சிறப்பு சிறுகதை – அங்கன்வாடி அரிமாக்கள் – part 2/4

Anganwaadi claaroom

ஒரு காட்டுல, ஒரு குட்டி யானை இருந்தது. அதோட பெரு ரங்கு.

அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் ரங்கு ரொம்ப செல்லம்.

ரங்கு கேட்ட எல்லாம் அதுக்கு கிடைக்கும். நல்ல நல்ல பழங்கள், கரும்பு, கிழங்கு வகைகள்னு அவங்க அப்பா அதுக்கு தேடி தேடி கொண்டு வந்து கொடுப்பாரு.

அவங்க அம்மா ரங்குவோட நல்லா வெளையாடுவாங்க. ரெண்டு பேரும் ஆத்துக்கு போய் தண்ணில ஆட்டம் போடுவாங்க. அப்புறம் அந்த ஆத்தங்கரைல படுத்து கதை பேசி பொழுது போக்குவாங்க.

ஒரு நாள் ரங்கு அவங்க அப்பா அம்மாவோட, காட்டுக்குள்ள ஒரு ட்ரிப் போச்சு.

மத்த அனிமல்ஸ மீட் பண்ணி பேசிகிட்டு இருந்தது. அப்போ அங்க சிங்க ராஜா வந்ததும் எல்லாரும் எழுந்து நின்னு அவருக்கு வணக்கம் சொன்னாங்க.

சிங்க ராஜாவும் தலையை ஆட்டிட்டு அவங்களை கடந்து போய்ட்டாரு. ரங்கு அவங்க அம்மாகிட்ட கேட்டுது “ஏம்மா இவரு மட்டும் ராஜாவா இருக்காரு?”

பார்ட்டி மோடில் இருந்த ரங்குவின் அம்மாவுக்கு இந்த நொய் நொய் கேள்விகள் எரிச்சலாக இருந்தது.

“சிங்கம் தாண்டா எப்பவும் காட்டுக்கு ராஜா, அவர்தான் பவர்புல்” என பொதுவாக சொல்லியது.

ரங்குவுக்கு ஆர்வம் அடங்கவில்லை. அங்கே இருந்த குட்டி குரங்கு சைமனிடம் போய் விளக்கம் கேட்டது.

A candid conversation between animals

மரக் கிளையில் தலை கீழாக தொங்கிக்கொண்டிருந்த அது, ரங்குவுக்கு அற்புதமான ஒரு பதிலை சொன்னது.

“நம்ம தல செம பாஸ்ட்டா ஓடும். அவரை யாரும் பீட் பண்ண முடியாது” என ஊசலாடியபடியே சொன்னது.

ராஜாவாகும் கனவில் இருந்த ரங்குவுக்கு அது பேரிடியான பதில்.

தன்னால் எக்காலத்திலும் ராஜாவாக முடியாது என வருந்தியது. ட்ரிப்பில் இருந்து வாலண்டரியாக ட்ராப் ஆகி போய் மரத்தடியில் படுத்துக் கொண்டது.

சிங்க ராஜா மாதிரி ஓட என்ன வேண்டும் என யோசித்தது. தன்னுடைய எடை தான் முதல் தடை என எண்ணியது.

எப்படியாவது வெயிட் லாஸ் செய்து ஸ்லிம்மாகி வேகமாக ஓடி, காட்டுக்கே ராஜாவாகி காட்ட வேண்டும் என முடிவு செய்தது.

அன்றிலிருந்து அதன் உணவை பெருமளவு குறைக்க ஆரம்பித்தது. நீண்ட தூரம் நடந்தும், ஓடியும் பயிற்சி செய்தது. அதன் விளைவாக சில நாட்களில் அது அதீத பலவீனமாக உணர்ந்தது.

ரங்குவின் பெற்றோர் அதை கூப்பிட்டு பேசினார்கள்.

“இங்க பாரு ரங்கு, கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி படைச்சிருக்கார். சிங்க ராஜா ஓடுவார். ஆனா அவரால ஓரளவுக்கு மேல வெய்ட் தூக்க முடியாது. ஆனா நம்மால முடியும். அதனால நம்ம பிறவிகேத்த இயல்பிலிருந்து நம்ம மாற நெனச்சா, அது பலன் கொடுக்காது. நீ உன்னோட பலத்தை நம்பு, அதில் முன்னேற முயற்சி செய்” என்றார்கள்.

“அப்போ அது ராஜா கனவு கண்டது என்ன ஆச்சு?” என ஆஷாதேவி உஷாராக கேட்டது.

ரங்குவே சமாதானம் ஆனாலும் ஆஷாதேவி தேடி போய் கொளுத்தி போடும் மூடில் இருந்தது.

“இன்னும் இருக்கு கேளுங்க” என தொடர்ந்தாள் தாரா.

அப்பா சொன்ன பேச்சை கேட்டாலும், ரங்கு ஏமாற்றமாக உணர்ந்தது. அடுத்த நாள் ரங்குவின் அம்மா அதை கூட்டிக் கொண்டு தோட்டத்துப் பக்கம் நடந்தார். 

“இங்க பாரு தங்கப்பா, ராஜான்னு யாரும் தன்னை தானே சொல்லிக்க முடியாது. அதை மக்கள் சொல்லணும். மக்களுக்கு வேண்டியதை, அவங்க கஷ்டத்தை, அவங்க வாய் விட்டு சொல்லாமலேயே ஒரு மன்னன் தீர்க்கணும். இல்லேன்னா நம்ம சிங்க ராஜ மாதிரி நம்ம பாதுகாப்பை உறுதி செய்யணும். பலத்தை காட்டுறதோ, வேகமா ஓடுறதோ ராஜாவுக்கான தகுதி இல்லை” என மெதுவாக சொல்லி ரங்குவுக்கு புரிய வைத்தது.

“நீ இப்போ குட்டி பையன். நீ நல்ல குணங்களோட வளர்ந்து, இந்த காட்டுல இருக்குறவங்களுக்கு பொறுப்பா உதவி செய்தீன்னா, அவங்களே உன்னை உயர்வா நடத்துவாங்க” என சொன்னது.

“சரிம்மா, புரிஞ்சுக்கிட்டேன். என் பலத்தை எப்படி நான் மெருகேத்துறது?” என ஆர்வமாக கேட்டது.

“நா சொல்றபடி கேளு” என சொன்னது அம்மா.

அன்று சில புற்களை ஒன்று திரட்டி, அந்த புல்கட்டை ரங்குவின் தும்பிக்கையால் தூக்க வைத்தது.

பிறகு சிறு கட்டைகள். அதன் பிறகு கரும்பு கட்டு. தொடர்ந்து வாழை கட்டுகள்.

மறுபுறம் தினமும் நீச்சல் பயிற்சி. ரங்கு வயதிலும் திறனிலும் வளர்ந்து பெரிய மர கட்டைகளை அநாவசியமாக தூக்கும் அளவிற்கு முன்னேறியது.

வருடங்கள் ஆனது. சிங்க ராஜாவுக்கும் வயதானது. அவர் உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது.

காட்டில் ஒரு கவலை கண்ணுக்கு தெரியாமல் படர ஆரம்பித்தது. அந்த வருடம் கடும் மழை. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லாரும் எப்படியாடுவது சிங்கத்தை காப்பாற்ற வேண்டும் என கடவுளை வேண்ட ஆரம்பித்தார்கள்.

ஆஷாதேவி கைகூப்பி முதல் ஆளாக கண் மூடி பிரார்த்தனையை ஆரம்பித்தது. லைனாக மற்றவர்களும் பிரேயர் மோடுக்கு போனார்கள்.

ரங்குவும் அதன் நண்பர்களும் எப்படியாவது சிங்க ராஜாவுக்கு வைத்தியம் செய்ய முடிவெடுத்தார்கள்.

ஒருநாள் சைமன் வந்து ரங்குவிடம் ஒரு விஷயத்தை சொன்னது.

“ப்ரோ, ஆத்துக்கு அந்த பக்கம் ஒரு வைத்தியர் இருக்காறாம். பச்சிலை வைத்தியத்துல பெரிய ஆளுன்னு அங்க ஆயா சொல்லுது. அதுவும் பழங்கட்டை. அது சொன்னா சரியாதான் இருக்கும். நீ உதவி செய்தா நாம முயற்சி பண்ணி பாக்கலாம்” என ஆர்வமாக சொன்னது.

“சரி வா, போய் சிங்க ராஜாகிட்ட சொல்லலாம்” என ரெண்டு பெரும் கிளம்பினார்கள்.

ராஜாவின் குகை அமைதியாக இருந்தது. ராணி சிங்கம் சோகத்தில் இருந்தார்.

“ராஜா, நா சைமன் வந்திருக்கேன். ரங்குவும் இருக்கான், கண்ண தொறங்க” என்றது குரங்கு.

ஆஷாதேவி கண்ணே வெளியே வரும் அளவுக்கு வாயை பிளந்து கேட்டு கொண்டிருந்தது.

“தொறந்துட்டாரா கண்ணை?” என ஆர்வமாக கேட்டது.  

 ஆஷாதேவி சிங்க ராஜாவின் பிரேயர் மீட்டிங்கை எப்போதோ மனதில் நடத்தி விட்டது.

“இரு சொல்றங்கள்ல” என்றது ஷைலா.

சிங்க ராணி வந்து உதவி செய்ய, ராஜா பெட்டில் சாய்ந்து உட்கார்ந்தார். குட்டி முயல் கொடுத்த வெந்நீரை வாங்கி மெதுவாய் பருகினார்.

சைமன் வைத்தியர் விஷயத்தை சொல்லி, “ராஜா, நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க, நாங்க உங்களை வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போறோம்” என உறுதியாக சொன்னது.

“என் காலம் முடிஞ்சு போச்சு. நீங்க வாழ வேண்டிய பசங்க. எனக்காக எதுக்காக ரிஸ்க் எடுக்குறீங்க? என்னால எங்கயும் நகர முடியாது. இந்தம்மாவ நல்லா பாத்துக்குங்க” என உயில் மட்டும் எழுதாத குறையாக பேசினார் ராஜா.

“எங்க ஆயா கூட இப்படி தான். டாக்டர் வீட்டுக்கு கூப்பிட்டா ஒடனே வராது. அத ஆட்டோல ஏத்துறதே பெரிய கஷ்டம்” என சொந்த கதையை சொருகியது ஆஷாதேவி.

சிங்க ராணி கண்ணீர் சிந்த, குட்டி முயல் மூக்கை சிந்த, அதை பார்த்த ராஜாவின் மனம் மாறியது.

“ஏதோ இவங்க திருப்திக்காக வரேன்” என ஒப்புக்கொண்டார்.

சைமனும் ரங்குவும் போர் கால அடிப்படையில் வேலையை ஆரம்பித்தார்கள். மழை பொத்துக்கொண்டு ஊத்தியது.

ராஜாவின் கிச்சனில் இருந்து பெரிய வாழை இலைகளை கொண்டு வந்து அவரை சுற்றி கட்டினார்கள்.

ஒரு சந்தன மர பலகையில் புல் கட்டுகளை அடுக்கி, அதன் மீது ராஜாவை தூக்கி உட்கார வைத்தார்கள். பிறகு கயறு போட்டு கட்டி அந்த பலகையை ரங்குவின் மீது தூக்கி வைத்தது சைமன். பிறகு அதுவும் ரங்குவின் மீது ஏறி ராஜாவுக்கு பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டது.

எல்லோரும் வரிசையில் நின்று வழியனுப்ப, ரங்கு சுழன்று ஓடும் ஆற்றில் மெதுவாக இறங்கியது. காற்றும் மழையும் தீவிரமாக, அவர்களுக்கு கண் பார்வையும் மறைக்க ஆரம்பித்தது.

“ப்ரோ, நா இவரை புடிச்சிக்குறேன். நீ அட் அ டைம்ல ஒரு ஸ்டெப் மட்டும் எடுத்து வை” என அட்வைஸ் செய்தது சைமன்.

“நீ கவலைபடாதே, என் வேலையே இதான். நீ அவரை மட்டும் விட்டுராத, கெட்டியா புடிச்சிக்கோ” என சொல்லி எச்சரிக்கையாக நீந்தியது ரங்கு.

ஆற்றின் மறுகரை அடைய ஒரு மணி நேரம் ஆனது.

வைத்தியர் ஆற்றங்கரையில் காத்துக் கொண்டிருந்தார். ரங்குவும் சைமனும் அவரை வணங்கிவிட்டு அவர் குடிலுக்கு பின் தொடர்ந்தார்கள்.

குடிலில் ராஜாவை இறக்கி வைத்தியர் கண்காணிப்பில் விட்டு விட்டு இருவரும் வெளியே நின்றார்கள்.

சற்று நேரம் கழித்து வந்த வைத்தியர், “அவர் நெலமை சரி இல்லை. அதுனால அவர் பத்து நாள் இங்க இருக்கட்டும். என்னால முடிஞ்சதை செய்யுறேன்” என அனுப்பி வைத்தார். பத்து நாள் ஆனது. ராஜா நலமாக இருக்கிறார் என அவரிடம் இருந்து செய்தி வந்தது.

ரங்குவும் சைமனும் மீண்டும் அவரை போய் அழைத்து வந்தார்கள். சிங்கராஜா அவர்கள் இருவரின் பெற்றோருக்கும் கண்ணீரோடு நன்றி தெரிவித்தார்.

“ரங்கு, இனிமேல் நீதான் என்னையும், இந்த காட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டும்” என சொல்லி அதை ஆசீர்வதித்தார்.

ரங்கு அவரை வணங்கிவிட்டு, அதன் பெற்றோருக்கும் வணக்கம் வைத்தது.

சைமனும் அதன் மற்ற தோழர்களும் சந்தோஷமாய் கைதட்ட, அந்த காடே உற்சாகமாக இருந்தது. 

கதை முடிய, “இப்போ இந்த கதைல இருந்து நீங்க என்ன கத்துக்கிட்டீங்க?” என கேட்டாள் தாரா.

குழந்தைகள் ஆளாளுக்கு ஒரு மாரலை கண்டுபிடித்து சொன்னார்கள்.

முடிவாக தாரா சொன்னாள் “நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து முயற்சி செய்து, நல்வழியில் நடந்தால், ஒரு நாள் வெற்றி உங்களை தேடி வரும்!”

Leave a comment