Post-Election Shakes & Handshakes!

An artistic arrangement of horse-themed playing cards placed on a table. The top row features carousel horses, the middle row shows racing horses, the third row depicts traditional Poikkal Kuthirai folk-art horses, and the bottom row displays black-and-white chess knight horses symbolizing dual political loyalties and shifting alliances. A deck of cards lies to the side, with Tamil text at the top reading “Perplexing Horses.”

கோல்கப்பா : என்ன குமாரி, தேர்தல் முடிந்து புது ஆட்சி அமைந்து இருக்கிறது! இதை எப்படி பார்க்கிறாய்?

பூரிகுமாரி : விசுவாவசு ஆண்டு முடிந்து, அடுத்ததாக பராபவ ஆண்டு கோலாகலமாக தொடங்கியிருக்கிறது கோல்..

கோல்கப்பா : ஹ்ம்ம்..புது வருஷம் ஆரம்பிச்சி ஒரு மாசத்துக்கு மேல ஆகுது..இப்போ என்னடி விசுவாசம் முடிஞ்சி போச்சின்னு சொல்ற?

பூரிகுமாரி : ஹிஹிஹி..அது விசுவாவசு கோல்..நியூஸ் அதிகமா பாத்ததால உங்களுக்கு ஊர் உலகத்துல யாரும் விசுவாசத்தோட இல்லென்ற மாதிரியே நெனைக்குறீங்க..

கோல்கப்பா : என்னமா போ..பராபவ வருஷ சித்திரையில் வந்த தேர்தல் முடிவுகள், பலரோட நித்திரையை கெடுத்திருக்குன்னு தான் சொல்லணும்.

பூரிகுமாரி : ஆமா கோல், கூடவே பல பேரோட முகத்திரையையும் சேத்து கிழிச்சிருக்கு!

கோல்கப்பா : “வைபவத்தில் வாழ்ந்தோர், பராபவத்தில் வீழ்ந்தார்ன்னு” விதி இருக்கும் போல.

பூரிகுமாரி : எவ்வளவு நிகழ்வுகள், எவ்வளவு மாற்றங்கள் இந்த மே மாதத்தில் மட்டும், கோல் ?

கோல்கப்பா : சரித்திரத்தில் முக்கியமான மே மாதம் இது. இந்த கோடை காலம், அரசியலுக்கு புதியவரை கோட்டைக்கு அனுப்பியும், பழம் தின்று கொட்டை போட்டவர்களை வேட்டையாடியும் பதம் பார்த்திருக்கிறது.

பூரிகுமாரி : உண்மை தான் கோல். குதிரை பேர அரசியல் என எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டையும் , குதிரை வேக அரசு இது என ஆளுங்கட்சியின் தற்புகழ்ச்சியையும் என்னவென்று சொல்வது கோல்?

(காக்க காக்க திரைப்படத்தில் வரும் “ஒன்றா ரெண்டா ஆசைகள்” பாடலை முணு முணுக்கிறார் கோல்)

கோல்கப்பா : ஒன்றா ரெண்டா குதிரைகள்,
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?
அன்பே பதவி கேட்கலாம், கட்சி
தாண்டினால் பதவியும் நிலைக்குமா?

(பூரி குமாரி பாடலை தொடர்கிறாள் )

பூரிகுமாரி : பேரத்துக்கு call வந்தாலே,
என் மனசில் மழையடிக்கும்!
மிகப்பிடித்த துறை ஒன்றை,உதடுகளும்
முணுமுணுக்கும்!

கோல்கப்பா : ஹிஹிஹி..கள்ளி, அப்படியே tuneஅ புடிச்சிட்ட.

பூரிகுமாரி : ஆட்சியை காக்க ஒரு தரப்பும், தங்கள் அரசியல் எதிரியை சாய்க்க மறுதரப்பும் மும்முரமாக இருக்கிறார்கள் கோல்.

கோல்கப்பா : இருக்காதா பின்னே..டப்பு என்ஜினும், டபுள் என்ஜினும் ஜிங்கிள்ஸ் மிங்கிள்ஸ் ஆகுற அளவுக்கு போய் இருக்காங்கன்னா பாத்துக்க!

பூரிகுமாரி : ஹிஹிஹி..வெளில குதிரை பேரம்ன்னு ஆளு தரப்பை விமர்சனம் பண்ணிகிட்டே, மறைமுகமா ரெண்டு பெரிய குதிரை லாயமும், ஆதாயம் தேட பாத்திருக்காங்க!

(கோல்கப்பா பாடலை தொடர்கிறார்)

கோல்கப்பா : பீதியிலே போராடும்,
சூரியனை நான் கண்டேன்!
போர்வைகளின் பின்னாலே,
யார் இருப்பாரென நான் கண்டேன்!

பூரிகுமாரி : வாவ், கோல்! அட்டகாசம் போங்க…செம ரொமான்டிக் சாங்க, எப்படி புடிச்சீங்க கோல்?

(கோல்கப்பா முத்தமிழ் அறிஞர் குரலில் சொல்கிறார்)

கோல்கப்பா : அரசியலிலே Alliance என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. Romance என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும்!

பூரிகுமாரி : ஹிஹிஹி, அல்டிமேட் பன்ச் கோல்.நம்மளோட இந்த குதிரைங்க போஸ்டருக்கு இதுக்கு மேல லீடு குடுக்க முடியாது! நம்ம வாசகர்களுக்கு ஒவ்வொரு குதிரையை பத்தியும் சொல்லுவோம் கோல்.

கோல்கப்பா : மொதல்ல Merry go round குதிரைங்க. கடந்த அறுபது வருஷமா நம்ம மாநில அரசியல் இரு துருவங்களுக்கு நடுவே சுழன்றுகொண்டே இருக்கும் closed loop ஆகத்தான் இருந்தது. அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை ஒரு கட்சி மேல ஏறும், இன்னொன்னு கீழ இறங்கும். அதனால ஆட்சி சக்கரமும் இவங்களை மட்டுமே மையமா வெச்சி சுற்றிக் கொண்டே இருந்தது.

பூரிகுமாரி : கரெக்ட். இந்த ரெண்டு கட்சிக்கு மட்டும் தான் பந்தயம்ன்னு ஒரு நிலை இருந்தது. வெற்றிக்கோப்பையை நோக்கி வெறித்தனமாக விரையும் குதிரைகள் இவர்கள். புழுதியை பறக்கவிட்டு புயலாய் களப்பணியாற்றி, இறுதி வரை போராடி, கடைசி பாய்ச்சலில் கிரீடம் சூடிய வரலாறும் இவர்களுக்கு உண்டு. பந்தயத்தில் ஜாக்கி பெயர் வாங்கலாம், ஆனால் குதிரையை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது என்னவோ அமைதியாக உழைத்த களப்பணியாளர்கள் தான்! இந்த குதிரைக்கு சக்தி தந்தது கிராமம் தோறும் ஓடிய தொண்டர்களின் கால்கள் தான்!

கோல்கப்பா : அருமையாய் சென்னாய் குமாரி. இப்படி பல்லாண்டுகளாக மாறி மாறி ஆட்சி நடத்தியவர்கள், இன்று ஆரம்பித்து மூன்றே வருடம் ஆன கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதனை “பொய்க்கால் குதிரை” என விமர்சிக்கிறார்கள்.

பூரிகுமாரி : ஆமாம் கோல், நானும் அந்த விமர்சனத்தை பார்த்தேன். முதலில் இந்த கலை வடிவத்தை எதிர்மறை அடையாளமாக பார்ப்பதையே நாம் கடுமையாக கண்டிக்க வேண்டும் கோல்.

கோல்கப்பா : சரியாய் சென்னாய் குமாரி. மரக்கால்களில் நிற்பது எளிதல்ல. தடுமாறாமல் தாளத்தோடு நகர்வது அதைவிட கடினம்! குதிரை வேடம் அணிந்து அதற்கு உயிர் கொடுக்கும் அசைவுகளோடு ஆட அர்ப்பணிப்பும் வேண்டும். விழுந்துவிடும் அபாயம் இருந்தும், சிரித்தபடியே ஆடி மக்களை மகிழ்விப்பதே இந்தக் கலையின் தனிச்சிறப்பு!

பூரிகுமாரி : இப்பேற்பட்ட சிறப்பு மிக்க கலையை, போகிற போக்கில் தவறான உதாரணமாக சொன்னால் எப்படி கோல்?

கோல்கப்பா : இன்னொன்றும் சொல்கிறேன் கேள்.

காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடல்

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட இந்த வரிகள் மரக்கால் கூத்து பற்றியது. இதுவே பிற்காலத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமாக வடிவம் பெற்றது என்ற கருத்தும் உண்டு குமாரி.

பூரிகுமாரி : தானே நிரந்தரம் என கருதியவர்கள், இன்று அந்தரத்தில் தொங்குவதால் என்ன பேசுகிறோம் என தெரியாமல் இந்த மாதிரி பேசுவது தான் கவலையாக இருக்கிறது கோல்.

கோல்கப்பா : ஹ்ம்ம்..இப்போது நடக்கும் அரசியல் சதுரங்கம் மிகுந்த ஆபத்தாக இருக்கிறது குமாரி?

பூரிகுமாரி : ஏன் அப்படி சொல்கிறீர்கள், கோல்?

கோல்கப்பா : சில குதிரைகள் கருப்பாகவும் இல்லாமல், வெள்ளையாகவும் இல்லாமல் ஆட்டத்தில் இருக்கின்றன! யார்னு சொல்லு பாக்கலாம்?

பூரிகுமாரி : ஹ்ம்ம்..ஆட்சிக்கு ஆதரவு தரும் சில கூட்டணி கட்சிகள், சரியா கோல்?

கோல்கப்பா : மிக சரியாய் சொன்னாய் குமாரி. ஒரு பக்கம் இருந்து பார்த்தால் கருப்பு, இன்னொரு பக்கம் இருந்து பார்த்தால் வெள்ளை! அதனால் ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் இவர்களை தங்களுடைய குதிரை என்றே நம்புகின்றனர்.

பூரிகுமாரி : ஆளும் கட்சிக்கு கூட்டாளி போலவும், எதிர்க்கட்சிக்கு பழையபடியே நண்பன் போலவும் இருக்கிறார்கள். இன்றைய தேதியில் இவர்களின் விசுவாசம் யாருக்கு என்பதே புரியாத புதிராக இருக்கிறது கோல்! மக்களே, தேர்தல் முடிந்து மூன்று வார காலத்தில் நடந்த நிகழ்வுகளை பற்றிய எங்களின் பார்வை இது. பிடித்திருந்தால், இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி!

Breaking news!

Madurai constituency DMK leader PTR

பூரி குமாரி : என்ன கோல், மல்லிப்பூ மேன் ஷார்ட் ப்ரேக்குல போறேன்னு பொசுக்குன்னு சொல்லிட்டாரு!

கோல்கப்பா : Reality show விளம்பர இடைவேளையா இது? Ground reality களேபர ஷாக் தான்,வேறென்ன?

பூரி குமாரி : எனக்கென்னமோ வருத்தம் தான். இவரு எப்போ இந்த முடிவை எடுத்திருப்பாரு கோல்?

கோல்கப்பா : ஹிஹிஹி, எப்போ உங்களுக்கு 35% ஓட்டுதான் வந்திருக்கு, மீதி 65% மக்கள் உங்களுக்கு எதிரா ஓட்டு போட்டுருக்காங்கனு அவரு கட்சிக்காரங்க ஆளுங்கட்சியை பாத்து பேச ஆரம்பிச்சாங்களோ, அப்போவே Data மேன் டாட்டா சொல்லிட்டு போறதுன்னு முடிவு பண்ணி இருப்பார்.

பூரி குமாரி : வாஸ்தவம் தான் கோல். நிதர்சனத்தை ஏத்துக்காம, ஊருசனத்தை மடை மாத்துற வேலைதான் நடக்குது. என்னத்த சொல்ல?

கோல்கப்பா : நீ ஏண்டி அவருக்கு ஈடா மூக்கை சிந்துற? national லெவல்ல அவரை தூக்கி புடிச்ச கட்சி, இன்னிக்கு distressல இருக்கு..கொள்கை விளக்கை தேய்ச்சி ஒளியேத்த வேணாமா?

பூரி குமாரி : ஒளியேத்தறத விடுங்க. அவரையே மறைமுகமா வெளியேத்தியே எவ்ளோ நாள் ஆச்சு..

கோல்கப்பா : ஹ்ம்ம்..expatriate நான்னு ஜம்பம் அடிச்சிவரு, அவரு party expiry ஆனதால அவங்களோட affiliate போதும்ன்னு நெனச்சிட்டார் போல!

பூரி குமாரி : ஹிஹிஹி, அவரு எப்பவும் rationalஆ decision எடுக்குறவர் கோல்!

கோல்கப்பா : என்னது, முத்தமிழ் அறிஞர் தான் inspirationன்னு சொல்லிட்டு, migrationல வந்து பத்து வருஷமா பொது வாழ்க்கைல இருந்துட்டு, இன்னைக்கு frustrationல இப்படி ஒரு முடிவு எடுத்திறதா rational decision?

பூரி குமாரி : ஹிஹிஹி, ஆயிரம் ரூபா குடுத்தோம்னு பெருமை பேசுறவங்களுக்கு ரெண்டாயிரம் வருஷம் முன்னாடியே வள்ளுவ பெருந்தகை வகையா இந்த குறளை எழுதி வெச்சிட்டு போய் இருக்காரு கோல் ..

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.

கோல்கப்பா : இதுக்கு அர்த்தம் என்னடி?

பூரி குமாரி : இந்த குறளுக்கு பெருமதிப்பிற்குரிய சாலமன் பாப்பையா அவர்கள் எழுதிய இந்த குறள் விளக்கம் இது தான்.

தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.”

கோல்கப்பா : பரம்பரை பெருமையை தூக்கி புடிச்சி பேசினவருக்கு நச்ன்னு பொருந்துற குறள் இது. நாலு பக்க லெட்டர் எழுதுறத்துக்கு முன்னாடி இந்த ரெண்டடி குறளை ஒரு முறை படித்திருந்தால் அவர் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம் குமாரி..அது சரி, இதற்கு முத்தமிழ் அறிஞர் எழுதிய விளக்கம் என்ன?

பூரி குமாரி : “போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.”

கோல்கப்பா : ஹ்ம்ம். இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா இவர் குறளையும் படிக்கல. அவங்க ஊர்க்காரர் பாப்பையா அவர்கள் எழுதிய விளக்கத்தையும் படிக்கல..அவங்க கட்சி தலைவர் அதுக்கு குடுத்த விளக்கத்தையும் படிக்கலேன்னு..

பூரி குமாரி : அவரை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை கோல். “நிலை மக்கள் சால உடைத்து எனினும்” என்ற குறள் வேண்டுமானால் அவர் முடிவுக்கு காரணமாய் இருக்கலாம்…

கோல்கப்பா : அது என்னடி குறள்?

பூரி குமாரி : புக்க எடுத்து படிச்சி பாருங்க கோல். நாளைக்கு நீங்களே வந்து இன்னும் பத்து குறளை எடுத்துக்காட்டா சொல்லுவீங்க..

கோல்கப்பா : அருமை குமாரி! மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி!

Decoding Winning Moves

Editorial-style political analysis poster titled “Decoding Winning Moves,” representing the strategic planning, campaign execution, and electoral tactics behind a party’s path to forming the government.

பூரி குமாரி : ஹிஹிஹி.. அட்டகாசம் கோல். பத்து நாளா ராப்பகல் பாக்காம நியூஸ் பாத்தது வீணா போகல!

கோல்கப்பா : நியூஸ் பாக்குறது புதுசு இல்ல..ஆனா வர்ற நியூச கேட்டு நம்ம பல்ஸ் ஏறி எறங்குறது தான் புதுசா இருந்துது.

பூரி குமாரி : ஏறி எறங்குறதுன்னு சொல்லும் போது தான் ஞாபகம் வருது. தலைவர் நாலாவது தடவை லோக் பவன் போகும் போது அடையார் பிரிட்ஜ்ல ஏறி இறங்கினப்புறம் U turn போட்டு திரும்ப பட்டினபாக்கமே போய்ட்டாரு. அப்போ லோக் பவன்ல அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கலன்னு பிளாஷ் கார்டு போட்டான் பாரு தந்திடிவிக்காரன், மெர்சலாயிட்டேன் கோல்.

கோல்கப்பா : போதும்டியெம்மா நாம பட்டது. இவங்கள நேரு ஸ்டேடியத்துக்கு இட்டுக்கினு போய் இட்டுக்கினு வர்றதுக்குள்ள போதும்னு போதும்னு ஆய்டுச்சு! இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம் குமாரி.

பூரி குமாரி : சரி தான் கோல். ஆனா இதுவரை நடந்தது எல்லாம் எப்படி ஸ்டார்ட்டப் கட்சிக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தேடி தந்தது அப்டீன்னு யோசிச்சீங்களா?

கோல்கப்பா : இதுவரை என்ன நடந்தது? பிரச்சாரத்துக்கு போனாரு, பேசுனாரு, அவ்ளோ தான்.

[பிறகு இருவரும் சிறிது நேரம் மொபைலில் தேர்தல் பிரச்சார வீடியோக்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்]

பூரி குமாரி : கோல், இந்த பிரச்சாரத்துக்கு சில நுட்பமான strategyக்களை இவங்க பயன்படுத்தி இருக்காங்க.

கோல்கப்பா : எனக்கு சுமாரான strategyயே நீ சொன்னாத்தான் வெளங்கும். இதுல நுட்பமா யோசிக்கிறதுக்கு நா எங்க போறது? நீயே சொல்லு.

பூரி குமாரி : புதிய கட்சி, பெரும்பாலோனோர் புதிய candidates. தலைவரை தவிர மீதமுள்ள 232 பேரையும் அந்தந்த தொகுதிக்கு போய் தனித்தனியா மக்களுக்கு introduce பண்ணாங்களா?

கோல்கப்பா : இல்ல? அவர் தான் முதல்லயே சொல்லிட்டாரே, 234 தொகுதிலேயும் நான் தான் வேட்பாளர்ன்னு!

பூரி குமாரி : கரெக்டான பாய்ண்ட்ட புடிச்சிடீங்க கோல். இவங்க என்ன பண்ணாங்கன்னா 234 introductions-ஐயும் ஒரே introductionஆ மாத்திட்டாங்க.

கோல்கப்பா : அட ஆமா..

பூரி குமாரி : மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு எல்லாம் நான்தான்னு உதாரணம் சொல்லி, மக்கள் மனச மொதல்ல tune பண்ணாங்க. நான் வேற, அவங்க வேற இல்லன்னு அது மேல கான்க்ரீட்ட ஊத்தி மொழுகினாங்க.

கோல்கப்பா :ஓஓ, கதை அப்படி போகுதா, அப்புறம்?

பூரி குமாரி : இதுக்கு அர்த்தம் என்னன்னா, உங்க ஊர்ல candidate யாரா இருந்தாலும் அவரை நீங்க already கொண்டாடுகிற, உங்களுக்கு நல்லா அறிமுகமான கதாநாயகனோட extensionஆ பாருங்க அப்படீங்குறது தான்.

கோல்கப்பா : ஹ்ம்ம், மேல சொல்லு.

பூரி குமாரி : ஒரு தலைவரின் அடையாளத்துக்குள்ளே எல்லா candidates-ஐயும் சேர்த்து மக்களுக்கு present பண்ணாங்க. இதுக்கு “Identity Compression”னு பேரு.

கோல்கப்பா : சரி, இதை எதுக்கு பண்ணாங்க?

பூரி குமாரி : மக்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா recognize செய்த ஒரு முகத்தை முன்னிலைப்படுத்தும் போது, அந்த கட்சியின் மற்ற candidates எல்லாரும் மக்களுக்கு familiarஆ தெரிய ஆரம்பிப்பாங்க. ஒரு வலுவான தலைவரின் புகழ், செல்வாக்கு, அல்லது மக்கள் ஆதரவை பயன்படுத்தி, அவர் கட்சி சார்ந்த மற்ற வேட்பாளர்களை தேர்தலில் வெற்றி பெற வைக்க செய்யப்படும் யுக்தி இது.

கோல்கப்பா : ஹ்ம்ம், interesting. அதனால தான் unknown candidates கூட totally unknownஆ feel ஆகல போல இருக்கு.

பூரி குமாரி : இந்த யுக்தியை coattail effect அப்படீன்னு சொல்லுவாங்க.

கோல்கப்பா : அருமை..இது இன்றைய சூழலுக்கு எப்படி பொருந்தி இருக்கு பாத்தியா? தலைவர் coattail effect பயன்படுத்தி வெற்றி பெற்று, இப்போ கோட் சூட் போட்டு கோட்டைக்கு போறார்..

பூரி குமாரி : சூப்பர் பாய்ண்ட் கோல்! நீங்க நல்லா கவனிச்சீங்கன்னா, தலைவரோட எல்லா ஸ்பீச்சும் ஒரே பேட்டர்ன்ல இருக்கும்..என் நெஞ்சில் குடியிருக்கும் அப்படீன்னு ஓப்பனிங், கான்பிடன்ட்டா இருங்க, வெற்றி நிச்சயம்னு ரெண்டு கைய விரிச்சி சொல்லி முடிப்பதுன்னு ஒரு consistency maintain பண்ணாங்க.

கோல்கப்பா : ஆமாமா, same slogans, same emotional tone. அதனால என்ன பிரயோஜனம்?

பூரி குமாரி : Brain repeated patterns-ஐ fastஆ accept பண்ணிக்கும். அதே காட்சிகளை திரும்ப திரும்ப பாக்கும் போது ஒரு familiar feeling create பண்ணும்.

கோல்கப்பா : ஓஹோ..

பூரி குமாரி : அதுக்கே இன்னொரு term இருக்கு “Familiar stranger effect”. இதுக்கு அப்புறம் வர்றதுதான் இந்த campaign planல முக்கியமானது. கட்சி தலைவர அறிமுகப்படுத்துற அதே வேளையில, அவருக்கு மக்கள் கிட்ட ஒரு emotional bonding create பண்றது. அவர் திரும்ப திரும்ப சொன்னது என்னன்னா “மத்தவங்களுக்கு வேணா இது எலெக்சன், நா நம்ம வகையறாக்கு இது எமோஷன்” அப்பிடின்னு.

கோல்கப்பா : மிச்சத்தை நான் சொல்றேன். “உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு, உங்க மகனுக்கு, உங்க புள்ளைக்கு, ஒரே ஒரு வாய்ப்பு குடுங்கன்னு” ஒரு அப்ளிகேஷன் போட்டது! கரெக்ட்டா?

பூரி குமாரி : Exactly கோல். இந்த எடத்துல Parasocial leadership phenomenonஐ அற்புதமா பயன்படுத்தி இருக்காங்க.

கோல்கப்பா : ஹிஹிஹி ..சரியான பம்பரகட்டை மண்டைகாரிடி நீ..அடுத்து என்ன?

பூரி குமாரி : Crownக்கு வர்றதுன்னா சும்மாவா கோல். Crowd choreography strategy இவங்களுக்கு ஒரு வரபிரசாதமா இருந்தது. அலை மோதுற கூட்டம், இளசுங்க போடுற குத்தாட்டம்ன்னு தேர்தல் களம் களை கட்டி இருந்தது. களம் இப்படியிருக்க, தலைவரோட தரை வழி பயணம் முழுக்க லைவில் ஜனரஞ்சகமான பிரச்சார பாடலோடு ஒளிபரப்பாக, மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள்.

கோல்கப்பா : இந்தாடி தண்ணி குடி, அதுக்குள்ள நா கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாத்துக்குறேன்.

பூரி குமாரி : News channels, Youtube live என எங்கு திரும்பினாலும் அவர் பிரச்சாரம் முடித்து திரும்பும் வரை மொத்த மீடியா கவனமும் அவர் மீது தான் இருந்தது.

கோல்கப்பா : சரியா சொன்ன போ. மக்கள் வழி நெடுக பரிசு கொடுக்குறதும், இவங்க மாத்தி மாத்தி பூ தூவிக்கிறதும்னு கண்கொள்ளா காட்சியால்ல இருந்தது!

பூரி குமாரி : அதே தான். காட்சியியல் அரசியல் (Spectacle politics phenomenon) இவங்களுக்கு அமோகமாக உதவி செய்தது கோல்.

கோல்கப்பா : (சரிந்து உட்காருகிறார்), நல்லா பிளான் போட்டு பக்காவா செய்து முடிச்சிருக்காங்க. என்ன சொல்ற?

பூரி குமாரி : கிரவுண்டுல நடந்த இந்த உற்சாகமான people mobility, ஆன்லைன்ல meme-abilityயா convert ஆச்சு. அல்காரிதத்துக்கே அல்லு விட்டு போற அளவுக்கு மக்கள் ரீல்ஸ், மீம்ஸ், போஸ்ட்டுன்னு போட்டு டிஜிட்டல் தளத்தை தடதடக்க வெச்சுட்டாங்க.

கோல்கப்பா : ஆமாடி, நண்டு சிண்டெல்லாம் ரீல்ஸ் போட்டு அதகளபடுத்திட்டாங்க.

பூரி குமாரி : இந்த இமாலய ரீச்னாலதான் அவர் பெரும்பாலான மாவட்டங்களுக்கு நேர்ல போய் பிரச்சாரம் செய்யலேன்னாலும், மக்கள் கிட்ட பல விதங்கள்ல போய் சேர்ந்துட்டாரு.

கோல்கப்பா : இப்படி டிவி, Youtube, இன்ஸ்டாகிராம்னு எங்க பார்த்தாலும் இவங்க content கரை புரண்டு ஓடுதுனதுனால, மக்கள் இந்த கட்சிக்கு பெருமளவு ஆதரவு இருக்குன்னு நம்ப ஆரம்பிச்சாங்க? கரெக்ட்டா?

பூரி குமாரி : சரியா சொன்னீங்க கோல். மக்களை இந்த ஸ்டேஜுக்கு கொண்டு வர்றதுங்குறது எந்த ஒரு ஸ்டார்ட்டப் கட்சிக்கும் சிரமமான காரியம். ஆனா, அந்த ஸ்டேஜுக்கு மக்களை கொண்டு வந்து நிறுத்திட்டா, அடுத்து bandwagon effect அட்டகாசமா வேலை செய்யும்.

கோல்கப்பா : ஜெயிக்கிற குதிரைங்கிற பிம்பம் மக்கள் மத்தியில பரவ ஆரம்பிச்சது, சரியா?

பூரி குமாரி : ஆமாம் கோல். இந்த image எங்க effectiveவா வேலை செஞ்சது தெரியுமா? First time voters மற்றும் undecided voters க்ரூப்புல. First time votersக்கு social media influence அதிகம். அப்புறம் அவங்களுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்கணும்ங்கிற உத்வேகமும் அதிகமா இருக்கும்.

கோல்கப்பா : undecided voters பத்தி சொல்லவே தேவையில்லை. எந்த பக்கம் காத்தடிக்குதோ, அங்க போய் மொத்தமா குத்திடுவாங்க!

பூரி குமாரி : அதே தான் கோல். அதனால தான் இந்த முறை young voters, passive votersஆ இல்லாம, active advocatesஆ மாறிட்டாங்க. இளம் வாக்காளர்களுக்கு “Desire for generational ownership” அதிகமாக இருந்ததால், பரம்பரை வாக்குகள், ஜாதி, மத சார்பு வாக்குகள் எல்லாம் கணிசமான அளவுக்கு traditional கட்சிகளுக்கு போகாமல், ஸ்டார்ட்டப் கட்சிக்கு வந்து சேர்ந்தது.

கோல்கப்பா : யெம்மாடி, தேர்தலில் Single Largest Party (SLP) ஆக வெற்றி பெற இவ்வளவு வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கிறதா?

பூரி குமாரி : எளிமையான சின்னம், திரை கவர்ச்சி என பல விஷயங்கள் இருந்தாலும், ஸ்டார்ட்டப் கட்சி Strategically Leveraged Phenomenaவை (SLP) கச்சிதமாக கையாண்டதால் தான் இந்த வெற்றி கை கூடி வந்திருக்கிறது! இது வெறும் தேர்தல் வெற்றியை பற்றிய analysis இல்லை கோல்.
டிஜிட்டல் மீடியா, ஸ்டார் பவர், mass psychology — இந்த மூணையும் கணக்கா இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு curated campaign, மக்கள் மனசை எப்படி influence பண்ணுச்சுன்றதோட decode!

கோல்கப்பா : மக்களே, இவ்வளவு உத்திகளை திறமையாக கையாண்டு வென்று வந்தவர்கள், அதே உத்வேகத்தோடு ஆட்சியையும் சிறப்பாக நடத்துவார்கள் என நம்புவோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி!

கொளப்பட்டேம் என்றெண்ணிக்….

The rear view image of the leading politician in Tamil Nadu

பூரி குமாரி : கருத்துக் கணிப்புகளுக்கெல்லாம் எதிராக வந்த தேர்தல் முடிவுகள் கோட்டை வட்டாரத்தில் பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறதே, கவனித்தீர்களா கோல்?

கோல்கப்பா : வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழா நடத்தியவர்கள், அந்த குறள் வழி நடந்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது குமாரி!

பூரி குமாரி : ஆமாங்க, ஆட்சி கனியப்போவதில்லை என தெரிந்தும், யார் கண்களை கட்ட இந்த கருத்துக் கணிப்புகளெல்லாம் வெளிவந்தன?

கோல்கப்பா : அவர்கள் படிக்க தவறிய சில குறள்களை வைத்தே உனக்கு பதில் சொல்கிறேன், கேள்!

“கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை”

“பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?” சாலமன் பாப்பையா அவர்கள் இந்த குறளுக்கு எழுதிய அற்புதமான உரை இது! இன்றைய சூழலுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பார்த்தாயா? பாடாய் பட்டு, ரக ரகமாக கணிப்புகளை வெளியிட்டதால் வந்த பயனென்ன குமாரி?

பூரி குமாரி : அருமையான குறள் கோல். உண்மையான கண்ணோட்டம் பொதுமக்களுக்கு இருந்ததால், அவர்களை மடைமாற்ற வந்த அத்தனை கருத்துக் கணிப்புகளுக்கும் மயங்காமல், இந்த தேர்தலில் அவர்கள் வாக்குகளை பதிவிட்டிருக்கிறார்கள்.

கோல்கப்பா : ஆம் குமாரி. நம் அன்றாட வாழ்க்கையும், சமூக செயல்பாடுகளும் கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது. அது இல்லாதவர்கள் இந்த பூமிக்குச் சுமையாவர். இன்னொருவகையில் சொல்வதானால் அவர்கள் இறந்துபோவதே மேல் என சொல்கின்றது குறள்.

பூரி குமாரி : ஹ்ம்ம்..சரிதான்..இவ்வளவு ஆதரவு குரல்கள் ஒலித்தென்ன பயன் கோல்?

கோல்கப்பா : இந்த குறள் தான் உன் கேள்விக்கு பதில் குமாரி.

“ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்”

இதன் பொருள் “எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும், முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்” என்பதாகும்.

நல்ல நேர்மையான ஆட்சி நடத்தி, சரியான முறையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து இருந்தால் இவ்வளவு வெளிப்பூச்சு வேலைகள் செய்ய வேண்டியதில்லை? என்ன சொல்கிறாய்?

பூரி குமாரி : ஆமாங்க, அரசாங்க பணத்தில் விளம்பரங்கள், விழாக்கள், ஒட்டு மொத்த ஊடகங்களின் துணை என முழு படை பலத்தோடு இருந்தாலும், ஒரு சொட்டு மையின் சக்தி இன்று அவர்களை முடக்கி உட்கார வைத்திருக்கிறது.

கோல்கப்பா : சரியாக சொன்னாய் குமாரி.

பூரி குமாரி : ஆனாலும் பெரிதும் மக்களால் மதிக்கப்பட்ட முதல்வரே, இந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்ததை எப்படி புரிந்து கொள்வது கோல்?

கோல்கப்பா : முதல்வர் அவர்களின் உழைப்பும், பொறுமையும், அனுபவமும் அசாத்தியமானது குமாரி.

பூரி குமாரி : என்ன சொல்கிறீர்கள் கோல்? பிறகு ஏன் அவருக்கு இந்த நிலை?

கோல்கப்பா : கட்சியிலும், ஆட்சியிலும் அவரோடு இருந்தவர்கள் செய்த பல விரும்பத்தகாத செயல்கள். தலைவரோடு கிடைத்த நெருக்கத்தையும், நட்பையும் தகாத வழியில் பயன் படுத்தினார்கள். அதனால் வந்த பாதகம் தான் இது.

பூரி குமாரி : புரியவில்லை கோல்.

கோல்கப்பா : உனக்கு புரியும் படி சொல்கிறேன். இந்த குறளை கேள்.

“கொளப்பட்டேம் எண்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்”

கட்சியிலும் ஆட்சியிலும் பலர் தலைவரால் விரும்பப்பட்டார்கள். அவருடைய அன்புக்கு உரியவரானார்கள். அவரால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் எச்சமயத்திலும், தலைவர் நமக்குத் துணையிருப்பார் என்ற துணிவில் மனம்போன போக்கில் செயல்பட்டார்கள். தலைவரும் அவர்களை கண்காணிக்க தவறினார் அல்லது நடவடிக்கை எடுக்க தயங்கினார்.

பூரி குமாரி : மிக சரியாக சொன்னீர்கள் கோல்! “கொளப்பட்டேம் எண்றெண்ணி” அவர்கள் செய்த கெடு செயல்கள், இன்று கொளத்தூரில் தலைவரை குன்றி போக வைத்திருக்கிறது.

கோல்கப்பா : ஆம் குமாரி. முதுபெரும் தமிழ் ஆசானின் வழித் தோன்றல்கள், அவரெழுதிய உரை படித்து நடந்தாலே, சீரும் சிறப்புமாய் வாழலாம். என்ன சொல்கிறாய்?

பூரி குமாரி : நிச்சயமாக கோல். களமும் காலமும் அவர்களுக்கு அதை உணர்த்தட்டும், மீண்டு வரட்டும்!

கோல்கப்பா : மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் “கொளப்பட்டேம்” (அன்புக்கு உரியவர்கள்) கோஷ்டியுடன் பகிருங்கள். நன்றி!