
பூரி குமாரி : கருத்துக் கணிப்புகளுக்கெல்லாம் எதிராக வந்த தேர்தல் முடிவுகள் கோட்டை வட்டாரத்தில் பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறதே, கவனித்தீர்களா கோல்?
கோல்கப்பா : வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத்திருவிழா நடத்தியவர்கள், அந்த குறள் வழி நடந்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது குமாரி!
பூரி குமாரி : ஆமாங்க, ஆட்சி கனியப்போவதில்லை என தெரிந்தும், யார் கண்களை கட்ட இந்த கருத்துக் கணிப்புகளெல்லாம் வெளிவந்தன?
கோல்கப்பா : அவர்கள் படிக்க தவறிய சில குறள்களை வைத்தே உனக்கு பதில் சொல்கிறேன், கேள்!
“கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை”
“பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?” சாலமன் பாப்பையா அவர்கள் இந்த குறளுக்கு எழுதிய அற்புதமான உரை இது! இன்றைய சூழலுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பார்த்தாயா? பாடாய் பட்டு, ரக ரகமாக கணிப்புகளை வெளியிட்டதால் வந்த பயனென்ன குமாரி?
பூரி குமாரி : அருமையான குறள் கோல். உண்மையான கண்ணோட்டம் பொதுமக்களுக்கு இருந்ததால், அவர்களை மடைமாற்ற வந்த அத்தனை கருத்துக் கணிப்புகளுக்கும் மயங்காமல், இந்த தேர்தலில் அவர்கள் வாக்குகளை பதிவிட்டிருக்கிறார்கள்.
கோல்கப்பா : ஆம் குமாரி. நம் அன்றாட வாழ்க்கையும், சமூக செயல்பாடுகளும் கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது. அது இல்லாதவர்கள் இந்த பூமிக்குச் சுமையாவர். இன்னொருவகையில் சொல்வதானால் அவர்கள் இறந்துபோவதே மேல் என சொல்கின்றது குறள்.
பூரி குமாரி : ஹ்ம்ம்..சரிதான்..இவ்வளவு ஆதரவு குரல்கள் ஒலித்தென்ன பயன் கோல்?
கோல்கப்பா : இந்த குறள் தான் உன் கேள்விக்கு பதில் குமாரி.
“ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்”
இதன் பொருள் “எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும், முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்” என்பதாகும்.
நல்ல நேர்மையான ஆட்சி நடத்தி, சரியான முறையில் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து இருந்தால் இவ்வளவு வெளிப்பூச்சு வேலைகள் செய்ய வேண்டியதில்லை? என்ன சொல்கிறாய்?
பூரி குமாரி : ஆமாங்க, அரசாங்க பணத்தில் விளம்பரங்கள், விழாக்கள், ஒட்டு மொத்த ஊடகங்களின் துணை என முழு படை பலத்தோடு இருந்தாலும், ஒரு சொட்டு மையின் சக்தி இன்று அவர்களை முடக்கி உட்கார வைத்திருக்கிறது.
கோல்கப்பா : சரியாக சொன்னாய் குமாரி.
பூரி குமாரி : ஆனாலும் பெரிதும் மக்களால் மதிக்கப்பட்ட முதல்வரே, இந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்ததை எப்படி புரிந்து கொள்வது கோல்?
கோல்கப்பா : முதல்வர் அவர்களின் உழைப்பும், பொறுமையும், அனுபவமும் அசாத்தியமானது குமாரி.
பூரி குமாரி : என்ன சொல்கிறீர்கள் கோல்? பிறகு ஏன் அவருக்கு இந்த நிலை?
கோல்கப்பா : கட்சியிலும், ஆட்சியிலும் அவரோடு இருந்தவர்கள் செய்த பல விரும்பத்தகாத செயல்கள். தலைவரோடு கிடைத்த நெருக்கத்தையும், நட்பையும் தகாத வழியில் பயன் படுத்தினார்கள். அதனால் வந்த பாதகம் தான் இது.
பூரி குமாரி : புரியவில்லை கோல்.
கோல்கப்பா : உனக்கு புரியும் படி சொல்கிறேன். இந்த குறளை கேள்.
“கொளப்பட்டேம் எண்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்”
கட்சியிலும் ஆட்சியிலும் பலர் தலைவரால் விரும்பப்பட்டார்கள். அவருடைய அன்புக்கு உரியவரானார்கள். அவரால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.
ஆனால் அவர்கள் எச்சமயத்திலும், தலைவர் நமக்குத் துணையிருப்பார் என்ற துணிவில் மனம்போன போக்கில் செயல்பட்டார்கள். தலைவரும் அவர்களை கண்காணிக்க தவறினார் அல்லது நடவடிக்கை எடுக்க தயங்கினார்.
பூரி குமாரி : மிக சரியாக சொன்னீர்கள் கோல்! “கொளப்பட்டேம் எண்றெண்ணி” அவர்கள் செய்த கெடு செயல்கள், இன்று கொளத்தூரில் தலைவரை குன்றி போக வைத்திருக்கிறது.
கோல்கப்பா : ஆம் குமாரி. முதுபெரும் தமிழ் ஆசானின் வழித் தோன்றல்கள், அவரெழுதிய உரை படித்து நடந்தாலே, சீரும் சிறப்புமாய் வாழலாம். என்ன சொல்கிறாய்?
பூரி குமாரி : நிச்சயமாக கோல். களமும் காலமும் அவர்களுக்கு அதை உணர்த்தட்டும், மீண்டு வரட்டும்!
கோல்கப்பா : மக்களே, இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் “கொளப்பட்டேம்” (அன்புக்கு உரியவர்கள்) கோஷ்டியுடன் பகிருங்கள். நன்றி!