Tamil Parody Song – காலி தொகுதி… மீதி தொகுதி… சேதி ஒண்ணு கேளு!

A paroody song inspired by Karakaatakaaran movie song in tamil

கோல்கப்பா : என்ன குமாரி? அரசியல் நிலவரமெல்லாம் எப்படி இருக்கு?

பூரி குமாரி : அமோகமா இருக்குங்க. ஆமோதிக்குறீங்கன்னா கைய உயர்த்துங்க!

கோல்கப்பா : ஏண்டி, நான் ஒருத்தன் தானே இருக்கேன். கூட்டத்தை பாத்து பேசுற மாதிரி சொல்லுற?

பூரி குமாரி : எழுதி வெச்சுக்குங்க, எழுதி வெச்சுக்குங்க..உங்க கை கறை படிஞ்சி இருக்குறதால தான் நீங்க கைய தூக்க மாட்டேங்குறீங்க!

கோல்கப்பா : மிச்சத்தை நானே சொல்லிடுறேன்..அதனால தான் மக்கள் தேர்தல் அரசியல்லர்ந்து சிலரை தூக்கி போட்டுட்டாங்க..சரியா?

பூரி குமாரி : ஹிஹிஹி…நான் தான் பாதிக்கப்பட்டு இருக்கேன் நெனச்சேன்..நீங்களுமா?

கோல்கப்பா : ஏண்டி, நாம ரெண்டு பெரும் ஒண்ணா தானே டெய்லி சட்டசபை லைவ் பாக்குறோம்?

பூரி குமாரி : என்னமோ போங்க கோல். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஆக்கபூர்வமான விவாதங்களை செய்யாம சும்மா நச நசன்னு பேசிகிட்டு இருக்காங்க.

கோல்கப்பா : வாயில வடை சுடுறீங்கன்னு ரெண்டு தரப்பும் மாத்தி மாத்தி சொல்லறீங்களே, இதை பாக்குற ஜனங்க என்ன நினைப்பாங்கன்னு சபாநாயகர் வருத்தப்பட்டு கமெண்ட் பண்ற அளவுக்கு தான் நிலவரம் இருக்கு.

பூரி குமாரி :வடைன்னு பேசுறவங்களுக்கு பாயசத்தை போடுவோம் கோல். மக்களே, இடை தேர்தலை பெரிதும் நம்பி இருக்கும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை “மாங்குயிலே பூங்குயிலே” என்ற பாடலை தழுவி நகைச்சுவையாக எழுதி இருக்கிறோம். படித்தும் சிறிதும் மகிழுங்கள். நன்றி.


ஆளும் கட்சி :

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

குத்து குத்து.. ஓட்டாலே..
நான் எட்டி பிடிப்பேன்..டோட்டலே..

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

புட்டு புட்டு வெளக்கி
சொல்ல ஏகப்பட்ட வம்பு!

அத லிஸ்டெடுத்து பைல்ல
வெச்சா பொங்குதடி தெம்பு!

மீட்டெடுத்து குடுத்த
அந்த பரந்தூரு ஊரு!

இப்போ, திட்டம் கொஞ்சம்
மாறுதடி..என்ன பாடு ஜோரு!

கண்ணுக்கழகா, மண்ணு சிரிச்சா,
சன்னு மனச, சுட்டு எரிச்சா..

தன்னந்தனியா ஆட்சி அமைச்சா,
கண்ணில் விரலை ஆட்டி கொடைஞ்சா..

ஏறெடுத்து பார்த்து,
யம்மா, என் சின்னத்துக்கு குத்து!

சீரெடுத்து வாரேன்,
யம்மா, பாத்து என்னை தேத்து!

காத்தடிக்கும்
கருவூல நிலைக்கு,
நிச்சயம் பதிலு
சொல்லிடும் விசிலு!

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

ஒன்ன மறந்திருக்க
ஒரு பொழுதும் அறியேன்!

எம்மா, எண்ணி வெரல விட்டு
வேறெதையும் தெரியேன்!

நெஞ்சத்தில குடியிருக்கும், பஞ்சு
மனசு பேன்ஸு!

யம்மா, இங்க அங்க பேசி
வரும் மீதியிருக்கும் ப்ளான்ஸு!

முறியடிப்போம்
சிண்டு சேட்டை!

பாய்ந்து கடப்போம்
பெரும்பான்மை கோட்டை !

சலவை செய்ய தான்
தேடி அழைச்சேன்!

சம்மதம்னு
சொல்லு தொகுதீ!

பிரச்சாரத்துக்கு வாரேன்..
யம்மா, பில்டப்பூ தாரேன்!

நம்பி நீயும் போட்டா..
யம்மா, மீதி வழி போறேன்!

மத்ததை மறந்து, போடணும் எனக்கு..
உங்கண்ணன் கணக்கு, மொத்தமும் உனக்கு!

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

குத்து குத்து.. ஓட்டாலே..
நான் எட்டி பிடிப்பேன்..டோட்டலே..

காலி தொகுதி..மீதி தொகுதி..
சேதி ஒண்ணு கேளு!
உன்ன ஓட்டு கேக்க தேடி வரும்
நாளு எந்த நாளு?

ஒரு பேரே வரலாறு!

A pani poori couple chatting in the garden

கோல்கப்பா : என்ன குமாரி, ஆட்சி மாறுனா காட்சி மாறும்ன்னு பாத்தா இந்த மாதிரி நடக்குது?

பூரி குமாரி : காட்சி மாறலீங்க! சாரை சாரையா கட்சி மாறுறதுதான் நடக்குது!

கோல்கப்பா : ஹம்ம்..இது not good-ka!

பூரி குமாரி : ஆமாம் bro, இது very wrong bro!

கோல்கப்பா : தொடவும் மாட்டோம், தொட்டவுங்களையும் விட மாட்டோம்னு கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு வீர வசனம் ஒலிச்சுதே, நீ கேட்டியா அதை?

பூரி குமாரி : ஒலிச்சு என்ன பிரயோஜனம் கோல். பலிச்சிருந்தா பாராட்டலாம். பல்லிளிச்சா என்ன சொல்றது?

கோல்கப்பா : புதுசா வந்தவருன்னு பாக்காம, மக்கள் boss பொறுப்பை குடுத்து, கோட்டைக்கு அனுப்பி இருக்காங்க, ஆனா பொது சுகாதாரத்துல விளையாடுனவருக்கு green pass குடுத்து கட்சிக்குள்ள சேத்தத எந்த வகையில நியாயப்படுத்த போறாங்கன்னு தெரியல?

பூரி குமாரி : எனக்கென்னமோ, மக்கள் சக்தி மட்டும் தான் தூய சக்தின்னு சொல்லிக்குற அருகதை இருக்குற ஒரே சக்தியா படுது! அந்த தூய சக்தி, ஆட்சியாளர்கள் பின்னால பெருந்திரளா போனதாலதான், இந்த வெற்றி அவங்களுக்கு கை கூடி இருக்கு. ஆனா, ஆட்சியை தக்க வெச்சுக்க, ஒரு சில இடங்கள் மட்டுமே குறையுற நெலமையுல, இப்படி குற்ற பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பது எனக்கு ஒரு குறளை நினைவுபடுத்துகிறது கோல்.

கோல்கப்பா : என்ன குறள் குமாரி?

பூரி குமாரி : நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

இதன் பொருள் என்னன்னா, “ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை”.

கோல்கப்பா : அருமை குமாரி. பல விஷயங்களில் மாற்றம் என்பதை முன்னெடும் இந்த அரசுக்கு, குற்ற பின்புலம் இருப்பவர்களை அரவணைத்து செல்லும் இந்த போக்கு, ஒரு மிக பெரிய சறுக்கல் தான் குமாரி.

பூரி குமாரி : ஆமாம் கோல். இதை தான் வள்ளுவர் “இறைமாட்சி” அதிகாரத்தில், ஒரு அரசன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டிருக்க வேண்டும், எவ்வாறு நீதி, அறிவு, துணிவு, குடிமக்கள் நலம் ஆகியவற்றைப் பேண வேண்டும் என்பதைக் கூறுகிறார்.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு

இந்த குறளுக்கு, “அரசநெறியிலிருந்தும் வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டை விட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்” என புலியூர் கேசிகன் அவர்களின் உரை கூறுகிறது.

கோல்கப்பா : “தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் ” என வாழ்த்துரை சொல்லி இவர்களை சேர்க்கும் அளவிற்க்கா இவர்களின் உழைப்பு இருந்திருக்கிறது? மாசற்ற சக்தியாக புதியவர்கள் வந்திருக்கிறார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு இவர்கள் கொடுக்கும் கூலி இது தானா குமாரி?

பூரி குமாரி : பொருத்தமாக சொன்னீர்கள் கோல். எதிரியும் எதிரியும் சேர்ந்து ‘புடலங்கா” கூட்டணி அமைக்கிறார்கள் என ஒரு மாண்புமிகு சொல்லி இருக்கிறாரே, கவனித்தீர்களா கோல்?

கோல்கப்பா : அவங்க புடலங்கா கூட்டணி அமைச்சா,அதை மக்கள் பாத்துக்குவாங்க! இவங்க தடபுடலா குட்காமேன கட்சில சேத்ததுக்கு தான் பதில் சொல்லணும் குமாரி.

பூரி குமாரி : “தேர்தல் அரசியல் தெரிந்த ஆட்கள் தேவை” என்பதால் தான் சேர்த்தோம் என சொல்கிறார்களே கோல்?

கோல்கப்பா : தேர்தல் அரசியல் தெரிந்த ஆட்களுக்கு, டாட்டா சொல்லி அனுப்பியதும் இதே மக்கள் தான் என்பதை எவ்வளவு சவுகரியமாக மறந்து விட்டார்கள் பார்த்தியாடி?

பூரி குமாரி : முலாம் பூசிய வார்த்தைகளை, காலம் எப்போதும் குறித்து வைத்துக் கொள்ளும் கோல்.

கோல்கப்பா : “ஒரு பேரே வரலாறு” என்ற தலைவரின் கனவை மெய்ப்பித்த மக்களுக்கு, கட்சியில் சேர வருபவர்களின் வரலாறையும், அவர் கொஞ்சம் ஆராய்ந்து சேர்த்துக் கொள்வது தான் தக்க கைமாறாக இருக்க முடியும் குமாரி.

பூரி குமாரி : முத்தாய்ப்பாக ஒரு கருத்தை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் கோல். மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். Bye.

ஒரு ஜோக் சொல்ட்டா சார்!

பூரி குமாரி : இந்தாங்க கோல், பேஸ்ட், ப்ரஷ்.

பூரி குமாரி : இந்தாங்க காபி.

பூரி குமாரி : இந்தாங்க டிபன்.

பூரி குமாரி : இந்தாங்க கை தொடைக்க டவல்.

கோல்கப்பா : ஏண்டி, நா ஹால்ல இருக்கேன், நீ ரூம்ல போய் ஒண்ணுமே பண்ணாம வேலைய மட்டும் செய்த மாதிரி பேசிகிட்டு இருக்க?

பூரி குமாரி : நீங்க ஏவாமயே வேல பாக்கறதுன்னு எப்படின்னு பிராக்ட்டிஸ் பண்றேன் கோல்!

கோல்கப்பா : ஹிஹிஹி, லொள்ளுடி உனக்கு!


பூரி குமாரி : ஆளும் கட்சிக்கு எது குடைச்சல்?

கோல்கப்பா : GF – Girl friend!

பூரி குமாரி : கூட்டணி கட்சிகளுக்கு என்ன இக்கட்டு?

கோல்கப்பா : TF – Trust factor இல்லாதது!

பூரி குமாரி : எதிர்க்கட்சிகளுக்கு என்ன பயம்?

கோல்கப்பா : PF – Party fund வாங்குனது!

பூரி குமாரி : மக்களுக்கு வேண்டியது என்ன?

கோல்கப்பா : RF – Real facts!


பூரி குமாரி : நம்ம மந்திரி B.Eல டாக்டர் பட்டம் வாங்குன gold medalistம் கோல்.

கோல்கப்பா : B.Eல டாக்டர் பட்டமா? என்னடி சொல்ற?

பூரி குமாரி : ஹிஹிஹி, B.Eன்னா “Boosted Estimate” கோல். அதுலதான் gold medalistம் கோல்.


பூரி குமாரி : ஏங்க, போற போக்க பாத்தா photo synthesis நடக்கும் போல இருக்கு?

கோல்கப்பா : என்னடி சொல்ற?

பூரி குமாரி : சூரியன் இலைய பாக்க, இலை பூவ மலர வெக்க, புது கூட்டணி வரும் போல இருக்குங்க.

கோல்கப்பா : பங்காளிங்க ரெண்டு பெரும் நோட்டு சேர்த்த கோஷ்டி, ஜி ஆளுங்க நோட்டா கூட போட்டி போட்ட கோஷ்டி! நடக்குமா கத?

பூரி குமாரி : யாரு யாரோட சேந்தாலும், ஜனங்களுக்கு நல்லது செய்யணும்னுங்கிற mottoல வந்தா மட்டும் தான் photo synthesis வேலைக்கு ஆகும் கோல்!


பூரி குமாரி : அறிவாலயத்தை செங்கல் செங்கலா உருவிறுவேன்னு ஒரு போலீஸ்கார் சொன்னாரே? இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு கோல்?

கோல்கப்பா : கமலாலயத்தை செங்கல் செங்கலா உருவிகிட்டு இருக்காரு டார்லிங்!

பூரி குமாரி : உருவுற செங்கலயெல்லாம் வெச்சு என்ன பண்ண போறாராம்?

கோல்கப்பா : Scratchலேர்ந்து ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க போறாராம், அன்பே.

பூரி குமாரி : watchக்கு bill கேட்டா, கோச்சுக்கினு போனவர் தானே அவரு ?

கோல்கப்பா : ஹிஹிஹி, விமானத்தை இயக்குற பாக்யம் எல்லார்க்குக்கும் கிடைக்குமா sweety? எதுக்காக சொல்றேன்னா, அதுக்காக சொல்றேன்…

கொஞ்சல்ஸ் ..ஏஞ்சல்ஸ்!

A candid conversation between pani poori couples

பூரி குமாரி : என்ன கோல்கப்பா, நம்பளை ரொம்ப நாளா காணோம்?

கோல்கப்பா குழப்பமாக பார்க்கிறார்.

கோல்கப்பா : என்னடி சொல்ற? நம்பளை காணோம்னு நம்பளே எப்புடிடீ கேக்க முடியும்?

பூரி குமாரி : ஹிஹிஹி, அப்பாவை காணோம்னு, கணவனை காணோம்னு சொல்றதுதான் இன்னிக்கு ட்ரெண்டிங்க்ல இருக்கு!

கோல்கப்பா : ஓ, நீ சட்டசபை லைவ் பாத்துட்டு தான் என்னை மொக்க பண்றியா?

பூரி குமாரி : ஆமாம் கோல், எப்படியோ லைவ் கட்டாகுற பிரச்சினை ஓஞ்சு முடிஞ்சிருக்கு.

கோல்கப்பா : லைவ் கட் பண்றது தவறான செயல் இல்லையா குமாரி?

பூரி குமாரி : தவறான செயல்னு மட்டும் சொன்னா பத்தாது கோல். தவறான, உண்மைக்கு புறம்பான செயல்னு நீட்டி முழக்கி சொல்லுங்க!

கோல்கப்பா : உன்ன பாத்து நா எப்புடிடீ எதிர் கட்சி languageல பேசுறது?

பூரி குமாரி : நா உங்க தாரமா இருந்தாலும், ஆதாரம் இருந்தா தைரியமா சொல்லுங்க கோல்!

கோல்கப்பாவுக்கு வேர்த்து ஊத்துகிறது.

கோல்கப்பா : இந்த fan காத்து எனக்கு பத்தலை, AC வாங்கலாமா? நல்ல brandஆ சொல்லுடி.

பூரி குமாரி : Carrier brand வாங்கலாம் கோல்.

கோல்கப்பா : இந்த வார்த்தைய எங்கயோ கேட்டிருக்கனே?

பூரி குமாரி : careerன் உச்சம், டிபன் கேரியர், பியூஸ் கேரியர் theme தான் ஒரு மாசமா ஓடிக்கிட்டு இருக்கு நாட்டுல!

கோல்கப்பா : ஹ்ம்ம், ஏண்டி என்னை பீதியிலயே வெச்சிருக்கன்னு, உன்கிட்ட நா சொல்லிக்க விரும்புறேன்?

பூரி குமாரி : ஹாஹாஹா, ஏங்க எம்மேல பொத்தாம் பொதுவா ஒரு அவதூற சொல்றீங்க? என்னோட எந்த செயல் உங்கள டென்ஷாக்குச்சுன்னு தெளிவா சொல்லுங்க.

கோல்கப்பா : எனக்கு ஏண்டி ஆயிரம் ரூபா gpay பண்ணிட்டு, “for party fund”ன்னு மெசேஜ் அனுப்புன?

பூரி குமாரி : உங்ககூட பார்க் SOFAல உக்காந்து கதை பேசுவாரே ஒருத்தரு, அவருக்கு இன்னைக்கு birthdayன்னு சொன்னீங்கள்ல? அதான் அனுப்பிச்சேன்.

கோல்கப்பா : எந்த ஊர்லடீ பார்க்குல SOFA போட்டுருக்காங்க?

பூரி குமாரி : SOFAவோ, பெஞ்சோ, எதுவா இருந்தா என்ன? உங்க கோஷ்டி எப்பவும் Systematically Off From Activity மோட்ல தான இருக்கும், அதைத்தான் சொன்னேன். போயிட்டு வாங்க கோல்.

கோல்கப்பா : ஏன் சில தவறான வார்த்தைகளை சொல்ற குமாரி?

பூரி குமாரி : ப்ச்ச்..வெறும் தவறான மட்டும் use பண்ணாதீங்க கோல். அது கூட ஆதாரமில்லாத, பிழையான, போலியான போன்ற வார்த்தைகளை சேர்த்து strongஆ சொல்லுங்க!

கோல்கப்பா : என்னடி சொல்ற? உன்மேல நா complaint சொல்றதுக்கு கூட template தர்ற?

பூரி குமாரி : ஹிஹிஹி, நான் தான் beginningலயே, initial stageலயே உங்களுக்கு சொல்லிட்டேன்ல?

கோல்கப்பா : நிறுத்து, நிறுத்து , நிறுத்து…இந்த phrase எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே?

பூரி குமாரி : அது எங்க கேட்டதுன்னு மக்களுக்கே நல்லா தெரியும், அது நா சொல்லி தெரிய வேண்டியதில்லை!

கோல்கப்பா : ஓ…ஓ.. என்னடி ஆளும் கட்சி languageக்கு டக்குன்னு தாவிட்ட?

பூரி குமாரி : பார்ட்டிக்கு லேட் ஆகுது கோல், கிளம்புங்க.

கோல்கப்பா : என்ன இப்போ போங்கன்னு சொல்லிட்டு, அப்புறம் நான் தான் அனுப்பி வெச்சேன், நான் தான் அனுப்பி வெச்சேன்னு நீ பொங்க கூடாது!

பூரி குமாரி சரோஜா தேவி குரலில் சொல்கிறார்.

பூரி குமாரி : உங்களை தடுக்க நான் யார் கப்பா, கோல்கப்பா? இது உங்கள் உரிமை, நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் பார்ட்டி பண்ணலாம். இது நீங்க சுயேச்சையா எடுக்குற முடிவு கப்பா.. கோல்கப்பா…இதை தடுக்க நான் யார்?

கோல்கப்பா : உன் தமிழ்ல தீய வெக்க! அது சுயேச்சையா இல்ல, சுயமா! பார்ட்டிக்கு போக மனைவி கணவன் கிட்ட permission கேக்குறது தான் மரபு. இப்போ அது மீறப்பட்டு இருக்கு?

பூரி குமாரி : வீட்டு பொறுப்பை சுமப்பதுல எனக்கு பெரும் பங்கு குடுக்குற உங்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தில் சம பங்கு குடுக்க ஏன் மனசு வரல? மரபு, மரபுன்னு ஏன் ரப்பர் தோட்ட கோஷ்டி மாதிரி கூவாதீங்க கோல்?

கோல்கப்பா : ரப்பர் தோட்ட கோஷ்டி யாருடி?

பூரி குமாரி : நம்ம தற்போதய எதிர்கட்சியை கவிஞர் அப்படிதான் சொல்கிறார் கோல்! ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதில்லைன்னு ஒரு பன்சை போட்டிருக்கார்!

கோல்கப்பா : குசும்புடி அவருக்கு. உச்சியிலேர்ந்து வேர் வரை ரப்பர் மரத்துல வெட்டு இருக்கும். அது மாதிரி எதிர்கட்சியோட தோல்வி இருக்குனு சொல்ல வரார் போல. சரி நா பார்ட்டிக்கு போகட்டுமா? வேணாமா?

பூரி குமாரி : பார்ட்டிக்கு போக என் கிட்ட எதுக்கு கோல் NOC கேக்குறீங்க?

கோல்கப்பா : நானே ஒரு OC கேஸு! என்ன எதுக்குடி NOC மேட்டர்ல கோத்து விடுற?

பூரி குமாரி : சும்மா ஒரு funக்கு தான் கோல். Evil..Devilன்னு அவங்க சபைல rhyminga பேசும்போது நா சொல்ல கூடாதா.. மக்களே, இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா, உங்க கொஞ்சல்ஸ் ..ஏஞ்சல்ஸ் கோஷ்டிக்கு ஷேர் பண்ணுங்க. Bye!

Post-Election Shakes & Handshakes!

An artistic arrangement of horse-themed playing cards placed on a table. The top row features carousel horses, the middle row shows racing horses, the third row depicts traditional Poikkal Kuthirai folk-art horses, and the bottom row displays black-and-white chess knight horses symbolizing dual political loyalties and shifting alliances. A deck of cards lies to the side, with Tamil text at the top reading “Perplexing Horses.”

கோல்கப்பா : என்ன குமாரி, தேர்தல் முடிந்து புது ஆட்சி அமைந்து இருக்கிறது! இதை எப்படி பார்க்கிறாய்?

பூரிகுமாரி : விசுவாவசு ஆண்டு முடிந்து, அடுத்ததாக பராபவ ஆண்டு கோலாகலமாக தொடங்கியிருக்கிறது கோல்..

கோல்கப்பா : ஹ்ம்ம்..புது வருஷம் ஆரம்பிச்சி ஒரு மாசத்துக்கு மேல ஆகுது..இப்போ என்னடி விசுவாசம் முடிஞ்சி போச்சின்னு சொல்ற?

பூரிகுமாரி : ஹிஹிஹி..அது விசுவாவசு கோல்..நியூஸ் அதிகமா பாத்ததால உங்களுக்கு ஊர் உலகத்துல யாரும் விசுவாசத்தோட இல்லென்ற மாதிரியே நெனைக்குறீங்க..

கோல்கப்பா : என்னமா போ..பராபவ வருஷ சித்திரையில் வந்த தேர்தல் முடிவுகள், பலரோட நித்திரையை கெடுத்திருக்குன்னு தான் சொல்லணும்.

பூரிகுமாரி : ஆமா கோல், கூடவே பல பேரோட முகத்திரையையும் சேத்து கிழிச்சிருக்கு!

கோல்கப்பா : “வைபவத்தில் வாழ்ந்தோர், பராபவத்தில் வீழ்ந்தார்ன்னு” விதி இருக்கும் போல.

பூரிகுமாரி : எவ்வளவு நிகழ்வுகள், எவ்வளவு மாற்றங்கள் இந்த மே மாதத்தில் மட்டும், கோல் ?

கோல்கப்பா : சரித்திரத்தில் முக்கியமான மே மாதம் இது. இந்த கோடை காலம், அரசியலுக்கு புதியவரை கோட்டைக்கு அனுப்பியும், பழம் தின்று கொட்டை போட்டவர்களை வேட்டையாடியும் பதம் பார்த்திருக்கிறது.

பூரிகுமாரி : உண்மை தான் கோல். குதிரை பேர அரசியல் என எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டையும் , குதிரை வேக அரசு இது என ஆளுங்கட்சியின் தற்புகழ்ச்சியையும் என்னவென்று சொல்வது கோல்?

(காக்க காக்க திரைப்படத்தில் வரும் “ஒன்றா ரெண்டா ஆசைகள்” பாடலை முணு முணுக்கிறார் கோல்)

கோல்கப்பா : ஒன்றா ரெண்டா குதிரைகள்,
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?
அன்பே பதவி கேட்கலாம், கட்சி
தாண்டினால் பதவியும் நிலைக்குமா?

(பூரி குமாரி பாடலை தொடர்கிறாள் )

பூரிகுமாரி : பேரத்துக்கு call வந்தாலே,
என் மனசில் மழையடிக்கும்!
மிகப்பிடித்த துறை ஒன்றை,உதடுகளும்
முணுமுணுக்கும்!

கோல்கப்பா : ஹிஹிஹி..கள்ளி, அப்படியே tuneஅ புடிச்சிட்ட.

பூரிகுமாரி : ஆட்சியை காக்க ஒரு தரப்பும், தங்கள் அரசியல் எதிரியை சாய்க்க மறுதரப்பும் மும்முரமாக இருக்கிறார்கள் கோல்.

கோல்கப்பா : இருக்காதா பின்னே..டப்பு என்ஜினும், டபுள் என்ஜினும் ஜிங்கிள்ஸ் மிங்கிள்ஸ் ஆகுற அளவுக்கு போய் இருக்காங்கன்னா பாத்துக்க!

பூரிகுமாரி : ஹிஹிஹி..வெளில குதிரை பேரம்ன்னு ஆளு தரப்பை விமர்சனம் பண்ணிகிட்டே, மறைமுகமா ரெண்டு பெரிய குதிரை லாயமும், ஆதாயம் தேட பாத்திருக்காங்க!

(கோல்கப்பா பாடலை தொடர்கிறார்)

கோல்கப்பா : பீதியிலே போராடும்,
சூரியனை நான் கண்டேன்!
போர்வைகளின் பின்னாலே,
யார் இருப்பாரென நான் கண்டேன்!

பூரிகுமாரி : வாவ், கோல்! அட்டகாசம் போங்க…செம ரொமான்டிக் சாங்க, எப்படி புடிச்சீங்க கோல்?

(கோல்கப்பா முத்தமிழ் அறிஞர் குரலில் சொல்கிறார்)

கோல்கப்பா : அரசியலிலே Alliance என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. Romance என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்!

பூரிகுமாரி : ஹிஹிஹி, அல்டிமேட் பன்ச் கோல்.நம்மளோட இந்த குதிரைங்க போஸ்டருக்கு இதுக்கு மேல லீடு குடுக்க முடியாது! நம்ம வாசகர்களுக்கு ஒவ்வொரு குதிரையை பத்தியும் சொல்லுவோம் கோல்.

கோல்கப்பா : மொதல்ல Merry go round குதிரைங்க. கடந்த அறுபது வருஷமா நம்ம மாநில அரசியல் இரு துருவங்களுக்கு நடுவே சுழன்றுகொண்டே இருக்கும் closed loop ஆகத்தான் இருந்தது. அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை ஒரு கட்சி மேல ஏறும், இன்னொன்னு கீழ இறங்கும். அதனால ஆட்சி சக்கரமும் இவங்களை மட்டுமே மையமா வெச்சி சுற்றிக் கொண்டே இருந்தது.

பூரிகுமாரி : கரெக்ட். இந்த ரெண்டு கட்சிக்கு மட்டும் தான் பந்தயம்ன்னு ஒரு நிலை இருந்தது. வெற்றிக்கோப்பையை நோக்கி வெறித்தனமாக விரையும் குதிரைகள் இவர்கள். புழுதியை பறக்கவிட்டு புயலாய் களப்பணியாற்றி, இறுதி வரை போராடி, கடைசி பாய்ச்சலில் கிரீடம் சூடிய வரலாறும் இவர்களுக்கு உண்டு. பந்தயத்தில் ஜாக்கி பெயர் வாங்கலாம், ஆனால் குதிரையை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது என்னவோ அமைதியாக உழைத்த களப்பணியாளர்கள் தான்! இந்த குதிரைக்கு சக்தி தந்தது கிராமம் தோறும் ஓடிய தொண்டர்களின் கால்கள் தான்!

கோல்கப்பா : அருமையாய் சென்னாய் குமாரி. இப்படி பல்லாண்டுகளாக மாறி மாறி ஆட்சி நடத்தியவர்கள், இன்று ஆரம்பித்து மூன்றே வருடம் ஆன கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதனை “பொய்க்கால் குதிரை” என விமர்சிக்கிறார்கள்.

பூரிகுமாரி : ஆமாம் கோல், நானும் அந்த விமர்சனத்தை பார்த்தேன். முதலில் இந்த கலை வடிவத்தை எதிர்மறை அடையாளமாக பார்ப்பதையே நாம் கடுமையாக கண்டிக்க வேண்டும் கோல்.

கோல்கப்பா : சரியாய் சென்னாய் குமாரி. மரக்கால்களில் நிற்பது எளிதல்ல. தடுமாறாமல் தாளத்தோடு நகர்வது அதைவிட கடினம்! குதிரை வேடம் அணிந்து அதற்கு உயிர் கொடுக்கும் அசைவுகளோடு ஆட அர்ப்பணிப்பும் வேண்டும். விழுந்துவிடும் அபாயம் இருந்தும், சிரித்தபடியே ஆடி மக்களை மகிழ்விப்பதே இந்தக் கலையின் தனிச்சிறப்பு!

பூரிகுமாரி : இப்பேற்பட்ட சிறப்பு மிக்க கலையை, போகிற போக்கில் தவறான உதாரணமாக சொன்னால் எப்படி கோல்?

கோல்கப்பா : இன்னொன்றும் சொல்கிறேன் கேள்.

காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடல்

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட இந்த வரிகள் மரக்கால் கூத்து பற்றியது. இதுவே பிற்காலத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமாக வடிவம் பெற்றது என்ற கருத்தும் உண்டு குமாரி.

பூரிகுமாரி : தானே நிரந்தரம் என கருதியவர்கள், இன்று அந்தரத்தில் தொங்குவதால் என்ன பேசுகிறோம் என தெரியாமல் இந்த மாதிரி பேசுவது தான் கவலையாக இருக்கிறது கோல்.

கோல்கப்பா : ஹ்ம்ம்..இப்போது நடக்கும் அரசியல் சதுரங்கம் மிகுந்த ஆபத்தாக இருக்கிறது குமாரி?

பூரிகுமாரி : ஏன் அப்படி சொல்கிறீர்கள், கோல்?

கோல்கப்பா : சில குதிரைகள் கருப்பாகவும் இல்லாமல், வெள்ளையாகவும் இல்லாமல் ஆட்டத்தில் இருக்கின்றன! யார்னு சொல்லு பாக்கலாம்?

பூரிகுமாரி : ஹ்ம்ம்..ஆட்சிக்கு ஆதரவு தரும் சில கூட்டணி கட்சிகள், சரியா கோல்?

கோல்கப்பா : மிக சரியாய் சொன்னாய் குமாரி. ஒரு பக்கம் இருந்து பார்த்தால் கருப்பு, இன்னொரு பக்கம் இருந்து பார்த்தால் வெள்ளை! அதனால் ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் இவர்களை தங்களுடைய குதிரை என்றே நம்புகின்றனர்.

பூரிகுமாரி : ஆளும் கட்சிக்கு கூட்டாளி போலவும், எதிர்க்கட்சிக்கு பழையபடியே நண்பன் போலவும் இருக்கிறார்கள். இன்றைய தேதியில் இவர்களின் விசுவாசம் யாருக்கு என்பதே புரியாத புதிராக இருக்கிறது கோல்! மக்களே, தேர்தல் முடிந்து மூன்று வார காலத்தில் நடந்த நிகழ்வுகளை பற்றிய எங்களின் பார்வை இது. பிடித்திருந்தால், இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி!

Breaking news!

Madurai constituency DMK leader PTR

பூரி குமாரி : என்ன கோல், மல்லிப்பூ மேன் ஷார்ட் ப்ரேக்குல போறேன்னு பொசுக்குன்னு சொல்லிட்டாரு!

கோல்கப்பா : Reality show விளம்பர இடைவேளையா இது? Ground reality களேபர ஷாக் தான்,வேறென்ன?

பூரி குமாரி : எனக்கென்னமோ வருத்தம் தான். இவரு எப்போ இந்த முடிவை எடுத்திருப்பாரு கோல்?

கோல்கப்பா : ஹிஹிஹி, எப்போ உங்களுக்கு 35% ஓட்டுதான் வந்திருக்கு, மீதி 65% மக்கள் உங்களுக்கு எதிரா ஓட்டு போட்டுருக்காங்கனு அவரு கட்சிக்காரங்க ஆளுங்கட்சியை பாத்து பேச ஆரம்பிச்சாங்களோ, அப்போவே Data மேன் டாட்டா சொல்லிட்டு போறதுன்னு முடிவு பண்ணி இருப்பார்.

பூரி குமாரி : வாஸ்தவம் தான் கோல். நிதர்சனத்தை ஏத்துக்காம, ஊருசனத்தை மடை மாத்துற வேலைதான் நடக்குது. என்னத்த சொல்ல?

கோல்கப்பா : நீ ஏண்டி அவருக்கு ஈடா மூக்கை சிந்துற? national லெவல்ல அவரை தூக்கி புடிச்ச கட்சி, இன்னிக்கு distressல இருக்கு..கொள்கை விளக்கை தேய்ச்சி ஒளியேத்த வேணாமா?

பூரி குமாரி : ஒளியேத்தறத விடுங்க. அவரையே மறைமுகமா வெளியேத்தியே எவ்ளோ நாள் ஆச்சு..

கோல்கப்பா : ஹ்ம்ம்..expatriate நான்னு ஜம்பம் அடிச்சிவரு, அவரு party expiry ஆனதால அவங்களோட affiliate போதும்ன்னு நெனச்சிட்டார் போல!

பூரி குமாரி : ஹிஹிஹி, அவரு எப்பவும் rationalஆ decision எடுக்குறவர் கோல்!

கோல்கப்பா : என்னது, முத்தமிழ் அறிஞர் தான் inspirationன்னு சொல்லிட்டு, migrationல வந்து பத்து வருஷமா பொது வாழ்க்கைல இருந்துட்டு, இன்னைக்கு frustrationல இப்படி ஒரு முடிவு எடுத்திறதா rational decision?

பூரி குமாரி : ஹிஹிஹி, ஆயிரம் ரூபா குடுத்தோம்னு பெருமை பேசுறவங்களுக்கு ரெண்டாயிரம் வருஷம் முன்னாடியே வள்ளுவ பெருந்தகை வகையா இந்த குறளை எழுதி வெச்சிட்டு போய் இருக்காரு கோல் ..

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.

கோல்கப்பா : இதுக்கு அர்த்தம் என்னடி?

பூரி குமாரி : இந்த குறளுக்கு பெருமதிப்பிற்குரிய சாலமன் பாப்பையா அவர்கள் எழுதிய இந்த குறள் விளக்கம் இது தான்.

தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.”

கோல்கப்பா : பரம்பரை பெருமையை தூக்கி புடிச்சி பேசினவருக்கு நச்ன்னு பொருந்துற குறள் இது. நாலு பக்க லெட்டர் எழுதுறத்துக்கு முன்னாடி இந்த ரெண்டடி குறளை ஒரு முறை படித்திருந்தால் அவர் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம் குமாரி..அது சரி, இதற்கு முத்தமிழ் அறிஞர் எழுதிய விளக்கம் என்ன?

பூரி குமாரி : “போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.”

கோல்கப்பா : ஹ்ம்ம். இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா இவர் குறளையும் படிக்கல. அவங்க ஊர்க்காரர் பாப்பையா அவர்கள் எழுதிய விளக்கத்தையும் படிக்கல..அவங்க கட்சி தலைவர் அதுக்கு குடுத்த விளக்கத்தையும் படிக்கலேன்னு..

பூரி குமாரி : அவரை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை கோல். “நிலை மக்கள் சால உடைத்து எனினும்” என்ற குறள் வேண்டுமானால் அவர் முடிவுக்கு காரணமாய் இருக்கலாம்…

கோல்கப்பா : அது என்னடி குறள்?

பூரி குமாரி : புக்க எடுத்து படிச்சி பாருங்க கோல். நாளைக்கு நீங்களே வந்து இன்னும் பத்து குறளை எடுத்துக்காட்டா சொல்லுவீங்க..

கோல்கப்பா : அருமை குமாரி! மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி!