தமிழ் சிறுகதை – காகித கப்பல்

A mother and child playing in rain with paper boat at temple

“காவ்யா, எழுந்திரு, ஸ்கூலுக்கு ரெடியாகணும்” என எழுப்பினாள் யமுனா.

“மா, சூப்பரா ஒரு கனவுமா, என்ன எழுப்பிட்டியே” என்றபடி படுக்கையிலிருந்து எழுந்தாள் காவ்யா.

ஆறு வயது. ஒன்றாம் வகுப்பு முடிக்கப்போகிறாள்.

அப்படியே அவளை அள்ளி அணைத்து மீண்டும் படுக்கையில் சரித்து தானும் பக்கத்தில் படுத்தாள் யமுனா.

“வாவ், சொல்லு என்ன கனவு?” என கேட்டாள்.

“மா, நானும் ஒரு பிங்க் ஏஞ்சலும் கார்டன்ல கை கோர்த்து நடந்து போறோம்.

வைட் பட்டர்பிளை நம்ம பால்கனிக்கு வருமே அதுவும் வந்துது  எங்களோட.

நாங்க பேசிட்டே கார்டன சுத்தி நடந்தோம்.ஏஞ்சல் என்கிட்டே என்ன வேணும்னு கேட்டாங்க? என் பிரெண்ட் அனுஷாவோட டாக் அவுஸ் ஒடஞ்சி போச்சி, அத பிக்ஸ் பண்ணி தர சொல்லி கேட்டோம்” என்றாள்.

“ஓ, அனுஷாவும் வந்தாளா ட்ரீம்ல?” என கேட்டேன்.

“ஆமாம்மா, அனுஷா அப்புறம் அவளோட பப்பி” என்றாள்.

“ஏஞ்சல் என்ன சொன்னாங்க?” என ஆர்வமாய் கேட்டேன்.

“அவங்க ஓகே சொல்லிட்டு பப்பியோட வீட்டை சரி பண்ணிட்டாங்க” என்றாள்.

“ஏண்டி வைட் பட்டர்பிளை, அனுஷா,பப்பி எல்லாரும் ஏஞ்சல மீட் பண்ணிருக்காங்க. ஆனா என்ன மட்டும் உன் கனவுல கூப்பிடலை?” என செல்லமாய் கோபித்து கொண்டேன்.

“மா அதுக்குள்ள நீ என்ன எழுப்பிட்ட. சரி, நா திரும்ப தூங்குறேன், என் கனவுல வா” என நைஸாய் படுத்துக்கொண்டாள்.

“ஹா, இந்த கதையெல்லாம் வேணாம், எழுந்து வா, குளிக்கலாம்” என்றேன் சிரித்துக்கொண்டே.

“நேத்து நைட்டும் அப்பா வீட்டுக்கு வரலியாம்மா” என சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே கேட்டாள்.

விடிந்ததும் பேசி சிரித்தாலும் அவள் ஏங்குவது வலியை தந்தது. அவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது அவருக்கு ஒரு ஏஞ்சல் இருப்பதை.

“இல்லடா, வா வந்து ப்ரஷ் பண்ணு” என தூக்கி கொண்டு போய் பாத்ரூமில் நிற்க வைத்தேன்.

“நா குட் நைட் மெசேஜ் அனுப்பினேன்மா, அவர் ரிப்ளை கூட பண்ணல” என அலுத்துக் கொண்டாள்.

“அப்பா பிஸியா இருக்காரும்மா” என சொல்லி, வேறு ஏதோ கதைகளை பேசி அவளை சமாதானப்படுத்தினேன்.

“நீ  பேக் ரெடி பண்ணு, நா உனக்கு தோசை ஊத்துறேன்” என சொல்லி கிச்சனுக்குள் போனேன்.

அம்மாவின் போன் வந்தது. “அவர் வந்தாராடி?” என்றாள்.

“நா இன்னைக்கு சாயந்திரம் லாயர பாக்க போலாம்னு இருக்கேன்” என்றேன்.

“ஏண்டி, உனக்கு பொறுமையே கிடையாதா? ஒரு பொண்ணு இருக்கா, மனசுல வச்சி நடந்துக்க” என அழுத்தமாக சொன்னாள்.

“எனக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு அமைதியா இருக்கணுமா? இல்ல நம்ம வீட்டுல ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு இருக்கானு வெயிட் பண்ணணுமா?” என கோபம் தெறிக்க கேட்டேன்.

“இன்னும் மூணு வருஷத்துல எல்லாம் சரிஆகிடும்னு நம்ம ஜோசியர் சொல்றார். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரும்மா” என்றாள்.

“இந்த லட்சணத்தை தான் அவர் சொன்னாரு நல்ல ஜாதகம்னு என் தலைல கட்டி வச்ச? காவ்யா சொல்ற விதத்துல சொன்னா புரிஞ்சிப்பா. நானும் அவளும் எங்க வாழ்க்கையை பாத்துக்குறோம். தயவு செஞ்சு அட்வைஸ் பண்ணாதே” என்றேன்.

வட்டமாய் ஒரு தோசை சுட்டு முடிப்பதற்குள் வாழ்க்கையை ஒரு சுற்று மனதிற்குள் ஓட்டி பார்த்து விட்டேன்.

அம்மா போனை வைக்க, நானும் காவ்யாவும் பள்ளிக்கு கிளம்பினோம்.

“மா, இரு வரேன்’ என அவள் ரூமிற்குள் ஓடினாள்.

திரும்ப வந்து “இந்தா” என சொல்லி ஒரு பேப்பரை நீட்டினாள்.

தினசரி காலண்டரில் தேதி கிழித்த பேப்பர்.

“என்ன” என கேட்டேன்.

“பிரிச்சு படி” என்றாள்.

“யூ ஆர் மை ஏஞ்சல்” என எழுதியிருந்தாள்.

“ஸ்வீட்ட்டு, தேங்க்ஸ். என்ன இந்த பேப்பர்ல எழுதி இருக்க?” என்றேன்.

“எங்க டீச்சர் சொன்னாங்கமா, இந்த மாதிரி வேஸ்ட் பேப்பர்ல ஏதாவது கிராப்ட் பண்ணுங்கன்னு. ஆனா டெய்லி கிராப்ட் பண்ண முடியாதுல. அதான் எழுதிட்டேன்” என்றாள் சிரித்தபடி.

“சூப்பர்” என சொல்லி பார்க்கிங் நோக்கி நடந்தோம்.

“மா, அனுஷாவோட பப்பிக்கு ஹவுஸ் சரியாகுமா” என திடீரென கேட்டாள்.

“அவங்க அம்மா கொஞ்சம் பிஸியா இருக்காங்கம்மா, இன்னும் ஒரு வாரத்துல சரி பண்றேன்னு சொல்லி இருக்காங்க. இன்னைக்கு வாக்கிங் வந்தா கேக்குறேன்” என சொல்லி வண்டியை கிளப்பினோம்.

“மா, ஒரு கேம். அனுஷாவோட பர்த்டே டென்த் ஆகஸ்ட். இப்போ நா ஸ்கூல் போறதுக்குள்ள அந்த நம்பரை பாத்துட்டேன்னா, அவ பப்பியோட அவுஸ் சரியாகிடும்” என வெளியே பார்த்துக் கொண்டே சொன்னாள்.

காரில் போகும் போது போன் பார்க்காமல் இருக்க ஒரு நாள் விளையாட்டாய் ஆரம்பித்தது, இன்று வரை தொடர்கிறது. தினம் ஒரு எண். தினம் ஒரு கேள்விக்கான பதில்.

அம்மாவின் போன் மீண்டும் வந்தது.

“சாரிடி, காலைல உன்ன டென்ஷானாக்கிட்டேன். சாயந்திரம் நானும் அப்பாவும் வீட்டுக்கு வரோம்” என்றாள்.

“சரிம்மா” என சொல்லி போனை வைத்தேன்.

“ஹேய், அது பப்பியோட அவுஸ் தானே, அப்போ பப்பியோட பர்த்டே தானே பாக்கணும்? ” என அவளை சீண்டினேன்.

திரு திருவென முழித்தது காவ்யா.

சற்று யோசித்து, “ஹா, எனக்கு பீவர் வந்தா நீயும் விபூதி வச்சிக்குறேல்ல! எனக்கு சரியாகிடுது. அது மாதிரி தான்” என ஒரு பாயிண்டை போட்டது.

“நீ தான் ஸ்மார்ட் ஆச்சே” என சொன்னதும் கை தட்டி  சிரித்தது.

ஸ்கூல் வந்து சேர “மா, இன்னும் நம்பரை பாக்கலியே” என சோர்வாய் சொன்னாள்.

“இன்னைக்குள்ள கண்டிப்பா பாப்போம்” என சொல்லி கிளம்பினேன்.

அன்று மாலை அம்மாவும் அப்பாவும் வந்து விட்டார்கள். மழை வரும் போல இருந்தது.

“லாயர் என்ன சொல்றார்?” என பொதுவாக கேட்டார்.

“சீக்கிரம் முடிக்கலாம்னு” சொல்லி இருக்கார் என்றபடி உள்ளே போனேன்.

“டிரஸ் மாத்திக்க, எல்லாரும் கோவிலுக்கு போலாம்” என்றபடியே டீ கொடுத்தாள் அம்மா.

“ஏன் ஜோசியரை அங்க வர சொல்லி இருக்கியா?” என கேட்டேன்.

பதிலேதும் சொல்லாமல் திரும்ப போய் விட்டாள்.

மூச்சு முட்டுவது போல இருந்தது யமுனாவிற்க்கு. வாழவும் வழியில்லாமல், அதிலிருந்து வெளியேறவும் வழியில்லாமல் திணறலாய் இருந்தது.

பேசாமல் கல்யாணம் பண்ணாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம். இல்லை இவர்கள் பாரமாய் உணர்ந்தால் படிப்புக்கு ஏற்ற வேலையில் எங்காவது வேறு ஊரிலாவது வாழ்ந்திருக்கலாம்.”மா, நா ரெடி ஆகிட்டேன்” என காவ்யா வர, தான் இன்னும் தயாராகாமல் இருப்பது உரைத்தது.

“பத்து நிமிஷம், ரெடி ஆகிட்டு வரேன்’ என சொல்லி அனுப்பினேன்.

கோவிலுக்கு போய் சாமி பார்த்துவிட்டு கல் திண்ணையில் போய் உட்கார்ந்தோம். நல்ல மழை.

நினைத்த மாதிரியே ஜோசியரும் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவர், எங்களை பார்த்ததும் டவலை போர்த்திக் கொண்டு எங்களை நோக்கி வந்தார்.

சற்று நேரம் பொதுவாக பேசியவர், பிறகு என்னிடம் “யமுனா, அம்மா என்கிட்டே பேசுனாங்க. அவருக்கு ரெண்டாம்  வீடு இப்போ கெட்டு போய் இருக்கு, கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்மா”, என தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“அம்மா இவரு வீடு எல்லாம் பிக்ஸ் பண்ணுவாரா? அங்கிள், என் பிரெண்டோட வீடு ரிப்பேரா இருக்கு, சரி பண்ணி தரீங்களா?” என குறுக்கே வந்து கேட்டது காவ்யா.

அவர் முழிக்க எனக்கு சிரிப்பாய் வந்தது.

நாயின் வீடு கூட சரியாகும். ஆனால் நாய் புத்தி உள்ளவர்கள் என்றும் திருந்த போவதில்லை என நினைத்துக் கொண்டேன்.

காவ்யா மாதிரி க்ளையண்ட்டை எதிர்பாக்காதவர் உடனே கிளம்பி போய் விட்டார்.

மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

கால் வலி ஆரம்பிக்க, “வா காவ்யா அந்த ஓரம் போய் உட்காரலாம்” என அழைத்தேன்.

“மா, ரொம்ப போரடிக்குது” என சிணுங்கினாள்.

“அங்க தூண்ல ஒரு பை கட்டி இருக்கு பாரு, அதுல இருந்து ஒரு பேப்பர் எடுத்துட்டு வா, நா உனக்கு போட் செய்து தரேன்” என அம்மா சொல்ல “சரி பாட்டி” என ஓடியது காவ்யா.

அனுஷா அம்மாவிடம் இருந்து போன் வர பேசியதில் சில நிமிடங்கள்  கழிந்தது.

“அம்மா இங்க பாரு சர்ப்ரைஸ்” என வந்தாள் காவ்யா.

“உன் பர்த்டே டேட் பாரு” என தினசரி காலண்டர் பேப்பரை காட்டி சிரித்தாள்.

“உனக்கு இன்னிக்கு லக்கி டேமா” என சொல்லிவிட்டு என்னிடம் பேப்பரை நீட்டியது.

விபூதி பிரசாதம் மடிக்க தினசரி காலண்டர் பேப்பர் ஒரு பையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் கப்பல் செய்ய ஒரு பேப்பரை எடுக்க அது என் பிறந்த நாளாய் அமைந்தது.

அம்மா கப்பல் செய்து கொடுக்க, காவ்யா மழை நீரில் அதை விட்டது.

பெரும் மழை காற்றோடு வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.

கப்பல் ஆடி ஆடி பயணிக்க சற்று தூரம் காவ்யாவும் அதனுடன் நகர்ந்து சென்றாள்.

சற்று நேரம் கழித்து அதை நீரில் இருந்து எடுத்து மீண்டும் பிரித்து அந்த மண்டப தரையில் வைத்து விட்டாள்.

“ஆமா, ஏன் அந்த கப்பலை பிரிச்சுட்டே?” என  கேட்டேன்.

“அது ரொம்ப சேடா இருந்துது மா” என்றாள் காவ்யா.

“கப்பலா?” என்றேன்.

“பேப்பர் மா!” என்றாள்.

“கரெக்ட், பேப்பர் தான், ஏன் சேடா இருந்துது? அது உன் கிட்ட என்ன சொல்லுச்சு?” என கேட்டேன்.

“நானும் ஒரு வீட்ல காலண்டர்ல சேபா இருந்தேன். என்ன ஏன் கப்பல் பண்ணி காத்து மழைல விட்டீங்க? என்ன ஏன் கஷ்டப்படுத்துறீங்கன்னு பீல் பண்ணுதும்மா” என சொன்னாள் காவ்யா.

கண்ணை கட்டியது எனக்கு.

நிஜம் தான். வேணாம்னா தூக்கி ஒரு ஓரமா வெச்சிருக்கலாம்.கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும்னு அதை கொண்டு வந்து இந்த பைல போட்டுட்டாங்க. சரி ஏதோ விபூதி பொட்டலம் மடிக்கவாவது மட்டும் உபயோகபடுத்தியிருக்கலாம். அத கப்பல் செஞ்சு வேடிக்கை பாக்குறோம்.

வெறும் காலி கப்பல், ஒரு பாரமும் சுமக்காமல் ஜாலியாக ஆடி ஆடி போய் கொண்டிருக்கிறது என நாம் நினைக்கிறோம். ஆனால் காற்று மழையில் பழக்கமில்லாத வகையில், திசையறியாமல் பயணிப்பதை விட வேறு எது பெரும் பாரமாய் இருக்க முடியும்” என மனதிற்குள் நினைத்து கொண்டேன்.

“உங்க வீட்டுல தாண்டி பேப்பர் பேசும், சைக்கிள் பேசும், நாய் குட்டி பேசும்” என முறைத்தாள் அம்மா.

“எல்லாம் பேசும்மா, நாம தான் கவனிக்கிறது இல்ல. அது சரி, பெத்த பொண்ணு, நா வாய தொறந்து என் கஷ்டத்த சொன்னாலே உன்னால புரிஞ்சிக்க முடியல” என்றேன்.

“இந்த கப்பல் மாதிரி தான்மா  நானும். வாழ்க்கை என்ன எங்க கூட்டிட்டு போகுது, எதிர்காலம் எப்படினு தெரியாம தத்தளிக்குறேன். உங்களுக்கு கடமை முடியனும்னு கல்யாணத்த பண்ணிடுறீங்க. அப்புறம் சமூகத்துக்காக அமைதியா காலத்தை ஓட்ட சொல்றீங்க” என்றேன்.

சற்று நேரத்தில் மழை சற்று குறைய வீட்டுக்கு கிளம்ப எழுந்தோம்.

“அடுத்த முறை லாயர பாக்க போனீன்னா சொல்லு ,நானும் கூட வரேன்” என்றாள் அம்மா.

மழையும் விட மனசும் தெளிவாக இருந்தது.

“அம்மா அங்க பாரு, நா தேடுன நம்பர்” என காண்பித்தாள் காவ்யா.

போற்றி மாலையின் எண்ணிக்கை பளிச்சென கல்வெட்டில் இருந்தது.

“மா, இன்னைக்கு உனக்கும் லக்கி டே, பப்பிக்கும் லக்கி டே!” என சிரித்தாள் காவ்யா.

Leave a comment