போதைக்கு வேணாம்” என தீப்தி சொல்ல, விக்ரம் இந்துவை ஏற இறங்க பார்த்தார்.

சாப்பிடும் போதே இந்துவின் பைனான்ஸ் மேட்டரை ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து கொண்டாள்.

“பேமிலி இன்சூரன்ஸ் எவ்ளோ கட்டுற?”

“ஸ்கூல் பீஸ் எவ்ளோ கட்டுற?”

“வீட்டு லோனுக்கு எவ்வளுவு குடுக்குற?”

இந்து ஒவ்வொன்றாக சொல்ல IT returns பைல் செய்து முடித்தாள் தீப்தி. “மாமாக்கும் பண்ணனுமா?” என கேட்டாள்.

“அவரே பைல் பண்ணிட்டாரு” என சுருக்கமாய் சொன்னாள் இந்து.

தீப்தி மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஷட்டவுன் செய்து விட்டு போய் பால்கனியில் நின்றாள்.

குடும்ப பாரத்தை சமமாக சுமந்து கொண்டிருகிறாள் அக்கா. தான் மட்டும் பைல் செய்து கொள்ள தெரிகிறது. அவளுக்கும் செய்து கொடுத்தால் என்ன என கோபம் தலைக்கேறியது.

எல்லா வேலையையும் முடித்து விட்டு இந்துவும் வந்து பால்கனி சேரில் உட்கார்ந்து கொண்டாள்.

“ஏன் தொரை உனக்கு பண்ண மாட்டாரா?” என கேட்டாள் தீப்தி.

“இருபது தோசை செய்வதற்கு முன் பேசியது இந்துவுக்கு சட்டென்று பிடிபடவில்லை.

“என்னடி சொல்ற?” என குழப்பமாக கேட்டாள்.

“அவருக்கு returns பைல் பண்ணும் போது, உனக்கும் சேர்த்து பண்ணா என்ன?” என கொதிப்பாக கேட்டாள்.

இந்துவுக்கு சிரிப்பு வந்தது. “அதுவா, கேட்டா பண்ணுவாரு. நான் தான் கேக்கலை” என சொன்னாள்.

“கேட்டாத் தான் பண்ணுவாரா? அவரு கேட்டு கேட்டு தான் நீ எல்லாத்தையும் அவருக்கு செய்யுறியா? என மீண்டும் குடைந்தாள்.

“உனக்கு ஈகோ. நான் ஏன் கேக்கணும்னு. வாய தொறந்து கேட்டு வேலைய முடிக்க வேண்டியது தானே” என விக்ரமை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டே கேட்டாள் தீப்தி.

“ஈகோவெல்லாம் ஒண்ணுமில்லை. அவரும் கேக்கலை, நானும் சொல்லலை. அவ்ளோதான்” என்றாள் இந்து.

“ஆனா, நீ நேத்து வரை எதிர்பார்த்த இல்ல?” என கேட்டாள்.

“ஆமாடி, அதுக்கென்ன? எப்போவும், எல்லா வேலைலேயும் அவங்க கவனம் இருக்காதுடி. அதுக்காக வருத்தப் பட்டு என்ன பிரயோஜனம் சொல்லு?” என திரும்ப கேட்டாள் இந்து.

“எல்லா வேலைலயும் அவங்க கவனம் இருக்கும். இது உன் தனிப்பட்ட விஷயம். இது குடும்ப வேலை இல்லைனு அவர் நெனைச்சது தான் காரணம், கரெக்ட்டா?” என கேட்டாள்.

முதல் நாள் சித்தியிடம் இவள் பொங்கியது இந்துவுக்கு நினைவுக்கு வந்தது. ஒரு நாள். ஒரு செயல். ஒரு பேச்சு. அதை அளவுகோலாக கொண்டு ஒரு மனிதரை, குறிப்பாக வீட்டு ஆண்களை எடை போடுவதும், திருமண வாழ்க்கையை எள்ளலாக பேசுவதும் தீப்தியின் சமீப கால வாடிக்கையாக இருக்கிறது.

நீண்ட நாட்களாக கட்டமைக்கப்பட்ட ஒவ்வொருவரின் முழு குடும்ப அமைப்பிலும், அந்த தம்பதிகள் பல நிலைகளை ஒன்றாக தாண்டி வருகிறார்கள். விக்ரமின் செயல்பாடும் அந்த வகை தான். இந்து வேலை, குடும்பம், பண விவகாரம் என எல்லாவற்றையும் கையாள்வதால் returns பைல் பண்ணுவதை அவள் பார்த்துக் கொள்வாள், இல்லை மானசி செய்து விடுவாள் என நினைத்திருப்பார். அதை ஒரு குற்றமாக தீப்தி பார்ப்பது இந்துவுக்கு கவலையாக இருந்தது.

“நீ என்ன ஊர் ஒலகத்துல ருக்குறவங்களுக்கு perfect marriage நடத்துறது தான் ஒரே வேலைன்னு நெனச்சிக்கிட்டு இருக்கியா?” என உதாராக கேட்டாள் இந்து.

தீப்தி இந்த கேள்வியை சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவளுக்கு நடந்திருக்கும் அநியாயத்துக்கு நான் நீதி கேட்டால், என்னை காரா பூந்தி ரேஞ்சுக்கு ட்ரீட் செய்கிறாள் என நினைத்தாள்.

என்ன யோசித்தும் இந்த கேள்விக்கு என்ன கவுண்டர் கொடுப்பது என பிடிபடவில்லை தீப்திக்கு.

“இப்போ நீ பைல் பண்ணியே, அது இன்னிக்கான கணக்கு வழக்கா? என கேட்டாள் இந்து.

“இல்ல,லாஸ்ட் ஒரு வருஷத்துக்கு” என காற்றில் போவது போல பதில் சொன்னாள்.

“ஹா, அதே மாதிரி தான். மேரேஜ் லைப்ல நீ டெய்லி கணக்கு வழக்கு பாத்தீன்னா வேலைக்கு ஆகாது. இது காலத்தும் இருக்க போகும் பயணம். ஏற்றம் இரக்கம், குற்றம் குறை என எல்லாம் தான் இருக்கும். ஆனால் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால், நாங்கள் எவ்வளுக்கெவ்வளவு ஒருவருக்காக மற்றொருவர் இருந்திருக்கிறோம் என எங்களுக்கு மட்டும் தான் முழுசாக தெரியும். அதனால, அம்மாவை பாத்து, என்னை பாத்து, மானசியோட வாழ்க்கையை பாத்து உன்னோட பயணமும் இதே மாதிரி தான் இருக்கும்னு நினைக்காதே” என தெளிவுபடுத்தினாள் இந்து.

“நன் ரெடி இந்து அக்கா” என சொன்னாள் தீப்தி.

Leave a comment