Tamil novel – Jiteswari – Part 8/21

A senior couple a temple

அடுத்த நாள் காலையிலேயே புஷ்கரும் கல்யாணியும் கோவிலுக்கு போக ரெடியாகிவிட்டார்கள். நேசப்பாவும் சாப்பிட்டு முடித்து மாத்திரை போட்டுக்கொண்டு கிளம்பினார்.

“ரொம்ப நாளாச்சு கோவிலுக்கு போய். நானும் வரேங்க” என்றார் சங்குபுஷ்பம்.

“பசங்களா, மழை கொட்ட போகுது, கொடை எடுத்துக்குங்க, உங்க பாட்டியும் கோவிலுக்கு வராளாம்” என கிண்டலடித்தார் நேசப்பா.

ஜித்தும் லக்ஷ்மியும் வாக்கிங் முடித்துவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்தார்கள்.

ஜித்துக்கு காமாட்சியின் போன் வந்தது.

“நல்லாருக்கேன் ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கீங்க? சாப்டீங்களா?” என விசாரித்தாள்.

இரண்டு நிமிடம் பேசி முடித்தவுடன் நேசப்பா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு போய் பால்கனியில் நின்றாள்.

எதிர் பிளாட்டு பால்கனியில் வெளிர் நீல புடவை  காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் சடாரென கற்பகத்தின் நினைவு வந்தது ஜித்துவுக்கு. லேசாக கண்ணீர் துளிர்க்க அந்த நினைவில் ஆழ்வது தன்னை மேலும் பலகீனப்படுத்தும் என திரும்பி ஹாலுக்குள் வந்தாள்.

சங்கு புஷ்பம் குளித்துவிட்டு வர “எங்கம்மா கெளம்புற காலங்காத்தால?” என கேட்டாள் லக்ஷ்மி.

“கோவிலுக்குடி. பசங்கள கூட்டிட்டு போறோம்” என்றார் சங்கு புஷ்பம்.

“ஜித்து நீயும் வரியா? எல்லாரும் சேந்து போகலாம்” என அழைத்தாள் லக்ஷ்மி.

போனை எடுத்து கேலண்டரை பார்த்தாள் ஜித்து. மதியம் ஒரு மணிக்கு தான் ஒரு மீட்டிங் இருந்தது.

“சரி போலாம். பத்து நிமிஷத்துல ரெடியாயிடறேன்” என்றபடி குளிக்க போனாள் ஜித்து.  பிளான் மாறிய பிறகு சங்கு புஷ்பம் கிச்சனுக்குள் நுழைந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரத்தில் எல்லாரும் ரெடியாக டாக்ஸி பிடித்து கோவிலுக்கு

போய் இறங்கி உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் வயதானவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

நேசப்பா சில்லறை எடுத்து குழந்தைகளிடம் கொடுத்து அவர்களுக்கு கொடுக்க சொன்னார்.

ஜித்துவும் லக்ஷ்மியும் பர்ஸை துழாவினார்கள். சில்லறை காசோ, கரன்சியோ எதுவும் இல்லை. துடைத்து வைத்தார் போல இருந்தது பர்ஸ்.

“அம்மா சில்லறை இருந்தா குடு” என்றாள் லக்ஷ்மி.

“ஏண்டி உங்க டிஜிட்டல் இந்தியால தர்மத்துக்கு ஆப்ஷன் இல்லியா?” என நக்கலாய் கேட்டார் சங்கு புஷ்பம்.

“பத்து ரூபாய்க்கு சில்லறை காசு தர இவ்ளோ பேச்சு பேசுற” என்றபடியே சிரித்தாள் லக்ஷ்மி.

போனை லாக்கரில் வைத்து விட்டு வந்ததால் அர்ச்சனை டிக்கெட் மற்றும் நெய் விளக்கு வாங்க, ஐயருக்கு தட்டில் போட, உண்டியலில் போட என

இருவரும் காசுக்காக பவ்யமாக நின்றார்கள்.

சங்கு புஷ்பம் கெத்தாக கரன்சியை எடுத்து எண்ணி, பிறகு சில்லறை காசு எண்ணி கொடுப்பது என ஒரே சீனாக இருந்தது.

“மா, நேத்து மார்க்கெட் போய் கடைசி காசு வரை செலவு பண்ணிட்டோம். நீ ரொம்ப சீன் போடாதே” என சலித்துக் கொண்டாள் லக்ஷ்மி.

“கொஞ்சமான ஆட்டமா போடுறீங்க போன வச்சிக்கிட்டு. கண்ணு மண்ணு தெரியாம ஊதாரித்தனமா செலவு பண்றீங்க. இப்போ என் டைம்” என காட்டமாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

பேசியபடியே வெளி பிரகாரம் சுற்றி குளத்தருகே வந்தார்கள். நேசப்பா ஆபீஸ் ரூமுக்கு போய் கேட் திறப்பது பற்றி விசாரித்தார். ஆபீஸர் வாட்ச்மேனிடம் சாவி கொடுத்து அனுப்பினார்.

குளத்து கேட் திறந்ததும் குழந்தைகள் குக்ஷியானார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து படிக்கட்டில் இறங்க ஆரம்பித்தார்கள்.

“கொஞ்சம் மேல வாங்க எல்லாரும்” என அழைத்தார் சங்குபுஷ்பம்.

நாலு படி இறங்கிய ஜித்து “என்னமா?” என்றாள்.

சங்குபுஷ்பம் பக்கவாட்டில் இருந்த மண்டபத்தில் ஏறி தூணில் சாய்ந்து உட்கார்ந்து காலை நீட்டிக்கொண்டார்.

“சுக்கு காபி பிளாஸ்க்ல கொண்டாந்துருக்கேன். குடிச்சுட்டு அப்புறம் போய் படிக்கட்டுல உக்காரலாம்” என பையை பிரித்தபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

“நெனச்சேன் நீ பைய தூக்கிட்டு கிளம்பும் போதே. என்னென்ன சரக்க உள்ள வெச்சிருக்கியோன்னு. கோவிலுக்கு வந்தா ஜங்க்க்ஷன்ல இருக்குற காபி ஹவுஸ்ல போய் சுக்கு காபி குடிக்கணும்னு ஜித்துக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீ என்னடான்னா வீட்லருந்தே போட்டு எடுத்துட்டு வந்துட்ட” என சிணுங்கினாள் லக்ஷ்மி.

“அம்மா கூட அப்டி தான். பிரிக்க முடியாதது நர்ஸும் பிளாஸ்க்கும் போல” என சொல்லி சிரித்தாள் ஜித்து.

“ஆமா, எங்க காலத்துல இருந்த ஹைடெக் சாமான்ல பிளாஸ்க்கும் ஒண்ணு. வார்டுல பிளாஸ்க் வெச்சிருக்கிற பேஷண்ட் கொஞ்சம் கெத்தாதான் இருப்பாங்க. வயசான இல்லாதவங்களுக்கு சொந்தமா பிளாஸ்க் இருக்கிறதே ஒரு பெரிய கனவு தான். பெரும்பாலானவங்களுக்கு வீட்லேர்ந்து யாரும் வர மாட்டாங்க. கவெர்மென்ட்டு மூணு வேளை சாப்பாடு குடுக்கும். கூட சூடா காபியோ பாலோ குடிச்சே, ஆஸ்பிடல்லேர்ந்து டிஸ்சார்ஜ் ஆகுற வரை ஓட்டிடுவாங்க” என விவரித்தார் சங்கு புஷ்பம்.

புஷ்கரும் கல்யாணியும் அந்த பிளாஸ்கை மரியாதையாக பார்த்தார்கள்.

“பேசாம காபி ஹவுசே போயிருக்கலாம்” என மீண்டும் ஆரம்பித்தாள் லக்ஷ்மி.

“உனக்கென்ன சரக் சரக்குன்னு கார்டு தேய்ப்ப. இல்ல போன எடுத்து காச சுட்டு தள்ளுவ. சுக்கி காபியோடு முடிக்கிற ஆளா நீ? எங்களுக்காவது பென்சன் வருது. உங்களுக்கு அதுவும் கிடையாது. நாப்பத்தஞ்சு வயசாச்சுன்னா பொம்பளைங்களுக்கு எப்படா ரிட்டயர்டு ஆவோம்னு இருக்கும். சுகர் எட்டிப்பாக்கும்.மெனோ பாஸ் வதைக்கும். ஒடம்புல தெம்பு இருந்து வேலைக்குப் போகும்போதே செலவை கண்ட்ரோல்ல வைங்க. இப்போ சேமிக்கலேன்னா பின்னாடி இதே ஜோர்ல செலவு பண்ணமுடியாது” என நிதர்சனத்தை சொன்னார் சங்கு புஷ்பம்.

“நல்லதா ஒரு காபி குடிக்கலாம்னு சொன்னா எனக்கு நரை வந்து கூன் விழுறவரை பயம் காட்டுறியேம்மா? டென்ஷனை கன்ட்ரோல்ல வை, புருஷனை கன்ட்ரோல்ல வை, வெய்ட்ட கன்ட்ரோல்ல வைனு எவ்ளோ ப்ரெஷரும்மா” என அலுத்துக்கொண்டாள்  லக்ஷ்மி. 

நேசப்பா குழந்தைகளுக்காக சர்க்கரைப் பொங்கல் வாங்கி வந்தார். சற்று நேரத்தில் அவர் பின்னாடியே கையில் தூக்கு வாளியுடன் ஒருவர் வந்தார்.

“மேடம் நல்லாருக்கீங்களா?” என்றார்.

“நல்லாருக்கேன் பரணி. தங்கமயிலும் பசங்களும் சௌக்கியமா?” என விசாரித்தார் சங்கு புஷ்பம்.

பரணி கோவில் பணியாளர். தங்கமயில் சில ஆண்டு காலம் அவர்கள் சொசைட்டி ஆபீசில் வேலை பார்த்தாள். மயிலின் இரண்டு டெலிவரியும் சங்கு புஷ்பம் வேலை பார்த்த ஆஸ்பத்திரியில் நடந்தது.

“நல்லா இருக்காங்க மேடம். சார தூரத்துல இருந்து பார்த்தேன். அதான் பிரசாதம் தரலாம்னு வந்தேன்” என தொன்னையில் புளியோதரை வைத்து கொடுத்துவிட்டு கிளம்பினார். நிதானமாக சாப்பிட்டு சுக்கு காபியும் குடித்து முடித்தார்கள்.

“மா, காபி அவுஸ் டேஸ்ட் அப்டியே இருக்கு” என புகழ்ந்தாள் லக்ஷ்மி.

“நீங்க வரீங்கன்னு சொன்னதும் அம்மா அந்த காபி அவுஸ்லேர்ந்து மிக்ஸ் வாங்கிட்டு வர சொல்லிட்டா” என சொன்னார் நேசப்பா.

“செம பிளான்மா” என சிரித்தாள் லக்ஷ்மி.

“இந்த கப்பு காப்பிய அம்பது ரூபா சொல்வான். இப்போ பாரு சிம்பிளா முடிஞ்சிது. நீ காபி குடிக்கலாம்னு உள்ள நொழஞ்சி ரெண்டாயிரத்துக்கு கார்டு தேய்ப்ப” என சொன்னார் சங்கு புஷ்பம்

லக்ஷ்மி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்க ஜித்து தலையசைத்தும், புன்னகைத்தும் கேட்டு கொண்டிருந்தாள். நேசப்பாவுக்கு ஜித்து சாதாரணமாக இல்லை என புரிந்தது. யோசனையும் கவலையும் தீவிரமாக குளத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

லஷ்மி காபி டம்ளர்களை வெளியே கொண்டுபோய் கழுவி எடுத்து வந்தாள்.

சங்கு புஷ்பம் அதையெல்லாம் பையில் வைத்துவிட்டு இரண்டு பொரி டப்பாக்களை வெளியே எடுத்தார். புஷ்கருக்கும் கல்யாணிக்கும் ஆளுக்கொன்று கொடுத்தார்.

டப்பாவை கையில் வாங்கிய புஷ்கர் சற்று நேரம் யோசித்தான்.

“தாத்தா நானும் பாட்டியும் அந்த கார் னர் போறோம். நீங்க பாப்பா கூட இங்கயே இருங்க” என்றான்.

“சரிப்பா” என்றார் நேசப்பா.

“மா, நாங்க ஹெவியா சாப்டுட்டோம். கொளத்தை ரெண்டு ரவுண்டு சுத்திட்டு வரோம்” என ஜித்துவோடு கிளம்பினாள் லக்ஷ்மி.

ஜித்துவின் அமைதி லக்ஷ்மிக்கும் கவலையை தந்தது. எதுவானாலும் அவளே சொல்லட்டும் என பொறுத்திருந்தாள். ஆனால் கோவிலுக்கு வந்த பிறகு நாமே ஆரம்பிப்போம் என்ன விஷயம் என கேட்போம் என முடிவெடுத்தாள்.  சற்று நேரம் நடந்த பிறகு மறு கரையில் உட்கார்ந்தார்கள்.

Friends at temple

“மைண்டுல என்னடி போட்டு உருட்டிக்கிட்டு இருக்க? நானும் வந்ததுலேர்ந்து பாக்குறேன். யோசனயாவே இருக்க” என உரிமையாக கேட்டாள் லக்ஷ்மி.

“மும்பை ஆபீஸ் போய் ஜாயின் பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்” என்றாள் ஜித்து.

“அவர் வரேன்னு சொல்லிட்டாரா? என குதூகலமானாள் லக்ஷ்மி.

“இல்ல” என்றாள் ஜித்து.

“அப்போ பசங்கள கூட்டிட்டு நீ மட்டும் போறியா? என நிதானமாக கேட்டாள் லக்ஷ்மி.

“இல்ல, இன்னும் முடிவு பண்ணல” என்றாள் ஜித்து குளத்தை பார்த்தபடியே.

நிஜமாகவே யாரோ தன்னை குளத்துக்குள் உருட்டுவது போல பகீரென ஆனது லக்ஷ்மிக்கு. அவள் காயம் மட்டும் ஆழமானது என புரிந்தது. கைக்குள்ளேயே வைத்து வளர்த்த குழந்தைகளை தீர்க்கமாய் அழைத்து செல்வேன் என சொல்லாமல் விட்டேத்தியாய் இருக்கிறாள்.

“எனக்கு திரும்ப பாண்டி போக விருப்பமில்லை. ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டேன். சங்குமாகிட்டயும் பேசிட்டேன். பத்து நாள் எதை பத்தியும் நினைக்காம வெய்ட் பண்ண சொன்னாங்க. எதுவாயிருந்தாலும் அடுத்த வாரம் பேசிக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

“நா மும்பை ஆபீஸ்ல பேசிட்டேன். நாலு மாசம் கழிச்சு ஜாயின் பண்ணுவேன்னு நெனைக்கிறேன். அண்ணன் அடுத்த வீக்கெண்ட் வரேன்னு சொல்லியிருக்கன். சங்குமாதான் அவன்கிட்ட பேசுனாங்க. அவன் இன்னும் என்கிட்டே பேசல. மெசேஜ் மட்டும் போட்டிருக்கான்” என இடியை இறக்கினாள் ஜித்து.

முடிவை வெளிப்படையாக சொன்னவள் இப்போது வரை அதன் காரணத்தை சொல்ல கூச்சப்படுகிறாள்.

கண்டிப்பாக ராஜுவோடு ஏதோ வருத்தம். இந்த எல்லைக்கு போயிருக்கறாள்.

நெதர்லாந்து போகும் முன் நல்லபடியாக இருந்த குடும்பம் இப்போது இந்த நிலையில் நிற்கிறது.

லக்ஷ்மி வேறு பக்கம் முகத்தை திருப்பி கண்ணை மூடிக் கொண்டாள்.

ஜித்துவை நேராய் பார்க்கும் துணிவு அவளுக்கு இல்லை. 

இந்த வயதில் இந்த பொண்ணுக்கு ஏன் இந்த நிலை கடவுளே என வருந்தினாள்.    

தன் அம்மாவை நினைத்தாள் லக்ஷ்மி. இவளை கண்டிப்பாக அவர்களால் மட்டுமே தேற்ற முடியும். இவள் இந்த மனநிலையில் எடுத்த ஒரு நல்ல முடிவு இங்கு வந்தது தான்.

ஆனால் சங்கு புஷ்பம் எந்த சலனமும் இல்லாமல் இவளிடம் பேசுவது லக்ஷ்மிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் அனுபவம் அப்படி என நினைத்துக் கொண்டாள்.        

Leave a comment